பொங்கல் கொண்டாட்டம் – 2 [2019]

4
Maattu Pongal

ப்பா இருந்தவரை அப்பாவே அனைத்தையும் கவனித்துக் கொள்வார். எனவே, உறவினர்கள் விழா, அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் என்று நான் பெரும்பாலும் எங்கும் செல்ல மாட்டேன்.

மிக முக்கியமான, தவிர்க்க முடியாத நிகழ்வுகள் மட்டுமே செல்வேன். தற்போது அப்பா காலமாகி விட்டதால், அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டிய கட்டாயம்.

முதலில் கடுப்பாக இருந்தாலும், பின்னர் அவர்கள் எவ்வளவு உதவி செய்துள்ளார்கள் (குறிப்பாகப் பங்காளிகள்) என்பது புரிந்த பிறகு அவர்கள் மீதான மரியாதை மிக உயர்ந்து விட்டது.

கடந்த முறையே பொங்கலுக்கு அனைவர் வீட்டுக்கும் வருகிறேன் என்று கூறியிருந்தேன். அதே போல இந்த முறை அனைவர் வீட்டுக்கும் சென்று வந்தேன்.

பலர் வீட்டுக்கு முதல் முறை செல்வதால், நீண்ட நேரம் பேசி நேரமே போதவில்லை.

அனைவரும் ரொம்ப நன்றாகப் பேசினார்கள். எதிர்பார்ப்புகளைக் குறைத்து நேர்மறையாகச் சிந்திக்கத் துவங்கினால், எதிரி என்று எவரும் தோன்றமாட்டார்கள்.

5 வருடங்களுக்கு முன்பு இருந்த மன நிலைக்கும் தற்போதுக்கும் மிகப்பெரிய மாற்றம்.

இது குறித்துப் பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

Read திருமணமும் பங்காளிகளும்

Read எதிர்மறை எண்ணங்களால் ஏற்படும் இழப்புகள்

பேட்ட

குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் மொத்தமாக 15 பேர் பேட்ட படம் சென்றோம்.

இரண்டாம் பாதிக் கொஞ்சம் நீளம் என்று சிலர் கூறினாலும், பொதுவான கருத்தாக அனைவருக்கும் படம் பிடித்து இருந்தது.

கடந்த முறை உறவினர்களுடன் 24 பேர் பாகுபலி 2 படத்துக்குச் சென்றோம். இதை முறியடிப்பது மிகச் சிரமம் என்று நினைக்கிறேன் 🙂 .

இதுவே அதிகபட்ச நபர்களுடன் நான் பார்த்த படம்.

Read பேட்ட [2019] “Get Rajinified”

விவசாயம்

கோபி பகுதியில் இந்தமுறை செம்ம மழை, அதோடு பவானி சாகர் அணை தண்ணீர் இன்னும் வந்து கொண்டு இருப்பதால், எங்கும் பசுமை போர்த்தி உள்ளது.

இதனால் உற்பத்தியும் அதிகரித்ததால், விளை பொருட்களுக்கு விலை குறைவு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் இருந்தாலும் பிரச்சனை, இல்லையென்றாலும் பிரச்னை.

விவசாயிகள் வாழ்க்கை எளிதல்ல.

Read சிங்கப்பூர் விவசாயம்!

யுவன் வினய்

யுவன் இந்த முறை விடுமுறையில் வெற்றிகரமாகச் சைக்கிள் ஓட்டி பழகி விட்டான். “அப்பா இங்க பாருங்க!” ன்னு சொல்லிட்டு வீட்டை சுற்றி வந்து கொண்டு இருந்தான்.

வினய் இரு சக்கர வாகனத்தில்  என் (TVS 50 & Scooty) முன்னே அமர்ந்து ஓட்டி பழகி இருக்கிறான் (போக்குவரத்து அதிகம் இல்லாத பகுதியில்).

இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து நான் லைசென்ஸ் வாங்க முடியும்?” என்று கேட்டுக்கொண்டு இருக்கிறான்.

கோபி கடைகள்

மக்கள் பெருக்கம் காரணமாக, கோபி விரிவடைந்து கொண்டே செல்கிறது. புதிது புதிதாகக் கடைகள் முளைத்துக்கொண்டே செல்கின்றன. கோபி ஆர்ச் தாண்டியும் கடைகள் ஆரம்பித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

புதிதாக வந்துள்ள அருண் ஐஸ் க்ரீம் கடைக்குச் சென்றோம், சுவை ரொம்ப நன்றாக இருந்தது.

இங்கே அமர நாற்காலி இல்லை, இது குறித்துக் கேட்ட போது அனைத்து கிளைகளிலும் இதே முறை தான் என்று கூறினார்கள். நான் அருண் நிறுவனத்துக்கு Feedback அனுப்பியுள்ளேன்.

Maattu Pongal

மாட்டுப்பொங்கல்

மாமனார், மனைவியின் சித்தப்பா வீடுகளில் (தோட்டத்தில்) மாட்டுப்பொங்கல் கொண்டாடினார்கள். மாலை முழுவதும் அங்கே இருந்தேன்.

வருடம் முழுவதும் தங்களுக்காக உழைக்கும் மாடுகளுக்கு மரியாதை செய்யும் நாளே மாட்டுப் பொங்கல்.

அங்கே இருந்த நாய் ஒன்று நன்கு ஒட்டிக்கொண்டது 🙂 .  நாய் என்றால் பிரியம் ஆச்சே!

Read நாய் நன்றியுள்ளது மட்டுமல்ல அன்பும் மிகுந்தது!

ககபோ

விடுமுறை முடிந்து சென்னை வருவது என்றாலே, ஹாஸ்டலுக்கு வருவது போல அவ்வளவு கஷ்டமாக உள்ளது.

அம்மா வேற.. இரண்டு நாள் முன்பு இருந்தே.. “தம்பி! இன்னும் இரண்டு நாள்ல எல்லோரும் ஊருக்கு போயிடுவீங்க!” என்று சோக கீதம் வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

எனக்கு ஊரில் இருக்கத்தான் விருப்பம் ஆனால், வேலை இங்கே தானே இருக்கிறது. கோவையில் இதை விடக் குறைவான சம்பளத்தில் வேலை கிடைத்தால் கூட இங்கேயே இருந்து விடுவேன்.

வெள்ளிக்கிழமையானால் ஊருக்கு கிளம்பி வந்து விடலாம் பாருங்க! 2 மணி நேரம் தான் 🙂 .

எப்போது நிரந்தரமாக ஊருக்கு வருவது? ஒரு நாயை வளர்ப்பது?! எல்லோருடனும் இருப்பது?

அட போங்கப்பா..!

கொசுறு

நான் சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் முடிவுக்கு பலரும் பயமுறுத்தினார்கள். எனக்கும் என்னுடைய முடிவு தவறாகி விடுமோ! என்று உள்ளூர பயம் இருக்கவே செய்தது.

ஆனால், நான் எடுத்த மிகச்சிறந்த முடிவுகளில் இந்த முடிவும் உள்ளது என்ற பெருமை தற்போது எனக்குண்டு.

எத்தனை கொண்டாட்டங்களை இழந்து இருப்பேன்…!  குறிப்பாக அப்பாவின் இறுதிக் காலத்தில் உடன் இருந்தது. இதெல்லாம் பணம் கொடுத்து வாங்க முடியுமா?!

Read Bye Bye சிங்கப்பூர்

Read பொங்கல் கொண்டாட்டம் – 1 [2019]

4 COMMENTS

  1. ஹலோ

    உங்க சிங்கப்பூர் டு சென்னை return blogs எல்லாம் i read . can யு write எ blog about how யுவர் transiton / challenges you faced in india after staying in சிங்கப்பூர் for many years?

  2. கிரி, பலவருடங்களாக உங்கள் பதிவுகளை தொடர்பவன் என்ற அடிப்படையில்… (ஆனால், நான் எடுத்த மிகச்சிறந்த முடிவுகளில் இந்த முடிவும் உள்ளது என்ற பெருமை தற்போது எனக்குண்டு. ) நீங்கள் பலமுறை முன்பே குறிப்பிட்டது போல ஒரு சரியான முடிவை, சரியான நேரத்தில் எடுத்தது, அதன் பலனை நீங்கள் கண்முன் காண்பது, எல்லாம் ஒரு வரம்… மகிழ்ச்சியாக இருந்தாலும், சற்று பொறாமைபடவும் வைக்கிறது..

    பல நேரங்களில், பலமுறை யோசித்தாலும், என்னால் இந்த நொடிவரை தெளிவான முடிவு எடுக்க முடியவில்லை.. சமயத்தில் மிகவும் குழப்பமாக இருப்பதால் அதை பற்றி சிந்திப்பதையும் தள்ளி வைத்து விட்டேன்.. நான் சில நேரங்களில் நடைப்பிணமாக கூட உணர்கிறேன்..

    உண்மையை சொல்ல வேண்டுமானால், நான் விரும்பி ஏற்ற வாழ்க்கை இதுவல்ல…. காலச்சக்கரம் என்னுடைய வாழ்க்கையின் திசையை முற்றிலும், மாற்றிவிட்டது.. அது தற்போது நான் நினைத்ததற்கு எதிர்திசையில் சுற்றிக்கொண்டு இருக்கிறது… பகிர்வுக்கு நன்றி கிரி…

  3. @விக்னேஷ் ஏற்கனவே இது குறித்து அவ்வப்போது எழுதி இருக்கிறேன்.

    @யாசின் உங்களின் நிலை புரிந்து கொள்ள முடிகிறது. உங்களுக்கு போதும் என்று நினைக்கும் பாதுகாப்பான பணம் சேமித்த பிறகு வந்துவிட முயற்சியுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here