எழுத்தாளர் சாருவும் கமலும்

6
எழுத்தாளர் சாருவும் கமலும்

திரு.பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய “மேற்கத்திய ஓவியங்கள்” என்ற புத்தகத்திற்கான அறிமுகக் கூட்டத்துக்குக் கிருஷ்ணன் அவர்களின் அழைப்பில் எழுத்தாளர் சாருவும் கமலும் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் இவருக்குப் பிடித்த கமலும் கலந்து கொள்கிறார் என்பதும் இவருக்கு அங்கே செல்வதற்கான முக்கியக் காரணமாக இருந்து இருக்கிறது.

கமலை சந்தித்த போது கமல் அவரைப் புறக்கணித்து விட்டதாக அதுகுறித்து கமலுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

எழுத்தாளர் சாருவும் கமலும்

விழாவில்

உங்கள் மீது இத்தனை அன்பும் நட்புணர்வும் கொண்ட என்னை பி.ஏ. கிருஷ்ணன் நூல் அறிமுகக் கூட்டத்தில் உங்கள் பி.ஆர்.ஓ. நிகில் முருகன் உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த உலகின் அத்தனை அன்பும் கண்களில் பொங்க நான் உங்களுக்குக் கை கொடுத்தேன்.

நீங்களோ ஒருக்கணம் ஆளவந்தானாகவே மாறி முகத்தைச் சுளித்தபடி கை நீட்டி விட்டு ஆளவந்தான் மாதிரியே இறுக்கமான பாவனையுடன் தலையை இடது பக்கமும் வலது பக்கமும் ரோபோ மாதிரி திருப்பியபடி சென்று விட்டீர்கள்.

என்ன நடக்கிறது என்று தெரியாமல், உங்கள் பின்னாலிருந்து ஒருவர் சாருவைத் தெரியாதா என்று கேட்க, இன்னொருவர் இரண்டு இண்டர்நேஷனல் ஸ்டார்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியாதா என்று குரல் கொடுத்தார். யார் என்று எனக்குத் தெரியவில்லை.

என்று சாரு கூறி இதனால் தன் மனம் புண்பட்டுவிட்டது என்று கூறி இருக்கிறார்.

கமல் இது போல நடந்து கொண்டதற்கு அவரின் குருதிப்புனல் மற்றும் தசாவதாரம் படத்தை விமர்சித்தது தான் காரணம் என்று கூறி இருக்கிறார்.

நான் கமல் படங்களைப் பாராட்டி எழுதிய மற்ற படங்களை எல்லாம் மறந்து இந்த இரண்டை மட்டும் மனதில் வைத்து இது போல அநாகரீகமாக நடந்து கொள்ளலாமா!

என்று ஒரு பெரிய கடிதம் / கட்டுரை எழுதி இருக்கிறார்.

முழுவதும் படிக்க விரும்புவர்கள் கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம்…  படிக்கலாம்.

சாரு வலைதளத்தை நான் தொடர்ந்து படிக்கிறேன் ஆனால், இவரின் புத்தகம் இரண்டு படித்து ஒரு வழி ஆனதால் இவரின் புத்தகம் படிப்பதை மட்டும் தற்காலிகமாக நிறுத்தி விட்டேன்.

எதிர்காலத்தில் என் ரசனைக்குத் தகுந்த மாதிரிப் புத்தகம் வந்தால் படிக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன்.

முரண்பாடுகள்

சாரு எப்போதுமே “நான் நேர்மையானவன். யாருக்கும் பயப்பட மாட்டேன் மனதில் பட்டதைக் கூறுவேன்” என்று அடிக்கடி கூறுவார்.

இதில் இவர் கூறுவது உண்மை என்பது போலவும், கூறியதிற்கு எதிராக நடப்பதும் என்று இவரின் கருத்துக்களே அடிக்கடி நம்மைக் குழப்பும்.

சில நேரங்களில் சொன்னதுக்கு நேர் மாறாக எழுதுவார்.

இவ்வளவு குழப்பங்கள் / முரண்பாடுகள் இருந்தாலும் இவரைப் படிக்கத் தூண்டுவது இவரின் எளிமையான எழுத்துக்களே!

எழுத்தாளர்களில் நான் படிக்கும் ஒரே வலைதளம் இவரது மட்டுமே!

சில நேரங்களில் நாம் ஒரு சில விசயங்களில் சமரசம் செய்து கொள்வோம்.

நாம் ஒருவரைப் பற்றி விமர்சித்தால், அவரால் கிடைக்கும் வாய்ப்பு கிடைக்காது என்று கருதினால், தவறு செய்தாலும் எதுவும் விமர்சிக்காமல் இருந்தால் அது தான் சமரசம்.

நம் வாய்ப்புக்காக நம் மனசாட்சிக்கு எதிராக ஏற்படுத்தும் சமரசம்.

சாரு பெரும்பாலும் அதெல்லாம் கண்டுக்காமல் விமர்சனம் செய்து விடுவார்.

அதன் பிறகு அவருடைய விமர்சனங்களில் சர்ச்சை இருந்தாலும் இதையும் கூற ஒரு தைரியம் வேண்டும். சில விசயங்களில் முரண்பாடாகவும் இருக்கும்.

விஜய் டிவியை “அவர்கள் பணம் கொடுப்பதில்லை இனிமேல் அழைத்தாலும் செல்ல மாட்டேன்” என்று கூறுவார்.

பின் திரும்ப அங்கு சென்று வந்த பிறகு திரும்ப இதையே கூறுவார்! இது போல நிறைய விஷயங்கள்.

வள்ளி

“வள்ளி” படத்தில் ஒரு கதாப்பாத்திரம் தன்னிடம் ஒருவர் பேசிவிட்டு சென்ற பிறகு அவரைக் கிண்டல் செய்து / திட்டி ஒரு வழி ஆக்கி விடுவார்.

இதனால் இவரிடம் பேசிய பிறகு பலர் உடனே போகமாட்டார்கள்.

ஏனென்றால் நாம் சென்ற பிறகு மற்றவர்களிடம் நம்மைப் போட்டு வறுத்து விடுவார் என்ற பயமே காரணம்.

சாரு செய்வதைப் பார்த்தால் இக்காட்சி தான் நினைவிற்கு வருகிறது.

கமலையும் திரை விமர்சனம் அல்லாமல் பல விசயங்களில் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். இதையெல்லாம் வசதியாக மறந்து விட்டார்.

எதோ இரண்டு விமர்சனத்திற்காக விழாவில் கமல் இவரைப் புறக்கணித்தது போலக் கூறி உள்ளார்.

கமல் உண்மையாகவே ஒதுங்கி இருந்து இருக்கலாம் அல்லது சாருவிற்கு மட்டும் தன்னை கமல் புறக்கணித்தது போலத் தோன்றி இருக்கலாம்.

சாரு அடிக்கடி தன்னால் போலியாக இருக்க முடியாது மனதில் பட்டதைக் கூறுவேன் என்று கூறுகிறார். இது மற்றவர்களுக்கும் பொருந்தும் தானே!

கமல் இவரிடம் புன்னகைக்க விரும்பாமல் இருந்து இருக்கலாம் / வேறு எதோ காரணம் இருந்து இருக்கலாம் / எதேச்சையான நிகழ்வாகக் கூட இருந்து இருக்கலாம்.

சாரு தான் எப்படி வேண்டும் என்றாலும் மனதில் பட்டதைக் கூறுவேன் எழுதுவேன் என்று இருக்கும் போது இவரால் விமர்சிக்கப்படுபவரும் எப்படி வேண்டும் என்றாலும் நினைக்கலாம் நடந்து கொள்ளலாம் அல்லவா!

அவரவர் நியாயம்

சாரு விமர்சித்து எழுதினால் உண்மையாக நடந்து கொள்வது வெளிப்படையாக இருப்பது ஆனால், அதே இன்னொருவர் ஒதுங்கினால் அது அநாகரீகம்!!

ஒவ்வொருவருக்கும் அவரவர் நியாயம்.

இதில் என்ன பெரிய தொடர்பு என்றால் மகாநதி படத்தைச் சாரு செமையாக ரசித்து விமர்சித்து விமர்சனம் ஆக எழுதி இருக்கிறாராம் (1994).

இதே மகாநதி படத்தை நானும் ரசித்து எழுதி இருக்கிறேன்.

இருப்பினும் பெரும்பாலும் படிப்பவர்களுக்கு / தீவிர ரசிகர்களுக்கு விமர்சித்தது தான் நினைவில் இருக்கும், பாராட்டியது ஒரு ஓரமாகத் தான் இருக்கும்.

இது தான் உளவியல் ரீதியாக உண்மை.

இதில் நான் உட்பட பெரும்பான்மையானவர்கள் அடங்குவார்கள்.

எதிர்பார்ப்பில் நியாயம் இல்லை

நான் எவரையும் எப்படியும் விமர்சிப்பேன் / பாராட்டுவேன் ஆனால், நான் சந்திக்கும் போது மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்!

சாரு பத்துக் கட்டுரைகள் பாராட்டி எழுதி இரண்டு கட்டுரைகள் திட்டி இருந்தாலும் அந்த இரண்டில் பத்துப் பாராட்டுகளை ஒன்றும் இல்லாமல் செய்துவிடக்கூடிய அளவிற்கு படு கேவலமாகத் திட்டி இருப்பார், இதன் பெயர் விமர்சனமல்ல.

நம்மால் விமர்சிக்கப்பட்டவர் நம்மிடம் சகஜமாக நடந்து கொண்டால் நல்லது.

அப்படி நடந்து கொள்ளவில்லை என்றால் அதற்காக வருத்தப்படுவதோ  நம்மை இழிவு படுத்தி விட்டார்கள் என்று புலம்புவதோ அவசியமற்றது. அது நியாயமுமில்லை!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

  1. சாரு ஒரு “காரியக் கிறுக்கன்”, மனுச புத்திரன், விஜய் ரிவி, வைத்து 10 கட்டுரை எழுதியவர், இப்போ கமல் கிடைத்துள்ளார்.கொஞ்சகாலம் ஓட்டுவார்.
    “எப்படி இவருக்கு மற்றவரை விமர்சிக்க, ஒதுக்க உரிமையுள்ளதோ! அதே உரிமை கமலுக்கு உண்டு.
    நீங்கள் சொல்வது போல் “கமலும் உண்மையுடன் நடந்தார்” என சாரு மகிழலாம்.
    இதை விட்டு 10 கட்டுரை எழுதி மூக்குச் சிந்தி, தனக்குத் தானே கடிதமெழுதி ,அவர் “சொம்பு தூக்கிகளை மகிழவைக்கிறார்.
    அவ்வளவே!
    இனி வங்கி இலக்கத்துடன் ஒரு கட்டுரை வரும்.
    இதுக்கு “CK” கோவணமும், நாய்க்கு வச்சிர மீனும் வாங்க….

  2. சரியான பதிலைச் சொல்லியிருக்கிறீர்கள் சார், அவருக்கு அவர் தரப்பு எப்படி நியாயமோ அதே போல கம‌லுக்கு அவர் தரப்பும் நியாயம் தான்.இதைப் புரிந்து கொள்ளாமல் கடிதம் எழுதுவதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான். இன்னொன்று நீங்கள் சொன்னது ,ஆயிரம் தடவை பாராட்டினாலும் நாம் ஒரு முறை திட்டியது தான் முதலில் நியாபகத்திற்கு வரும். உண்மையிலும் உண்மை சார்..

  3. கிரி.. சாருவை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.. நான் இணையத்தில் தொடர்ந்து படிப்பது உங்கள் தளமும், அ.முத்துலிங்கம் அவர்களின் தளமும் மட்டுமே…நேரம் இருப்பின் முத்துலிங்கம் அவர்களின் புத்தகங்களை படிக்க முயற்சி செய்யுங்கள்… தாய்நாடு திரும்பிய பின் நிறைய கடமைகள் உள்ளது.. அவைகளில் முதன்மையானது நிறைய புத்தகங்கள் வாசிக்க வேண்டியது….என்றோ???

    புத்தகம் என்ற உடன் நினைவுக்கு வருவது கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களின் வரிகள் மட்டுமே… “புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்,
    குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்” எத்தனை சத்தியமான வரிகள்…!!!!

  4. சாரு அவர்கள் – ரஜினி, மிஸ்கின் அஞ்சாதே படம், த்ரிஷா exile novel கு எழுதின 3 பதிவு படிச்சு இருக்கேன்.. நீங்க யோசிக்கமா படிச்சா அவர் சொல்லுறது சரி மாதிரியே தான் தோணும்

    கொஞ்சும் யோசிச்சு பார்தா அந்த கருத்து ல உள்ள எதிர்மறை விஷயம் புரியும் .. அப்படி தான் இந்த கமல் பதிவும் எனக்கு தெரியுது

    காமம் சமந்தமான அவரோட கருத்துக்கு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு…“வள்ளி” எடுத்துகாட்டு செம … நானும் என்னோட அப்பா வும் இன்னிக்கும் யாராவது இந்த மாதிரி பேசின use பண்ணுற code word “வள்ளி” தான்

    சொல்லுற கருத்து அடுத்தவன காயபடுத்தாம சொல்லுறது ஒரு தனி கலை
    அதுல நீங்க PHD பண்ண மாதிரி இருக்கு வர வர .. உங்க எழுத்து நடை ரொம்ப அழகாயிடே வருது தல

    – அருண்

  5. @ஜோகன் நீங்க சொன்னது போலவே ஒரு கட்டுரை வங்கிக் கணக்குடன் எழுதி விட்டார் 🙂

    @ஜெயசீலன் சாரு எப்போதுமே இப்படித் தான்.

    @யாசின் அ.முத்துலிங்கம் பற்றி ஏற்கனவே கூறி இருந்தீர்கள். இவர் குறைவாகத் தான் எழுதுகிறார் எனவே படித்தேன் மறந்து விட்டேன். நினைவுபடுத்தியதற்கு நன்றி.

    @அருண் தலைவரையும் பிரிச்சு மேஞ்சு இருக்காரு.. ஆனால், நிறைய பாராட்டியும் இருக்காரு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here