Automation / Cloud ஏற்படுத்தும் அதிர்ச்சிகள்!

4
Automation / Cloud

செய்திகளைக் கவனித்துக் கொண்டு இருக்கும் அனைவரும் அடிக்கடி Automation / Cloud” என்ற வார்த்தையைக் கவனித்து இருப்பீர்கள். Image Credit

இன்றைய ஐடி மற்றும் ஆட்டோ மொபைல் ஊழியர்களைக் கலங்கடித்து வரும் வார்த்தையாக மாறி இருக்கிறது.

சிலர் இதன் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து இருக்கிறார்கள் சிலர் அறியாமல் இருக்கிறார்கள்.

Automation என்றால் என்ன?

பணிகளுக்கு மனிதத் தேவைகளைக் குறைத்து, மென்பொருள், இயந்திரங்கள் மூலமாக தானியங்கியாகவே பணிகளை முடிப்பது Automation எனப்படுகிறது.

Cloud என்றால் என்ன?

Cloud என்பது நமது அலுவலகத்தின் வழங்கிகளில் (Servers) இருக்கும் தகவல்களை அமேசான் போன்ற நிறுவனங்களின் வழங்கிக்கு மாற்றம் செய்து இணையத் தொடர்பு மூலமாக அங்குள்ள வழங்கிகளைத் தொடர்பு கொள்வது “Cloud” என்று அழைக்கப்படுகிறது.

சுருக்கமாக, நமது வழங்கிகளைப் பயன்படுத்தாமல் அமேசான், மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களின் வழங்கிகளை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் முறை.

இதனால் என்ன பயன்?

வழங்கிகளை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் முறையை விட இங்கே வழங்கிகளைப் பராமரிக்கக் கொடுக்கும் ஆண்டுப் பராமரிப்புக் கட்டணம் (Annual Maintenance Contract), இதற்கான ஊழியர்களுக்குக் கொடுக்கும் சம்பளம், மின்சாரச் செலவு அதிகம்.

அதோடு நாம் வழங்கியை பயன்படுத்துவதற்கான தேவை முடிந்தால் (அதாவது Project முடிந்தால்), Cloud ல் வாடகை காலத்தை நிறுத்திக் கொள்ளலாம்.

வழங்கியின் செயல்திறனை அதிகரிக்க வேண்டும் என்றால், எடுத்துக்காட்டாக Memory, CPU, Hard Disk எண்ணிக்கையைக் கூடுதலாக்க வேண்டும் என்றால், நிமிடங்களில் செய்யலாம்.

ஆனால், இதே நிறுவனம் தனது Data Center ல் உள்ள வழங்கிகளில் செய்ய வேண்டும் என்றால், Quote வாங்கி, அனுமதி பெற்று, Purchase Order போட்டு, பணத்தைச் செலுத்தி என்று ஏகப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியதுள்ளது.

இதே முறை Cloud லும் உண்டு என்றாலும், இதற்கு ஆகும் காலம் 100% ல் 10% கூட இருக்காது.

இதனால், Cloud முறை எளிதாக உள்ளது.

எந்த வகையில் ஊழியர்களைப் பாதிக்கிறது?

Automation

பலர் செய்கிற பணியை எளிதாகத் தானியங்கியாகச் செய்யத் தொழில்நுட்பம், நிரலி (Script) முறை வந்து விட்டது. எனவே, தற்போது இம்முறையே பரவலாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Support பிரிவு என்றில்லாமல் Developer ஆக உள்ளவர்களுக்கும் தற்போது template கள் வந்து விட்டது. பத்து பேர் செய்கிற வேலையை 5 பேர் இது போல template வைத்துச் செய்து விடலாம்.

ஐடி துறை என்றில்லாமல் ஆட்டோ மொபைல் துறையிலும் துவக்கத்தில் ஒரு வாகனத்தை உருவாக்க ஏராளமான ஊழியர்கள் இருப்பார்கள்.

ஆனால், தற்போது ரோபோ இந்த வேலையை எளிதாகத் தானியங்கியாகச் செய்து விடுகிறது.

நிறுவனங்கள் தங்கள் செலவினங்களைக் குறைக்க இது போல Automation முறையைத் தற்போது தீவிரமாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன.

Cloud

இந்த முறையில் அதிகளவில் பாதிக்கப்படுவது Support பிரிவில் இருப்பவர்களே!

கணினி வன்பொருள்கள் (Hardware) பிரச்சனை தற்போது பெருமளவில் குறைந்து நிலைத்தன்மையாகி (Stable) விட்டது. முன்பு போல அதிகளவில் பிரச்சனைகள் வருவதில்லை.

முன்பு 10 பேர் பார்த்த பணிகளை தற்போது Remote வசதி மூலம் உட்கார்ந்த இடத்திலேயே மற்றவரின் கணினியை பார்வையிட்டு பிரச்சனைகளைச் சரி செய்ய முடிவதால், எளிதாக ஐந்துக்கும் குறைவான நபர்களை வைத்து பார்த்து விட முடிகிறது.

இதே போல வழங்கிகளிலும் (Server) வன்பொருள் பிரச்சனை குறைந்து விட்டது ஆனால், இதற்கு ஆண்டுப் பராமரிப்புக் கட்டணங்கள் அதிகம்.

வழங்கிகள் முக்கியம் என்பதால், பராமரிப்புக்குச் செலவு செய்தே ஆக வேண்டும்.

என்றாவது பிரச்சனை ஆகி வழங்கி செயல் இழந்து விட்டால், இதைப் பயன்படுத்தும் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இதனால் நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்படும்.

எனவே, இவற்றை Cloud ல் வாடகைக்கு எடுப்பதன் மூலம் இவ்வகை நடைமுறை சிக்கல்களைத் தவிர்க்கலாம், செலவைக் குறைக்கலாம்.

Cloud அனுகூலங்கள்

இது அல்லாமல் ஒரு வழங்கி பிரச்சனை என்றால், உடனடியாக மாற்று வழங்கியை Cloud நிறுவனம் நமக்குக் கொடுத்துவிடும். Image Credit – Kalyan’s Lab

Backup நொடிக்கு நொடி எடுக்கப்படுவதால், Data corruption என்றால், எளிதாக Restore செய்து விடலாம். இதைப் பயனாளர்களே சில க்ளிக் மூலம் செய்துவிட முடியும் என்பதால், Admin தேவை குறைகிறது.

“Microsoft Office 365” (Cloud) ஏற்கனவே “Microsoft Exchange” Admin களை காலி செய்து விட்டது.

இது போல Cloud முறையால் இதை நம்பி நிறுவனங்களில் பணி புரிபவர்கள் வேலை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அனைவருக்கும் இந்த நிலை ஏற்படாது என்றாலும், கொஞ்சம் கொஞ்சமாக இது நடந்து கொண்டு இருக்கும், தவிர்க்க முடியாது.

Blade / VMware Servers

முன்பு ஒரு நிறுவனத்தில் தனித்தனியாக 10 வழங்கிகள் (Server) இருக்கும்.

தற்போது Blade, Vmware தொழில்நுட்பம் மூலம் ஒரே ஒரு வழங்கியை வைத்து மெய்நிகராக்கம் (Virtual) மூலம் பத்து வழங்கிகளாகப் பிரிக்க முடிகிறது.

அதாவது 9 வழங்கிகள் வைக்கும் இடம், வழங்கிகளுக்கான மின்சாரச் செலவு, ஆண்டுப் பராமரிப்புக் கட்டணம், குளிர்சாதனம் எடுக்கும் மின்சாரம் குறைக்கப்பட்டுள்ளது.

மூன்று பேர் பார்க்கும் பணியை ஒருவரே பார்க்க முடியும்.

இதையே 200 வழங்கிகளை 10 பேர் கவனித்துக்கொண்டுள்ளார்கள் என்றால், இனி மூன்று அல்லது நான்கு பேர் இருந்தாலே சமாளிக்க முடியும். 6 பேருக்கு பணி இழப்பு ஏற்படும்.

முன்பு 20 Server Rack ல் ஒவ்வொரு server ம் தனித்தனியாக இருக்கும் ஆனால், தற்போது ஒரே ஒரு Server Rack ல் 20 Servers உள்ளது. இதற்கு மிச்சமாகும் இடம், மின்சாரத்தை யோசித்துப்பாருங்கள்.

எதிர்காலத்தில் 20 என்பது 50 ஆக உயர ஏராளமான வாய்ப்புள்ளது.

“Cloud செல்லாமலே” மேற்கூறிய Blade / VMware தொழில்நுட்பங்கள் மூலம் பல செலவினங்கள், பணியாளர்கள் தேவை குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் Cloud மாற்றம் நடைபெறும் போது இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

சுருக்கமாக, இருக்கும் ஒரே ஒரு Server Rack ம் எதிர்காலத்தில் Cloud வந்தால் இருக்காது!!

இது போல நடந்தால், இங்கே இதை நம்பி பணிபுரிபவர்கள் நிலை?! இது தான் தற்போதைய Automation / Cloud தொழில்நுட்பத்தால் ஊழியர்களின் பணிகளுக்கு ஏற்படும் பாதிப்பு.

Cloud எளிமை

Cloud செலவை மட்டும் குறைப்பதில்லை நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது.

ஒரு வழங்கியை நாம் வாங்கிய பிறகு அதைத் தயார் செய்யக் குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் முதல் ஒரு வாரம் ஆகும், அவரவர் நிறுவனங்களின் கட்டுப்பாடுப்பாடுகளைப் பொறுத்து.

ஏன் என்றால், வழங்கியை வாங்கிய (வந்த) பிறகு உடனே பயனாளர்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து விட முடியாது.

இதற்கு என்று இருக்கும் சில வழக்கமான வழி முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

பாதுகாப்பானதா என்று Security Team அனுமதி தர வேண்டும். இதற்கு “Server Hardening” என்று பெயர். இது போலப் பல்வேறு வழிமுறைகள் உள்ளது.

ஆனால், Cloud ல் நமக்குத் தேவையான வழங்கிகளின் Configuration (Memory, CPU, Hard disk) கொடுத்து விட்டால், அவர்கள் ஒரு நிமிடத்தில் 100 வழங்கிகளை உடனே கொடுக்க முடியும்.

நீங்கள் சரியாகத்தான் படிக்கிறீர்கள். ஒரு நிமிடத்தில் 100 வழங்கிகளைக் கொடுக்க முடியும்.

இது போலப் பல்வேறு பயன்களைக் கொண்டது Cloud.

இதில் சிக்கல்களே இல்லையா?!

நன்மை இருந்தால் நிச்சயம் தீமையும் இருக்கத்தத்தானே செய்யும்.

இதில் பாதுகாப்புக் குறித்த பிரச்சனைகள் உள்ளது. வங்கி சார்ந்த நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர் தகவல்களை மூன்றாம் நபர் நிறுவனத்தில் வைக்க விரும்பவில்லை.

சமீபத்தில் அமேசான் நிறுவனத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், 4 மணி நேரம் பல நிறுவனங்களின் Cloud வழங்கிகள் வேலை செய்யவில்லை.

இது மிகப்பெரிய சர்ச்சையை Cloud உலகில், தொழில்நுட்ப நிறுவனங்களிடையே ஏற்படுத்தியது.

அனைத்து நிறுவனங்களும் இணைய இணைப்பு மூலம் Cloud வழங்கிகளைத் தொடர்பு கொள்கின்றன.

இயற்கை இடர்பாடுகளால் தொடர்பு துண்டிக்கப்பட்டால், மொத்த அலுவலகப் பணியாளர்களும் பணி புரிய முடியாது.

கடந்த “வர்தா” புயலில் இது போல நடந்தது.

எளிமையான சேவையாக இருந்தாலும் தற்போது செலவு பிடிக்கும் சேவையாக உள்ளது. இன்னும் சில நிறுவனங்களுக்கு இது கட்டுப்படியாகவில்லை.

நிறுவனங்களுக்கு லாபம் ஊழியர்களுக்கு நட்டம்

Automation, Cloud முறையால் நிறுவனங்கள் பெருமளவில் செலவுகளைக் குறைத்து இலாபங்களை ஈட்டி வருகின்றன அல்லது லாபத்தில் ஏற்படும் சரிவைத் தடுத்து வருகின்றன.

ஊழியர்கள் இதனால், எதிர்காலம் குறித்த கவலைகளும், ஆட்குறைப்பால் பணியை இழந்து விடுவோமோ என்ற எண்ணத்தாலும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.

இத்துறையில் உள்ளவர்களுக்கு….

எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கலாம். ஆட்குறைப்பு நடக்க வாய்ப்புள்ளது, குறிப்பாக Support / Admin பிரிவில்.

Product நிறுவனமாக இருந்தால், உடனடி பிரச்சனையில்லை அதுவும் எவ்வளவு தூரம் Product விற்பனையாகிறது என்பதைப் பொறுத்து.

Service நிறுவனமாக இருந்தால் சிக்கலே!

2021 ஆண்டில் 10 ல் 4 நபர்கள் பணி Automation, Cloud தொழில்நுட்பத்தால் பறிபோகும் என்று சமீபத்திய ஆய்வு கூறி இருக்கிறது.

எனவே, உங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இருப்பதை வைத்து ஓட்டலாம் என்ற எண்ணம் சரிப்பட்டு வராது. Cloud தொடர்பான படிப்புகளைப் படிப்பது நல்லது.

இதன் தொடர்பான பணிகளில் கவனம் செலுத்துவது, புதிதாகக் கற்றுக் கொள்வது நம் எதிர்காலத்துக்கு நல்லது.

உண்மையில் எனக்கே குழப்பமாகத் தான் உள்ளது. என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற யோசனை ஓடிக்கொண்டு இருக்கிறது.

இது தொடர்பான படிப்புகளைப் படித்து வருகிறேன், இருப்பினும்…

தற்போது மிகப்பெரிய முதலீடுகளை (வீடு வாங்குவது) செய்யும் முன் ஒரு முறைக்கு ஐந்து முறை யோசித்து முடிவெடுங்கள்.

ஒருவேளை பணியிழப்பு ஏற்பட்டால், EMI எப்படிக் கட்டுவது என்பது குறித்தான திட்டங்களை யோசித்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு மனிதனை கோழை ஆக்குவதே இது போன்ற commitments தான். எந்த ஒரு தைரியமான முடிவையும் எடுக்க முடியாமல் இவைகள் நம்மைத் தடுத்து விடும்.

Read: நடுத்தர வகுப்பு மக்கள் என்பவர்கள் யார்?

Readநம் பிரச்சனைகளுக்கு யார் காரணம்?

மேற்கூறிய எதுவும் உங்களைப் பயமுறுத்த அல்ல, இனி வரும் காலம் குறித்துப் புரிந்து எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறவே.

Read: எதிர்மறை எண்ணங்களால் ஏற்படும் இழப்புகள்

தொடர்புடைய கட்டுரைகள்

வருகிறது கூகுள் டிரைவ் – [Cloud Computing]

ஐடி துறை : 35 – 40 வயதுக்கான எச்சரிக்கை!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. சரியாய் சொல்லிருக்கீங்க கில்லாடி,
    உதாரணத்துக்கு 5 வருசத்துக்கு முன்னாடி UK McDonald’s cash counter 4 to 6 இருக்கும் ஆனா இப்போ ஒண்ணே ஒன்னு தான் இருக்கு. மத்ததெல்லாம் ஆட்டோமேட்டிக் மெஷின். அப்புறம் எல்லா சூப்பர்மார்கெட் லேயும் நாமே பில் போட்டு பணம் (கிரெடிட் கார்டு அல்லது பணம் ) கொடுப்பதுபோல் கொண்டுவந்துட்டாங்க.

    இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சு பார்த்த எப்படி இருக்கும்னு தெரியலை. சீக்கிரம் இந்த EMI முடிக்கணும்.

    நல்ல பதிவு கில்லாடி.

  2. இதெல்லாம் போக மக்கள் வாங்குவதை குறைத்து விட்டார்கள், சம்பளம் உயரவில்லை உணவு பொருட்களின் விலை உயர்ந்து விட்டது, அதே சமயத்தில் தொழில்நுட்பம், பொழுதுபோக்கு பொருட்களின் விலை குறைந்துவிட்டது – மார்க்கெட்டில் போட்டியும் வந்துவிட்டது (உற்பத்தி செய்யும் நாடுgal இடையேயும் தான்), பிராண்ட் அல்லாத பொருளானாலும் மக்கள் ஒரு 2 வருடத்துக்காவது உழைத்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.

    30 + தாண்டிய வயதில் இருக்கும் நாம் இருக்குற வேலையை விடுவது நல்லதில்லை என்றாலும் நீடிப்போமா என்ற கவலையும் தான் இருக்கிறது.

    அதே சமயத்தில் புதிதாய் வரும் இளவட்டங்கள் கவலையே இல்லாமல் இருக்கிறார்கள். அதான் பயமாய் இருக்கிறது.

  3. @விஜய் 🙂

    @ராஜ்குமார்

    “இதெல்லாம் போக மக்கள் வாங்குவதை குறைத்து விட்டார்கள், சம்பளம் உயரவில்லை உணவு பொருட்களின் விலை உயர்ந்து விட்டது”

    மக்களை வாங்குவதை குறைக்கவில்லை.. இதுவே பிரச்சனை.

    மக்கள் வாங்குவதை குறைத்து இருந்தால், விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும்.. வாங்குபவர்கள் இருக்கும் வரை விலை குறையாது.

    “அதே சமயத்தில் புதிதாய் வரும் இளவட்டங்கள் கவலையே இல்லாமல் இருக்கிறார்கள். அதான் பயமாய் இருக்கிறது.”

    🙂 30+ தாண்டினால் தானாக யோசிப்பார்கள்.

  4. என்னுடைய பார்வையில் கிளவுட் இன்னும் கொஞ்ச காலத்திற்கு நிறைய வேலை வாய்ப்புகள் அளிக்கும். தற்போதைய monolithic சர்வர் கான்செப்டில் இருந்து கிளவுட் கு மாற..
    மேலும் … நிறைய சிறு கம்பெனிகள் கிளவுட் சேவையை பயன் படுத்த துவங்கும்.
    Hyperconverged சிஸ்டம்ஸ் கிளவுட் தேவையை குறைக்கும்.
    கிளவுட் அதிகம் பயன்பட போவது P.O.C. சிஸ்டத்திக்கு..
    every 10 years will have big change in IT. its inevitable.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here