மங்கள்யான் | விண்வெளி வியப்புகள்

21
மங்கள்யான்

விண்வெளி என்றாலே அதிசயம் தான். இந்த அதிசயத்தில் மங்கள்யான் மேலும் வியப்பை கூட்டியுள்ளது.

மங்கள்யான் | விண்வெளி வியப்புகள்

மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு விண்ணை பார்க்கும் நமக்கு, விண்ணில் இருந்து கொண்டு பூமியை பார்ப்பவர்களை நினைத்தால் ஆச்சர்யமாகவும் அதே சமயம் ரொம்பப் பொறாமையாகவும் இருக்கும்.

விண்ணில் இருந்து விஞ்ஞானிகள் பூமியை எடுத்து அனுப்பும் நிழற் படங்களைப் பார்த்தால் வியப்பாக உள்ளது. பூமி அவ்வளவு அழகாக இருக்கிறது.

அவர்களுக்கு அங்கேயே இருந்து கடுப்பாக இருக்கும் என்றாலும் நிழற் படங்களில் மட்டுமே பார்த்த நமக்கு அங்கே இருந்து பார்த்தால் பூமி எப்படி இருக்கும்?

மலை எல்லாம் பார்த்தால் மேடு பள்ளமா இருக்குமா? இல்லை… ஒரே மாதிரி அனைத்தும் வட்டமா இருக்குமா? லைட் போட்ட மாதிரி இருக்குமா?

இருட்டில் எப்படி பூமி வண்ணமாகத் தெரிகிறது? என்று ஏகப்பட்ட சந்தேகம் இருக்கும்.

அண்டவெளி

அண்டவெளி என்பது மிக மிகப் பிரம்மாண்டமானது.

நமக்குப் பெரியதாகத் தெரிகிற சூரியன், பூமியே மற்ற பெரிய நட்சத்திரங்கள், கிரகங்களுடன் ஒப்பிடும் ஒரு புள்ளி தான் என்றால், பெரியதாக இருக்கும் கிரகங்கள் எவ்வளவு பெரியதாக இருக்கும்.

அதைச் சுற்றி உள்ள வெற்று இடங்களை யோசித்தால் போய்க்கொண்டே உள்ளது.

Read : சூரியனை விட நட்சத்திரம் இவ்வ்வ்வளோ பெருசா!!!

விண்வெளி திரைப்படங்கள்

விண்வெளி திரைப்படங்களில் இதை எல்லாம் பார்க்கும் போது “ஆ” ன்னு வாயைப் பொளந்துட்டு பார்த்துட்டு இருப்பேன் 🙂 .

விண்வெளிப் படங்களான Apollo, Armageddon, Gravity இதெல்லாம் பார்க்கும் போது எப்படிய்யா இதெல்லாம் எடுக்கறாங்க என்று தான் நினைப்பு இருக்கும்.

Armageddon படம் எனக்கு ரொம்பப் பிடித்த விண்வெளிப் படம்.

பூமியை நோக்கி மோத வரும் பாறையின் பின்னாடி போய், அங்கே குழி தோண்டி பாம் வைத்து அதைச் சரியான நேரத்தில் வெடிக்க வைத்து, பூமி மீது மோத வரும் நேரத்தில் இரண்டாகப் பிரிந்து செல்ல வைத்துப் பூமியை காப்பது தான் கதை.

இதெல்லாம் சாத்தியமா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் ஆனால், அவங்க அங்கே செல்வது, விண்கலங்களில் பயணிப்பது, நடப்பது ரொம்ப பிரம்மிப்பாக இருக்கும்.

முதல் அனுபவம்

சின்னதா ஒரு கற்பனை செய்து பாருங்க.

முதலில் நீல் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் விண்கலத்தில் செல்லும் போது அவர்கள் மனநிலை எப்படி இருந்து இருக்கும்?

முழுவதும் இருட்டு! என்ன ஆகும் என்று யாருக்கும் தெரியாது?

விண்கலம் இறங்கியதும் உள்ளே புதைந்து விடுமா? உருகி விடுமா? எப்படி இருக்கும் என்று பயம் இருக்கும்.

என்னதான் முன்பே இதெல்லாம் ஆராய்ச்சி செய்து தான் இறங்குகிறார்கள் என்றாலும் எல்லாமே ஒரு உத்தேசம் தானே!

அப்போது இந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடையைவில்லையே!

நிலவில் மனிதன் கால் வைத்து 44 வருடங்கள் ஆகிறது. Image Credit

காலை வைத்து நடக்கும் போது ஏதாவது நடந்து விடுமோ என்று உதறலாக இருக்கும். நிலா, வெளிச்சமாகக் குண்டு பல்பு மாதிரி இருக்கிறது.

விண்கலம் இறங்கினால் அப்படியே வெளிச்சத்தின் மீது இறங்குமா? என்றெல்லாம் கற்பனை ஓடி இருக்கிறது 🙂 .

இந்த நிலையில் வெற்றிகரமாக இறங்கி நடந்து திரும்பப் பூமிக்கு வந்ததும்.. அட அட! என்ன ஒரு மனநிலை இருக்கும். உயிரோட திரும்புவோமா என்பது உத்திரவாதம் இல்லாத நிலையில், அங்கே சென்று திரும்ப வருவது எப்படி இருக்கும்?!

கோவையில் இருந்து சிங்கப்பூர் விமானத்தில் வந்தாலே உதறலாக இருக்கிறது. பூமியை விட்டே சென்று வருவது என்றால்…

யோசித்துப் பார்த்தால் ரொம்ப பயமாக இருக்கிறது.

Read: குலு(க்)ங்கிய விமானம்

நிலவுக்குச் சென்றது பொய் என்றும் செட் போட்டு ஏமாற்றி விட்டார்கள் என்றும் ஒரு சாரார் கூறுகிறார்கள். இதை நம்பவும் முடியலை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

விண்வெளியில் ஆராய்ச்சி கூடம்

இதெல்லாமே பெரிய வியப்பு என்று இருக்கையில், விண்வெளியில் ஆராய்ச்சி கூடம் கட்டிக்கொண்டு இருக்கிறார்களாம்!

எப்படிங்க இதெல்லாம்!! என்னென்னமோ பண்ணுறாங்கயா!!

இதெல்லாம் செய்ய எவ்வளவு பரந்து விரிந்த அறிவு வேண்டும்! அவர்கள் எப்படியெல்லாம் யோசித்து / கண்டு பிடித்து இருப்பார்கள்!

இதையெல்லாம் யோசித்தால் காற்று இல்லாத இடத்தில் விண்கலம் சுற்றுவது போல என் தலை சுற்றுகிறது.

மேற்கத்திய நாடுகளோடு போட்டி போட இந்தியாவும் சேட்டிலைட் அனுப்பி வருகிறது. முன்பெல்லாம் மூன்று அனுப்பினால் இரண்டு புட்டுக்கும்.

எங்காவது கடலில் விழுந்து விட்டது என்று செய்தியில் வரும்.

நாமும் ‘அப்பவே தெரியும்!’ என்று கூறி கடந்து விடுவோம்.

தற்போது வெற்றி என்பது 95% ஆகி விட்டது. இப்பெல்லாம் சேட்டிலைட் அனுப்பினால், நிச்சய வெற்றி என்று நினைக்கும் அளவிற்கு இந்தியா முன்னேறி விட்டது.

இதை விடப் பெரிய விஷயம் வணிக நோக்கில் மற்ற நாடுகளின் சேட்டிலைட்டை கூட எடுத்துச் செல்லும் அளவிற்கு டாப் டக்கர் ஆகி விட்டது.

மங்கள்யான்

என்னதான் இதெல்லாம் இந்தியா செய்தாலும், எனக்குப் பெரிய வியப்பு இது நாள் வரை வந்ததில்லை.

ஆனால், மங்கள்யான் அனுப்பிய பிறகு இது பற்றிய செய்திகளைக் கேள்விப்படும் போதெல்லாம் வியப்பு மற்றும் பெருமை தான்.

இது நாள் வரை ராக்கெட் அனுப்புவார்கள் அது எதோ சுற்று வட்ட பாதையில் இணைந்து விட்டது என்று கூறுவார்கள். நமக்கும் அவ்வளவு தான் தெரியும்.

சரி! ஓகே ஆகிடுச்சு போல என்று அதோடு மறந்து விடுவோம் ஆனால், மங்கள்யான் அப்படி இல்லை.

1350 கிலோ எடை கொண்ட மங்கள்யான், 44 கோடி கிலோ மீட்டர் பயணம் செய்யப்போகிறது.

தற்போது 9,25,000 கிலோ மீட்டர் பயணித்துப் புவி ஈர்ப்பு வட்ட பாதையில் இருந்து பிரிந்து செவ்வாய் கிரகத்திற்கு உண்டான பாதையில் நுழைந்து விட்டதாம் [புவி ஈர்ப்பு வட்டத்தைத் தாண்டிய முதல் இந்திய விண்கலம்].

என்னமோ சொல்றாங்க! நமக்கென்ன தெரியும். தற்போது நிலவு வட்டப் பாதையையும் தாண்டியுள்ளது. இந்த விண்கலம் தினமும் 10 லட்சம் கிமீ தூரம் பயணிப்பதாக இஸ்ரோ கூறியுள்ளது.

மணிக்கு 41000 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறதாம்.

மணிக்கு 41000 கிலோ மீட்டராராராரா??!! அப்படின்னா வேகம் எப்படி இருக்கும்!!

எனக்குத் தெரிந்து சூப்பர் பாஸ்ட் ஜெட் ரயில் மணிக்கு 500 கிலோ மீட்டரில் சீனாவில் போவதாக எப்போதோ படித்தேன்.

இதே கண்ணு மண்ணு தெரியாத வேகத்தில் போகுது. ஒரு நாளைக்கு 10 லட்சம் கிலோ மீட்டர் என்றால்.. கற்பனை கூட செய்ய முடியலையே.

கண் சிமிட்டும் நேரத்தில் எவ்வளோ கிலோமீட்டர் போகும்?

கிட்டத்தட்ட நொடிக்கு 11 கிலோ மீட்டர். 38 நொடியில் சென்னையில் இருந்து எங்க ஊர் கோபிக்கு வந்துடலாம். வேகம் தாறுமாறு 🙂 .

புவி ஈர்ப்பு விசை தாண்டி விண்ணில் பயணிக்கும் போது, இங்கு ஒரு விமானம் தாழப் பறக்கும் வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் செல்ல முடியும்.

அவ்வளோ தூரம் பயணிக்க எரி பொருள் எப்படி சமாளிக்கும் என்றால்.. அது அதுவே தகட்டில் சக்தியை உற்பத்தி செய்து கொள்ளும் என்று கூறினார்கள்.

இது பற்றி எனக்குச் சரியாகப் புரியவில்லை. தெரிந்தவர்கள் தெளிவாக விளக்கவும்.

செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரகத்தை 300 நாட்கள் பயணித்து 2014 செப்டம்பர் 24 ம் தேதி சென்றடையும் என்று தேதி முதற் கொண்டு கூறுகிறார்கள்.

இதில் பெரிய விஷயம் மற்ற நாடுகளை விட இந்தியா குறைந்த செலவில் மங்கள்யானை தயாரித்துள்ளது. 450 கோடி இதற்கான செலவு.

நம்ம அரசியல்வாதிக தினமும் கொள்ளை அடிப்பதை விட ரொம்ப ரொம்பக் குறைவாக இருக்குல்ல… 🙂 .

அரசியல்வாதிக கிட்ட இருந்து புடுங்குனா, செவ்வாய் கிரகத்திற்கு மாசத்திற்கு ஒரு ராக்கெட் விட்டு அமெரிக்காவிற்கு பீதியக் கிளப்பலாம் போல 🙂 .

எனக்கு அமெரிக்கா, செவ்வாய்க்கு அனுப்பிய விண்கலம் “க்யூரியாசிட்டி” அனுப்புற நிழற் படங்களைப் பார்த்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

44 கோடி கிலோ மீட்டர்க்கு அந்தப் பக்கம் செவ்வாய் இருக்கிறது.

அங்கே இருந்து படம் எடுத்து இங்கே அனுப்புகிறது… அந்தப்படத்தை இங்கே அனுப்ப வேண்டும் என்றால், அதில் எவ்வளவு சக்தி வாய்ந்த கருவி இருக்க வேண்டும்! அதோடு அதை இங்க உட்கார்ந்து இயக்குறாங்க.

ஸ்ஸ்ஸ் ஷப்பா.. கண்ணைக் கட்டுது. இது மாதிரி ஒவ்வொன்றையும் யோசித்துப் பார்த்தால்.. வடிவேல் சொல்வது மாதிரி முடிய்ய்யல. Image Credit

இதே போல மங்கள்யானும் படங்களை எடுத்து அனுப்பப் போகிறது எனும் போது ரொம்பப் பெருமையாக இருக்கிறது.

முதல் முயற்சி

நமக்கு இது தான் முதல் முயற்சி எனவே, இதில் தடங்கல்கள் வரலாம், மங்கள்யான் ஒருவேளை செவ்வாயை சென்றடைய முடியாமல் கூட போகலாம்.

ஆனால், நாட்டுல இத்தனை ஊழல் பிரச்சனைகளை வைத்துக்கொண்டு இதைச் சாதித்து இருக்கிறோம் என்பது நமக்குப் பெருமை தரும் விசயம் தானே!

விஞ்ஞானம் வளர்ந்து விட்டது, தொழில்நுட்பம் பெருகி விட்டது, அனைத்தையும் கண்டு பிடிக்கிறார்கள்… எல்லாம் சரி!

ஆனால், இதெல்லாம் இல்லாத பண்டைய காலத்திலேயே இந்தக் கோள்களை எல்லாம் கண்டு பிடித்து, கோவில் உட்பட ஒவ்வொன்றுக்கும் அமைத்து விட்டார்களே!

முருகன் மாதிரி “க்யூரியாசிட்டி” செவ்வாயை சுற்றி வருவதற்குள், நம்ம ஆளுங்க விநாயகர் மாதிரி டக்குனு இங்க கோவிலைச் சுற்றி வந்துட்டாங்க.

இதை நினைத்தால்… செவ்வாய் கிரகத்தில் பள்ளம் மேடுகளில் ஏறி இறங்கும் “க்யூரியாசிட்டி” மாதிரி தலைக்குள்ளே தட தடக்கிறது 🙂 .

விண்கலம் பெயர்

எல்லாம் சரிங்க..! அடுத்த முறை விண்கலத்திற்கு பெயர் வைக்கும் போது வடா தோசா பேரு வைக்காம தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் ஏதாவது ஒண்ணுல வைக்கச் சொல்லுங்க.

சரித்திரத்துல நம்ம பெயரும் வரட்டும் 🙂 🙂 .

இந்தியா என்றாலே பாலிவுட் என்று வெளிநாட்டுக்காரங்க நினைத்துட்டு இருக்கிற மாதிரி, செவ்வாய்க்கு ராக்கெட் விட்டதும் ஷாருக்கான் சல்மான்கான்னு தான்னு நினைச்சுக்கப் போறானுக.. 😀 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

21 COMMENTS

  1. அவ்வளோ தூரம் பயணிக்க எரி பொருள் எப்படி சமாளிக்கும் என்றால்.. அது அதுவே தகட்டில் சக்தியை உற்பத்தி செய்து கொள்ளும் என்று கூறினார்கள். இது பற்றி எனக்கு சரியாகப் புரியவில்லை. தெரிந்தவர்கள் தெளிவாக விளக்கவும்.

    – ஒரு பொருள் நகர்வதற்கு உந்து சக்தி தேவை படுகிறது. அதே பொருள் எதனால் தன் நகர்வை நிறுத்துகிறது (பிரேக் இல்லாமல்), என்று யோசித்தது உண்டா? காரணம், friction (உராய்வு). கார், பஸ் போன்றவைக்கு ரோடு friction. கப்பல், நீர்முழ்கி கப்பல், போன்றவைக்கு நீர் friction. விமானம், நாம் விட்டரியும் கல் ஆகியவைக்கு காற்று friction. இதனுடன் புவிஈர்ப்பு விசையும் சேர்ந்து கொள்ளும். இதனாலேயே நம் பூமியில் ஒரு பொருள் தன் ஓட்டத்தை நிறுத்திக்கொள்கிறது.

    ஆனால் விண்வெளியில் இது போன்ற friction-னோ, புவிஈர்ப்பு விசையோ இல்லை. அதனால் விண்வெளியில் ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் தள்ளப்படுமேயானால், அது அதே வேகத்தில் பயணிக்கும் (எதன்மீதாவது மோதுவதால் மட்டுமே அது நிற்கும்). இதேபோல் நாம் அனுப்பும் செயற்கை கோளுக்கும் உந்துசக்தி மட்டுமே தேவைப்படும். அந்த உந்து சக்தியை தருவதற்கு ஒரு சின்ன மோட்டார் / என்ஜின் போதும். அதற்கு தேவையான எரிபொருள் சூரிய சக்தி மூலம் பெறப்படும். அதனால்தான் நம்மால் விண்வெளியில் எவ்வளவோ துரத்திர்க்கும் செயற்கை கோள் விட முடிகிறது.

    செயற்கை கோளை நிறுத்துவதற்கு அதே மோட்டார் / என்ஜின், எதிர் திசை உந்துசக்தியை உண்டாக்கி நிறுத்தும்.

  2. நான் உங்கள் தளத்தில் படித்த பதிவுகளிலே இது வரை எனக்கு மிகவும் பிடித்த பதிவு இது தான்… நமது சாதனையை எண்ணிஒரு இந்தியனாக நானும் பெருமைபடுகிறேன்.. சிறு வயதில் இருந்து அறிவியலின் மீது ஏனோ ஒரு தீவிர காதல் அதுவும் குறிப்பாக இயற்பியலின் மீது… பின்பு கவனம் வரலாற்றின் மீது திரும்பியது.. ஆனால் விண்வெளி செய்திகள், அதை சார்ந்த நிகழ்வுகள்,வாழ்க்கை வரலாறு என்றுமே பிடித்த ஒன்றாக உள்ளது…இன்று அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியா ஒரு தனி இடத்தை தக்க வைத்து இருந்தாலும், கடந்த கால வரலாற்றை, அதன் சிரமத்தை அப்துல் கலாம் அவர்கள் எழுதிய (அக்னி சிறகுகள்) புத்தகத்தில் தெளிவாக விவரித்துள்ளார் (நேரம் இருப்பின் புத்தகத்தை படிக்க முயற்சி செய்யவும்).. கிரி.. உண்மையில் மிகவும் சிறப்பாக எழுதி உள்ளீர்கள்…பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி..

  3. டெக்னாலஜி தெரிஞ்ச உங்களுக்கே இப்புடினா .. எனக்குலாம் இத பத்தி படிக்கும் போது வாய்ல கொசு போரதுகூட தெரியாது..ஹா ஹா

    அப்பறம் P.Gowrisankar சொன்னதையே சிம்புள்லா சொல்லனும்னா

    ஒரு புஷ் குடுத்தா பொதும் போய்கிட்டே இருக்கும் ஆப்போசிட்ல ஒரு புஷ் குடுத்து வேகத்த குறைக்கலாம், நிறுத்தலாம்

  4. வெற்றிலையில் மை போட்டு செவ்வாய் கிரகத்த பாக்க முடியாத ? 450 கோடி இதுக்கு தேவையா ?

  5. ஹாய் கிரி

    என் மனதில் இருந்த சந்தேகங்களை , ஆச்சர்யங்களை , கற்பனைகளை நீங்கள் பதிவு செய்து இருக்கிறீர்கள். நன்று. நான் நினைப்பதோடு நிறுத்தி விடுகிறேன். நீங்கள் திறன் பட எழுதுகிறீர்கள் . மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  6. //அரசியல்வாதிக கிட்ட இருந்து புடுங்குனா செவ்வாய் கிரகத்திற்கு மாசத்திற்கு ஒரு ராக்கெட் விட்டு அமெரிக்காவிற்கு பீதியக் கிளப்பலாம் போல icon smile //
    சரியா சொன்னீங்க..
    நமக்கு நாம் இருக்கிற பூமியே ஒரு பிரம்மாண்டம் தான்.பூமிக்கு சூரியனும் சுற்றி இருக்கும் கோள்கள் பிரம்மாண்டமாய் இருக்கும். நம்ப சூரிய குடும்பத்துக்கு இந்த பால்வெளி மண்டலம் பிரம்மாண்டம்…இந்த பால்வெளி மண்டலமே ஒரு சிறு புள்ளி தான் இந்த பிரபஞ்சத்துல..இப்படியே போய்கிட்டே இருக்கும் போல..நினச்சாலே கண்ண கட்டுதே..
    அப்புறமும் ஏன் இந்த மக்கள் (குறிப்பா இந்த அரசியல்வாதிகள்) நான் தான் பெரியவன்னு இவ்ளோ ஆட்டம் போடுறாங்களோ!!

  7. அதே மாதிரி இன்னொரு சந்தேகம்.. இந்த மாதிரி நம்ம செயற்க்கைக்கோள் போயிட்டு இருக்கும் பொது, எதிர்ல எதுனா விண்கல் இல்ல பாறாங்கல் வந்து இடிச்சிட்டா என்ன பண்ணுவாங்க…

    இது வரைக்கும் அனுப்புன எந்த செயற்க்கைகோளையும் ஒண்ணு கூடவா இடிக்கலை ?

  8. உங்களுக்கே இவ்வளவு சந்தேகம்னா என்னையெல்லாம் என்ன பண்ண கிரி ?

  9. நண்பா கிரி

    விண்வெளியை பற்றி நான் என்ன என்ன நினைத்து கொண்டிருகிறோனோ அதையே உங்கள் பதிவாக படிக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது…..என்னே ஒரு விசித்திரம்….என்னே ஒரு விந்தை……ம் ம் ம் ம்…..

  10. இத்தனை ஏழ்மையுடன் இந்தியாவுக்கு இது தேவையா பல வெள்ளை இனவெறி பத்திரிக்கைகள் கூக்குரலிடுகின்றன. இந்த கும்பலோடு சேர்ந்து வெளிநாட்டுக்கு ஓடிய சில இந்தியர்களும் மேட்டிமைதனத்தோடு மங்கள்யான் புட்டுக்கும் நட்டுக்கும் என பேசுவதை பார்த்தால் எரிச்சல்தான் வருகிறது. சிங்கப்பூர்வாசியான தாங்கள் மங்கள்யானைப் பார்த்து பெருமைபடுவது குறித்து வந்தனங்கள். வறுமை முற்றிலுமாக ஒழித்துவிட்டுதான் ராக்கெட் விடவேண்டும் என்றால் 6 லட்சம் வீடில்லாத ஏழைகள் இருக்கும் அமெரிக்காவே ராக்கெட் விடாமல் மேட்டுவளையை பார்க்க வேண்டியதுதான்!

    • நந்தவனத்தான் ஆறு வருடம் ஆகிவிட்டது. இதற்குப் பிறகு அப்புறம் நீங்க வருவதே இல்லையோ?

  11. இன்னும் விண்வெளி பத்தியும் செயற்கைக்கோள் பத்தியும் தெரிஞ்சிக்க இந்த சைட் பாருங்க.
    நம்ம ஆள் நல்லா எழுதுறாப்டி. http://ariviyal.in/

  12. //நீங்க சின்னதா ஒரு கற்பனை செய்து பாருங்க. முதலில் நீல் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் விண்கலத்தில் செல்லும் போது அவர்கள் மனநிலை எப்படி இருந்து இருக்கும்? முழுவதும் இருட்டு! என்ன ஆகும் என்று யாருக்கும் தெரியாது? விண்கலம் இறங்கியதும் உள்ளே புதைந்து விடுமா? உருகி விடுமா? எப்படி இருக்கும் என்று பயம் இருக்கும்.//

    எங்கோ படித்தது உண்மையா என்று தெரியவில்லை. NASA திட்டத்தின் படி ஆல்ட்ரின் முதலில் இறங்க வேண்டியது, அவர் யோசித்து (பயம் ?) கொண்டு இருக்கும்பொழுதே ஆம்ஸ்ட்ராங் முதல் அடியை வைத்துவிட்டார்…..

  13. ஒரு கல்ல கயுத்தில கட்டி வேகமா சுத்தி விட்டா சாதரணமா தூக்கி எரியுரதவிட வேகமா நம்ம எருயுற திசைய நோக்கி போகும் மேலும் சக்தி குறைவா தான் தேவைப்படும் அது தான் இங்க பெரிய அளவுல வேல செய்து என்ன புவிஈர்ப்பு விசை இல்லாததல போய்டே இருக்கு சூப்பர் மேன் அடிச்ச பந்து மாதிரி

  14. கிரி ! தலைவர் பிறந்த நாளுக்கு எதுவும் ஸ்பெஷல் பதிவு இல்லையா? இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் அன்புத் தலைவனுக்கு….!

    காயத்ரிநாகா.

  15. @கௌரி ஷங்கர் ரொம்ப அருமையா கூறி இருக்கீங்க. நன்றி 🙂

    @யாசின் நன்றி 🙂

    @ஆனந்த் எனக்கு விண்வெளி தொழில்நுட்பம் பற்றி தெரியாது.

    @கமலக்கணன் உங்களுக்கு நந்தவனத்தான் பதில் கூறி இருக்கிறார் 🙂

    @ஆனந்த் & ஸ்ரீகாந்த் நன்றி 🙂

    @அகிலா 🙂

    @தினேஷ் திரும்ப ஒரு கட்டுரை எழுதும் எண்ணம் இருக்கிறது. அதில் இதை சேர்க்கிறேன்.

    @MS இன்னொரு முறை கணக்கு போட்டு பாருங்க 🙂

    @நந்தவனத்தான் சரியா சொன்னீங்க

    @கார்த்திக் அறிமுகத்திற்கு மிக மிக நன்றி 🙂 ரொம்ப பயனுள்ளதாக இருந்தது. இவர் தளம் பற்றி பின்னர் குறிப்பிடுகிறேன்.

    @தமிழ்செல்வன் உண்மை தான். நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

    @கண்ணன் நன்றி

    @காயத்ரி நாகா ரஜினி பற்றி ஏற்கனவே நிறைய எழுதி விட்டேன். ஏதோ எழுத வேண்டும் என்று எழுத விருப்பமில்லை.

  16. விண்வெளி எல்லாம் எனக்கு பெரிய விருப்பம் இருந்தது இல்லை தல அதுக்கு ஒரு தனி ஆர்வம் வேணும் அது என்கிட்ட இல்லன்னு நினைப்பேன்

    ஆனா இந்த பதிவு ரொம்ப interesting க இருக்கு. தெரியாத புரியாத பல கேள்வி இருக்கு விண்வெளி சம்மந்தமா

    மங்கள்யான் பத்தி நெறைய தெரிஞ்சு கிட்டேன் இந்த பதிவு ல
    அடுத்த ராக்கெட் பேரு எங்க பவர் ஸ்டார் நு வைக்கணும்

    – அருண்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here