தமிழ்த் திரைப்படங்களின் சிறு விமர்சனங்கள் [செப் 2015]

8
Sakalakala Vallavan movie poster தமிழ்த் திரைப்படங்களின் சிறு விமர்சனங்கள்

சமீபத்தில் பார்த்த தமிழ்த் திரைப்படங்களின் சிறு விமர்சனங்கள். Image Credit

சகலகலாவல்லவன்

இயக்குநர் சுராஜூக்கு பழைய வெற்றிப் படங்களின் பெயர் மீது என்ன கோபமோ அவர் எடுக்கும் மொக்கைப் படங்களுக்கு எல்லாம் இந்தப் பெயர்களை வைத்து ஆத்திரத்தை தீர்த்துக் கொள்கிறார்.

ஒரு மாஸ் மசாலாப் படத்தின் பெயரைக் கொலை செய்ததைத் தவிர இந்தப் படத்தில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதில் இரண்டு நாயகிகள் வேறு!!

ஜெயம் ரவி இது போன்ற கதைகளைத் தேர்ந்தெடுப்பது தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொள்வதுபோலத்தான். படம் வெளியாகும் முன்பு இவர்கள் கூறியதைப் பார்த்து ஏமாந்துட்டேன்.

ஆரஞ்சு மிட்டாய்

குறும்படமாக எடுக்க வேண்டியதை முழு நீளப் படமாக எடுத்து இருக்கிறார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டம் பார்த்த போதே விஜய் சேதுபதி ஒப்பனை திருப்தியில்லை.

வயதானவர்களே நிறைய நடிகர்கள் இருக்க இவர் ஏன் சிரமப்பட்டு அதுவும் ஒட்டாத ஒப்பனையில் நடிக்க வேண்டும்? மரியான் படத்தில் தனுஷ் அம்மாவாக வரும் உமா ரியாசை பார்த்த போதும் இதே எண்ணம் தான் எனக்கு வந்தது.

விஜய் சேதுபதியிடம் Dye அடித்தால் வயதான நபராகி விடலாம் என்று யார் கூறினார்களோ!

இது மட்டுமே எனக்குக் குறையாகத் தெரிந்தது மற்றபடி நான் படத்தை ரசித்துப் பார்த்தேன். உடன் நடித்த ரமேஷ் திலக் மற்றும் ஆறுமுகம் பாலா அசத்தலான நடிப்பு.

படத்தை இந்த அலைவரிசையில் உள்ளவர்கள் மட்டுமே ரசிக்க முடியும், வெகுஜன படமல்ல.

இது என்ன மாயம்

வளர்ந்து வரும் நடிகர்கள் வருடத்திற்கு மூன்று படங்களாவது நடிக்க வேண்டும்” என்று தலைவர் கூறினார்.

இதை விக்ரம் பிரபு பின்பற்றப்போவதாகக் கூறினார் ஆனால், வரிசையாக மொக்கைப் படங்களாக நடித்து வருகிறார். இந்தப்படம்… ஷப்பா முடியல.

மூன்று படம் என்பது ஒரு படம் தோல்வி அடைந்தாலும் இன்னொரு படம் காப்பாற்றி விடும் என்பதே அந்த அர்த்தம்.

ஆனால், இப்படித் தேடித்தேடி சுமாரான படத்தில் நடித்துக்கொண்டு இருந்தால், என்னத்தைச் சொல்வது. விக்ரம் பிரபு நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடியுங்கள்.

இவர் நடிப்பில் வந்த அரிமா நம்பி அசத்தலான த்ரில்லர் படம். விறுவிறுப்பாக இருக்கும்.

நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்

பிரச்சனையே வராத ஊர் என்பதால் அங்குள்ள காவல் நிலையத்தில் உள்ளவர்களை வேறு இடத்துக்கு மாற்றுகிறார்கள்.

இதே ஊரிலேயே இருக்க நினைத்து இவர்கள் கிராமத்தில் வேண்டும் என்றே பிரச்சனையை உருவாக்குகிறார்கள்.

ஆனால், பிள்ளையார் பிடிக்கக் குரங்கான கதையாகப் பெரிய பிரச்சனையாகி, பின் என்ன ஆகிறது? என்பதே படம். பொழுது போகவில்லை என்றால் பார்க்கலாம் ரகம்.

சண்டிவீரன்

இந்தப் படத்தைச் சிங்கப்பூர் அரசாங்கம் தடை செய்த உடனே இதைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது, அப்படி என்ன இதில் இருக்கிறது? என்று. பிரம்படிகளையும், சட்ட விரோதமாகச் செல்வதையும், பிரம்படியால் ஏற்படும் பாதிப்புகளையும் கூறுவதால், தடை போல.

படம் கிராமத்துப் படம். தண்ணீர் பிரச்னையை வைத்து எடுத்து இருக்கிறார்கள். படம் வெளியான அன்று ட்விட்டரில் ஆஹா ஓஹோ என்றார்கள் ஆனால், படம் சரியாகப் போகவில்லை போல.

எனக்குப் படம் ரொம்பப் பிடித்தது. சலிக்காமல் ஓரளவு விறுவிறுப்பாகவே கதையைக் கொண்டு சென்றார்கள். அதர்வா, ஆனந்தி நடிப்பு ரொம்பப் பிடித்தது.

இறுதியில் வழக்கமான முறையில் முடித்தது ஒருவேளை பலரைக் கடுப்படித்து விட்டதோ..! எப்படியோ எனக்குப் படம் பிடித்தது.

மாரி

எல்லோரும் மாரியை செம்ம ஓட்டு ஓட்டுனாங்க ஆனால், அந்த அளவிற்குப் படம் மோசமில்லை.

தனுஷ் தவிர வேற யாரும் இவ்வளவு ஸ்டைலாக நடித்து இருக்க முடியுமா என்று சந்தேகம் தான். தனுஷ் பெரிய பிரச்சனை ஒல்லிப்பிச்சானாக இருப்பது தான்.

இது ஒரு ரவுடி கதாப்பாத்திரம். பல்லி மாதிரி இருந்துட்டு பத்துப் பேரை பறக்க விடுவது தான் பலரை கடுப்படித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

தனுஷுக்கு உடம்புக்கு மீறிய கதாப்பாத்திரம். “ஒஸ்தி” எப்படிச் சிம்பு வயதுக்கு மீறிய கதாப்பாத்திரமோ அது போல.

தனுஷ் நடிப்பு, அவரோட ஸ்டைல், திரைக்கதை என்று பார்த்தால் நல்ல பொழுதுபோக்கு படமே! பாடல்கள் நன்றாக இருந்தது.

தாராளமாகப் படத்தைப் பார்க்கலாம் மேற்கூறிய பிரச்னையை மட்டும் ஒதுக்கி விட்டுப் பார்த்தால்.

தனுஷுக்கு ஒரு வேண்டுகோள் எப்படியாவது உடம்பை ஏத்துங்க! இந்த உடம்பை வைத்துட்டு பல நல்ல கதாப்பாத்திரங்களில் நடிக்க முடியாமல் போய் விடுகிறது.

தனி ஒருவன்

அனைவரும் நன்றாக இருக்கிறது என்று கூறியதால் திரையரங்கில் சென்று பார்த்தேன், மேற்கூறிய படங்கள் இணையத்தில் பார்த்தது (கட்டணத்துடன் தான்).

ஏற்கனவே படம் குறித்துப் படித்து இருப்பீர்கள். சில விசயங்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஜெயம் ரவி உடம்பை குறைத்து இன்னும் Fit ஆகச் சுறுசுறுப்பாக நடித்து இருக்க வேண்டும். அரவிந்தசாமி சிறப்பான நடிப்பு.

நாயகர்கள் தன் மீது நம்பிக்கையில்லை என்றால் தான் வில்லன் கதாப்பாத்திரத்தை டம்மியாக வைப்பார்கள். இந்த வகையில் ஜெயம் ரவி சிறப்பு.

இதில் வரும் GPS முயற்சி I saw the devil படத்தில் வருவது என்பதால், கொஞ்சம் வருத்தம். அதை வைத்து எடுத்து இருக்க மாட்டார்கள் என்று சமாதானப் படுத்திக்கொண்டேன்.

அரவிந்தசாமி இடத்தில் எளிதாக ஜெயம் ரவி சென்று துப்பறிவதெல்லாம் நம்புகிற மாதிரியில்லை.

தம்பி ராமையாவிடம் அரவிந்தசாமி குரங்கு கதைக் கூறி பின் தம்பி ராமையா ஒரு கேள்வி!! கேட்கும் போது  அரவிந்தசாமி திரும்பி ஒரு பார்வை பார்ப்பார் பாருங்க.. ஹா ஹா செம 😀 .

ஹிப்ஹாப் தமிழா பின்னணி இசை ரொம்பச் சிறப்பாக இருந்தது. த்ரில்லர் படங்களுக்கே உண்டான அமைதியான ஆனால், மிரட்டல் இசையாக இருந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பின்னணி இசை ரசிக்கும்படி இருந்தது. BGM மட்டும் திரும்பக் கேட்க விரும்புகிறேன்.

ஒளிப்பதிவு ராம்ஜி. இவர் ஒரு பேட்டியில் “விமர்சனங்கள் எழுதும் போது ஒளிப்பதிவு நன்றாக இருந்தது என்று ஒருவரியில் முடித்து விடுகிறார்கள். நாங்கள் இதற்காக எவ்வளவு சிரமப்படுகிறோம்!” என்று ஆதங்கத்தைத் தெரிவித்து இருந்தார்.

ஒளிப்பதிவில் நுணுக்கங்களை விவரித்துக் கூறத் தெரியாது என்பதை எங்கே சென்று கூறுவது 🙂 .

என்னளவில் நிறைய விமர்சனங்களை எழுதி இருந்தாலும் “நீர்ப் பறவை” மற்றும் “விடியும் முன்” ஒளிப்பதிவில் மட்டுமே என்னால் ஒருவரியில் கூறாமல் அதிகம் கூற முடிந்தது.

படம் அவசியம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

அரவிந்தசாமி

அரவிந்தசாமிக்குள்ள இப்படி ஒரு நகைச்சுவையாளர் மற்றும் கலாயிக்கும் நபர் இருப்பார் என்பதே எனக்குத் தற்போது தான் தெரியும்.

பாஸ்கி இவரிடம் எடுத்த நேர்காணலில் மனுசன் கலக்கி இருக்காரு. தன்னை பேசவே விடாமல் பாஸ்கியே பேசியதை அரவிந்தசாமி கலாயித்து விட்டார்.

உண்மையில் பாஸ்கி அரவிந்தசாமியிடம் இருந்து நிறையச் சுவாரசியமான தகவல்களைப் பெற்று இருக்கலாம் ஆனால், வாய்ப்பை வீணடித்து விட்டார்.

அரவிந்தசாமி நிறையக் கூற வந்தார் ஆனால், பாஸ்கி அவரை முழுமையாக எதையுமே பேச விடவில்லை.

பேட்டி எடுப்பவர்கள், தான் குறைவாகப் பேசி பதில் தருபவர்களை அதிகம் பேச வைக்க வேண்டும் ஆனால், பெரும்பாலான நேர்காணலில் உல்டாவாக இருக்கிறது.

இது போல சொதப்பலானது  தலைவரிடம் விவேக் எடுத்த பேட்டி. அரிதான வாய்ப்பை அசால்ட்டாக வீணடித்து இருந்தார்.

இறுதியில் பாஸ்கியை அரவிந்தசாமி கலாயித்தார் பாருங்கள்… செம செம 🙂 .

எனக்கு இந்த முழுமையில்லாத பேட்டி பார்த்தவுடன் அரவிந்தசாமியிடம் அனுமதி கிடைத்தால் அவரிடம் ஒரு நேர்காணல் என்னுடைய தளத்திற்காக எடுக்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன் 🙂 .

அரவிந்தசாமியின் நகைச்சுவை பக்கத்தைப் பாஸ்கி கொண்டு வந்ததற்கு அவருக்கும் பாராட்டு.

நேர்காணலை நேரம் இருக்கும் போது பாருங்கள் சுவாரசியமாக இருக்கும்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

  1. திரைப்படங்களின் சிறு அளவிலான விமர்சனம் நன்றாக ரசிக்கும் படி இருந்தது. எனக்கு தெரிந்து முன்பெல்லாம் நல்ல படங்களுக்கு நடுவில் மொக்கை படம் வரும்,தற்போது அதிக மொக்க படங்களுக்கு நடுவில் சில நல்ல படம் வருகிறது.

    அதிக அளவில் பணத்தை போட்டு தரமில்லாத படத்தை எடுத்து, அதை வெளியிட்டு எப்படி கல்லா கட்றன்கலேனு புரியல??? ரெண்டு, மூன்று நாட்களுக்கு பிறகு வெற்றி விழா வேற கொண்டாடுகிறார்கள்..

    சென்ற வாரம் (www.herotalkies.com ) தளம் மூலம் சர்வர் சுந்தரம் நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் பார்த்தேன். படம் வெளியாகி, ஐம்பது ஆண்டுகள் கழித்து பார்க்கின்ற படம் என்ற உணர்வு எங்கும் இல்லை கிரி.. நிச்சயம் இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின் உயிரோடு இருந்தால் ரசித்து பார்ப்பேன் என எண்ணுகிறேன்.. பகிர்வுக்கு நன்றி.

  2. பாஹுபலி படம் பற்றி சொல்லலையே… அனைவரும் விமர்சித்து விட்டார்கள் என்று விமர்சிக்கவில்லையா அல்லது படம் பார்கவில்லையா…. விரைவில் எழுதுங்கள்…..

  3. சிறு விமர்சனங்கள்
    – பேருக்கு ஏத்த மாதிரி செம crispy பதிவு

    ஜெயம் ரவி உடம்பை குறைத்து இன்னும் Fit ஆகச் சுறுசுறுப்பாக நடித்து இருக்க வேண்டும்.
    – same beeling தல

    அரவிந்தசாமி interview சூப்பர்

    – அருண் கோவிந்தன்

  4. அண்ணா தனி ஒருவன் நல்ல படம் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது…… அரவிந்த்சாமி செமையா கலக்கிட்டார்…. படம் முடியும் போது படத்தின் கதாநாயகன் அரவிந்தா இல்லை ரவியா என்ற சந்தேகம் வராமல் இல்லை…. நல்ல படம் கொடுத்ததற்கு ராஜாக்கு வாழ்த்துக்கள்…..

    மாரி செம மொக்க னா தர லோக்கல் சாங் அப்புறம் மாரி பிஜிஎம் தான் அந்த படத்துல என்ன கவர்ந்தது…

    அப்புறம் புறா க்கள் …..

    எப்படி ண்ணா இருக்கீங்க … பேசி ரொம்ப நாள் ஆகுது…. படிக்க மட்டுமே நேரம் இருக்கு ண்ணா கமண்ட்ஸ் போட சுத்தமா டைம் இல்ல ண்ணா ….. ஏன்னா நானும் இப்போ வேலைக்கு போறேன் அண்ணா …..

    தொழில்நுட்ப செய்திகள் போடுங்க அண்ணா ரொம்ப நாளாச்சு

  5. @யாசின் எனக்கும் புரியல.. சூர மொக்கைப் படத்தை எல்லாம் எந்த தைரியத்தில் எடுக்கிறார்கள் என்றே புரியலை.

    3 நாட்களில் வெற்றி விழா எடுத்தாலும் அடுத்த சில வாரங்களில் அவர்கள் சாயம் வெளுத்து விடுகிறது.

    சர்வர் சுந்தரம் அட்டகாசமான படம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. நாகேஷ் அவர்கள் நடிப்பு அசத்தல். அவருக்கு பொருத்தமான கதாப்பாத்திரம்.

    இந்தப் படத்தில் படிப்பிடிப்பு நடத்துவதை காண்பிப்பார்கள் அப்போது இதற்கு எதிர்ப்பு வந்ததாம்.

    @பிரகாஷ் பாகுபலி பற்றி ஏற்கனவே ஒரு பின்னூட்டத்தில் கூறி விட்டேன்

    https://www.giriblog.com/uppuveli-book-review/

    @அருண் நன்றி

    @கார்த்தி நல்லா இருக்கேன்.. நீ எங்க வேலைல இருக்கே? கோவை / சென்னை.

    தொழில்நுட்ப செய்திகள் எழுதுகிறேன்.

  6. Rajini yin marumhana endra oru karanthirkakaha mari mocka film ku neenga support panringa kiri anne. ithulaye unga vimarsanam oada tharam muranchi viddathu

  7. irzath உங்களுக்கு சைக்கலாஜிக்கலாக எதோ பிரச்சனை என்று நினைக்கிறேன்.

    நீங்க எழுதும் தொனியைப் பார்த்தால் (முந்தையை பின்னூட்டங்களையும் சேர்த்து) நீங்கள் டீசன்ட்டான நபராகத் தோன்றுகிறது ஆனால், உங்களின் அர்த்தமற்ற கற்பனை எரிச்சலையே எனக்குத் தருகிறது.

    கடந்த Drishyam இடுகையில் இதே போல கூறினீர்கள்.. நான் அப்படி நினைத்து எழுதவில்லை என்றாலும் நீங்கள் கூறியதில் ஒரு லாஜிக் இருந்தது.. இதில் என்ன இருக்கிறது?!

    தனுஷ் படம் நல்லா இருந்தால் என்ன நாசமா போனால் என்னக்கென்ன? முதலில் எனக்கு தனுஷ் மீது நடிப்புத் தவிர எந்த மரியாதையும் இல்லை. மருமகன் அதனால் பாராட்டா? இதற்கு பதிலா நீங்க என்னை அசிங்கமாக திட்டி இருக்கலாம்.

    உங்களுடைய கற்பனைக்கு அளவே இல்லையா! இனி அடுத்தது “கிருமி” என்ற படம் ரஜினி உதவியாளர் தயாரிப்பில் வருகிறது..ஒரு வேளை இந்தப் படம் நன்றாக இருந்து அதைப் பாராட்டினால் அப்பவும் இதையே தான் கூறுவீர்கள் போல.

    ஆமா! அது என்ன “உங்களுடைய விமர்சன தரம் இதிலேயே தெரிந்து விட்டது.. குறைந்து விட்டது”ன்னு சொல்லிட்டே இருக்கீங்க..!

    நீங்க இது வரை மூன்று பின்னூட்டம் போட்டு இருக்கீங்க மூன்றுமே திரைப்படங்கள் சம்பந்தப்பட்டது தான். நான் உங்களை என்னுடைய விமர்சனங்களை படி என்று கூறினேனா?! நீங்க ஏங்க கஷ்டப்பட்டு படிக்கணும் என்னோட தரமில்லாத விமர்சனத்தை!

    தமிழ்ல நான் மட்டுமா திரை விமர்சனம் எழுதுகிறேன்? எத்தனையோ பேர் “தரமான” விமர்சனம் எழுதறாங்க.. உங்களுக்கு ரஜினி பிடிக்கவில்லை என்பதற்கு நான் என்னங்க பண்ணுறது? எத்தனையோ ரஜினியை திட்டும் தளங்கள் இருக்கிறது அதைப் படித்து சந்தோசப்பட்டுக்குங்க. என்னை விட்டுடுங்க.

    நீங்க நினைப்பதையெல்லாம் நான் எழுத முடியாது அப்படியே எழுதினாலும் அதிலும் வந்து இது ரஜினி வீட்டு வேலைக்காரர் வந்து போன படம், இது ரஜினி பக்கத்து வீட்டுல எடுத்த படம், அது ரஜினி கார் டிரைவர் எட்டிப் பார்த்த படம் அதனால தான் நீங்க பாராட்டுறீங்க என்று சொல்வீங்க.

    தயவு செய்து உங்கள் எண்ணங்களை என் மீது திணிக்காதீர்கள் / எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் என்னுடைய தளத்தை தொடர்ந்து படிக்கிறீர்கள் என்ற ஒரே மரியாதைக்காக இந்த விளக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here