அன்புள்ள இயக்குநர் பாலா!

15
அன்புள்ள இயக்குநர் பாலா!

ன்புள்ள இயக்குனர் பாலா அவர்களுக்கு,

உங்களின் படங்களை எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்து ரசிக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவன்.

நான் அதிகம் ரசிக்கும் தலைவர் படத்திற்கு அடுத்த படியாக இருக்கும் படங்கள் உங்கள் படங்கள் தான்.

எப்போது உங்கள் படம் அறிவிப்பு வந்தாலும் உங்கள் படத்தில் நடிக்கும் நடிகர்களை விட படம் எப்போதும் வெளியாகும் என்று ஆவலுடன் இருப்பேன்.

இயல்பான காட்சியமைப்புகள்

அதற்கு உங்களுடைய இயல்பான அழுத்தமான கதைக்களங்களும், திரைக்கதையும், சினிமாத்தனம் இல்லாத காட்சியமைப்புகளும், சண்டைக்காட்சிகளும், வழக்கமான டூயட் காட்சிகள் இல்லாத பாடல் அமைப்புகளும், எதற்கும் சமரசம் செய்து கொள்ளாத காட்சியமைப்புகளுமே காரணம்.

இப்படிப்பட்ட படங்களை எடுக்கும் நீங்கள் அவன் இவன் படத்தில் சறுக்கி விட்டீர்கள் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்து. என்  எண்ணமும் அதுவே!

உங்கள் ரசிகன் தான் என்றாலும் எப்படி எடுத்தாலும் பாராட்டினால் அது ஒரு நல்ல ரசிகனுக்கு அழகில்லையே!

விமர்சனம் எழுதலாம் என்றால் உங்கள் படம் என்ற ஆர்வத்தில் பலர் ஏற்கனவே எழுதிக் குவித்து விட்டார்கள்.

இதில் நான் புதிதாக என்ன எழுதுவது, என்ன எழுத இருக்கிறது? அதனால் இப்படி கடிதமாக எழுதி விட்டேன்.

நீங்கள் படிக்கிறீர்களோ இல்லையோ என்  ஆறுதலுக்காக எழுதிக்கொள்கிறேன்.

கடிதம் எழுதி விமர்சிப்பதால் படத்தை மோசமாக நினைத்து விட்டேன் என்று கருத வேண்டாம். உங்கள் தகுதிக்கு ஏற்றப் படமல்ல என்பது மட்டுமே என் வருத்தம்.

கதையே இல்லை

துவக்கம் முதல் உங்கள் படத்தில் ஒரு அழுத்தம் இருக்கும். இதில் அது சுத்தமாக இல்லை.படத்தில் கதையே 70% படத்திற்கு பிறகு தான் துவங்குகிறது.

முக்கால்வாசி படத்தில் வெறும் கேலி கிண்டல் நக்கல் மட்டுமே உள்ளது. கதை என்ற ஒன்று இல்லவே இல்லை.

நானும் கதை இப்போது துவங்கி விடும் என்று எதிர்பார்த்து இடைவேளை வரை ஏமாந்து விட்டேன்.

இதைப்போலப் பார்ப்பதற்கு நீங்கள் எதற்குப் பாலா? உங்கள் படம் என்றால் எங்கள் எதிபார்ப்புகளே வேறு அதை நீங்கள் அறியாதது அல்ல.

வித்யாசம்

பாலா என்றாலே அது வித்யாசம் தான். இது நான் மட்டும் கூறவில்லை உங்களை அறிந்தவர்கள் அனைவரும் கூறுவது.

உங்கள் படங்களில் வழக்கமான குத்துப்பாட்டு, ஹீரோயிசம், சம்பந்தமே இல்லாத டூயட் போன்றவை இருக்காது.

அதை விட முக்கியமாக நடிகர்கள் நடிகர்களாக இருப்பார்கள் அதோடு செட்டிங்க்ஸ் எதுவும் போடாமல் இருக்கும், அப்படியே போடப்பட்டு இருந்தாலும் அவை தெரியாமல் இயற்கையான காட்சியமைப்புகளாக இருக்கும்

நான் கடவுள் படத்தை இரு முறை பார்த்தும் பல இடங்கள் செட்டிங்க்ஸ் என்பதே தெரியவில்லை.  

நான் கடவுள் விமர்சனத்தில் செட் என்று தெரியாமலே கலை இயக்குனர் ஜிகே கிருஷ்ணமுர்த்தியைக் குறிப்பிடாமல் போனது வருத்தம்.

நல்ல கலைஞனை பற்றிக் குறிப்பிடாமல் போய் விட்டோமே என்று சங்கடமாகி விட்டது அந்த அளவிற்கு தத்ரூபமாக இருந்தது.

கடுமையாக வேலை செய்வதை விட வேலை செய்பவரிடம் திறமையாக வேலை வாங்குவது அதை விடக் கடினம்.

அதனாலே உங்கள் மீது அதிக மதிப்பு.

எத்தனையோ திறமையானவர்களாக இருந்தாலும் மொக்கை இயக்குனர் கையில் மாட்டிக்கொண்டு அவர்கள் திறமை அமுங்கி விடுவதே அதற்குக் காரணம்.

இவையே உங்களை மற்ற இயக்குனர்களில் இருந்து பிரித்துக்காட்டும் முக்கியமான விஷயங்கள் ஆகும்.

கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டீர்கள்

உங்கள் படத்தில் வித்தியாசங்களை எதிர்பார்த்து வருபவர்கள் அதிகம்.

அப்படி எதிர்பார்த்து வருபவர்களைத் திருப்தி செய்வதற்காக அவசியமே இல்லாமல் வித்யாசம் என்ற பெயரில் சில விசயங்களைத் தரவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விட்டீர்களோ என்று சந்தேகமாக உள்ளது.

ஆர்யாவிற்கு நூல் பிடித்து வெட்டியது போல ஒரு முடியமைப்பு, நிர்வாண காட்சிகளில் ஜிஎம் குமார், மாறுகண் பார்வையில் பெண்மைத்தனத்துடன் விஷால் என நீள்கிறது.

இதற்கெல்லாம் நிச்சயம் காரணம் கூற முடியும் ஆனால், இப்படி எல்லாம் செய்தால் தான் வித்யாசம் என்பதில்லையே.

சில வலிந்து திணித்தது போலவே இருந்தது குறிப்பாக ஜிஎம் குமார் நிர்வாணக்காட்சிகள்.

மற்றப்படங்களில் தான் காவல்துறை அதிகாரிகளைக் காமெடியர்களாகக் காட்டுகிறார்கள் என்றால் உங்கள் படத்திலும் இருப்பது தான் வருத்தமாக உள்ளது.

உங்கள் படம் தானா?

துவக்கத்தில் காமெடியாக எடுத்துக்கொள்ள முடிந்தாலும் மொத்தப்படத்திலும் அவ்வாறு வருவது தான் உறுத்தலாக இருக்கிறது.

அதே போலப் பெண் காவல் அதிகாரியிடம் பேன்ட் ஜிப் பற்றிக் கேட்பதாக வரும் காட்சிகளில் எல்லாம் இது உங்கள் படம் தானா என்று சந்தேகமே வந்து விட்டது.

பாலா! இப்படிப்பட்ட வசனங்களெல்லாம் உங்க படத்துக்குத் தேவையா? வசனம் எஸ்ரா என்று கூறி தப்பிக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

காரணம் உங்கள் அனுமதி இல்லாமல் ஒரு புள்ளி கூட வைக்க முடியாது என்பதை அறியாதவனல்ல.

அம்பிகா வாய்ச்சண்டையில் வெளுத்து வாங்கியதைக் கூடப் பெரிதாக நினைக்காமல் இயல்பான காட்சியாக ரசித்த நான், மேற்படி வசனங்களில் சங்கடமாக உணர்ந்தேன்.

ஜமீனாக வரும் ஜிஎம் குமாரை என்ன தான் பாசம் என்று கூறினாலும் மரியாதைக்குறைவாகப் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதிலும் அந்தச் சின்னப் பையன் எல்லாம்…. ரொம்ப அதிகம் தான்.

எந்த ஊரில் இதைப்போல ஜமீன் இருக்கிறார் என்று தெரியவில்லை.

இவரை ஊர் மக்கள் மதிப்பதாகப் பல காட்சிகள் ஆனால், அதே அவருக்கு நெருக்கமானவர்கள் அந்த மரியாதைக்கே கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் நடப்பது முரண்பாடாக இருக்கிறது.

ஜிஎம் குமார் சீரியஸ் ஆன நபரா காமெடியான நபரா என்ன மாதிரியான கதாப்பாத்திரம் என்றே ஒரு முடிவிற்கு வரமுடியலை.

ஷோலேயில் ஒரு அம்ஜத்கான் அவன் இவனில் ஒரு ஆர்கே என்று பலரும் பாராட்டியதாகக் குறிப்பிட்டு இருந்தார்கள்.

அவர்கள் ஷோலே படத்தைப் பார்த்தார்களா என்றே தெரியவில்லை. இதில் ஆர்கே வருவதே அதிகபட்சம் 20 நிமிடம் தான் இருக்கும்.

இதில் எங்கே அம்ஜத்கானை போன்று நடித்தார் என்று தெரியவில்லை.

வழக்கமான காதலே

இப்படத்தை விரைவில் எடுத்து விடுவேன் என்று கூறி இருந்தீர்கள், அதே போல மற்றப் படங்களை விட விரைவாக எடுத்து இருந்தீர்கள்.

காதல் இருக்கும் ஆனால், வழக்கமான காதலாகக் கண்டிப்பாக இருக்காது என்று கூறி இருந்தீர்கள்.

வழக்கமான டூயட் இல்லையே தவிர காதலில் என்ன புதுமையா கொடுத்துள்ளீர்கள்? வழக்கமாக எல்லா படங்களில் வரும் நாயகிகள் செய்வதையே இவர்களும் செய்கிறார்கள்.

ஆர்யா ஒரு திருடன் வெட்டியா சுற்றிக்கொண்டு இருக்கிறார்.

விஷால் அதைவிடக் கொஞ்சம் பெட்டராக இருக்கிறார் அவ்வளோ தான் ஆனால், அவர்களையும் நல்ல நிலையில் உள்ளவர்கள் காதலிக்கிறார்கள். இது எப்படி பாலா?

மற்றவர்கள் தான் இப்படி எடுக்கிறார்கள் என்றால் நீங்களுமா!

விஷால்

விஷால் பற்றிக்குறிப்பிடாமல் இக்கடிதத்தை முடிக்கவே முடியாது.

ஒரு பேட்டியில் “இணையத்தில் தேடிப்பார்த்தேன் இதுவரை யாரும் மாறுகண் பார்வையுடையவாக நடித்து இருப்பதாகத் தெரியவில்லை” என்று கூறி விஷால் இருந்தார்.

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

உண்மையில் இவ்வாறு நடிப்பது மிகச்சிரமான ஒன்று தான். சிரிக்க வேண்டாம் நான் சும்மா கண்ணாடி முன்னாடி நின்று செய்து பார்த்தேன்.

நம்மால் முடியாததை இன்னொருவர் செய்யும் போது அது வியப்பான விஷயம் தானே.

விஷால் ஒரு பேட்டியில் இனி கோடி கோடியாய் கொடுத்தாலும் இதைப்போல இனி செய்ய மாட்டேன் என்று கூறி இருந்தார்.

படம் பார்த்த பிறகு அவர் கூறியதில் உள்ள சிரமம் புரிந்து கொள்ள முடிந்தது.

இவ்வாறு விஷால் கஷ்டப்படுவது கூடப் பெரிய விஷயம் இல்லை. விழலுக்கு இறைத்த நீரைப்போல ஆகி விடக் கூடாது என்பது தான் என் எண்ணம்.

காரணம் கஷ்டத்திலேயே பெரிய கஷ்டம் தன் கஷ்டம் கண்டுகொள்ளப்படாமல் போய் விட்டால் வரும் கஷ்டம் தான் தான்.

படத்தில் கதை இல்லை என்பதால் இவர் நடிப்பு கவனிக்கப்படாமல் போய்விடக்கூடிய வாய்ப்பு உள்ளது.

மாறு கண் பார்வையில் நடித்து இருப்பதால் மட்டும் கூறவில்லை ஒட்டுமொத்தமாகவே நன்றாக நடித்து இருந்தார்.

கதாநாயகர்கள் என்றால் இடி மின்னல் சத்தம், அதிரடியான சண்டை, பாடல்காட்சி என்று தான் அறிமுகம் ஆவார்கள் ஆனால், விஷாலின் அறிமுகம் உண்மையிலேயே வித்யாசமாக இருந்தது.

இதைப்போல நடிக்கவும் ஒரு தைரியம் வேண்டும்.

மியூசிக் சேனல்களில் இந்தப் பாட்டு பட்டையக்கிளப்பும் என்று நினைக்கிறேன்.

ஏதாவது விருது கொடுத்தால் மட்டுமே அவர் பட்ட கஷ்டத்திற்கு ஒரு திருப்தி இருக்கும். அவருக்கு இருக்கோ இல்லையோ எனக்கு இருக்கும்.

உங்கள் ரசிகனாக

பாலா! என்னடா இவன் என்னமோ எடுக்கக்கூடாத படத்தை எடுத்த மாதிரி இப்படி குறையைக் கட்டுரை மாதிரி வாசிக்கறானே! என்று கோபப்படாதீர்கள்.

உங்களை விமர்சனம் செய்யும் அளவிற்கெல்லாம் அனுபவமில்லை வயதுமில்லை ஆனால், உங்களின் படங்களைப் பல முறை பார்க்கும் ரசிகன்.

படத்தின் பெரும்பாலான காட்சிகளை ரசித்தே பார்த்தேன் நிஜமாகவே கூறுகிறேன் பொய் கூறவில்லை. இயக்கம் நீங்கள் என்பது மட்டுமே கஷ்டமாக உள்ளது.

இதே படத்தை வேறொரு இயக்குனர் இயக்கி இருக்கிறார் என்றால் எனக்கு இதைப்போல எழுத வேலையே இல்லை.

அவர்களிடம் எனக்கு என்ன எதிர்பார்ப்பு இருந்து விடப்போகிறது.

இந்தப்படத்தில் கதை என்ற ஒன்று இல்லாமல் போனது தான் வருத்தம் அது உங்கள் படம் என்பதில் கூடுதல் வருத்தம் அதனாலே இதைக் கூறினேன்.

உங்கள் மீது எப்போதும் பெரு மதிப்பு வைத்து இருக்கிறேன்.

குழப்பிக்கொள்வதில்லை

உங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அதை உங்களின் படத்தோடு போட்டுக் குழப்பிக்கொள்வதில்லை.

அது வேறு இது வேறு என்பதில் எனக்கு எபோதுமே தெளிவுண்டு.

நம்புகிறீர்களோ இல்லையோ என்னோட தளத்திற்கு என்று நான் பேட்டி எடுக்க வேண்டும் என்று நினைத்தது தலைவர் ரஜினியையும் உங்களையும் மட்டும் தான்.

இதற்காக பத்திரிகை நிருபர் நண்பரிடம் கூடக் கூறி வைத்து இருக்கிறேன்.

கூடவே ஏதாவது ஏடாகூடாமா கேள்வி கேட்டால் அடித்து விடுவீர்களா! என்றும் கேட்டு வைத்தேன் என்றால் பாருங்கள்… உங்க கிட்ட கொஞ்சம் பயம் தான்.

தலைவர் ஃப்ளாப் படமே கொடுத்தாலும் அடுத்த படம் வரும் போது எந்த ஆர்வமும் எனக்குக் குறையாது அதே போலத் தான் உங்கள் படமும்.

இந்தப் படம் என்னைத் திருப்திப்படுத்தவில்லையே தவிர இது இயல்பான படம் தான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

படம் முடிந்த பிறகு உடனே நினைத்தது உங்களுடைய அடுத்த படம் எப்போது வரும் என்று தான். அனைவரையும் திருப்திப் படுத்துவது என்பது அந்தக்கடவுளால் கூட முடியாது என்பதை அறியாதவனல்ல.

அதே போல எடுக்கப்படும் அனைத்துப்படங்களுமே சிறப்பாக வரும் என்பதும் உறுதியில்லை.

அனைத்து படத்திலும் அனைவரையும் திருப்தி செய்ய முடிவது சிரமமே அதனால் எனக்கு எந்தப் பெரிய வருத்தமும் இல்லை.

மீண்டும் ஒரு அசத்தலான படத்தோடு வர வேண்டும் என்பதே என் விருப்பம்.

நல்லதை பாராட்டும் வேளையில் குறைகளையும் கூறுவது தான் ஒரு நல்ல ரசிகனுக்கு அழகு என்று கருதுகிறேன்.

நான் நல்ல ரசிகனாக இருக்க விரும்புகிறேன்.

போலியாக உங்களைப் பாராட்டுவதை நீங்களே விரும்பமாட்டீர்கள் அதனால் நான் தற்போது கூறியதை தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

இதில் கூறியவை அனைத்துமே உங்களின் மீதுள்ள மதிப்பினால் மட்டுமே நிச்சயமாக வேறு எந்தக்காரணமும் இல்லை.

உங்களின் அடுத்த படத்தை இப்போதே ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்களின் ரசிகன்.

அன்புடன்

கிரி

தொடர்புடைய கட்டுரை

பரதேசியும் எரியும் பனிக்காடும்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

15 COMMENTS

  1. படம் எதிர்பார்புகளை பூர்த்தி செய்யவில்லை என்றாலும் எனக்கு பிடித்தே இருந்தது ,முதல் முறையாக பாலா படத்தில் கதை நாயகன் உயிரோடு இருக்கிறார் 🙂 உண்மையில் பின்னணி இசை மற்றும் பாடல்கள் அருமை ,மேலும் ஜாமீன் பாத்திரம் அருமையான ,ஆழமான பாத்திரம்

  2. நல்ல விமர்சனம் கிரி
    நானும் படம் பார்த்துட்டேன்
    எனக்கும் காமெடி portion ரொம்பவே புடிச்சு இருந்துச்சு
    ஆனா நீங்க சொன்ன மாதிரி இது பாலா படம் நு நினைக்க முடியல
    – அருண்

  3. என்ன கிரி, இப்படி சொல்லிட்டீங்க, நம்ம பாலா கிரி, வரிசையா அவரது படங்களுக்காக சிந்தித்த அவருக்கும் ஒரு ஓய்வு வேண்டாமா, ரிலாக்ஸ் வேண்டாமா அதான் ஜாலியா இந்த படத்தை எடுத்து தந்திருக்கார், நல்லாத்தானே இருக்கு, விடுங்க விடுங்க பழைய வீரியத்தோட அடுத்த படம் வரும் காத்திருங்க. . .

  4. பாலா சார்,

    அதிகமாக நேரம் எடுத்து கொண்டாலும் சேரி, வி ஆர் எச்பெச்டிங் பாலா பிலிம்.

  5. 1. காமெடி என்ற பெயரில், அசிங்கமான வசனங்கள்.
    2. அம்மாவிடம் பேச கூடாத வார்த்தைகள்.
    3. காவல் துறை அதிகாரியை ஒரு சின்ன பையன் முதல், மரியாதையை இல்லாமல் பேசுவது,
    4. மேலும் நம்பமுடியாதது குற்றவாளிகளுக்கு விருந்து வைப்பது.
    5. சில இடங்களில் மிக அறுவையான, நீளமான காட்சி அமைப்புகள்.
    6. விஷாலின் நவரசத்தை காண்பிக்க சூர்யா’வின் வருகை என்கிற பெயரில் விளம்பரம்.
    7. பாடல்களை ரொம்ப எதிர்ப்பர்தேன், ஏமாற்றம்.
    8. இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதில் தெளிவு இல்லாத கதை…

    கிரி, என்னாட அடுக்கிட்டே போறேன்னு நினைக்காதிங்க, பாலா படம்’னா அவ்வளோ விருப்பம், அடுத்த படமாவுது தரமானத இருக்கணும்ங்கிற ஆதங்கம்…
    விஷாலின் நடிப்பு மட்டுமே ஆறுதல்…

  6. வாழ்த்துகள் கிரி,
    நான் இன்னும் படம் பார்க்கல, உங்கள் விமர்சனம் படிச்சி முடிக்கும் போது படம் பார்த்த உணர்வை ஏற்ப்படுத்துகிறது, அருமை + தெளிவான விமர்சனம். சீக்கீரம் ரிலிஸ் செய்வதாக முன்பே கூறியதால் ஒருசில குறைகள் ஏற்ப்பட காரணமாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன், ஆனால் ஒன்று நிச்சயம், பாலாவின் அடுத்த படம் இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவதாக அமையும் என்பது மட்டும் நிச்சயம்.

  7. கிரி,

    நானும் உங்க‌ளைப் போல‌த்தான், இன்றைய‌ இய‌க்குன‌ர்க‌ளில் பாலாவை முத‌லிட‌த்தில் வைத்துப்பார்கிறேன்.

    உங்க‌ள் க‌ருத்தை முழுமையாக‌ ஆமோதிக்கிறேன்.

    ப‌ட‌ம் பார்த்து ரொம்ப‌ வெறுத்துப்போயிட்டேன். முத‌ல் நாள் பார்ப்ப‌த‌ற்காக‌ ஆபிஸ்க்கு பொய் சொல்லி லீவு போட்டிருந்தேன்.

    குறுகிய‌ கால‌த்தில் எடுத்த‌தால் பாலா கதையில் ச‌ரியாக‌ க‌வ‌ன‌ம் செலுத்த‌வில்லை என‌ நினைக்கிறேன். பாலாவின் முந்தைய‌ ப‌ட‌ங்க‌ளில் வில்ல‌ன்க‌ளின் க‌ள‌மும் ஆர‌ம்ப‌த்திலேயே தொட‌ங்கி ஹீரோக்க‌ளுட‌ன் இணைந்து ப‌ய‌னிக்கும். அவ‌ன் இவ‌னில் அது மிஸ்ஸிங், அதுதான் ப‌ட‌த்தில் ஒரு அழுத்த‌மின்மையை ஏற்ப‌டுத்துகிற‌து.

    எது எப்ப‌டியோ,
    பாலா த‌ன‌து க‌தைய‌மைப்பு / காட்சிய‌மைப்பு / திரைக்க‌தைய‌மைப்பு ப‌ற்றி ப‌ரிசீல‌னை செய்ய‌வேண்டிய‌ நேர‌ம் இது.

    1. அவ‌ன் இவ‌ன் – ‍அடிமாடு பிர‌ச்ச‌னை – ‍ஜி.எம்.குமார் கொலை ‍- விஷால், ஆர்யா ப‌ழிவாங்க‌ல்.

    2. நான் க‌ட‌வுள் – பிச்சைக்கார‌ர்க‌ள் பிர‌ச்ச‌னை – பூஜா சித்ர‌வ‌தை (கிட்ட‌த்த‌ட்ட‌ கொலை) – ஆர்யா ப‌ழிவாங்க‌ல்.

    3. பிதாம‌க‌ன் – க‌ஞ்சாதோட்ட பிர‌ச்ச‌னை – சூர்யா கொலை – விக்ர‌ம் ப‌ழிவாங்க‌ல்.

    4. ந‌ந்தா – இல‌ங்கைக்கு ஆயுத‌ க‌ட‌த்த‌ல் பிர‌ச்ச‌னை – ராஜ்கிர‌ண் கொலை – சூர்யா ப‌ழிவாங்க‌ல்.

    5. சேது – விப‌ச்சார‌ பிர‌ச்ச‌னை – விக்ர‌ம் சித்ர‌வ‌தை ( கிட்ட‌த்த‌ட்ட‌ கொலை) – ???
    இன்ற‌ளவும் பாலா ப‌ட‌த்தில் சேது த‌னித்து தெரிவ‌த‌ற்கு கார‌ண‌ம் பாதிக்க‌ப்ப‌ட்ட‌னின் இரு (முன்‍பின்) வாழ்க்கையும் காட்டிய‌து, இங்கு ப‌ழிவாங்க‌ல் இல்லை என்பதால் அத‌ன் சோக‌ம் நெஞ்சை தைத்த‌து.

    முன்பு விக்ர‌ம‌ன் இதே போல் ஒரே ஃபார்முலாவில் சுற்றி சுற்றி வ‌ந்து ஓய்ந்து விட்டார்.

    அந்த‌ நிலை பாலாவிற்கு வ‌ர‌க்கூடாது.

    க‌டைசியாக‌ பாலாவிற்கு இளைய‌ராஜாதான் ச‌ரி. யுவ‌ன் டைட்டில் மியூசிக்கில் ம‌ட்டும் ஈர்க்கிறார்.

    **************
    பாலாதான் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஜி.எம்.குமார் (ஆர்.கே. அல்ல‌) ந‌டிப்பை கிட்ட‌த்த‌ட்ட‌ சிவாஜி சாருட‌ன் ஒப்பிட்டு பேசினார்.

    **************
    நான் க‌ட‌வுளுக்காக‌ எழுத்தாள‌ர் பாராவுட‌ன் க‌டுமையாக‌ மோதிய‌து நினைவுக்கு வ‌ருகிற‌து, உங்க‌ள் விம‌ர்ச‌ன‌த்திலும் அது உள்ள‌து.
    நான் க‌ட‌வுள் விம‌ர்ச‌ன‌ம் மூல‌ம்தான் உங்க‌ள் த‌ள‌த்தை முத‌ன் முத‌லாக‌ வாசிக்க‌ ஆர‌ம்பித்தேன்.

    **************

    ஒரு த‌க‌வ‌ல்:
    ஜ‌மீன் அர‌ண்ம‌னையாக‌ காட்ட‌ப்ப‌டுவ‌து குற்றால‌த்தில் உள்ள‌ சேதும‌கால் என்னும் திரும‌ண‌ ம‌ண்ட‌ப‌ம், மாடியில் வைத்து எடுக்க‌ப்ப‌ட்ட‌ காட்சியின் பின்புற‌த்தில் குற்றால‌ம் “மெயின் அருவி” தெரியும்.

    *********************************************

    • காத்தவராயன் சிவாஜி பற்றி கூறியதை சுட்டியமைக்கு நன்றி. அது நீங்கள் கூறியது போல ஜி எம் குமார் பற்றியது தான். திருத்திவிட்டேன்.

  8. விஷாலின் மாறு கண், வண்ண வண்ண காண்டாக்ட் லென்ஸ் பொருத்துவதை போன்ற ஒரு மேக்-அப் செட்-அப் ஆக இருக்கக் கூடும் என்று கூறுகிறார் திரை உலகில் உள்ள என் நண்பர் ஒருவர். ஒரு சென்சேஷனுக்காக விஷால் அப்படி கஷ்டப்பட்டு நடித்ததாக பில்ட்-அப் கொடுத்து இருக்கலாம் என்கிறார். உண்மை என்னவென்று தெரியவில்லை. என் செய்தி பொய் என்றால் மன்னிப்பு கோருகிறேன் and Hats-off to Vishal. எனக்குள் ஒருவன் படத்தில் நேப்பாளியின் கண் போல கமலுக்கு மேக்-அப் செய்து இருப்பார்கள்.

    இப்படி பல சென்சேஷன் செய்திகள் திரை உலகில் அடிக்கடி வரும்.

    1 SPB மூச்சு விடாமல் பாடியது (அதற்க்கு முன்பே “புதிய வார்ப்புகள்” படத்தில் “தம் தன நம் தன” பாடல் அதே டெக்னிக்கில் பதிவு செய்யப்பட்டது தான்).

    2 கமல் படத்து செய்திகள் பல இந்த வகை தான். உ.ம்: குள்ள அப்பு, தசாவதாரம்.

  9. //SPB மூச்சு விடாமல் பாடியது (அதற்க்கு முன்பே “புதிய வார்ப்புகள்” படத்தில் “தம் தன நம் தன” பாடல் அதே டெக்னிக்கில் பதிவு செய்யப்பட்டது தான்).//

    அதாவது SPB “மண்ணில் இந்த” பாடலின் சரணத்தை மூச்சு விடாமல் பாடவில்லை, அது விட்டு விட்டு பாடி இணைத்து பதிவு செய்யப்பட்டது என்று சொல்லக் கேள்வி. (ஆனால் ஒரு மேடை கச்சேரியில் மூச்சு விடாமல் பாடி அசத்தினார்.)

    புதிய வார்ப்புகள் பாடல் செய்தி, இளையராஜாவே ஒரு பேட்டியில் சொன்னது.

  10. விஷாலின் மாறு கண், வண்ண வண்ண காண்டாக்ட் லென்ஸ் பொருத்துவதை போன்ற ஒரு மேக்-அப் செட்-அப் ஆக இருக்கக் கூடும் என்று கூறுகிறார் திரை உலகில் உள்ள என் நண்பர் ஒருவர். ஒரு சென்சேஷனுக்காக விஷால் அப்படி கஷ்டப்பட்டு நடித்ததாக பில்ட்-அப் கொடுத்து இருக்கலாம் என்கிறார். உண்மை என்னவென்று தெரியவில்லை. என் செய்தி பொய் என்றால் மன்னிப்பு கோருகிறேன்

    இதே தான் என் கருத்தும் , தெளிவான எழுத்து நடை உண்மையில் எனக்கு உங்களிடம் பிடித்த முதல் விஷயம் . சொல்லும் கருத்தை தெளிவாக சொல்வது . நானும் முயற்சிக்கின்றேன் . ஆனால் முடிய வில்லை முயற்சி தானே முக்கியம் நன்று கிரி . விடுங்க பாலாவுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் வேதை பட்டிருக்கு , அல்லது இந்த மாதிரியும் என்னால படம் பண்ண முடியும் அப்படின்னு முடிவு செய்திருக்கலாம் . எனக்கும் வருத்தமே ! . ஆனால் பாலா பாலா தான் . அடுத்தது தரம் மிக்க படமாக வரும் …….

  11. அண்ணா , பாலா தான் எனக்கும் பிடித்தமான இயக்குனர் . எனக்கு இவர் ஒரு முன்மாதிரியும் கூட .. இவரின் அமைதி தைரியம் படங்கள் எல்லாம் பிடிக்கும் .. பாலா படங்களில் நான் கடவுள் தான் எனக்கு பிடித்தமான படம் . பல முறை பார்த்து விட்டேன் . ஒவ்வொரு காட்சிகளிலும் மெய்சிலிர்க்கும் குறிப்பாக அந்த ஆர்யா வின் நடை.. பாலா உங்களுக்கு இணை யாரும் இல்லை …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here