தமிழகத்தின் தடுப்பூசி பயம் | COVID-19

9
தமிழகத்தின் தடுப்பூசி பயம்

மிழகத்தின் தடுப்பூசி பயம் இன்னும் தெளியவில்லை.

துவக்கத்தில் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் செய்த எதிர்மறை பிரச்சாரங்கள் மக்களைப் பயம் கொள்ளச் செய்து விட்டன.

தமிழகத்தின் தடுப்பூசி பயம்

பல விஷயங்களில் முன்னோடியாக இருக்கும் தமிழகம், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அதலபாதாளத்தில் உள்ளது வருத்தம் அளிக்கும் செய்தி.

அண்டை மாநிலமான கேரளா தடுப்பூசி கொள்வதில் அசத்தி வருவதோடு, தடுப்பூசியை வீணாக்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. Image Credit

பொருளாதார வளர்ச்சி ரீதியாக நம்முடன் போட்டியிடும் நமக்கு ஒரு படி மேலே இருக்கும் மஹாராஷ்ட்ரா மாநிலம் தடுப்பூசி போடுவதிலும் முன்னணியில் உள்ளது.

பாடம் எடுக்கும் பீடா வாயன்கள்

வட மாநிலத்தவரை பீடா வாயன், பானிபூரி என்று நாம் கிண்டலடித்துக் கொண்டு இருக்க, அங்கே தடுப்பூசி போடுவதில் முன்னணியில் இருக்கிறார்கள்.

ஆகப்பெரிய கொடுமை, தமிழகம் மஹாராஷ்டிரா தான் வரிப்பணத்தை இந்தியாக்கு அதிகம் தரும் மாநிலங்களில் முக்கியமானவை.

இதிலிருந்து அதிகப் பலன் அடைவது பின்தங்கிய வட மாநிலங்கள்.

ஆனால், நமக்கு வாய்ப்பு இருந்தும் பயன்படுத்தாமல் இன்னும் பயந்து கொண்டு உள்ளோம், அவர்கள் பின்னாளில் முழுப்பலனையும் அடையப்போகிறார்கள்.

தடுப்பூசி போடத் தயங்கிக்கொண்டு இருந்தால், தமிழகத்தில் தொற்றுப் பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

தமிழக அரசு

எதிர்க்கட்சியாக இருந்தபோது தடுப்பூசிக்குப் பீதியை கிளப்பி, மோடி ஊசி! என்பதால் சந்தேகமாக உள்ளது என்றெல்லாம் பேசி மக்களைப் பயமுறுத்தியவர்கள் தற்போது தடுப்பூசி போடத் திணறி வருகிறார்கள்.

தமிழகத்தில் பிரச்சனை என்னவென்றால், தேவையான இடங்களில் தடுப்பூசி இல்லை, தேவைப்படாத இடங்களில் அதிகமுள்ளது.

தடுப்பூசியை வீணடிக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது தடுப்பூசி போடுபவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

ஏன் இந்தப் பயம்?

இந்தியாவில் தினமும் விபத்தால் இறப்பவர்களை விடத் தடுப்பூசி போட்டுப் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு.

சாலையில் செல்லும் போது விபத்து நேர்ந்தால் என்ன செய்வது? என்று சாலையில் பயணிக்காமல் இருக்கிறீர்களா?!

அப்புறம் என்ன?!

கொரோனா தடுப்பூசி என்றல்ல, எந்த ஒரு தடுப்பூசிக்கும் குறிப்பிட்ட சதவீதத்தினருக்குப் பாதிப்பு இருக்கத்தான் செய்யும்.

இதையெல்லாம் யோசித்து இருந்தால், போலியோவை ஒழித்து இருக்க முடியுமா?!

70 களில் பிறந்த ஒவ்வொருவரின் கையிலும் தடுப்பூசி அடையாளம் இருக்கும். சந்தேகம் இருந்தால், உங்கள் வீட்டினரை கேட்டுப்பாருங்கள்.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்குக் கொரோனா வந்தாலும், அதனால் ஏற்படும் பாதிப்புக் குறைவு, உயிரிழப்பு மிக மிகக் குறைவு.

நன்றாக உள்ள 99% பற்றி யோசிக்காமல், பாதிக்கப்பட்ட 1% க்கும் குறைவானவர்களைப் பார்த்து ஏன் பயப்பட வேண்டும்?

வெள்ளி 21 மே 2021

கடந்த வெள்ளி 21 மே 2021 அன்று அலுவலகத்தில் ஏற்பாடு செய்து இருந்த தடுப்பூசி முகாமில் (Covishield) தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.

ஊசி போட்டுக்கொண்ட இடம் மட்டும் மூன்றாவது நாள் இரண்டு மணி நேரங்கள் கொஞ்சம் வலித்தது, அதன் பிறகு சரியாகி விட்டது.

காய்ச்சல், உடல்வலி என்று எதுவும் நேரவில்லை. சிலருக்கு காய்ச்சல், உடல்வலி வந்துள்ளது. இது இயல்பானது, ஒவ்வொருவரின் உடல்வாகுக்கு ஏற்ப மாறுபடும்.

அதிகபட்சம் இரண்டு நாட்கள் இப்பிரச்சனைகள் இருக்கலாம், அதன் பிறகு வழக்கமான நிலைக்குத் திரும்பி விடலாம்.

கொஞ்சம் கூட வலி தெரியாமல் ஒரு நொடியில் தடுப்பூசி போட்டு விடுகிறார்கள்.

  • தடுப்பூசி போட்டுக்கொண்ட அடுத்த 15 – 20 நாட்கள் வெளி நபர்கள் தொடர்பை முடிந்தவரை தவிர்க்கவும்.
  • சிறப்பு மருந்துகள் உட்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவும்.

மருத்துவர் ஆலோசனை

Blood Thinner மருந்து உட்கொண்டு வருகிறேன்.

எனவே, மருத்துவரின் ஆலோசனையோடு தடுப்பூசி போடுவதற்கு முன் பின் மூன்று நாட்கள் மருந்து உட்கொள்ளவில்லை.

தடுப்பூசி போட்டு இன்றோடு (27 மே 2021) ஆறு நாட்கள் முடிகிறது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் கொரோனாவை முழுவதுமாக ஒழிக்க முடியாது என்று அனைத்து மருத்துவர்களும் கூறுகிறார்கள்.

அவர்களின் அறிவுரையை ஏற்று எனக்கு முன்னால் 20 கோடி முறை தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களைப் போலச் சமூகக் கடமையைச் செய்து விட்டேன்.

நீங்கள் இதுவரை செய்யவில்லை என்றால், செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

பல நாடுகளில் இரு முறை தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்கள் முகக்கவசத்தை அணிய வேண்டியதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

நாம் அந்த அளவுக்குச் செல்ல வேண்டியதில்லை, தொற்று முழுதாகக் குறையும் வரை தொடர்ந்து முகக்கவசம் அணிவதைத் தொடர்வோம்.

நல்லதையே நினைப்போம்! நல்லதே நடக்கும்! எதிர்மறை எண்ணங்களுக்கு இத்தளத்தில் இடமில்லை.

கொசுறு

தடுப்பூசி போடுவதில் ஆர்வம் இல்லாதவர்கள் தயவு செய்து போட்டுக்கொள்ள நினைப்பவர்களைப் பயமுறுத்தாதீர்கள்.

எதிர்மறை செய்திகளைப் பகிர்ந்து அவர்களையும் குழப்பாதீர்கள்.

கொரோனா அதிகரிப்பு காரணமாக, இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்தவர்களும் ஆர்வமாகப் போட்டுக்கொள்ளத் துவங்கியுள்ளனர்.

தமிழக அரசு தற்போது பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாமை அமைத்து, சிறப்பாகச் செய்து வருகிறார்கள். அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுங்கள்.

விரைவில் தமிழகம் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மாநிலங்களில் முதல் மூன்று இடங்களுக்குள் வரும்.

தொடர்புடைய கட்டுரைகள்

Drug Mafia | உலக மருந்து அரசியல் | COVID-19

SICK Mind ஊடகங்களும் அரசியல்வாதிகளும் | COVID-19

தடுப்பூசி போடுவது கட்டாயமா? | COVID-19

அப்படி என்ன தான் வாங்குகிறார்கள்?!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

9 COMMENTS

  1. கிரி, ஆரம்பத்தில் எனக்கும் தடுப்பூசி குறித்து பல கேள்விகள் இருந்தன.. (தற்போதும் உள்ளன).. ஆனால் பிரச்சனை தீர தடுப்பூசி தான் தீர்வு என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவதால் அதை நிச்சயம் போட்டு கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.. இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு முறையாக ஏற்படுத்தி அரசு வழிவகை செய்ய வேண்டும்.. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவ வேண்டும்.. தடுப்பூசியையும் அரசியலாக்க கூடாது..

    கடந்த ஏப்ரல் முதல் தேதியில் முதல் தடுப்பூசியை (Sinopharm) போட்டு கொண்டேன்.. பின்பு இரண்டாம் ஊசியையும் செலுத்தி கொண்டேன்.. 25 ஆண்டுகளுக்கு முன்பு காய்ச்சலில் இருந்த போது, ஊசி போட்டதாக நினைவில் இருக்கிறது.. தடுப்பூசி இரண்டும் போட்ட பிறகு எனக்கு தற்போது வரை எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.. எனக்கு தெரிந்த சில நண்பர்களும் போட்டு இருந்தனர்.. அவர்களுக்கும் எந்த உடல் உபாதையும் ஏற்படவில்லை..அடுத்த சில மாதங்களில் நிச்சயம் தமிழகத்தில் தடுப்பூசி போடுவோர்களின் எண்ணிக்கை உயரும் என நம்புகிறேன்..

    (ஒருநாள், ஏதோ ஒரு காரணத்தினால் எங்கிருந்தோ வரும் உணவு நிறுத்தப்படலாம். வாகனங்கள் ஓடுவதும் கப்பல்கள் மிதப்பதும் விமானங்கள் பறப்பதும்கூட நிறுத்தப்படலாம். ஆனால் உனக்கான உணவை, நீ உற்பத்தி செய்ய பழகியிருந்தால், இதையெல்லாம் எண்ணி நீ அஞ்ச வேண்டியதில்லை… நம்மாழ்வார் அய்யா) இதை படிக்கும் போது மனது கனக்கிறது.. இந்த கூற்றின் உண்மையும் தற்போது விளங்குகிறது.. நீங்கள் வாழ்ந்த பூமியில் நாங்களும் வாழ்த்தோம் என்பதே புண்ணியம்.. நீங்கள் சுவாசித்த காற்றை நாங்களும் சுவாசித்தோம் என்ற ஒன்றே போதும் அய்யா..

    அருமையான பொற்கால வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறோம்… விஞ்ஞானம் அனைத்தையும் எளியதாக்கியது ஆனால் அதற்கு விலையாக நிம்மதியை மொத்தமாக உருவி எடுத்து இருக்கிறது.. மீண்டும் பழமையை நோக்கி பயணிக்க மனது துள்ளி குதிக்கிறது.. இயற்கை மீது கொண்ட காதல் இன்று பல மடங்காக கூடி உள்ளது.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. @யாசின் உங்கள் பகுதியில் Sinopharm மட்டுமே அனைவரும் போடுவதாகக் கூறுகின்றனர். மற்ற எந்தத் தடுப்பூசிக்கும் அனுமதி இல்லையா?

    “மீண்டும் பழமையை நோக்கி பயணிக்க மனது துள்ளி குதிக்கிறது”

    அதெல்லாம் வாய்ப்பில்லை 🙂

    • ஆரம்பத்தில் இங்கு சினோபார்ம் மட்டும் தான் எல்லா இடங்களிலும் போடப்பட்டது.. இடையில் ஸ்ட்னிக் (ரஷ்யா) & பைசர் ஊசியும் போடப்பட்டது. தற்போது குழந்தைகளுக்கு (12 வயதிற்கு மேல்) பைசர் மட்டும் போடப்படுகிறது. தற்போது பெரியவர்களுக்கு முன்பதிவின் மூலம் அவர்கள் விரும்பும் ஊசியை போடும் வகையில் வழி வகை செய்யபட்டுள்ளது.

  3. இன்றைய தேதியில் தமிழகத்தில் தினசரி தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது அண்ணா. தினசரி எண்ணிக்கை 10000 என்ற கணக்கில் இருந்து, இப்போது 2 லட்சத்தை தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசும் அதிகாரிகளும் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    ஆனாலும் கிராமத்தில் தடுப்பூசிக்கான விழிப்புணர்வு சுத்தமாக இல்லை. இப்போது காட்டப்படும் எண்ணிக்கையும் நகர்புறங்களிலும் ஓரளவு நகர்ப்புறங்களிலும் உள்ள மக்களால் தான். கிராமத்தில் இல்லை.

    தடுப்பூசி முகாம்கள் நகர்புறங்களில் உள்ளதுபோல் இன்னும் கிராமத்தில் ஆரம்பிக்கவில்லை. ஏதோ ஒரு ஊர்ல ஏதோ ஒரு ஆளு தடுப்பூசி போட்ட மறு நாள் இறந்ததற்கு இங்க இருக்க ஜனங்க ஊசி போட பயப்படுராங்க. இந்த பயத்த போக்காதவரைக்கும் 100 % சாத்தியமில்லை.

  4. நண்பர் கிரி,தடுப்பூசி செலுத்துவதில் தாங்கள் கூறியது முற்றிலும் சரிதான்,தடுப்பூசியின் வீரியம் ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரையில் தான் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள், அப்படி இருக்கும் போது இவ்வளவு மெதுவாக தடுப்பூசி செலுத்துவதால் கோரானா பரவலை தடுக்க முடியுமா என்பது சந்தேகம் அளிக்கின்றது?,எங்கோ ஒரு மூளையில் தடுப்பூசி மையத்தை அமைத்துக்கொண்டு காத்திருப்பதை விட, நடமாடும் தடுப்பு ஊசி மையத்தை ஏற்படுத்தி மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தடுப்பூசி போடுவதால் வேகமாக தடுப்பூசி போட முடியும் மேலும் கண் முன்னே தடுப்பூசி போடுவதை பார்க்கும்பொழுது நாமும் போட்டுக் கொள்ளலாம் என்று இன்னும் பலர் முன்வந்து தடுப்பூசி போடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது,இதனால் தடுப்பூசிகள் வீணாவதைத் தடுக்கலாம்.அரசும் மக்களும் தடுப்பூசியை விஷயத்தில் மெத்தனமாக இருந்தால் சிரமம்தான்.

  5. @கார்த்திக்

    “இப்போது 2 லட்சத்தை தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசும் அதிகாரிகளும் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.”

    உண்மை தான் கார்த்திக். தற்போது மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

    “ஆனாலும் கிராமத்தில் தடுப்பூசிக்கான விழிப்புணர்வு சுத்தமாக இல்லை.”

    தற்போது போட்டுக்கொள்கிறார்கள் என்று நினைக்கிறன்.

    “இந்த பயத்த போக்காதவரைக்கும் 100 % சாத்தியமில்லை.”

    அரசியல்வாதிகள் ஊடகங்கள் செய்த தவறு.

    @கார்த்திக்

    “எங்கோ ஒரு மூளையில் தடுப்பூசி மையத்தை அமைத்துக்கொண்டு காத்திருப்பதை விட, நடமாடும் தடுப்பு ஊசி மையத்தை ஏற்படுத்தி மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தடுப்பூசி போடுவதால் வேகமாக தடுப்பூசி போட முடியும்”

    சரி தான். தற்போது தடுப்பூசி எண்ணிக்கை குறைவாக உள்ளதால், இது போல செய்ய முடியாமல் இருக்கலாம்.

    அதோடு மக்களும் தற்போது தான் ஆர்வம் காட்டுகிறார்கள் குறிப்பாக 18+ அனுமதி கொடுத்த பிறகு.

    விரைவில் தமிழகம் முன்னணியில் வந்து விடும் என்று நம்புகிறேன். ஜூன் மாதம் இரண்டாம் வாரம் 48 லட்சம் தடுப்பூசி வருவதாக கூறியுள்ளார்கள்.

    துவக்கத்தில் கூவி கூவி அழைத்தும் ஒருவரும் செல்லவில்லை, தற்போது இந்நிலை.

  6. நண்பர் கிரி,விவேக் போன்றவர்களின் தடுப்பூசிக்கு பிந்தைய மரணம் மக்களின் மனதில் தடுப்பூசி தற்போது போடலாமா என்ற குழப்பமான மன நிலையை ஏற்படுத்தி விட்டது, இது தடுப்பூசி போடுவதில் சுணக்கம் ஏற்பட்டதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.மேலும் ஆரம்பத்தில் தடுப்பூசி போடுவதற்கு சென்றவர்களை இன்னும் சில நபர்களை கூட்டி வந்தால்தான் தடுப்பு ஊசி போடுவோம் என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார்கள்,அவ்வாறு திரும்பி வந்தவர்களுக்கு தடுப்பூசி தற்போது இருப்பு இல்லை என்று மீண்டும் திருப்பி அனுப்பி விட்டார்கள்.
    இவற்றையெல்லாம் விட கோரானாவினால் மரணம் அடைந்தவர்களின் உடல்களை எடுத்துச் சென்று எரியூட்டுவதற்கு உறவினர்களிடம் 30,000-த்திற்கு மேல் லஞ்சம் கேட்கும் மனிதர்கள் இருக்கும் இந்த கேடுகெட்ட சமுதாயத்தின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக உள்ளது ஒருவரையொருவர் அடித்து தின்றுவிடுவார்கள் போல் உள்ளது,இதற்கு கோரானாவினால் பாதிப்பேர் சேத்து ஒழிந்தால் கூட நல்லது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

  7. @கார்த்திக்

    “விவேக் போன்றவர்களின் தடுப்பூசிக்கு பிந்தைய மரணம் மக்களின் மனதில் தடுப்பூசி தற்போது போடலாமா என்ற குழப்பமான மன நிலையை ஏற்படுத்தி விட்டது”

    சந்தேகமே இல்லை.

    இதில் என்ன கொடுமை என்றால், விழிப்புணர்வு ஏற்படுத்த அவர் செய்த முயற்சியிலேயே இது நடந்தது தான் வருத்தம்.

    விவேக் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தால், வருத்தப்பட்டு இருப்பார்.

    கொரோனா பலரின் வாழ்க்கையை, எண்ணங்களை மாற்றி விட்டது. எப்போது இந்நிலை மாறும் என்று சலிப்பாக உள்ளது.

    நிம்மதியாக வெளியே செல்ல முடியவில்லை, எவரையும் சந்திக்க முடியவில்லை, கடுப்பாக உள்ளது.

    சில மோசமான காலங்களில் சில மோசமான மனிதர்களைச் சந்திக்க நேர்வது தவிர்க்க முடியாததே, இந்நிலை விரைவில் மாறும் என்று நம்புவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here