நிர்மலா சீதாராமன் கூறியது சரியா?

2
Nirmala Seethaaraman நிர்மலா சீதாராமன்

பொருளாதாரப் பிரச்சனை குறித்த விவாதங்கள் நடந்த போது மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசியது சர்ச்சையாகியுள்ளது.  Image Credit

நிர்மலா சீதாராமன்

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்,

நாட்டில் ஆட்டோ துறை பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ் 6 மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறை, வாகனப்பதிவு செய்வதில் இருக்கும் விதிகள் மாற்றம் மற்றும் இக்கால இளைஞர்களின் மனநிலையும் முக்கியக் காரணம்.

அவர்கள் புதிய கார் வாங்குவதற்கு EMI கட்ட தயாராக இல்லை. அதற்குப் பதில் உபர், ஓலா மூலம் வாடகை வாகனங்களிலும், மெட்ரோ ரயில்களிலும் பயணிக்கவே விரும்புகிறார்கள்“.

என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

இது கடுமையான சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. அதோடு ட்விட்டரில் #SayItLikeNirmalaTai என்ற Hashtag ட்ரெண்டாது.

நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறியது சரியா?

இவர் கூறியது தற்போதுள்ள பல பிரச்சனைகளில் ஒன்றானதாக உள்ளதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால், இதைத் தனியாகக் குறிப்பிட்டதே இவ்வளவு பெரிய சர்ச்சைக்குக் காரணம், மக்கள் கோபப்பட்டதில் நியாயமுள்ளது.

உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை உள்ளது.

வாகன விற்பனை பாதிக்கப்பட்டது இந்தியா மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளில் இந்த நிலையுள்ளது.

ஆனால், இதற்குப் பல்வேறு பொருளாதாரக் காரணங்கள் உள்ளன.

மக்களின் வாகனங்கள் வாங்குவதன் மீதான ஆர்வக்குறைவு, மின்சார வாகனங்களுக்கான எதிர்பார்ப்புகள் உட்பட ஏராளமான காரணங்கள் உள்ளன.

அந்தக் காரணங்களில் ஒன்று மக்கள் வாடகை கார்களை நோக்கிச் செல்வது.

இதில் உண்மையுள்ளதா?

ஆம், இதில் உண்மையுள்ளது ஆனால், இந்தியாவில் இதன் தாக்கம் என்பது மிகக்குறைவான சதவீதமே, மற்ற வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது.

வெளிநாடுகளில் நெரிசல் மிகுந்த நகரங்களில் உள்ளவர்கள் சொந்த கார்களை வைத்துக்கொள்வதை விட வாடகை கார்களையே அதிகம் விரும்புகிறார்கள்.

காரணங்கள்

  • பராமரிப்பு
  • வாகன ஓட்டுநருக்கான சம்பளம் (தேவைப்பட்டால்)
  • செல்லும் இடங்களில் வாகனம் நிறுத்துவதில் உள்ள இடப்பிரச்சனை
  • அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தால், வீட்டில் வாகனங்களை நிறுத்துவதில் கட்டுப்பாடு
  • காப்பீடு
  • ஆண்டுப் பராமரிப்பு
  • விபத்துச் சேதம்.

என்று பல்வேறு காரணிகள் உள்ளன. இதுகுறித்த செய்திகளும் சமீபத்தில் படித்த நினைவு, அதோடு இவர்கள் கூறும் காரணங்களும் நியாயமானதாக உள்ளன.

என்னிடம் கார் இல்லை காரணம், கார் வாங்குவது எளிது ஆனால், அதைப் பராமரிப்பது நகரத்தில் சிரமம். இது ஒவ்வொருவரின் மனநிலைக்கு ஏற்ப மாறுபடும்.

எனக்கு வாடகை காரே போதுமானதாக இருப்பதால், கார் வாங்குவதைப் பற்றி யோசிக்கவில்லை. அதற்கான தேவையும் எனக்கு வரவில்லை.

ஆனால், இதே கோபியில் எனக்குக் கார் தேவைப்படுகிறது ஆனால், நான் சென்னையில் இருப்பதால், வாகன ஓட்டுனரை சம்பளம் கொடுத்து வைத்துக்கொள்வது கூடுதல் செலவு என்பதாலும், நான் இல்லையென்றால் பயன்பாடு குறைவு என்பதாலும் ஊரில் வாங்கவில்லை.

இதே நான் சென்னையில் இல்லாமல், கோபியிலேயே நிரந்தரமாக இருக்கிறேன் என்றால், கண்டிப்பாக வாங்கியிருப்பேன். இதுவே உண்மையான காரணம்.

எனவே, கார் தேவை என்பது ஒவ்வொருவரின் சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடுகிறது.

பாதிப்பு ஏற்படுத்தும் சதவீதம் இந்தியாவில் குறைவு

வெளிநாடுகளில் மேற்கூறிய வாடகைக் கார்கள் குறிப்பிடத் தக்க அளவில் கார் விற்பனை சுணக்கத்தில் பங்கு வகித்தாலும், இந்தியாவில் விற்பனையைப் பாதிக்கும் அளவுக்கு இன்னும் மக்களின் சதவீதம் மாறவில்லை.

என்னிடம் கூட மேற்கூறிய காரணங்களைக் கூறி, கார் வாங்காமலே இருந்து இருக்கலாம் என்று நண்பர்கள் கூறி உள்ளனர்.

மிகக்குறைவான சதவீதம் பேர் இந்தியாவில் இது போல அதுவும் சென்னை, கோவை போன்ற நகரப்பகுதிகளில் உள்ளவர்கள் நினைத்து இருக்கலாம்.

இன்னும் இந்தியாவில் வாகன விற்பனையைப் பாதிக்கும் அளவுக்கு மக்களின் மனநிலை மாறவில்லை ஆனால், எதிர்காலத்தில் மாற 100% வாய்ப்புள்ளது.

இதை நிர்மலா சீதாராமன் அவர்கள் உணர்ந்து பேசியிருக்க வேண்டும்.

பொருளாதார மந்தநிலை குறித்த விவாதங்கள் தீவிரமாக இருப்பதால், நிதியமைச்சராகப் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், பதட்டத்தில் இது போல ஒரு விளக்கத்தைப் கொடுத்து விட்டார்.

இதையும் பல காரணங்களில் ஒன்றாகக் கூறியிருந்தால், இவ்வளவு பெரிய சர்ச்சையாகி இருக்காது ஆனால், தனித்துக் கூறியதால் பலரின் கிண்டலுக்கு ஆளாகி விட்டார்.

எல்லோருமே ஏதோ ஒரு சமயத்தில் கோபத்தில், மன உளைச்சலில், நெருக்கடியில் இதுபோலத் தவறாகக் கூறுவது மனித இயல்பு.

நிர்மலா சீதாராமன் கடுமையாகப் பேசுவார், பதிலளிப்பார் ஆனால், இதுபோல ஒரு பொறுப்பற்ற கருத்தை இவர் கூறியதாக நான் படித்தது இல்லை.

நிர்மலா சீதாராமன் அவர்கள் இதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு அடுத்த முறை எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

தொடர்புடைய கட்டுரைகள்

வாகன ஓட்டிகளே! எச்சரிக்கை!!

அசத்தலான டிவிஎஸ் ஜுபிடர்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. பொருளாதாரத்தை பற்றி பல கேள்விகள் என்மனதில் தொக்கி நிற்கின்றது.. எல்லாவற்றிருக்கும் சரியான பதில் கிடைக்குமா என்று தெரியவில்லை.. ஆனால் பொருளாதாரம் குறித்து நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.. தற்போது உள்ள பிரச்சனைகளுக்கான சரியான காரணம் தெரியவில்லை.. ஆனால் 2008 ஆண்டை விட மோசமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது… இதுவும் கடந்து போகும் என்று நம்புவோம்… பகிர்வுக்கு நன்றி கிரி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here