ஒளிப்பதிவு சட்டத் திருத்தம் எதிர்ப்புகள்

7
ஒளிப்பதிவு சட்டத் திருத்தம்

ஒளிப்பதிவு சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவது படைப்பாளியின் கருத்துரிமையை, கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கிறது என்று தமிழகத்தில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன. Image Credit

ஒளிப்பதிவு சட்டத் திருத்தம்

  1. ஏற்கெனவே இருக்கும் U, U/A, மற்றும் A சான்றிதழ்களுடன் வயது வாரியாகச் சில புதிய சான்றிதழ்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

U/A 7+, U/A 13+ & U/A 16+ என U/A சான்றிதழை மூன்றாகப் பிரித்துள்ளார்கள். வெளிநாடுகளில் இது போல உள்ளது.

  1. வரைவில் சேர்க்கப்பட்டிருக்கும் பிரிவு 6AA-யின் படி, ஒரு படைப்பாளியின் எழுத்துப்பூர்வ அனுமதி இல்லாமல், அதை நகல் எடுக்கவோ, அதை வீடியோவாகவோ, ஆடியோவாகவோ பதிவு செய்யவோ, ஒளிபரப்பு செய்யவோ கூடாது.

மீறினால், 3 மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரை சிறைத் தண்டனையும், ரூ.3,00,000 அல்லது படத்தின் தயாரிப்புச் செலவில் 5 சதவிகிதம் வரை அபராதமும் வசூலிக்கப்படும்.

  1. தற்போதுள்ள சட்டத்தின்படி, ஒரு படத்தின் தணிக்கை சான்றிதழ் 10 வருடங்கள் மட்டுமே செல்லுபடியாகும். அதன் பின்னர், அதைப் புதுப்பிக்க வேண்டும்.

புதிய வரைவில் இது மாற்றப்பட்டு, சென்சார் சான்றிதழ் இனி காலக்கெடு ஏதுமின்றி ஆயுள் முழுவதுக்குமான சான்றிதழாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  1. ஒளிப்பதிவுச் சட்டம் 1952-ன் பிரிவு 5B (1)-ல், ஒரு படம் நாட்டின் பாதுகாப்புக்கோ, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கோ, மற்ற நாடுகளுடனான நட்புறவுக்கோ, சட்ட ஒழுங்கிற்கோ, ஒழுக்கம் அல்லது அறநெறிக்கோ ஊறுவிளைவிப்பதாக இருந்தால் அதற்குச் சான்றிதழோ பொதுவெளியில் திரையிடப்படுவதற்கான அனுமதியோ மறுக்கப்படும்.

அவதூறு, நீதிமன்ற அவமதிப்பு அல்லது இது போன்ற எந்தவொரு குற்றத்திற்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்புகள்

முதல் மூன்று திருத்தங்களுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை,

நான்காவது திருத்தத்துக்குத் தான் தற்போது சில தமிழக நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

சிலர் மட்டுமே அமர்ந்து படத்தைப் பார்த்துச் சரி தவறு (தணிக்கை) என்று எப்படி முடிவு செய்ய முடியும்? என்று குறிப்பிட்ட சதவீதத்தினர் கேட்கிறார்கள்.

சிலர் தணிக்கை செய்யப்பட்ட பிறகு எப்படிப் படத்தை எதிர்க்கலாம் என்று கேட்கிறார்கள்.

எடுத்துக்காட்டுக்கு 10 பேர் அமர்ந்து ஒரு படத்தைப் பார்த்துத் தணிக்கை செய்கிறார்கள். இவர்கள் 10 பேர் அனைத்து மக்களின் எண்ணங்களையும் பிரதிபலிக்கப் போவதில்லை / முடியாது.

இந்தச் சூழ்நிலையில் தான் படம் வெளியான பிறகு சர்ச்சையாகிறது. இந்நிலையில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பதாகச் சட்ட திருத்தம் கூறுகிறது.

தணிக்கை செய்யப்பட்ட பிறகு மத்திய அரசுத் தடை செய்தால், அது படைப்பாளியின் கருத்துரிமையைப் பறிக்கும் செயல் என்பது இயக்குநர், நடிகர்கள் குற்றச்சாட்டு.

படம் வெளியாகி ஒரு படம் தடுக்கப்பட்டால், முதல் போட்டு எடுத்த தயாரிப்பாளர்கள் நிலை என்ன ஆவது என்பது தயாரிப்பாளர் கேள்வி.

ஏற்கனவே உள்ள தணிக்கை முறையிலேயே ஏராளமான திரைப்படங்கள் வெளியிட அனுமதி கிடைக்காமல் முடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தத்தில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது?

சர்ச்சை ஏற்பட்டால் திரும்ப மறு ஆய்வுத் தணிக்கைக்கு மத்திய அரசு அனுப்பும் படி தான் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற மாண்பு, மற்ற நாடுகளின் நட்பு, சட்டம் ஒழுங்கு, இந்திய ஒருமைப்பாடு போன்றவற்றை குலைக்கும் வகையில் இருந்தால் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

மத்திய அரசு படத்தையே தடை செய்வார்கள் என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை.

அப்படியோரு சூழ்நிலை இருந்தால், துவக்கத்திலேயே தணிக்கையைத் தாண்டியே வர முடியாது என்பது தான் எதார்த்தம் / லாஜிக்கல்.

வந்தால் என்ன நடக்கும்? சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வலியுறுத்துவார்கள்.

படத்தையே தடை செய்வதற்கான எதார்த்த வாய்ப்புகள் மிகக் குறைவு.

1000 / 10,000 ல் ஒன்றில் நடக்கலாம்.

இதில் மத ரீதியாக தனித்து குறிப்பிடப்படவில்லை. இந்திய ஒருமைப்பாடு என்று வரும் போதே இதில் அனைத்தும் அடங்கி விடும் என்று கருதுகிறேன்.

ஆனால், கண்டிப்பாக மத ரீதியான துவேச கருத்துகளுக்கும் கட்டுப்பாடு தேவை.

கருத்துரிமை

முதலில் யாராவது கருத்துரிமை என்பதைத் தெளிவுபடுத்தினால் நல்லது!

கருத்துரிமை என்பதற்கு என்ன அர்த்தம்? கருத்துச் சுதந்திரம் என்பதற்கு என்ன அளவுகோல்?

இவர்கள் விருப்பத்துக்கு மற்றவர்களைக் காயப்படுத்தி ஒரு படத்தை எடுப்பார்கள் ஆனால், எல்லோரும் கருத்துரிமை என்று வேடிக்கை பார்க்க வேண்டும்!

எவரையும் எப்படியும் விமர்சிப்பார்கள், கிண்டலடிப்பார்கள் அது கருத்துச் சுதந்திரம்!

என்ன லாஜிக் இது?!

இந்து மத வெறுப்புணர்வு

தமிழ் திரையுலகில் இந்து மதத்தைக் கிண்டலடித்து, வெறுப்புணர்வை வெளிப்படுத்துவது அதிகரித்து வருகிறது ஆனால், இது கருத்துச் சுதந்திரம்.

மூக்குத்தி அம்மன் படத்தில் CD வைத்தால் கேன்சர் சரியாகி விடும் என்று கிறித்துவ மதத்தில் சிலர் ஏமாற்றுவதைக் காட்சியாக வைத்ததைப் படத்தில் நீக்கி விட்டார்கள்.

இது சாதாரண நகைச்சுவை காட்சி.

இதைப் போல இந்து மதத்தில் நித்தியானந்தா, சிவசங்கர் பாபா உட்பட ஏராளமானவர்களை கிண்டலடித்து ஏராளமான படங்கள் வெளியாகியுள்ளன.

அவ்வளவு ஏன் மூக்குத்தி அம்மன் மையக்கருத்தே ஜக்கி வாசுதேவை மனதில் வைத்து எடுக்கப்பட்டது தான்.

இந்து மதத்தில் உள்ள ஒருவரை வைத்து விமர்சித்து படத்தையே இப்படி எடுக்க முடிகிறது.

ஆனால், உலகம் முழுக்க கிறித்துவ மதத்தில் நடைபெறும், அனைவருக்கும் தெரிந்த ஒரு சம்பவத்தை நகைச்சுவையாகக் கூறும் காட்சியை வெளியிட முடியவில்லை?!

மலையாளத்தில் பிரியாணி என்ற படம் வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் மட்டும் வெளியானது. பெரும்பாலான திரையரங்குகள் வெளியிடப் பின்வாங்கி விட்டன.

முஸ்லீம் சமுதாயத்தில் நடக்கும் சம்பவங்களை வெளிப்படையாகக் காட்டியிருந்தார்கள் ஆனால், படத்தை வெளியிடவே திரையரங்குகள் துணியவில்லை.

The Da Vinci Code படம் தமிழகத்தில் வெளியாகவே விடவில்லை.

ஆனால், இவர்கள் இந்து மதத்தையும், இந்தியாவையும் எப்படி வேண்டும் என்றாலும் அசிங்கப்படுத்தி எடுப்பார்கள், அதை வேடிக்கை பார்க்க வேண்டும்.

கேட்டால், கருத்துச் சுதந்திரம்.

இந்து மதம் மட்டும் இளிச்சவாய மதமா?

சரி! இதுவரை இந்து மதத்தைத் தவிர்த்து வேறொரு மதத்தை விமர்சித்துச் சமீப காலங்களில் ஒரு படமாவது தமிழ்நாட்டில் வெளியாகி இருக்குமா? வெளியிடத் தான் விட்டுவிடுவார்களா?

இந்து மதம் விமர்சிக்கப்படக்கூடாத மதமல்ல ஆனால், இந்து மதம் மட்டுமே விமர்சிக்கப்பட வேண்டிய மதமுமல்ல.

அனைத்து மதங்களிலும் நல்லது கெட்டது உள்ளது.

இந்து மதம் மட்டும் இளிச்சவாய மதமா? யார் வேண்டும் என்றாலும் நக்கல் அடிக்க!

தமிழ் திரையுலகில் தற்போது இடது சாரி ஆதரவாளர்கள் அதிகரித்து விட்டனர். எனவே, இந்து மதத்தை இழிவு படுத்துவது, இந்தியாவைக் கேவலப்படுத்துவது அதிகரித்து வருகிறது.

மலையாள திரையுலகம்

இது போன்ற கருத்துகளைத் தெரிவிக்க மலையாள திரையுலகுக்கே அதிக உரிமையுண்டு.

காரணம், தமிழ் திரையுலகைப் போல அல்லாமல் எப்போதாவது அனைத்து மதங்களையும் விமர்சித்துப் படங்கள் வருகிறது.

சமீப Trance படத்தைக் கூறலாம். பிரியாணி படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிட 100% வாய்ப்பில்லை.

கருத்து சுதந்திரம்னு தற்போது பேசிட்டு இருக்கும் அனைவரும் எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரியாத அளவுக்கு அமைதியாக இருப்பார்கள்.

ஆனால், இது போல இந்து மதத்தை விமர்சித்து 100 படங்கள் வந்து இருக்கும்.

மடியில் கனம் இருப்பவனுக்குத் தான் வழியில் பயம்.

நேர்மையா படத்தை எடுப்பவன் எதற்குப் பயப்பட வேண்டும்?! சர்ச்சை படத்தை எடுப்பவர்கள் தான் கவலைப்பட வேண்டும்.

கருத்துச் சுதந்திரம் என்பது நாகரீகமான முறையில் கருத்தை, விமர்சனத்தை முன் வைப்பது, கொச்சைப்படுத்துவதல்ல.

இரத்தம் தக்காளி சட்னி

இத்திருத்த சட்டத்துக்குப் பொங்கும் பலர் Family Man 2 சீரீஸ் வெளியிடக் கூடாதுனு பொங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆமாம், கருத்து சுதந்திர இரத்தம் தக்காளி சட்னி தான்.

Family Man 2 சீரீஸுக்கு பொங்கியவர்கள் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க என்ன தார்மீக உரிமை உள்ளது?

இதிலிருந்து என்ன புலனாகிறது என்றால், அவர்களுக்குப் பிடிக்காத விஷயத்துக்கு அனுமதி கொடுக்கக் கூடாது ஆனால், அவர்களுக்குப் பிடித்த விஷயம் மற்றவர்களுக்கு ஏற்புடையது இல்லையென்றாலும் அது கருத்து சுதந்திரத்தில் வரும்!

இச்சட்டத்துக்கு தமிழகத்தில் மட்டுமே எதிர்ப்பு அதிகம். மற்ற மாநிலங்களில் உள்ள ஒட்டு மொத எதிர்ப்பையும் சேர்த்தாலும் தமிழகத்தில் உள்ள அளவு கூட வராது.

இச்சட்டத்தை எதிர்ப்பவர்களைக் கவனித்தால், அனைவரும் ஒரு புள்ளியில் இணைவார்கள்.

நம்பிக்கையில்லை என்றால் இதுவரை அவர்கள் எதிர்த்த விஷயத்தைக் கவனித்துப் பாருங்கள்.

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டும் என்றாலும் பேசலாம், படம் எடுக்கலாம் என்று எண்ணவோட்டம் திரையுலகில் அதிகரித்து வருகிறது.

இவர்களுக்குக் கடிவாளம் போடவில்லை என்றால், வரும் காலங்களில் இன்னும் மோசமாகத்தான் போகும்.

தேச ஒருமைப்பாடு என்பதில் மதமும் அடங்கும் என்ற நம்பிக்கையில் ஒளிப்பதிவு சட்டத் திருத்தம் மாற்றத்தை முழு மனதோடு வரவேற்கிறேன்.

கொசுறு

சமூகத்தளங்களில் தவறான கருத்துகளைப் பகிர்ந்தால், பெண்களை இழிவுபடுத்தினால், அரசியல் தலைவர்களைத் தவறாக விமர்சித்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று DGP சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.

இதுபற்றிப் பின்னர் விவாதிப்போம், கூற நிறைய உள்ளது.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

7 COMMENTS

  1. கிரி, எப்படி இருக்கீங்க, அது
    “அளவுகோல்”

  2. மிக விரிவான கட்டுரை கிரி. நான் இந்த சட்டத்தை ஆதரிக்கிறேன். வெளிநாடுகளில் இருப்பது போல மிக கடுமையான காப்புரிமை மற்றும் கிரேட்டிவ் பாதுகாப்பு சட்டங்கள் நம் நாட்டுக்கும் தேவை. இந்த சட்டங்கள் நல்ல கலைஞர்களுக்கும்,படைப்பாளிகளுக்கும் மற்றும் உதவி இயக்குநர்களுக்கும் பாதுகாப்பு வளையம். தவறான புகாருகளுக்கு தண்டனை அல்லது அபராதம் உண்டா என தெரியவில்லை.

    கடந்த மூன்று மாதமாக எந்த சீர்திருத்த சட்டங்களும் வரவில்லை என நினைத்தேன் இதோ வந்து விட்டது! எதிப்பவர்கள் அனைவரும் மோதி வெறுப்பாளர்கள் அப்படி தான் இருப்பார்கள். புரட்சி வசனங்கள் சினிமாவில் மட்டும் தான். சினிமாவில் உள்ள நடுநிலையாளர்கள் இந்த சட்டத்தை பற்றி விரிவான கட்டுரை அல்லது காணொளி வெளியிட்டால் நல்ல ஒரு புரிதலை தரும்.

    புது சட்டங்கள் மத்திய அரசிடம் வந்தால் அதை மூர்க்கமாக எதிர்ப்பது, மோடியை வசைபாடுவது, இரு வாரங்களிலே அதை மறப்பது. இந்த பாணியில் தான் தமிழ் நாடு அரசியல். இந்த சட்டம் நிறைவேறும், நிறைவேறவேண்டும்.கடந்த பத்து ஆண்டுகளில் அதிகம் புனையப்பட்ட(நேர்மறையாகவும் & எதிர்மறையாகவும்) ஒரே ஆளுமை மோதி மட்டுமே.இந்த சட்டம் பொது மக்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை, கடந்த 6 மாதமாக திரையறுங்குகளில் படம் பார்க்காமல் தான் இருக்கிறார்கள். செய்தி ஊடங்களால் இது பெரிதாக்க படுகிறது.

    இந்து மதம்:

    கடந்த 2000 வருடங்களாக பல விமர்சங்களை ஏற்று முன்னரகர்ந்து வந்திருக்கிறது இந்து மதம். இந்து மதத்தை போல் பன்முகத்தண்மை கொண்ட மதம் வேறொன்று இல்லை.இந்து மதத்தை விமர்ச்சிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. விமர்சனத்தால் இந்து மதம் அழிய போவதில்லை. ஞானிகளால் குருமார்களால் இன்னும் சிறப்படைய தான் போகிறது. இது ஆன்மிக பூமி. கொஞ்சமேனும் இந்திய வரலாறை படித்தவர்களுக்கு இது புரியும் தெரியும். இதை உரிமை கொண்டாடும் அமைப்புகளும், அரசியல் கட்சிகளினால் தான் பாதிப்பு உண்டு. மோதியை எதிர்க்கிறேன் என்ற பேரில் இந்தியாவையும் இந்து மதத்தையும் இழிவு செய்கிறார்கள்.

    இவர்கள் இந்து மதத்தை சிறிதேனும் படித்துவிட்டு விமர்சித்தால் ஏற்று கொள்ளும்படியாக இருக்கும். அரசியல் வாதிகளின் வெறுப்பு பிரச்சாரத்தை அப்படியே நகல் எடுத்து பேசும் படித்த முட்டாள்கள் மேல்தான் எனக்கு வெறுப்பு . ஒன்றும் படிக்காத வெற்று கூச்சல்கள். பாவம் அவர்களால் அவ்வளவு தான் முடியும்.
    அரசியல்வாதிகள் தெளிவானவர்கள் தேர்தல் என்றால் கோயில் விஜயம் செய்வார்கள் எல்லாம் வெளி வேசம்.

  3. கிரி, ஒளிப்பதிவு சட்ட திருத்தம் குறித்த செய்தியை உங்கள் பதிவின் மூலம் தான் தெரிந்து கொண்டேன்.. திரையுலகத்தை பொறுத்தவரை எனக்கு நிறைய விஷியங்கள் இன்னும் தெளிவாக புரியவில்லை.. இந்த பதிவில் எனக்குள் இருந்த ஒரு சில கேள்விகளுக்கு விடை கிடைத்தது.. இதையும் தவிர்த்து சினிமாவை குறித்து இன்னும் விளங்காத பல விஷியங்கள் உள்ளது..

    கொஞ்ச நாட்களுக்கு முன்பு நடந்த (SPB சார் / இளையராஜா சார் & ஆஸ்கார் ரவிச்சந்திரன் சார் / இயக்குனர் சங்கர் சார், அந்நியன் ஹிந்தியில் எடுப்பதில்) பிரச்சனை உட்பட.. சில படங்கள் இங்கு தணிக்கை சான்று கிடைக்காமல், அதே படத்திற்க்கு மும்பையில் அனுமதி கிடைக்கிறது.. இது எப்படி என்று எனக்கு புரியவில்லை!!!

    கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டும் என்றாலும் பேசலாம், படம் எடுக்கலாம் என்று எண்ணவோட்டம் திரையுலகில் அதிகரித்து வருகிறது.இவர்களுக்குக் கடிவாளம் போடவில்லை என்றால், வரும் காலங்களில் இன்னும் மோசமாகத்தான் போகும்.. உங்கள் கருத்துடன் ஒத்து போகிறேன்.. தற்போது OTT யில் வெளியிடப்படும் webseries கும் தணிக்கை சான்று வேண்டும் என சட்டம் கொண்டு வர போவதாக கொஞ்ச நாட்களுக்கு முன் செய்தி பார்த்ததாக நினைவில் உள்ளது..

    அதே சட்டத்தை கொஞ்சம் தமிழில் உள்ள நாடகங்களிலும் இதை கொண்டு வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.. திரைப்படங்களில் உள்ள ஆபாசத்தை விட நாடகங்களில் அதிகரித்து விட்டது.. எதிர்காலத்தில் இன்னும் மோசமாக அதிக வாய்ப்புள்ளது.. பல வருடங்களுக்கு முன் பொதிகையில் ஆபாசமில்லாமலும் , வன்முறையில்லாமலும் , வக்கிரமில்லாமலும் , ஜாதி பிரச்சனையில்லாமலும் பார்த்த நாடங்கங்களின் பசுமையான நினைவுகள் நெஞ்சிக்குள் இன்னும் புதைந்து கிடைக்கிறது..பகிர்வுக்கு நன்றி கிரி..

  4. @ஆனந்த் பாலா நன்றி

    @அரி “கிரி, எப்படி இருக்கீங்க, அது “அளவுகோல்”

    நான் மிக்க நலம்.

    எழுத்துப் பிழையைச் சுட்டிக்காட்டவாவது வந்து எட்டி பார்த்தீர்களே! 🙂 .

  5. @மணிகண்டன்

    “இந்த சட்டங்கள் நல்ல கலைஞர்களுக்கும்,படைப்பாளிகளுக்கும் மற்றும் உதவி இயக்குநர்களுக்கும் பாதுகாப்பு வளையம்.”

    உண்மையே!

    “தவறான புகாருகளுக்கு தண்டனை அல்லது அபராதம் உண்டா என தெரியவில்லை.”

    அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை ஆனால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும்.

    “புரட்சி வசனங்கள் சினிமாவில் மட்டும் தான்.”

    ஆமாம். அனைத்தையும் மாற்ற வேண்டும் என்பார்கள் ஆனால், செயல்படுத்தும் போது எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.

    “சினிமாவில் உள்ள நடுநிலையாளர்கள் இந்த சட்டத்தை பற்றி விரிவான கட்டுரை அல்லது காணொளி வெளியிட்டால் நல்ல ஒரு புரிதலை தரும்.”

    மற்றவர்கள் வெறுப்புக்கு ஆளாக வேண்டும் என்று செய்ய மாட்டார்கள்.

    “இரு வாரங்களிலே அதை மறப்பது. இந்த பாணியில் தான் தமிழ் நாடு அரசியல்.”

    மிகச்சரி.

    “மோதியை எதிர்க்கிறேன் என்ற பேரில் இந்தியாவையும் இந்து மதத்தையும் இழிவு செய்கிறார்கள்.”

    இதை முன்பே கூறியுள்ளேன். மோடியை எதிர்ப்பதாக நினைத்து இந்து மதத்தை எதிர்த்து, விமர்சித்துக்கொண்டுள்ளார்கள்.

    இதையும் இந்து மதத்தினரே செய்வது தான் கடுப்பை வரவழைக்கிறது.

    “அரசியல் வாதிகளின் வெறுப்பு பிரச்சாரத்தை அப்படியே நகல் எடுத்து பேசும் படித்த முட்டாள்கள் மேல்தான் எனக்கு வெறுப்பு . ஒன்றும் படிக்காத வெற்று கூச்சல்கள்.”

    மிகச்சரியாக கூறினீர்கள். இதைப் பற்றிக் கட்டுரை எழுத வேண்டும் என்பது என் விருப்பம், விரைவில் எழுதுவேன்.

  6. @யாசின்

    “சில படங்கள் இங்கு தணிக்கை சான்று கிடைக்காமல், அதே படத்திற்க்கு மும்பையில் அனுமதி கிடைக்கிறது.. இது எப்படி என்று எனக்கு புரியவில்லை!”

    இது tribunal செல்வது. அதாவது உயர்நீதிமன்றத்தில் சரியான தீர்ப்பு கிடைக்கவில்லையென்றால், உச்சநீதிமன்றம் செல்வது போல.

    “தற்போது OTT யில் வெளியிடப்படும் webseries கும் தணிக்கை சான்று வேண்டும் என சட்டம் கொண்டு வர போவதாக கொஞ்ச நாட்களுக்கு முன் செய்தி பார்த்ததாக நினைவில் உள்ளது”

    இந்தச்சட்டம் இதற்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

    “திரைப்படங்களில் உள்ள ஆபாசத்தை விட நாடகங்களில் அதிகரித்து விட்டது.. எதிர்காலத்தில் இன்னும் மோசமாக அதிக வாய்ப்புள்ளது.”

    உண்மையே! பலர் கூறி கேட்டுள்ளேன்.

    “பல வருடங்களுக்கு முன் பொதிகையில் ஆபாசமில்லாமலும் , வன்முறையில்லாமலும் , வக்கிரமில்லாமலும் , ஜாதி பிரச்சனையில்லாமலும் பார்த்த நாடங்கங்களின் பசுமையான நினைவுகள் நெஞ்சிக்குள் இன்னும் புதைந்து கிடைக்கிறது”

    கால மாற்றத்தில் இவை தவிர்க்க முடியாதது யாசின். காட்சியமைப்புகள், மக்கள் எண்ணங்கள், விருப்பங்கள் எல்லாமே மாறி வருகிறது.

    எனவே, பழைய நிலையில் தொடர்வது வாய்ப்பில்லை ஆனால், கட்டுப்பாடுடன் தொடர்வது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here