பிரிட்டனை பொருளாதாரத்தில் இந்தியா தாண்டியது சாதனையா?

3
IMF அறிக்கை

ங்கிலாந்திடம் காலனி நாடாக இருந்த இந்தியா, IMF (International Monetary Fund) அறிக்கையின் படி பொருளாதார வளர்ச்சியில் இங்கிலாந்தை பின்னுக்குத்தள்ளி 5 ம் இடத்தைப்பிடித்துள்ளது. Image Credit

தற்போது நமக்கு முன்னே அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி உள்ளன.

காலனி நாடாக இந்தியா

பிரிட்டனிடம் இந்தியா 200 ஆண்டுகளாக அடிமைப்பட்டு இருந்தது.

நேரடி 200 வருடங்கள் கிடையாது. 100 வருடங்கள் கைப்பற்ற எடுத்துக்கொண்டால், 100 (90) வருடங்கள் ஆட்சி செய்ய எடுத்துக்கொண்டார்கள்.

2022 ம் ஆண்டு 75 ம் ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வேளையில் இங்கிலாந்தை பொருளாதாரத்தில் முந்திய செய்தி வந்துள்ளது.

இந்தியா $3.5 டிரில்லியன், இங்கிலாந்து $3.2 ட்ரில்லியன்.

இது மிகப்பெரிய சாதனை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. காரணம் 100 வருடங்கள் நம்மை ஆட்சி செய்த நாட்டையே பொருளாதாரத்தில் வீழ்த்துவது சாதனை தானே.

ஆனால், நம்மவர்களில் சிலருக்கு தான் இந்தியா சாதனை செய்தால் வயிறு எரியுமே! எனவே, Per Capita பிரிட்டனை விடக் குறைவு என்று அனத்திக்கொண்டுள்ளார்கள்.

இங்கிலாந்து திருடிய $45 ட்ரில்லியன்

இந்தியாவில் ஆட்சி செய்த காலங்களில் இந்தியாவிலிருந்து திருடி இங்கிலாந்து கொண்டு செல்லப்பட்ட வளம் $45 ட்ரில்லியன் என்று கூறப்படுகிறது.

இது பணமாக, பொருளாக, தங்கமாக, கனிம வளமாக உள்ளன.

1850+ ஆண்டிலிருந்து $45 ட்ரில்லியன் என்றால், தற்போதைய மதிப்பைக் கணக்கிட்டால், கணினியே குழம்பி விடும்.

இவர்கள் போதாது என்று பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் மொகலாயர்கள் இதே போலக் கொள்ளையடித்து சென்றனர்.

அதோடு நம் ஊழல் அரசியல்வாதிகள் கொள்ளையடித்தது தனிக்கணக்கு.

இவ்வளவையும் தாண்டி இந்தியா இந்நிலையை அடைந்துள்ளது பெருமை தானே!

குண்டூசி கூடத் தயாரிக்க முடியாது

ஒவ்வொரு முறை இந்தியா சாதனை செய்யும் போதும் பெரியார் கூறிய வார்த்தையே நினைவுக்கு வருகிறது.

பிரிட்டிஷ்காரன் சென்று விட்டால், இந்தியாவால் குண்டூசி கூடத் தயாரிக்க முடியாது

என்று கூறினார்.

ஆனால், இன்று இந்தியா அடைந்துள்ள சாதனைகள் அளவில்லாதது.

ரயில்வே, விண்வெளி, ஏற்றுமதி, UNICORN, Make In India என்று அனைத்திலும் சாதித்து வருகிறது. இது ட்ரைலர் தான் மெயின் பிக்சர் வர சில காலம் ஆகும்.

அப்போது அனைத்து வளர்ந்த நாடுகளும் அலறத்தான் போகிறது.

இந்தக்கடுப்பில் தான் அமெரிக்க, பிரிட்டன் ஊடகங்களின் புலம்பல்கள் தொடர்கிறது.

சாதனையா?

இந்தியா பிரிட்டனை முந்தியது சாதனையா? என்றால் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சாதனை தான்.

ஆனால், இதில் குறிப்பிடத்தக்க செய்தியுள்ளது.

தற்போது இங்கிலாந்தின் இந்த நிலைக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள்.

இங்கிலாந்து மட்டுமல்ல ஐரோப்பா நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியா இவர்களைப் போல ஈகோ பார்க்காமல், கட்டுப்படாமல், ரஷ்யாவுடன் பரிவர்த்தனையை மேற்கொண்டதால், பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

பிரிட்டனுக்கு இது தற்காலிக பின்னடைவு மட்டுமே. எரிபொருள் பிரச்சனை சரியாகி, பணவீக்கம் கட்டுக்குள் வந்தால், திரும்ப இந்தியாவை வீழ்த்திவிட வாய்ப்புள்ளது.

எனவே, பிரிட்டனை குறைத்து மதிப்பிட வேண்டாம்.

ஆனால், தற்போதைய இந்தியாவும் முந்தைய நிலைமையில் இல்லை.

பல துறைகளில் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. வெளியுறவு கொள்கையின் மூலம் பெரும்பாலான நாடுகளிடம் சிறப்பான உறவில் உள்ளது.

நிர்மலா சீதாராமன்

ஊறுகாய் மாமி என்று கிண்டலடிக்கப்பட்ட நிர்மலா சீதாராமன் இந்திய பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கியப்பங்கு வகிக்கிறார்.

மத்திய அரசு துறைகளுடன் இணைந்து திட்டமிட்டு இவர் செயல்படுத்திய திட்டங்களே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தியுள்ளது.

பணவீக்கத்தால் மற்ற நாடுகள் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வரும் நிலைமையில் தற்போதைக்கு இந்தியா மட்டுமே பெரிய நெருக்கடி இல்லாமல் தப்பித்துள்ளது.

இதே வளர்ச்சி நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் இந்தியா மேலும் உயரத்தை தொடுவதற்கான வாய்ப்புள்ளது.

எனவே, பிரிட்டனை முந்தியதற்கு மகிழ்ச்சியடையலாம் ஆனால், அது தொடர்வது இனி வரும் காலங்களில் ஏற்படும் மாற்றங்களே நிர்ணயிக்கும்.

அதுவரை இவ்வெற்றியை இந்தியனாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் கொண்டாடுவோம்.

தொடர்புடைய கட்டுரைகள்

இந்தியாவும் உலக நாடுகளும்

அமெரிக்க டாலர் மதிப்புக் குறையாதது ஏன்?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. கிரி, உங்கள் பார்வையில் இதை ஒரு சாதனையாக பார்க்கிறீர்கள். என்னை பொறுத்தவரை இந்த நிகழ்வு மகிழ்ச்சி அளித்தாலும், நம் நாட்டின் உண்மையான வளர்ச்சி என நான் கருதுவது ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றம் தான். என்று அவர்கள் வாழ்வியலில் மாற்றங்கள் ஏற்படுதோ அன்று தான் இது போன்ற நிகழ்வுகளை ஒரு வெற்றியாக என்னால் உணர முடியும்..

    உலக அரங்கத்தில் இந்தியாவின் வளர்ச்சி மேலும் மேலும் முன்னேறி கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ‘பிரிட்டிஷ்காரன் சென்று விட்டால், இந்தியாவால் குண்டூசி கூடத் தயாரிக்க முடியாது‘ இது போன்ற பல நிகழ்வுகளை கடந்து நம் நாடு முன்னேறி கொண்டு வருகிறது.

    (1850+ ஆண்டிலிருந்து $45 ட்ரில்லியன் என்றால், தற்போதைய மதிப்பைக் கணக்கிட்டால், கணினியே குழம்பி விடும்.) மேற்கத்திய நாடுகளின் அசுர பலமே இது போன்ற நிகழ்வுகள் தான். தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் உக்கிரைன் / ரஷ்யா போரினால் உலகத்தின் பல நாடுகள் பொருளாதார ரீதியாக பிரச்சனையை சந்தித்து கொண்டிருக்கும் போது குறிப்பிட்ட சில மேலைநாடுகள் மட்டும் சத்தமே இல்லாமல் கல்லாவை கட்டி கொண்டிருக்கிறது.

    போரை பற்றி படித்த மிகவும் விரும்பிய வரிகள்.

    “ஆயிரமாயிரம் குழந்தைகளின்
    தாலாட்டுகளை கொன்று விட்டு
    ஒரு தூளியை ஜெயிப்பது
    தான் யுத்தம்!!!

  2. @Tamil 🙏

    @யாசின்

    “இந்த நிகழ்வு மகிழ்ச்சி அளித்தாலும், நம் நாட்டின் உண்மையான வளர்ச்சி என நான் கருதுவது ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றம் தான். என்று அவர்கள் வாழ்வியலில் மாற்றங்கள் ஏற்படுதோ அன்று தான் இது போன்ற நிகழ்வுகளை ஒரு வெற்றியாக என்னால் உணர முடியும்..”

    யாசின் உங்கள் எண்ணம் சரி என்றாலும் புரிதல் தவறானது.

    ஏழைகள் இல்லாத நாடே கிடையாது.

    உலக அரங்கில் வல்லரசாக இருக்கும் அமெரிக்காவிலேயே ஏராளமான ஏழைகள் உள்ளனர். வீடு இல்லாமல் உள்ளனர், அவர்கள் Homeless Person என்று அழைக்கிறார்கள்.

    எனவே, இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும், இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் ஏழைகளே இல்லாத நிலை வராது.

    இந்நிலை எல்லாம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

    இவற்றைக் குறைக்க முடியுமே தவிர தவிர்க்க முடியாது.

    எனவே, இவையில்லாத நிலை தான் மகிழ்ச்சி என்றால், அந்நிலை உங்க பேரனுக்குக்கூட கிடைக்காது.

    எனவே. ஏதாவது ஒரு காரணத்தை நினைத்து நம் மகிழ்ச்சியை தள்ளிப்போட வேண்டியதில்லை.

    ஏழைகளும் வளம் பெற நினைப்போம், முயற்சிப்போம் அதே சமயம் சாதனை செய்யும் போது கொண்டாடுவோம்.

    “உக்கிரைன் / ரஷ்யா போரினால் உலகத்தின் பல நாடுகள் பொருளாதார ரீதியாக பிரச்சனையை சந்தித்து கொண்டிருக்கும் போது குறிப்பிட்ட சில மேலைநாடுகள் மட்டும் சத்தமே இல்லாமல் கல்லாவை கட்டி கொண்டிருக்கிறது.”

    அதில் அமெரிக்கா முக்கியமானது.

    தனது ஆயுத விற்பனைக்காக போரை நீட்டித்துக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here