இணையம் வழியாகப் பணத்தைத் திருடுவது சமீபமாக அதிகரித்து வருகிறது. எச்சரிக்கையாக உள்ளவர்களும் ஏமாந்து விடுவது அதிர்ச்சியளிக்கிறது.
திருடுபவர்கள் தங்கள் வழிமுறைகளை மிகத்திறமையாக மெருகேற்றி வருகிறார்கள்.
Kotak Mahindra Bank OTP SPAM SCAM
தெரிந்த ஒருவரின் மொபைலுக்கு அவரின் Kotak வங்கிக்கணக்கு முடக்கப்பட்டதாகக் குறுந்தகவல் (SMS) லிங்க்குடன் வந்ததால், அதிர்ச்சியாகி க்ளிக் செய்து OTP கொடுத்ததில், தனது கணக்கில் இருந்து ₹25,000 இழந்துள்ளார்.
இதில் குறிப்பிட வேண்டியது, பாதிக்கப்பட்டவர் எச்சரிக்கையாக இருப்பவர் ஆனால், வங்கிப்பெயரில் விவரங்கள் வந்ததால் சிறு கவனக்குறைவு / வேறு எதோ நினைவால் இந்நிலை ஏற்பட்டு விட்டது. Image Credit
இவர் செய்த இரு தவறுகள்
- இது போலக் குறுந்தகவல் வந்த பிறகு, தன் வங்கிக் கணக்குச் சரியாக உள்ளதா இல்லையா என்பதை முதலில் பரிசோதிக்கவில்லை.
- குறுந்தகவலில் வந்த லிங்கை க்ளிக் செய்து, அங்கே OTP கொடுத்தது.
வழக்கமான Kotak Mahindra Bank இணையதள முகப்பு என்பதால், எந்தச் சந்தேகமும் வரவில்லை, OTP யைப் பதிவு செய்து விட்டார்.
இரு முறையும் OTP தவறு என்று கூறியதால், சந்தேகப்பட்டு நிறுத்தி, மொபைலை Restart செய்துள்ளார் ஆனால், இடைப்பட்ட நேரத்தில் பணம் களவாடப்பட்டு விட்டது.
வங்கியிலும், சைபர் க்ரைமிலும் புகார் செய்யப்பட்டுள்ளது ஆனால், இன்னும் பணம் திரும்பப் பெற முடியவில்லை. இன்னமும் இது போல SMS வந்துகொண்டுள்ளது.
கவனக்குறைவு
லிங்க்கை பார்த்தால் வழக்கமான லிங்க்காக இல்லையென்பதால் சந்தேகம் வந்து இருக்க வேண்டும் ஆனால், வங்கி விவரங்கள் முதன்மையாகக் கண்களுக்குத் தெரிவதால், மற்றவை கவனத்தில் இரண்டாம் பட்சமாகி விடும்.
அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், மனது தெளிவாக இல்லாத நேரத்தில் / கவனக்குறைவாக இருக்கும் நேரத்தில் ஏமாந்து விடுவோம்.
எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும், ஒரு நொடி கவனக்குறைவு சிக்கலில் விட்டு விடும். எனவே, நானெல்லாம் இதைச் செய்ய மாட்டேன் என்று நினைத்து அதீத நம்பிக்கையில் இருக்க வேண்டாம். அனைவருக்கும் இது பொருந்தும்.
No OTP No Link

எந்தச் சூழ்நிலையிலும் குறுந்தகவலில் வரும் லிங்கை க்ளிக் செய்யாதீர்கள், மறந்தும் யாருக்கும் OTP கொடுக்காதீர்கள். உங்கள் OTP விவரங்களை 100% வங்கி கேட்காது.
வங்கியில் இருந்து பேசுவது போலவே பேசுவார்கள், விவரங்களைக் கூறுவார்கள் / கேட்பார்கள். என்ன கூறினாலும், கேட்டாலும் OTP கொடுக்க வேண்டாம்.
தற்போது வங்கியில் இருந்து அனுப்புவதைப் போலவே SMS அனுப்புகிறார்கள், அதாவது VD-HDFCBK போல. OTP SPAM SCAM அடுத்த கட்டத்துக்குச் சென்று விட்டது.
அழைப்புகளும் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து வருவது போலவே உள்ளது. Truecaller App நிறுவிக்கொள்வது ஓரளவு சேதாரத்தை தவிர்க்கலாம்.
அவர்கள் கூறும், எந்த ஒரு செயலியையும் (App) மொபைலில் நிறுவ வேண்டாம். சிறு கவனக்குறைவு கூட வாழ்நாள் சேமிப்பை காலி செய்து விடும். எச்சரிக்கை!
குறிப்பு : பாதிக்கப்பட்டவரின் அனுமதியுடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
தொடர்புடைய கட்டுரைகள்
தேவையற்ற அழைப்புகளைத் தவிர்ப்பது எப்படி?
மொபைல் எண்ணை ஸ்பாம் செய்த SBI வங்கி
ஹேக்கிங் (Hack) பாதுகாப்பு வழிகள் என்ன?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, படிக்கும் போதே பகீரென்று இருக்கிறது.. பாதிக்கபட்டவரின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது.. எவ்வளவு தான் நாம் எச்சரிக்கையாக இருந்தாலும் இணைய திருட்டை தடுப்பது மிக கடினம்.. எல்லா நேரத்திலும் எச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே நாம் தப்ப முடியும்.. நடுநிசியில் தொலைப்பேசி அழைப்புகள் கூட வரும்.. நாம் ஏதோ மன நிலையில் நம்மை மீறி அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கும் போது மாட்டி கொள்கிறோம்.. பாதுகாப்பு மிக மிக அவசியம்.. இணையத்தை மிகவும் கவனமாக கையாள வேண்டும்.. நமது அதிமேதாவித்தனம் இங்கு வேலைக்கு ஆகாது.. (சிறு கவனக்குறைவு கூட வாழ்நாள் சேமிப்பை காலி செய்து விடும். உண்மையான வார்த்தை கிரி) எச்சரித்தமைக்கு நன்றி..
எவ்வளவு தான் எச்சரிக்கையாக இருந்தாலும், சிறு கவனக்குறைவால் ஏமாந்து விடுகிறோம்.
பாதிக்கப்பட்டவரும் இதே நிலை தான். எச்சரிக்கையாக இருப்பார்.. எதோ ஒரு நினைவில் ஏமாந்து விட்டார்.
இவனுக முயற்சித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாள் மாட்டிக் கொள்கிறோம்.