என் மண் என் மக்கள் அண்ணாமலை யாத்திரை

3
என் மண் என் மக்கள்

ன் மண் என் மக்கள் அண்ணாமலை யாத்திரை 100 வது தொகுதியாக ஸ்ரீரங்கத்தில் முடிந்துள்ளது. மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ள யாத்திரை பற்றிக் காண்போம்.

என் மண் என் மக்கள்

ராமேஸ்வரத்தில் துவங்கிய என் மண் என் மக்கள் அண்ணாமலை யாத்திரை, 50 வது நாளை ராசிபுரத்தில் கடந்து 100 வது தொகுதியாக ஸ்ரீரங்கத்தில் முடிந்துள்ளது.

இடைப்பட்ட நாட்களில் பல்வேறு மாற்றங்கள், அரசியல் விமர்சனங்கள் என்று பரபரப்பாகத் தொடர்கிறது. Image Credit

துவக்கத்தில் சாதாரணமாகத் துவங்கி தற்போது மிகப்பெரிய மக்கள் வரவேற்பைப் பெறும் யாத்திரையாக மாறியுள்ளது.

அண்ணாமலை யாத்திரை வெற்றி பெறும், மக்களைக் கவரும் என்று நினைத்தாலும், இந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

அண்ணாமலையின் எளிமை, மக்களை அன்புடன் நலம் விசாரிப்பது, செல்ஃபி எடுப்பது, எளிய மக்களை அரவணைத்துப் பேசுவது என்று கலக்கி வருகிறார்.

A Family Blockbuster

குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படம் போலக் குடும்பங்கள் கொண்டாடும் யாத்திரையாக மாறி, குறிப்பாக நடுத்தர மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தேச தலைவர்கள், பாரத மாதா என்று வேடமிட்டு குழந்தைகள் வருவதும், தாங்கள் வெற்றி பெற்ற போட்டிகளின் பதக்கங்களை அண்ணாமலைக்குக் காண்பிக்கவும் வரிசை கட்டி நிற்கிறார்கள்.

இதை நிச்சயம் வேறு எந்த அரசியல் தலைவர் பரப்புரையிலும் காண முடியாது. அப்படி இருந்தால், அவர்கள் ஏற்பாடு செய்தவர்களாக இருப்பார்கள்.

ஆனால், இங்கே நேர்மறையான எண்ண அலையை, மகிழ்ச்சியை மக்கள் முகத்தில் காண முடிகிறது. அனைவரிடையே மாற்றங்களை விரும்பும் எதிர்பார்ப்புகள்.

ஏதாவது நடந்து விடாதா? மாற்றம் ஏற்படாதா? என்ற ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள்.

பெண்கள் கூட்டம்

ஆண்கள் கூட்டத்தை விடப் பெண்களின் கவன ஈர்ப்பே அதிகமாக உள்ளது. வழக்கமாக இவர்கள் அரசியல் கூட்டங்களில் ஆர்வம் கொள்ளாதவர்கள்.

இவர்கள் பணம் கொடுத்துக் கூட்டி வந்த கூட்டமல்ல என்பது அவர்களின் ஆர்வத்தை, முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது. இரவு 11 மணி ஆனாலும், மழை பெய்தாலும் வீட்டுக்குச் செல்லாமல் நிற்கிறார்கள்.

இதுவரை அரசியல் கூட்டங்களில் கருப்பு, சிவப்பு, வெள்ளை, நீலம், பச்சை வண்ண கொடிகள், உடைகளையே பார்த்த சலித்த கண்களுக்கு ஆரஞ்சு வண்ணத்துடன் பலர் வலம் வருவது மாறுதல்.

அதிலும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் கூடுதல் அழகைத் தருகிறது.

குழந்தைகள் வந்தால், அவர்களுக்குப் பள்ளி சார்ந்து சிறு பரிசு, சாக்லேட் தருவது, சந்தேகத்திற்கிடம் இல்லாமல் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வாகன மேடை

ஒவ்வொரு இடத்திலும் மேடை அமைத்துப் பேசுவது கடினம் என்று சரியாகத் திட்டமிட்டு, வாகனத்திலேயே பேசும்படியான திட்டத்தைச் செயல்படுத்தியது சிறப்பு.

அண்ணாமலை நடக்கவில்லை, அந்த வாகனத்தில் சொகுசாக இருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் பரப்புரை செய்யப்பட்டது எதுவுமே எடுபடவில்லை.

யாத்திரையை சரியாக திட்டமிட்டு வழிநடத்துகிறார்கள்

பேச்சு

அண்ணாமலை பேச்சே யாத்திரையின் முக்கிய நிகழ்வாக உள்ளது.

ஒரு தொகுதிக்குச் செல்லும் முன் அத்தொகுதி பிரச்சனைகளின் விவரங்களை முழுவதுமாக தயார் செய்து வைத்துள்ளார்கள்.

அத்தொகுதி, நகரின் சிறப்புகளையும் தெரிந்து வைத்துள்ளார். அண்ணாமலை கூறுவது அப்பகுதி மக்கள் சிலருக்கே தெரியாத செய்தியாக இருக்கலாம்.

என்ன பேசினால் மக்கள் ரசிப்பார்கள் என்பதைச் சரியாகத் தெரிந்து வைத்துள்ளார், அதோடு அப்படியே மோடி அரசின் திட்டங்களையும் சலிப்பாக்காமல் கூறுகிறார்.

அப்பகுதி MLA, MP செய்த ஊழல்கள், செயல்படுத்தாத தேர்தல் வாக்குறுதி தகவல்களையும் கூறி டேமேஜ் செய்கிறார்.

இதற்கு மக்களிடையே பெருத்த ஆதரவு / வரவேற்பு காணப்படுகிறது.

பல கால எதிர்பார்ப்பு

எடுத்துக்காட்டு, ஸ்ரீரங்கத்தில் பேசிய அறநிலையத்துறை நீக்கமும், பெரியார் சிலை நீக்கமும் மக்களிடையே பிளாக்பஸ்டர் வெற்றி பேச்சாகப் பார்க்கப்படுகிறது.

இது போன்று யாராவது கூற மாட்டார்களா? பேச மாட்டார்களா? என்று பலகாலமாக என்னைப்போன்றவர்கள் எதிர்பார்த்து இருந்தோம்.

அறநிலையத்துறை தொடர்ச்சியாக இந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும் அவமானப்படுத்தி வருவதை பார்த்து மனம் வெதும்பி இருந்தோம்.

கடவுளை வெறுத்த, இழிவுபடுத்திப்பேசிய, செருப்பால் அடித்த பெரியாரின் சிலையைக் கோவில் அருகே பார்க்கும் போதெல்லாம் இந்தச் சிலையை எப்போது நீக்குவார்கள் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும்.

சிலை நீக்கும் நிகழ்வு எப்போது நடக்குமோ! ஆனால், இப்படி பேசவும் அண்ணாமலை என்ற ஒரு ஆண் மகன் இருப்பதே அளவு கடந்த மகிழ்ச்சி!

இவ்வாறு மக்கள் எதிர்பார்ப்பதை அண்ணாமலை பேசுவதாலேயே இவர் பேச்சைக்கேட்க மக்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள். நம்ம நினைப்பதை ஒருத்தன் பேசுகிறான் என்ற ஆர்வமே காரணம்.

பெரியார் அறக்கட்டளை

அறம் கெட்ட துறையும், திராவிட கட்சிகளும், திகவும் சேர்ந்து இந்துக் கடவுள்களுக்கு, கோவில்களுக்கு, இந்து மதத்துக்குச் செய்த அவமானங்கள், அநியாயங்கள் ஏராளம்.

அதில் ஒன்று பெரியார் சிலையைக் கோவில் முன்பு வைத்து அவமானப்படுத்தியது.

இதை வேறு இடத்தில் வைப்போம் என்று அண்ணாமலை கூறியதற்கே திராவிட கட்சிகள் அலறுகிறார்கள். கடவுள் நம்பிக்கையாளர்கள் இதயத்தில் ஏற்படுத்திய வலியை அவர்களும் உணர வேண்டும்.

பெரியார் அறக்கட்டளையை அரசு கையகப்படுத்த (நாட்டுடைமையாக்கப்பட) நடவடிக்கை எடுப்போம் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். அண்ணாமலை இதைக் கூறினால், Dstocks நாள் முழுக்க கதறிக்கொண்டு இருப்பார்கள்.

வீரமணி இதற்கு தடை உத்தரவு வாங்கி வைத்துள்ளார்.

இவங்க அறக்கட்டளையை யாரும் பயன்படுத்தக் கூடாது ஆனால், கோவில் சொத்தை எவரும் எப்படியும் பயன்படுத்தலாம். எப்படி பாருங்க!

சிறுபான்மையினர்

முஸ்லிம்கள் சிலர் தங்களது ஆதரவைக் கொடுத்ததைப் பார்க்க முடிந்தது.

2019 தேர்தலில் மோடிக்கு எதிராகத் தமிழகத்தை திமுக கட்டமைத்தது போலச் சிறுபான்மையினரையும் கட்டமைத்து விட்டனர்.

எனவே, இயல்பாகவே கிறித்துவர் மற்றும் முஸ்லிம்கள் பாஜகக்கு எதிரி போலச் சித்தரித்து அதை வாக்கு வங்கியாக தங்களுக்கு மாற்றி வெற்றிகரமாகச் செயல்படுத்தியும் வருகிறார்கள்.

அண்ணாமலையைப் பார்க்க வரும் இஸ்லாமியர்கள் சிலரும் பொதுமக்களாக அல்லாமல் பாஜக கட்சி ஆதரவாளர்களின் குடும்பங்களாக இருக்கலாம்.

இன்றுவரை அண்ணாமலை எந்த மதத்தையும் இழிவுபடுத்திப் பேசியதில்லை, அனைத்து பண்டிகைகளுக்கும் பாகுபாடு இல்லாமல் வாழ்த்துக் கூறுகிறார்.

ஆனால், சிறுபான்மையினருக்கு ஒன்றுமே செய்யாமல், மசூதிகளுக்கு, ஜமாத் நபர்களுக்கு, சர்ச்சுகளுக்கு மட்டும் சிலவற்றைச் செய்து கொடுத்து விட்டு ஒட்டுமொத்த சிறுபான்மையினர் வாக்கையும் திமுக பெற்று வருகிறது.

அதாவது தனிநபராக சிறுபான்மையினர் பெற்ற பலன்கள் என்ன?!

வாக்கு வங்கிக்கு மட்டுமே!

ஒன்றையுமே செய்து கொடுக்காமல், பாஜக மீதான வெறுப்புணர்வைத் தூண்டி அவர்களின் வாக்கை மட்டும் பெறும் திமுக மிகத்திறமையான கட்சியே!

நடுவண் அரசு கொடுக்கும் திட்டங்களால் பயன்பெறும் சிறுபான்மையினர் ஏராளம் ஆனால், அவற்றைப் பற்றிப் பயன்பெறுபவர்கள் யாரும் யோசிக்காத அளவுக்கு அவர்களை மூளைச்சலவை செய்துள்ளது.

ஒரு காலத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் போது தான், இந்துக்கள் போலத் தாங்களும் திராவிட கட்சிகளால் எவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பது புரிய வரலாம்.

இந்துக்களைப் போலச் சிறுபான்மையினரும் ஏமாளிகளே! இந்துக்கள் தெரிந்தே ஏமாறுகின்றனர், சிறுபான்மையினர் தெரியாமல் ஏமாறுகிறார்கள்.

அவ்வளோ தான் வித்தியாசம்.

கூட்டம் வாக்காக மாறுமா?

நிச்சயம் மாறும்.

ஏனென்றால், வரும் கூட்டம் பணத்துக்காக வந்தது இல்லை. தானாக விருப்பப்பட்டு வரும் கூட்டம், மாற்றத்தை எதிர்பார்க்கும் கூட்டம்.

பரிசை, பணத்தைக் கொடுத்துக் கூட்டிய சிலர் மிகக் குறைந்த சதவீதமே! கட்சியினரின் சிலரின் ஆர்வக்கோளாறு. இது அவசியமே இல்லை.

வரும் கூட்டம் நிச்சயம் வாக்களிப்பார்கள் என்பது தான் அவர்கள் வரவேற்பைப் பார்த்தால் தெரிகிறது. ஏனென்றால், வழக்கமாகக் கூட்டி வரப்படும் கூட்டமல்ல.

ஆனால், அந்த ஊரில் அவர்கள் வெறும் 5% மட்டுமே! வராதவர்கள் 95%. எனவே, 95% என்ன நினைக்கிறார்கள் என்பதே முக்கியமான செய்தி.

வராத காரணத்தினாலேயே வாக்களிக்க மாட்டார்கள் என்பது அர்த்தமல்ல ஆனால், இவர்களிடமும் மாற்றங்களைக் கொண்டு வந்தாலே வெற்றி சாத்தியம்.

பலன்கள் எளிதாகக் கிடைத்து விடுவதில்லை, கிடைக்க கடுமையான உழைப்பு பாஜகவினருக்குத் தேவைப்படுகிறது.

அண்ணாமலையே அனைத்தையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.

எவ்வளவு வாக்குகளைப் பெறும்?

தற்போதைய சூழ்நிலைக்குப் பாஜக 15% க்கும் கூடுதலான வாக்குகளை 2024 தேர்தலில் பெறும் என்று நம்புகிறேன், அதாவது கூட்டணி வாக்குகள் இல்லாமல்.

2024 தேர்தல் முடிவுகள் பாஜக உட்படப் பலரின் அரசியல் வாழ்க்கை எதிர்காலத்துக்குக் கோடு காட்டும்.

எதிர்க்கட்சிகளுக்கு பாஜக கொடுக்கும் உண்மையான போட்டி 2031 ஆனால், அதற்கு முன் காலச்சூழல்கள் மாறுவது பாஜக தொண்டர்கள் & அண்ணாமலை கையில்.

எதிர்க்கட்சிகள்

திமுக அதிமுக மட்டுமல்ல, விசிக, பாமக கட்சிகளும் பாஜக வளர்ச்சியைக்கண்டு கலக்கமாகியுள்ளன.

அண்ணாமலை கூறுவது போல இவர்களிடம் அரசியல் செய்ய Aggressive அரசியலே பலனளிக்கும். இல்லையென்றால், இன்னும் 10 வருடங்களானாலும் நோட்டா கட்சி, 4 தொகுதி கட்சி, கூட்டணி தயவில் வெற்றி என்று விமர்சனங்கள் தொடரும்.

பாஜக வளர்ச்சி திமுகவைக் கடுப்பாக்கியுள்ளது என்பது, அவர்களுடைய கைது நடவடிக்கைகளிலேயே தெரிகிறது.

இதுவரை திமுகவினர் மீது கைது நடவடிக்கை எதுவுமில்லை, அதிமுகவினர் மீது சில நடவடிக்கைகள் ஆனால், பாஜகவினர் மீது இதுவரை 410+ வழக்குகள்.

இதுவே கூறும், திமுகவினர் எந்த அளவுக்குப் பயந்துள்ளனர் என்று.

அதிமுகவை திமுக ஒரு பொருட்டாகவே கருதவில்லை, அவர்களின் முழு கவனமும் பாஜக மீது தான் என்பது திமுக தலைவர்கள், தொண்டர்கள் பேச்சில், நடவடிக்கைகளில் தெரிகிறது.

திமுக ஆதரவு ஊடகங்கள்

யாத்திரையில் ஏதாவது வில்லங்கமாக நடக்காதா! அதை வைத்து அரசியல் செய்யலாம் என்று திமுக ஆதரவு ஊடகங்கள் காத்துக்கொண்டுள்ளன.

எப்படியாவது கெட்ட பெயரை ஏற்படுத்த ஊடகங்கள் கடுமையாக முயற்சிக்கின்றன. ஒரு சில சம்பவங்கள் நடந்தாலும், அவர்கள் எதிர்பார்ப்பது போல மிகப்பெரிய சர்ச்சையாக எதுவும் நடக்கவில்லை.

ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்யும் பரப்புரையை மீறிச் செய்திகள் மக்களை அடைய முக்கியக்காரணங்களே WhatsApp, FB மற்றும் X.

மிகப்பெரிய ஊடகமாக பாஜகக்கு உதவப்போவது WhatsApp தான்.

என் மண் என் மக்கள் அண்ணாமலை யாத்திரை மிகப்பெரிய எழுச்சியை மக்களிடையே கொண்டு வந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

அண்ணாமலை இந்த வரவேற்பை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வது பாஜக வாக்கு சதவீதத்தை 2024 தேர்தலில் மேலும் கூடுதலாக்கும்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. the tamilnadu people are with BJP and Annamalai jee is the mass leader and his speech infiltrate nook and corner of tamilnadu. Jai Hind . Bharath Maatha ki jai

  2. அண்ணாமலை அவர்களின் நடை பயணம் பெரும் தாக்கத்தை உருவாக்கி இருப்பது உண்மை. ஆளும் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் இதை கண்டு கொள்ளாமல் இருந்தனர். பாத யாத்திரை ஆரம்பத்தில் தமிழ் ஊடகங்கள் பெரிதாக செய்திகள் வெளியிடவில்லை. ஆனால் மக்களின் ஆதரவின் காரணமாக ஊடகங்கள் செய்திகளை வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டன. அண்ணாமலை தலைவராக வந்த பின்பு தமிழ்நாட்டில் பிஜேபி முன்னெடுக்கும் போராட்டங்கள் பெரும்பாலும் டெல்லி மீடியாக்கள் கவர் செய்து வருகிறது மற்றும் பேசும் பொருளாக மாற்றியும் வருகிறது. இது அவரை இந்திய அளவில் சென்று சேர பெரும் உதவியாக இருக்கும்.

    அண்ணாமலை தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்து வருகிறார். 2024 & 2026 தேர்தல் முடிவுகள் பிஜேபி க்கு ஆதரவாக அமையுமென்றால் அவர் ஆக சிறந்த தலைவராக உருவெடுப்பார் என்று நினைக்கிறேன். அதற்கு அவர் தகுதியானவர். மக்களின் ஓட்டு பெற்று சட்ட சபை உறுப்பினர்களாகவோ, மத்திய அமைச்சராகவோ ஆனால் மட்டுமே பெரும்பாலானோர் பிஜேபி பக்கம் வருவார்கள். மக்களிடையே இன்னும் நம்பிக்கை உருவாகும். கட்சியில் இருக்கும் தொண்டர்கள் ஊக்கத்தோடு தொடர்ந்து பயணிப்பார்கள். அதற்க்கு 2024 தேர்தலில்,ஓரிரு இடங்களில் வெற்றி பெற்று(தனித்தோ அ கூட்டணியாக) அண்ணாமலை நிரூபிக்க வேண்டும்.

    நானும் எங்கள் ஊரில் கலந்துகொள்ளலாம் என்று இருந்தேன் சில தவிர்க்க முடியாத காரணத்தால் என்னால் செல்ல முடியவில்லை. இந்த பாத யாத்திரை ஜனவரியில் முடியும் போது, மோடி மீதான எதிர்ப்பு மக்களிடையே வெகுவாக குறைந்திருக்கும், ஆளும் கட்சிக்கு எதிரான பிரச்சனைகள் முன்னிறுத்தப்பட்டு, பிஜேபி க்கு சாதகமான களம் அமையும் என்று நினைக்கிறேன். பார்ப்போம்.

    2024 தேர்தலில் பிஜேபி தனித்து 6 – 9 % வாக்குகளைப் பெரும் என்பது என் கணிப்பு.

  3. @தியாகராஜன்

    அண்ணாமலை பல இடங்களுக்கு பாஜகவை கொண்டு சென்று வருகிறார் என்பது உண்மையே.

    @மணிகண்டன்

    “பாத யாத்திரை ஆரம்பத்தில் தமிழ் ஊடகங்கள் பெரிதாக செய்திகள் வெளியிடவில்லை. ஆனால் மக்களின் ஆதரவின் காரணமாக ஊடகங்கள் செய்திகளை வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டன.”

    இதுவே உண்மை. இவர்களால் புறக்கணிக்க முடியாத அளவுக்கு வளர்ச்சி.

    “இது அவரை இந்திய அளவில் சென்று சேர பெரும் உதவியாக இருக்கும்.”

    ஏற்கனவே, பலரின் மனதில் இடம் பிடித்து விட்டார். இதைத் தன் செயல்களால் தக்க வைப்பார் என்று நம்பலாம்.

    “மக்களின் ஓட்டு பெற்று சட்ட சபை உறுப்பினர்களாகவோ, மத்திய அமைச்சராகவோ ஆனால் மட்டுமே பெரும்பாலானோர் பிஜேபி பக்கம் வருவார்கள். மக்களிடையே இன்னும் நம்பிக்கை உருவாகும்.”

    உண்மை தான் ஆனால், கடினமான செயல். காலம் அதிகம் எடுக்குமா அல்லது இவர்கள் நடவடிக்கைகளினால் மாற்றம் கிடைக்குமா? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    “அதற்க்கு 2024 தேர்தலில்,ஓரிரு இடங்களில் வெற்றி பெற்று(தனித்தோ அ கூட்டணியாக) அண்ணாமலை நிரூபிக்க வேண்டும்.”

    ஒரு இடத்தில் வெற்றி பெற்றாலே மிகப்பெரிய வெற்றி தான்.

    “இந்த பாத யாத்திரை ஜனவரியில் முடியும் போது, மோடி மீதான எதிர்ப்பு மக்களிடையே வெகுவாக குறைந்திருக்கும்”

    உண்மையே! தற்போதே குறைந்து விட்டது. முன்பு திமுக கட்டமைத்த பிம்பத்தை அண்ணாமலை உடைத்து வருகிறார்.

    அதற்கு மோடியின் திட்டங்கள் உறுதுணையாக உள்ளது.

    “2024 தேர்தலில் பிஜேபி தனித்து 6 – 9 % வாக்குகளைப் பெரும் என்பது என் கணிப்பு.”

    நான் 15% எதிர்பார்க்கிறேன்.

    ஒருவேளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், பாஜக தனிப்பட்ட வாக்கு சதவீதம் குறையலாம்.

    பல கட்சிகள் மிகச்சிறு கட்சிகள் என்பதால், பாஜக சின்னத்திலேயே போட்டியிட வாய்ப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here