ஃபேஸ்புக்கின் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி

9
ஃபேஸ்புக்கின் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி

ரட்டை அடுக்குப் பாதுகாப்பு முறையை ஜிமெயில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியது, அதன் பிறகே ஒவ்வொரு பெரிய நிறுவனமும் இந்த வசதியை அறிமுகப்படுத்தி வந்தது. Image Credit

ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், ட்விட்டர், Dropbox என்ற பெரிய நிறுவனங்கள் அதில் அடங்கும் முக்கிய நிறுவனங்கள்.

இதில் ஜிமெயில்க்கு அடுத்தது ஃபேஸ்புக் பாதுகாப்பு விசயத்தில் மிகச் சிறப்பாக செயல்படுகிறது.

இரட்டை அடுக்குப் பாதுகாப்பு முறை என்றால் என்ன?

நம்முடைய இணையக் கணக்கில் கடவுச்சொல்லை (Password) கொடுத்த பிறகு நம்முடைய கைப்பேசிக்கு குறுந்தகவல் (SMS) வரும்.

அதில் உள்ள எண்ணைப் பதிவு செய்தால் மட்டுமே நம் கணக்கில் நுழைய முடியும்.

இதன் மூலம் இன்னொருவருக்கு நம் கடவுச்சொல் தெரிந்தாலும், குறுந்தகவல் (OTP) எண் தெரியவில்லை என்றால், நம் கணக்கில் நுழைய முடியாது.

நாம் பயன்படுத்தாமலே நமக்கு குறுந்தகவல் வந்தால், யாரோ நம் கணக்கைத் தவறாக உபயோகிக்க முயற்சிக்கிறார்கள் என்று எச்சரிக்கையாகி உடன் நம் கடவுச்சொல்லை மாற்றி விடலாம்.

Read: ஜிமெயிலின் இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி!

ஜிமெயில் / ஃபேஸ்புக் இரண்டுமே ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது.

மின்னஞ்சல் கணக்கு தான் நம்முடைய இணையக் கணக்குகளுக்கு ஆதாரம் என்பதால் மின்னஞ்சல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

அதே போல ஃபேஸ்புக் இந்த அளவிற்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும், நம் ஃபேஸ்புக் கணக்கில் குடும்ப நிழல்ப் படங்கள், காணொளிகள் இருந்தால், அதைத் தவறான வழியில் பயன்படுத்த மற்றவர்கள் முயற்சிக்கலாம் என்பதால், இதுவும் ஒருவகையில் முக்கியமான இணையக் கணக்காகி விடுகிறது.

கூடுமானவரை குடும்ப நிழல்ப் படங்களை (குறிப்பாக பெண்கள்) சமூகத் தளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்பது என்னுடைய பரிந்துரை.

ஏனென்றால் நாளைக்கே உங்களுடைய நிழல் படமே ஆபாசமாகச் சித்தரிக்கப்பட்டு உங்களுக்கே வரக் கூடிய வாய்ப்பு அதிகம்.

தற்போது ஃபேஸ்புக்கில் எப்படி இரட்டை அடுக்குப் பாதுகாப்பு முறையைச் செயல்படுத்துவது என்பதைப் பற்றிக் கூறுகிறேன்.

மிக எளிமையான வழிமுறைகள் தான் எனவே, ரொம்பச் சிரமம் என்று எண்ணாமல் இதைச் செயல்படுத்துங்கள்.

எப்படி செயல்படுத்துவது?

இதன் மூலம் உங்கள் கணக்கை ஹேக்கிங் செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கலாம். நான் முன்னரே கூறியபடி ஹேக்கர்கள் அனைவரையும் விட புத்திசாலிகள் / திறமையானவர்கள்.

எனவே அவர்களைக் குறைவாக மதிப்பிட வேண்டாம். இவை உங்களுக்குக் கூடுதல் பாதுகாப்புத் தானே தவிர 100% பாதுகாப்பு என்று எங்கேயுமே இல்லை.

முதலில் ஃபேஸ்புக்கில் உள்ள Settings க்ளிக் செய்தால், மேலே உள்ள (இரண்டாவது) படத்தில் உள்ளது போல வரும்.

அதில் இடது புறம் Mobile என்பதை க்ளிக் செய்யுங்கள். அதில் உள்ள Add Number க்ளிக் செய்து உங்கள் கைப்பேசி எண்ணைக் கொடுத்தால், உங்களை உங்கள் கைப்பேசியில் இருந்து ஒரு எண்ணிற்கு குறுந்தகவல் (SMS) அனுப்பக் கூறும்.

நீங்கள் அனுப்பியதும் ஃபேஸ்புக்கில் இருந்து ஒரு எண் வரும். இந்த எண்ணை அருகில் உள்ள Confirmation Code ல் கொடுத்து Confirm க்ளிக் செய்தால், உங்கள் கைப்பேசி எண் சேர்க்கப் படும்.

இதே முறையில் Add another number என்பதை க்ளிக் செய்து உங்களுக்கு நம்பகமான இன்னொருவர் கைப்பேசி எண்ணையும் கொடுத்து விடுங்கள்.

ஒருவேளை உங்கள் கைப்பேசியை பயன்படுத்த முடியாத சூழல் இருந்தால் இந்த இரண்டாவது எண் உதவும்.

இதை செய்து முடித்தவுடன் அடுத்ததாக அதே பக்கத்தில் திரும்ப இடது புறத்தில் உள்ள Security settings க்ளிக் செய்யவும்.

இது எதற்கென்று படத்தைப் பார்த்ததுமே உங்களுக்குப் புரிந்து இருக்கும். வேறு யாராவது உங்கள் கணக்கைத் திருட முயற்சிக்கும் போது நமக்கு இது போன்ற எச்சரிக்கைகள் மின்னஞ்சல் மற்றும் ஃபேஸ்புக்கில் Push Notification ஆகத் தெரியும்.

Push Notification என்பது நமக்கு யாராவது பின்னூட்டம் (Comment) விருப்பம் (Like) செய்தால் சிகப்பு வண்ணத்தில் வரும் Notification போல யாராவது திருட முயற்சித்தாலும் வரும். எனவே நாம் எச்சரிக்கையாகி விடலாம்.

இதைச் சோதனை செய்ய, நீங்கள் இதை செயல்படுத்திய பிறகு வேறு உலவியில் (Browser) உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் நுழைய முயற்சித்தால், தற்போது Active ஆக உள்ள ஃபேஸ்புக் கணக்கில் Push Notification வருவதைக் காண முடியும்.

இது தான் மிக முக்கியமான வசதி. இதைத் தேர்வு செய்தால், உங்கள் கடவுச்சொல்லை யாராவது திருடினாலும் அல்லது ஊகித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

கடவுச்சொல்லை கொடுத்தவுடன் நாம் பதிவு செய்துள்ள கைபேசிக்கு குறுந்தகவல் (SMS) வரும். இதில் குறிப்பிட்டுள்ள எண்ணைக் கொடுத்தால் மட்டுமே நுழைய முடியும். இதன் மூலம் கடவுச்சொல் தெரிந்தால் மட்டுமே நம் கணக்கில் யாரும் நுழைந்து விட முடியாது.

இதில் நாம் இரண்டு எண்களைப் பதிவு செய்து இருந்தால், இரண்டு கைப்பேசிக்குமே குறுந்தகவல் வரும். மூன்றாவதாக பதிவு செய்து இருந்தால் அதிலும் வரும். இரண்டே போதும்.

இதில் Get Codes என்று இருப்பதை க்ளிக் செய்தால் அதில் வரும் 10 எண்களை வேறு பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இது எதற்கு என்றால், இரண்டு கைப்பேசிகளுமே இல்லாத சமயத்தில் இந்த எண்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது மிக அவசியம், புறக்கணிக்க வேண்டாம். எனக்கு இந்த வசதி ஒருமுறை ஜிமெயிலில் பிரச்சனை ஆன போது பேருதவியாக இருந்தது.

இன்னொரு பரிந்துரை, அடிக்கடி உங்கள் கைப்பேசி எண்ணை மாற்றுபவராக இருந்தால், இந்த வசதியைப் பயன்படுத்தாதீர்கள் அல்லது மாற்றியவுடன் இதிலும் மறக்காமல் புதுப்பித்து விடுங்கள்.

இந்த வசதி ரொம்ப முக்கியம் கிடையாது ஆனால், உதாசீனப்படுத்த முடியாது.

ஒருவேளை உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டால், ஃபேஸ்புக்கிற்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள நண்பர்கள் பெயரைக் கொடுத்தால், கணக்கை மீட்க உதவியாக இருக்கும்.

இந்த வசதியில் Never கொடுப்பதே சரியானது. இல்லையென்றால் குறுந்தகவல் சரமாரியாக வந்து நம்மைக் கடுப்பேத்தும்.

படிக்க என்னவோ நிறைய செய்ய வேண்டியது போல இருக்கும் ஆனால், உண்மையில் இதை முடிக்க 10 நிமிடங்கள் கூட ஆகாது. இதைச் செய்வதன் மூலம் உங்கள் ஃபேஸ்புக் கணக்கு பாதுகாப்பு மேம்படும்.

தற்போது ஃபேஸ்புக் பயன்படுத்தாதவர்கள் என்பது வெகு குறைவாகவே இருக்கிறது. எனவே உங்கள் கணக்கு முக்கியம் என்றால், இந்த வசதியை அவசியம் செயல்படுத்துங்கள்.

ஒரு நிறுவனம் பாதுகாப்பிற்காக வசதிகளைக் கொடுக்கும் போது அதைப் புறக்கணிக்காமல் செயல்படுத்துவதே புத்திசாலித்தனம்.

இதில் எதுவும் சந்தேகம் இருந்தால் கேட்கலாம்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

9 COMMENTS

  1. நான் பேஸ்புக் அதிகம் உபயோகிப்பதில்லை… அவ்வப்போது படங்களோடு சீன உணவு குறிப்புகள் போடுவதோடு சரி… முயற்சி செய்கிறேன்.

  2. சூப்பர் மேட்டர் கிரி.. (ஒரு நிறுவனம் பாதுகாப்பிற்காக வசதிகளைக் கொடுக்கும் போது அதை புறக்கணிக்காமல் செயல்படுத்துவதே புத்திசாலித்தனம்)… 100% உண்மை.. பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி..

  3. என்னுடைய கணக்கில் லாகின் நோட்டிபிகேசன் வசதி மட்டுமே உள்ளது.லாகின் அப்ரூவல் இல்லை.என்ன செய்ய..?!

  4. நல்ல தகவல் அண்ணா ஆனால் பாருங்கள் என்னை மாதிரி நாளொன்றுக்கு பல முறை பேஸ்புக் செல்பவர்களுக்கு சிரமம் அல்லவா ஒவ்வொரு முறையும் உள் நுழையும் போது ரகசிய எண்ணிற்காக உலவியிலிருந்து வெளிவருவது கடினம்தான் ……நன்றி

  5. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @தேவா நீங்கள் கைபேசியை பதிவு செய்யாமலே பார்த்து இருக்கலாம். பதிவு செய்த பிறகு முயற்சித்துப்பாருங்கள்.

    @ஸ்ரீநிவாசன் நன்றி

    @இளவசரன் முதல் முறை இது போல நுழையும் போது நமது உலவியில் இதை சேமித்துக் கொள்ளவா என்று கேட்கும். அப்போது அதை ஏற்றுக்கொண்டால் நீங்கள் பயன்படுத்தும் கணினி உலவி அல்லது கைப்பேசியில் பதிவாகி விடும். அதன் பிறகு ஒவ்வொருமுறையும் குறுந்தகவல் கொடுத்து நுழைய வேண்டியதில்லை. உங்கள் கடவுச்சொல்லை கூட கொடுக்க வேண்டியதில்லை. ரொம்ப எளிது.

    எனவே தயக்கமில்லாமல் இந்த வசதியைப் பயன்படுத்துங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here