திருமணமும் பங்காளிகளும்

8
திருமணமும் பங்காளிகளும்

முதல் அக்காவின் மகன் திருமண நிகழ்வுக்காக விடுமுறையில் சென்று இருந்தேன். இந்த முறை எங்களுக்கு வித்யாசமான அனுபவம். Image Credit

திருமணமும் பங்காளிகளும்

எப்போதுமே அப்பா தான் அனைத்தையும் கவனித்துக் கொள்வார். அப்பா துவக்கத்தில் இருந்தே எதிலும் ஒழுங்கு, திட்டம் என்று அசரடிப்பார்.

தற்போது உடல்நிலை சரியில்லை என்பதால், பொறுப்பு எங்களுக்கு வந்தது.

அக்காவின் கணவர் சில வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்து விட்டதால், நாங்களே அவருக்குப் பக்கபலமாக இருந்து வருகிறோம்.

திருமணத்திலும்  மற்ற இரண்டு அக்காக்கள், கோடை விடுமுறையில் இருந்த மனைவி அனைவரும் அம்மாவின் வழிகாட்டுதலுடன் சிறப்பாக முடித்து விட்டார்கள்.

Readஅக்காவின் அன்பு தெரியுமா?

நான் எதுவுமே செய்யவில்லை. அனைத்து திட்டங்களும், வேலைகளும் இவர்களே பார்த்துக்கொண்டார்கள்.

நான் திருமணத்தில் அனைவரையும் வரவேற்கும் வேலை மட்டுமே செய்தேன்.

பங்காளிகளின் பங்கு

இதிலும் பங்காளிகளின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பது இத்தனை வருடங்களுக்குப் பிறகு தான் எனக்குப் புரிந்தது.

ஏனென்றால், இதுவரை நேரடியாக நான் எந்த வேலையும் செய்தது இல்லை, அப்பாவே பார்த்துக்கொள்வார்கள்.

இந்த முறை பொறுப்பின் காரணமாகச் செய்ய வேண்டி வந்தது, பயனுள்ளதாகவும், சொந்தங்களைப் புரிந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பாகவும் இருந்தது.

சொந்தக்காரர்கள் என்றாலே தவறான எண்ணம் பலரிடையே உள்ளது. அதற்குத் தகுந்த மாதிரி பலரும் நடக்கிறார்கள் என்றாலும், ஒரேயடியாக அனைவரையும் புறக்கணித்து விட முடியாது.

அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

குறிப்பாகப் பங்காளிகள் தான் திருமணத்தையே நடத்திக் கொடுத்தார்கள். “இவ்வளவு வருடங்களாக இவர்கள் முக்கியத்துவமே தெரியாமல் இருந்தோமே!” என்று வெட்கமாக இருந்தது.

அம்மா அடிக்கடி “தம்பி! இவங்க நம்ம பங்காளி.. இவங்க வீட்டு நிகழ்ச்சிக்குப் போயிட்டு வந்துடு” என்று கூறுவார்கள்.

நான் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கமாட்டேன் ஏனென்றால், வெளியூரிலேயே இருந்ததால், பலரைத் தெரியாது.

சொந்தக்காரர் என்று தெரியும் ஆனால், இன்னார் என்று தெரியாது. அதனால் நன்கு தெரிந்தவர்கள் என்றால் மட்டுமே செல்வேன்.

இனி எப்பாடுபட்டாவது இவர்கள் குடும்ப நிகழ்வுக்குச் சென்று மரியாதை செய்து விட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

நான் அவசியமற்று யாரையும் பகைத்துக்கொள்ள மாட்டேன். பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி விடுவேன் எனவே, யாரும் எனக்குப் பிரச்சனையாகத் தோன்றியதில்லை.

யார் மீதும் எனக்கு எதிர்பார்ப்பில்லை எனவே, ஏமாற்றமும் இல்லை 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

  1. காலா போகாதே
    போனால் நேரில் வந்து வாயில் குத்துவேன்

  2. உங்கள் அக்கா மகன் என்பதால் தாங்கள் தான்”மாமன்” மொறை செய்திருப்பீர்கள்…
    அதைப்பற்றி கூறுங்களேன்.
    நன்றி.

  3. //இதிலும் பங்காளிகளின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பது இத்தனை வருடங்களுக்குப் பிறகு தான் எனக்குப் புரிந்தது. // ஒற்றுமையே பலம்; ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு;

    இந்த முறை சாபம் (சூனியம்) தீர்ந்ததா? பெட்டியின் நடு பகுதியில் இடம் கிடைத்ததா?

  4. பங்காளி என்பவர்களுக்கும் சொந்தகாரர்கள் என்பவர்களிற்கும் என்ன வித்தியாசம். உங்களிற்கு திருமண வயதில் ஒரு மருமகனா? . தமிழ் நாட்டில் சராசரி திருமண வயது 28 என்று எடுத்துக்கொண்டால், உங்களிற்கு ஒரு 10 வயது இருக்கும்போதேன் உங்களின் அக்கா திருமணம் செய்து கொடிருந்தால், உங்களின் த்ற்போதய வயது 39? . உங்களின் மருமகனிற்கு திருமண வாழ்த்துக்கள்.

  5. @Shabir Hussain படமெல்லாம் பார்த்தாச்சு.. போங்க போய் படத்தைப் பாருங்க.. செமையா இருக்கு 🙂

    @சோமேஸ்வரன் சோகக்கதையை கேட்கறீங்களே..

    இந்தமுறையும் S 11 படுக்கை எண் 11,14,15 🙂

    அடுத்த மாதம் முன்பதிவு செய்தேன், S12 வந்தாலும் படுக்கை 46 🙂

    @ப்ரியா

    பங்காளி என்பவர்கள் சொந்தக்காரங்களை விட பல படி மேலானவர்கள். எப்படி என்றால், சுக துக்கங்களில் இவர்களே முன்னின்று நடத்துவார்கள். நமக்கு உதவிகரமாக இருப்பார்கள்.

    இதை செய்ய வேண்டியது ஒவ்வொரு பங்காளியின் கடமை. எனவே பங்காளிகளுக்குள் நல்ல புரிதல் இருப்பது நல்லது. இவர்களை பகைத்துக்கொண்டால், சுக துக்கங்களில் புறக்கணித்து விடுவார்கள்.

    நம்ம வீட்டு திருமண பத்திரிக்கையையே பாதி இவர்களே மற்ற உறவினர்களுக்கு கொடுப்பார்கள்.

    சுருக்கமாக, சம்பளம் பெறாமல் நமக்காக வேலை செய்பவர்கள். குடும்பத்தில் ஒருத்தராக பங்கெடுப்பவர்கள்.

    சொந்தக்காரர்கள் இவர்கள் அல்லாதவர்கள்.

    திருமணம் என்னுடைய அக்கா பையனுக்கு. என் முதல் பையனுக்கு 10 வயது. உன்னுடைய கணக்கு சரி தான், எனக்கு 40 வயது 🙂 .

    உன்னிடம் எனக்கு பிடித்ததே இந்த புத்திசாலித்தனம் (என்பதை விட Smartness) தான்.

  6. கிரி, உறவுகளின் மடியில் தவழ்ந்தவர்களுக்கு தான் அதன் அருமை புரியும்.. ஆயிரம் விருப்பு, வெறுப்பு இருந்தாலும் நமக்கு ஒன்று என்றால் உறவுகளின் இதயம் துடிக்கும் என்பது வெளிப்படையான உண்மை… கூட்டு குடும்ப உறவுகளில் என்றும் காதல் கொண்டவன் நான்…

    அந்த வாழ்க்கையை என்றும் அணுஅணுவாக நேசிப்பவன்.. ஒற்றை தனிமரமாக வளர்ந்ததால் இன்றும் அண்னன், அக்கா, தங்கை, தம்பியுடன் பிறக்க வில்லை என்ற ஏக்கம் இன்றும் உண்டு… உங்கள் அக்கா மகனின் திருமணத்திற்கு என் வாழ்த்துக்கள்…

    வரும்போது எதுவும் கொண்டு வரவில்லை, செல்லும்போதும் ஏதும் எடுத்து செல்ல போவதில்லை.. உலகில் இருப்பது சிலமணித்துளிகள் மட்டுமே… அந்த துளிகளை அணுஅணுவாக ரசிப்போமே!!! என்னுடைய தனிப்பட்ட வாழக்கையில் உறவுகள் செய்த நன்மையை விட தீமையே அதிகம்.. இருப்பினும் அனைவரையும் நேசிக்கிறேன்…

    காலத்தை விட ஒரு சிறந்த மருந்து ஏதும் இல்லை… காலம் எல்லாவற்றையும் கற்று கொடுக்கும்.. பக்குவப்பட வைக்கும்… துரோகங்களை மறக்கடிக்கும்… புதிய மகிழ்ச்சிகளை ஏற்படுத்தும்… நண்பன் சக்தியின் வாழ்விலும், உங்கள் வாழ்விலும் பல ஒற்றுமைகள்.. சக்தியும் உறவுகளால் பின்னப்பட்ட ஒரு பெரிய ஆலமரம்… பகிர்வுக்கு நன்றி கிரி…

  7. @யாசின் உடன் பிறந்தவர்கள் இல்லாமல் இருப்பது ஒரு சலிப்பான அனுபவமே! சிலருக்கு வளர்ந்ததும் உடன்பிறப்புகள் சிரமத்தை கொண்டு வருகிறார்கள். அவர்கள் உடன்பிறப்பு இல்லையென்றாலே பிரச்சினையில்லாமல் இருக்கும் என்று நினைப்பார்கள்.

    சூழ்நிலை தான் ஒவ்வொன்றையும் தீர்மானிக்கிறது. முடிந்தவரை நாம் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொண்டால் நமக்கு நல்லது.

    எதிர்மறை எண்ணங்கள் அணுகாமல், எதிர்மறை பக்கம் செல்லாமல் இருந்தாலே நமக்கு பல பிரச்சனைகள் நம்மை அண்டாது.

    உறவினர்களும் அப்படியே! இடைவெளி விட்டு எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்து கொண்டால், பெரும்பாலும் சரியாகவே போகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here