முட்டை பிரியாணியும் மீதி ஒரு ரூபாயும்

6

ருக்குச் செல்லும் போது சென்னை சென்ட்ரலில் எப்போதுமே ஒரு “முட்டை பிரியாணி” பஞ்சாயத்து இருக்கும், இந்த முறையும். Image Credit

சென்னை சென்ட்ரலில் இந்திய ரயில்வே அமைப்பின் கீழ் வரும் பிரிவில் ஒரு பகுதியில் தயாராக இருக்கும் உணவுகள் பிரபலம்.

உணவைத் தயாராக வைத்து இருப்பார்கள் நாம் வாங்கிக்கொண்டு ரயிலிலோ அல்லது நிலையத்தின் வேறு பகுதியிலோ சென்று சாப்பிடலாம்.

இங்கே முட்டை, கோழி, ஆடு பிரியாணிகள் மற்றும் பல்வேறு வகையான உணவுகள் உள்ளன. இதில் உள்ள முட்டை பிரியாணியின் விலை 49₹.

என் விருப்பம் முட்டை பிரியாணி.

எனக்கு இங்கே தான் பிரச்சனை.

49₹ என்பதன் நோக்கம் என்ன?

மீதி ஒரு ரூபாயை இவர்கள் கொடுக்க மாட்டார்கள் என்று தெரிந்தும் ரயில்வே நிர்வாகம் எதற்கு 50₹ என்று வைக்காமல் 49₹ என்று வைத்துள்ளது என்பது தான் புரியவில்லை.

இவர்களே கொள்ளையை ஊக்குவிக்கிறார்களா!

இது குறித்துப் புகாரும் அனுப்பினேன் ஆனால், சரியாகவில்லை.

மின்னணு பரிவர்த்தனை இது போன்ற இடங்களில் மிக அவசியம். இங்கே ஏன் இல்லை?

எப்போதும் எனக்கு இந்த ஒரு ரூபாய்க்காகப் பிரச்சனை தான், இந்த முறையும்.

முன்பு ஒரு ரூபாயை கேட்கக் கூச்சமாக இருக்கும்.. ஏனென்றால், இதைக் கேட்டால் அவர்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்பது தெரியும்.

சமீபமாக இது குறைந்து இதைக் கேட்பதே ஒரு உற்சாகமான நிகழ்வாக எனக்கு மாறி விட்டது 🙂 .

மீதியா? அப்படின்னா?!

இந்த முறையும் முட்டை பிரியாணி வாங்கிக்கொண்டு 50₹ ரூபாயை நீட்டினேன். பிரியாணியைக் கொடுத்தார், நானும் அவரையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.

எவ்வளவு கொடுத்தீங்க? 

50 ருபாய்!

அதான் பிரியாணி கொடுத்துட்டேனே!

மீதி ஒரு ருபாய்?

ஏற இறங்க பார்த்தார்..

நானும் “என்ன?” என்பது போலப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

ஒரு மிட்டாயை நீட்டினார்.

ஒரு இடத்தில் தெரிவது போலச் சில்லறையை வைத்து இருந்தார்.

அங்கே தான் சில்லறை இருக்குல்ல.. எதுக்கு மிட்டாய் தரீங்க? 

2 ருபாய் எடுத்து.. “ம்ஹீம்.. இந்தா வைத்துக்கோ” என்று வேண்டா வெறுப்பா பிச்சை போடுவது போலக் கொடுத்தார்.

இப்படிக் கொடுத்தால் நான் ரோசம் வந்து அவரிடமே கொடுப்பேன் என்று நினைத்தாரோ என்னவோ.. 🙂 .

நான் எதுவும் கூறாமல் வாங்கி விட்டேன்.

கொஞ்சம் அதிர்ந்து

சரி கொடுங்க” அதை என்று திரும்ப வாங்கி விட்டு.. மேலேயே இருந்த ஒரு ரூபாயை எடுத்துக் கொடுத்தார்.

த்தா.. போடாங்க.. என்று வாங்கிக் கொண்டு நான் கிளம்பி விட்டேன்.

இவங்களோட ஒரு ரூபாயை கூட விடக்கூடாது என்று நினைக்கிறார்கள் ஆனால், பயணிகள் ஒரு ரூபாயை அது பற்றிய உணர்வே இல்லாமல் வாங்கி வைத்துக்கொள்கிறார்கள்.

இந்த ஆளு கூட நான் என்ன குடும்பமா நடத்தப் போறேன்.. இவன் யாரோ நான் யாரோ.. இவன் என்னைப் பற்றி என்ன நினைத்தால் எனக்கென்ன?!

ஒரு ருபாய் பெரிய விசயமில்லை.. ஆனால், இது போல விட்டுத்தரக்கூடாது, நாமே இந்தத் திருட்டுப் பசங்களை ஊக்குவிக்கக்கூடாது என்ற கடுப்பே இது போல நிற்கக் காரணம்.

அவமானமாக நினைக்க வேண்டியது நாமல்ல..

நான் யாரையும் கொள்ளை அடிக்கவில்லை, யாரையும் ஏமாற்றவில்லை, லஞ்சம் வாங்கியதில்லை.. சம்பாதிப்பது அனைத்துமே நேர்மையாகச் சம்பாதித்தது.

அப்படி இருக்க..

எவனோ ஒரு திருட்டு பய எதோ நினைப்பான் என்று நம் உரிமையை ஏன் விட்டுத்தரனும்! அவன் என்ன நினைத்தால் நமக்கென்ன? அவன் நினைப்பதால் என்ன நடந்து விடப் போகிறது?!

திருடுபவன் தைரியமாக கொடுக்க மறுக்கிறான்.. நம்ம பணத்தை வாங்க நாம் கூச்சப்படுகிறோம். கொடுமை!

இங்கே மட்டுமில்லை.. பல இடங்களில் இது போலக் கேட்டுச் சண்டை போட்டு இருக்கிறேன். முன்பு கூச்சமாக இருந்தது.. தற்போது பெருமிதமாக இருக்கிறது.

நண்பர் மாயவரத்தான் ரமேஷை இந்த விசயத்தில் ரொம்பப் பிடிக்கும். செம்ம சண்டை போட்டு அவர் உரிமையை நிலை நாட்டுவார். எனக்கு இந்த விசயத்தில் நல்ல ஒரு முன்மாதிரி.

இவர் அளவுக்கு என்னால் சத்தியமாக முடியாது.. இருப்பினும் முடிந்த அளவுக்கு முயல்கிறேன்.

கடினப்பட்டுச் சம்பாதிக்கிறவனுக்குத் தான் பணத்தோட அருமை தெரியும் என்பார்கள். உண்மை! எனக்குப் பணத்தோட அருமை தெரியும்.

சம்பந்தமில்லை என்றாலும் வீண் செய்யக் கூடாது

தேவையானதுக்கு எவ்வளவு வேண்டும் என்றாலும் செலவு செய்யலாம் நம் வருமானம் அனுமதிக்கும் வரை, அதே சமயம் பணம் இருக்கிறது என்பதற்காகப் பணம் என்றில்லை தண்ணீர் மின்சாரம் என்று எதையும் விரயம் செய்யக் கூடாது.

இந்த விசயங்களில் மட்டுமல்ல பல இடங்களில் சண்டைப் போட்டு எனக்கான உரிமையை மீட்டு இருக்கிறேன். இனியும் தொடரப்போகிறேன் மகிழ்ச்சியாக.

ஒரு ருபாய் என்றாலும் அது நம் பணம், விட்டுத்தராதீர்கள். உழைப்பின் அருமை தெரிந்தால், இந்த ஒரு ரூபாயின் மதிப்பும் உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.

ரயிலில் ஏறிய பிறகு மனைவியுடன் பேசும் போது “இன்னைக்கு ஒரு பஞ்சாயத்து” என்றேன்..

என்ன.. முட்டை பிரியாணியா!” என்றார் 🙂 .

பிற்சேர்க்கை

தற்போது ரயில்வே / IRCTC அனைத்து இடங்களிலும் UPI முறையைக் கொண்டு வந்து விட்டதால், சில்லறை பிரச்சனை முற்றிலுமாக தீர்ந்தது.

சுபம் 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

  1. நல்ல முயற்சி. ஆனால் தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்பொரேஷன்ல, 5 ரூபாய் அதிகம் கொடுக்காமல் வாங்கியவர் உண்டா?

  2. மிகவும் மகிழ்ச்சி , இது போன்ற சில்லறை திருடர்களை ஊக்குவிக்காமல் இருக்க மக்கள் முயற்சிக்க வேண்டும் நீங்கள் சொல்வது போல இது நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் அதற்க்காக மீதி சில்லறை கேக்க வெக்கப்பட்டு விட கூடாது

  3. சூப்பர் தல
    கேட்டால் கிடைக்கும் ஸ்டைல் ல இருக்கு article

  4. கிரி, ஒரு ரூபாய் அல்லது 100 ரூபாய் இதில் பிரச்சனை பணத்தின் மதிப்பு என்பது அல்ல. நமது உரிமை. கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும். ஒரு நபருக்கு ஒரு ரூபாய் என்றால் ஒரு நாளைக்கு??? ஒரு மாதத்திற்கு??? சென்னை விமான நிலைய கழிப்பிடத்திலும் (வெளியில்) இதுமாதிரி பிரச்சனையை சந்தித்த அனுபவம் உண்டு. பலகையில் உள்ள கட்டணம் வேறு, வசூலிக்கும் கட்டணம் வேறு.. உண்மையை உரக்க கூறியமைக்கு மிக்க நன்றி.. இதை படிக்கின்ற நண்பர்கள் பிரச்சனையை சந்திக்கும் போது ஒரு ரூபாய் நினைவில் வந்து செல்லும்.. கண்டிப்பாக உரிமையை யாரும் விடமாட்டார்கள்.

  5. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @Aloy இங்கேயும் ஆட்சியர் சகாயம் நடவடிக்கை எடுத்து சரியான விலைக்கு கொடுத்ததாக நண்பர் கூறினார். ஒட்டு மொத்தமாக என்றால், வாங்குவது சிரமமே.

    @அருண் வாங்க.. எப்படி இருக்கீங்க?

    @யாசின் ரம்ஜான் வாழ்த்துகள் 🙂 . அறிவிப்பில் உள்ள கட்டணம் ஒன்று வாங்கும் கட்டணம் வேறு.. இது பல இடங்களில் உள்ள பிரச்சனை.

  6. நானும் இதுபோல் நிறைய சண்டை போட்டு (போலி’செல்லாம் வந்து(கடைக்காரனுக்கு வக்காலத்து வாங்கிது வேறு கதை..!!!) இருக்கிறேன் , இப்த்தான் சந்தோசமாக இருக்கு நம்மைப்போல் நிறைய பேர்கள் இருக்கிறார்களா என்று…!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here