கர்நாடகாவை திட்டும் முன்பு செய்ய வேண்டியது என்ன?

8
காவிரி பிரச்சனை

 

காவிரி பிரச்சனையில் தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று கூறும் கர்நாடகாவை தமிழகத்தில் அனைவரும் திட்டிக் கொண்டுள்ளார்கள்.

அவர்களைத் திட்டுவதற்கு முதலில் நமக்குத் தகுதி உள்ளதா? என்பதே கேள்வி.

எதிர்காலத்தில் போர் நடைபெற்றால் அது தண்ணீருக்காகத் தான் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அந்த அளவுக்குத் தண்ணீருக்காகப் பிரச்சனை ஏற்படப்போகிறது.

சட்டப்படி கர்நாடகா தண்ணீர் தரவேண்டும் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் தண்ணீருக்காகத் தண்ணீரை பாதுகாப்பதற்காகத் தமிழ்நாட்டில் தமிழக அரசு என்ன செய்துள்ளது?

அறிக்கையைத் தவிர உருப்படியாக ஒன்றுமில்லை, இது தான் உண்மை.

எந்த அரசாக இருந்தாலும் ஒரே நிலை தான்

“ஜெ” அரசானாலும் “கலைஞர்” அரசானாலும் ஒன்று தான்.

சில விசயங்களில் மட்டுமே வேறுபாடு மற்றபடி தண்ணீருக்காக இரு அரசுகளுமே ஒன்றுமே செய்யவில்லை என்பதே நிதர்சனம்.

இவர்கள் புதிதாக எதுவும் செய்யவில்லை என்றாலும், இருப்பதையாவது பாதுகாத்து இருக்க வேண்டாமா?!

பண்டைய காலத்தில் அரசர்கள் வெட்டி வைத்த ஏரி, குளங்களும் அப்படியே இருந்து இருந்தாலே, பெருமளவு பிரச்னையைத் தவிர்த்து இருக்கலாம்.

அரசியல்வாதிகள் அனைத்தையும் பிளாட் போட்டு விற்று விட்டார்கள். இதை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. நமக்கு ஜீவ நதி என்று எதுவுமே இல்லை.

அப்படியென்றால் நாம் எந்த அளவுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?!!

சிங்கப்பூரின் திட்டமிடுதல்

சிங்கப்பூர் நாடு தண்ணீருக்காக 100 ஆண்டுகால ஒப்பந்தம் மலேசியாவுடன் போட்டுள்ளது.

ஒப்பந்தம் முடிந்தால்,  தண்ணீரை சேமிக்க என்ன செய்யலாம்? எவ்வாறு மறு சுழற்சி முறையில் தண்ணீரை பயன்படுத்தலாம்?

அதிகரிக்கும் மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்பக் காடுகளை அழித்து வீடுகள் கட்டப்பட்டாலும், தண்ணீருக்காகச் சரியான திட்டமிடலுடன் இடத்தை ஒதுக்கி எப்படித் தண்ணீரை சேமிப்பது என்று திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள்.

ஒப்பந்தம் முடிந்து மலேசியா தண்ணீரை நிறுத்தினாலும் தங்களால் சமாளிக்க முடியும் என்ற அளவுக்குத் திட்டமிட்டு தண்ணீரை சேமிப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இதை எதோ போகிற போக்கில் அடித்து விடவில்லை. 8 வருடங்கள் அங்கே இருந்து அவற்றைப் பார்த்தவன் என்று முறையிலே இதைக் கூறியிருக்கிறேன்.

தண்ணீருக்காக மற்ற மாநிலங்களையே நம்பி இருக்கிறோம்

நமக்கு ஜீவ நதி இல்லையென்பதால், பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவை நம்பி இருக்கிறோம்.

கிருஷ்ணா நதி நீர் இல்லையென்றால், சென்னை மக்களுக்குக் குடிநீர் போதாது ஆனால், சென்னையின் ஏரிகள் குளங்கள் அழிக்கப்பட்டு இருப்பதும் மாசடைந்து கிடக்கிறது.

வாயால் வடை சுடாமல் அவர்கள் செய்வது சுயநலமாக இருந்தாலும், தங்கள் மாநில மக்களின் தேவையை உணர்ந்து அணை கட்டுவது, தடுப்பணை கட்டுவது என்று நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஆனால், நாமோ புதிதாகக் கட்ட வேண்டாம், இருப்பதையே அழித்துக்கொண்டு இருக்கிறோம் அதன் விபரீதம் புரியாமல்.

எதோ கடவுளின் கருணை இருப்பதால், அவ்வப்போது மழை பெய்து மோசமாகாமல் இதுவரை காப்பாற்றி விட்டது.

இதுவே தொடரும் என்று எவ்வாறு கருத முடியும்?!

அழிக்கப்படும் இயற்கை வளம்

பெப்சி கோக் என்று பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்து இருக்கிற தண்ணீரை சுரண்ட விடுகிறோம். 15 காசு தண்ணீரை அவன் 20 ரூபாய்க்கு விற்கிறான்.

நம்ம தண்ணீரை எடுத்து நம்மையே ஏமாற்றுகிறான் ஆனால், எவன் செத்தால் எனக்கென்ன என்று அவர்களுக்கு ஆதரவு அளிக்கிறோம்.

நம் ஆற்றில் மணல் கொள்ளை அனைவருக்கும் தெரிந்தே நடக்கிறது.

மற்ற மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் எடுக்க அனுமதிக்காமல் பணம் கொடுத்தால் தமிழனுக எதைக் கேட்டாலும் கொடுப்பானுக என்று இங்கே வந்து மணலை கொண்டு செல்கிறார்கள்.

கேரளா கட்டும் சிறுவாணி அணைக்கே மணல் தமிழகத்தில் இருந்து செல்கிறது என்று எங்கோ படித்தேன், உண்மையா என்று தெரியவில்லை.

மணல் எவ்வளவு முக்கியமானது?! ஆனால், அதைக் கட்டுப்பாடே இல்லாமல் சுரண்டி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இதனால் எவ்வளவு பெரிய தண்ணீர் பஞ்சம் வரும் என்பதை அறிவீர்களா? நினைத்தாலே மனம் கலங்குகிறது.

தமிழக அரசு அறிக்கையிலேயே அணையை, தடுப்பணையை, ஏரியை, குளங்களைக் கட்டி விடும், வேறு ஒன்றும் செய்யாது.

எங்கேயோ தடுப்பணை சரி செய்தார்களாம் (இடம் மறந்து விட்டது). நன்றாக இருந்த தடுப்பணையைச் செப்பனிடுகிறேன் என்று மோசமாக்கி வைத்து இருக்கிறார்கள்.

கடந்த வருடங்களில் எவ்வளவு TMC தண்ணீர் வீணாகக் கடலில் கலந்தது தெரியுமா? அதைச் சேமிக்க உருப்படியாக ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

அனைத்துமே அறிக்கை / அறிவிப்பு மட்டுமே!

தண்ணீரை சேமிக்கவோ, எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சனை வரும் போது சமாளிக்கச் சரியான திட்டங்களோ, இருக்கும் ஏரி குளங்களை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கவோ, தூர்வாரவோ எந்த முயற்சியும் எடுக்காத பரிதாப நிலையில் தான் தமிழகம் தற்போது உள்ளது.

கடந்த 20 வருடங்களில் நீர் நிலைகளை காக்க / உருவாக்க அரசு எடுத்த முயற்சிகள் மிகச் சொற்பமே!

இது தான் தமிழகத்தின் நிலை. இது தான் நிதர்சனம்.

நம்மிடையே ஒற்றுமையில்லை

நம்மிடையே இவ்வளவு பிரச்சனைகளை வைத்துக்கொண்டு நாம் கர்நாடகாவை கேரளாவை ஆந்திராவை Meme போட்டும், அரசியல்வாதிகள் அறிக்கை விட்டும் திட்டிக்கொண்டும் இருக்கிறோம். வெட்கமாக இல்லை..!!

தற்போது காவிரி பிரச்சனை குறித்து Meme அதிகமாகக் காண்கிறேன்.

இதே Meme போட்டவர்கள் தான் கொஞ்ச நாள் முன்பு சென்னை Vs கோவை என்று அடித்துக்கொண்டார்கள்.

நமக்கெல்லாம் கன்னடர்களைத் திட்டக் கொஞ்சமாவது சூடு சொரணை வெட்கம் மானம் இருக்கிறதா?!

நம்மிடமே ஒற்றுமையில்லை இதில் எந்த முகத்தை வைத்துக்கொண்டு மற்ற மாநிலத்தவரை திட்டுகிறீர்கள்?!

“ஜெ” கைதானபோது “காவிரியை நீ வைத்துக்கோ அம்மாவை எங்களிடம் கொடுத்து விடு” என்று ஒரு அரைவேக்காடு அதிமுகக் காரன் ஒட்டிய சுவரொட்டியைக் கன்னடர்கள் போட்டு நம்மைக் கலாயிக்கிறார்கள்.

இது தான் தமிழகத்தின் நிலைமை. இதில் எங்கயா சென்று அவர்களைத் தைரியமாகக் கேட்பது?

மேற்கூறிய பிரச்சனைகளை எல்லாம் சரி செய்யாமலே வருடாவருடம் காவிரி பிரச்சனைக்காகச் சண்டைப் போட்டுக்கொண்டுள்ளோம்.

முதலில் நம் அரசியல்வாதிகளைக் கேள்வி கேளுங்கள் பின்னர் கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவை கேள்வி கேட்போம்.

நமக்கும் வேண்டும் பொறுப்புணர்வு

நம்மளவில் தண்ணீரை சேமிக்க என்ன செய்யலாம்? நம்முடைய குடும்பத்தினருக்கு தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்துவது எப்படி?

வெட்டி நியாயம் பேசாமல் பெப்சி கோக் போன்ற உடலுக்குத் தீங்கு தரும் / நம் தண்ணீர் வளத்தை அழிக்கும் குளிர்பானங்களைத் தவிர்ப்பது எப்படி? என்று யோசியுங்கள்.

இந்தப் போராட்டம், பொங்குறது எல்லாம் இரண்டு வாரமோ மூன்று வாரமோ தான்.

பேச அடுத்த விசயம் வந்து விட்டால், “காவிரியா! அது தான் தண்ணீர் திறந்து, முடிந்து விட்டதே!” என்று கூறுவது தான் தமிழனின் இன்றைய நிலை.

இது தான் இன்றைய தமிழ்நாடு.

நம்ம வீட்டு குழாய் ஒழுகி தண்ணீர் வீணாகிக்கொண்டு இருக்கிறது ஆனால், நாம் அடுத்த வீட்டில் இருந்து எனக்கு வர வேண்டிய தண்ணீரை தர மாட்டேங்குறான் என்று கூறிக்கொண்டு இருக்கிறோம்.

முதலில் நம்மைச் சரி செய்யப் பார்ப்போம், பின் அடுத்தவன் செய்வது தவறு என்று கூறுவோம். உணர்ச்சிவசப்பட்டுப் பொங்குவதெல்லாம் ஒரு பயனையும் தாராது!

இன்னும் கொஞ்ச நாளில் காவிரி பிரச்சனை நடந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் மக்களும் ஊடகங்களும் வேறொரு “பரபரப்பு” விஷயத்தில் மூழ்கி இருப்பார்கள். இது தான் நடக்கப்போகிறது, இதுக்கு இவ்வளோ அலப்பறை.

ம்ஹீம்!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

  1. சமவெளி பகுதியில் அணை கட்டுவதற்கு அசாத்திய தைரியம் வேண்டும் அரசுக்கு. தமிழ்நாட்டில் கட்டப்பட்ட ஒரே சமவெளி அணை “வைகை” அது இல்லாவிட்டால் மதுரை திண்டுக்கல் மாவட்டத்தின் நிலமை அதோ கதிதான். அதைக் கட்டும்போது பெரும் எதிர்ப்பு இருந்தது பல கிராமங்கள் மூழ்கும் என்று; அந்த அணையை கட்டிய குற்றத்திற்காக மதுரை மேற்கு மாவட்ட [இன்றைய தேனி உசிலபட்டி ஏரியா] தொகுதிகளில் காங்கிரஸை தோற்கடித்தார்கள். [லிங்கா படம் நினைவுக்கு வருதா கிரி; லிங்கா படத்தை வைகை டேம் கதையாகவும் பார்க்கலாம்]
    பென்னிக்குக் க்கு கோவில் கட்டி கும்பிடும் அந்த பகுதி மக்களுக்கு இன்றும் வைகை அணையை கட்டிய முதல்வர் மீது வன்மம் உண்டு. ஜாதி படுத்தும் பாடு.

    அன்றே அப்படி என்றால் இன்று கேட்கவே வேண்டாம். ஒரு வேலையும் செய்ய விடமாட்டானுக.

    காவிரியின் கிளை நதியான; அமராவதி, நொய்யல் ஆற்றில் அணை கட்டலாம். மழைக்காலத்தில் வீணாக காவிரியில் கலக்கும் தண்ணீர் தடுக்கப்படும். காவிரியின் மற்றொரு கிளை நதியான பவானி ஆற்றில் கட்டப்பட்டது போல இல்லாவிட்டாலும் சிறிய அளவிலான அணையையாவது கட்டலாம். பவானி சாகர் இல்லாவிட்டால் இன்று உங்க ஊர் எப்படி இருந்திருக்கும் கிரி?

    காவிரியில் கருர் அருகே அணைகட்டலாம்தான்; பாழாய் போன மணலை எப்படி கொள்ளையடிப்பது? அவரவர் கவலை அவரவர்க்கு

    பாலாற்றில் பெரிய அணையே கட்டி மழைநீரை சேகரித்து சென்னைக்கு குடிநீர் வழங்கலாம்.

    தாமிரபரணி தூத்துக்குடியில் நுழைந்த பிறகு அங்கு ஒன்று கட்டி குடிநீருக்கு பயன்படுத்தலாம்.

    மக்களுக்காவே நான் என்று தவவாழ்வு வாழ்பவரிடமும்; கட்டுமரமாய் மிதப்பவர்க்கும் இது எங்கே தெரியப்போகிறது?

    தமிழ்நாட்டின் சாபக்கேடு !

  2. இப்போ
    உங்க ரஜினி
    உண்ணா விரதம் இருக்கணுமா
    இலலே
    பஞ்ச் டயலாக்
    சொல்லனுமா
    2.0 டா சாமி

    ஏன்னா நேத்து
    கன்னட நடிகர்கள்
    மொறைவாசல்
    முடிஞ்சது
    அப்போ தல வர்??

  3. என்னா சொன்னாலும் நம்ம ஆளுங்க திருந்தமாட்டாங்க அண்ணா … கன்னட காரண திட்டுற எங்க அப்பா தான் குளிக்கிறதுக்கு அரை டேங் தண்ணீர் காலி பண்றார் எவ்ளோ சொல்லியும் கேக்கறது இல்ல … நம்ம ஆளுங்க என்னிக்க நீரை காசு கொடுத்து வாங்க பழகிட்டாங்க்களோ அன்னைக்கே நீரின் அருமையை மறந்து விட்டார்கள்

  4. கிரி, உங்கள் எழுத்தின் உண்மை தெளிவாக புரிகிறது. கடந்த 40/50 ஆண்டுகளில் எந்த புதிய பெரிய அணையையும் கட்டவில்லை என்பது அனைவர்க்கும் தெரியும். குடிநீருக்காக காலி குடங்களுடன் ஏழை மக்கள் அலைவதை பார்க்கும் போது வருத்தமாக இருக்கும்.

    எல்லா ஆண்டுகளிலும் அரசாங்கத்தின் வரவை விட, பற்று தான் அதிகமாக இருக்கிறது. இவர்கள் போடக்கூடிய திட்டங்கள் எல்லாம் சரியாக நிறைவேற்றப்படுகிறதா என்பது தெரியவில்லை. இன்று தங்கம் வென்ற தங்கவேலுக்கு பரிசாக 2 கோடி தமிழக அரசு வழங்கியுள்ளது. மகிழ்ச்சியான செய்தி.

    ஆனால் என் பார்வையில் 2 கோடி மிகையாக தெரிகிறது. எத்தனை ஏழை குடும்பங்கள் அடுத்த வேளை சோற்றிற்கு வழியில்லாமல் இருக்கும் நிலையில் இவ்வளவு பெரிய தொகை தனி நபருக்கு கொடுப்பது சரியா இன்று தெரியவில்லை. அரசின் பணம் இது போல பல நிகழ்வுகளுக்கு தரப்படுகிறது.

    விளையாட்டு துறையை விட, விவசாயம் முக்கியமான ஒன்று. ஆனால் இன்று அதன் நிலை?????. அடுத்த 5/10 வருடங்களில் விவசாயத்தின் நிலைமை இன்னும் மோசமாகலாம். ஒவ்வொரு ஆண்டு திட்டத்தை பார்க்கும் போது ஆச்சிரியமாக இருக்கும். சாதாரணமாக நிறைவேற்ற கூடிய திட்டங்களுக்கு அரசாங்கம் கோடி கணக்கில் பணம் ஒதுக்குகிறது. அந்த திட்டங்கள் சரியாக நிறைவேற்றப்பட்டதா??? என்றால் தெரியவில்லை. மனம் வலிக்கிறது கிரி.

    நேர்மையான அதிகாரிகள், நல்ல தலைவர்கள் நம்மிடையே எதிர்காலத்தில் உருவாக வேண்டும் அப்போது தான் அடுத்த தலைமுறையாவது காக்கப்படும். பகிர்வுக்கு நன்றி கிரி.

  5. @காத்தவராயன்

    எப்போதுமே நீங்கள் தரும் தகவல்கள் சுவாரசியம் தான் 🙂 . அப்பகுதி தகவல்கள் எல்லாம் நீங்கள் கூறும் போதே தெரிந்து கொள்கிறேன்.. கொஞ்ச நாட்கள் முன்னோடி முக்குலத்தோர் பற்றி கொடுத்த விளக்கம் ஒரு சிறு உதாரணம்.

    ” பவானி சாகர் இல்லாவிட்டால் இன்று உங்க ஊர் எப்படி இருந்திருக்கும் கிரி?”

    விவசாயமே இருந்து இருக்காது. பவானி அணையை நம்பித் தான் எங்க மொத்தப் பகுதியும் உள்ளது.

    “மக்களுக்காவே நான் என்று தவவாழ்வு வாழ்பவரிடமும்; கட்டுமரமாய் மிதப்பவர்க்கும் இது எங்கே தெரியப்போகிறது?

    தமிழ்நாட்டின் சாபக்கேடு !”

    கசப்பான உண்மை.

    அணை கட்டுவதில் சிரமங்கள் இருந்தாலும், தடுப்பணை கட்டலாம், ஏரி குளங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். எல்லாமே அறிக்கையாக மட்டுமே உள்ளது.

    திமுக முன்பு ஓரளவு திட்டமிட்டு செய்தார்கள் ஆனால், அவர்களுடைய கடந்த சில ஆட்சிகளில் அவை புறக்கணிக்கப்பட்டு விட்டது.

    ஆனால், அதிமுக வை ஒப்பிடும் போது திமுக பரவாயில்லை இந்த விஷயங்களில். கொஞ்சமாவது திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள்.

    @கார்த்தி “நம்ம ஆளுங்க என்னிக்க நீரை காசு கொடுத்து வாங்க பழகிட்டாங்க்களோ அன்னைக்கே நீரின் அருமையை மறந்து விட்டார்கள்”

    காசு கொடுத்தாலும் கிடைக்காது என்ற நிலை வரும் போது உணர்ந்து கொள்வார்கள். அது காலம் கடந்த செயலாக இருக்கும்.

    @வேகநரி நன்றி

    @யாசின்

    “இவர்கள் போடக்கூடிய திட்டங்கள் எல்லாம் சரியாக நிறைவேற்றப்படுகிறதா என்பது தெரியவில்லை”

    அறிக்கைகள் மட்டுமே!

    “விளையாட்டு துறையை விட, விவசாயம் முக்கியமான ஒன்று”

    இரண்டுமே முக்கியமான துறை தான். அரசாங்கம் நினைத்தால் இரண்டையும் சிறப்பாக கையாளலாம் ஆனால், நினைக்க மாட்டேங்குறாங்களே!

  6. நண்பர் கிரி, தமிழ்நாட்டில் தண்ணீர் மேலாண்மை சரிவரப் பின்பற்றாததற்கு, நமது அரசாங்கமும் ,அதைத் தேர்ந்தெடுத்த நாமும், நமது விவசாயிகளின் ஒருங்கிணைப்பு இல்லாததும் காரணம் தான் அதை மறுக்க முடியாது,
    ஆனால் எனக்கு இதுவரை தமிழன் என்ற உணர்வை விட இந்தியன் என்ற உணர்வே மேலோங்கி இருந்தது, ஆனால் மிக அடிப்படைத் தேவையான விவசாயத்திற்குத் தண்ணீர் தர மறுப்பதும் தமிழர்கள் வேறு மொழி பேசுபவர்கள் என்ற ஒரு காரணத்திற்காக நம்மை ஒரு பாக்கிஸ்தான் போல நினைத்து தண்ணீர் தர மறுப்பது இந்தியன் என்ற உணர்வைக் கொல்வதாக உள்ளது.
    இப்பிரச்சனைக்குக் கர்நாடக விவசாயிகளும், கர்நாடக மக்களுக்கும் முழு சமந்தம் இல்லை என்றாலும் கீழ்த்தர எண்ணத்துடன் அரசியல் செய்யும் சில கட்சி உறுப்பினர்களின் அடாவடித் தனத்தைப் பார்த்துக்கொண்டு மவுனமாக இருப்பதுடன், மத்திய அரசும் வேடிக்கை பார்ப்பது இந்தியன் என்ற உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்வதாக உள்ளது. இப்படியே போனால் இனி இது ஒருங்கிணைந்த இந்தியாவாக இருப்பது கடினம் ,உண்மையாகவே இது தமிழ் ‘நாடாக’ மாறிவிடும் காலம்தொலைவில் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here