மலேசியா லங்காவி பயணம் | த்ரில் போட்டிங்

23
த்ரில் போட்டிங்

ங்காவி த்ரில் போட்டிங் காலையிலிருந்து மாலை வரை நடைபெறுகிறது. மாங்குரோவ் காடுகள் நிறைந்த பகுதிகளில் கடலின் உள்ளே கொஞ்ச தூரம் சென்று வருகிறது.

போட்டிங் என்றதும் நான் முதலில் பெரிய போட்டாக இருக்கும் என்று நினைத்து விட்டேன் 🙂 .

சென்னை முட்டுக்காடு போட் மாதிரி தான்… என்ன கொஞ்சம் அதை விட பெரியது. இதில் ஷேரிங் முறையில் (இரு குடும்பங்கள்) சென்றால் பணம் குறைவு தனியாகவும் செல்லலாம் அது நமது விருப்பம்.

த்ரில் போட்டிங்

போட்டிங் என்றதும் என்னோட அம்மா பயந்து விட்டார்கள். வேண்டாம் வேண்டாம் என்று கூறியும் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றேன் 🙂 .

முதலில் பீதியாக இருந்தாலும் போகப்போக நல்லா என்ஜாய் செய்தார்கள்.

நான் சென்ற இடங்களிலேயே இங்கு தான் ரொம்ப (பயத்துடன்) மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

இரண்டு மணிநேரம் சுற்றிக்காட்டுகிறார்கள். இதில் மோட்டல் போன்ற இடமும் உண்டு.

நாம் நெடுஞ்சாலையில் செல்லும் போது ஓய்வெடுக்க மோட்டல் இருப்பது போல இங்கேயும் உண்டு. இங்கே சென்று நாம் ஓய்வு எடுக்கலாம் ஏதாவது சாப்பிடலாம் குடிக்கலாம்.

நாங்கள் சென்ற போது அங்குள்ள கடையில் DDLJ பாடல் பாடிக்கொண்டு இருந்தது.

Eagle’s View என்ற இடத்தில் கழுகுகள் அதிகம் உள்ளது. இந்த இடத்தில் மட்டும் உள்ளது எப்படி என்று தெரியவில்லை.

தண்ணீரினுள் இரையைப் போட்டு அதைப் பிடிக்க வரும் மீன்களைப் பிடிக்கிறது. இது எப்புடி? 🙂 இதைப் படம் எடுப்பதற்குள் ஒருவழியாகிட்டேன்.

மின்னல் வேகத்தில் வந்து மீனைப் பிடிக்கிறது அதனால் நம்மால் சரியான இடத்தில் வைத்து எடுக்க முடியவில்லை.

அதிவேக கேமராவாக இருந்தால் சாத்தியம் இல்லை என்றால் பொறுமை வேண்டும் இது இரண்டு என்னிடம் அப்போது இல்லை 🙂 .

போட்டில் செல்லும் போது திடீர் திடீர் என்று வேகமெடுக்கிறார்கள் திடீர் என்று வேகம் குறைக்கிறார்கள்.

நாங்கள் சென்ற போது மழையும் பெய்தது இதனால் அலை அதிகம் இருந்தது அதனால் போட் வேகமாக செல்லும் போது தூக்கி தூக்கிப் போடுகிறது.

என் அம்மா தான் ரொம்ப பயந்து விட்டார்கள் 🙂 முகமெல்லாம் வெளிறிவிட்டது. மழையினூடே சென்றது செம த்ரில்லிங்காக இருந்தது.

லைஃப் ஜாக்கட்

எனக்கும் அப்பாவிற்கும் நீச்சல் தெரியும் என்பதால் பயம் இல்லாமல் இருந்தோம்.

நீச்சல் தெரியவில்லை என்றால் கொஞ்சம் பயம் இருக்கும் என்பது உண்மை தான்.

பாதுகாப்பிற்கு லைஃப் ஜாக்கட் கட்டாயம் அணிய வேண்டும். ஒருவேளை தண்ணீரில் விழுந்தாலும் மிதக்கத்தான் செய்வோமே தவிர ஒன்றுமாகாது.

இருந்தாலும் நீச்சல் தெரியவில்லை என்ற நிலையில் இருப்பவர்களுக்கு இந்தப் பாதுகாப்பையும் மீறி ஒரு பய உணர்வு தவிர்க்க முடியாதது தான் அதுவும் மழை காற்று சமயங்களில்.

வேகமாகச் சென்று வளைந்து செல்லும் போது லைட்டா வயிற்றை கலக்குவது போல இருக்கும், நான் ரொம்ப என்ஜாய் செய்தேன்..

எனக்கு எப்போதுமே த்ரில் விளையாட்டுகள் என்றால் ரொம்ப விருப்பம் இது போன்ற விஷயங்கள் எல்லாம் சலிக்காமல் ரசிப்பேன்.

பைக் ல வீலிங் செய்து பார்த்து இருப்பீர்கள் இங்கே போட்டில் வீலிங் செய்தார்கள். செமையாக இருந்தது.

பைக் போலச் செல்லாமல் ஒரே இடத்தில் நின்று போட் பின்புறம் தண்ணீரை அருவி போல விழ வைக்கிறார்கள்.

இங்கே நின்று கொண்டு இருக்கும் சிறிய போட்கள் எல்லாம் என்னவென்று தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்.

இங்கே நிற்கும் போட்கள் எல்லாம் அமெரிக்கா, ஹாலந்து மற்றும் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து பயணமாக வந்து இருக்கிறார்கள்.

நங்கூரம் இட்டுப் பல மாதங்கள் இருக்குமாம்.

என்னால் நம்பவே முடியவில்லை காரணம் படகு ரொம்ப சிறியதாக இருக்கிறது.

இதில் எப்படி இவ்வளவு தூரம் தைரியமாக வருகிறார்கள்? எப்படி சாப்பாடு சமாளிக்கிறார்கள்? எப்படி இயந்திர கோளாறு இல்லாமல் வந்து சேர்கிறார்கள்? என்று பல்வேறு கேள்விகள்.

நீங்க நம்ப மாட்டீங்க ஒரு சில போட்டில் ஒரு சின்ன அறை மட்டுமே இருக்கிறது அதிலே நேராக நிற்பதே சிரமம் இதில் எப்படி?…

உண்மையாகவே இவர்கள் எல்லாம் மிகத் தைரியமானவர்கள் மற்றும் எதற்கும் துணிந்தவர்கள் தான்.

முதலை குகை

முதலை குகை என்று ஒன்றுள்ளது. குகை தான் முதலை குகையே தவிர அங்கே முதலை இல்லை. ஒரு காலத்தில் இருந்தனவாம் தற்போது அழிந்து விட்டது.

அந்த குகைக் அருகில் எங்கள் படகு சென்றவுடன் என்னுடைய அம்மா முதலையே வந்தது போலப் பயந்து போட்டை திருப்புங்க திருப்புங்க என்ற கலவரம் ஆகி விட்டார்கள் 😀 .

அப்பா எவ்வளவோ கூறியும் முடியாது என்று கூறி விட்டார்கள். பார்க்க அந்த இடம் ஹாலிவுட் த்ரில் படத்தில் வருவது போல அமைப்பில் இருந்தது.

கடலில் கொஞ்ச தூரம் அழைத்துச் செல்கிறார்கள். இங்கே குட்டி குட்டித் தீவாக 100 தீவுகள் இருப்பதாக போட் ஓட்டுனர் கூறினார்.

இங்கே இருந்து பார்த்தாலே தாய்லாந்து (பட்டாயா) தெரிகிறது.

கடலில் இருக்கும் போது தான் உலகம் உருண்டை என்பதையே என்னால் உணரமுடிகிறது. படத்தைப் பார்த்தால் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறதா? 🙂 .

எதோ பந்து மேலே போட் போவது போல உள்ளது.

நண்பர்களுடன் கப்பலில் அந்தமான் செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம்.

இதன் பிறகு கடைசியாக வவ்வால் குகை என்ற ஒன்று இருக்கிறது.

இங்கே மழை பெய்ததால் எங்களால் செல்ல முடியவில்லை. இருவருமே வயதானவர்கள் போட்டிலிருந்து ஏறி இறங்க சிரமம் என்பதால் நான் வேண்டாம் என்று கூறி விட்டேன்.

இந்த ஒரு இடம் மட்டும் செல்லவில்லை. லங்காவியில் தவறவிடக் கூடாத இடம் இந்த போட்டிங்.

இரண்டு நாட்கள் போதுமானது இந்த இடங்களைச் சுற்றிப் பார்க்க.

சைவ உணவு

நாங்கள் தங்கி இருந்த இடத்தில் சைவ உணவு கிடைப்பது மட்டுமே சிரமமாக இருந்தது மற்றபடி வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஹோட்டலில் பெரும்பாலும் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர். 

இங்கே ஒரு பிரச்சனை லிப்ட் ல் செல்லும் போது இவர்கள் அடித்து இருக்கும் வாசனை திரவியத்தால் எனக்கு மூச்சே விட முடியவில்லை.

எப்படி இவ்வளவு ஸ்ட்ராங்காக அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நாங்கள் இருந்தது 11 வது மாடி என்பதால் மெதுவாக நின்று செல்வதால் எப்படா வெளிக்காற்றை சுவாசிக்க முடியும்! என்றாகி விட்டது.

எனக்கு மூக்கெல்லாம் எரிச்சல் ஆகி விட்டது.

எங்களுக்கு முஸ்லிம் பெண் தான் கார் ஓட்டினார்.

இங்கே பெரும்பாலும் பெண்கள் ஓட்டுனர்களாக உள்ளனர். ரொம்ப அருமையாக வண்டி ஓட்டினார் அதோடு எங்களைச் சைவ உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். சாப்பாடு நன்றாக இருந்தது.

பல தகவல்களைக் கூறியதோடு மிகவும் பொறுப்பாகவும் நடந்து கொண்டார், அதோடு அனைத்து விசயங்களிலும் முன்னேற்பாடாக இருந்தார்.

இங்கே ஒரு முருகன் கோவில் உள்ளது ஆனால் நேரமில்லாததால் எங்களால் செல்ல முடியவில்லை. இது எனக்கு ஏமாற்றம் தான்.

லங்காவி விமான நிலையம் சிறிய விமான நிலையமாக இருந்தாலும் வசதிகளுக்கு எந்த விதக் குறைச்சலும் இல்லை.

இங்கே நெருடலாக இருந்த ஒரு விஷயம் ஆண்கள் பெண்கள் கழிவறை அருகே முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் இடமும் இருக்கிறது.

இதை வேறு எங்காவது வைத்து இருக்கலாம்.

எந்தப் பெரிய விமான நிலையத்துக்கும் குறைந்தது இல்லை என்பது போல பல கடைகளும் இங்கே உள்ளது.

அனைத்து இடங்களும் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு இருந்தது. உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால் தவறாமல் சென்று வாருங்கள்.

இதில் நாங்கள் செல்லாத இடங்களும் கூட உள்ளன.

மலேசியா லங்காவி பயணம் – கேபிள் கார்

மலேசியா லங்காவி பயணம் – பறவைகள் பூங்கா

கொசுறு 1

நான் எழுதிய முந்தைய இரு பகுதிகளுக்கும் உற்சாகமூட்டிய ராமலக்ஷ்மி அருண் யாசின் அட்சயா தனபாலன் லோகன் மற்றும் அனைவருக்கும் நன்றி.

இதில் ராமலக்ஷ்மி மற்றும் அருண் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக தொடர்ந்து பின்னூட்டம் அளித்து வருவது ரொம்ப வியப்பாக இருக்கிறது.

அதிலும் அருண் சளைக்காமல் கூறி வருகிறார் .

ஒரு சிலர் நீண்ட வருடமாக படிக்கிறார்கள் ஆனால் எதுவும் கூற மாட்டார்கள். சிலர் எப்போவாவது திடீர் என்று வந்து கூறுவார்கள்.

இவர்களைப் போல ஒரு சிலர் இருப்பதால் தான் தொடர்ந்து எழுத முடிகிறது… அப்புறம் சென்ற பதிவில் இருப்பது நான் தான் 🙂 .

என்னுடைய தமிழ்ப் பார்த்துப் பலரும் ரொம்ப பெரிய ஆள் மாதிரி இருப்பேன் என்று நினைத்து இருக்கிறார்கள் என்று அவர்கள் கூறியதிலிருந்து அறிய முடிகிறது.

அனுபவம் மட்டும் வயதுக்கு மீறி அதிகம் 😉 .

கொசுறு 2

அடுத்த பதிவு ஜிமெயில் பயன்படுத்தாமல் இருப்பவர்களைக் கப்புன்னு பிடித்துக் கபால்னு ஜிமெயிலுக்கு இழுக்கிற மாதிரி ஒரு பதிவு தயார் பண்ணிட்டு இருக்கிறேன் 🙂 .

கூகுள்க்கு மட்டுமல்ல ஜிமெயிலுக்கும் நான் தீவிர ரசிகன்.

படித்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க. Stay Tuned!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

23 COMMENTS

  1. ௨௦௦௮ ல் நாங்க போய்விட்டு வந்த இடத்திற்கெல்லாம் போய் இருக்கிங்க, டால்பின் குதித்ததைப் பார்த்திங்களா ?

  2. இல்லைங்க கோவி கண்ணன். டால்பின் இடம் செல்ல வில்லை அது எங்கே இருக்கிறது?

  3. கிரி. ரொம்ப நல்ல எழுதுறிங்க நீங்க. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் சிங்கப்பூர் வருவதற்கு முன்னால உங்களோட சிங்கப்பூர் பத்தின ப்ளாக் ரொம்ப உதவியா இருந்தது. அதுக்கு அப்புறம் உங்களோட technical posts விமர்சனம் எல்லாம் ரொம்ப பிடிச்சு இருந்தது. இன்னும் சொல்லணும் என்றால் என்னோட ரசிப்பு தன்மை, சமுதாய பார்வை , உதவும் குணம் improve ஆனது .

    நீங்க, ஜாக்கி, கருந்தேள் ப்ளாக் எல்லாம் நான் regular ah follow பண்றேன். நிறைய எழுதுங்க. ரொம்ப பிடிச்சு இருக்கு. வாழ்த்துக்கள்.

    If possible if you guys ever meet socially in singapore will like to participate. நன்றி.

  4. ஒரு சிலர் நீண்ட வருடமாக படிக்கிறார்கள் ஆனால் எதுவும் கூற மாட்டார்கள் சிலர் எப்போவாவது திடீர் என்று வந்து கூறுவார்கள்////

    ஹா..ஹா.. நானும் இந்த லிஸ்டுதான், தொடர்ந்து படிச்சிகிட்டு வர்றேன், உங்க ப்ளாக்ல இதுதான் என் முதல் கமெண்ட்! என் பிரெண்ட்ஸ் லங்காவி போனப்ப ஆசையா இருந்தது, லீவ் பிரச்சனையால போக முடியல… உங்க பதிவ படிச்சதும் கண்டிப்பா போகணும்னு தோணுது.. 🙂

  5. ஒரு சிலர் நீண்ட வருடமாக படிக்கிறார்கள் ஆனால் எதுவும் கூற மாட்டார்கள்

    //

    ஏன்ணே என்னையத் திட்டுறீங்க? 🙂

  6. “ஒரு சிலர் நீண்ட வருடமாக படிக்கிறார்கள் ஆனால் எதுவும் கூற மாட்டார்கள் சிலர் எப்போவாவது திடீர் என்று வந்து கூறுவார்கள்”

    தப்புதாண்ணே மன்னிச்சிருங்க இனிமே தவறாம கருத்து கூற முயற்ச்சிக்கிறேன்.

  7. சிறப்பான பகிர்வு. பிகாஸா ஆல்பமும் ரசித்தேன். இயற்கை அழகு கொஞ்சுகிறது. பறவைப்பூங்கா படங்களும் நன்று.

    /Stay Tuned /
    ஜிமெயில் உபயோகித்தாலும் யாஹூவை அதன் சில வசதிகளுக்காகவே விடமுடியவில்லை. ஒரே பக்கத்தில் பல மடல்களைத் திறப்பது போன்ற அனைத்து வசதியையும் ஏன் ஜிமெயில் இன்னும் தரவில்லை என்பதற்கும் சேர்த்து பதிலை எதிர்ப்பார்க்கிறேன்:)!

  8. // ஒரு சிலர் நீண்ட வருடமாக படிக்கிறார்கள் ஆனால் எதுவும் கூற மாட்டார்கள்

    //

    ஏன்ணே என்னையத் திட்டுறீங்க? //

    ரிபீட்…

    வவ்வால் குகை நாற்றம் தாங்க முடியாது !!!

  9. //ஒரு சிலர் நீண்ட வருடமாக படிக்கிறார்கள் ஆனால் எதுவும் கூற மாட்டார்கள்//

    இப்ப்படி தான் பெரும்பாலானவங்க இருக்கிறாங்க, என்னையும் சேர்த்து தான். ரீடர்ல படிச்சிட்டு பதிவுக்கு வந்து கருத்து சொல்ல சோம்பேறித்தனம் தான் காரணம்…. 😉

  10. //இல்லைங்க கோவி கண்ணன். டால்பின் இடம் செல்ல வில்லை அது எங்கே இருக்கிறது?//

    தாய்லாந்து பார்க்க முடியும் என்று அழைத்துச் சென்ற கடற்கரைப் பகுதி தான், அங்கே டால்பின்கள் அடிக்கடி வரும் என்றிருப்பாரே படகோட்டி

  11. என்னையும் திட்டி விட்டீர்கள் கிரி…. 🙂

  12. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு ஏன்டா அழுதே! என்றால்… “எல்லோரும் அழுதாங்க அதனால் நானும் அழுதேன்” என்கிறான். ரைட்டு

    ஹா….ஹா

    கிரி படங்கள் நல்லாருந்துச்சு இடங்களும் தான் மலஷியா வந்தால் இந்த இடங்களுக்கு போகணும் னு ஆசை இருக்கு

  13. பகிர்வுக்கு நன்றி கிரி… நிச்சயம் தங்களது பெற்றோர்கள் இந்த விடுமுறை நினைவுகளையும், அனுபவங்களையும் நீண்ட நாட்களுக்கு ஒரு பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை!!!

  14. அனுபவங்கள் சுவாரஸ்யமா இருந்துது. எழுதும்போது கொஞ்சம் முற்றுப் புள்ளி, கமா, ஸ்பேஸ் கவனிச்சீங்கன்னா படிக்கறதுக்கு இன்னும் எளிதா இருக்கும்.

    நன்றி..

  15. //ஒரு சிலர் நீண்ட வருடமாக படிக்கிறார்கள் ஆனால் எதுவும் கூற மாட்டார்கள்//

    மீ டூ…

  16. ரொம்ப நல்லா இருக்கு photos எல்லாம்
    அப்பா போட்டோ வும் பாத்தாச்சு… ரெண்டு பேருக்கும் என்னோட நமஸ்காரம் சொல்லிடுங்க தல

    ஜிமெயில் தான் எனக்கும் புடிச்சது தல.. கொசுறு 2 கு இப்பவே waiting

    – அருண்

  17. ஒரு சிலர் நீண்ட வருடமாக படிக்கிறார்கள் ஆனால் எதுவும் கூற மாட்டார்கள் சிலர் எப்போவாவது திடீர் என்று வந்து கூறுவார்கள்////

    ஹா..ஹா.. நானும் இந்த லிஸ்டுதான், தொடர்ந்து படிச்சிகிட்டு வர்றேன்,thankyou

  18. நானும் பல வருடங்களாக உங்கள் ப்ளாகை படித்து வருகிறேன், அவ்வப்போது கமென்ட் போடுவதும் உண்டு. எனக்கு சிங்கப்பூர் மலேசியாவை பத்தி அதிகம் தெரியாது (சைனாவுல ஷாங்காயில இருக்குற சிங்கபூரா ஹோட்டலை பத்தி தெரியும்.. எங்க கம்பெனி பாஸ்கூட தண்ணி போட்டுட்டு ரெண்டு பெரும் ரோட்டை அளந்துகொண்டே ஹோட்டலுக்கு போய்.. ஆங் எங்க உட்டேன்). போன முறை நீங்கள் பார்த்த ஜப்பான் கோல்ட் பிஷ் படம் பத்தி எழுதியிருந்தீங்க நான் போன வருடம் பார்த்து மறந்து விட்டேன் திரும்ப பார்க்க நேரம் கிடைக்காததால் கமென்ட் போட வில்லை. ஜிமெயில் பத்தி எழுதுங்க.. என் வாழ்க்கை பாதையை தக்க சமயத்தில் மாற்றி நிம்மதியாக வாழ வைத்தது ஜிமெயில் தான்.. என்னன்னு அப்ப சொல்றேன். ஒன்னு சொல்லட்டுமா கமென்ட் கொடுக்கும் உற்சாகத்தை பற்றி கவலைபடாமல் நீங்கள் எழுதிக்கொண்டே இருங்கள் – நிச்சயம் உங்கள் எழுத்துக்கள் யாருக்கேனும் உதவக்கூடும்.

  19. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @கோவிகண்ணன் அவர் கூறியிருப்பார் நான் கவனித்து இருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன்

    @சந்தோஷ் ரொம்ப நன்றி. சந்திக்க நேரும் போது கூறுகிறேன் தற்போது வெகுவாக குறைந்து விட்டது / குறைத்து விட்டேன்.

    @ராமலக்ஷ்மி ஒரே பக்கத்தில் திறக்க வசதி இல்லை. இதற்கு காரணம் தெரியவில்லை. இதில் Back வசதி மிக வேகமாக இருக்கும் அதனால் உடனயாக நாம் முந்தைய மின்னஞ்சலுக்கு வர முடியும் எனவே இது தேவையில்லை என்று கருதி இருக்கலாம் அதோடு பல மின்னஞ்சல்களை ஒரே பக்கத்தில் திறந்தால் குழப்பம் வரும் என்று நினைத்து இருக்கலாம். இவை என் அனுமானம் தான் உண்மைக் காரணம் தெரியவில்லை.

    @ Abarajithan சரி செய்து கொள்ள முயற்சிக்கிறேன்.

    @ராஜ்குமார் நீங்க ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு சுவாரசியமான சம்பவம் கூறிட்டு இருக்கீங்க 🙂

  20. ஒரு சிலர் நீண்ட வருடமாக படிக்கிறார்கள் ஆனால் எதுவும் கூற மாட்டார்கள் சிலர் எப்போவாவது திடீர் என்று வந்து கூறுவார்கள்////

    —————————————————————————————
    இப்படி சொல்லி , எல்லாரையும் உசுபேத்தி கமெண்ட் போடா வச்சுடீங்க …….பாதிக்கு மேல அவங்க கமெண்ட் தான் இருக்கு … 😀

  21. முன்பெல்லாம் உறவுக்காரர்கள் வீட்டுக்குச் செல்ல பலகார மூட்டையும் கூடவே செல்லும், இப்பொழுது பலரும் நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, கூடுதல் எடை என பல்வேறு உடல் நலச் சீர்கேட்டால் இருக்கும் போது, அல்லது உடலை கெடுக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று ஓரளவு உடல் நலம் பற்றிய அக்கரையில் உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கும் போது, அவர்கள் நாம் வாங்குவதை திண்பார்களா இல்லையா என்று எதுவும் அறியாமல் வாங்கிச் செல்லும் இனிப்புப் பண்டங்கள் பெரும்பாலும் குப்பைக்குத்தான் செல்கின்றன, என்வீட்டுக்கு வரும் இனிப்புகளில் 80 விழுக்காடு குப்பைக்குத்தான் செல்லும், மாற்றாக பழங்களாக வருபவற்றை நாங்கள் வீணாக்குவது இல்லை, ஒருவர் வீட்டுக்குச் செல்லும் போது குழந்தைகள் இருந்தால் கொஞ்சம் பிஸ்கெட் அல்லது சாக்லெட், பெரியவர்களுக்கு சத்தான பழங்களை வாங்கிச் செல்லலாம், அர்சனா / கிருஷ்ணா / ஆனந்தபவன் ஸ்வீட் வகைகளில் ஒருகிலோ / இரண்டு கிலோ வாங்கிச் சென்றால் தான் அன்பா ? நெய் கலந்த கொழுப்பு மிக்க பண்டகளை தற்காலத்தில் யாரும் விரும்பி சாப்பிடுவது இல்லை. ஒருவேளை வாங்கி வந்துவிட்டார்களே வீணாக்காமல் தின்போம் என்று தின்றுவிடுவர்கள் நாற்பது வயதிற்கும் மேற்பட்டவர்களாக இருந்தால், இரத்ததில் கொழுப்புக் கூட… அதற்கு தனியாக மருத்துவம் பார்க்க வேண்டி இருந்தாலும் இருக்கும். உறவினர் வீட்டுக்கு செல்லும் போது அவர்கள் ‘இருங்க காபி எடுத்துவருகிறேன்’ என்று சொல்லும் போதும் அல்லது சொல்லாமல் எடுத்துவரும் போதும் உங்களுக்கு இனிப்பு ஆகாது என்றால் அவர்களிடம் தெளிவாகச் சொல்லிவிடுங்கள், யாரும் அதை சங்கடமாக நினைப்பது இல்லை. உடலுக்கு கெடுதல் என்ற வகையில் இனிப்பு சாப்பிட முடியாதவர்களை யாரும் கட்டாயப்படுத்தி ‘திருப்பதி லட்டு, பிரசாதம்’ இது சாப்பிட்டே ஆகவேண்டும் என்று சொன்னால் அது விசம் கொடுப்பதற்கு ஒப்பானது. உறவினர் / நண்பர் வீட்டுக்குச் சென்று காபி வருமா வராதா என்ற அளவுக்கு அங்கே உட்கார்ந்து பேசும் நிலைக்குச் செல்லும் முன் கிளம்புவது நல்லது. கிளம்புவது போல் பாவனைக்காட்டினாலே அவர்கள் காப்பி தருவார்களா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

  22. போன வாரம் தான் லங்கவி போயிட்டு வந்தேன்… நீங்க மேல சொல்லி இருக்குற எல்லா இடத்துக்கும் நாங்களும் போயிட்டு வந்தோம்… நாங்க நாலு பேரு பேச்சுலர்ஸ் என்பதால் ஒரு காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு விரும்பிய இடம் எல்லாம் சுத்தினோம்…
    இந்த பயணம் மறக்க முடியாதது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here