செக்ஸ் ஒரு விரிவான பார்வை!

22
sex tamil செக்ஸ் ஒரு விரிவான பார்வை

செக்ஸ் பற்றி படித்து, கேட்டு தெரிந்து கொண்டதை வைத்து எழுதியதாகும். இது சரி இது தவறு என்று கூறப்போவதில்லை, இவை எல்லாம் நடக்கிறது நடக்கலாம் என்று மனதில் படுவதை பகிர்ந்து கொள்கிறேன் என்பதை தெளிவுப்படுத்தி விடுகிறேன்.

செக்ஸ்

உலகிலேயே அதிகம் பேருக்கு தெரிந்த வார்த்தைகள் என்று ஒரு கணக்கெடுத்தால், அதில் SEX என்ற வார்த்தை கண்டிப்பாக இருக்கும். Image Credit

ஆங்கிலமே தெரியாதவர்களுக்குக் கூட இந்த வார்த்தை அறிமுகம் ஆகி இருக்கும்.

மனிதனோ விலங்கோ செக்ஸ் என்பது வாழ்வில் தவிர்க்க முடியாத விசயமாகி விட்டது. 

செக்ஸ் என்ற வார்த்தையை எங்கே படித்தாலும் அதில் என்ன இருக்கிறது? என்று தெரிந்து கொள்ள விரும்புவது ஒரு சராசரி நபரின் எண்ணமாகும்.

முதல் முறையாக என் தளத்தில் நீங்கள் இதை படித்துக்கொண்டு இருந்தால், தலைப்பில் உள்ள வார்த்தைக்காக மட்டுமே!

இது ஒன்றும் தவறான செயல் அல்ல ஒரு சராசரி நபருக்குள்ள இயல்பான ஆர்வம்.

செக்ஸ் பற்றிய ஆரம்பம்

பள்ளி படிக்கும் போது இவ்வெண்ணங்கள் துவங்கி விடுகிறது. இனக்கவர்ச்சி என்ற விசயத்தில் சம்மந்தப்படாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

செக்ஸ் பற்றிய ஆர்வம் தேடுதல் என்பது அப்போது செக்ஸ் புத்தகங்களை படிப்பதில் ஆரம்பிக்கிறது. எனக்கு செக்ஸ் புத்தகங்கள் அறிமுகமானது மாணவர் விடுதியில் படிக்கும் போது தான்.

மாணவர் விடுதியில் இருந்தால் இதை கடக்காமல் வர வாய்ப்புக் குறைவு ஆனால், படிக்காமலே முடித்தவர்களும் எனக்கு தெரியும் அவர்களை நான் அறிந்த வரையில்.

ஆனால், அவர்களின் மறுபக்கம் எப்போதும் ஆராய முடியாதது என்பதால், என்னால் மட்டுமல்ல எவராலும் உறுதியாக கூற முடியாது.

அப்போது இணையம் நீலப்படங்கள் எல்லாம் பிரபலமாகவில்லை. இருந்த ஒரே வாய்ப்பு செக்ஸ் புத்தகங்கள் மட்டும் தான்.

தற்போது இணையம் சென்றால் என்ன வேண்டும் என்றாலும் பார்க்க முடியும் என்றாகி விட்டது.

மாணவர்கள் பிரவுசிங் சென்டர் சென்று கதவைச் சாத்திக்கொண்டு பார்ப்பது “திருக்குறள்” அல்ல என்பதை அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

நீலப்படங்கள்

எளிதில் நீலப்படங்கள் (Blue Film – Porno film) DVD கிடைக்கிறது. செக்ஸ் புத்தகங்கள் எல்லாம் இணையத்தில் E Book ஆக மாறி விட்டது.

கணக்கிலடங்கா செக்ஸ் தளங்கள் இணையத்தில் குவிந்து கிடக்கின்றன.

தமிழிலே இருக்கும் தளங்கள் பலவற்றை படித்தால், தமிழ் கலாச்சாரம் என்று கூறிக்கொண்டு இருப்பவர்கள் வாயடைத்து விடுவார்கள்.

இதைப்போல நடந்து கொள்பவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும், இவர்களைப்போல இருப்பவர்களைப்பற்றி அறிந்து கொள்ளாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காது.

இத்தளங்களையும் அதில் எழுதப்படுபவையையும் காட்டப்படுபவையையும் வைத்து எல்லோரும் இப்படித்தான் என்று மற்றவர்களை தவறாக எடை போட முடியாது என்றாலும், இவையும் அதிகம் நடந்து கொண்டுள்ளன என்பது உண்மை .

திருமணத்திற்கு முன் உறவு

இது அதிகம் சர்ச்சையான விசயமாக அனைவராலும் விவாதிக்கப்படுகிறது என்றாலும், பெரும்பாலான மக்களால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது அல்லது விருப்பம் இருந்தாலும் சமூகத்திற்கு பயந்து எதிர்ப்பதைப் போல காட்டிக்கொள்ளப்படுகிறது.

அதற்கு நமது கலாச்சாரமும் ஒரு முக்கியமான விஷயம் ஆகும் ஆனால், கால மாற்றத்தில் கலாச்சாரம் என்பதன் அர்த்தம் அவரது எண்ணங்களுக்கு ஏற்ப மாறி வருகிறது.

இது முதலில் இருந்தே அப்படித்தான் என்றாலும், தற்போது அந்த மாற்றத்தின் சதவீதம் அதிகரித்துள்ளது அவ்வளவே.

இதை தடுக்கவே முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.

தற்போது அனைவருக்கும் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம், முன்பு இருப்பதை போல இல்லை. ஒரு ஆணோ பெண்ணோ உறவுகொள்ள தற்போது வாய்ப்புகள் அதிகம் ஆகி விட்டன.

தற்போது அது பள்ளியில் இருந்தே ஒரு சிலரிடம் தொடங்கி விட்டது.

பள்ளியிலேயே இப்படி என்றால் கல்லூரி, வேலை செய்யும் இடம் மற்றும் மற்ற இடங்களில் உங்கள் கற்பனைக்கெட்டாதவாறு தான் நடந்து கொண்டுள்ளன.

தற்போது கல்லூரி முடிக்கும் ஒரு மாணவன் ஒரு நீலப்படத்தை அல்லது ஏதாவது ஒரு காட்சியையாவது பார்க்காமல் கல்லூரியே முடித்து இருக்க முடியாது என்பது தான் நடைமுறை உண்மை.

அது DVD யாகவும் இருக்கலாம் இணையமாகவும் இருக்கலாம். எப்போதும் போல சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

இதில் மாணவிகளின் சதவீதம் மாணவர்களை ஒப்பிடும் போது குறைவாக இருக்கலாம் ஆனால், இதெல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆண்கள் பெண்கள் சகஜமாக பழக முன்பை விட தற்போது ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாலும் ஊடகங்கள் மற்றும் இணையம் தரும் செய்திகள் அவர்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

மேற்கத்திய கலாச்சாரங்களை அப்படியே பின்பற்ற நினைப்பதாலும், திருமணத்திற்கு முன்பே உறவு என்பது இன்னும் கொஞ்ச காலம் சென்றால் நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ! ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை வரலாம்.

பரிணாம வளர்ச்சி

சிறந்த எடுத்துக்காட்டாக முன்பு செக்ஸ் புத்தகங்கள், பின் நீலப்பட கேசட்கள், பின் நீலப்பட DVD (தற்போது 3D), இணையம் என்று கால மாற்றத்திற்கேற்ப வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இதை யார் தடுக்க நினைத்தாலும் நிறுத்த முடியாது.

முன்பு திருமணமாக  தாமதமானால் கட்டுப்பாட்டுடன் இருந்தார்கள் ஆனால், தற்போது கிடைக்கும் வாய்ப்புகள் பலரின் கட்டுப்பாட்டை அசைத்து விடுகிறது.

இதற்கு முக்கிய காரணமாக மேற்கத்திய கலாச்சாரமும் அதை அனைவருக்கும் எளிதாக கொடுக்கும் ஊடகங்களையும், இணையத்தையும் மற்றும் பல நாட்டுப் பயண வசதி வாய்ப்புகளும் காரணமாக கூறலாம்.

சுருக்கமாக கூற வேண்டும் என்றால், ஒரு சராசரி நபரை தூண்டக் கூடிய காரணிகள் அதிகம் ஆகி விட்டன.

நாம் சும்மா இருந்தாலும் எதையும் நினைக்காமல் இருந்தாலும் நம்மை சுற்றி உள்ள சூழ்நிலைகள் சும்மா விடுவதில்லை.

இவையே தவறுகள் அல்லது வரம்பு மீற ஒருவரை தூண்டுகிறது. இவை வரும் காலங்களில் இன்னும் அதிகரித்துக்கொண்டே தான் செல்லும் என்பது உண்மை.

விவாகரத்து

திருமணம் என்பது இந்தியக் கலாச்சாரத்தில் அனைவராலும் போற்றப்படும் ஒரு விஷயம் மற்ற நாடுகள் கூட இந்தியா பற்றி பேசும் போது நம்முடைய திருமண பந்தத்தை பற்றி சிலாகித்து கூறுகின்றன ஆனால், தற்போது நடக்கிறது என்ன?

ஒரு வாரத்தில் விவாகரத்து கேட்கும் நிலை சர்வசாதரணமாக வந்து விட்டது. ஈகோ பிரச்சனைகள் அதிகம் பெருகி விட்டன.

தனது மனைவி / கணவரை விட அடுத்தவர் பெட்டராக தெரிவதால் குடும்ப வாழ்வில் சலிப்பு வந்து வாழ்க்கையே பலருக்கு சூனியமாகி விடுகிறது.

இதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக செக்ஸை கூறலாம். திருப்தியடையாத கணவன் மனைவி அடுத்தவரை நாடுவது செய்திகளில் அதிகம் அடிபடும் விசயமாகி விட்டது.

மாறும் உறவு முறைகள்

தினமும் செய்தித் தாள்களில் கள்ள உறவு செய்திகள் வராமல் இருந்தால், அன்று அது அதிசய நிகழ்வே. தாங்கள் செய்யும் செயல்களுக்கு அவரவர் நியாயம் கற்பித்துக்கொள்கிறார்கள் அது தவறாகவே இருந்தாலும்.

“உறவு முறைகள்” மாறுகிறது. குடும்ப ஆண்கள் குடும்பப் பெண்கள் என்ற ஒரு பதம் அனைவராலும் கூறப்படுகிறது செய்திகளிலும் வருகிறது.

இவர்கள் தான் ஊரில் ஒழுக்கமானவர்கள் மற்றவர்கள்!! எல்லாம் மோசம் என்கிற ரீதியில்.

அப்படி என்றால் கள்ள உறவுகளில் மாட்டுபவர்கள் கள்ள உறவிற்காக தங்கள் குழந்தையைக்கூட கொலை செய்யத் தயங்காதவர்கள் எல்லாம் யார்?

இவர்கள் எல்லாம் இந்தப் பிரச்சனையில் மாட்டும் முன்பு எந்தப் பதத்தில் இருக்கிறார்கள்?

முரண்பாடாக இல்லையா!

க்ரூப் செக்ஸ்

தற்போது சில இடங்களில் நடந்து கொண்டு இருக்கும் செயல் இது.

ஆண் பெண் இருவர் என்ற நிலை மாறி பல ஆண்கள் பல பெண்கள் ஒன்றாக உறவு கொள்வதே க்ரூப் செக்ஸ் என்று கூறப்படுகிறது.

இவை பற்றி எல்லாம் மேலை நாடுகளில் மட்டும் கேள்விப்பட்டதுண்டு ஆனால் இவை எல்லாம் தற்போது நமது பகுதியிலும் நடந்து கொண்டு இருக்கும் விசயமாகும். இதை நான் கூறவில்லை ஊடகங்களே பல கட்டுரைகளை எழுதித்தள்ளி விட்டது.

இவை எல்லாம் நடக்காது பொய்யாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அப்பாவி பட்டத்தை உங்களுக்குத்தான் கொடுக்க வேண்டும்.

ஓரினச்சேர்க்கை

ஆணும் பெண்ணும் உறவு கொள்வதே உலகில் உள்ள மக்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட இயற்கையான உறவு முறையாகும் ஆனால், அதோடு பண்டைக் காலத்திலே இருந்து அதுனுடன் தொடர்ந்து வரும் இன்னொரு உறவு முறை ஓரினச்சேர்க்கையாகும்.

ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் உறவு கொள்வதையே ஓரினச்சேர்க்கை என்கிறோம்.

முன்பு இலைமறைவு காயாக நடந்து கொண்டு இருந்தது தற்போது பல நாடுகளில் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ஒன்றாக மாறி விட்டது கால ஓட்டத்தில்.

இப்போது ஓரின சேர்க்கையாளர்கள் திருமண நிகழ்வு இயல்பாகி விட்டது.

ஓரினச்சேர்க்கை என்ற விஷயம் தமிழ்நாட்டில் தற்போது தான் வந்தது போலவும் அதில் மிகச்சிலரே சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்றும் நினைத்துக்கொண்டுள்ளார்கள்.

செய்திகளில் வந்த பனகல் பூங்கா 

சென்னையில் 1996 வருடம் முன்பு என்று நினைக்கிறேன் ஜூனியர் விகடனில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றி செய்தி வந்தது சிலருக்கு தெரிந்து இருக்கலாம்.

குறிப்பாக சென்னை டி நகர் பனகல் பூங்கா பற்றி, இங்கே அதிகமாக ஓரினசேர்க்கையாளர்கள் வந்து செல்கின்றார்கள் என்று.

செய்தியில் வந்ததால் தெரிந்தது ஆனால், இதற்கு முன்பேயும் தற்போதும் ஏராளமான ஓரினச்சேர்க்கை நபர்கள் இங்கே இருக்கிறார்கள் சதவீத அளவில் மட்டுமே வேறுபாடு.

தற்போது அதிர்ந்து போகக்கூடிய அளவிற்கெல்லாம் இல்லாமல் ஓரினச்சேர்க்கை செய்திகள் சர்வ சாதாரணமாகி விட்டது.

முதன் முதலில் ஓரினச்சேர்க்கை என்பதை கேள்விப்பட்டது பள்ளியில் படிக்கும் போது மாணவர் விடுதியில்.

ஹாஸ்டல் என்றாலே அங்கே ஓரினச்சேர்க்கை இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை, அதுவும் தற்போதெல்லாம் இன்னும் அதிகம் ஆகி விட்டது.

பள்ளி, கல்லூரி மற்றும் ஆண் பெண் தங்கும் விடுதிகள் என்று எங்கும் ஓரினச்சேர்க்கை நீக்கமற நிறைந்து இருக்கிறது.

நீங்களும் சம்பந்தப்பட்டு இருக்கலாம்

இதைப்படித்துக்கொண்டு இருக்கும் ஒரு சிலர் கூட ஓரினச்சேர்க்கை என்ற விசயத்தில் சம்பந்தப்பட்டு இருக்கலாம் ஆண் பெண் இருவரையும் சேர்த்தே கூறுகிறேன்.

வேலைக்குச்செல்லும் ஆண்கள், பெண்கள் விடுதிகளில், கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளைக் கேட்டாலே இது பற்றி கூறுவார்கள்.

இதை சரி தவறு என்று கூறவில்லை இது அவரவர் கண்ணோட்டத்தைப் பொறுத்தது.

எது சரி எது தவறு?

உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கண்ணோட்டம். நமக்கு சரி என்று படுவது இன்னொருவருக்கு தவறு. நமக்கு தவறாக தெரிவது இன்னொருவருக்கு சரியாகத் தோன்றுகிறது.

ஓரினச்சேர்க்கை நபர்களை கேட்டால் அவர்கள் செய்வது சரி என்பார்கள். திருமணத்திற்கு முன் உறவு கொள்பவர்களை கேளுங்கள் தான் செய்வது தவறில்லை என்பார்கள்.

இன்னும் பலர் இவை அனைத்துமே தவறு என்பார்கள்.

இதில் யார் கூறுவது சரி தவறு! யாரும் இதை முடிவு செய்ய முடியாது.

அவரவர் வாழும் சூழ்நிலை, கலாச்சாரம்,  வளர்ப்பு ஆகியவற்றை பொறுத்து நமது எண்ணங்கள் வளருகிறது. இதையொட்டியே ஒரு விஷயத்தைப்பற்றிய சரி தவறு என்ற தீர்மானங்கள் முடிவாகின்றன.

கலாச்சாரம் என்பது கால மாற்றத்திற்கு ஏற்ப மாறி வரும் ஒன்றாகும், நிலையானதல்ல. இன்று தவறு என்பது நாளை ஏற்றுக்கொள்ளும்படி வரலாம்.

முடிவு செய்வது யார்?

எது ஒழுக்கம் / ஆபாசம் என்பதை யார் தீர்மானிப்பது?

நீங்கள் எதை ஆபாசம் இல்லை என்று கருதுகிறீர்களோ! அது இன்னொருவருக்கு ஆபாசமாகத் தெரியும் அதே போலத்தான் ஒழுக்கமும்.

இப்ப யார் தீர்மானிப்பது ஒழுக்கம் / ஆபாசம்! இதை டென்ஷன் ஆகாமல் பொறுமையாக யோசித்துப்பாருங்கள்.

அனைத்து இடங்களும்

நமது நாட்டிலே மேல்தட்டு மக்கள், நடுத்தர மக்கள் மற்றும் அடித்தட்டு மக்கள் என்று மூன்று பிரிவு இருக்கிறார்கள். அனைத்து இடங்களிலும் மேற்கூறிய அனைத்தும் நடக்கிறது.

இல்லை என்று மறுக்க முடியுமா!

நடக்கும் செயல்களில் சதவீத அளவில் மட்டும் மாற்றம், மற்றபடி அனைத்தும் அனைத்து இடங்களிலும் நடக்கிறது. இப்படி எல்லாம் நம்மை சுற்றி நடக்கவில்லை என்று நீங்கள் நினைத்தால், அது உங்கள் அறியாமை.

எது ஒழுக்கம் என்பதை யாரும் அறுதியிட்டு கூற முடியாது என்பதே உண்மை. ஒவ்வொருவருக்கும் ஒழுக்கத்திற்கான அளவுகோல் வேறுபடும்.

நிர்வாணமாக இருக்கும் ஊரில் நீங்கள் ஆடை அணிந்தால் அவர்கள் பார்வையில் நீங்கள் பைத்தியம்.

பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக்கொண்டதை சரி என்று அனைவரும் பின்பற்றுகிறோம் அவ்வளவே.

மாற்றங்கள் என்றும் தவிர்க்க முடியாதது

உலகில் மாறாத ஒரே விஷயம் மாற்றம் ஒன்று தான்.

அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம் உங்களுக்கு பிடித்து இருக்கலாம் பிடிக்காமலும் இருக்கலாம் அதற்கு அதைப் பற்றி எதுவும் கவலையில்லை மாற்றத்தை நடத்திக்கொண்டே தான் இருக்கும்.

முன்பு செக்ஸ் புத்தங்கங்கள் படிப்பது பெரிய விசயமாக இருந்தது பின் நீலப்படங்கள் என்றானது தற்போது திருமணத்திற்கு முன் பின் பலருடன் உறவு என்று ஆங்காங்கே நடந்து கொண்டுள்ளது.

கட்டுப்பாட்டில் இருக்காது

எதிர்காலத்தில் என்னவாக இருக்கும் என்று எனக்கு தோன்றினாலும் அதை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.

பிற்காலங்களில் நாம் யாரையும் கட்டுப்பாடு செய்ய முடியாது “இப்படி செய்யாதே என்று கூற முடியாமல் பாதுகாப்பாக இரு” என்ற வெளிப்படையாக கூற வேண்டிய நிலை வரலாம் வரும்.

பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டதாக நினைத்துக்கொள்ளுமாம், வசனம் பழையதாக இருந்தாலும் இந்த விசயத்திற்கு முற்றிலும் பொருத்தமான ஒன்றாகும். நாம் நினைக்கும்படி இந்த உலகம் இல்லை.

சூழ்நிலையே தீர்மானிக்கிறது

யாரையும் வெளிப்புற நடவடிக்கையை வைத்து முடிவு செய்து விடாதீர்கள்.

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மோசமான மறுபக்கம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாத ஒரு விஷயம் இருக்கலாம்.

அது தெரியாதவரை அவர் வெளி உலகிற்கு நல்லவர் தான். இது ஆணுக்கு மட்டுமல்ல பெண்ணுக்கும் சந்தேகமில்லாமல் பொருந்தும்.

சுருக்கமாக கூறுவதென்றால் தவறு செய்ய வாய்ப்பு அமையாத வரை ஒருவர் நல்லவரே! சூழ்நிலையே நம் முடிவுகளை பெரும்பாலும் தீர்மானிக்கிறது.

யார் ஒழுக்கமானவர்?

உலகத்திற்கு ஒழுக்கமானவன்(ள்) என்பவன்(ள்) யார் தெரியுமா? தான் செய்யும் தவறை திறமையாக மறைப்பவன்(ள்) தான். இவை இல்லாமல் சில விதிவிலக்குகள் எப்போதும் போல இருக்கும்.

தான் ரொம்ப யோக்கியன் ஒழுக்கமானவன்(ள்) என்று அனைவரிடமும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறவர்களின் மனசாட்சிக்குத் தெரியும் தான் எப்படிப்பட்டவர் என்று, இதை படித்துக்கொண்டு இருக்கும் நீங்கள் உட்பட.

எனவே அடுத்தவரைக் குறை சொல்வதை விட்டு விட்டு நம் அளவில் நாம் சரியாக இருக்கிறோமா! என்று பார்த்தாலே போதுமானது.

மாற்றங்களைத் தடுக்க முடியாது

“ரோசாப்பூ ரவிக்கைக்காரி” படத்தில் பெண்களுக்கு உள்ளாடை விற்பனை செய்ததற்காக சிவக்குமாருக்கு ஊர் பஞ்சாயத்தில் தண்டனை கொடுப்பார்கள்.

காரணம், அந்த ஊரில் பெண்கள் உள்ளாடைகள் அணிவது கலாச்சார சீரழிவு.

ஊர் பெரிய மனிதராக வரும் வினுச்சக்கரவர்த்தி அவர்கள் கூறுவார் “என்ன கட்டுப்பாடு போட்டாலும் வருகிற நாகரீகம் வந்துட்டு தான் இருக்கும்.. ஊருக்கு தான் கட்டுப்பாடு போட முடியும் உலகத்துக்கேவா போட முடியும்” என்று.

எவ்வளவு உண்மை!

இதையே நாம் நாகரீகம் என்பதற்குப் பதிலாக செக்ஸ் பற்றிய மாற்றங்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.

இவை மாறிக்கொண்டே தான் இருக்கும் நீங்கள் நினைத்தாலும் தடுக்க முடியாது என்பதே மறுக்க முடியாத உண்மை.

இதுவும் கடந்து போகும்!

பின் குறிப்பு:

இந்தக்கட்டுரை எழுதிய தேதி 01-12-2010.

இந்தக்கட்டுரையில் உடன்பாடு இல்லாதவர்கள் நினைவு இருந்தால், இன்னும் சில மாதங்கள், வருடங்களுக்குப் பிறகு படித்துப்பாருங்கள் இன்று ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சில விஷயங்கள் பின் நீங்கள் ஏற்றுக்கொள்ளும்படி நேரலாம்!

Read : திருமணத்துக்குப் பெண் தேடும் படலம்!

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

22 COMMENTS

  1. தெளிவாக அலசியுள்ளீர்கள், ஜதார்ர்த்தத்தை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள், நன்றி.

    //ஆபாசம் என்பதை யார் தீர்மானிப்பது? நீங்கள் (நீங்கள் என்றால் இதைப்படித்துக்கொண்டு இருக்கும் நீங்கள் பொது மக்கள் அல்ல) எதை ஆபாசம் இல்லை என்று கருதுகிறீர்களோ! அது இன்னொருவருக்கு ஆபாசமாகத் தெரியும் அதே போலத்தான் ஒழுக்கமும். இப்ப யார் தீர்மானிப்பது ஒழுக்கம் – ஆபாசம்! இதை டென்ஷன் ஆகாமல் பொறுமையாக யோசித்துப்பாருங்கள்.//

    எல்லாமே காலத்தோடு மாறிப்போனாலும் மாற்றம் என்கின்ற சொல்லோடு இந்த ‘புரிவுத்தன்மை’ இல்லாத ‘டென்சன் பாட்டிகளும் காலம் உள்ளவரை மாறாமல் இருந்துகொண்டுதான் இருக்கும்.

  2. என்னங்க கிரி, இம்மாம் பெரிய அனுகுண்ட டமால்னு தூக்கி போட்டுட்டீங்க? இதுல சில விஷயங்கள என்னால ஏத்துக்கறது மட்டுமில்ல நம்ம பக்கத்து ஊர்ல எங்கியோ நடக்குதுன்னு நெனச்சு சகிச்சுக்க கூட முடியல. :(((

    //இவை எல்லாம் நடக்காது பொய்யாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் Mr அப்பாவி பட்டத்தை உங்களுக்குத்தான் கொடுக்க வேண்டும்// அய்யயோ.

    //நம் அளவில் நாம் சரியாக இருக்கிறோமா! என்று பார்த்தாலே போதுமானது நம் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்// இது பிடிச்சிருக்கு.

    குறிப்பு: வாக்கியங்களில் “,” “.” “?” “!” போன்றவற்றை இடம் மாற்றியும் சில சமயம் பயன்படுத்தாமலும் வாக்கியங்கள் உள்ளன. அவற்றை சரியான இடத்தில் பயன்படுத்தினால் வாசிக்க இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.

  3. //தற்போது அது பள்ளியில் இருந்தே ஒரு சிலரிடம் தொடங்கி விட்டது…. அதிர்ச்சி அடையாதீர்கள்! // இதில் அதிர்ச்சி அடைய ஒன்றுமே இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு பதினாரு வயதிற்குள் திருமணம் செய்து வைப்பார்கள். தற்போது சமுகம் திருமண வயதை தள்ளிப் போட்டு இருக்கிறது. உணர்வுகளை சமூகம் கட்டுப்படுத்த முடியாது, அதற்காக நான் குழந்தைகள் திருமணத்தை சரி என்று சொல்லவரவில்லை. பருவ வயதில் செய்ய வேண்டியதை சமூகம் நிலை / பொருளாதார நிலை சரி இல்லாததால் தள்ளிப் போட்டு வருகிறோம்.

  4. மனிதன் என்னதான் தன் கண்டுபிடிப்பால் ஆயுளை நீடித்தாலும், உலகம் தன்னை சமபடுதிக்கொள்ள இயற்கையாகவே ஏதாவது ஒரு வகையில் சீரழிவை கொண்டு வந்துதான் இருக்கும், அதன் உச்சம்தான் இது.

    ஆனால் இங்கு சொன்ன அதனை முறைகளையும் நாகரீகமாக அறிமுகபடுத்திய நாடுகள் அதன் விளைவை உணர்ந்து, ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் அடிப்படை கலாசாரத்தை விரும்ப துவங்கியுள்ளன (சதவீதத்தில் சொல்கிறேன்).

    பின் தங்கியுள்ள நாடுகளில் இப்போது நாகரீகமாக பயன் படும் இங்கு சொன்ன அனைத்தும், வெகு விரைவில் தன் பலனை கொடுக்கும், அந்த தாக்கத்தை அனுபவித்த அடுத்த தலை முறை மீண்டும் நம் வாழ்க்கைமுறைக்கு திரும்பும்., ஆம், “இதுவும் கடந்து போகும்!”.

    காரணம், இயற்கையை போலவே வாழ்கையும் ஒரு சக்கரம் அது துவங்கிய இடத்துக்கே வந்து சேரும், துவங்கியதற்கும் மீண்டும் வந்து சேர்வதுக்கும் இடைப்பட்ட காலமே நம் அனுபவம், வரலாறு அனைத்தும்.

    மருந்தாக நினைத்தால், உணவும் செக்ஸ்சும் கூட ஆரோக்கியம்தான். உயிர் ஆசைபோல் “வெறி” கொண்டால் செக்ஸ்சும் உணவும்தான் மிக கொடிய விஷம்.

    புதிய மனிதா பூமிக்கு வா…! 🙂

    நன்றி!.

  5. //மனிதனோ விலங்கோ செக்ஸ் என்பது வாழ்வில் ஒரு தவிர்க்க முடியாத விசயமாகி விட்டது//

    ஆகிவிடவில்லை, முக்கியமானது தான். பதிவு நன்றாக இருக்கு. இன்னும் தகவல் சிலவற்றை சேர்த்து இருக்கலாம்

  6. //பள்ளிப் பொடுசுகள் பிரவுசிங் சென்டர் சென்று கதவை சாத்திக்கொண்டு பார்ப்பது “திருக்குறள்” அல்ல என்பதை அறிவீர்கள் என்று நம்புகிறேன். எளிதில் நீலப்படங்கள் (Blue Film – Porno film) DVD கிடைக்கிறது. செக்ஸ் புத்தங்கங்கள் எல்லாம் இணையத்தில் E Book ஆக மாறி விட்டது. கணக்கிலடங்கா செக்ஸ் தளங்கள் இணையத்தில் குவிந்து கிடக்கின்றன.//

    ஆனால் பெரியவர்கள் சொல்லுகிறார்கள் மாணவர்கள் செக்ஸ் கல்வி கற்பதால் தான் இவை எல்லாம் பிள்ளைகளுக்கு தெரியப்போகிறது என்பது சுத்த மடமை அல்லவா … உண்மையை மறை, பொய்யை தானாகவே கற்பார்கள் என்று பெரியவர்கள் கூறுகிறார்களோ

  7. அய்யா கிரி அவர்களே. தங்களின் கட்டுரை நன்றாக இருந்தாலும். சமுதாய அவலத்தில் ஓரினச் சேர்க்கையை கூறி இருப்பதால். தாங்கள் ஒரு ஹோமொபோபியா என புரிந்துக் கொண்டேன். அது மிகவும் தவறான அணுகுமுறை. திருமணத்துக்கு முன் பாதுகாப்பு அற்ற உறவுமுறை தவறு தான், பல பேர் சேர்ந்து orgy யில் ஈடுபடுவது மனநோயின் அறிகுறி. பல பேருடன் தொடர்பு, மணத்துக்கு புறம்பான உறவு ( கள்ள தொடர்பு என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை ) போன்றவை மன நோயின் அறிகுறி. ஆனால் ஓரினச்சேர்கை இயற்கையான ஒன்று. ஓரினக்கேர்கையாளர் பலருடன் தொடர்பு வைக்கும்போதே அது மன நோய். ஆகவே ஓரினச்சேர்கையை தவறாக சித்தரிப்பதை நிறுத்தம் படி வேண்டிக் கொள்கிறேன். ஓரினச்சேர்கையை பற்றி காமசூத்ரத்தில் தெளிவாக கூறிய பின்னும் நம் மட இந்தியர்களுக்கு உரைக்க மாட்டேங்குது. என்ன செய்ய?

  8. மேலை நாடுகளில் ஏதோ பலருடன் உறவு கொள்வது போன்ற தோற்றம் பலருக்கு இருக்கின்றது.அமெரிக்காவிலே திருமணமான ஆண் மற்றொரு பெண்ணுடன் உறவு கொண்டதற்காகக் கவர்னர் போன்ற பெரிய பதவிகளை இழந்து விவாகரத்தில் பாதி சொத்தைக் கொடுக்க நேர்ந்துள்ளது. டைகர் உட்ஸ், பில் கிளிண்டன் கதையெல்லாம் தெரியும். சுவீடன் போன்ற நாடுகளிலே மகள் தன் நண்பனுடன் வெளியே போகும் போது தாயே “காண்டமை” மறந்து விடாதே என்று சொல்வாராம். திருமணமாவதற்கு முன்னோ,பின்னரோ ஒருவனுக்கு ஒருத்தி என்பது மேற்கத்திய வாழ்க்கை

    .இந்திய,அரபு நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட “மனைவிகள்” சட்டத்துக்குள்ளும்,சட்டத்தை மீறியும்.

    சிறு பிள்ளைகளிலிருந்தே ஆணும் பெண்ணும் சேர்ந்து பழகும் நாடுகளில் “செக்சு” ஒன்றும் பெரிய செய்தியாகக் கணிக்கப் படுவதில்லை.ஆனால் கண்டபடி அலைகிறார்கள் என்ற பார்வை தவறானது.ஆண்,பெண் சேர்ந்து வாழும் பல கல்லூரி விடுதிகள் அதிகரித்து வருகின்றன.அங்கே “செக்சு” இல்லாமல் நண்பர்களாக ஆணும் பெண்ணும் பழகுவது மிகவும் சாதாரணம். ஒரு ஆணும் பெண்ணும் திருமணமாகமல் சேர்ந்து வாழ்வதும் சர்வ சாதாரணம்.

  9. நீங்கள் எழுதிய கண்ணோட்டத்தில் எல்லா விதமான…கலாச்சார சீர் கேடு நடந்துக்கொண்டுத்தான் இருக்கிறது…அதற்காக உங்களைப்போல் ஒவ்வொருத்தராக முளைத்து அதற்காக வக்காலத்து வாங்கிக்கொண்டு இருக்க வேண்டாம்….பெற்றோரின் சரியான வளர்ப்பு முறை அடியோடு ஒழிந்து விடவில்லை நம் நாட்டில்…
    இனக்கவர்ச்சி…சலனங்கள்..எல்லா காலத்திலும்தான்…மனத இனம் முழுவதும் இருந்துக்கொண்டுத்தான்..இருக்கிறது…தற்காலம் சற்று கூடுதலாக கடைவிரித்து காட்டப்படுகிறது..இதெல்லாம் கொஞ்ச காலம்தான்..
    தயவுசெய்து..சலனம் இருந்தாலும் கட்டுப்பாடோடு…இன்னும் இருந்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளசுகளை உசுப்பேத்தாமல்…(ஏனென்றால் உங்களுடைய எழுத்து முழுவதும் சர்க்கரைக்குள் சாக்கடை ஊறிய வரிகளாய் மணந்தது)
    நல்ல விஷயங்களை பகிர்ந்துக்கொள்வதில் ஆர்வமாக இருப்போம்….

  10. நிதர்சனமான உண்மைகள். இதற்க்கு மேல சொல்லுறத்துக்கு ஒன்னுமே இல்லை அவ்வளவோ ரகசியங்களை அனைவரும் அறிந்திடவும், மக்களிடையெ விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தெளிவாக விளக்கியிருக்கீங்க..!!!

  11. எல்லாமே தெரிந்த விஷயமாக இருந்தாலும், அதை ஒரு கோர்வையாக படிக்க கொடுத்ததற்க்கு மிக்க நன்றி. நல்ல கட்டுரை…

  12. நூறு சதவிகிதம் உண்மையை புட்டு புட்டு வைத்து விட்டீர்கள் அனைவரும் இதை படித்து பார்த்தல் நல்லது இப்பொது வரும் திரைப்படங்களே இதற்கு முக்கிய காரணம்

  13. உண்மைகள் எப்போதும் கசக்கத்தான் செய்யும்.

    //இவை மாறிக்கொண்டே தான் இருக்கும் நீங்கள் நினைத்தாலும் தடுக்க முடியாது என்பதே மறுக்க முடியாத உண்மை.//

    நூறு சதவிகிதம் உண்மை, உண்மை,உண்மை.

  14. இவை எல்லாம் நடந்தாலும் இவை எல்லாம் நல்லவையா கெட்டவையா என்று தீர்மானிப்பது தனி மனித சூழலே ஆகும்.எந்த ஒரு ஆணும் பெண்ணும் நூறு சத ஆண்களும் பெண்களும் அல்ல, ஆணுக்குள் -oestrogen உண்டு ,பெண்ணுக்குள் -testosterone உண்டு ,தர்ப்பாலின கவர்ச்சி இதை கொண்டு நாம் புரிந்து கொள்ளலாம் ,
    extra marital relations -இதற்க்கு ஆழ்ந்த உளவியல் காரணங்கள் உண்டு ,தேவைகள் உண்டு ,pre-marital -இதற்க்கு ஆர்வம் தான் காரணம் ,ஏதோ ஒரு வகையில் இது நிகழும் ,porno-பொறுத்த வரை மனிதர்களுக்கு உண்டான பாண்டஸி மீதான பற்று தான் காரணம்,இதிலிருந்து எளிதில் நாம் விடுபட முடியவில்லை என்றால் ஏதோ சிக்கல் என்று பொருள் .
    என்னை பொறுத்த மட்டில் -சரி தவறு என்பதை ஒவ்வொரு தனி மனித விருப்பு வெறுப்புக்கு ,மனசாட்சிக்கு விட்டுவிடுகிறேன் ,என்னை பொறுத்த மட்டில் இவ்வகை விஷயங்களில் இரு நிலைப்பாடு – ஒன்று ,இக்கட்டான சூழலில் இருந்து எழுந்து மீண்டு வரும் மன வலிமை ,இன்னொன்று பிறர் விருப்புக்கு மாறாக நமது அவாக்களை திணிப்பது கூடாது ,பாலியல் சார்ந்த விஷயங்கள் இன்னும் நெறையா விவாதிக்க படுவது முக்கியம் ஆகும்,

  15. ஹாய் , ஒரு விசயம் தெளிவா சொல்றேன் ஓகே வா .மனிதன் தோன்றிய காலத்திலருந்தே இவ்விசயங்கள் நடந்துகிட்டு தான் இருக்கு. ஆனால் இப்போ உள்ள மீடியா எல்லாமே இதை பெரிசு படுத்தி பேசுறாங்க . பழைய வரலாறை எடுத்து பாருங்க.
    நம்ம தலைய சுத்திரும்.அந்த அளவக்கு நிறைய விசயங்கள் நடந்திருக்கு . சில விசயங்கள நம்மக்கு மன கட்டுப்பாடு அவசியம் .நன்றி

  16. இந்தக்கட்டுரை எழுதிய தேதி 01-12-2010 தற்போது இந்தக்கட்டுரையில் உடன்பாடு இல்லாதவர்கள் நினைவு இருந்தால் இன்னும் கொஞ்சம் மாதங்கள், வருடங்களுக்குப் பிறகு படித்துப்பாருங்கள் இன்று ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சில விஷயங்கள் பின் நீங்கள் ஏற்றுக்கொள்ளும்படி நேரலாம்!

  17. ஹலோ கிரி,

    சரியான அலசல்…..இந்த பதிவு எழுதும் போதே படிச்சேன்…அப்போ கமெண்ட் செய்யல…காரணம் உங்கள போல கோர்வைய எழுத தெரியாது…இப்போ கமெண்ட் செய்ய என்ன காரணம்….இந்த பதிவு படிக்கும் போது [https://www.giriblog.com/mile-sure-remake-review] Related posts: ல இருந்தது… திரும்ப படிக்கலாம் கடைசி பத்தி வரும் பொழுது ஒரு ஆச்சரியம்….
    //இந்தக்கட்டுரை எழுதிய தேதி 01-12-2010//

    நீங்க இந்த கட்டுரை எழுதி சரியாக 1 வருடம் ஆச்சு 🙂

    சுவாமி-[facebook la fm link kodutheney…hope you remember :)]

  18. உங்களின் விரிவான அலசலை மிகவும் எதிர்பார்த்தேன், ஏமாற்றமே அடைந்தேன்.செக்ஸ் ,இதில் இன்னும் எவளவோ இர்ருக்கு. நீங்கள் தொட்டது 0.01 % மட்டுமே.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here