மனிதர்களின் உணர்வுகளில் ஒன்று பதட்டம். ஒருவருக்குப் பதட்டம் அதிகம் ஆகும் போது ஏற்படும் பிரச்சனைகளைக் காண்போம். Image Credit
பதட்டம்
பதட்டத்தைத் தாண்டி வராதவர்கள் இருக்க வாய்ப்பில்லை, குறைந்த பட்சம் ஏதாவது ஒரு சூழ்நிலையாலாவது இதை அனுபவித்து இருப்போம்.
காரணம், மனித உணர்வுகளில் உள்ள இயல்பான உணர்வு.
பதட்டத்தைத் தவிர்க்க யோகிகளாலும், வெகு சிலராலும் மட்டுமே முடியும். மற்றவர்கள் பதட்டத்தைக் குறைக்க மட்டுமே முடியும், தவிர்க்க முடியாது.
பதட்டத்தால் என்ன நடக்கும்?
- மூளை சரியான வழியில் சிந்திக்காது.
- தவறுகளைச் செய்து விட நேரிடும்.
- பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்கி விடும்.
- பெருத்த நட்டத்தை ஏற்படுத்தி விடும்.
- ஒன்றும் இல்லாமல் போக வேண்டியது, பெரிய தலைவலியைக் கொண்டு வரும்.
- உறவுகளிடையே பாதிப்பை ஏற்படுத்தும்.
- மேலும் மேலும் தவறுகளைச் செய்ய வழி வகுக்கும்.
- உடல்நலனைப் பாதிக்கும்.
- சிறப்பான யோசனை தோன்றாது.
- அலுவலகத்தில் மேலும் பிரச்சனைகளைக் கொண்டு வரும்.
- சரியான முடிவுகளை எடுக்க விடாது.
- எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
- சிந்திக்கும் திறனை இழக்க வைக்கும்.
- உளவியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தும்.
பதட்டத்தைக் குறைக்க வழிகள்
அமைதியாக இருப்பதே ஒரே வழி.
பதட்டமாக இருக்கும் போது, மூளை சிந்திக்கும் திறனை இழப்பதால், மேலும் மேலும் தவறுகளைச் செய்வோம். எனவே, இவை சூழ்நிலையை மேலும் மோசமாக்கும்.
அச்சூழ்நிலையில் எந்த முடிவையும் எடுக்காமல், எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் பிரச்சனையின் வீரியத்தைப் பொறுத்து ஓரிரு மணி நேரங்களுக்கு அமைதியாக இருக்க வேண்டும்.
சுருக்கமாக, மனது தெளிவு அடைந்து, அமைதியான பிறகு செயல்படுத்தலாம்.
அமைதியாக இருக்கும் கால இடைவெளியில் சம்பந்தப்பட்ட பிரச்சனையே ஒன்றும் இல்லாமல் போக வாய்ப்புள்ளது. எனவே, அவசரப்பட்டு எதையாவது செய்வது, பேசுவது சிக்கலையே வரவழைக்கும்.
அமைதியாக இருக்க முடியவில்லை என்றால், தண்ணீர் / காஃபி குடிப்பது, வேறு வகையில் கவனத்தைத் திருப்புவது சிறிது பதட்டத்தைக் குறைக்கும்.
பதட்டம் ஆகாமல் இருப்பது கடினம் ஆனால், பயிற்சியின் மூலம் பதட்டமாவதை உறுதியாகக் குறைக்க முடியும்.
தொடர்புடைய கட்டுரைகள்
மன அழுத்தம் எப்படி இருக்கும்?!
கோபம் இருந்தால் மகிழ்ச்சி இருக்காது
🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி, என்னை பொறுத்தவரை இந்த பதட்டம் என்பது வெவ்வேறு காலக்கட்டங்களில் வேறு மாதிரி இருக்கும். உதாரணமாக பள்ளி பருவத்தில் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தையோ / நோட்டையோ வீட்டில் மறந்து வைத்து விட்டு சென்றால் ஒரு மாதிரி பதட்டம் இருக்கும்.. அதே சூழல் கல்லூரி பருவத்தில் நடக்கும் போது வேறு மாதிரி இருக்கும்.. மனது கொஞ்சம் பக்குவமடைந்து வேறு மாதிரி ரியாக்ட் செய்யும்.
நான் என் வாழ்விலே முதன் முறையாக அதிகம் பதட்டம் அடைந்த தருணம், கல்லூரிபருவத்தில் ஒரு பெண் தோழி பார்க்காமலே கடித தொடர்பு மூலம் அறிமுகமாகி, (என் வீட்டில் தொலைப்பேசி இல்லாததால்), அவருடைய வீட்டு தொலைப்பேசி எண்னை கொடுத்து குறிப்பிட்ட தேதியில் 6.00 pm க்கு அழைக்க சொன்னார்..
4/5 நாட்கள் நான் என்ன பேச வேண்டும்?? என்று ஒத்திகை எல்லாம் செய்து நான் தொலைப்பேசியில் கடைசி வரை பதட்டத்தால் அழைக்கவே இல்லை.. அழைக்க வேண்டிய நாளில் மதியம் 2,3,4,5,6 என நேரம் செல்ல செல்ல நான் அடைந்த பதட்டத்திற்கு அளவே இல்லை.. இத்தனைக்கும் அந்த பருவத்தில் அந்த பெண்ணுடன் காதல் கூட இல்லை.. ஒரு பெண்ணுடன் பேச வேண்டும் அவ்வளே!!!
தற்போதும் அந்த பெண் கொடுத்த தொலைப்பேசி எண் நினைவில் இருக்கிறது.. ஆனால் அவள் நினைவில் வருவதில்லை.. இந்த நிகழ்வை இன்று நினைத்து பார்க்கும் போது வேடிக்கையாகவும் / சிரிப்பாகவும் இருக்கிறது..
@யாசின்
“பள்ளி பருவத்தில் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தையோ / நோட்டையோ வீட்டில் மறந்து வைத்து விட்டு சென்றால் ஒரு மாதிரி பதட்டம் இருக்கும்.. அதே சூழல் கல்லூரி பருவத்தில் நடக்கும் போது வேறு மாதிரி இருக்கும்.. மனது கொஞ்சம் பக்குவமடைந்து வேறு மாதிரி ரியாக்ட் செய்யும்.”
ஆமாம் யாசின்.
பள்ளி, கல்லூரி படிக்கும் போது தேர்வை சரியா எழுதணும் என்ற பதட்டம், கல்லூரியை முடித்தால் வேலை கிடைக்க வேண்டும் என்ற பதட்டம், வேலைக்கு வந்த பிறகு திருமணம், திருமணம் ஆன பிறகு குடும்பம் என்று பதட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
“பெண் கொடுத்த தொலைப்பேசி எண் நினைவில் இருக்கிறது.. ஆனால் அவள் நினைவில் வருவதில்லை”
எனக்கு மாற்றி நினைவு இருக்கும் 😀