போட்டது ஒரு ஃபேஸ்புக் ஸ்டேடஸ் ஆனது டோட்டல் டேமேஜ்

8
போட்டது ஒரு ஃபேஸ்புக்

ற்போது சமூக வலைத்தளங்கள் எவ்வளவு முக்கியம் வகிக்கின்றன என்பதைப் பற்றி நான் புதிதாகக் கூற ஒன்றுமில்லை.

ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கக்கூடிய அளவில் இருக்கும் போது தனி ஒருவரின் தலையெழுத்தை மாற்றாதா!

ஏதோ ஒரு வேகத்தில் நிலைத்தகவல் (ஸ்டேடஸ்) போட்டு அதனால் மாட்டிக்கொண்டு விழிப்பவர்கள் ஏராளம், அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றிய தகவலே இது.

போட்டது ஒரு ஃபேஸ்புக் ஸ்டேடஸ்

சிங்கப்பூரில் UK வை சேர்ந்த “Aston Casey” என்பவர் இங்கே Crossinvest Asia நிறுவனத்தில் Wealth Management பிரிவில்  இருக்கிறார் (இருந்தார்).

பெரிய பணக்காரரான இவர் போட்ட ஒரு ஃபேஸ்புக் நிலைத்தகவல் சிங்கப்பூரை இந்த குளிர் காலத்திலும் கொதிக்க வைத்து விட்டது.

அவர் போட்ட விஷயம் தான் இது.

தன்னுடைய விலையுயர்ந்த காரைப் பராமரிப்பிற்கு விட்டதால், மகனுடன் MRT ரயிலில் வந்து அதைப் படம் எடுத்து இது போல ஒரு நிலைத்தகவலை போட்டு அது போதாது என்று இன்னொரு படத்தையும் நிலைத் தகவலையும் போட இதை யாரோ பகிர, வேலை முடிந்தது. Image & News Credit – therealsingapore.com

Poor and Stench

இதில் “Poor” மற்றும் “Stench” என்ற வார்த்தைகளைக் கொண்ட இந்த நிலைத்தகவல் காட்டுத்தீயாக பரவியதோடு பலரையும் கொந்தளிப்பில் ஆழ்த்தி விட்டது.

முதல் நிலைத்தகவல் உடனே வேகமாக பரவிவிட்டது.

இவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக செய்திகளில் வந்தது. அரசாங்கமே தலையிடும் அளவிற்கு உள்ளூர் மக்களிடையே எதிர்ப்பு கிளம்பி விட்டது.

ஏற்கனவே வெளிநாட்டவர் நடந்து கொள்ளும் முறையில் / தங்கள் வாய்ப்புகள் பறிக்கப்படும் கோபத்தில் இருந்த உள்ளூர் மக்கள், இதற்கு உச்சக்கட்ட எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்தார்கள்.

உள்ளூர் விவாதத் தளங்களில் இந்தப் பிரச்சனை பிரித்து மேயப்பட்டது.

இவருடைய PR [Permanent Resident] ஐ ரத்து செய்து நாட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்று எதிர்ப்புக் குரல் அதிகமாகியது.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் K சண்முகம் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.

இதன் பிறகு “Aston Casey” தன்னுடைய இந்த செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

Crossinvest Asia

Crossinvest Asia நிறுவனம் எதிர்ப்புகளால் கடந்த வெள்ளி உடனடியாக இவரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது.

தற்போது இவர் குடும்பத்துடன் வெளியேறி விட்டார். இவர் விமான நிலையத்தில் அவசரமாக உள்ளே நுழைந்ததை அங்கே இருந்த உள்ளூர் மக்கள் அடையாளம் கண்டு தங்கள் சமூகத் தளங்களில் பகிர்ந்தது வேகமாகப் பரவியது.

12 வருடமாக சிங்கப்பூரில் இருக்கும் இவர் எப்படி இது போல கூறினார் என்று ஆச்சர்யமாக உள்ளது.

இவரின் மனைவி முன்னாள் மிஸ் சிங்கப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இனி சிங்கப்பூர் வர முடியுமா என்று தெரியவில்லை, வந்தால் உள்ளூர் மக்களின் எதிர்ப்பிற்கு ஆளாக நேரிடும்.

தற்போது ஆஸியின் தலைநகர் Perth நகருக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்து விட்டார்.

தன் குடும்பம் எப்போது பாதுகாப்பாக உணர்கிறதோ அப்போது சிங்கப்பூர் வருவதாக தெரிவித்து இருக்கிறார்.

கொஞ்ச நாட்களுக்கு இவர் அமைதியாக இருப்பதைத் தவிர வேறு வழி புரியவில்லை.

தனிப்பட்ட விஷயம்

அநாகரீகமாக இவர் போட்ட ஒரு நிலைத்தகவல், வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது.

இவருடைய வழக்கறிஞர் “இவர் தன் தனிப்பட்ட குழுவில் போட்டதை இவ்வாறு வெளியிட்டது தவறு” என்று கூறினாலும் யாரும் இதைக் காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை.

சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட விஷயம் என்று எதுவுமே கிடையாது.

ஒருத்தர் நம் தகவலை Screenshot எடுத்துப்போட்டால் [நீங்கள் Public க்காக பகிரவில்லை என்றாலும்], வேலை (கதை) முடிந்தது. அதன் பிறகு நீங்கள் என்ன கதறினாலும் பயனில்லை.

நீங்கள் மேலே உள்ள ஸ்டேடஸ் படத்தில் கவனித்தீர்கள் என்றால், அது நண்பர்களுக்கு இடையே பகிரப் பட்டது, “Public” அல்ல.

இதை யாரோ அவர் நண்பர்கள் வட்டத்தில் உள்ள ஒருவர் தான் இதை “Screenshot” எடுத்துப் போட்டு இருக்க வேண்டும்.

எனவே புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதாக நினைத்து இது போலச் செய்தாலும் மாட்டிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இது சிங்கப்பூரில் முதல் சம்பவம் அல்ல.

Amy Cheong

கொஞ்ச மாதங்கள் முன்பு Amy Cheong என்ற பெண் மலாய் இனத்தவர் பற்றி ஒரு சர்ச்சையான கருத்தை ஃபேஸ்புக்கில் கூறியதால், அவர் பணி புரிந்த [NTUC] நிறுவனத்தில் இருந்து ஒரே இரவில் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இவரும் பெரிய பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இதைப் படித்துக்கொண்டு இருக்கும் நீங்கள் கொஞ்சம் அடக்கி வாசிக்கவும். சிறு தவறு / அலட்சியம் கூட உங்களை நீங்கள் கற்பனையில் கூட நினைத்து இராத சிக்கலைக் கொண்டு வந்து தரும்.

எனவே, “ஃபேஸ்புக்(கில் மட்டும்) புரட்சியாளர்கள்” ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து நிலைத் தகவல் இடுங்கள்.

கொசுறு

பின்வருவது ஒரு பள்ளி மாணவன் தன்னுடைய ஆசிரியர் தன்னை சத்தமாக அழைத்ததால், “நான் செவிடா?” [“Am I deaf? Just answer my question…you should not shout, I’m not deaf, okay…Who ask you to shout? I’m deaf, ah?”] என்று கூறி ஆசிரியரை மன்னிப்பு கேட்க வைத்த காணொளி, சக மாணவனால் எடுக்கப்பட்டு காட்டுத்தீயாக பரவி விட்டது.

சம்பந்தப்பட்ட மாணவன் இந்தியர் (சிங்கப்பூர் தமிழர்), பெயர் ஜஸ்டின். தற்போது மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக செய்திகளில் வந்துள்ளது.

இந்த மாணவன் நடந்து கொண்ட முறை குறித்து பலரும் இணையத்தில் கடுமையான கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

தற்போது பள்ளிகளில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. என்னமோ போங்க!

இந்தியர்கள்

லிட்டில் இந்தியா கலவரத்திற்குப் பிறகு நடந்த மூன்று பெரிய சம்பவத்தில் இந்தியர்கள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்.

ஒன்றில் ஒரு பெண்ணின் தலையே வெட்டப்பட்டு முண்டம் மட்டும் போடப்பட்டு இருந்தது, இன்னொன்று ஒரு தலைக் காதல் பிரச்சனையில் கத்தியால் சரமாரியாக ஒரு பெண் வெட்டப்பட்டார்.

இன்னொரு சம்பவத்தில் கிறிஸ்துமஸ் இரவின் போது வாடகைக் கார் கண்ணாடியை சிலர் உடைத்து விட்டனர்.

Read: சிங்கப்பூர் கலவரம் – தமிழக ஊடகங்களும் அரசியலும்

சமீபமாக ஏகப்பட்ட சர்ச்சையான செய்திகளை படித்து ஒரு வழியாகி விட்டேன்.

அதுவும் இதில் சம்பந்தப்பட்டது நம்மவர்கள் என்றால் கடுமையான மன உளைச்சலாக இருக்கிறது.

“Aston Casey” சர்ச்சையில் மட்டும் கூறியது இவராக இல்லாமல் இந்தியராக இருந்து இருந்தால்… நினைத்தாலே பீதியாக இருக்கிறது.

தற்போதெல்லாம் ஏதாவது சர்ச்சை என்றால் அதில் நம்மவர்கள் சம்பந்தப்பட்டு இருக்கக் கூடாது என்று பயந்து கொண்டே படிக்க வேண்டியதாக இருக்கிறது.

இது எனக்கு மட்டுமான எண்ணமாக நினைக்கவில்லை.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

  1. கிரி, இந்த செய்தி நிச்சயம் படிக்கும் பல பேருக்கு (எனக்கும்) வியப்பாக இருந்தாலும், அதே நேரத்தில் இனி மேல் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தும் போது கண்டிப்பாக யோசிக்க வைக்கும்.

    (எனவே இதைப் படித்துக்கொண்டு இருக்கும் நீங்கள் கொஞ்சம் அடக்கி வாசிக்கவும். சிறு தவறு / அலட்சியம் கூட உங்களை நீங்கள் கற்பனையில் கூட நினைத்து இராத சிக்கலைக் கொண்டு வந்து தரும்.)

    கொஞ்சம் இல்ல ரொம்பவே அடக்கி வாசிக்கனும் போல… அலாட்டக்கியதற்கு நன்றி கிரி.

  2. yenakku andha video romba pudichudhu…anton casey nenacha paridhabama irukku…chumma velayattuku pottu iruppar yendru ninaikuren…

  3. அண்ணா நான் ‘ முகநூல் பைத்தியமாக’ இல்லாமல் இருப்பதால் எனக்கு கவலை இல்லை .. நாமெல்லாம் பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்லி தன இடைதகவலையே போடுறோம் அப்புறம் எதுக்கு கவலை பட்டுகிட்டு …

  4. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @ராஜேஷ் அவர் செய்த தவறு “Public” ல் போடவில்லை என்பதால், எதுவும் ஆகாது என்று நினைத்தது.

    @கார்த்திகேயன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் ஆர்வம் 🙂

  5. தொடர்ந்து உங்கள் பதிவுகளை வாசித்து வருகிறேன். இந்தத் தகவல் சிங்கப்பூரின் அன்றாட நடவடிக்கை பற்றிய நடப்புச் செய்தியை அறியத் தந்துள்ளது.

    எம்.ஆர்.டி நிறுவனத்தைக் குறைகூறி ஃபேஸ்புக்கில் போட்டதால், ஒரு இங்கிலாந்துக் காரரின் வேலையும் நாட்டில் தங்கும் உரிமையும் ரத்து செய்யப்பட்டதைக் காணும்போது அரசு எந்திரத்தின் வலிமையை நன்கு அறிய முடிகிறது. மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசைக் குறை கூறுவது தவறு.

    இந்திய அரசு எந்திரத்தை சிங்கப்பூருடன் ஒப்பிடக் கூடாது. அப்படி ஒப்பிட்டால் அது சிங்கப்பூருக்கு நாம் செய்யும் துரோகம்.

    நன்றி

  6. இதை என்னவென்று சொல்வது.
    உள்ளொன்று வைத்து புறமொன்று சொல்லாதவர் என்றா? அல்லது என்னதான் தாயா புள்ளையா பழகினாலும் வாயும் வயிறும் எண்ணமும் வேறென்றா?

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2012/11/blog-post_18.html

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here