இலவசம் | தமிழ்நாட்டைப் பிடித்த சனியன்

14
இலவசம்

த்தேர்தலில் இலவசம் தமிழ்நாட்டையே கலக்கிக்கொண்டு இருக்கிறது. இரு பெரிய அரசியல் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு இலவசத்தை அறிவிக்கின்றன. Image Credit

இலவசம் அவசியமா!

இலவசம் அவசியமா இல்லையா என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட பார்வை. கீழ்த்தட்டு மக்கள் இலவசங்களை அதிகம் எதிர்பார்க்கிறார்கள்

சரி! அவர்கள் தான் இல்லாதவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றால், நல்ல நிலைமையில் உள்ளவர்கள் கூட இதற்கு ஆசைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் வருத்தமளிக்கிறது.

நாம் வாங்கும் பொருளால் பயன் இருக்கிறதோ இல்லையோ ஆனால், அவன் வாங்குறானா! அப்ப எனக்கும் வேண்டும்.

இது தான் ஒவ்வொருவரின் எண்ணவோட்டம்.

சைக்கிள் Vs தொலைக்காட்சி

ஜெ முதலில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் கொடுத்தது தான் இதன் ஆரம்பம். இதைச் சமாளிக்க கலைஞர் கையில் எடுத்த ஆயுதம் தான் இலவச தொலைக்காட்சி.

சைக்கிளாவது மாணவர்களுக்குத் தான் பயன்படுகிறது அப்படியே மற்றவர்கள் பயன்படுத்தினாலும் சரி சைக்கிள் தானே! என்று இருந்தது.

அதுவும் இல்லாமல், எண்ணிக்கையில் குறைவாக இருந்ததால் யாரிடமும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

மக்களிடம் என்ன கூறினால் அசைந்து கொடுப்பார்கள் என்பதை அறியாதவரா கலைஞர்!

இத்தனை வருஷம் அரசியலில் இருந்து இது கூடவா தெரிந்து இருக்க மாட்டார் அதனால், அவர் அறிவித்த அதிரடி அறிவிப்புத் தான் இலவச வண்ண தொலைக்காட்சி.

தொலைக்காட்சி என்பது அவசியமான ஒன்று தான் மறுக்கவில்லை ஆடம்பரத்தில் இருந்து அத்யாவசிய தேவைக்கு எப்போதோ மாறி விட்டது தொலைபேசி போல.

ஆனால், மக்களுக்கு அதை விட முக்கிய சேவைகளை அரசு செய்ய வேண்டியிருக்கிறது.

தொலைக்காட்சி எல்லாம் எப்படியும் மக்கள் வாங்கி விடுவார்கள் அப்படியே அவை இல்லை என்றாலும் ஒன்றும் குடி முழுகி விடப்போவதில்லை ஆனாலும் மக்களுக்கு அதன் (இலவசம்) மேல் கவர்ச்சி.

இதில் ஏழை பணக்காரன் என்ற எந்த வித்தியாசமுமில்லை.

சரி இதனால் ஏதாவது மக்களுக்குப் பயன் உண்டா?

ஒரே பயன் இவர்கள் செய்த ஸ்பெக்ட்ரம் ஊழல் இவர்கள் கொடுத்த இலவச தொலைக்காட்சியாலையே எல்லோரிடமும் சென்று சேர்ந்து விட்டது.

இதற்காகச் செலவிட்ட தொகையை எத்தனை ஆக்கப் பூர்வமான செயல்களுக்கு அரசு செயல்படுத்தியிருக்கலாம்… அத்தனையும் அல்லது பெரும்பான்மை வீண்.

யாருமே இதனால் பயனடையவில்லையா?

நிச்சயம் இதனால் ஒரு சிலர் பயனடைந்து இருப்பார்கள். உண்மையிலே மிக ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் இதனால் மகிழ்ந்து இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், இதற்கு மின்சாரம் அதன் பிறகு தொலைக்காட்சி என்றாலே கேபிள் டிவி இல்லாமல் இருக்க முடியாது.

ஆக மொத்தம் இதனால் அவர்களுக்கு இன்னும் கூடுதல் செலவு தான். இதனால் பயனடைந்தவர்கள் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் தான்.

ஒண்ணுமில்லாதவன் தான் இதை வாங்குகிறான் என்றால், நல்ல இருக்கிறவனும் இதை வாங்க அடிதடியே போடுறான்.

முதலில் கொஞ்சம் பேருக்கு இந்த வண்ணதொலைக்காட்சி என்றவர்கள் பெரும்பான்மையானவருக்குக் கொடுக்க முடிவு செய்தார்கள்.

காரணம், அவனுக்கு மட்டும் கொடுத்துத் தனக்கு வரவில்லை என்று மற்றவர்கள் கோபித்து அதனால், பிரச்சனை ஆனால் என்ன செய்வது என்ற பயம்.

வாங்குவதால் நமக்குப் பயனா! அது பற்றி எல்லாம் கவலை இல்லை. அவனுக்குக் கொடுக்குறியா அப்ப எனக்கும் வேண்டும்.

அதை நான் பயன்படுத்துகிறேனா அல்லது பெட்டியில் வைத்து இருக்கிறேனா என்பது விசயமில்லை.

காண்ட்ராக்ட்

அரசு காண்ட்ராக்ட் என்றாலே அங்கே லஞ்சம் இல்லாமல் இருக்க 100% வாய்ப்பில்லை என்பது சிறுவனுக்குக்கூட தெரிந்த ஒரு விஷயம்.

நம்ம பகுதியில் சாலை போடுகிறார்களா, கட்டிடம் கட்டுகிறார்களா, தண்ணீர் தொட்டி அமைக்கிறார்களா, குழாய் பதிக்கிறார்களா என்று எந்த விஷயம் வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள், அங்கே லஞ்சம் இல்லாமல் இருக்காது.

சாலை போட்ட சில நாளிலேயே மோசமாகி விடும் இதற்குக் காரணம் சாலை அமைத்தவர்கள் திறமையில்லாதவர்கள் என்பதல்ல.

காண்ட்ராக்ட் எடுத்தவர் அதிக லஞ்சப்பணம் கொடுத்ததால் அவரால் ஒதுக்கப்பட்ட தொகையில் தரமான பொருட்களைப் பயன்படுத்த முடியாததே காரணமாகும்.

சுருக்கமாகக் கூறுவது என்றால், சாலை போட ஒதுக்கப்பட்ட பணம் 1000 ருபாய் அதில் 300 ருபாய் காண்ட்ராக்டர் லஞ்சமாகக் கொடுத்து விட்டால் அவரால் எப்படி 700 ரூபாயில் சாலை அமைக்க முடியும்?

தொலைக்காட்சி கமிஷன் 

இதே போலத் தான் வண்ண தொலைக்காட்சி வழங்குவதிலும் நடந்து இருக்கும்.

எத்தனை வண்ண தொலைக்காட்சிகள் கொடுத்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை குறைந்த பட்சமாக ஒரு கோடி மக்களுக்குக் கொடுக்கப்பட்டதாக வைத்துக்கொள்வோம்.

ஒரு தொலைக்காட்சி விலை 1200 ருபாய் என்று வைத்துக்கொண்டால் அதற்கு ஒரு தொலைக்காட்சிக்கு 100 ருபாய் கமிசன் என்று வைத்தாலே கணக்கு எங்கேயோ போகிறது.

நான் கூறியது குறைந்த பட்ச கணக்காகும்.

அடிப்படை தேவைகள்

மக்களின் அடிப்படை தேவைகள் சாலை, பேருந்து, தண்ணீர், மின்சாரம் போன்றவை தானே தவிர அரசு தரும் இலவச தொலைக்காட்சியோ, மிக்சியோ அல்லது கிரைண்டரோ அல்ல.

இவற்றை எல்லாம் மக்களால் வாங்க முடியும் ஆனால், சாலை பேருந்து தண்ணீர் மின்சாரம் போன்றவற்றை அரசு மட்டுமே செய்து தர முடியும்.

கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் படும் மக்கள் படும் வேதனை சொல்லி மாளாது.

சென்னையில் இருப்பவர்களுக்கு இதன் முழு வலி புரியாது காரணம் இங்கே அதிகம் மின்சார தட்டுப்பாடில்லை கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களை ஒப்பிடும் போது.

பற்றாக்குறை

மின்சார தட்டுப்பாட்டிற்குக்காரணம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலைகள் என்கிறார்கள் அப்படி என்றால் சரியான கட்டமைப்பை நிறுவாமல் ஏன் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கினார்கள்?

பற்றாக்குறை வரும் என்று கூடத் தெரியாமல் எப்படி அரசு வழங்கியது? தொழிற்சாலைகள் அதிகம் வருவது நல்ல விஷயம் தான்.

வேலைவாய்ப்பு அதிகரிக்கும் அதன் சுற்றுப் பகுதிகள் வளர்ச்சி அடையும் ஆனால், அதற்க்குண்டான கட்டமைப்பை நிறுவாமல் அனுமதி வழங்கி மக்களை எப்படி சிரமப்படுத்தலாம்!

ஜெ இலவச அறிவிப்பு

கலைஞர் இலவச அறிவிப்பை எல்லாம் தூக்கிசாப்பிடுற மாதிரி ஜெ இலவசங்களை தனது தேர்தல் அறிக்கையில் வாரி வழங்கி இருக்கிறார்.

எவனும் வேலை செய்யவே தேவையில்லை அரசு கொடுப்பதை வைத்துக்கொண்டு ஜாலியாக இருக்கலாம் அந்த அளவிற்கு உள்ளது.

இதை எல்லாம் செயல்படுத்த முடியாது என்பது நன்றாகத்தெரிகிறது.

இருப்பினும் கடந்த முறை தொலைக்காட்சி விசயத்தில் கோட்டை விட்டது போல இந்தத் தேர்தலிலும் ஆகி விடும் என்று நன்றாகத் தெரிந்து இருக்கிறார் ஜெ.

எனவே, எனக்கு இதில் எந்த விதவியப்புமில்லை. என்ன… நான் அளவோடு எதிர்பார்த்தேன் இதைப்பார்த்தால் கண்ணைக் கட்டுகிறது.

புதிதாக எவரிடமும் இதைக் காண்பித்தால் நம்மைக் காமெடி செய்கிறார்கள் என்று நினைத்து விடுவார்கள் அந்த அளவிற்கு இலவசம்.

ஜெ க்கே நன்றாகத்தெரியும் இதை எல்லாம் நிச்சயம் செய்ய முடியாது என்று அப்படி இருந்தும் கூறக்காரணம் கலைஞர் அறிவிப்புகள் தான்.

கண்டிப்பாக வேறு எந்த எதிர்க்கட்சியாக இருந்தாலும் இதைத்தான் செய்து இருப்பார்கள் கொஞ்சம் கூடக் குறைவாக இருக்கும் அவ்வளவே.

ஜெ அறிவித்து இருப்பதை எல்லாம் செய்தால்… (முடியாது அது வேறு விஷயம்) நினைத்தாலே கிறுகிறுப்பாக உள்ளது.

இலவசத்தால் தகுதியானவர்களை விடத் தகுதியில்லாதவர்களே அதிகம் பயனடைந்து வருகிறார்கள் மற்றும் அதைத் தவறாகப் பிரயோகித்து வருகிறார்கள்.

எனவே, இலவசம் என்று கொடுப்பதை விட மக்களின் அன்றாட பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்தாத வரை நமக்கு எந்த விடிவு காலமும் இல்லை.

விவசாயக் கூலி

ஏற்கனவே இலவசம் அதிகம் ஆனதால் பலரும் வேலைக்குச் செல்லவே யோசிக்கிறார்கள் இதனால் கிராமங்களில் விவசாயக் கூலி வேலைக்கு ஆள் கிடைப்பதே பெரும்பாடாக உள்ளது.

உழைக்காமலே அனைத்தும் கிடைக்கும் போது யாருக்கு கஷ்டப்பட்டு வேலை செய்யத்தோன்றும்.

இப்படி எல்லாம் இலவசங்களை தேர்தல் அறிக்கையில் அறிவிக்கக் கூடாது என்று ஏதாவது சட்டம் வராதவரை இவை தொடர்ந்துகொண்டே தான் இருக்கும்.

இவை எல்லாம் எங்கே சென்று முடியுமோ! தற்போதெல்லாம் வெறுத்துப் போய் விட்டது. போங்கடா! என்னத்தையோ பண்ணித்தொலைங்க! என்று தான் நினைக்கத்தோன்றுகிறது.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

14 COMMENTS

  1. நான் இலவசங்கள பாத்து டென்ஷன் ஆகுற நிலைமை எல்லாம் தாண்டி போயி பல வருஷங்கள் ஆச்சு.

  2. இலவசத்தால் தகுதியானவர்களை விட தகுதியில்லாதவர்களே அதிகம் பயனடைந்து வருகிறார்கள் மற்றும் அதை தவறாக பிரயோகித்து வருகிறார்கள் எனவே இலவசம் என்று கொடுப்பதை விட மக்களின் அன்றாட பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்தாத வரை நமக்கு எந்த விடிவு காலமும் இல்லை. ஏற்கனவே இலவசம் அதிகம் ஆனதால் பலரும் வேலைக்கு செல்லவே யோசிக்கிறார்கள் இதனால் கிராமங்களில் விவசாயக் கூலி வேலைக்கு ஆள் கிடைப்பதே பெரும்பாடாக உள்ளது. உழைக்காமலே அனைத்தும் கிடைக்கும் போது யாருக்கு கஷ்டப்பட்டு வேலை செய்யத்தோன்றும்.

    …….இலவச டிவியை கூட, அங்கே இருந்து வாங்கி வெளியில் விற்றவர்கள் அதிகம். அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்ல முடியாது என்று தெரிகிறது.

  3. இப்படி எல்லாம் இலவசங்களை தேர்தல் அறிக்கையில் அறிவிக்கக்கூடாது என்று ஏதாவது சட்டம் வராதவரை இவை தொடர்ந்துகொண்டே தான் இருக்கும்

    கரெக்ட் கிரி

  4. எப்படியிருக்கீங்க கிரி! இலவசங்கள் அரசியல் அறிக்கை நம்மைப்போன்றவர்களுக்கு வருத்தம் அளிக்கிறது.கூடவே வடிவேலை முதல்வர் பகடைக்காயாக ஆக்கிக்கொளவதும்.

    இந்த கணத்தில் எனக்கு தோன்றியது.அதாவது பொருளாதாரத்தை வேகப்படுத்தும் கொள்கையாக வாங்கும் திறன் இருந்தால் மட்டுமே உற்பத்தி திறன் அதிகமாகும்.மாறாக மக்களிடம் வாங்கும் திறன் குறைவதும் அதே நேரத்தில் அவர்கள் வாங்கும் திறனில் உற்பத்தி செய்யும் பொருட்கள் இலவசம் என்ற பெயரில் கிடைப்பதால் உற்பத்தி பெருகும் என்பதோடு இது தனிமனித பேரங்களுக்கும் அதே நேரத்தில் மொத்த விலையில் வாங்குவதால் விலை குறையும் சாத்தியமிருந்தாலும் தனி மனித பேரங்கள்(ஊழல்) காரணமாக இதன் விலை குறையாது என்பதோடு இலவசம் என்ற பெயரில் மறைமுகமாக வரி என்ற பெயரில் மக்கள் மீதே சுமத்துப்படும் என்கின்ற பொருளாதார இலக்கணங்கள் இலவசங்களை நாடுவோருக்குப் புரிவதில்லை.

    கருணாநிதியும்,ஜெயலலிதாவும் தமிழகத்தை கீழ்நிலைக்குத் தள்ளுகிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.அதே நேரத்தில் கணினியின் பயன்பாடு இணையதளம் மூலமாக பொதுக்கருத்துக்களை கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பையும் தரும் சாத்தியமிருக்கிறது.

    சென்னையில் தொசிபா நிறுவனத்தின் தொழிலக கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருப்பதைக் க்ண்டேன்.கணினி உற்பத்தியும் இலவச கணினியும் சென்னையில் நிகழ்ந்தால் மகிழ்ச்சியே இல்லையெனில் சீனாவுக்கு மொத்த வியாபரம் செய்து விடுகிறார்களோ எனவும் தெரியவில்லை.

  5. இலவசங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றாமல் அதர்க்குண்டான தொகைக்கு ஈடாக சாலை, குழாய் போன்றன அமைத்தால் நலமாக இருக்கும் .

  6. இலவச அறிக்கையில் எதாவது ஒரு கட்சி invetor ரும் அறிவித்தால் மக்கள் எல்லோரும் அந்த கட்சிக்கே வாக்களிப்பார்கள்…….

  7. வணக்கம் கிரி சார் …
    இலவச தொலைகாட்சியால சன் dth எவ்ளோ சம்பாதிச்சங்க ..

  8. இந்த பண்ணாடப் பயலுக இலவசங்குற பேர்ல பண்றதெல்லாம் கொடுமையிலும் கொடுமை. எனக்கு இப்போ இருக்குற வெறியில இவனுங்கள வெட்டிபோட்டாக் கூட வெறி அடங்காது. இந்த ஓட்டுப் பொறுக்கி நாயிங்கதான் நம்ம தமிழ்நாட்டோட சாபக் கேடு. 🙁

  9. இலவசம் என்று கொடுக்கும் எல்லாமே லஞ்சம்தானே? அதை ஏன் தடுக்கமுடிவதில்லை?

    அதை விட்டுவிட்டு பிரியாணி போடுவதை பக்கம் பக்கமாக பத்திரிக்கைகளும் எழுதுவது வெட்கம் 🙂 .

  10. தினேஷ் சித்ரா ராமலக்ஷ்மி சரவணன் ராஜ் ராஜநடராஜன் ரங்கநாதன் மலர் காத்தவராயன் ஆனந்த் முத்துக்குமார் மற்றும் சிங்கக்குட்டி வருகைக்கு நன்றி

    @தினேஷ் புதன் கிழமை என்ன ஆகுதுன்னு பார்ப்போம் 🙂

    @சித்ரா நிச்சயம் மக்களும் காரணம்.

    @ராஜ் நம்ம ஊர் அரசியல்வாதிக கூடத்தான் எதுவும் பண்ணுறதில்லை ஆனாலும் அரசியல் ல இருபதில்லையா 😉 சும்மா லுலுலாய்க்கு….

    தோனி அவர் சரியாக விளையாடவில்லை என்றாலும் அவர் தலைமையில் பல வெற்றிகளை நமது அணிக்கு பெற்று தந்து இருப்பதை மறக்க முடியாது. நமக்கு தேவை அணியின் வெற்றி யார் அடித்தால் என்ன? 🙂

    @ராஜ நடராஜன் ரொம்ப நல்லா இருக்கேன் 🙂 நமது மக்களுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை அதனால் இப்படியே ஓட்டிக்கொண்டே இருக்க வேண்டியதாக உள்ளது. காமராஜரையே தோற்கடித்த பெருமை நமக்கு உண்டு என்பதால் நம்ம மக்களுக்காக என்னத்தை வக்கலாத்து வாங்குறது.

    மற்றபடி உற்பத்தி விலை போன்ற கணக்குகள் எனக்கு ரொம்ப தூரம் 🙂

    @மலர் 🙂 நீங்க வேற வடிவேல் திரும்ப அதே மாதிரி (அதை விட) பேசி இருக்கிறார்.

    @ஆனந்த் 🙂

    @முத்து 🙂

    @சிங்கக்குட்டி தேர்தல் முடிவு வந்தால் தான் தெரியும் பலர் இது வரை கூறிக்கொண்டு இருந்த லட்சணம் 🙂 அது யாராக இருந்தாலும் (திமுக அதிமுக, ஊடகங்கள் மற்றும் பதிவர்கள்)

  11. இலவச அறிவிப்பை பார்த்தாலே எரிச்சலா வருது. மக்கள் எப்ப தான் புரிஞ்சிக்க போறாங்களோ..!

  12. பல இலவச திட்டம் போடும் அவர்களே தற்போது உள்ள திட்டமான அரசு ஊழியர்களின் ” வாரிசு அடிப்படை ” வேலையை நிறைவேற்றுவார . தேர்வு முறையில் தேர்ந்தேடுபதற்கு முன்னதாகவே என்னை போன்று பல பேர் படித்துவிட்டு இந்த அரசு வேலையை எதிர் பார்த்து கொண்டிருக்கும் வேலையை நியமனம் செய்யவேண்டும்.அப்படியே குடுத்தாலும் அவர்கள் படித்தபடிப்புக்கு (பட்டதாரி இருந்தாலும்) தகுந்த வேலையை தருவதை தவிர்டிட்டு பத்தாம் வகுப்பு தகுதி உள்ள வேலையை தான் தரூகிறார்கள் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here