கர்ம வினையும் இந்து மதமும்

21
கர்ம வினையும் இந்து மதமும்

குறிப்பு 1 : கர்ம வினையும் இந்து மதமும் கட்டுரையை எந்த மதத்தினரும் படிக்கலாம். மதம் வேறு என்றாலும் கூற வரும் கருத்து அனைவருக்கும் உகந்ததே.

குறிப்பு 2 : நாத்திகர்களுக்கான கட்டுரை அல்ல. தொடர்வது அவரவர் விருப்பம்.

மதத்தலைவர் இல்லாத மதம்

இந்து மதம் பழமையான மதம் மட்டுமல்ல யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாதது.

இவர் தான் தலைவர், குரு, கடவுள், உருவாக்கியவர் என்று எந்த அடையாளமும் இல்லாதது. யாரும் யாரையும் கட்டுப்படுத்த இந்து மதத்தில் முடியாது.

நிர்பந்தம் இல்லை

அதிகாரத்தில் இருப்பவர்கள் சிலர் உரக்கக் குரல் கொடுத்துக் கொண்டு இருந்தாலும், அவர்கள் கூறுவதை யாரும் காது கொடுத்து கேட்பதில்லை, கேட்க வேண்டும் என்ற அவசியமில்லை காரணம் இங்கு யாரும் யாருக்கும் கட்டளை இட முடியாது.

இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நிர்பந்திக்க முடியாது. இந்து மதத்தில் அவரவர் நிர்ணயிப்பதே அவரவர்க்கு கட்டுப்பாடுகள். Image Credit

ஒரு இடத்தில் கட்டுப்பாடு இருந்தால், அதே போல இன்னொரு இடத்தை உருவாக்கி அந்தக் கட்டுப்பாட்டை மீறலாம் யாரும் வந்து ஏன் செய்கிறாய் என்று கேட்க முடியாது, அது அநாகரீகமாக இல்லாத வரை.

புறக்கணிக்கலாம், எதிர்ப்புக் குரல் எழலாம் ஆனால், எதையும் தடுக்க அதிகாரமில்லை.

சொல்லப்போனால் உலகில் உள்ள மதங்கள் அனைத்துமே நல்ல விசயங்களையே போதிக்கிறது நாம் தான் பிரச்சனையான விசயங்களை / கட்டுப்பாடுகளை புகுத்தி அனைவருக்கும் சிக்கலை ஏற்படுத்துகிறோம்.

மறைமுகக் காரணங்கள்

பண்டைய காலம் தொட்டே இந்து மதத்தில் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு மறைமுகக் காரணம் இருக்கும்.

நேரடியாக அதைப் பார்க்கும் போது மூட நம்பிக்கை போல தோன்றினாலும் அதன் உண்மையான பின்னணி காரணம் ஏதாவது ஒரு அறிவியல் உண்மையைக் கொண்டு இருக்கும்.

இது தெரியாத வரை நமக்கு அது மூட நம்பிக்கையாகத் தோன்றும். ஒரு சில நல்ல விசயங்களை செய்யக் கூறினால் செய்ய மாட்டார்கள்.

ஆனால், அதே அதற்கு ஏதாவது கட்டுக்கதையைக் கூறினால், அதற்காக பயந்து கொண்டு அதைச் செய்வார்கள்.

புதிதாக பார்க்கிறவர்களுக்கு அது மூட நம்பிக்கையாக இருக்கும். ஆராய்ந்து பார்த்தால், அதில் உள்ள அறிவியல் உண்மை புலப்படும்.

தற்போதைய விஞ்ஞானிகள் இத்தனை தொழில்நுட்பத்தை வைத்து கண்டறியும் பல விசயங்களை நம் முன்னோர்கள் முன்பே கண்டறிந்து இருக்கிறார்கள்.

Flexibility

இந்து மதத்திற்கு என்று ஒரு பெரிய சிறப்பு உள்ளது. அது தான் Flexibility. காலத்துக்குத் தகுந்த மாதிரி தன்னை மாற்றிக்கொண்டே இருக்கும்.

எந்த புதிய விசயங்களையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டது. தண்ணீர் போல இடத்திற்கு தகுந்த மாதிரி தன்னை மாற்றிக்கொள்ளும்.

எடுத்துக்காட்டுக்கு முற்காலத்தில் இருந்த பிற்போக்குத் தனங்கள் தற்போது இல்லை அல்லது குறைந்து விட்டது.

இதைத் தான் செய்து ஆக வேண்டும் என்று கட்டுப்படுத்த யாருமே இல்லாதது தான் இந்த Flexibility க்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.

இந்து மதத்தை சார்ந்தவர்கள் பெரும்பான்மையோர் தீவிர மதப் பற்றாளர்கள் கிடையாது.

இதன் காரணமாகத் தான், இந்து மதப் பற்றாளர்கள் குரல் கொடுக்கும் போது பெரிய அளவில் மக்களிடம் இருந்து ஆதரவு கிடைப்பதில்லை.

தற்போதைய சூழ்நிலையில் இது கொஞ்சம் மாற்றம் கண்டு வருவதாக அறிகிறேன்.

வாழ்வியல் முறை

இந்து மதம் என்பது மதம் என்பதையும் தாண்டி ஒரு வாழ்வியலாகத் தான் கருதப்படுகிறது.

அதாவது மக்கள் கோவிலுக்கு வருகிறார்கள் என்றால் அதற்கு பூ, தேங்காய், மாலை, நெய், பால், சந்தனம் etc என்று நிறைய வாங்குகிறார்கள்.

இதனால் இது தொடர்புடைய வியாபாரம் நடைபெறுகிறது. இதனால் நல்லதோ கெட்டதோ பலரும் இதனால் பயன் பெறுகிறார்கள்.

இது சம்பந்தப்பட்ட விவசாயத்தில் உள்ளவர்கள் பலன் பெறுகிறார்கள்.

தற்போது இது கமர்சியலாகி விட்டாலும், முன்பு இது போன்ற விசயங்களை மனதில் வைத்தே இவை உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்.

பலருக்கு இந்தக் காரணிகள் தான் வாழ்க்கை கொடுத்துக் கொண்டு இருக்கின்றன.

பண்டிகைகள், திருவிழா என்று பல வருவது அனைத்து மக்களும் கூடவும், சந்தோசத்தை பகிரவும், குடும்பமாக இணையவும், இதன் மூலம் பலரின் வியாபாரம் விரிவடையவும் என்று செல்கிறது.

இது மதம் என்ற அளவிலும் பார்க்கலாம் அல்லது அதன் மூலம் நடக்கும் குடும்பக்களுக்கிடையேயான உறவுகளை பலப்படுத்தும் ஒரு காரணியாகவும் பார்க்கலாம்.

பார்ப்பவரின் எண்ணங்களைப் பொறுத்தது.

கர்மவினை

தற்போது தான் தலைப்பிற்கே வருகிறேன்.

கர்மவினை பற்றிக் கூறும் போது இந்து மதம் பற்றிய சிறு முன்னுரை இருந்தால், நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில் கூறியது தான் மேலே இருப்பவை.

சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால், இந்து மதம் காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் “FLEXI” மதம்.

இந்து மதத்தை (எடுத்துக்காட்டுக்கு) இரு வகையாகப் பிரிக்கலாம். அதாவது காலங்கள் மாறினாலும் அடிப்படைத் தத்துவங்கள், அறநெறிகள், நம்பிக்கைகள் போன்ற மாறாத விசயங்கள்.

இன்னொரு வகை “FLEXI மதம்” அதாவது காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டே இருப்பது.

இந்த முதல் பிரிவில் தான் “கர்மவினை” வருகிறது.

இதிலும் யாரோ தனிப்பட்ட ஒருவர் கூறியதை அனைவரும் பின்பற்றுவதில்லை, பல அறிஞர்கள் தங்கள் அனுபவத்தின் வாயிலாகக் கூறியதை நம் முன்னோர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

இது தான் என்று யாரும் அறுதியிட்டுக் கூறவில்லை என்றாலும், இது தான் நமது இந்து மதத்தின் நம்பிக்கை என்றாகி விட்டது.

பல தத்துவங்கள், அறிஞர்களின் தொகுப்பே இந்து மதம்.

கர்மவினை பற்றி பலர் கூறி இருந்தாலும் “விவேகானந்தர்” கூறியது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது என்று கூறலாம்.

விடை தெரியாத கேள்விகள்

கர்மவினை என்பது இந்து மதத்தில் மட்டுமே உள்ளது. பலரின் தெரியாத / புரியாத கேள்விகளுக்கு இது விடை கூறுகிறது.

ஆனால், கூறப்படும் விடையை ஏற்றுக்கொள்ள சிரமமாக இருக்கிறது. இதற்குக் காரணம் நம்மால் அதை ஜீரணிக்க முடியாதது தான்.

முன் குறிப்பிலேயே கூறி இருந்தாலும், திரும்பவும் ஒருமுறை நினைவு படுத்துகிறேன்.

பின்வருபவை கர்மவினை / இந்து மதக் கோட்பாடுகள் / ஆத்மா / மறுபிறவி / பாவ புண்ணியம் போன்ற ஏதாவது ஒன்றில் நம்பிக்கை உள்ளவர்களுக்குத் தான்.

எனக்கும் பல விசயங்களுக்கு பதில் தெரியாது ஆனால், அதற்கு எங்கோ பதில் இருக்கும் என்பதை முழுமையாக நம்புகிறேன்.

ஏன்? எதற்கு? எதனால் நடக்கிறது?

இந்து மதத்தில் தான் “ஏன்? எதற்கு? எதனால் நடக்கிறது?” என்பதற்கு பதில் உள்ளது.

அந்த பதில் தான் “கர்மவினை”. எந்த மதத்தினராக இருந்தாலும், எல்லோருக்கும் சில பொதுவான கேள்விகள் இருக்கும்.

நல்லவனாக இருக்கிறான் ஆனால், ஏன் அவன் கஷ்டப்படுகிறான்? அவர் எந்த தவறும் செய்யவில்லையே…! பின் ஏன் அவருக்கு இவ்வளவு சிரமம்.

நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்தது இல்லையே ஏன் எனக்கு இவ்வளவு துன்பம்?

அவன் அவ்வளவு அநியாயம் பண்ணுறான் ஆனால், சுகமாக இருக்கிறானே! எப்படி? ஊரையே அடித்து உலையில் போட்டு இருக்கிறான் ஆனால், நன்றாக உள்ளானே!

இந்தக் கேள்விகள் இல்லாத மனிதர் இருக்க முடியாது.

ஆத்மா

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் இந்து மதம் தரும் பதில் தான் “கர்மவினை / ஆத்மா / மறுபிறவி / பாவ புண்ணியம்”. இது பற்றி தற்போது பார்ப்போம்.

இந்து மத தர்மப் படி ஒருவன் நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் அதற்குண்டான பலனை அவன் பெற்றே ஆக வேண்டும் என்பது நியதி.

இந்தப் பிறவியில் இல்லை என்றாலும் அடுத்த / அதற்கடுத்த பிறவியில் அதை அவன் அடைந்தே தீர வேண்டும்.

உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிப்பதை காண வாய்ப்புக் கிடைக்கும்.

தற்போது இங்கே மறுபிறவி என்பது வருகிறது. இந்த மறுபிறவி என்பது எத்தனை இருக்கும் என்பது பற்றி எனக்குத் தெரியாது / புரிந்து கொள்ள அனுபவமில்லை.

ஒருவர் ஒரு பிறவியில் இறந்தால் அழிவது அவரது உடல் மட்டுமே, ஆத்மா அல்ல. பாவ புண்ணியங்களைக் கொண்ட அந்த ஆத்மா தன்னுடைய கர்மவினைகளை (நல்லது கெட்டதை) அனுபவிக்க சரியான உடல் கிடைத்தால் அதில் புகுந்து விடும்.

நான் கூறுவது ஆத்மா, ஆவி அல்ல 🙂 .

எடுத்துக்காட்டுக்கு ஆத்மா அவரின் தலைமுறையில் யாருடைய பிறப்பு தன் கர்ம வினைகளை அனுபவிக்க பொருத்தமாக உள்ளதோ அவர் உடலில் இணைந்து விடும்.

எனக்கு இதில், ஆத்மா அவரின் தலைமுறை மக்களிடையே மட்டுமே போகுமா அல்லது வேறு சம்பந்தமில்லாத ஒருவரின் உடலுக்கும் போகுமா என்பது பற்றி எனக்கு கேள்விகள் / சந்தேகம் உள்ளது.

நடிகர் திலகம் அவர்கள் நடித்த “கர்ணன்” படம் பார்த்து இருப்பீர்கள்.

அதில் கர்ணனை அனைவரும் தாக்கியும் அவர் சாக மாட்டார் காரணம், அவர் செய்த தர்மங்கள் / புண்ணியம்.

அவரை அழிக்க வேண்டும் என்றால், அவரிடம் உள்ள புண்ணியம் அனைத்தும் தீர வேண்டும்.

இதற்காகத் தான் கிருஷ்ணர் அந்தணர் வேடம் பூண்டு கர்ணனிடம் இருக்கும் புண்ணியத்தை யாசகம் கேட்பார்.

தன் புண்ணியங்களை கர்ணன் தாரை வார்த்துக்கொடுத்ததும் அடுத்த தாக்குதலில் இறந்து விடுவார்.

இந்த விசயம் ஓரளவு உங்களுக்கு கர்மவினை / பாவ புண்ணியம் பற்றி புரிந்து கொள்ள உதவும் என்று நினைக்கிறேன்.

தற்போது நீங்கள் சிரமம் அனுபவித்துக்கொண்டு இருந்தால், அது போன பிறவியின் வினைப்பயனாகத் தான் இருக்க வேண்டும்.

இவ்வாறு கூறுவதை ஏற்றுக் கொள்வது என்பது சிரமமான ஒன்று தான். இதை Just like that மறுத்து பேசி விட முடியாது.

இதற்காக நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும். பழைய பின்னனிகளை தேடிப் பார்க்க வேண்டும்.

நம் முன்னோர்கள் செய்த தவறுகள் என்ன என்று தேடிப் பார்த்தால் ஒருவேளை உங்களுக்கு இதற்கு விடை கிடைக்கலாம்.

வட்டி

எடுத்துக்காட்டுக்கு, என்  முன்னோர்கள் வட்டிக்கு மக்களிடம் பணத்தைப் பெற்று அதிகளவில் நிலங்களை வாங்கிப் போட்டார்கள்.

பணம் தேவைப் படுவதால் தானே மக்கள் வருகிறார்கள் நான் ஒன்றும் ஏமாற்றவில்லையே!” என்று நினைத்தால்…! அது தவறு.

நம்மிடையே முடியாமல் தான் வருகிறார்கள் ஆனால், நாம் அதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அதிக  வட்டி வசூலித்தால், அதுவும் தவறே.

இதன் காரணமாக அப்பா கடன் பிரச்சனையால் வட்டி கட்டியே எங்கள் நிலம் அனைத்தையும் இழக்க வேண்டி வந்தது. அதாவது “வட்டியில் சம்பாதித்த பணம் வட்டி கட்டியே போகும்” என்ற முன்னோர் வாக்கிற்கேற்ப.

கந்து வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி என்று வாங்கும் நபர்கள், தற்போது புண்ணியத்தின் பலனால் பெரும் பணக்காரராக / சுகமாக இருக்கலாம்.

ஆனால், அவர்களின் இறுதிக் காலத்தில் அல்லது அவரது அடுத்த தலைமுறையை கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், பெரும் துன்பத்தில் இருப்பார்கள்.

கிராமங்களிலேயே உங்கள் தாத்தா பாட்டி அம்மா அப்பாவிடம் கேட்டுப் பார்த்தீர்கள் என்றால் பல கதைகளைக் கூறுவார்கள்.

பலரின் சாபம், வயிறெரிந்து கொடுக்கப்படும் பணம் அவர்களை நிம்மதியாக வாழ விடாது.

சரிங்க! நான் போன பிறவியில் நிறைய பாவம் செய்து விட்டேன் போல அதனால் சிரமப்படுகிறேன் என்று வைத்துக்குங்க… இந்தப் பிறவியில் நல்லது செய்கிறேன் எனவே, இந்த வினைப்பயனில் இருந்து தப்பித்துக்கொள்ளலாமா! என்று கேட்டால்…

முடியாது. நீங்கள் செய்த பாவத்தின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.

அதில் இருந்து நீங்கள் எக்காலத்திலும், எத்தனை பிறவி எடுத்தாலும் தப்பிக்கவே முடியாது ஆனால், இந்த தாக்கத்தின் அளவைக் குறைக்க முடியும்.

எப்படி?

கர்மவினை நீங்கள் செய்த தவறுக்கு எப்படி தண்டனை / சிரமம் கொடுக்கிறதோ அதே போல நீங்கள் செய்யும் நல்லதுக்கும் உங்களுக்கு அது நன்மை செய்தே ஆக வேண்டும்.

இது நியதி. இதில் இருந்து கர்ம வினை கூட தப்பிக்க முடியாது.

அதாவது “வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை “மெய்வருத்தக் கூலி தரும்” என்பதும். அதே விதி இங்கேயும் பின்பற்றப் படுகிறது.

கடந்த பிறவியில் நிறைய பாவம் செய்ததால், இந்தப் பிறவியில் பல சோதனைகளை சந்திக்க வேண்டும் அதில் இருந்து தப்பிக்கவே முடியாது.

ஆனால், நல்ல விசயங்கள் பல செய்வதன் மூலம் இதன் கடுமையான தாக்கத்தில் இருந்து கொஞ்சம் இளைபாறுதல் பெறலாம்.

புரியும் படி கூறுவதென்றால், பாலைவனத்தில் நடக்கும் போது கொஞ்சம் ஜில்லுனு ஜுஸ் கிடைத்த மாதிரி ஆனால், வெயிலில் தான் நிற்க முடியும், தவிர்க்க முடியாது.

எப்படி?

செய்த நல்ல விசயத்திற்கான பலனை கர்மா கொடுத்தே ஆக வேண்டும்.

நல்ல விசயம் என்பது ஒருவருக்கு உதவி செய்வது மட்டுமே அல்ல.

நேர்மை, ஒருவரின் மிக நெருக்கடியான நேரத்தில் செய்யப்படும் சிறு உதவி, மற்றவர்களை வாய்ப்புக் கிடைத்தும் ஏமாற்றாமை, அடுத்தவரின் துயரத்தில் பங்கெடுப்பது etc.

ஆகவே, இதற்கான நற்பலனை கர்மா அவ்வப்போது கொடுக்கும் ஆனால், உங்களை சிரமப்படுத்தியே கொடுக்கும்.

எப்படி?

ஒரு முக்கியப் பிரச்சனைக்காக பெரும் பணம் தேவைப்படுகிறது ஆனால், கிடைக்காது. ஏன்? வினைப்பயன். எனவே பணத்தை திரட்ட படாதபாடு படுவீர்கள்.

யாரிடம் எல்லாமோ கேட்பீர்கள் ஆனால், கதறினாலும் கிடைக்காது.

கடைசி நேரத்தில் எங்கு இருந்தோ உங்களுக்கு உதவி வரும்.

எப்படி?

அது இந்தப் பிறவியில் செய்த நல்ல செயலுக்கான பலன். இவ்வளவு கஷ்டப்பட்டது சென்ற பிறவிக்கான வினைப் பயன்.

அதாவது கர்மாவால், நீங்கள் நல்லது பல செய்து இருந்தாலும் உங்களுக்கு சிரமம் இல்லாமல் ஒரு விசயத்தை நடத்திக்கொடுத்து விட முடியாது.

ஆனால், சிரமப்படுத்தி இறுதியில் உதவி செய்து விடும், உங்களின் மிச்சம் இருக்கும் புண்ணியத்திற்கு ஏற்ப.

என் வாழ்க்கையில் இது போல நிறைய நேர்ந்து இருக்கிறது. முதலில் எனக்குப் புரியவில்லை. பின்னர் ரொம்ப ஆராய்ந்து / அப்பாவிடம் விவாதம் செய்து காரணத்தைக் கண்டு பிடிப்பேன்.

இது எதனால் எனக்கு நடந்தது? ஏன் இன்னும் நடக்கிறது? நாம் இதில் இருந்து தெரிந்து கொண்டது என்ன? என்பன போன்றவை.

எங்கிருந்தோ கிடைக்கும் உதவி

வாழ்க்கையில் ரொம்பக் கஷ்டப்பட்டு இருக்கிறேன் ஆனால், ஓரளவு நேர்மையாகவே நடந்து கொண்டுள்ளேன்.

இதனால் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், இனி என்னால் தாக்குப் பிடிக்க முடியாது என்ற இக்கட்டான சூழ்நிலையில், எனக்கு எங்கிருந்தாவது ஒரு உதவி வரும்.

உதவி கிடைக்கும் என்று கற்பனையில் கூட நினைத்து இருக்க மாட்டேன் ஆனால், கிடைக்கும்.

அது தான் கர்மா!

இதன் காரணமாகவே எனக்கு எந்தக் கஷ்டம் வந்தாலும் கவலைப்பட மாட்டேன் (மன அழுத்தம் இருக்கும் அதை தவிர்க்க முடியாது).

ஏனென்றால், அனைத்தும் முயற்சி செய்து இனி என்னால் எதுவுமே செய்ய முடியாது என்ற இக்கட்டான நிலை வரும் போது எனக்கு எப்படியும் உதவி கிடைக்கும்.

இது பொய்யில்லை 100% உண்மை.

இது உங்கள் வாழ்க்கையிலும் நிச்சயம் நடந்து இருக்கும் (கடைசி நேர உதவி) ஆனால், பிரச்சனை முடிந்ததால், ஏன் என்று நீங்கள் யோசித்து இருக்க மாட்டீர்கள்.

தற்போது, இது போல நடந்தது எப்படி என்று யோசித்துப் பாருங்கள், ஒருவேளை உங்களுக்கு அதற்கான விடை கிடைக்கலாம்.

ஒருவேளை யாருக்காவது நீங்கள் இக்கட்டான சூழ்நிலையில் உதவி புரிந்து மறந்து இருக்கலாம்.

நீங்கள் மறக்கலாம் ஆனால், கர்மா மறக்காது. உதவியை மட்டுமல்ல நீங்கள் செய்த தவறுகளையும் 🙂 .

சந்தேகங்கள் / கோபங்கள்

எவ்வளவு கூறினாலும் அனைவருக்கும் இருக்கும் சந்தேகங்கள் / கோபங்கள் எனக்கும் இருக்கிறது.

சிறு குழந்தை சிரமப்படுகிறதே, அரசியல்வாதிகள் அநியாயம் செய்கிறார்களே, பெண்கள் வன்புணர்விற்கு ஆளாகிறார்களே, அப்பாவிகள் கொலை செய்யப்படுகிறார்களே, நல்லவர்கள் ஏமாற்றப்படுகிறார்களே, நல்லதுக்கே காலம் இல்லாமல் இருக்கிறது இதற்கெல்லாம் என்ன சொல்லப்போகிறீர்கள்?

என்று உங்களின் அதே கோபம் கலந்த விடை தெரியாத கேள்விகள் எனக்கும் உள்ளது.

தற்போது அநியாயம் செய்து கொண்டு இருந்தும் சுகமாக இருப்பவர்கள் கடந்த பிறவியில் நிறைய நல்லது செய்து இருக்கலாம்.

அந்த புண்ணியத்தின் பலனைத்தான் தற்போது அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இவர்களின் புண்ணியம் தீர்ந்து போனால் அடுத்த “நொடியே” கடும் சிரமத்தில் வீழ்வார்கள்.

இதை நாம் கண்ணால் காணவும் வாய்ப்பு இருக்கிறது, இல்லாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது ஆனால், வினைப்பயனை அனுபவிக்காமல் தவறு செய்தவர்கள் தப்பிக்கவே முடியாது.

காரணமில்லாமல் காரியமில்லை

காரணமில்லாமல் காரியமில்லை. நமக்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

இவ்வாறு கூறுவதை கேட்கும் போது ஜீரணிக்க சிரமமாக இருக்கிறது ஆனால், இது தான் கர்மவினைப் படி உண்மை.

நமக்குத் தான் அதற்கான விளக்கம் கிடைப்பதில்லை. அந்த விளக்கம் தான் கர்மவினை ஆனால், இதை ஏற்றுக்கொள்ள மனது மறுக்கிறது.

முன்னரே கூறியபடி சில விசயங்களுக்கு நமக்கு பதில் கிடைக்கிறது. சிலவற்றிக்கு பதில் கிடைக்கவில்லை என்பதாலே நாம் கோபம் அடைகிறோம்.

இது போன்ற சிரமமான கேள்விகளுக்கு ஞாநிகளுக்கு தான் பதில் தெரியும். நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு அல்ல.

நான் கூறுவது நிஜ ஞானிகள், சாதுக்கள் பற்றி, கார்பரேட் சாமியார்கள் அல்ல.

அனுபவங்கள்

நான் கர்மவினை பற்றிக் கூறிய சில விசயங்கள் ஒரு சிலருக்கு புதிதாக இருக்கலாம் காரணம், அனுபவம் இல்லாதது.

எனக்கு வாய்ப்புக் கிடைத்து சிலது புரிந்து கொண்டது போல, அடுத்த கட்டத்திற்கான கேள்விகளுக்கான பதில் அந்த அளவிற்கு அனுபவம் பெற்றவர்களுக்கு / ஞாநிகளுக்குத் தான் தெரியும். இதிலும் L1 L2 L3 L4 சப்போர்ட் போல இருக்கிறது 🙂 .

தலைவர் ரஜினி அடிக்கடி கூறுவார் “சில கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டு இருக்கிறேன்” என்று.

முன்பு இதை கேட்கும் போது எனக்கு கிண்டலாகத் தான் தெரிந்தது ஆனால், இதெல்லாம் புரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் போது தான் ரஜினி கூறியது எவ்வளவு உண்மை என்று புரிந்தது.

இது போல தனக்குப் புரியாத விசயங்களுக்குத் தான் விடை தேடி இமயமலையை சுற்றிக்கொண்டு இருக்கிறாரோ என்னவோ!

மேற்கூறியது எதுவுமே நான் படித்து தெரிந்து கொண்டதல்ல. வாய்ப்புக் கிடைக்கும் போது எனக்கு அப்பா கூறியது.

அப்பா கூறியதை நான் அனுபவங்களில் மேம்படுத்திக் கொண்டு இருக்கிறேன், அவ்வளவு தான். எனக்கும் ஆயிரம் விடை தெரியாத கேள்விகள் உள்ளது.

இதை எல்லாம் நான் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் நான் இங்கே இருக்க முடியாது. இதற்குண்டான வழியில் தான் இருக்க முடியும்.

எனவே, நமக்கு வாய்ப்புக் கிடைக்கும் போது காரணங்களை தெரிந்து கொள்ளலாம் / தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

கர்மாவை காரணம் காட்டக்கூடாது

நாம் நம் கடமையை சரியாகச் செய்ய வேண்டும், நம்முடைய தவறுகளுக்கு கர்மாவை காரணம் காட்டி தப்பிக்கப்பார்த்தால் அது நம் தவறு, கர்மாவின் தவறல்ல.

அப்படி நினைக்க வைத்து உங்களை மேலும் சிரமப்படுத்துவது கர்மாவின் நோக்கமாக இருக்கலாம்.

அதற்கு இடம் கொடாமல் தொடர்ந்து போராடி கஷ்டத்திற்கே கஷ்டம் கொடுத்தால், வேறு வழியில்லாமல் கர்மாவே “என்னடா! இவன் எப்படி பந்து போட்டாலும் அடிக்கறானே என்று.. கொஞ்சம் சிரமத்தை குறைப்போம்” என்று முடிவு செய்யும்.

விதியைக் காரணம் காட்டி தப்பித்துக்கொள்ள முயற்சித்தால்,  உங்களை கர்மா அவ்வாறு செய்ய / நினைக்க வைத்து தந்திரமாக பலி வாங்கி, மேலும் மேலும் தவறு செய்யத் தூண்டி உங்களை சிரமத்தில் ஆழ்த்தப் பார்க்கிறது என்று அர்த்தம்.

எனவே, நமக்கு சிக்கல் வருகிறது என்று உணர்ந்து உஷாராகி தவறு செய்யாமல் எதிர்த்துப் போராடி வினைப்பயனை குறைக்கப் பார்க்க வேண்டும்.

இது புரியாமல் நீங்கள்… “அட போப்பா.. நேரமே சரியில்லை.. விதிப்படி நடக்கட்டும்” என்று பயந்து விலகினால் கர்மா குஷியாகி உங்களைப் போட்டுத் தாக்கும். சோம்பேறிகளும் கோழைகளும் மட்டுமே விதியைக் குற்றம் கூறுவார்கள்.

தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது

இறுதியாக, கர்மா பஞ்ச் வசனம் மட்டும் தான் பேசாது மற்றபடி தவறு செய்பவர்களை, கொடுஞ்செயல் புரிபவர்களை அடித்து துவம்சம் செய்து விடும்.

அது எப்போது என்பது தான் யாருக்கும் தெரியாது. Image Credit

உங்களின் தவறுகளை நிறுத்தி நல்லது செய்யவில்லை என்றால், பெரும் சிக்கலில் மாட்டுவீர்கள்.

கர்மா ஒரு “சூப்பர் கணினி” போல, நீங்க என்ன செய்தாலும் கவனித்து அதில் உள்ள பாவ புண்ணியங்களை கணக்கெடுத்துக்கொண்டே இருக்கும்.

No data loss!! 100% safe 🙂 .

முடிந்த வரை, குழப்பாமல் எளிமையாக எழுதி இருப்பதாக நினைக்கிறேன்.

இது வரை படித்ததில் சில புரிந்தது போலவும் சில புரியாதது போலவும் இருக்கும். இருப்பினும் “கர்மவினை” குறித்து உங்களுக்கு ஓரளவு புரிதல் கிடைத்து இருக்கும் என்று நம்புகிறேன்.

மேற்கூறியதில் தவறுகள் இருக்கலாம் எனவே, இதை ஒரு மேலோட்டமான தகவலாக எடுத்துக்கொண்டு, மேலும் ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இது குறித்த புத்தகங்களைப் படியுங்கள்.

குறிப்பாக விவேகானந்தர் எழுதிய “கர்மவினை”.

இந்தக் கட்டுரை எழுத தூண்டுதலாக இருந்தது நண்பர் ஸ்ரீநிவாசன் Balhanuman தளத்தில் படித்த ஒரு பதிவு.

இந்து மதத்தின் அறநெறிகளை, கர்மவினைகளை, பாவ புண்ணியங்களை நம்புவர்களுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.

பிற்சேர்க்கைஅசுரன் – வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்

இப்புத்தகவிமர்சனம், வர்ணாசிரமத்தின் பாதிப்புகளைக் விவரிக்கிறது. இதையும் படியுங்கள்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

21 COMMENTS

  1. Giri, உன்னோட அப்பா கொடுத்த ‘கர்ம வினை’ புக்கை தொலைச்சது கூட ஒரு விதமான ‘கர்மாதான்’ 🙂 . நன்றாக சொன்னாய். அதனால தான் என்னமோ கர்மாவை பத்தி ரொம்ப ஆராய்ந்து எழுதி இருக்கிறாய்.

    வாழ்த்துக்கள்.

  2. சிங்கப்பூரில் உள்ள செண்பக விநாயகர் கோயிலில் சைவ சித்தாந்த வகுப்பு இலவசமாக விடுமுறை நாட்களில் நடை பெறுகிறது. நம்முடைய மதத்தை பற்றிய அடிப்படை சந்தேகங்களுக்கு நிச்சயம் தெளிவு கிடைக்கும். ுடிந்தால் படிநிலை ஒன்று ேர்ந்து பயன் பெறவும்

  3. கிரி. நீங்கள் இறுதியாக குறிப்பிட்டது போல் 100% முழுமையாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கட்டுரையின் கரு (கர்மவினை) என்ன என்பதை விளங்க முடிகிறது. எனக்கு கடவுள் நம்பிக்கை எப்போதும் உண்டு. எனக்கு நடக்க கூடிய நல்லது/ கெட்டது அனைத்தும் கடவுளால் தான் நடைபெறுகிறது என்பதில் எப்போதும் உறுதியாக இருப்பேன்.

    =======================================

    இன்று விங்ஞானத்தின் உதவியால் பல கணடுபிடிப்புகளை, மேற்கொண்டாலும் எந்த வசதியும் இல்லாத பண்டைய நாட்களில் நமது பாட்டன், முப்பாட்டான் கோள்களையும், நட்சதிரங்களையும் வைத்து வானவியலை ஆராய்ந்தனர்.இன்னும் பல விசியங்களை கூறலாம்.

    இயந்திரத்தனமான இந்த நவீன நாகரிக வாழ்க்கை முறையில் எல்லாம் செயற்கையாக தான் உள்ளது. உண்மையான அன்பு, பாசம், காதல், உறவுகள் எல்லாமே நமது முன்னோர்களின் வாழ்க்கையில் இருந்தது. அன்று பிறக்கவில்லையே என்ற ஏக்கம் இன்றும் உள்ளது.

    ========================================

    கோவிலை பற்றி ராமகிருஷ்ணன் அவர்கள் தளத்தில் நான் படித்தது :

    (கோயில், வழிபாட்டுக்கு உரிய இடம் மட்டுமல்ல; அதன் ஊடாக இசையும் கலையும் சிறுவணிகமும், மருத்துவமும் ஒன்றோடு ஒன்றாகக் கலந்திருக்கின்றன. கோயில் ஒரு கூட்டு வெளி. அது யாருமற்றவர்களுக்கான போக்கிடமாகவும், காலத்தின் மாபெரும் சாட்சியாகவும், கோடிக்கோடி மனிதர்களின் ஆசைகளும் கனவுகளும் சமர்ப்பிக்கப்படும் இடமாகவும் இருக்கிறது)….. சத்தியமான வார்த்தைகள் இவைகள்.

    ========================================

    என் தந்தை நான் 7 ம் வகுப்பு படிக்கும் போது இறந்து விட்டார். நிறைய பேருக்கு அவர் உதவி செய்தார் என்பதை உதவி பெற்றவர்கள் மூலமாகவும், அவரின் அலுவலக நண்பர்கள் மூலமாகவும்,உறவினர்கள் மூலமாகவும் நான் கேட்டுள்ளேன். என்னுடைய தந்தை இறந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எந்த வசதி வாய்ப்பும் இல்லாமல் நானும், என் அம்மாவும் ஒரு வேளை கூட பட்டினி இல்லாமல் இன்று வரை இருப்பது என் தந்தையின் கடந்த கால வாழ்க்கை (கர்மா) தான் என்பதில் எப்போதும் உறுதியாக இருப்பேன், இது உண்மை எனவும் நம்புகிறேன்.

    =======================================

    நிச்சயம் இது போன்ற பதிவை எழுதுவதற்கு நேரமும், விவரமும், பொறுமையும் தேவையான ஒன்று. பகிர்தமைக்கு நன்றி கிரி.

  4. நீங்கள் கூறிய விசயங்கள் என் வாழ்க்கையிலும் நடந்திருக்கின்றன.

    எந்த விசயத்தையும் விமர்சிக்கும் தகுதி எல்லோருக்கும் உள்ளது. ஆனால் தமிழகத்திலிருந்து வரும் இந்து மத விமர்ச்னங்கள் மிகவும் தரக் குறைவாக உள்ளன. பெரியார் இருந்த பூமி என்பதாலோ என்னவோ.

    இதைப்படிக்கும் பல நண்பர்கள் என்னுடன் உடன்படுவார்கள் என்று நினைக்கிறேன்.

    கே. கோபாலன்

  5. Hi Giri, Most of your blogs, match with my thoughts perfectly . So first I like u article in before start to read. “If u’re lucky god will let u watch” is 100% to me. even revenge too..If I did something wrong i will get the revenge in short period.

  6. எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
    எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
    எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.

    அதனால இந்த வாழ்க்கைய சந்தோசமா அனுபவிங்க கில்லாடி 🙂

  7. வருணாசிரமம் எனும் சாதிப்பாகுபாடு அமைப்பிற்கு பின்னால் என்ன அறிவியல் காரணம் உள்ளது என்பதை விளக்கவும். //எனக்கும் ஆயிரம் விடை தெரியாத கேள்விகள் உள்ளது. இதை எல்லாம் நான் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் நான் இங்கே இருக்க முடியாது.// இப்படியே விட்டுவிடாமல், தயவு செய்து பகுத்தறியுங்கள். நல்ல புத்தகங்களை படியுங்கள்

  8. அன்புள்ள கிரி

    தங்களது தளத்தை தொடர்ந்து மிக விரும்பி படித்து வந்தாலும், மிக மிக சில முறையே நான் என்னுடைய கருத்துகளை பகிர்ந்து உள்ளேன். கர்மாவை டி ன் எ மற்றும் அதன் குணாதிசயங்களை கொண்டு ஆராய்ந்து பார்த்தால் சில ஒற்றுமைகளை காணலாம் என்பது என்னுடைய எண்ணம். நான் விரிவாக என் எண்ணத்தை எழுதவில்லை என்றாலும் மரபு விதி கொண்டு ஆராய்ந்தால் மேலும் தெளிவாகும். கிரி, உங்களுக்கு சரி எனப் பட்டால் தங்களுடைய தொலைபேசி எண்ணை எனக்கு மின் அஞ்சல் அனுப்பினால் தொடர்பு கொண்டு என்னுடைய காரணங்களை கூறுகிறேன்.

  9. HATES-OFF கிரி. மிக முக்கியமான ஒன்றை பத்தி எழுதி இருக்கீங்க. நாம் செய்யும் வினை பற்றி நிச்சயமாக எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இந்து மதம் என்னதான் கர்ம வினை பற்றி கூறி இருந்தாலும், நம்மவர்கள் தான் அதிக வட்டி, கஸ்டமர்சை ஏமாற்றுவது, ஒருவரின் கஷ்டத்தை பயன்படுத்தி சொத்தை கொள்ளையடிப்பது போன்ற காரியங்கை செய்கிறார்கள். கேட்டால் வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம் என்பார்கள். ஆனால் அதன் தாக்கம் அவர்களின் சந்ததிகளுக்கு போகும் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

    நீங்கள் கூறியது போல் என் பாட்டி செய்த தவறுகள் எங்களை தாக்கியது. அவர் எமாற்றி வாங்கிய சொத்தை, அவர் எப்படி வாங்கினாரு அப்படியே விற்கும் பாடி ஆனது. அவர் எமாரியவர்கள் எப்படி கஷ்டப்பட்டாட்களோ, அதே கஷ்டம் நாங்கள் பட்டோம்.

    “ஆத்மா அவரின் தலைமுறை மக்களிடையே மட்டுமே போகுமா அல்லது வேறு சம்பந்தமில்லாத ஒருவரின் உடலுக்கும் போகுமா என்பது பற்றி எனக்கு கேள்விகள் / சந்தேகம் இருக்கிறது”

    – சந்தேகமே வேண்டாம். அது அவர்களின் சந்ததிகளுக்குதான் போகும். ஆத்மவோடுதான் அதன் கர்மாவும் போகும். அது அவர்களின் சந்ததிகளுக்குத்தான் சென்று சேரும்.

  10. வினை என்பது ஒன்றே – நல்வினை தீவினை என்று இரண்டு இல்லை. There is no duality.
    ஒருவரது பார்வையில் நன்மை என்று படுகின்ற செயல் மற்றொருவருக்கு தீமையாக படலாம் and vice versa .
    இப்பொழுது நன்மை செய்தால் அடுத்த பிறவியில் நன்மை விளையும் தீமை செய்தால் தீமை விளையும் என்றாகிவிட்டால் இதற்கு தீர்வுதான் என்ன ? இந்த சுழற்சி எப்பொழுதான் முடியும் ?
    இதற்கு முடிவு பிறவிஇன்மையே. அதற்கான வழியையே நாம் தேட வேண்டும். எனக்கு தெரிந்த வழி ஸ்ரீ ரமண வழியாகும். தேடுங்கள் தென்படும் 🙂

  11. அன்பு சகோதரர் கிரி,
    தங்கள் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.தங்கள் எழுத்து நடை நன்றாக எளிதாக உள்ளது. சினிமா விமர்சனங்களில் முடங்கிவிடாமல் அணைத்து தளங்களிலும் எழுதுங்கள்.

    இஸ்லாத்தின் கர்மவினை பற்றிய நிலைப்பாடு அறிந்து கொள்ள விரும்பினால் , விரும்புபவர்கள் தொடர்ந்து படிக்கலாம்,,,,

    மறு பிறவி உண்டா? கேள்வி :
    பதில் : மறு பிறவி என்பது கற்பனையே தவிர வேறில்லை என்பதைச் சிரமமின்றி நிரூபித்து விடலாம். அதற்கு முன்னால் மறு பிறவி என்பது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மனிதர்கள் இன்று நல்ல வாழ்வைப் பெற்றிருந்தாலும் மோசமான வாழ்வைப் பெற்றிருந்தாலும் அதற்குக் காரணம் முந்தைய பிறவியில் அவர்கள் செய்த வினை தான். இந்தப் பிறவியில் ஒருவன் நல்லவனாக வாழ்ந்தால் அடுத்த பிறவியில் சகல இன்பங்களையும் பெற்று வாழ்வான். இப்படி ஏழு ஜென்மங்களை எடுப்பதாகக் கூறுகின்றனர். மனிதனோடு மட்டும் இதை நிறுத்திக் கொள்வதில்லை. மற்ற உயிரினங்கள் வரை விரிவு படுத்துகின்றனர். நாம் ஒரு நாயைச் சித்திரவதை செய்தால் அடுத்த பிறவியில் நாம் நாயாகவும் நாய் மனிதனாகவும் பிறப்பெடுப்போம். அப்போது மனிதனாகப் பிறப்பெடுத்த நாய், நாயாகப் பிறப்பெடுத்த நம்மை அதே போன்று சித்திரவதை செய்யும் என்றெல்லாம் உபன்னியாசங்களில் நாம் கேட்டுள்ளோம். இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இன்னொரு அடிப்படை உண்மையைக் கவனியுங்கள். இன்றைக்கு உலகில் 600 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னால் இதில் கால்வாசி அளவுக்குத் தான் மக்கள் தொகை இருந்தது. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மேலும் முன்னே சென்று கொண்டே இருந்தால் மனிதர்கள் சில ஆயிரம் பேர் தான் இருந்திருப்பார்கள். இன்னும் முன்னேறிச் சென்றால் ஒரே ஒரு ஜோடியில் போய் முடிவடையும். மனிதன் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சென்று கொண்டே இருந்தால் ஒவ்வொரு உயிரினமும் ஒரு ஜோடியில் போய் முடியும். அனைத்து உயிரினங்களும் ஒரே ஒரு ஜோடியிருந்து தான் பல்கிப் பெருகின. மனிதனையும் சேர்த்து எத்தனை வகை உயிரினங்கள் உலகில் உள்ளன என்று நம்மிடம் கணக்கு இல்லை. உதாரணத்துக்காக ஐம்பது லட்சம் வகை உயிரினங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு வகை உயிரினத்திற்கும் ஒரு ஜோடி என்று வைத்துக் கொண்டால் ஐம்பது லட்சம் ஜோடிகள் அதாவது ஒரு கோடி உயிரினங்கள் இருந்திருக்கும். மறு பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒரு கோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும். வேண்டுமானால் ஆடு மனிதனாக, மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிர, ஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது. ஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும். பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார். அப்போது இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்தனர். அவர்கள் மறு பிறவி எடுத்தால் இப்போதும் முப்பது கோடி தான் இருக்க வேண்டும். 70 கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம். நாம் மட்டும் அதிகமாகவில்லை. அனைத்து உயிரினங்களும் அதிகமாகியுள்ளன. புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும் பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது. பெருக முடியாது. மறு பிறவி இல்லை என்பதற்கு இதை விட வேறு எந்தச் சான்றும் தேவையில்லை. அதற்குச் சொல்லப்படுகின்ற தத்துவமும் ஏற்புடையதாக இல்லை. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு இவர்கள் கூறும் தத்துவம் என்ன? இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் தத்துவம். ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது. இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. அப்படியானால் அவன் அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட்டு எப்படி நல்லவனாக வாழ்வான்? ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க மாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாது; அதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறு தீர்ப்பளிக்கிறது. அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதா? நான் என்ன செய்தேன் என்பது எனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும், நீதிக்கும் சரியாக இருக்குமா? எனவே தத்துவ ரீதியாக விவாதித்தாலும் மறு பிறவி சரிப்பட்டு வரவில்லை. காரண காரியத்தோடு அலசினாலும் சரிப்பட்டு வரவில்லை. பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து

  12. கிரி

    அற்புதம்….. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க…… (எப்போதும் போல்….) … என் மனமார்ந்த வாழ்த்துக்கள் …..

    அந்த வீடியோ பார்த்ததும் கண்கலங்கி விட்டது……

  13. இந்து மதத்தின் நல்ல விசயத்தை பற்றி மிகவும் எளிமையாக எடுத்து கூறி இருபதற்கு மிகவும் நன்றி

  14. “எம்மதமும் சம்மதம்., எம்மதமும் என்மதம்”
    ஜெய் விக்ணேஷ்…
    மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி ஆன்மீகம் என்ற பெயரில் மக்களை முட்டாள்களாக்கும் செயலிலுருந்து அவர்களை விடுவித்து நல்வழிப்படுத்த ஒரு சிறு முயற்சி…
    கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு யார் வேண்டுமானாலும் பதில் கூறலாம்.
    குறிப்பாக மதத்தலைவர்களிடமிருந்தும்… மதகுருமார்களிடமிருந்தும் பதில்கள் வரவேற்கப்படுகின்றன…
    தெரி[ளி]ந்தவர்கள் பதில் கூறலாம்…
    தெரி[ளி]யாதவர்களுக்கு தெளி[ரி]வுபடுத்தப்படும்…

    ஓம்கார்…
    நல்லதே நடக்கட்டும்…
    ஆனந்தமாய் இரு…

    1] மதம் என்றால் என்ன?
    அவை எத்தனை?
    அவை யாவை?
    அதன் பொருள் என்ன?

    2] ஆன்மீகம் என்றால் என்ன?

    3] தியானம் என்றால் என்ன?
    அதற்கு விளக்கம் தேவை…!
    4) தேவன்
    ஆண்டவன்
    இறைவன்
    கடவுள்
    நாசி
    இவை யாவை? விளக்கவும்…

  15. தங்களுடைய கட்டுரை அப்படியே என் வாழ்க்கை போல் உள்ளது நானும் இதை உணர்ந்து போராடி கொண்டே இருக்கிறேன், கடைசி நேர வெற்றி விடாமல் கொடுக்கிறது ஆனால் கடும் போராட்டம் அனைத்திற்கும்,, போராடாமல் விட்டால் பொலந்துருது, இது என்று முடியும், அதை கூற இயலுமா?

  16. @மனோஜ் அநியாய வட்டிக்கு மட்டுமே பொருந்தும், அனைவருக்கும் அல்ல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here