அமெரிக்க டாலர் மதிப்புக் குறையாதது ஏன்?

4
அமெரிக்க டாலர்

ப்போதும் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவதில்லை. அமெரிக்கா டாலர் மதிப்பு எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். Image Credit

நான் பொருளாதார நிபுணன் கிடையாது. படித்தவைகளையும் நண்பர்களிடம் விவாதித்தவைகளையும் வைத்து இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

அமெரிக்க டாலர் மதிப்புக் குறையாதது ஏன்?

அமெரிக்க டாலருக்கு மதிப்பு பெரும்பாலும் குறைவதே இல்லை. மாற்ற நாடுகளின் மதிப்புப் பெரியளவில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் அமெரிக்க டாலரின் மதிப்பு நிலையாக அல்லது உயர்ந்து கொண்டே செல்கிறது.

இன்னமும் 1, 5, 10 டாலருக்கு மதிப்பு குறையவில்லை.

நாடுகள் தங்கள் பல்வேறு தேவைகளுக்காக அமெரிக்க டாலரை கையிருப்பில் வைத்துக்கொள்கின்றன.

அமெரிக்கா கையிருப்பில் உள்ள டாலரை போலப் பிற நாடுகளிடம் கையிருப்பாக உள்ள டாலரும் அதிகம்.

அமெரிக்க டாலரை பொதுவான கரன்சியாகப் பலரும் வியாபாரத்துக்குப் பயன்படுத்துவதும் இதன் மதிப்புக் குறையாமல் இருப்பதற்கு முக்கியக்காரணம்.

இணையத்தில் சேவையை, பொருளைப் பெற பெரும்பாலான வெளிநாட்டுத் தளங்கள் அமெரிக்க டாலரையே பொதுவான கரன்சியாகப் பயன்படுத்துகின்றன.

மேற்கூறிய காரணங்களால் டாலரின் முக்கியத்துவம், தேவை அதிகம் என்றாலும், உலகளவில் அதிகமாக டாலர் பயன்படுத்தப்படுவது கச்சா எண்ணெய் தேவைக்காகவே. இதையே இக்கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

Franklin D. Roosevelt

அமெரிக்கா முன்னாள் அதிபர் Franklin D. Roosevelt காலத்தில் (1945) சவூதி அரசுடன் கச்சா எண்ணெயை அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்க டாலரிலேயே விற்பனை செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டதாக படித்தேன்.

அக்காலத்தில் அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடாக அமெரிக்கா இருந்தது.

இவ்வாறு டாலர் விற்பனை காரணமாக சவுதிக்கு ஆயுதம் வழங்கிப் பாதுகாப்பு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

இதனால் கச்சா எண்ணெய் வாங்க அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்க டாலர் தேவைப்படுவதால், டாலருக்குத் தேவை இருந்து கொண்டே உள்ளது.

எனவே, டாலருக்கான மதிப்பு உயர்வாகவே உள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைக்கு, டாலரில் கச்சா எண்ணெய் வாங்க வேண்டியது இருப்பதும், இலங்கையிடம் அமெரிக்க டாலர் கையிருப்பு இல்லாததும் அவர்கள் பொருளாதாரம் மோசமடைந்ததற்கு ஒரு காரணம்.

நாடுகளை அழித்த அமெரிக்கா

டாலரில் கொடுக்காமல் அவரவர் நாட்டின் பணத்திலேயே கொடுக்கலாம் என்று ஈராக் அதிபர் சதாம் உசைன் அறிவித்த பிறகு அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஈராக்கை அழித்தது அமெரிக்கா.

சதாம் உசைன் கொடுங்கோலன் என்றே அறியப்பட்டதால், அமெரிக்கா போர் தொடுத்த உண்மையான காரணம் புரியாமல் அதற்கு ஆதரவு அளித்தோம்.

இதே காரணம் தான் கடாஃபி மற்றும் சில நாடுகளுக்கும் ஏற்பட்ட நிலை.

ஏதேதோ காரணங்களைக் கூறி ஈரானுக்கு பொருளாதாரத் தடையை விதித்தது. ரூபாயில் இந்தியாக்கு கச்சா எண்ணெய் கொடுக்க ஈரான் முன் வந்த போது, வாங்கினால் பொருளாதாரத்தடை விதிப்பதாக இந்தியாவை மிரட்டியது.

தற்போது இந்தியாவை மிரட்டும் நிலையிலிருந்து வேண்டுகோள் விடுக்கும் நிலைக்குச் சென்றதை அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இது குறித்து தனிக் கட்டுரையில் விரிவாகக் கூறுகிறேன்.

ரஷ்யா

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா பேசுவது, கணக்கு வழக்கு இல்லாமல் ஆயுதங்களை வழங்குவது அக்கறையில் என்று நினைத்தால் அது தவறு.

அமெரிக்காக்கு உக்ரைன் மீது அக்கறையில்லை ரஷ்யா மீது காண்டு.

உலகளவில் அமெரிக்காவுக்குச் சவால் விடும் நாடுகள் இரண்டு மட்டுமே! ஒன்று ரஷ்யா, இன்னொன்று சீனா.

பல்வேறு பொருளாதாரத் தேவைகளுக்குச் சீனாவை அமெரிக்கா நம்பியுள்ளது. எனவே, சீனாவை விமர்சிக்கலாமே தவிர முறைத்துக்கொள்ள முடியாது.

முறைத்தால் இருவருக்குமே இழப்பு அமெரிக்காவுக்குக் கூடுதல் இழப்பு. சீனா நினைத்தால், அவர்கள் வைத்துள்ள பல ட்ரில்லியன் அமெரிக்க டாலர் கையிருப்பை வைத்து அமெரிக்காவை ஆட்டம் காண வைத்துவிட முடியும்.

ஆனால், ரஷ்யா அனைத்து விஷயங்களிலும் அமெரிக்காவுக்குப் போட்டியாக உள்ளது. அமெரிக்கா போலக் கச்சா எண்ணெய் உற்பத்தியிலும் உள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தி கூட அமெரிக்காவுக்குப் பிரச்சனையில்லை ஆனால், எண்ணெயை அவரவர் கரன்சியிலேயே வாங்கிக்கொள்ள ரஷ்யா அனுமதிக்கிறது.

ஏற்கனவே, சீனாக்கு யுவானில் வாங்கக் கூறி விட்டது, இந்தியாவும் ரூபாயில் வாங்கப்போகிறது.

அதே போல ஐரோப்பா நாடுகளை, ரஷ்யாவின் கரன்சி ரூபெலில் வாங்க நிர்பந்திக்கிறது.

இது தொடர்ந்தால், அமெரிக்கா டாலரின் மதிப்பு குறைந்து கொண்டே செல்லும். முன்னரே கூறியபடி தேவை இருக்கும் வரையே மதிப்பு இருக்கும்.

எடுத்துக்காட்டுக்கு, தேவை அதிகரிக்கும் போது வெங்காய விலை கிலோ ₹100 தாண்டுவதும், தேவை குறைந்தால் குப்பைக்குப் போவதையும் பார்க்கிறோம்.

எனவே தான் ரஷ்யாவை எப்படியாவது ஒழித்துக்கட்ட அமெரிக்கா தீவிரமாகப் பல வேலைகளைச் செய்து வருகிறது.

மின்சார வாகனங்கள்

அனைவருக்கும் தெரியும் எதிர்காலத்தேவை மின்சார வாகனங்கள் தான். எனவே, கச்சா எண்ணெய்க்கான தேவை படிப்படியாகக் குறைந்து வரும்.

இன்னொருவகையில் கூறுவதென்றால், அமெரிக்க டாலரின் தேவை மற்ற நாடுகளுக்குக் குறைந்து வரும் .

காரணம், உலகளவில் கச்சா எண்ணெய்க்குத் தான் அதிகளவில் அமெரிக்க டாலர் பயன்படுத்தப்படுகிறது.

மின்சாரத்தேவையை உள்நாட்டிலேயே நிவர்த்திச் செய்து கொள்ள முடியும். அப்படியே வேறு நாட்டைச் சார்ந்து இருக்க வேண்டியது இருந்தாலும், அமெரிக்கா தான் என்று கிடையாது.

எத்தனால் உற்பத்தியை இந்தியா அதிகரித்து எரிபொருளுக்குப் பயன்படுத்துவதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க முயற்சிகளை எடுத்து வருகிறது.

மின்சார வாகனங்களுக்கான பேட்டரி மூலப்பொருட்கள் ஆஸ்திரேலியா மற்றும் சீனாவிடம் அதிகமுள்ளது. எனவே, எதிர்காலத்தில் இந்நாடுகளைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை வரலாம்.

அல்லது அதற்கு மாற்றான தொழில்நுட்பத்தை இந்தியாவே உற்பத்தி செய்யலாம்.

இவ்விரு நாடுகள் அல்லாது ஆப்பிரிக்க நாடுகளிலும் இம்மூலப்பொருட்கள் உள்ளது ஆனால் அந்நாடுகளையும் இலங்கை போலக் கடன் கொடுத்துச் சீனா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

டாலர் மதிப்புக் குறைந்தால் என்ன ஆகும்?

டாலரின் மதிப்பு குறைந்து ரூபாயின் மதிப்பு அதிகரித்தால், நமக்குப் பெருமை ஆனால், இழப்பும் பெரியளவில் இருக்கும்.

காரணம், இங்குள்ள ஏற்றுமதியாளர்களுக்கு அமெரிக்கா டாலர் பண மதிப்பில் வருமானம் கிடைத்தால் தான் இலாபம் அதிகம். டாலரின் மதிப்பு குறைந்தால் அவர்களின் வருமானமும் குறையும்.

எளிமையாகக் கூற வேண்டும் என்றால், ஒரு ஏற்றுமதியாளர் ஒரு சட்டையை $5 டாலருக்கு கொடுக்கிறார் என்றால் அவருக்கு 5 x $75 = ₹375 கிடைக்கும்.

ஆனால், அதே டாலரின் மதிப்பு குறைந்து $50 ஆகி விட்டால் 5 x $50 = ₹250 தான் கிடைக்கும். ஒரு சட்டைக்கு ₹125 என்றால், இலட்சக்கணக்கான சட்டைகளுக்கு ஏற்படும் இழப்பு மிக அதிகம்.

பல வருடங்களுக்கு முன்பு டாலரின் மதிப்பு குறைந்த போது, சந்தித்த நட்டத்தை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வருத்தமாகக் கூறியது செய்திகளில் வந்தது.

இதனாலே வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், இந்திய ரூபாயின் மதிப்புக் குறைந்தால் மகிழ்ச்சியடைவார்கள்.

காரணம், அவர்கள் இந்தியாக்கு அனுப்பும் பணத்தின் மதிப்பு அதிகமாக இருக்கும்.

அமெரிக்காவை பெரிதாக நம்பியுள்ள ஐடி துறை மிகப்பெரிய அடி வாங்கும். இது மிகப்பெரிய பொருளாதார, சமூக மாற்றங்களை இந்தியாவில் ஏற்படுத்தும்.

ஆனால், கொஞ்சம் வருடங்களுக்குப் பிறகு இச்சூழ்நிலைக்கு அனைவரும் தங்களைத் தகவமைத்துக்கொள்வார்கள். இதையொட்டி வியாபாரங்களும் மாறி விடும்.

ஆனால், இடைப்பட்ட காலத்தில் பல்வேறு சிக்கல்களும் தவிர்க்க முடியாதது.

பிடிக்கிறதோ இல்லையோ இன்னும் அதிகபட்சம் 10 வருட காலத்தில் பெரும்பான்மை நாடுகள் மின்சார வாகனங்களுக்கு மாறி விடும்.

Organic மாற்றம்

எனவே, டாலருக்கான தேவை குறைவதை அமெரிக்கா என்ன செய்தாலும் தடுக்க முடியாது.

காரணம், இது ஒரு செயற்கை மாற்றமல்ல, Organic மாற்றம்.

அமெரிக்கா வல்லரசு நாடாக இருக்கலாம் ஆனால், மிகப்பெரிய அளவில் கடன் உள்ளது. அமெரிக்கா டாலர் மதிப்பு குறையாததால், சிக்கல் ஏற்படவில்லை.

ஆனால், மதிப்புக் குறையும் போது இவையெல்லாம் பூதாகரமாக இருக்கும்.

அமெரிக்காவும் இதையெல்லாம் நிச்சயம் உணர்ந்து இருக்கும் என்பதால், மாற்று வழிகளைச் சிந்தித்துச் செயல்படுத்துவார்கள் அல்லது ஏற்கனவே இதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்.

இதே நிலை தான் கச்சா எண்ணெய் விற்பனையை நம்பியுள்ள சவூதி போன்ற நாடுகளுக்கும். இவர்களும் தற்போது கட்டுப்பாடுகளை தளர்த்தி, மாற்றங்களை ஏற்படுத்தி அதற்காகத் தயார் ஆகி வருகிறார்கள்.

சுயசார்பு திட்டங்களை முன்னெடுத்து இந்தியா அதில் வெற்றிகண்டு வருவதால், எதிர்காலத்தில் மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதன் தேவை குறையும்.

இது நிலையான பொருளாதாரத்துக்கு இந்தியாக்கு உதவியாக இருக்கும்.

டிஜிட்டல் இந்தியா அறிமுகப்படுத்தப்பட்ட போது கிண்டலடித்தவர்கள் அனைவரும் தற்போது அசிங்கப்பட்டு நிற்பது போல, சுய சார்பு இந்தியா திட்டம் மூலம் இந்தியா மிகப்பெரிய அளவில் பயனை பெறும் போது மீண்டும் அசிங்கப்பட்டு நிற்பார்கள்.

உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து, இறக்குமதிக்குச் செலவிடப்படும் பணம் குறையும் போது இந்திய ரூபாயின் மதிப்பும் அதிகரிக்கும்.

அதில் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவு முக்கிய இடம் பிடிக்கும். அமெரிக்க டாலரை இந்தியா சார்ந்து இருப்பதன் தேவையும் குறையும்.

தொடர்புடைய கட்டுரை

மின்னணு பரிவர்த்தனை வெற்றியா தோல்வியா?! FAQ

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. கிரி, உண்மையிலே மிகவும் அருமையாக எழுதி இருக்கீங்க!!! என் சொல்லுகிறேன் என்றால், உரைநடை மிகவும் எளிமை, உதாரணங்களும் மிகவும் அருமை.. பொருளாதாரத்தை பற்றி மிகவும் குறைந்த அளவு தெரிந்தவர்கள் கூட எளிமையில் கட்டுரையின் சாராம்சத்தை எளிதில் விளங்கி கொள்ள முடியும்..

    சில நாட்களுக்கு முன் ஈரானின் கடந்த 120 ஆண்டு வரலாற்றை எழுத்தாகவும், காணொளியாகவும் தகவல்களை அப்பபோது திரட்டி தெரிந்து கொண்டேன்.. உண்மையில் மிகவும் கொடுமையான ஒன்று.. மேற்கு நாடுகள் ஈரானுக்கு செய்த கொடுமைகள்..

    குறிப்பாக சவூதிக்கு முன் எண்ணெய் வர்த்தகத்தில் கோலோச்சியது ஈரான் தான்.. ஓய்வு இருக்குமானால் ஈரானின் வரலாற்றை புரட்டி பாருங்கள்.. இந்த பதிவிற்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. >> டிஜிட்டல் இந்தியா அறிமுகப்படுத்தப்பட்ட போது கிண்டலடித்தவர்கள் அனைவரும் தற்போது அசிங்கப்பட்டு நிற்பது போ … – wondering if you can write a detailed essay on this. Eager to know how digital India helped India’s progress and associated success. Thanks.

  3. @யாசின்

    “உண்மையிலே மிகவும் அருமையாக எழுதி இருக்கீங்க!!! என் சொல்லுகிறேன் என்றால், உரைநடை மிகவும் எளிமை, உதாரணங்களும் மிகவும் அருமை.”

    நன்றி யாசின் 🙂

    அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகள் பல நாடுகளைச் சீரழித்து விட்டன.

    @Renga விரைவில் UPI பற்றி எழுதுவேன். அதில் குறிப்பிடுறேன்.

    @ஹரிஷ்

    10 நாட்கள் விடுமுறையில் ஊருக்குச்சென்று இருந்தேன். தற்போது தான் வந்தேன். விரைவில் எழுதுகிறேன் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here