காலா [2018]

16
காலா Kaala movie poster

தாராவி தாதாவான காலா, தாராவி நிலத்தைக் கைப்பற்ற நினைக்கும் ஹரி தாதா. இவர்கள் இருவருக்கிடையேயான மோதலே காலா.

காலா

படம் துவங்கி 25 – 30 நிமிடங்கள் எனக்குத் திருப்தியில்லை, உண்மையில் படம் பார்க்கும் உணர்வே இல்லாமல் ஒரு ஆவணப்படம் போல இருந்தது.

கதாப்பாத்திரங்கள் அறிமுகம், தாராவி சூழ்நிலை போன்றவற்றை விவரிக்க வேண்டிய கட்டாயம் ரஞ்சித்துக்கு. எனவே, இவையே பெரும்பகுதி ஆக்கிரமித்து விட்டன.

படம் (கதை) எப்போது துவங்குகிறது என்றால், ரஜினியின் முன்னாள் காதலி ஜரீனாவை உணவு விடுதியில் பார்க்கும் போது தான். அப்போது இருந்து படம் செமையா இருக்கு.

ஜரீனா (முன்) காதல் காட்சிகள் ரொம்ப அழகு. இருவரும் ஒரு இடைவெளியில் அதே சமயம் காதலும் இருந்து என்று ஒரு அழகான நினைவை மீட்டெடுக்கும் காட்சி.

ரஜினி மனைவியாக வரும் ஈஸ்வரி ராவ் துவக்கத்தில் கொஞ்சம் மிகை நடிப்பு போல இருந்தாலும், பின்னர் சரியாகக் கொண்டு சென்று விட்டார்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் அம்மா, மனைவியை நினைவு படுத்தும் கதாபாத்திரம். அவர் அடிக்கும் கமெண்ட்ஸ் ஒவ்வொன்றும் ரசிக்கும்படி இருந்தது.

அதுவும் ரஜினியிடம் “எங்களுக்கும் காதல் இருக்கு” என்று கூற, பின்னர் ரஜினி மெதுவாக ஈஸ்வரி ராவிடம் கேட்கும் கேள்வி செம ரகளை 🙂 .

இயல்பான நகைச்சுவை காட்சிகள் படத்துக்கு பலம்.

சமுத்திரக்கனி நக்கல்கள் ரசிக்கும் படி உள்ளது, குறிப்பா ரஜினி 60 ம் திருமண நிகழ்வில். அவரைப் படம் முழுக்கப் போதையிலேயே இருக்கும்படி காட்டியிருக்க வேண்டாம் .

ரசிகர்கள் எதிர்பார்க்கும் சண்டைக்காட்சிகள், நக்கல், இறங்கி அடிக்கும் விதம், மாஸ், நடுத்தரக் குடும்பம் என்று சராசரி ரசிகனை திருப்தி படுத்தும் காட்சிகள் நிறைய.

அதே சமயம் ரஞ்சித் படங்களுக்கே உண்டான ஓரளவு நம்பகத்தன்மையுடன் கமர்சியலாகவும் உள்ளது.

காவல்நிலைய காட்சியில் ரஜினி கூறும் “குமாரு… யாரு இவரு” என்று கேட்கும் காட்சிகளுக்குத் திரையரங்கில் பலத்த சிரிப்பலை. இந்தக் காட்சி பலரை கவரும், இதை வைத்து மீம் வரும் 🙂 .

நானா படேகர்

தலைவர் ரசிகர்கள் கோபித்துக்கொள்ள வேண்டாம். நானா படேகர் அறிமுகக் காட்சியில், பேசாமலே தலைவரை நடிப்பில் ஓரங்கட்டி விட்டார். யம்மாடி! செம்ம.

இதற்குச் சந்தோஷ் நாராயணன் பின்னணி பேருதவி புரிந்து இருக்கிறது. இக்காட்சியினை ரொம்ப ரசித்தேன். இதற்கு ரஜினி பதிலடி தருவது… கலக்கல்.

படத்துக்கு ஒரு கெத்து தருவது சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

பாட்ஷா, படையப்பாக்கு பிறகு எனக்குச் சவால் கொடுக்கும் வில்லன் கதாபாத்திரம் என்று ரஜினி கூறி இருந்தார். அது மிகச்சரி. நானா அதிகம் பேசாமலே மிரட்டி இருக்கிறார்.

குறிப்பா “6 அடி” குறித்து ரஜினியிடம் நக்கலாகப் பேசுவது எல்லாம் அசத்தல் ரகம்.

ரஜினி குடும்பத்தில் வருபவர்கள் சிலருக்கு அவ்வளவாக வேலையில்லை, இருவரை தவிர்த்து.

பெரிய குடும்பமாகக் காட்ட நினைத்து இருக்கலாம் ஆனால், அதற்கான தேவை இருப்பது போலத் தெரியவில்லை.

நாய்

போராட்டத்தில் கூட்டத்தில் புகுந்து குழப்பத்தை விளைவிப்பவர்கள் பற்றிக் காட்சிகள் வருகிறது. தற்காலச் சூழ்நிலைக்குப் படம் பொருந்துகிறது, படம் முன்பே எடுக்கப்பட்டு இருந்தாலும்.

காலா படத்தில் வரும் நாய் “மணி” க்கு அவ்வளவு பில்டப் கொடுத்தார்கள். அது இரண்டு காட்சியில் கூட இல்லை.

நாய் என்றால் எனக்கு பிடிக்கும் என்பதால் ரொம்ப எதிர்பார்த்து இருந்தேன். சப்புன்னு ஆகி விட்டது.

படத்தில் எது செட்டிங்ஸ் என்பதே தெரியவில்லை, சிறப்பான உருவாக்கம். சில காட்சிகள் வெட்டப்பட்டு இருக்கின்றன, அதனால் அவை என்ன ஆனது என்ற குழப்பம் உள்ளது.

ரஞ்சித் கபாலியில் ஏகப்பட்ட காட்சிகளைத் திணித்து இருந்தார், இதிலும் சில காட்சிகள் உள்ளது ஆனால், கபாலி போலப் பட்டவர்த்தனமாக எனக்குத் தெரியவில்லை.

தன் எண்ணங்களை ரஜினியை வைத்துக் கமர்சியலாகக் கூறி விட்டார். நிலம் ஒவ்வொருவருக்கும் முக்கியம் என்பதைக் காட்டியிருக்கிறார்கள்.

கற்றவை பற்றவை” என்பதன் அர்த்தம் இறுதியில் புரியும்.

படம் பார்ப்பவர்களுக்கு ரஞ்சித் சொல்ல வரும் கருத்துப் பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது தெரியவில்லை ஆனால், யோசிக்க வைக்கும்.

ஆக மொத்தத்தில் சில குறைகள் இருந்தாலும், படம் நன்றாக உள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

16 COMMENTS

  1. நேத்துல இருந்து காத்துட்டு இருக்கேன். 🙂

  2. வரும் ஞாயிற்றுக் கிழமை மனைவியை ஜுராசிக் வேர்ல்டு படத்துக்கு கூட்டிட்டு போறத சொல்லி இருக்கேன். அதனால இந்த முறை கலவை தியேட்டருக்கு சென்று பார்க்க முடியாது அண்ணா…தமிழ் ராக்கர்ஸில் பார்க்க போகிறேன்..ரஜினி அவர்களின் உண்மையான ரசிகரான உங்களிடம் பைரசியில் பார்ப்பதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் அண்ணா..எனக்கு வேறு வழி இல்லை….
    எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி கார்த்திக் சுப்புராஜ் படத்தை பார்த்துக்கொள்ளலாம் என்று மனைவி சொல்லிவிட்டார்கள்…
    …….
    காலா படத்திற்கு வரும் விமர்சனங்கள் அனைத்தும் பாசிட்டிவ் ஆக தான் வருகிறது….வாழ்த்துக்கள் அண்ணா…

  3. Karthickeyan,
    Please don’t do that. If you are unable to watch in theatre don’t watch at all..
    Otherwise plan for Saturday evening / next weekend..
    Please don’t go with piracy. Single Drop also poison.

  4. வேங்கை மவன் படத்தில் போராளி நிஜத்தில் பாசிசத்தின் கூஜாதூக்கி

    • அவர் பாசிசத்தின் கூஜா தூக்கி என்று சொல்லுகிறீர்களே, பாசிசம் என்றால் என்னவென்று தெரியுமா? . எல்லாவற்றையும் மதம் என்ற முகமூடி போட்டு பார்ப்பது தப்பு. ரஜினி பாஜகா பக்கம் சாய்வது போல தெரிவதால்தான் நீங்கள் அவரை அப்படி சொல்லுகிறிர்கள் என்பது வெள்ளிடை மலை. கொள்கையை விமர்சியுங்கள். அதுவும் உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை தவிர்த்து. அதைவிடுத்து பாஜாகா எதிர்ப்பு என்ற ரீதியில் விமர்சித்தால், உங்கள் நேரம்தான் விரயம். உங்கள் மதத்தவரின் இந்த தவறான் போக்கினால்தான் ,முஸ்லீம் அரசியல்வியாதிகளை , முஸ்லீம்களை தவிர்த்து யாரும் நம்புவதில்லை. ரஜினிக்கு தற்போதய எதிர்ப்பில் 90% ;போராடியவர்களை சமூக விரோதிகள் என்று சொன்னதால்தான். பாஜாகா ஆதரவு தோற்றத்திற்காக 10% ஆனவர்களே எதிர்க்கிறார்கள். கட்சி ஆரம்பித்து பாஜாகா ஆதரவு எடுத்தால் அப்புறம் நம்ம கிரி அண்ணாவே தடியெடுத்து ரசினியை அடி பின்னுவார்.

      • ஆம் நீங்கள் சொல்வது சரிதான்…ரஜினி அவர்கள் விரைவில் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்…தினம் தினம் ஒரு பேச்சாக பேசுவதால் அவர் மீது இருக்கும் நம்பிக்கை அவர் இழந்து கொண்டு வருகிறார்…காலா படத்திற்கு மக்கள் காட்டும் எதிர்ப்பே சாட்ச்சி..
        திரு ரஜினி அவர்களே தயவு செய்வது எங்கள் அண்ணாவை அப்படி ஒரு தர்ம சங்கடமான நிலைமைக்கு தள்ளிவிடாதீர்கள்…

      • //ரஜினிக்கு தற்போதய எதிர்ப்பில் 90% ;போராடியவர்களை சமூக விரோதிகள் என்று சொன்னதால்தான்.//

        போராட்டத்தில் தான் சமூகவிரோதிகள் கலந்துட்டாங்கனு சொன்னாரே தவிர…போராடின மக்கள் சமூக விரோதின்னு சொல்ல.

        நீங்க ரஜினி கொடுத்த பேட்டியை பாருங்க. மீம்ஸ் போடுறது வெச்சு பேசவேணாமே.

        இதை பற்றி ரஜினியிடம் சமீபத்தில், கேட்ட பொழுது கூட…இப்போ எல்லாம் தொழிநுட்பம் நிறைய வளந்தாச்சு, எதையும் மறைக்க முடியாது. எல்லா ஆதாரமும் யூடூப்பில் இருக்கு. அத பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டார்.

        மீடியா தேவை இல்லமா திரித்து விட்டுட்டாங்க.

        அதுஎல்லாம் இல்லை ரஜினி போராடின மக்களை தான் சமூக விரோதின்னு சொன்னார் நினச்சா…ஆதார வீடியோ பகிரவும். நான் என்னுடைய நிலைப்பாட்டை மாற்றி கொள்ளகிறேன்.

        —–

        //கட்சி ஆரம்பித்து பாஜாகா ஆதரவு எடுத்தால் அப்புறம் நம்ம கிரி அண்ணாவே தடியெடுத்து ரசினியை அடி பின்னுவார்.//
        கண்மூடித்தனமான ரசிகர்கள் இல்லை நாங்கள். ரஜினி தவறு செய்தால், அதை ஒத்துக்கொள்ள கூடிய நேர்மை எங்களிடம் உண்டு. ரஜினியின் பலமே offscreen ரசிகர்கள் தான்.
        பா.ஜா.க – விற்கு ஆதரவு தந்தால், நிறைய ரசிகர்கள் / காவலர்கள் ஒதுங்கி விடுவார்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

        • நீங்கள் சொல்லுவது சரி. போராட்டத்தில் சமூகவிரோதிகள் கலந்திட்டாங்கள்னுதான் சொன்னார். ஆனால் எப்படி உங்களுக்கு தெரியும்னு கேட்டதற்கு ” எனக்கு தெரியும்,எனக்கு தெரியும்” னு சொன்ன விமான நிலைய பேட்டியைத்தான் நான் பார்த்தேன். மீம்சை மட்டும் பார்த்து பேச என‌க்கு அறிவு இல்லாமல் இல்லை. ஆன‌ந்தவிகடனில் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகளை வாசியுங்கள் பின்னர் பேசுங்கள். போராட்டத்தில் யாரு கல‌ந்துகிட்ட்டாங்கள் என்பது தெரியும். போராட்டத்தில் குறிப்பிட்ட அமைப்பு சார்ந்தவர்களை சுட்டு கொன்றதில் இருந்தே தெரியும் இது ஏற்கனெவே திட்டமிடப்பட்டது என்று. அதுவும் அடுத்த நாள் ஒரு குறிப்பிட்ட நபரை சுட்டுகொன்றதில் இருந்து தெரியும். அந்த இடத்தில் ரஜினி அப்படி பேசியது எல்லா மக்களையும் சேர்த்து பேசியது போன்ற தொனியைத்தான் ஏற்படுத்தும். அதுவும் அவமானானப்பட்டதில் ஓவராகத்தான் விமான நிலையத்தில் ரஜினி நடந்து கொண்டார். இவ்வளவு பேசுகிறீர்களே, அப்படியானல் ரஜினி ஏன், கலக்ட்டர் வந்து மனுவை வாங்கவில்லை என்று பேசவில்லை. ஏன் கால்களுக்கு கீழே சுடப்படவில்லை என்று கேள்வி கேட்கவில்லை என்று கேட்டீர்களா. இன்று வரை யார் சுடச்சொன்னதென்றே தெரியவில்லை. அப்புறம் எப்படி சமூகவிரோதிகள் கலந்துகிட்டாங்கள் என்பது ரஜினிக்கு தெரியும். அப்படியென்றால் அன்று சுட்டு கொல்லப்பட்டவர்கள் எல்லாம் சமூகவிரோதிகளா? அவர் அன்று பேசியது எல்லா மக்களையும் சேர்த்தே பேசியது போன்ற தொனியையே ஏற்படுத்தியதே உண்மை . எனக்கு தெரியும் என்று சொன்ன ரஜினி யார் சொல்லி சுட்டார்கள் என்பதையும் தன்னிடமுள்ள தொழில் நுட்பத்தால் அறியலாமே. அப்படியே சுடப்பட்ட இடத்திலிருந்த சிசிரிவி கமராக்கள் ஏன் செயல்படவில்லை என்பதையும் கண்டறிந்து சொல்லலாமே.
          ரஜினியின் பலமே off screen ரசிகர்கள் என்று சொல்லுகிறீர்கள். அப்படி அவர் என்ன ரசிகர்களுக்கு செய்தார். என்னை பொறுத்தவரையில் நீங்கள் எல்லாம் சின்னவயதில் பார்த்து வியந்தவர்கள் என்பதற்காக என்று வரைக்கும் முட்டுக்கொடுக்கிறீர்கள். நான் வாசித்தவரை, கேட்டறிந்தவரை முன்னர் விஜயக்காந்தும் இப்பாது அஜித்தும் off screen நடவடிக்கைகளுக்காக ரசிக்கப்படுகிறார்கள். நீங்கள் சொன்னதைத்தான கிரி அண்ணாவும் சொன்னார். ரஜினி என்ன செய்தார் என்று திருப்பி கேட்டதற்கு, இது வரைக்கும் அவர் எதுவும் சொல்லவில்லை. நல்லா செய்திருக்கலாம். அதுவும் உங்களை மாதிரி தீவிர ரசிகர்களுக்கு செய்திருக்கலாம். ஆனால் எனக்கு தெரியவில்லை. ரஜினியின் வளக்கமான அரசியல் ஸ்டண்ட்களில் ஒன்று சரியா வேலை செய்யவைல்லை. அவ்வளவுதான். ரஜினி அரசியலுக்கு வரப்போவதுமில்லை. உங்களுக்கு அவருக்கு வாக்களிக்கும் சங்கடத்தை தரப்போவதுமில்லை. காலவில் அவரின் காட்சிகளில் பார்த்தே உணர்ந்திருப்பீர்கள். அடுத்து வரும் தேர்தல்களில் கூடுதலாக பிஜெபி க்காக குரல் கொடுப்பதோடு அடங்கிவிடுவார். அரசியல் ஈடுபடுவதற்கான உடல் நலதோடும், மன நலத்தோடும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அரசியல் ஒன்றும் ரஞ்சித்தின் படமில்லை. எம்ஜியார் உடன் சினிமா கவர்ச்சி அர‌சியலில் முடிவுக்கு வந்துவிட்டது. ஜெயலலிதா வந்தது கூட அவரின் தனிப்பட்ட திறமையால்தான். இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.

  5. First half ?
    Second half first first 30 min ?
    Then ?
    Climax?

    Karikalan ❤❤❤❤❤

    Ranjith ❤❤❤❤
    Music ❤❤❤❤
    Art ❤❤❤❤

    selvam (son of kala) ❤❤❤
    puyal (Lenin girl friend) ❤❤❤
    Hari Dhadha ❤❤❤
    Valliyappa ❤❤❤

    Selvi (wife of kala) ❤❤
    Serena ❤
    Lenin (son of Kala) ❤

    Overall ?

  6. கிரி, காலா படம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தமையால் கண்டிப்பாக மகிழ்ச்சியாக இருப்பிங்க என எண்ணுகிறேன்.. தற்போது இருக்கும் கடுமையான பணி சூழலில் படத்தை பார்க்க வாய்ப்பு குறைவு.. நேரம் கிடைக்கும் போது பார்க்க வேண்டும்.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  7. @swamirajan 🙂

    @கார்த்திக் யோவ் உனக்கு திருமணம் நடைபெற்று விட்டதா? சொல்லவே இல்லை.

    மிக்க மகிழ்ச்சி 🙂

    @Alim Mohamed Salih பாஸ் உங்களுக்கு என்ன பிரச்சனை?

  8. @ப்ரியா ஊடகங்கள் ரஜினிக்கு எதிராக உள்ளன. எனவே, ரஜினி கூறியதை அப்படியே மாற்றி கூறி மக்கள் மனதில் பதிய வைக்கிறார்கள்.

    ரஜினி ஒரு போதும் பொதுமக்களை சமூகவிரோதிகள் என்று கூறவில்லை, அப்படி கூற ரஜினி ஒன்றும் முட்டாளும் அல்ல.

    நீ சென்னையில் இல்லாததால் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் என்ன நடந்தது என்று அறிந்து இருக்க வாய்ப்பில்லை.

    எங்கள் வீடு மெரினா கடற்கரை அருகே தான் உள்ளது. எனவே, தினமும் சென்று வந்தேன்.

    மாணவர்கள் விவேகானந்தர் இல்லம் அருகே மட்டுமே போராட்டம் நடத்தினார்கள். மீதி அனைத்து இடங்களிலும் மற்ற அமைப்பினர் தான் இருந்தனர்.

    இவர்களுக்கு பொதுமக்களிடையியே ஆதரவு இல்லை. எனவே, இவர்கள் பேச்சுக்கு எப்போதுமே தமிழகத்தில் கூட்டம் சேராது ஆனால், இங்கே இருந்த கூட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தங்கள் வன்முறை கருத்துகளை மக்களிடையே பரப்பினார்கள்.

    இது மிக மோசமான செயல். மாணவர்கள் கூட்டத்தை இவர்கள் தவறாக தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி கொண்டார்கள்.

    இவர்கள் எல்லாம் வந்த பிறகே போராட்டம் இறுதியில் திசை மாறியது.

    மாணவர்கள் மட்டுமே இருந்து இருந்தால், இப்போராட்டம் இறுதியில் எந்த வன்முறையும் இல்லாமல் அமைதியாக முடிந்து வரலாற்று சிறப்பு பெற்று இருக்கும். இப்பவும் வரலாற்று சிறப்பு போராட்டம் தான் என்றாலும், இறுதியில் கரை ஏற்பட்டது.

    காலா படத்தில் சமூகவிரோதிகள் யார் என்பதை சிறப்பாக காட்டி இருப்பார்கள். திரையரங்கில் சென்று பார்க்கவில்லை என்றாலும், இணையத்திலாவது சென்று பார்.

    இது போன்ற போராட்டங்களில் சமூக விரோதிகள் கலந்து விடுவார்கள் என்பதை தெரிந்து கொள்ள நாம் CBI யில் இருக்க வேண்டிய அவசியமில்லை, common sense இருந்தாலே போதும்.

    நீ ஒன்றை கவனித்தால் புரிந்து கொள்ளலாம், தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே பொதுமக்கள் ஆனால், தூண்டி விட்டவர்கள் அனைவரும் எஸ்கேப் ஆகி விட்டார்கள்.

    சமூகத்தளங்களில் தற்போது மக்களின் உணர்ச்சிகளை தூண்டும் விதமாக எழுதுபவர்கள் அதிகமாகி வருகிறார்கள். இதை உண்மை என்று நம்பி அதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

    இது மிகவும் கவலையளிக்கிறது.

    வெளிநாடுகளில் அமர்ந்து கொண்டு பலர் அப்படி செய்யலாம் இப்படி செய்யலாம் என்று உசுப்பேத்தி விடுகிறார்கள். பாதிக்கப்படுவது இங்குள்ள இளைஞர்களே!

    இவ்வாறு கூறுவது பலருக்கு தற்போது முட்டாள்தனமாக தோன்றலாம், அதை உணரும் போது விஷயம் கை மீறி போய் இருக்கும்.

  9. @ஜீவதர்ஷன் எப்படி இருக்கீங்க? 🙂 எனக்கு நானா நடிப்பு ரொம்ப பிடித்தது. தலைவரை சில காட்சிகளில் ஓரங்கட்டி விட்டார்.

    @யாசின் ஆமாம். ரொம்ப பிடித்தது 🙂

  10. போராட்டம் போராட்டம் என்றே இருந்தால் நாடு சுடுகாடு ஆய்டும் என்று சொன்னார். அதற்கு என்ன சொல்ல போறீங்க? ரஜினி முகத்திரை கிழிந்து ரொம்ப நாள் ஆச்சு. பயங்கரமா முட்டு கொடுக்காதீங்க கிரி. அவர் இவளவு பேசியும் நீங்க ரஜினி க்கு ஜால்ரா அடிக்கிறதா பாத அசிங்கமாக இருக்கிறது கிரி

  11. தூத்துக்குடி மக்கள் அவர்கள் வாழ்வாதாரத்திற்காக போராடுவதை கொச்சை படுத்தும் நோக்கில் பேசியதை கண்டித்து ஒரு வார்த்தை போட துப்பு இல்லை முட்டு கொடுக்க வந்துடீங்க து . கேவலமான வார்த்தைகளை பேச வேண்டாமென்று பார்க்கிறேன்

  12. @ராகுல் நான் யாருக்கும் முட்டுக்கொடுக்க வேண்டிய தேவையில்லை, ஜால்ராவும் அடிக்க வேண்டிய நிர்பந்தமில்லை.

    எனக்கு சரி என்று தோன்றுவதை எழுதுகிறேன். உங்களுடைய கருத்து வேறாக இருந்தால், மற்றவரும் அதே கருத்திலேயே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

    நீங்க நினைப்பதை எழுத நான் இங்கு வரவில்லை, எனக்கு சரி தவறு என்று தோன்றுவதை எழுதவே இங்கு உள்ளேன்.

    நீங்க எதிர்பார்ப்பதை எழுத இணையத்தில் ஏராளம் பேர் உள்ளனர். அவர்களை படித்து இன்புறுங்கள்.

    கேவலமான வார்த்தைகளை பேச வேண்டாம் என்று கூறிவிட்டு அதை ஏற்கனவே செய்து விட்டீர்கள்.

    முதலில் நாகரீகமாக பேசுவது விவாதிப்பது எப்படி என்று கற்றுக்கொண்டு பின் மற்றவரை விமர்சிக்க பழகுங்கள்.

    நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here