FasTag கட்டாயம் | 2019 டிசம்பர் 1 முதல் [FAQ]

1
FasTag கட்டாயம்

நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 1 2019 முதல் மின்னணு முறையில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும், FasTag கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.

நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் அனைவரும் சுங்கச்சாவடி பற்றி அறிந்து இருப்பார்கள். எனவே, FasTag பற்றித் தெரியாமல் இருக்க வாய்ப்பு குறைவு.

FasTag என்றால் என்ன?

சுங்கச்சாவடிகளில் பணம் கொடுத்துக் கட்டணம் செலுத்தாமல் தானியங்கி முறையில் கட்டணம் செலுத்துவதே FasTag என்று அழைக்கப்படுகிறது.

எப்படிச் செயல்படுகிறது?

நம்முடைய வாகனத்துக்கென்று உள்ள தனிப்பட்ட குறியீட்டு தகவலுடன் நான்கு சக்கர வாகனத்தின் முன்புறம் கண்ணாடியில் இது ஒட்டப்படும்.

வாகனம் சுங்கச்சாவடியில் நுழையும்போது அங்குள்ள Scanner அந்த எண்ணை Scan செய்து தானாகவே கதவைத் திறந்து வழி விட்டு விடும்.

இரண்டு & மூன்று சக்கர வாகனங்களுக்குச் சுங்கச்சாவடி கட்டணம் இல்லை.

எப்படிச் செயல்படுத்துவது?

இதற்கென்று பல தளங்கள் உள்ளன. நாம் ஏதாவது ஒரு தளத்தில் நம்முடைய வாகன விவரங்களைக் கொடுத்துப் பதிவு செய்து கொள்ளலாம். Prepaid SIM போல இதற்கு நாம் முன்பே கட்டணம் செலுத்தி விட வேண்டும்.

நாம் ஒவ்வொரு சுங்கச்சாவடியை கடக்கும் போதும் நமக்கான கட்டணம் தானியங்கியாக வசூலிக்கப்படும்.

இதற்கான உறுதிப்படுத்தலுக்காகக் குறுந்தகவலும், மின்னஞ்சலும் நமக்கு வரும்.

இதில் கட்டணக்கழிவும் உள்ளது. அதாவது நீங்கள் நேரடியாகப் பணமாகச் செலுத்துவதை விடக் குறைவான கட்டணம்.

FasTag குறித்த சந்தேகங்களுக்கான பதில் இங்கே உள்ளது –> Link

இங்கேயே நீங்கள் பதிவும் செய்து கொள்ளலாம். நான்கு சக்கர வாகனங்களை வைத்துள்ளவர்கள் டிசம்பர் வரை காத்திராமல் தற்போதே பதிவு செய்து கொள்ளுங்கள்.

எதனால் இம்முறை கட்டாயப்படுத்துகிறது?

சுங்கச்சாவடி போக்குவரத்து நெரிசலை நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் அனைவரும் அறிவார்கள். FasTag முறையால் நேரம், எரிபொருள் மிச்சமாகிறது.

மின்னணு பரிவர்த்தனை காரணமாகச் சில்லறை தட்டுப்பாடு பிரச்சனையில்லை.

கட்சி பெயரைக் கூறி பணம் செலுத்தாமல் சுங்கச்சாவடிகளில் மிரட்டுபவர்களுக்கு நெருக்கடி.

இதனால் பயனே அதிகம்

நான் என்னுடைய அக்கா கணவருடன் சென்னையில் இருந்து காரில் கோபி செல்லும்போது FasTag முறையில் சென்றோம். மிக எளிதாக இருந்தது.

எதற்காகப் பலரும் இந்த வசதியைப் பயன்படுத்தாமல் பணத்தைக் கட்டிக்கொண்டு, நேரத்தை வீணாக்கி, வரிசையில் நின்று கொண்டு இருக்கிறார்கள்? என்று தோன்றும்.

எப்படியிருந்தாலும் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும். எளிமையான முறை இருக்கும்போது அதை எப்படி செலுத்தினால் என்ன?!

சுங்கச்சாவடியை FasTag முறையில் கடக்க அதிகபட்சம் 30 நொடிகள் ஆகலாம்.

இதே வழியில் வாராவாரம் வார இறுதியில் விடுமுறைக்காகச் செல்கிறார்கள் ஆனால், FasTag வசதியைப் பயன்படுத்த மறுக்கிறார்கள், புரியாத புதிர்.

தற்போது ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் இரண்டு FasTag வழிகள் உள்ளது. இனி அனைத்து வழிகளும் இதே முறையில் அமைக்கப்படும்.

பணம் கொடுத்தும் செல்லும்படியான வழியைக் கொடுக்கலாமா என்று மத்திய போக்குவரத்துத்துறை பரிசீலித்து வருகிறது.

வழக்கம்போல இதைச் செய்யாமல் இறுதியில் அரசைத் திட்டுபவர்களே அதிகம். எனவே, மேலும் சில மாதங்கள் அல்லது ஜனவரி வரை நீட்டிக்கப்படலாம் ஆனால், நீங்கள் உடனே பதிவு செய்து விடுங்கள் FasTag கட்டாயம்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here