தமிழக அணிவகுப்பு ஊர்தி நிராகரிக்கப்பட்டது என்று தமிழக அரசும் அவரது ஆதரவாளர்களும் முன்களப்பணியாளர்களும் வரிசைகட்டி விமர்சித்துக்கொண்டுள்ளார்கள். Image Credit
அணிவகுப்பு ஊர்தி அலப்பறை
பொங்கல் தொகுப்பில் சிக்கி என்ன செய்வது என்று கையைப் பிசைந்துக்கொண்டு இருந்தவர்களுக்குக் கிடைத்த சிறந்த வாய்ப்பாக இந்தச் சர்ச்சை சிக்கியது.
உடனே இதை வைத்துப் பொங்கல் வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
கனிமொழி இது போலத் திசை திருப்பல் சம்பவங்களில் தவறாமல் ஆஜராகி விடுவார். இதிலும் ஆரம்பித்து வைத்து ஒதுங்கி விட்டார், மற்றவர்கள் தொடர்ந்துகொண்டுள்ளார்கள்.
குடி முழுகிப் போனது போலவும், எதோ நடக்கக்கூடாத சம்பவம் நடந்து விட்டது போலவும், இவர்கள் கொடுக்கும் அலப்பறை இருக்கிறதே! அடேங்கப்பா!
இந்த விஷயத்தில் திமுக வை அடித்துக்க ஆளில்லை. இதற்கு இவர்களுக்கு ஓயாமல் பின்பாட்டு பாட முன்களப்பணியாளர்கள் இருப்பது கூடுதல் பலம்.
அணிவகுப்பு நேரத்தை அடிப்படையாக வைத்து 12 மாநில ஊர்திகளுக்கு மட்டுமே ஒவ்வொரு வருடமும் அனுமதி கொடுக்கப்படுகிறது.
பாஜக ஆட்சி செய்த 7 வருடங்களில் 5 முறை தமிழகம் வாய்ப்பு பெற்றுள்ளது, இந்தமுறை வாய்ப்பு பெறவில்லை அவ்வளவே!
இதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?! புறக்கணித்து விட்டார்கள் என்று அலறுவதற்கு என்ன அவசியம் உள்ளது?
இருப்பதே 12 ஊர்திக்கான வாய்ப்பு, இருப்பதோ 29 மாநிலங்கள். ஒவ்வொரு மாநிலமும் இது போல நினைக்க ஆரம்பித்தால் என்ன ஆவது?!
மற்ற மாநிலங்களுக்கும் தங்கள் ஊர்தியைப் பங்குபெறச் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருக்காதா?! இருக்கக் கூடாதா?
திமுக கூட்டணியில் இருந்த காங் ஆட்சியில் 10 வருடங்களில் (2004 – 2014) 2 முறை தான் அணிவகுப்பில் தேர்வாகியுள்ளது. அப்போதெல்லாம் இதே போல 8 முறையும் கொந்தளித்தார்களா?
தற்போது குதிக்கிறார்கள் என்றால், உள்நோக்கம் கொண்டது என்பது தானே அர்த்தம்.
தமிழக அணிவகுப்பில் இடம்பெறும்
அங்கே புறக்கணித்தால் என்ன! நாங்க தமிழக அணிவகுப்பில் இடம்பெறச்செய்வோம், ஊர் ஊராகக் கொண்டு செல்வோம் என்று கூறியுள்ளார்கள்.
ரொம்ப நல்ல விஷயம்.
தமிழகத்தில் பள்ளி படிப்புக்குப் பிறகு மக்களுக்குப் பரிச்சியம் உள்ள தலைவர்கள் என்றால், காந்தி, பாரதியார், பாரதிசான், காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெ மற்றும் இவர்கள் அல்லாது திருவள்ளுவர் மட்டுமே!
இவர்களைத் தவிர எந்தத் தலைவர்கள் பற்றியும் தமிழக அரசியல்வாதிகள் பேசுவதில்லை. மக்களுக்கும் மற்ற எவரைப் பற்றியும் அறிமுகமில்லை.
இது போல ஊர் ஊராக எடுத்துச்சென்றாலாவது, மற்ற தலைவர்கள் பற்றியும், அவர்களின் சிறப்புகள் பற்றியும் மக்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.
கசப்பான உண்மையென்னவென்றால், தமிழக மக்களுக்குச் சாதி தலைவர்களைத் தெரிந்த அளவுக்கு நாட்டுக்காகப் போராடிய தேச தலைவர்கள் பலரைத் தெரியாது.
திமுக முயற்சியால் மக்களைச் சென்றடைந்தால் மகிழ்ச்சியே! அப்படியாவது தேச பற்று மக்களுக்குப் பெருகட்டும்.
இதுல என்னமோ தேச தலைவர்களைப் பற்றி அடிக்கடி பேசுவது போலவும், அவர்களுக்குத் தொடர்ந்து விழா எடுப்பது போலவும் திடீர் பாச மழை, அக்கறை பொழிந்து கொண்டுள்ளார்கள்.
பல நாடுகளுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த தமிழ்நாட்டின் பெருமை ராஜ ராஜ சோழன் சமாதியையே எவரும் கண்டுகொள்ளாமல் இருக்காங்க. இச்சர்ச்சை முடிந்தால், பேசப்படும் தலைவர்களை அம்போன்னு விட்டுட்டு போய்டுவாங்க.
அணிவகுப்பு ஊர்தி விவகாரத்தில் திமுக செய்து கொண்டு இருப்பது பக்கா அரசியல்.
நிராகரிக்கப்பட்ட ஊர்திக்கு அரசு, அரசியல்வாதிகள், முன்களப்பணியாளர்கள், போராளிகள் அனைவரும் கொதிக்குறாங்க.
ஆனால், சொந்த மக்களுக்கு வழங்கிய பொங்கல் பொருட்களில் பருத்திக்கொட்டை, பல்லி, மரப்பொடின்னு கலப்படம் செய்யப்பட்டு ஊழல் நடந்துள்ளது அதற்கு அனைவரும் அமைதி காக்குறாங்க.
வாழ்க தமிழ்நாடு.
🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).