ரஜினியின் அரசியல் முடிவு

11
ரஜினியின் அரசியல் முடிவு - rajini quits politics

ட்சி துவங்கப்போவதாக அறிவிக்க இருந்த நிலையில், தன் உடல்நிலை மற்றும் மற்ற காரணங்களைக் கூறி அரசியலுக்கு வரவில்லையென ரஜினி அறிவித்துள்ளார். ரஜினியின் அரசியல் முடிவு பற்றிப் பார்ப்போம். Image Credit

ரஜினியின் அரசியல் முடிவு

ரஜினியின் விளக்கத்தை அனைவராலும் ஏற்றுக்கொள்வது எளிதல்ல. மற்றவர்கள் உணர வேண்டும் என்று எதிர்பார்ப்பதிலும் நியாயமில்லை.

கேலி செய்வார்களே என்று சிலரும், தமிழகத்துக்கு ஒரு மாற்றம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.

சிலர் மக்கள் பணியில் கடுமையாக உழைத்துள்ளார்கள், நேரத்தைச் செலவழித்துள்ளார்கள். அவர்களுக்கு இதை ஏற்றுக்கொள்வது கடினமே!

தமிழகத்துக்கு ரஜினி மூலம் மாற்றம் கிடைக்கும், ஊழல் லஞ்சம் ஒழியும், தமிழ்நாடு முன்னேற்றம் அடையும் என்று மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.

ரசிகர்கள் மட்டுமல்ல, ஏராளமான பொதுமக்களும் எதிர்பார்த்தார்கள்.

தமிழகம் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக, ஊழல் இல்லாத மாநிலமாக வரவேண்டும் என்பதே என் விருப்பம்.

ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் பலமும், மக்கள் ஆதரவும் இருந்தும் அதை உலகுக்கு வெளிக்காட்ட வாய்ப்புக் கிடைக்காமலே போனது நிகழ மறுத்த அற்புதம் தான்.

தமிழகம்

தற்போதும் மற்ற மாநிலங்களை விடத் தமிழகம் முன்னணியில் உள்ள நிலையில், திறமை வாய்ந்த தமிழக மக்களுக்குச் நேர்மையான ஆட்சியாளர் அமைந்தால் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடையலாம் என்பதில் சந்தேகமில்லை.

நான் விரும்பும் ரஜினியால் நடக்க வாய்ப்பு இருந்ததால், மகிழ்ச்சியாக இருந்தது.

நிச்சயம் ரசிக மனநிலையில் அவரின் வெற்றியை எதிர்பார்க்கவில்லை, தமிழகத்துக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே!

ரஜினியை கடவுள் பிழைக்க வைத்ததற்கு அரசியல் தான் காரணமாக இருக்கும் என்று உறுதியாக நம்பினேன் ஆனால், வேறு காரணங்கள் உள்ளதோ என்னவோ!

ரஜினியின் சில முடிவுகளைத் தவறு என்று நினைத்து இருந்தாலும், இறுதியில் நான் நினைத்ததே தவறு என்றாகியுள்ளது.

இம்முடிவு எப்படியாகும் என்று காலம் தான் கூற வேண்டும்.

விமர்சனங்களும் எதார்த்தமும்

ரஜினியை வெறுப்பவர்களும், கிண்டலடிப்பவர்களும் ‘இது தான் எனக்கு முன்பே தெரியுமே! அப்பவே சொன்னோமே!‘ என்று எளிதாகக் கூறி விடுவார்கள்.

ரஜினியின் முடிவு அவரை எதிர்ப்பவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பவர்களுக்கு வேதனையையும் அளித்துள்ளது.

தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய ஏமாற்றம் என்பதில் சந்தேகமில்லை. எந்த அளவுக்கு என்றால், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட போது கூடக் கலங்கவில்லை ஆனால், இந்த அறிவிப்பு உலுக்கி விட்டது.

ரஜினி யார் சொத்தையும் அபகரிக்கவில்லை, யாரையும் மோசமாக விமர்சிக்கவில்லை, குடும்பத்தைக் கவனியுங்கள் என்று தான் கூறினார்.

இவை அனைத்தையும் செய்து கொண்டு இருப்பவர்களைக் கண்டுகொள்ளாமல், அரசியலுக்கு வரவில்லை என்று கூறியதற்கு விமர்சிப்பது தான் வியப்பளிக்கிறது.

அரசியலுக்கு வந்து கொள்ளை அடிப்பவரை வேடிக்கை பார்த்து, ‘வந்தால் சம்பாதிக்க விட மாட்டேன்‘ என கூறி தனிப்பட்ட காரணத்தால் விலகியவரை விமர்சிக்கிறார்கள்.

ரஜினியை விமர்சிக்கும் ஒருவரை அழைத்து ‘ரஜினியால் உனக்கு என்ன கெடுதல் நடந்தது?‘ என்றால் நேரடி பதில் இருக்காது, தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவார்.

ரஜினி முடிவைச் சிலருக்கு ஒரு நாளில் கடந்து செல்ல முடியும், சிலருக்கு வாரங்கள், மாதங்கள் கூட ஆகலாம், சிலரால் எப்போதுமே முடியாது.

இதுவும் கடந்து போகும்

ரஜினியின் முடிவு வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளித்தாலும், நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உள்ளது.

ரஜினியின் முடிவால், தமிழகத்துக்கு நல்லது நடக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு மட்டுமே பொய்த்துப் போனது. தனிப்பட்ட இழப்பு என்று எனக்கு இல்லை.

உண்மையில் உலகம் முழுக்க நண்பர்கள், ரஜினியிடம் இருந்து மிகச்சிறந்த அனுபவங்கள் என்று பெற்றதே அதிகம்.

ரஜினி மீது கோபம் இல்லை, ஏமாற்றமுள்ளது ஆனால், எனக்குப் புரியாத ஒன்று இவ்வளவு பேருடைய நம்பிக்கை எப்படிப் பொய்த்தது என்பது மட்டுமே!

ஆனால், ‘நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கும்!‘ மற்றும் நேர்மறை எண்ணங்களை எந்தக் காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

இதுவும் கடந்து போகும்‘ என்பதின் பின்னே பலரின் ஓராயிரம் கனவுகளும், வேதனைகளும் அடங்கியுள்ளது.

தமிழகம் மிகச்சிறந்த மாநிலமாக வரப் பிரார்த்திப்போம்.

உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

11 COMMENTS

  1. கிரி.. தனிப்பட்ட முறையில் உங்கள் மன நிலையை ஓரளவு அறிந்தவன் நான்.. நிச்சயம் உங்கள் போன்றவர்களுக்கு ரஜினி சாரின் முடிவு மிக பெரிய ஏமாற்றம்.. இது நடக்கும் என்று எண்ணும் போது, அது நடக்காமல் போகும் போது, இதை விட சிறந்த ஒன்று நிச்சயம் நடக்கும் என்று நம்பிக்கை கொள்வோமாக!!! ரஜினி என்ற ஜாம்பவானை பற்றி பல நூறு விஷியங்களை தற்போது தெரிந்து கொண்டே வருகிறேன்.. ஒவ்வொரு தகவலை படிக்கும் போதும், கேட்கும் போதும் இன்னும் ஆச்சரியப்படுத்தி கொண்டே இருக்கிறார்..

  2. நீங்களே கலங்கிப்போயிருக்கும் இந்த நேரத்தில் மேலும் உங்களை கலங்கடிக்காமல் வாயை மூடிக்கிட்டு போறேன். புது வருட வாழ்த்துக்கள் அண்ணாத்தே!

  3. I agree but rajini sir should reconsider his decision I love Rajini and only Rajini Sir can change corruption less Tamilnadu under all government office should change to online there should not be any direct contact with people.

  4. கிரி போன்று கோமாளி ரசிகர்கள் அவர் என்ன செய்தாலும் முட்டு கொடுப்பார்கள். டிசம்பர் 3 அன்று அரசியலுக்கு வரும் தேதியை அறிவிக்கறேன் என்று சொன்னவுடன் நீங்கள் பேசிய பேச்சு நியாபகம் இருக்கிறதா ஏதோ இதுவரைக்கு தமிழ்நாடு சுடுகாடு மாரி இருப்பது போலும் ரஜினி வந்ததும் சொர்க்கபுரி ஆகிவிடும் போலவும் என்ன பேச்சு பேசினீர்கள். மூன்றாம் தேதி அன்று ரஜினிக்கு தெரியாதா நமக்கு உடல் நலன் சேரியில்லை என்று. நான் தோற்றால் அது மக்களின் தோல்வி என்ன ஆணவமான பேச்சு. இப்படி ரஜினி என்ன செய்தாலும் அதற்கு கூஜா தூக்கதிர்கள்

  5. @யாசின் நன்றி யாசின்

    @ப்ரியா புத்தாண்டு வாழ்த்துகள்

    @Chandru Yes, God only knows. Accept the fact and move on.

  6. @ராகுல் “கிரி போன்று கோமாளி ரசிகர்கள் அவர் என்ன செய்தாலும் முட்டு கொடுப்பார்கள்.”

    அதற்கு ராகுல் போன்ற ரஜினி மீது வன்மம் கொண்டவர்கள் ரஜினி என்றால் மட்டும் மூக்கு வேர்த்து விடுவார்கள்.

    “டிசம்பர் 3 அன்று அரசியலுக்கு வரும் தேதியை அறிவிக்கறேன் என்று சொன்னவுடன் நீங்கள் பேசிய பேச்சு நியாபகம் இருக்கிறதா”

    நீங்களே மறக்காத போது நான் எப்படி மறப்பேன். இக்கட்டுரையிலேயே லிங்க் கொடுத்துள்ளேன்.

    என்ன பேசினேன்னு நீங்க தான் சொல்லுங்களேன்? தெரிந்து கொள்கிறேன்.

    ” ஏதோ இதுவரைக்கு தமிழ்நாடு சுடுகாடு மாரி இருப்பது போலும் ரஜினி வந்ததும் சொர்க்கபுரி ஆகிவிடும் போலவும் என்ன பேச்சு பேசினீர்கள்.”

    நீங்க தான் கட்டுரையை ஒழுங்கா படிக்கணும்.. நான் அதைப்போல எங்கும் கூறவில்லை. அரசியல் சாதக பாதகங்களை மட்டுமே கூறி இருந்தேன்.

    ரஜினியை திட்டணும்னு வந்தால் கட்டுரையையும் முழுசா படிக்கணும். என் தளத்தின் மற்ற கட்டுரைகளையும் படிக்கணும்.

    உங்களை மாதிரி ஆட்கள் ரஜினி என்றாலே எதையும் யோசிக்காமல், வந்து விமர்சிக்க மட்டுமே செய்வீர்கள் என்பதை திரும்பத் திரும்ப நிரூபிக்கிறீர்கள்.

    பின்வருவதை இக்கட்டுரையில் தான் எழுதி உள்ளேன்.

    “தற்போதும் மற்ற மாநிலங்களை விடத் தமிழகம் முன்னணியில் உள்ள நிலையில், திறமை வாய்ந்த தமிழக மக்களுக்குச் நேர்மையான ஆட்சியாளர் அமைந்தால் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடையலாம் என்பதில் சந்தேகமில்லை.”

    அப்படியே இந்தக் கட்டுரையையும் படிங்க

    https://www.giriblog.com/has-dravidan-parties-damaged-tn/

    “நான் தோற்றால் அது மக்களின் தோல்வி என்ன ஆணவமான பேச்சு.”

    ஜெயித்தாலும் அது மக்களின் வெற்றி என்றும் கூறினார்.. அது உங்கள் காதில் விழவில்லையா? விழாது.

    “மூன்றாம் தேதி அன்று ரஜினிக்கு தெரியாதா நமக்கு உடல் நலன் சேரியில்லை என்று.”

    அடுத்த நிமிடம் என்ன நடக்கும்னே யாருக்கும் தெரியாது.. 25 நாட்களுக்குப் பிறகு நடக்கப்போவது தெரியுமா?! ஒருவேளை ராகுல் மாதிரி ஜீனியஸ் க்கு வேணா தெரியலாம், சராசரி மனிதருக்கு வாய்ப்பில்லை.

    “இப்படி ரஜினி என்ன செய்தாலும் அதற்கு கூஜா தூக்கதிர்கள்”

    ராகுல் முதல்ல கூஜா தூக்குறதுன்னா என்னன்னு தெரியுமா? ஒருவரால் தனக்கு நேரிடையாகவோ மறைமுகமாவோ பலன் பெற்று இருக்க வேண்டும் அல்லது பெற முயற்சிக்க வேண்டும்.

    ரஜினியால் எனக்கு என்ன சொத்து, பதவி, பணம் என்று கிடைத்ததா?

    அவரால் எனக்கு கிடைத்தது உலகம் முழுக்க நண்பர்கள், நல்ல எண்ணங்கள், கருத்துகள் மட்டுமே!

    இது போன்றவை கிடைத்தால் கூஜா தூக்குவது என்றால், இருந்துட்டு போகட்டுமே! அதனால் என்ன?!

    உங்களை போன்ற ரஜினி என்றால் வன்மமாக பார்க்கும் நபர்கள் இடையே இது போல பலன்களால் ரஜினிக்கு கூஜா தூக்குவது சிறப்பு.

    இதுவரை 1000 கட்டுரைகளுக்கு மேல் எழுதி இருக்கிறேன். அதில் ஏராளமான பொழுதுபோக்கு அல்லாத பயன் தரும் கட்டுரைகளையும் எழுதியுள்ளேன்.

    ஆனால், இதுவரை உங்களைப் போன்றவர்கள் கருத்திடுவது ரஜினி பற்றிய கட்டுரைகளுக்கு மட்டுமே! அதுவும் என்னையும் ரஜினியையும் திட்ட மட்டுமே!

    தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் செய்த ஊழல், அதிகார துஷ்பிரயோகம், நில அபகரிப்பு, அப்பாவிகளை மிரட்டுவது போன்றவற்றை கேட்க துப்பு இல்லாத, கோபப்படாத நீங்கள், இதில் எதையுமே செய்யாத ரஜினி மீது மட்டும் பொங்குவதற்கு வெட்கப்பட வேண்டும், நான் அல்ல.

  7. நண்பர் கிரி ராகுல் போன்றவர்கள் ரஜினியை அல்லது ஒருவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க நோக்கம் எதுவும் இல்லை, இது ஒருவகையில் உங்களை மனோரீதியாக தீண்டும் முயற்சி, அப்படி கூறினால் தான் நீங்கள் கோவப்படுவீர்கள் அதன் மூலம் விளையும் செயலால் அவர்களுக்கு உள்ளூர ஒரு சந்தோசம் கிடைக்கும் ,இப்போது நீங்கள் பதிவிட்ட பதிலாலைப் படித்து அவர் நிச்சயம் சந்தோஷப்படுவார் இந்த ஒரு விஷயம் தான் அவருக்குத் தேவை, எனவே இவரைப் போன்றவர்களுக்கு பதில் கூறுகிறீர்களானால் அது அவர்களை சந்தோஷப் படுத்துகின்றீர்கள் என்பதுதான் அர்த்தம்.எனவே இவர்களை போன்றவர்களை விட்டுத் தள்ளுவேதே நல்லது.

  8. கோபம் எல்லாம் 10 வருடங்களுக்கு முன் கார்த்திக். செமையா சண்டை போடுவேன். தற்போதெல்லாம் இது போல விளக்கம் அவ்வளவே!

    கருத்திட்டு உள்ளார் எனவே, அதற்குப் பதில் அளிப்பது முறை. எனவே, அதைச் செய்தேன் ஆனால், இதையே வேலையாகத் தொடர மாட்டேன்.

  9. Good Day Giri,

    Me too was upset and things did not go normal for at least a week after his decision announcement. But he has a point also and we do not know as to what is happenning to him. Friends and foes trolled me for a while and now they are busy with their things. A fine word comes to mind (its also borrowed from you) ITHUVUM KADANTHU POGUM.

  10. மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள் நண்பரே… நான் முதன் முதலாக உங்கள் வலைதளத்தை இப்போது தான் 16-08-2022 பார்க்கிறேன். ரஜினியின் முடிவில் ஏமாற்றம் அடைந்தவர்களில் நானும் ஒருவன். நான் அவரது ரசிகன் இல்லை. ஆனால் திரையுலகத்தை வெளியில் இருந்து பார்க்கும் ஒரு சராசரி மனிதன். அவர் வந்தால் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று எண்ணினேன். காலம் வேறு மாதிரி கொண்டு போய் விட்டது… பரவாயில்லை. இதுவும் நன்மைக்கே…நமக்கும்…அவருக்கும்

  11. திரு.ராகுல் அவர்களுக்கு…

    இங்கே யாரும் ஏமாளியும் இல்லை, கோமாளியும் இல்லை…ரஜினி மேல் ஒரு இனம் புரியாத பாசம் மட்டுமே…
    அன்றைய தினம் ரஜினிக்கு என்ன நடந்தது என்று அந்த ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும். அதனால் எதையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் பேச முடியாது. அதனால் காலத்திற்கே நம் கேள்வியை விட்டு விடுவோம்…. காலம் பேசாது…. ஆனால் பதில் சொல்லும்… நன்றி நண்பரே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here