அண்ணாமலை Vs ஊடகவியலாளர்கள்

11
அண்ணாமலை Vs ஊடகவியலாளர்கள்

ண்ணாமலை YouTube ஊடகவியலாளரிடம் அவர்கள் பாணியிலேயே பதிலளித்தது சர்ச்சையாகி ஊடகத்தினர் போராட்டம் நடத்தினார்கள்.

அண்ணாமலை

ஒரு சராசரி பாஜக ஆதரவாளர் தான் விரும்பும் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பாரோ அதைவிடப் பல மடங்கு சக்தி வாய்ந்தவராக இருந்தால் எப்படி இருக்குமோ அது தான் அண்ணாமலை.

என்னிடம் மரியாதையாக நடந்தால் நானும் மரியாதையாக நடப்பேன் என்பது தான் அண்ணாமலை கூறுவது.

அண்ணாமலை பற்றித் தனிக்கட்டுரை எழுதும் அளவுக்கு விஷயம் இருந்தாலும், இதில் அண்ணாமலை Vs ஊடகங்கள் பற்றி மட்டும் கூறுகிறேன்.

ஊடகங்கள்

தமிழக ஊடகங்களின் வண்ணம், தரம் மாறிப்போய்ப் பல வருடங்களாகி விட்டது ஆனால், நாளுக்கு நாள் மேலும் தரம் தாழ்ந்துகொண்டு இருப்பது கண்கூடு.

ஊடகங்கள் முழுக்க இடது சாரி ஆதரவாளர்கள், மோடி எதிர்ப்பாளர்கள், திமுக ஆதரவாளர்கள், இந்துமத எதிர்ப்பாளர்கள் ஆக்கிரமித்து விட்டனர்.

எனவே, செய்திகளில் என்ன வருகிறது, வரும் என்பது சராசரி நபருக்கும் தெரியும்.

முழுக்கத் திமுக ஆதரவு செய்திகள், மோசமான செய்திகளின் மறைப்பு இது தான் 24 மணிநேரமும் நடக்கிறது. இதன் பெயர் செய்தியா? ஊடக தர்மமா?

தற்போது நடந்த சம்பவங்கள் அதிமுக ஆட்சியில் நடந்து இருந்தால், ஊடகங்கள் ஒவ்வொருவரும் காலில் சலங்கை கட்டி ஆடி இருப்பார்கள்.

ஊடகத்தின் வேலை என்ன? செய்திகளைச் செய்தியாகத் தருவது. இது தான் நடக்கிறது என்று மனசாட்சியுள்ளவர்கள் ஒப்புக்கொள்வீர்களா?

செய்தித்தாண்டி தன் கருத்தை ஒரு ஊடகம் தெரிவிக்கவே தலையங்கம், கட்டுரைகள் உள்ளது. இதைத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, செய்திகளை அல்ல.

செய்தியில் தங்கள் கருத்துகளைத் திணித்து மக்களிடையே போலியான பிம்பத்தை, தங்கள் எண்ணங்களை, கோட்பாடுகளைச் செய்திகளாகத் திணிக்கிறார்கள்.

விவாதங்களில் வலது சாரிகளைப் பேச விடாமல் இடைமறித்துக் கேள்விகளாகக் கேட்பது, பாஜக எதிர்ப்பு நபர்களை எந்த இடைமறிப்பும் இல்லாமல் பேச விடுவது. இது தான் விவாதங்களில் நடக்கிறது.

அண்ணாமலையிடம் கேட்கும் கேள்விகளில் 5% மாவது ஸ்டாலினிடமோ, திமுக நபர்களிடமோ கேட்டு இருப்பார்களா? இனி கேட்கத்தான் செய்வார்களா?

ஊடகவியலாளர் என்றால் என்ன கொம்பா முளைத்துள்ளது. இவர்கள் என்ன வேண்டும் என்றாலும், எப்படி வேண்டும் என்றாலும் கேட்பார்கள் எதிரில் உள்ளவர்கள் பொறுமையாகக் கூற வேண்டுமா?

அண்ணாமலை அனைவரிடமும் எப்படி நடந்து கொள்கிறார் என்று பிரஸ் மீட் பார்க்கும் அனைவருக்கும் தெரியும். அனைவரையும் அண்ணா, அக்கா, சார் என்று மரியாதையுடன் தான் அழைப்பார்.

எனவே, இவர்கள் யாரும் அண்ணாமலையிடம் எப்படி நடக்க வேண்டும் என்று வகுப்பு எடுக்கத்தேவையில்லை.

மரியாதை எப்படிக் கொடுக்கப்பட்டதோ அப்படியே திரும்ப வருகிறது.

தங்களைச் சிகப்பு விளக்கு ஊடகம், நாக்கில் சுளுக்கெடுப்பேன் என்று கூறிய போது வராத கோபம், ரோஷம் அண்ணாமலை கூறியதற்கு வருகிறதாம்! 

வெட்கமாக இல்லையா?!

போராட்டம்

விகடன் மேல் வழக்கு என்றவுடன் போராட்டத்துக்குக் கூடியவர்கள் 15 பேர் கூட இருக்க மாட்டார்கள் ஆனால், அண்ணாமலைக்கு இதை விட அதிகம்.

அதிலும் சென்னை பிரஸ் என்று இரு குழுவாகப் போராட்டம். இதுல யார் உண்மையான சென்னை பிரஸ் என்று அவர்களுக்குள்ளே குழப்பம்.

இந்த இலட்சணத்தில் அண்ணாமலையை விமர்சிக்க வந்து விட்டார்கள்.

தமிழிசை பொறுமையாகப் பதில் கூறுவாராம்.

தமிழிசை வெகுளியானவர். எனவே, அவரை வைத்து இந்த ஊடகம் என்னென்ன கிண்டல் கேலிகள் செய்தன.

ஒரு நேர்மையான அரசியல்வாதி, ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவர் என்று கூடப் பாராமல் என்னென்னவெல்லாம் பேசினார்கள். கிண்டலடித்துத் தலைப்பு வைத்துச் செய்தி வெளியிட்டார்கள்.

இவர்களுக்குத் தமிழிசையைக் கையாள்வது எளிதாக இருந்தது எனவே, அவர் நல்லவர்.

அண்ணாமலையிடம் இவர்கள் பாச்சா பலிக்கவில்லை. புள்ளிவிவரங்களுடன் நெத்தியடியாகப் பதில் தருகிறார். இவர் தரும் தகவல்கள் பல, ஊடகவியாளர்களுக்கே தெரியவில்லை, விழிக்கிறார்கள்.

துவக்கத்தில் கலாயிக்கலாம் என்று வந்த ஊடகவியலாளர்களுக்கு, தான் வழக்கமான அரசியல்வாதியில்லை என்று அண்ணாமலை நிரூபித்த பிறகு துவக்கத்திலிருந்த கிண்டல் கேலிகள் குறைந்து அமைதியாகி விட்டார்கள்.

தாங்கள் நினைத்ததுக்கு மாறாக அண்ணாமலை விவரமானவராக இருப்பதால், அவரைக் கையாள முடியாத கழிவிரக்கமே இவர்கள் கோபத்துக்கு முக்கியக்காரணம்.

ஒரு ரன் போகும் அளவு கூட அடிக்காத அடிக்குச் சிக்ஸர் என்று புகழ்ந்தவர்களுக்கு நிஜமாகவே சிக்ஸர் அடித்தால், எதிர்கொள்ளக் கடுப்பாகத்தானே இருக்கும்.

மாறும் கேட்கப்படும் கேள்விகள்

ஸ்டாலின், திமுக அமைச்சர்களிடம், தமிழகத்தில் நடக்கும் சட்ட ஒழுங்குப் பிரச்சனை உட்படக் கேட்க ஏராளமான கேள்விகள் உள்ளது ஆனால், எதுவும் கேட்கிறார்களா?

ஆனால், அதே அண்ணாமலை என்றால், இந்திய பொருளாதாரம் மட்டுமல்ல, உலகப்பொருளாதாரம் வரை கேட்பார்கள்.

வழக்கமான அரசியல்வாதி பதிலைப் போல அல்லாமல் புள்ளி விவரங்களுடன் பதிலடி கொடுப்பதாலே இவர்களாலே அண்ணாமலையைச் சமாளிக்க முடியவில்லை.

என்ன கேட்டாலும் அனைவருக்கும் புரியும் விதத்தில் எளிமையாக விளக்குகிறார். எந்தக் கேள்வி கேட்டாலும் புறக்கணிக்காமல் பதில் அளிக்கிறார்.

தமிழக ஊடகவியாளர்களிடம் கதையளக்கும் கனிமொழியும், ஜோதிமணியும் டெல்லி ஊடகவியலாளர் கேட்ட ஒரே ஒரு கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் ஓட்டம் எடுத்தார்கள்.

ஒரு சராசரி நபர் அண்ணாமலை பிரஸ் மீட் பார்த்தால், பல்வேறு புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். இதுவே தற்போதைய நிலை.

வழக்கமான அரசியல்வாதி போல மேலோட்டமாக எதையாவது கூறாமல், முழு விவரங்களுடன் காரணங்கள் வரை விளக்குகிறார்.

கண்டுகொள்ளக் கூடாது

அண்ணாமலை இவர்கள் மிரட்டலுக்குப் பயப்பட மாட்டார், பயப்படக் கூடாது.

இவர்களுக்குத் தேவையில்லை என்றால், அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பைப் புறக்கணிக்கட்டும். எப்படியும் அண்ணாமலை பேசும் முக்கியத் தகவல்களைச் செய்திகளில் கூறுவதில்லை.

அண்ணாமலை கூறியதில் ஏதாவது முக்கியமற்ற விஷயத்தை முன்னிலைப்படுத்திச் செய்தியை வெளியிட்டு, கூற வேண்டியதை மறைத்து விடுகிறார்கள்.

ஊடகங்கள் எப்படித் தலைப்பை வைத்து அண்ணாமலையை கீழிறக்க முயற்சிக்கிறார்கள் என்பது தொடர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும் ஆனால், அனைவரும் உணரும் காலமும் வரும்.

அனைத்தும் சமூகத்தளங்கள், வாட்ஸப் மூலமாகவே தற்போது மக்களுக்குச் சென்று கொண்டுள்ளன. எனவே, இவர்கள் அண்ணாமலையைப் புறக்கணிப்பதால் எந்த இழப்புமில்லை.

இழப்பு ஊடகங்களுக்குத் தான், TRP வராது.

அண்ணாமலை செய்தியில்லை என்றால், தினமும் ஸ்டாலின் சைக்கிள் ஓட்டுவது, டீ குடித்தது, ஜிம் போன செய்திகளைத்தான் ஒளிபரப்ப முடியும்.

இதைப் போலத் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டு இருந்தால், திமுகவினர் கூடப் பார்க்க மாட்டார்கள்.

எனவே, அண்ணாமலையை விமர்சிக்கலாம் ஆனால், தவிர்க்க முடியாது.

ஊடகவியலாளர் என்ற பெயரில் எதையும் பேசலாம், கேட்கலாம், பிரச்சனையானால் ஊடக சுதந்திரம் பின்னே ஒளிந்து கொள்ளலாம் என்பது நியாயமான அணுகுமுறையல்ல.

ஊடகவியலாளர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. எதையும் பேசலாம், எப்படியும் நடக்கலாம் என்பதற்கு!

அண்ணாமலை கூறியது போல மரியாதை கொடுத்து மரியாதையைப் பெற்றுக்கொள்ளட்டும்.

தொடர்புடைய கட்டுரைகள்

செய்திகளை உருவாக்கும் ஊடகங்கள்

தமிழக ஊடகங்களின் பல்டிகள்

நடுநிலை என்பது சாத்தியமா இல்லையா?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

11 COMMENTS

  1. கிரி, உண்மையா சொல்ல போனால் எந்த கட்சியின் மீது பெரிய ஆர்வம் இல்லாமல் இருப்பதால், அது குறித்த செய்திகளையோ, நேர்காணல்களையோ நான் பார்த்து பல வருடங்கள் இருக்கும்.. நான் எந்த கட்சியின் ஆதரவாளன் கிடையாது.. ரொம்ப நாட்களுக்கு முன்பு விவாதங்களையும், அரசியல் குறித்த செய்திகளையும் தொடர்ந்து படித்து வந்தேன்.. ஒரு கட்டத்தில் மொத்தமாக வெறுத்தே விட்டேன்.. தற்போது முற்றிலும் அரசியல் குறித்த, கட்சிகள் குறித்த செய்திகளை பார்ப்பதே இல்லை.. ஒரு சமயத்தில் நூலகத்தில் ஒரு செய்தித்தாளை எடுத்தால் படித்து முடிக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும்.. கூட வரும் நண்பர்களே வெறுத்து விடுவார்கள்.. தற்போது செய்திகளை ஜஸ்ட் லைக் தட்.. கடந்து விடுகிறேன்.. அண்ணாமலை அவர்கள் குறித்து நீங்கள் குறிப்பிட்டதை படிக்கும் போது, அவரை குறித்து தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது.. பகிர்வுக்கு நன்றி.

  2. கிரி, தமிழக ஊடகங்கள் அண்ணாமலை அவர்களிடம் வரம்பு மீறி தான் நடக்கின்றன. பாஜக மேல் உள்ள வெறுப்பு மற்றும் அவர்களின் வளர்ச்சி தான். மேலும் அவர் மத்திய பாஜக வால் நியமிக்கப்பட்ட மாநில தலைவர், அவரின் பதவி காலம் 3 அல்லது 6 வருடங்கள் தான்.அவரால் தொடர்ந்து இந்த பதவியில் இருக்க முடியாது என்பதனால், இவர்கள் ஒரு படி மேலே போய் மிரட்டவும் செய்கிறார்கள்.

    மோதியும் அமித் ஷாவும் அண்ணாமலைக்கு இவ்வளவு அதிகாரம் கொடுத்தும் இவர்கள்(திமுக கட்சி & திமுக
    ஆதரவு ஊடகங்கள்) இவ்வளவு செய்வதற்கு காரணம் இது தான் என்று நினைக்கிறேன்.

    அண்ணாமலை மிக தெளிவாகத்தான் இருக்கிறார்,அவர் பதவி ஏற்றவுடன் சொன்னது, கட்சியை கிராமங்களுக்கு எடுத்து செல்வது மற்றும் கீழ்மட்ட தலைவர்களை உருவாக்குவது. இவர் நேர்மையாகவும் சுய ஒழுக்கத்துடன் இருப்பதனால் அவரை வேறு வகையில் தவறாக சித்தரிக்க இவர்களால் முடியவில்லை. இல்லையென்றால் இவர்கள் விஜயகாந்த் அவர்களை போல காமெடியாக சித்தரித்திருப்பார்கள். இவர்கள் பிரஸ் மீட்டில் முயற்சிப்பது அதை தான்.

    முன்பை விட அண்ணாமலை அவர்கள் பிரஸ் மீட்டில் கோபப்படுகிறார், இதுவே அவர்களின் ஒரு படி வெற்றி என்றே நினைக்கிறேன். நேர்மறை அரசியலிருந்து எதிர் மறைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவரை நகற்றுகிறார்கள்.ஆனால் பெருவாரியான இளைஞர்கள் அவரை நோக்கி சென்று கொண்டு தான் இருக்கிறார்கள், அவரிடம் அந்த ஈர்ப்பு இருக்கிறது. ஊடங்கங்கள் ஒரு பக்கமாக நின்றால் இயற்கையாகவே மக்கள் அவரை நோக்கி செல்வார்கள், காலத்தின் தேவையும் கூட.

    திமுக ஆட்சி கட்டில் இருந்தும் கூட இன்னும் மத்திய அரசை குறை கூறிக்கொண்டு, ஹிந்தி எதிர்ப்பு, ஹிந்து /பிராமண எதிர்ப்பு, GST நிலுவை தொகை, மாநில சுயாட்சி, Dravidian stock என்று சென்று கொண்டு இருப்பது பொது மக்களிடையே சலிப்பு தான் ஏற்படுத்துகிறது. இவர்களுக்கு பதிலாக அவர்களே ஆட்சியில் இருந்தால் தப்பில்லையோ என்றே தோன்றுகிறது. தமிழ் நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் பணிகள் பற்றிய செய்திகளையே வருவதில்லை.

    அரசியல் மேல் நம்பிக்கை இன்மையும் வெறுமையும் தான் வருகிறது. செய்திகள் பார்ப்பதை வெகுவாக குறைத்து விட்டேன். இந்த ஒரு வருட ஆட்சியிலே இப்படி சிந்திக்கும் அளவுக்கு இந்த அரசும்,ஊடகங்களும்
    கொண்டு செல்கின்றன. தமிழக ஊடகங்கள் ஆளும் கட்சிக்கு அடி வருடியாக இருப்பது ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்கு தான் நஷ்டம். தமிழகம் 2006-11 திமுக ஆட்சி போல வெகு வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

    இவை அனைத்தையும் 2024 தேர்தலில் பிரதிபலிக்கும் என்றே நினைக்கிறேன். பார்ப்போம்.

  3. I know your Supporter of BJP and Right-Wing.He Also Third Rated Politician.

    I mostly skip your Right Wing Content.I admire your technology and Experience Sharing Articles.

    Regards

    Vijayakumar

  4. ஊடகங்கள் முழுக்க இடது சாரி ஆதரவாளர்கள், மோடி எதிர்ப்பாளர்கள், திமுக ஆதரவாளர்கள், இந்துமத எதிர்ப்பாளர்கள் ஆக்கிரமித்து விட்டனர். – முற்றிலும் உண்மை கிரி ….
    எறும்புற கல்லும் தேயும் என்பதுபோல இந்த தி.க, தி .மு .க , இடதுசாரிகள் நம் மக்களின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சை விதைத்துவிட்டார்கள்…செய்தியை விடுங்கள் , அதற்கு வரும் பின்னுட்டங்களில் இந்துக்களை கேவலமாக பேசி அதில் மகிழ்ச்சி அடையும் மனநோய்க்கு ஆளாகிவிட்டார்கள்

  5. @சீதா

    ஃபேஸ்புக்ல மட்டும் லைக் போட்டுட்டு இருந்த உங்களை அண்ணாமலை கருத்திட வைத்து விட்டாரே.. பெரிய ஆள் தான் 🙂 .

    @யாசின்

    “அண்ணாமலை அவர்கள் குறித்து நீங்கள் குறிப்பிட்டதை படிக்கும் போது, அவரை குறித்து தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது.”

    அவரோட ஒரு பிரஸ் மீட் பார்த்தாலே அவர் பற்றி எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

    தமிழகத்தின் நம்பிக்கையொளியாக எனக்கு உள்ளார். அனைவரையும் அனுசரித்து, அனைத்து மதங்களையம் மரியாதை செய்து, அனைத்துக்கும் புள்ளி விவரங்களுடன் பேசி நம்பிக்கை அளிக்கிறார்.

    தமிழகத்துக்கு மிகச்சிறந்த மாற்றத்தை அண்ணாமலை தருவார் என்பது என் நம்பிக்கை. பார்ப்போம் காலம் என்ன செய்கிறது என்று 🙂 .

  6. @மணிகண்டன்

    “தமிழக ஊடகங்கள் அண்ணாமலை அவர்களிடம் வரம்பு மீறி தான் நடக்கின்றன. பாஜக மேல் உள்ள வெறுப்பு மற்றும் அவர்களின் வளர்ச்சி தான்.”

    உண்மையே.

    “அவரால் தொடர்ந்து இந்த பதவியில் இருக்க முடியாது என்பதனால், இவர்கள் ஒரு படி மேலே போய் மிரட்டவும் செய்கிறார்கள்.”

    ஊழல் செய்பவன், ஏமாற்றுபவன், லஞ்சம் வாங்குபவன் தான் பயப்பட வேண்டும். இவர் ரொம்ப சுத்தமாக இருக்கிறார். எனவே, எதைப்பற்றியும் இவர் கவலைப்படுவதில்லை.

    “அண்ணாமலை மிக தெளிவாகத்தான் இருக்கிறார்,அவர் பதவி ஏற்றவுடன் சொன்னது, கட்சியை கிராமங்களுக்கு எடுத்து செல்வது மற்றும் கீழ்மட்ட தலைவர்களை உருவாக்குவது.”

    மிகச்சரி. இவர் கட்சியை அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்கிறார், அதோடு பலப்படுத்துகிறார்.

    தற்போது நீங்கள் கூறியது போல இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். பலர் இவரை ஆதரிக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

    “இவர் நேர்மையாகவும் சுய ஒழுக்கத்துடன் இருப்பதனால் அவரை வேறு வகையில் தவறாக சித்தரிக்க இவர்களால் முடியவில்லை”

    மிகச்சரியா கூறினீர்கள். இதுவே முழுக்காரணம். சுய ஒழுக்கம், நேர்மை.

    “முன்பை விட அண்ணாமலை அவர்கள் பிரஸ் மீட்டில் கோபப்படுகிறார், இதுவே அவர்களின் ஒரு படி வெற்றி என்றே நினைக்கிறேன். நேர்மறை அரசியலிருந்து எதிர் மறைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவரை நகற்றுகிறார்கள்.”

    நீங்கள் கூறுவது உண்மை ஆனால், அந்தக்கோபம் தான் அவருக்கு பல ரசிகர்களை, தொண்டர்களை பெற்றுத்தருகிறது.

    எப்போதுமே ஆக்ரோஷமாக அதோடு கட்டுப்பாடுடன் பேசுபவர்களுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும்.

    இதற்கு முன்பு இருந்தவர்கள் வயதானவர்கள், அமைதியானவர்கள் ஆனால், அண்ணாமலை இளைஞர் ஆக்ரோஷமானவர் அதோடு தன் நிலை புரிந்தவர்.

    அவருடைய அதிரடியே பலரை ஈர்த்து வருகிறது.

    தற்போது பாஜக இருக்கும் நிலைக்கு அண்ணாமலை போன்ற நபரே அவசியத்தேவை.

    “ஆனால் பெருவாரியான இளைஞர்கள் அவரை நோக்கி சென்று கொண்டு தான் இருக்கிறார்கள், அவரிடம் அந்த ஈர்ப்பு இருக்கிறது. ஊடங்கங்கள் ஒரு பக்கமாக நின்றால் இயற்கையாகவே மக்கள் அவரை நோக்கி செல்வார்கள், காலத்தின் தேவையும் கூட.”

    மிகச்சரி

    “திமுக ஆட்சி கட்டில் இருந்தும் கூட இன்னும் மத்திய அரசை குறை கூறிக்கொண்டு, ஹிந்தி எதிர்ப்பு, ஹிந்து /பிராமண எதிர்ப்பு, GST நிலுவை தொகை, மாநில சுயாட்சி, Dravidian stock என்று சென்று கொண்டு இருப்பது பொது மக்களிடையே சலிப்பு தான் ஏற்படுத்துகிறது.”

    ஸ்டாலின் இன்னும் தன்னை எதிர்க்கட்சி தலைவர் மனநிலையிலேயே வைத்துள்ளார்.

    இது குறித்து தனிக்கட்டுரை எழுதும் திட்டமுள்ளது.

    “இந்த ஒரு வருட ஆட்சியிலே இப்படி சிந்திக்கும் அளவுக்கு இந்த அரசும்,ஊடகங்களும் கொண்டு செல்கின்றன. ”

    உண்மையாகவே இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு சொதப்பல்கள் நடக்கும் என்று நானும் எதிர்பார்க்கவில்லை.

    ஊடகத்தின் ஆதரவு மட்டுமில்லை என்றால், இந்நேரம் படு மோசமான நிலைக்கு திமுக சென்று இருக்கும்.

    ஊடகங்கள் முட்டாலே டேமேஜை தவிர்த்து வருகிறது.

  7. @Vijayakumar

    “I know your Supporter of BJP”

    Yes. I’m not hiding anything here. I have written an article about my stand (https://www.giriblog.com/neautral-is-possible-or-not/) and shared it in this article itself.

    “I mostly skip your Right Wing Content.”

    Which is good for you, but I can’t allow Third rated person Savuku Shankar video (I removed it) who is accusing Annamalai.

    You are free to express your views with dignity in this blog but Pls don’t share his stupidity videos here.

    Daily he is blabbering in the twitter and YT and accusing / scolding everyone without any respect.

    You didn’t like Annamalai which is fine but I request you to stay away from crack like Savuku Shankar.

    I have great respect for Mr. Annamalai so Pls avoid these kinds of words in my Blog.

    I understand you have a different opinion on Annamalai which is acceptable since everyone has their own views and I respect that and at the same time you should also respect it.

    I’m not forcing you to support or trust Annamalai. Likewise, I’m jus expressing my views and it’s up to you whether take it or ignore.

    “I admire your technology and Experience Sharing  Articles”

    Thank You Vijayakumar. I know you are a long-time reader of my blog and you appreciated many things in my blog.

    I’m writing all kinds of articles, so you can read whichever is OK or helpful to you and ignore which are not useful and against your views.

    Thanks for your understanding

  8. @payapulla

    “எறும்புற கல்லும் தேயும் என்பதுபோல இந்த தி.க, தி .மு .க , இடதுசாரிகள் நம் மக்களின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சை விதைத்துவிட்டார்கள்…செய்தியை விடுங்கள் , அதற்கு வரும் பின்னுட்டங்களில் இந்துக்களை கேவலமாக பேசி அதில் மகிழ்ச்சி அடையும் மனநோய்க்கு ஆளாகிவிட்டார்கள்”

    உண்மை தான்.

    இவர்கள் பெரும்பாலும் இதைப்போல செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல ஆனால், தாங்கள் ஆதரிக்கும் கட்சி இது போல நடந்து கொள்வதால் இவர்களும் இது போல நடந்து கொள்கிறார்கள்.

    ஆனால், அவர்கள் தலைவர்கள் உள்நோக்கத்தில் ஆதாயத்துக்காக செயல்படுகிறார்கள் என்பது இவர்களுக்கு புரிவதில்லை.

    பாஜக வை எதிர்ப்பதாக நினைத்து, தங்கள் கட்சிக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து இந்து மதத்தை அவமதித்து வருகிறார்கள்.

    காலமும் சூழ்நிலையும் ஒரு நாள் இவர்கள் பார்வையை மாற்றும் காரணம், இவர்கள் கூறுவது பெரும்பாலும் உதட்டளவில் தான் உள்ளத்திலிருந்து அல்ல.

    தங்கள் கட்சி தலைவரை, கட்சியை விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் அதிகமாகி தங்கள் மதத்தையே இழிவுபடுத்துகிறார்கள்.

    இது குறித்து ஏற்கனவே ஒரு கட்டுரையில் விளக்கி உள்ளேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here