இதற்கு என்ன தலைப்பு வைப்பது?

13
மக்கள் வரிப்பணம்

ழல் / லஞ்சத்தால் இந்தியா மிக மோசமாகக் கெட்டு வருகிறது. அரசியல்வாதிகள் அதிகாரிகள் மக்கள் வரிப்பணம் வீணடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

வீணடிக்கப்படும் மக்கள் வரிப்பணம்

மக்களின் சிரமத்தை உணர யாருக்கும் நேரமில்லை. அவரவர் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என்று தான் கணக்குப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

அநியாயமாக மக்களின் பணத்தை வீண் செய்கிறார்கள் ஆனால் மக்களுக்கு வரி அது இது என்று சிரமப்படுத்திக்கொண்டே உள்ளார்கள்.

தேவையற்ற அனாவசிய செலவுகளைக் குறைத்தாலே நிச்சயம் மக்களின் சிரமத்தைக் குறைக்கலாம்.

பிரதீபா பாட்டில்

சமீபமாக நிச்சயம் கேள்விப்பட்டு இருப்பீர்கள் நமது ஜனாதிபதி பிரதீபா பாட்டில் உலக நாடுகளைச் சுற்றிப் பார்த்து வந்த செலவு மட்டுமே 250 கோடி.

ஜனாதிபதி சுற்றுப்பயணம் என்பது தவிர்க்க முடியாதது என்பதை உணர முடிகிறது ஆனால், அதில் ஏற்படும் அனாவசிய செலவுகளை நினைத்தால் குறைக்க முடியும்.

அதைப் பொறுப்பில் உள்ளவர்களால் மட்டுமே செய்ய முடியும்.

அதிக நாடுகளைச் சுற்றியவர்

இது வரை இருந்த ஜானாதிபதிகளிலேயே அதிக நாடுகளைச் சுற்றியவரும் அதிக செலவைச் செய்தவரும் இவர் தான் என்ற பெருமைக்குரியவர்!!

கடந்த டிசம்பர் மாதம் கடற்படை அணிவகுப்பை ஜனாதிபதி ஏற்கும் சம்பிரதாய நிகழ்ச்சிக்கு ஆனா செலவு மக்கள் வரிப்பணம் 23 கோடியாகும். எத்தனை நாள் நடந்தது என்று தானே யோசிக்கறீங்க!… ஜஸ்ட் ஒரே நாள்.

இது பற்றிய தகவலை “தகவல் அறியும் உரிமைச் சட்டம்” மூலம் அகர்வால் என்பவர் கேட்டுப் பெற்றுள்ளார். விஷயம் தெரிந்ததும் பலர் கடுப்பாகி விட்டார்கள்.

அரசு விழாக்களில் செய்யப்படும் ஆடம்பரங்களையும் அதில் அவர்கள் அடிக்கும் கொள்ளையையும் தெரிந்து கொள்ள நேர்ந்தால், பச்சை முட்டையை விழுங்கினாலே உள்ளே சென்று ஆம்லெட் ஆகி விடும். அந்த அளவு வயித்தெரிச்சல் ஆகி இருப்போம்.

மீரா குமார்

கடந்த 2009-ல், லோக்சபா சபாநாயகராக மீரா குமார் பதவியேற்றார்.

கடந்த 35 மாதங்களில், இதுவரை 29 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பதவியேற்றதில் இருந்து இதுவரை ஒட்டு மொத்தமாக 146 நாட்கள் அவர் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்துள்ளார்.

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், மூத்த அதிகாரிகளுடன் இந்தப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

சராசரியாக 37 நாட்களுக்கு ஒருமுறை அவர் வெளிநாடு சென்றுள்ளார். மீரா குமாரின் வெளிநாட்டு பயணங்களுக்காக 9.89 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

தன்னை சந்தித்த விருந்தினர்களைக் கவுரவிப்பதற்காக 11.6 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளார்.

இவர் தற்போதைய ஜனாதிபதி போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி ஆகும் முன்பே இவ்வளவு.

ஒருவேளை ஆனால்.. இதுவும் தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்து இருக்கிறது.

ஜெயலலிதா

முதல்வர் ஜெ தனது ஆட்சியின் ஓராண்டு நிறைவை ஒட்டி இந்தியா முழுவதும் உள்ள பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்தார்.

அதற்கான ஒருநாள் செலவு 25 கோடி. எனக்குப் புரியல! இப்ப என்ன சாதிச்சுட்டாங்க என்று 25 கோடியை ஒரே நாளில் காலி செய்து இருக்கிறார்கள்.

முந்தைய ஆட்சி போல அடிக்கடி பாராட்டு விழா நடத்தாமல் ஒட்டுமொத்தமாக வைத்து மொத்தமாகச் செலவு செய்கிறார்கள்.

முன்பு ஜெ ஆட்சியில் இது போலக் குற்றங்கள் குறைவு என்று கூறுவார்கள் அது இந்த முறை அப்படியே நேர் எதிராக இருக்கிறது.

பல கொள்ளைகள் இன்னும் கண்டு பிடிக்கப்படாமலே உள்ளது.

இந்திய அளவில் விளம்பரம்

இந்திய அளவில் விளம்பரம் செய்ய என்ன அவசியம்? பிரதமராகும் எண்ணம் தவிர வேறு என்ன இருக்க முடியும்.

ஆசைப்பட அனைவருக்கும் உரிமையுண்டு, அதற்கு மக்களின் பணத்தை பயன்படுத்துவதே இங்கே கேள்வியாக உள்ளது.

ஏர் இந்தியா

ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது முதல் முறை அல்ல அடிக்கடி இது போல நடக்கிறது.

மத்திய அரசு வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவிற்குக் கொண்டு வரும் எண்ணம் இருப்பது போலவே தெரியவில்லை.

இதனால் எத்தனை பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனுடன் ஒரு நாளைக்கு எவ்வளவு கோடி நஷ்டம் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது.

ஏற்கனவே பல ஆயிரம் கோடி கடனில் இருக்கும் ஏர் இந்தியா தற்போது இந்தச் சுமையையும் சேர்த்து சுமக்க வேண்டும்.

இதில் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்குக் கொடுக்கப்படும் சலுகைகள் (இதில் அவர்கள் உறவினர்கள் பயணமும் சேர்த்து) ஏராளம்.

எவனோ பணம் என்பதால் தானே ஒவ்வொருவருக்கும் இவ்வளவு அலட்சியம். பொறுப்புள்ள அரசு என்றால் இதற்கு ஒரு சரியான தீர்வு எடுத்து இருக்க வேண்டாமா!

அரசு அலுவலகம்

எந்த ஒரு அரசு அலுவலகம் செல்லுங்கள் அங்கே பணம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது (சில விதிவிலக்கு). எந்த ஒரு கான்ட்ராக்டிலும் கமிசன்.

வார்டு கவுன்சிலரே MLA ரேஞ்சில் சுற்றிக்கொண்டு இருக்கிறார் (அதாவது வருமானத்திற்கு மீறிய சொத்துடன்).

இதன் பிறகு MLA, அமைச்சர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.

எங்கு பார்த்தாலும் ஊழல் மலிந்து விட்டது எங்கே சென்றாலும் பணம் பணம் என்று உயிரை எடுக்கிறார்கள். விலைவாசி கண்டபடி உயர்ந்து விட்டது.

பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதால் தான் மக்கள் சிரமப்பட வேண்டியதாக இருக்கிறது.

ஊரெல்லாம் கொள்ளை அடிக்கிறார்கள், தாங்கள் செய்ய வேண்டிய கடமையை / பணியைச் சரிவரச் செய்ய மறுக்கிறார்கள்.

இதை எல்லாம் காணும் போது இனம் புரியாத வெறுப்பு மனதில் வருகிறது.

அனைவர் மீதும் தவறு இருக்கிறது நாம் உட்பட. யாரையும் தனித்துக் குற்றம் கூறத் தோன்றவில்லை. இவற்றோடு வாழப் பழகிக்கொண்டு இருக்கிறேன் / பழக்கப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.

News credit – dinamalar.com

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

13 COMMENTS

  1. கிரி தங்கள் பகிர்வுக்கு நன்றி… உங்களுக்கு வெறுப்பும் சலிப்பும் வர நியமான காரணங்கள் உண்டு. உங்களுக்கு மட்டும் அல்ல நிறைய பேருக்கு இதே மன நிலைதான். என்ன செய்வது மனதில் வைக்காமல் வெளியே கொட்டி விடுவார்கள். நாம் நம்முடைய வேலையில் சரியாக இருக்கும் போது, அதே மாதிரி அடுத்தவர்களும் இருக்க வேண்டும் என நினைப்பது தவறில்லை.. ஆனால் ஊழல் & லஞ்சம் மிகுந்த இந்த நாட்டில் என்ன சொல்வது… நான் பத்தாவது வரை படித்த பள்ளியிலே சான்றிதழ் attestation வாங்குவதற்கு 30 ரூபாய் லஞ்சம் கேட்டனர் 2005 ல். என்னை சுமந்த இரண்டாம் கருவறையாக நான் பெருமையாக நினைத்த என் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது இருந்த மரியாதை அந்த கணம் முதலே என் மனம் உடைந்தது!!! கேள்விகள் பல… ஆனால் விடையில்லை கிரி!!!!

  2. ஹாய்,

    தயவு செய்து விட்டுவிடாதீர்கள், இந்த கேள்விகைள கேட்பவர்கள் குறைவு. படிப்பவர்கள் இன்னமும் சொற்பமே. ஆனாலும், இதுவும் ஒரு நல்ல காரியம்,

    என் போன்றவர்களுக்கு, ஒரு மன நிம்மதி. இளைய தலைமுறை, விழிப்புணர்வுடன் இருப்பதை பற்றி.

    சீர் up

  3. ரொம்ப நேர்மையான பதிவு தல..எப்படி இந்த பதிவு எழுத உங்களுக்கு கூச்சமா இருந்துச்சோ அப்படி தான் அதுக்கு கமெண்ட் போடவும் இருக்கு..

    நான் ரஜினி ரசிகனா இருந்தாலும் இந்த பிரெச்சனை சரி பண்ண ரஜினி வரணும் சின்ன புள்ளை தனமா நினைக்கல.. என்ன பொறுத்த வரைக்கும் ரஜினி சினிமாக்கு மட்டும் தான் சரியான கேரக்டர்… இதுக்கு தேவை நல்லவன் மட்டும் இல்லை மிக தீர்க்கமா முடிவு எடுக்க கூடிய சிறந்த நிர்வாகி, தலைவன்..

    எல்லோரும் என் மக்கள், என் இனம், என் சொந்தம் நு நினைக்குற எண்ணம் கொண்ட ஒரு கூட்டம் மேல் மட்டத்துல இருந்து கீழ் மட்டம் வரைக்கும் வேண்டும்.. அது அரசியல் ல இருந்து ஆரம்பிக்கணும்.. ரொம்ப நேர்மையான ஒரு நல்ல தலைவன் னோட.. வருமானு தெரில வரணும் நு ஆசை இருக்கு,…

    – அருண்

  4. பிரச்சனைகளைப் பற்றி யோசித்தால் தலைவலி வருகின்றது.
    பிரச்சனைக்ளைப் பற்றி யோசித்து ஒன்றும் ஆகப் போவதும் இல்லை

    இது இரண்டு விதமான எண்ணம்.

    ஆனால் நான் எழுதக் கூட மாட்டேன். சலிப்பைத் தருகின்றது என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது.

    சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு (பத்திரிக்கைகளைக் கூட படிக்க முடியாதவர்கள், நடப்புகளைப் பற்றி ஒன்றுமே புரியாதவர்களுக்கு இது போன்ற வலைபதிவுகளை படித்து முடிக்கும் போது இப்படியா? என்று யோசிக்க வைக்க முடியும்.

    ரஜினியைப் பற்றி எழுதுவது உங்கள் விருப்பம்.
    சமூக நிகழ்வுகளைப் பற்றி எழுதுவதை உங்கள் கடமையாக வைத்துக் கொள்ளவும்.

    கடமையைச் செய்து விட்டு சலிப்போ உடனடித் தீர்வோ எதிர்பார்க்க வேண்டாம்.

    மாற்றம் என்பது வந்தே தான் தீரும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கூட.

  5. உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தை கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே.- சே குவேரா..கவலைப்படாதீர்கள்! ஏமாற்றுபவன் நன்றாக வாழ்வதும் இல்லை.. ஏமாற்றப்பட்டவர்கள் கெட்டுப் போவதும் இல்லை..

  6. கிரி இதை தான் தங்களிடம் நான் எதிர்பார்ப்பது, நிறைய பொது விஷயங்கள் பற்றி எழுதுங்கள், நேர்மையாக எழுதுபவர்கள் மிக குறைவு, நீங்கள் எதைப்பற்றி எழுதினாலும் அதில் உள்ள உண்மை எனக்கு பிடிக்கும். என் மனதில் தோன்றிய மேலும் சில burning issues குறித்து தங்கள் எழுத்து நடையில், தங்களுக்கு பிடித்து இருந்தால் iஎழுதுங்கள்..
    1 அழிந்து வரும் விவசாயம் (நகர்மயம் / ரியல் எஸ்டேட் / வேலையாள் பற்றாகுறை)
    2 MNC Employess exploitation / Politics / groupsm
    3 புற்றிசல் போல் பெருகி வரும் தரமில்லா பொறியியல் கல்லூரிகள்
    4 தமிழக தண்ணீர் பிரச்சனையில் கர்நாடகா / கேரளா / மத்திய மாநில அரசுகள்
    5 குழந்தைகள் கல்வி முறையில் உள்ள சீர்கேடுகள்
    6 மதுவால் சீரழியும் (அரசின் ஆசிர்வாதத்துடன்) இளைய தலைமுறை.

    இதுபோல் நிறைய இருக்கு கிரி..

    இன்று இல்லாவிட்டாலும் நன்மை நிச்சயம் வெல்லும், தொடர்ந்து எழுதுங்கள்..

  7. Giri,

    The write up is nice. Its only our frustration… to bring a change it has to start from oneself. How many of us are ready to get things in the proper way… we do not want to spend time so we choose the way of bribing.. When somebody is ready to give the takers will be always there. Nice that you have started to write about these subjects and please continue those who read will atleast know that these things are happening in our place. As far as spending somebody has to standup to ask but unfortunately we have none and those who ask become silent when their share is received. It is shameful that these things are happening.

    Kameswara Rao

  8. எது எதுக்கோ பதிவு போடுகிறார்கள்…அதுக்கு பதிவை விட பின்னுட்டம் பெரிதாக…
    நானும் இந்த பதிவை ஒரு நிமிடதுக்குள் படித்து (பார்த்து) கீழே வந்து கொசுறு வாவது தேறுமா என….என்ன ஒரு மன நிலை……..

    தனி மனித ஒழுக்கம் என்று சொல்லிகொடுக்க படுகிறதோ (We are in a situation to preach about self-discipline)அன்று தான் இதுக்கு ஒரு ஆரம்பம் வரும்

  9. @அருண்
    //நான் ரஜினி ரசிகனா இருந்தாலும் இந்த பிரெச்சனை சரி பண்ண ரஜினி வரணும் சின்ன புள்ளை தனமா நினைக்கல.. என்ன பொறுத்த வரைக்கும் ரஜினி சினிமாக்கு மட்டும் தான் சரியான கேரக்டர்… //

    நீங்க ஆயிரத்தில் ஒருத்தர் அருண்.

    இப்போ ஏதோ காந்திக்கு பிறகு சிறந்த இந்தியர்னு CNN வாக்கெடுப்பு நடத்துதாம். அந்த பட்டியல்லே அம்பேத்கர், பட்டேல், ரஜினி, ரஹ்மான், டெண்டுல்கர், கன்ஷிராம், அன்னை தெரேசா, அமிதாப், மற்றும் பலர், அப்படீன்னு வகை தொகை இல்லாம ஒரு லிஸ்ட்டு. அதுக்கு பிக்காலிதனமா ஒரு Online வாக்கெடுப்பு. இதுல ரஜினிக்கு வாக்களிப்பீர்னு பிரச்சாரம் வேற.

    வாக்களிக்கப்பட்டா காந்தி இந்தியாவின் ஒப்பற்ற தலைவர் ஆனார்? இல்லை ஒரு நாள் நாம் வாக்களிக்கப்பட்டு தான் சிறந்த இந்தியர் ஆவோம்னு நினைச்சு இந்தியாவின் அரசியல் சாசனத்தை வகுத்ததும், தீண்டாமையை ஒழிக்க பாடுபட்டதும் என அன்று அம்பேத்கர் உழைத்தார்?

    இந்தியர்கள் இதுக்கு மேல கேவலப்பட முடியாதுன்னு எனக்கு தோணுது.

    நீங்க என்ன நினைக்கிறீங்க?

  10. நானும் பாத்தேன் பாமரன் சார்
    காமராஜர், mgr choice ல இல்லை ரஜினி இருக்கார் நா நிச்சயம் இதுல வியாபாரம் தவிர வேற என்ன இருக்க முடியும்..ரஜினி ய நான் குறைச்சு சொல்லல பட் இந்த லிஸ்ட் ல ரஜினி, அமிதாப் மாதிரி ஆட்கள் hits காக சேத்த மாதிரி தான் தெரியுது

    சிம்பிள் லா சொல்லணும் நா வாரமலர் நடுப்பக்கம் கவர்ச்சி ஸ்டில் மாதிரி circulation காக சேத்த மாதிரி இருக்கு

    – அருண்

  11. @யாசின் நிச்சயம் நாம் மதிப்பு வைத்து இருப்பவர்கள் இது போல நடந்து கொள்ளும்போது நமக்கு அதிர்ச்சியாகத் தான் இருக்கும்.

    @வெற்றிமகள் முயற்சிக்கிறேன். நன்றி

    @அருண் ரஜினி எல்லோருக்கும் நல்லவனாக இருக்க நினைக்கிறார் அது முடியாத ஒன்று. ரஜினி வருவார் என்ற நம்பிக்கை எனக்கில்லை அதே போல அவர் வந்தால் ஒரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கை இருப்பதும் உண்மை.

    நேர்மையான தலைவன் இனி கனவில் கூட சாத்தியமா என்று தெரியவில்லை.

    @ஜோதிஜி பிரச்சனைகளைக் கண்டு என்றும் பயந்ததில்லை அதனால் தான் நான் ஓரளவு நல்ல நிலையில் இருக்கிறேன். அதே பொதுவாழ்க்கையில் நம்மையும் மீறி நடப்பதை பார்க்கும் போது சலிப்பு தான் வருகிறது அது பின்னாளில் விரக்தியாகி விடுகிறது. ரஜினியைப் பற்றி எழுதுவது உங்கள் விருப்பம் என்று கூறி இருக்கிறீர்கள் நான் எப்போதாவது தானே எழுதுகிறேன் அதுவும் தற்போது குறைந்து விட்டது. அரசியல்வாதிகளைப் பற்றி எழுதுவதற்கு நான் ரஜினியைப் பற்றி எழுதினால் எனக்கு ஒரு திருப்தியாவது கிடைக்கிறது. இவர்களைப் பற்றி எழுதி டென்ஷன் தான் ஆகிறது.

    நீங்கள் கூறுவது போல மாற்றம் வந்தே தீரும் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு. இது ஏனோ தற்போது எரிச்சலைத் தான் தருகிறது. சுற்றிலும் ஏமாற்றல் லஞ்சம் ஊழல் என்று பார்த்து பார்த்து சலிப்பாகி விட்டது. கப்புன்னு அடைத்து வைத்து இருந்த இடத்தில் நல்ல காற்றை சுவாசிக்க மாட்டோமா என்று நினைப்பது போல இதில் இருக்கிறது. வாழ்க்கை போகிற போக்கில் போகிறேன்..எனக்குண்டான கட்டுப்பாடுகளுடன்.

    @காயத்ரிநாகா உண்மை தான்.

    @சிட்டிபாபு நீங்கள் கூறியதில் ஒரு சில விசயங்களை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். மற்றவற்றை எழுத வேண்டும் என்று தோன்றும் போது எழுதுகிறேன் தற்போது எழுதும் மன நிலையில் இல்லை குறைந்த பட்சம் கொஞ்ச நாட்களுக்கு. உண்மையாகவே நான் இவற்றை எழுதும் போது கிறுக்குத்தனமாக உளறிக்கொண்டு இருப்பது போலவே தோன்றுகிறது. யாருமே இல்லாத இடத்தில் தனியாக பேசுவது போல ஒரு மனநிலை.

    @காமேஷ் தல எல்லோரும் சுயநலவாதிகள் அது தான் பிரச்சனை நான் உட்பட.

    @சதா “கொசுறு வாவது தேறுமா என…” 🙂 பதிவை விட கொசுறுவை தான் பலர் படிக்கிறார்கள் போல. இது போல பலர் கூறக் கேட்டு இருக்கிறேன்.

    @பாமரன் நான் என்ன நினைக்கிறேன்னு கேளுங்க 🙂

    முதல்ல நீங்க இப்படி ஒரு கமெண்ட் போட்டதே எனக்கு மாபெரும் அதிர்ச்சி. காரணம் இந்த பதிவிற்கு உங்கள் பெயரை பார்த்தவுடன் இது பற்றி வழக்கம்போல விளக்கமாக பதில் கூறி இருப்பீங்க என்று பார்த்தால் சப்பையா ரஜினி விஷயத்தை பற்றி கூறி இருக்கீங்க.

    முதலில் சில விசயங்களை தெளிவு படுத்தி விடுகிறேன்.

    இந்த சர்வேக்கும் ரஜினிக்கும் சம்பந்தமில்லை.

    இதில் தமிழகத்தில் இன்னும் சிறந்த தலைவர்கள் பலர் இருக்க ரஜினி ரகுமானை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

    ரஜினி மராட்டியத்தில் பிறந்து கர்நாடகாவில் வளர்ந்து தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இது முக்கியமல்ல விஷயம் மிகவும் போராடி இந்த நிலைக்கு வந்து இருக்கிறார்.. இதுவும் விசயமில்லை காரணம் இந்தியாவில் ரஜினி போல போராடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்புறம் என்ன தான் விசயம்? இவர் தன்னுடைய திரைத்துறை மூலம் பல்வேறு நாட்டு மக்களை ஈர்த்து இருக்கிறார். வெளிநாட்டில் சிலருக்கு இந்தியாவில் யாரையும் தெரியவில்லை ஆனால் சிலருக்கு ரஜினி என்றால் தெரிகிறது. இது மட்டுமல்ல இந்திய திரைத்துறை குறிப்பாக தமிழகத் திரைத்துறை வெளிநாடுகளில் பிரபலமடைய உதவி இருக்கிறார் தனது படங்களின் ரீச் மூலம். இதன் மூலம் மட்டுமே ஒருவர் சிறந்த நபராகி விட முடியாது என்பது உண்மை தான். ஆனால் அனைத்துப் பிரிவில் இருந்தும் எடுக்க நினைத்து இருக்கலாம் அதனால் ரஜினியையும் தேர்ந்து எடுத்து இருக்கலாம். இதற்கு ரஜினி பொறுப்பாக முடியாது.

    ரகுமான்

    இவர் என்ன செய்தார் என்று உங்களுக்கே தெரியும். இந்திய திரையுலகின் இசையை உலகளவில் கொண்டு சென்றவர். இந்தியாவின் இசையை மற்றவர்களும் ரசிக்கும்படி வாய்ப்புகள் அமைத்துக் கொடுத்தார். அதாவது இந்தியாவின் புகழை உலகம் முழுக்க கொண்டு செல்ல உதவி இருக்கிறார்.

    “இதுல ரஜினிக்கு வாக்களிப்பீர்னு பிரச்சாரம் வேற.”

    நீங்கள் அனைவரையும் குறிப்பிட்டு ரஜினிக்கு வாக்களிப்பதை மட்டும் குறிப்பிட்டு இருப்பதால் உங்கள் ரஜினி மீதான வெறுப்பை புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ரசிகர்கள் என்றால் அப்படித்தான் நடந்து கொள்வார்கள் அனைவரும் அனைத்தையும் யோசித்து நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. தான் விரும்பும் ஒருவருக்கு வாக்களிக்க சொல்வதில் எந்த தவறும் இருப்பதாக தோன்றவில்லை. அந்த பட்டியலில் இருப்பவரைத்தானே கூறுகிறார்கள்? அப்படி கூறக்கூடாது என்றால் அந்தப் பட்டியலில் ரஜினி இருந்து இருக்கக் கூடாது. அது ரசிகர்கள் தவறில்லையே!

    வாக்களிப்பதால் மட்டுமே இவர்கள் உயர்ந்தவர்களோ தாழ்ந்தவர்களோ ஆகி விட முடியாது. இது அனைவருக்கும் தெரியும். இங்கிலாந்தில் இதே போல நடத்தி வெற்றி பெற்று இருக்கிறது எனவே அதே முறையில் இங்கேயும் நடத்துகிறார்கள் அவ்வளோ தான். சுருக்கமாக எத்தனை பேர் இணையத்தில் இருக்கிறார்கள். இவர்கள் போடும் சில லட்சங்கள் ஒட்டா ஒரு தலைவரை தீர்மானிக்கிறது? முதலில் இதுவே தவறு அப்படி இருக்கும் போது யார் வெற்றி பெற்றால் என்ன தோல்வி அடைந்தால் என்ன? இதெல்லாம் யார் முக்கியமாக கருதப்போகிறார்கள். இது என்ன ISI முத்திரையா இனி இவர் தான் காந்திக்கு அடுத்தது என்று கூற. முதலில் காந்தியே சரியான தலைவர் இல்லை என்று பலர் கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

    இது ஜஸ்ட் சர்வே அவ்வளோ தான். இதற்கு நாம முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமே இல்லை. ஜஸ்ட் இக்னோர் இட். அனைவரையும் திருப்தி படுத்தும் படி யாராலும் நடந்து கொள்ள முடியாது பாமரன்.

    “இந்தியர்கள் இதுக்கு மேல கேவலப்பட முடியாதுன்னு எனக்கு தோணுது.”

    ஒரு சர்வேக்கு இவ்வளவு ஆத்திரப்பட வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன். இது இந்தியா முழுக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்டியல் அல்ல அவர்களாக எதோ தேர்வு செய்து இருக்கிறார்கள்.

    சரி கடைசியாக ஒன்னு கேட்கிறேன் 🙂 இங்க ஒருத்தன் கஷ்டப்பட்டு இவ்வளோ பெரிய கட்டுரை எழுதி இருக்கிறேனே அதைப் பற்றி நீங்கள் ஏதாவது கூறினீர்களா? நீங்கள் இவ்வளவு கேள்வி கேட்பதால் ஒரு பொறுப்புள்ள அக்கறை உள்ள நபர் என்று உணர முடிகிறது அப்படி இருப்பவர் என்ன செய்து இருக்க வேண்டும். இந்தக் கட்டுரை பற்றி ஏதாவது கூறி விவாதித்து இருக்க வேண்டாமா? இந்தபதிவிற்க்கும் உங்க கமெண்ட்திற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா! பாருங்க நான் ஒரு சோடா குடிக்க வேண்டிய அளவிற்கு பேசி இருக்கிறேன். பேசாம இதையே ஒரு பதிவா போட்டு இருக்கலாம் 😉

    ரஜினிய விடுங்க பாமரன்.. ரஜினி ரசிகர்களை விட உங்களைப் போல கமல் ரசிகர்கள் தான் அதிகம் ரஜினியை நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் போல 🙂 வாங்க விஸ்வரூபம் ஸ்டில் பக்காவா இருக்கு படம் வந்ததும் பார்த்து என்ஜாய் பண்ணுவோம். பாருங்க! உங்கள் கமல் ஹாலிவுட் படத்துல நடித்து / இயக்கி நிஜ உலகநாயகன் ஆகிட்டாரு என்று போட்டு இருக்காங்க. அடுத்த சர்வேல கமலையும் சேர்க்க சொல்லிடுவோம் 😀

  12. அட பாவமே
    பாமரன் சார் ஒரு கமல் ரசிகர் நு எனக்கு இன்னிக்கு கிரி சொன்னதுகு அப்புறம் தான் தெரியும்.. இதுக்கு தான் நீங்க ரஜினி ய பத்தி இவ்ளவு ஆர்வமா கேட்டீங்களா பாமரன் சார் நான் கூட சமுதாய அக்கறைன்னு நினச்சேன் 🙂

    “இது என்ன ISI முத்திரையா இனி இவர் தான் காந்திக்கு அடுத்தது என்று கூற. முதலில் காந்தியே சரியான தலைவர் இல்லை என்று பலர் கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.”

    – ரொம்ப நியாயமான கமெண்ட் தல

    – அருண்

  13. கிரி & அருண்

    ஒரு கமல் ரசிகனாக, ரஜினி மீதுள்ள வெறுப்பை நான் பதிவிட்டதாக நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறு. ரஜினியை கமலுக்கு எதிரி, போட்டியாளர் என்றெல்லாம் நினைக்கும் நிலையை நான் என்றோ கடந்து விட்டேன். கமலின் வழி வேறு, ரஜினியின் வழி வேறு. இன்றும் கமல் ஹாலிவுட் படத்தில் நடிக்க, இயக்க போகிறார் என்பதை அவர் தன்னந்தனி ஆளாக உழைத்து நிகழ்த்திய சாதனையாக மட்டும் தான் பார்த்து வியக்கிறேனே தவிர அது ரஜினியின் உலக சந்தை சாதனைக்கு விடுத்த ஒரு சவால் என்று நினைக்கும் அளவுக்கு நான் சிறு பிள்ளை அல்ல.

    ரஜினியின் ரோபோ ஜப்பானில் சக்கை போடு போடுகிறதாம். மகிழ்ச்சி. இது கமலின் ஹாலிவுட் நுழைவிற்கு பதிலடி என்று யார் நினைத்தாலும் அது சிறு பிள்ளைதனமே.

    இனி விஷயம்.

    CNN சிறந்த இந்தியர் தேர்வு ஒரு அயோக்கியதனமான வியாபாரம். அந்த பட்டியலில் கமலை சேர்த்து இருந்தாலும் என் நிலை இது தான். அம்பேத்கரையும், டெண்டுல்கரையும், தெரேசாவையும், ரஜினி, அமிதாபையும் ஒரே பட்டியலில் வைத்து ஒருவரை தேர்வு செய்வது எத்தனை பெரிய அபத்தம் என்ற கருத்தை தான் நான் வலியுறுத்த நினைத்தேன். மேலும் சிறந்த இந்தியர் என்பது தனக்கு தான் தோன்ற வேண்டுமே தவிர அது மற்றவர் பிரச்சாரம் மூலம் செய்வது கேலிக்கூத்து அல்லவா?

    அருண் நீங்கள் சுயமாக சிந்திப்பவர் என்று நினைத்தேன் !!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here