தமிழ்

9
தமிழ்

மக்குப் பிடித்ததை விருப்பமாகச் செய்யும் போது அதில் மேலும் மேலும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகிறது. தமிழ் எனக்கு விருப்பமானது.

தமிழ்

தமிழ் வழியில் படித்ததால் இயல்பாகவே தமிழ் மீது இருந்த ஆர்வம் ஏற்பட்டது.

2006 ல் இருந்து தற்போது வரை எவ்வளவு மாற்றங்கள் என்னிடையே நடந்து உள்ளது என்பதை உணர முடிகிறது. மேலும் தெரிந்து கொள்ளும் போது பற்று அதிகமாகிறது.

பிழை திருத்தம்

முன்பு, எழுதியவுடன் அப்படியே வெளியிட்டு விடுவேன். பின் பலமுறை படித்துத் திருத்தங்கள் செய்த பிறகு வெளியிட ஆரம்பித்தேன்.

இதைச் செய்யும் போது எதிர்பாராத இன்னொரு அனுபவம் கிடைத்தது.

ஒவ்வொரு முறை பிழைத் திருத்தம் செய்யும் போதும் நான் எழுதிய கருத்திலும் எனக்கு மாற்றம் தெரிந்தது.

இன்று எழுதியதை அடுத்த நாள் படித்தால், எழுதியதில் சில வார்த்தைகள், சில வரிகள், பாராவே  தேவையில்லை என்று தோன்றியது.

நண்பர் ஸ்ரீநிவாசன் பாலஹனுமன் தளத்தில் சுஜாதா எழுதிய கட்டுரை படிக்க நேர்ந்தது.

அதில் சுஜாதா அவர்கள், நாம் எழுதியதை பலமுறை படிப்பதன் மூலம் நாம் எழுதுவதை இன்னும் சிறப்பாகக் கொடுக்கலாம்.

திரும்பத் திரும்பப் படிக்கும் போது அதில் பல திருத்தங்கள் தோன்றும், அது நம் எழுத்தை இன்னும் மேம்படுத்தும் என்று கூறி இருந்தார்.

இது அப்படியே என் மனதில் பதிந்து விட்டது.

இவர் கூறியதை தெரியாமலே முன்பே பின்பற்றி வந்து இருந்தாலும், அனுபவம் பெற்ற சுஜாதா அவர்களே கூறி இருப்பதால், இது இன்னும் முக்கியத்துவம் பெற்றது.

எழுதுவதில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய அறிவுரையாக இதை நினைக்கிறேன்.

சிறப்புக் குறியீடுகள்

நண்பர் முத்து, கிரி! நீங்க குறிப்பிடும் “!” “,” “.” போன்றவை சரியான இடத்தில் இல்லை.

பல இடங்களில் “,” (கமா) வே இல்லை, நீண்ட வாக்கியமாக இருப்பதை சரி செய்யுங்கள் என்று கூறி இருந்தார்.

இதை முடிந்தவரை தற்போது சரி செய்து இருக்கிறேன் ஆனாலும், சில இடங்களில் தவறு நேர்கிறது. இது குறித்த சரியான புரிதல் இல்லாததே காரணம்.

ஆங்கிலக் கலப்பு

அடுத்தது ஆங்கிலக் கலப்பைத் தவிர்க்க வேண்டும் என்று தோன்றியது. இது எனக்கு ரொம்பச் சிரமமாக இருக்கவில்லை. விரைவிலேயே தவறை சரி செய்து விட்டேன்.

சில ஆங்கில வார்த்தைகள் நம்மில் கலந்து விட்டதால், ஆங்கிலத்தைத் தவிர்க்க முடியாது. காரணம், தமிழில் கூறும் போது அதன் முழு உணர்வு கிடைப்பதில்லை.

சுருக்கமாக “செம்ம காமெடி மச்சி” என்பதற்கும் “செம்ம நகைச்சுவை மச்சி” என்று சொல்வதற்கும் உள்ள வித்யாசம் ஆனால், என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆங்கில வார்த்தைகளைத் தவிர்த்து வருகிறேன்.

இது சிரமமாகவே இல்லை ஆனால், பலரும் ஆங்கிலச் சொற்களையே அதிகம்  பயன்படுத்தி வருவது வருத்தம் அளிக்கிறது. இந்தக் கட்டுரையில் எடுத்துக்காட்டாக உள்ள வார்த்தையைத் தவிர எந்த ஆங்கிலக் கலப்பும் இல்லை.

எழுதுவதில் முயற்சி செய்து வெற்றி பெற முடிந்த என்னால், பேசுவதில் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வருவது பெரிய ஏமாற்றமாக உள்ளது 🙁 .

சந்திப் பிழை

எழுத்துப் பிழை, சிறப்புக் குறியீடு போன்றவற்றை ஓரளவு சரி செய்த பிறகு அடுத்தது என்ன? என்று மனம் நினைத்தது.

அடுத்து வந்தது தான் “சந்திப் பிழை”. அதாவது “க் ப் ச் த்” போன்றவை. இதற்குத் தான் அதிகம் திணறி விட்டேன்.

இது பற்றியே சுத்தமாக அக்கறை இல்லாமல் இருந்ததால், துவக்கத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதாக இருந்தது. எழுதும் போது ரொம்ப சிரமமாக இருந்தது.

பின் விடா முயற்சியாக, பிடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து இதைச் செய்து கொண்டு இருந்தேன். பின் சமீபமாக எளிதாகி விட்டது 🙂 .

தற்போது சந்திப்பிழைகளோடு இருப்பதைப் படிக்கவே கடுப்பாக இருக்கிறது என்ற அளவிற்கு என் மனநிலை மாறி விட்டது.

தற்போதெல்லாம் எழுதும் போதே சந்திப் பிழை இல்லாமல் எழுதப் பழகிக் கொண்டேன்.

அதன் பிறகு பிழைத் திருத்தம் செய்யும் போது இன்னும் உள்ள சில தவறுகளைச் சரி செய்து கொள்கிறேன்.

100% சரியாக எழுத முடியவில்லை என்றாலும் நிச்சயம் 90% சரியாக எழுதுவதாகத் தான் நினைக்கிறேன்.

தமிழ் என்ற அழகான மொழி

தமிழ் அழகான மொழி. அதை நாம் சரியாகப் பயன்படுத்தினால் அதன் அழகு மேலும் கூடும், இது தான் நாம் தமிழுக்குச் செய்யும் சரியான மரியாதையாக இருக்கும்.

முக்கியமாக நம் தளத்தைப் படிப்பவர்கள் எதை எழுதினாலும் படிப்பார்கள் என்று எண்ணத்தில் எழுதாமல், படிப்பவர்களுக்கும் ஒரு நல்ல தமிழ் அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

தமிழைப் போற்றுங்கள், தமிழுக்கு மதிப்புக் கொடுங்கள்.

பிற்சேர்க்கை

எழுத்து மற்றும் சந்திப்பிழைகளை சரி செய்ய இந்த சுட்டிக்குச் செல்லுங்கள். சிறப்பாகப் பிழை திருத்திக் கொடுக்கிறது. தகவல் நன்றி ஜோதிஜி. http://dev.neechalkaran.com/p/naavi.html

தொடர்புடைய கட்டுரைகள்

தமிழ் தொழில்நுட்ப வார்த்தைகள்

தமிழ் ஊடகங்களுக்குத் தாழ்மையான வேண்டுகோள்

எழுத்தாளர் “சுஜாதா” தரும் எழுத்து ஆலோசனைகள்

facebook “முகநூல்” என்றால் Lady Gaga “பெண் காகா” வா?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

9 COMMENTS

  1. வணக்கம் கில்லாடி, உங்களிடம் தான் தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் வாய்ப்பு கிடைக்கிறது…. மற்றவர்களிடம் வாய்ப்பு உருவாக்கிகொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன் 🙂
    தொடரட்டும் உங்களது எழுத்துப்பணி.

  2. அருமையான கட்டுரை. தமிழில் நாம் தேட முயற்சிக்கும் போதே ஆபாசம் தான் முன் வந்து நிற்கிறது. நானும் நினைக்கிறேன் இதை நாம் எப்படி மாற்றுவது என்று. கூகுள் ஒரு தானியங்கியாக இருந்தாலும் நிரலில் சில தமிழ் வார்த்தைகளை Index இல் (தமிழில் தெரியலப்பா 🙁 ) தவிர்க்குமாறு அவர்களுக்கு பரிந்துரைக்கலாம் என்று நினைக்கிறேன். என்னென்ன வார்த்தைகள் என்பதை கோர்க்க வேண்டும் – பார்க்கலாம்.

    விஜய், நாம தமிழிலேயே பேசலாமே… 😀

  3. கிரி…தமிழில் இலக்கணங்கள் பற்றி எனக்கு மிக குறைவாக தான் தெரியும்… அகநானூறு, புறநானூறு இவைகளை அதிகம் படிக்கவில்லை… ஆனால் என் தாய் மொழியை போல இனிமையான மொழி உலகில் இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை…

    தமிழ் வழியில் படித்ததால் தமிழ் மீது இயல்பான காதல் எப்போதும் உண்டு… உங்கள் உரைநடை நன்றாக பிழையில்லாமல் அழகாக இருக்கிறது …

    இவ்வளவு அழகாக திருமண பெண்ணை வேறு மொழியில் வர்ணிக்க முடியுமானு சாத்தியமா தெரியவில்லை கிரி…
    ====================================l
    அல்லி விழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி
    அந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி
    ஆதி முதல் அந்தம் ஆபரணம் பூட்டி…
    அன்னமிவள் மேடை வந்தாள் மின்னல் முகம் காட்டி……

  4. நம்ம மொழி செம்மொழி.
    #அம்மா மூன்றெழுத்து
    #அப்பா மூன்றெழுத்து
    #தம்பி மூன்றெழுத்து
    #அக்கா மூன்றெழுத்து
    #தங்கை மூன்றெழுத்து
    #மகன் மூன்றெழுத்து
    #மகள் மூன்றெழுத்து
    #காதலி மூன்றெழுத்து
    #மனைவி மூன்றெழுத்து
    #தாத்தா மூன்றெழுத்து
    #பாட்டி மூன்றெழுத்து
    இவையனைத்தும் அடங்கிய
    #உறவு மூன்றெழுத்து
    உறவில் மேம்படும்
    # பாசம் மூன்றெழுத்து
    பாசத்தில் விளையும்
    #அன்பு மூன்றெழுத்து
    அன்பில் வழியும்
    #காதல் மூன்றெழுத்து
    காதலில் வரும்
    #வெற்றி மூன்றெழுத்து
    #தோல்வி யும் மூன்றெழுத்து
    காதல் தரும் வலியால்வரும்
    #வேதனை மூன்றெழுத்து வேதனையின் உச்சகட்டத்தால் வரும்
    #சாதல் மூன்றெழுத்து
    சாதலில் பறிபோகும்
    #உயிர் மூன்றெழுத்து..
    இது நான் எழுதிய
    #கவிதை என்றால் மூன்றெழுத்து..
    இது
    #அருமை என்றால் அதுவும்
    மூன்றெழுத்து
    #மொக்கை என்றால் அதுவும்
    மூன்றெழுத்தே..
    #நட்பு என்ற மூன்றெழுத்தால்
    இணைந்து இதைப்படித்த அனைவருக்கும் என்
    #நன்றி ..
    #நன்றி யும் மூன்றெழுத்தே …!
    #மூன்று ம்
    மூன்றெழுத்தே……..!!!
    #இவை அத்துனையும் உள்ளடக்கிய தமிழ் உம் மூன்றெழுத்து…!!

  5. தலைப்பு செம ஐடியா தல…
    பதிவு உங்கள மாதிரியே அழகா இருக்கு

    சுஜாதா அவர்களின் advice கலக்கல் ரகம்

    பாலஹனுமன் சார் தளத்தின் link கு நன்றி

    Prakash அட்டகாசம் சார் உங்க பதில்

    – அருண் கோவிந்தன்

  6. முகமது யாசின் மிக்க நன்றி. இது போல பல பாடல்களை படித்து பலமுறை நானும் வியந்து போயுள்ளேன். தமிழ் மொழி குறித்து அதன் வளர்ச்சி, வீழ்ச்சி, எதார்த்தம் போன்றவற்றை கடந்த நாலைந்து வருடங்களாக எழுத முயற்சித்து பல வற்றை பழைய புத்தகங்களை வாசித்த போது எனக்குள் தோன்றியது ஒன்றே ஒன்று தான். எத்தனை இழப்புகளைத்தாண்டி இன்னமும் இந்த மொழி இங்கே உயிர்ப்புடன் இருப்பதே ஆச்சரியம். நவீன தொழில் நுட்பத்தில் காசுக்காக இன்று கணினி மொழியாக மாறாமல் இருக்கும் பட்சத்தில் இப்போதைய தமிழ்நாட்டுச் சூழலில் நிச்சயம் குற்றுயிரும் கொலையிருமாக போயிருக்கக்கூடும்.

    கிரி அதிகாலை வேலையில் தமிழ் என்ற வார்த்தையைப் பார்த்தவுடன் ஏதோ வித்தியாசமான ஒன்றைப் பற்றி எழுதியிருப்பீங்கன்னு நினைத்து இன்று மின் அஞ்சல் வாயிலாக உங்கள் தளத்தில் உள்ளே வந்தேன்.

    சிலவிசயங்கள்

    நீங்க இணைப்பு கொடுத்துள்ள இணைப்பு அனைத்தும் அந்த தளத்தை அறிமுகம் செய்து வைக்கின்றது. குறிப்பாக நீங்க எதைச் சுட்டிக்காட்டியிருக்கீங்களோ அதை படிக்க நினைத்து எனக்கு ஏமாற்றமே?

    அப்புறம் நீங்க அவசியம் உங்க புத்தக வாசிப்பை (காரணம் ஏதும் சொல்லாமல்) அதிகப்படுத்துங்க. இணைய தள பயன்பாட்டை குறைத்துக் கொண்டாவது.

    அல்லது இணைய தளங்களில் உள்ள சிறப்பான கட்டுரைகளை நேரம் ஒதுக்கி வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்க. வாசிக்கும் போது தான் எழுத்துப் பயிற்சியின் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். சுஜாதா வாசிப்புப் பற்றி அவர் பயணத்தின் போது வாசிப்பது பற்றி எழுதியுள்ளதை இப்போது என்னால் நினைத்துப் பார்க்க முடிகின்றது. அந்த அளவுக்கு அவர் வாசித்த காரணத்தால் மட்டுமே மனுசன் புகுந்து விளையாட முடிந்துள்ளது.

    பிழையை சரி செய்ய உதவும் சுட்டி – http://dev.neechalkaran.com/p/naavi.html

    • ஜோதிஜி.. உங்கள் ஆதங்கம் முற்றிலும் உண்மையே… நீங்க கொடுத்த சுட்டி நன்றாக வேலை செய்கிறது.. எங்கள் பிழைகளைத் தெரிந்து சரி செய்து கொள்ள நிச்சயம் பயனளிக்கும்.. நன்றி..

  7. அருமையான பதிவு கிரி சார்..
    நானும் தமிழ்-ல எழுத முயற்ச்சி பண்ணப் போறேன் …
    உங்க தலைப்பின் ஐடியா செம..

  8. அனைவரின் வருகைக்கும் நன்றி.

    @ஜோதிஜி நீங்கள் கொடுத்த சுட்டி சிறப்பு. இதை அனைவரும் பயன்படுத்தினாலே பிழையில்லாமல் கட்டுரைகளைக் கொடுக்கலாம்.

    தற்போது தான் பொன்னியின் செல்வன் படித்து முடித்தேன்.

    சுஜாதா பற்றிய சுட்டியைத் தான் நான் கீழே கொடுத்து இருந்தேனே ஜோதிஜி. அவருடைய தளத்தில் பல காலம் முன்பு பார்த்தது எனவே எந்தக் கட்டுரை என்ற நினைவில்லை.

    https://www.giriblog.com/writer-sujatha-suggestion/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here