தீண்டாமை எப்போது ஒழியும்?

11
Untouchability தீண்டாமை

தீண்டாமை பண்டை காலத்தில் இருந்து இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கும் கொடுமையான செயல். இது பற்றிப் பலரும் விரிவாகக் கூறி இருக்கிறார்கள்.

தற்போது கூறுவது என் அனுபவங்களை ஒட்டிய நிகழ்வுகளை மட்டுமே.

தீண்டாமை

எத்தனை பிரச்சாரங்கள் செய்தாலும் தீண்டாமை 100 % ஒழிந்து விடக்கூடியதல்ல.

ஆனால், பரப்புரைகளால்,  மாறிவரும் சூழ்நிலைகளால் தற்போது தீண்டாமை என்பது ஓரளவு (ஓரளவு தான்) குறைந்து இருப்பது உண்மை. Image  Credit

இதற்குத் தற்போதைய காலத்தில் கிடைக்கும் அனுபவங்கள், ஊடகங்கள் சில தரும் தீண்டாமை பற்றிய தகவல்கள், இவற்றோடு அனைத்து சமுதாயத்தாரின் படிப்பு மற்றும் பொருளாதார ரீதியான வளர்ச்சி.

உயர் சாதி என்பது ரத்தத்திலேயே ஊறிப்போனது, அனைவரும் நினைப்பது போல அவ்வளவு விரைவில் எண்ணங்கள் மாறி விடாது.

குறைந்த பட்சம் இன்னும் மூன்று தலைமுறைகளாவது ஆகும்.

அது கூட முற்றிலும் நின்று விடாது குறைய வாய்ப்புண்டு. சாதி என்ற ஒன்று இருக்கும் வரை இதற்கு முடிவு என்பதே கிடையாது.

அனுமதி மறுப்பு

இன்றும் கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டினுள் வர அனுமதிக்கமாட்டார்கள். அவர்கள் பயன்படுத்தும் எந்தப் பொருளையும் தொடக்கூட மாட்டார்கள்.

இது எங்கள் வீட்டிலேயே நடக்கிறது.

அப்பா முற்போக்காகச் சிந்திப்பவர் என்பதால் இந்த விசயங்களைப் பெரிது படுத்த மாட்டார் ஆனால், இவரைப் போல அனைவரையும் எதிர்பார்ப்பது நடக்காத ஒன்று.

இன்னும் பலரை வயதானவராக இருந்தாலும் பெயர் சொல்லித்தான் வா போ என்று அழைப்பேன்.

அவர்களை வாங்க போங்க என்று அழைத்தால் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் காரணம், அவர்களும் அப்படியே அழைக்கப்பட்டு பழகி விட்டார்கள்.

ஆனால், அதே அவர்கள் மகன்களை வாங்க போங்க என்று தான் அழைப்பேன். இது தான் தலைமுறை இடைவெளி.

நாளை என் மகன் அனைவரையும் ஒரே மாதிரி பார்ப்பான் (என்று நினைக்கிறேன்).

பொது இடங்களில் அவமானம்

பேருந்தில் செல்லும் போது தாழ்த்தப்பட்டவர்கள் அருகில் அமரமாட்டார்கள் அமரவும் விட மாட்டார்கள்.

நான் யோக்கியன் என்று சொல்ல வரவில்லை ஆனால், தாழ்த்தப்பட்டவர்கள் அருகில் அமர்ந்தால், எழுந்து நிற்கும் அளவிற்கு மோசமானவன் கிடையாது.

என்னால் நிச்சயம் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். அதற்காகத் நான் தீண்டாமையை எதிர்த்துப் போராடும் போராளி அல்ல.

என்னளவில் ஓரளவு சரியாக இருக்கிறேன், மற்றவர்கள் இப்படி இருந்தே ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை, இருந்தால் மகிழ்ச்சி.

தற்போது ஊரில் பெரிய தலைகளாக உயர் சாதிகளில் உள்ளவர்கள், ஒரு அரசு வேலை நடக்க வேண்டும் என்றால் அதற்குப் பொறுப்பில்ல உள்ள நபர் தாழ்த்தப்பட்ட அதிகாரியாக இருந்தால் என்ன செய்வார்கள்?

இப்ப எங்கே போகும் சாதி? இங்கும் கூட ஒரு சிலர் தனக்கு நஷ்டம் ஆனாலும் இவரிடம் போய் நிற்கமாட்டேன் என்று கூறுபவர்கள் பலர் இருக்கிறார்கள்.

முன்னிலைப்படுத்தப்படும் பிராமணர்கள்

தீண்டாமை அனைத்து சாதிகளிலும் நடக்கிறது ஆனால், பிராமணர்கள் மட்டும் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள்.

திராவிட கட்சிகளுக்குக் கிடைத்த ஆயுதம் இது தான்.

பிராமணர்களில் எத்தனையோ கீழ்த்தரமாக நடந்து கொண்டவர்களைக் கடந்து வந்து உள்ளேன், அதே போல மற்ற சாதிகளிலும் இதற்குச் சற்றும் குறையாமல் நடக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

உண்மைச் சம்பவம் 

பிராமின் என்றதும் என் பேருந்துச் சம்பவம் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன்.

பள்ளிப்படிப்பை முடித்துச் சென்னையில் இருந்த நேரம் அது… ஒரு பேருந்தில் 45 – 50 வயது மதிக்கத் தக்க ஒரு பிராமணப் பெண் அமர்ந்து இருந்தார்.

அவர் அருகில் இருந்த இடம் காலியாக இருந்தது. அடுத்த நிறுத்தத்தில் ஒரு நரிக்குறவப் பெண் தன் குழந்தையோடு ஏறி இவர் அருகில் அமர்ந்தார்.

உடனே இவர் கோபமாக எழுந்து ஒரு ஓரமாக நின்றதோடு அல்லாமல் அருவருப்பாக எதோ நடந்தது போல அவரிடம் நடந்து கொண்டு, அருகில் இருப்பவர்களைப் பார்த்துச் சிரித்து தனக்கு ஆதரவும் தேடிக்கொண்டார்.

இதை எதிர்பாராத அந்தப்பெண் அவமானத்தில் கூனிக்குறுகி அழ ஆரம்பித்து விட்டார். அவர் அழுத போதும் கூட இவர் அதே போலவே நடந்து கொண்டார் கொஞ்சம் கூட மனம் இரங்கவில்லை.

இதுபோல எத்தனை அவமானங்களை அந்தப்பெண்ணை போன்றவர்கள் சந்தித்தார்களோ!

அப்பெண் அழுததும் அதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் (அவர்கள் பிராமின் அல்ல) சிரித்த சம்பவத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

உலகம் முழுவதும் உள்ள தீண்டாமை

தீண்டாமை என்பது இந்தியாவில் தான் இருக்கிறது என்கிற ரீதியில் பேசுகிறார்கள், இது உலகம் முழுக்க இருக்கிறது.

இன்றும் வெள்ளையர்களால் கருப்பர்கள் சோதனைகளைச் சந்தித்து இருக்கிறார்கள்.

இனவெறிக்கு பிரபலமான நாடாக, வளர்ந்த நாடான ஆஸ்திரேலியா உள்ளது.

தீண்டாமைக்கும், படித்தவர்கள் செய்யமாட்டார்கள் என்பதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. தோலின் நிறத்தை வைத்து இன்றும் பல விஷயங்கள் வெளிநாடுகளில் கூடத் தீர்மானிக்கப்படுகிறது.

நம் நாட்டுடன் ஒப்பிடும் போது வெளிநாடுகளில் குறைவாக இருக்கலாம் அவ்வளவே.

வெள்ளைத்தோல் கொண்டவர்கள் எல்லாம் வெள்ளையர்கள் அல்ல என்பதை அறிக.

வெள்ளையர்கள் என்றால் அமெரிக்கா ஐரோப்பா நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள் நீங்கள் வெள்ளையாக இருந்தாலும் உங்களுக்கு மதிப்புக் கிடையாது.

Read: வெள்ளைக்காரர்களை கண்டு நமக்கேன் தாழ்வு மனப்பான்மை? [June 2008]

தற்போது (2012) இருக்கும் சிங்கப்பூரில் கூட வெள்ளையர்களுக்கு ஒரு மரியாதை இந்தியர்களுக்கு ஒரு மரியாதை சில சீனர்களால் கொடுக்கப்படுகிறது.

தற்போதைய தலைமுறை இளைஞர்கள் இளைஞிகள் செய்வதில்லை ஆனால், வயதானவர்கள் இன்னும் இதில் பழைய எண்ணங்களிலேயே இருக்கிறார்கள்.

சிங்கப்பூர் பற்றிய எழுதிய கட்டுரையில் பாலா என்பவர் கமெண்ட் போட்டு இருந்தார்.

ரயிலில் இந்தியன் அருகில் அமர்ந்தால் எழுந்து போகும் சீனர்களைப் பார்த்தது இல்லையா?‘ என்று கேட்டு இருந்தார்.

அதற்கு அவரிடம் ‘நான் வந்து ஒருவருடம் ஆகிறது இதுவரை எனக்கு அது போல நேர்ந்ததில்லை‘ என்று கூறி இருந்தேன்.

கூறி ஐந்து மாதங்களிலேயே ஒரு சம்பவம் ஏற்பட்டது.

பேருந்தில் ஒருவர் அருகில் அமர்ந்ததும் அவர் முறைத்தார், எனக்கு ஒன்றும் புரியவில்லை எதற்கு முறைக்கிறார் என்று! பின் கோபமாக எழுந்து நின்று விட்டார்.

பின்னர் தான் தெரிந்தது இனவெறி காரணமாக என்று. எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. இதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

எனக்கு வந்த ஆத்திரத்திற்கு அளவே இல்லை, அவமானமாகப் போய் விட்டது.

இதே போல இன்னொரு சம்பவம் ஒரு பாட்டியிடம் ஏற்பட்டது இதன் பிறகு வயதானவர்கள் பக்கத்தில் அமருவதே இல்லை.

அப்போது என் மனநிலை எந்த மாதிரி இருந்து இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.

கிராமத்தில் பேருந்தில் தாழ்த்தப்பட்டவர்களிடம் ஒரு சிலர் நடந்து கொண்டதைப் பார்த்துப் பாதிக்கப்பட்டவர்கள் உணர்வுகளைப் புரிந்து இருந்தாலும், இந்தச் சமயத்தில் அனுபவப்பூர்வமாக அதன் வலி என்னவென்று புரிந்தது.

நமக்கு மாதிரி தானே அவர்களுக்கும் இருக்கும் என்று உணர முடிந்தது ஏற்கனவே உணர்ந்து இருந்தாலும்.

நம்ம ஊரில் இது போலக் கேவலமாக நடந்து கொள்பவர்கள் வெளிநாடுகளுக்கு வந்து அவர்களுக்கே இது போலானால் தான் கொஞ்சமாவது புரியும் (உரைக்கும்) நாம் எந்த மாதிரித் தவறு செய்துகொண்டு இருக்கிறோம் என்று.

Food Court

இது மட்டுமல்ல சிங்கப்பூரில் Food Court ரொம்பப் பிரபலம் இங்கே வயதானவர்கள் நிறைய கடைகளில் பணிபுரிகிறார்கள்.

இவர்களில் பலர் இந்தியர்களை மதிக்கவே மாட்டார்கள், எரிந்து விழுவார்கள், அதே ஒரு வெள்ளைக்கா(ரி)ரர் வருகிறார் என்றால் இவர்கள் பாவனையே மாறி விடும்.

விழுந்து விழுந்து கவனிப்பார்கள். இதை நான் மேலும் விளக்க விரும்பவில்லை.

இளையோர் இப்படி நடந்து கொள்வதில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

நடக்கலாம் ஆனால் வயதானவர்கள் நடந்து கொள்ளும் அளவிற்கு பொது இடங்களில் நடந்து கொள்வதில்லை. இதற்குக் காரணம் தலைமுறை இடைவெளி தான்.

தீண்டாமைக்காக நமது ஊரில் குரல் கொடுப்பவர்களில் நேர்மையானவர்களாக வெகு சிலரே இருப்பார்கள்.

மீதி பலர் அப்படி தான் இருக்கிறேன் என்று, முற்போக்குவாதியாகக் காட்டிக் கொள்வார்களே தவிர அவர்களின் உண்மை நிலை அவர்களின் மனசாட்சிக்கும் மட்டுமே தெரியும்.

பலர் வாய்ச்சொல் வீரர்கள் மட்டுமே.

கோவில்களில் அனுமதி மறுப்பு

கோவில்களில் அனைவரையும் அனுமதிக்க வேண்டும்.

இன்னும் கிராமங்களில் கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை, வெளியே தான் நிற்க வேண்டும்.

கடவுள் முன் அனைவரும் சமம் தான் ஆனால், கடவுள் பெயரால் தான் இதைப்போலக் கொடுமைகள் நடக்கின்றன.

மோளம் அடிப்பவர்கள் இன்னும் இரு தலைமுறைக்குத் தான் இருப்பார்கள் அடுத்த தலைமுறைக்கு எல்லாம் அவரவர்களே பார்த்துக் கொள்ள வேண்டியது தான்.

அப்போதும் கோவிலுக்கு வெளியே நின்று இவர்கள் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்.

நாளைக்கு இவர்கள் மகன் பேரன் அரசு அலுவலகத்தில் இவர்களை ஒதுக்கியவர்கள் வெளியே நிற்க வேண்டிய நிலை வரும்.

உத்தமபுரத்தில் தலித்துகள் தங்கள் பகுதிக்குள் வந்துவிடக் கூடாது என்று சுவர் எழுப்பி இருந்தார்கள் உயர் சாதியினர். Image Credit

கம்யுனிஸ்ட் கட்சியினர் நடத்திய போராட்டம் மூலம் நிர்வாகத்தினர் தலையிட்டுச் சுவரை இடித்த பின் கோவிலுக்குள் சென்று தலித்துகள் பூஜை நடத்தி உள்ளனர்.

கோவிலுக்குள் வந்த பிறகு அவர்கள் முகத்தில் தான் எத்தனை மகிழ்ச்சி.

அதிலும் வலது ஓரத்தில் இருக்கும் பெண்ணின் முகத்தையும் பாட்டியையும் கவனித்துப் பாருங்கள்.

கம்யுனிஸ்ட் கொள்கைகள் பிடிக்காது ஆனால், இதில் அவர்களுக்கு என் முழு ஆதரவு.

ஏழை என்றால் அப்பாவிகள் மட்டுமேவா?

இது இப்படி இருந்தாலும், இன்னொரு முட்டாள்த்தனமான எண்ணமும் பலருக்கு இருக்கிறது.

அதாவது, ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் என்ன செய்தாலும் தவறு கிடையாது! உயர் சாதியினர் பணக்காரர்கள் செய்வதெல்லாம் தவறு!! என்பது போல.

ஏழை என்றால் அவர்கள் வெகுளிகள் எப்போதுமே தவறு செய்ய மாட்டார்கள் என்பது பலரின் அழுத்தமான எண்ணம்.

தீண்டாமை எப்படியொரு மோசமான எண்ணமோ அதே போல தான் இதுவும்.

சாதியை வைத்துப் பொய் வழக்கு போடுவது நடைபெறுகிறது. மிகத்தவறான செயல்.

ஏழைகள் தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் யோக்கியர்கள் அல்ல. அதே போல உயர்சாதியினர் பணக்காரர்கள் அனைவரும் மிக மோசமானவர்களும் இல்லை.

அனைத்து இடங்களிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் மோசமானவர்களும் இருக்கிறார்கள் சதவீத அளவில் வேறுபடலாம்.

நான் முன்னரே கூறியபடி படித்து விட்டால் மட்டும் தீண்டாமை என்பது ஒழிந்து விடும் என்பது அர்த்தமல்ல.

நன்கு படித்தவர்கள் கூட ஃபேஸ்புக்கில் தங்களுடைய சாதியை வைத்துச் சண்டை போட்டுக்கொண்டுள்ளார்கள்.

இவர்கள் எல்லாம் இன்றைய தலைமுறை தான், இவர்களே இப்படி இருக்கும் போது பழைய எண்ணங்களைக் கொண்டு இருப்பவர்கள் எல்லாம் உடனே மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பதெல்லாம் முட்டாள்த் தனமான எதிர்பார்ப்பு.

தலைமுறை மாற்றங்கள் மட்டுமே தீண்டாமையை ஒழிக்கும் அல்லது குறைக்கும்.

பிற்சேர்க்கை அசுரன் – வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

11 COMMENTS

  1. பாலியல் தொழிலாளியிடம் செல்வதற்கும், மதுக்கடைகளில் வாங்கி தின்பதிலும் சாதி மதம் மற்றும் தீண்டாமை கிடையாது. அங்கெல்லாம் சமத்துவம் பேணப்படுகிறது. சாதி மதத்தை ஒழித்தவர்களாக பாலியல் தொழிலாளிகளும், பார் நடத்துபவர்களும் தெரிகிறார்கள்.

    🙂

  2. சில நாட்களுக்கு முன்பு calmenti மால் நடந்து வந்தபோது road street மார்க்கெட்டிங் செய்யும் ஒரு சீன இளம் பெண் வழிமறித்த போது “no thanks ” சொன்ன போது அந்த பெண் “சாப்டியா” நக்கலா கேட்டா வந்தா கோபத்துல ஒரு பாத்து நிமிடம் ஆங்கிலத்துல கத்திட்டு போனேன் .

  3. ரொம்ப சென்சிடிவ்வான டாபிக் இது… நம்ம மனசுக்குள்ள இயல்பா என்ன நடக்குதுன்னு அருமையா சொல்லி இருக்கீங்க.

    யாருமே இன்ன ஜாதியில்தான் பொறக்கனும்னு பிளான் பண்ணி பொறக்கல. கீழ் ஜாதியில் பொறந்தது அவன் தப்பும் இல்ல, அப்புறம் எதுக்கு வெறும் போறப்ப வச்சு அவன கேவலமா நடத்திட்டே இருக்கணும்? ரொம்பபே கொடுமையான விஷயந்தான் இது.

    ஊர்ல டீக்கடையில சேரியில இருந்து வர்றவங்க குடிக்கிறதுக்குன்னு தனியா டம்பளர் ஒரு ஓரமா தொங்கிட்டு இருக்கும், மத்தவங்க குடிக்கிறதுக்கு கடைக்குள்ள வழக்கம் போல நெறைய டம்பளர் இருக்கும்… சேரி ஜனங்க டீ குடிக்கனும்னா அந்த தனி டம்பளர்தான், அதையும் குடிச்சு முடிச்சுட்டு, அவங்களே கழுவி, திரும்ப அதே இடத்துல தொங்க வச்சுடுவாங்க. 🙁 இப்போ இந்த பழக்கம் அவ்வளவா இல்லைன்னு நெனைக்கிறேன்.

    நானும் எங்கள் தோட்டத்துக்கு வேலைக்கு வர்றவங்கள வா போ-ன்னுதான் முன்னாடியெல்லாம் கூப்பிடுவேன். ஆனா இப்ப, அவங்களையும் அவங்க புள்ளைங்களையும் வாங்க போங்க-ன்னுதான் கூப்பிடவே வருது, இது எங்க ஊர்ல பல பேருக்கு புடிக்கிறதில்லன்னாலும் வெளிப்படையா என்கிட்டே எதுவும் சொல்றதில்ல. கண்டிப்பா நம்ம பசங்க பெரியவங்களா ஆகும்போது இது ரொம்பவே கொறைஞ்சுடும்னு நினைக்கறேன்.

    எனக்கும் நீங்க சொன்ன அனுபவங்கள் சிங்கப்பூர்ல நடந்திருக்கு, ஆனா நான் “போங்கடா”-ன்னுட்டு நான் பாட்டுக்கு போயிட்டே இருப்பேன், அவங்களை கண்டுக்குறதே இல்ல.

  4. இன்னொன்னையும் நான் சொல்லிடறேன்… அப்படி நான் வாங்க போங்க-ன்னு கூப்பிடறதால நான் சமத்துவம் பாக்குறேன், ஜாதி பாகுபாடு என்கிட்டே இல்ல-ன்னு பொய் சொல்ல மாட்டேன்… மனசுக்குள்ள இருக்கு, அதை வெளியில கொண்டு வர்றதுக்கு எந்த மோசமான சம்பவமும் நடக்கல, அவ்வளவுதான். எங்க பக்கத்து தோட்டக்காரங்க வேற ஜாதி, சமீபத்துல எங்களுக்குள்ள ஒரு நிலத் தகராறு வந்துச்சு, அப்போ அவங்க நடந்துகிட்ட விதங்கள பாத்தா யாரும் சமத்துவம் பத்தி வாயே தொறக்க மாட்டாங்க அப்படிங்குற அளவுக்கு அவங்க சொல், நடவடிக்கை எல்லாமே இருந்துது. பொம்பளைங்க கூட அடிதடிக்கு சர்வ சாதாரணமா வருவாங்க… சட்டமும் அவங்களுக்கு சாதகமாத்தான் இருக்கு.

    கீழ் ஜாதிக்காரங்க போலிஸ்-கிட்ட போயி, “அவன் என்னோட ஜாதிப் பெற சொல்லி திட்டினான்”-னு உண்மையோ/பொய்யோ ஒரு புகார் குடுத்துட்டா போதும், போலிஸ் கேள்வி எதுவும் கேக்காம FIR போட்டுடுறாங்க. இப்பவும் இதுதான் பெரிய பிரச்சினையா தென் மாவட்டங்கள்ல ஓடிட்டு இருக்கு.

  5. தனி மனித ஒழுக்கம் வாழ்வில் எவ்வளவு முக்கியமோ, அது போல் சக மனிதனை நேசிப்பதும் முக்கியம்!!! சென்ற தலைமுறை செய்த தவறை நாமும் செய்ய வேண்டாமே!!! அடுத்த தலைமுறைக்கு இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்லி காட்டுவதுக்கு பதில் நாம் வாழ்ந்து காட்டி விடலாமே!!!! இறைவனின் பார்வையில் அனைவரும் சமமே!!!

  6. தீண்டாமையால் பாதிக்கப்பட்டு மேலே வந்தவர்களிடம் மற்றவர்களை அதிகப்படியான வைராக்கியம் வேண்டும். அவர்களால் முடிந்த அளவுக்கு அவர்கள் சார்ந்த மக்களை மேலே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். காரணம் சமூகத்தை இந்த கேவலத்தை சுட்டிக் காட்டிக் கொண்டு கத்திக் கொண்டு இருப்பதை விட நாங்களும் வாழ்ந்து காட்டுகின்றேன் என்ற எண்ணம் வளரும் அதே சமூகத்தில் குறைந்த பட்சம் வளர்ந்தவர்கள் விதைக்க வேண்டும்.

    நிச்சயம் ஆதிக்க மனப்பான்மையில் உள்ளவர்கள் எவரும் திருந்துவதாக தெரியவில்லை. கண்முன்னால் பார்த்துக கொண்டே தான் இருக்கின்றேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளே உருவாகும் வெஞ்சினம் அவர்கள் வளர்ச்சியை அவர்கள் சார்ந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அடுத்தவர்களை எத்தனை நாளைக்கு எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டு இருப்பது என்ற எண்ணம் உருவாக வேண்டும்.

    ஆனால் எதார்த்தம் கொடுமையாக இருக்கிறது. வளர்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு தனக்கு பின்னால் உள்ள வந்து கொண்டு இருக்கும் எவர் குறித்தும் அக்கறையில்லை. தன்னை பலவிதங்களில் மறைத்துக் கொண்டு வாழ்வதில் தான் குறியாக இருக்கிறார்கள் என்பதும் உண்மை.

    சில தினங்களுக்கு முன் விடுதலைச்சிறுத்தை பொதுக்குழு மாநாடு கூட்டியது. ஒருவர் பேசுகின்றார்.

    அரசாங்க வருமானத்திற்கு உதவும் மது வகையில் பெரும்பாலும் நம் இன மக்கள் அருந்துவது தான் என்கிறார். தலைவர்கள் பொறுப்பில் இருப்பவர்கள், தன் இன மக்களை காக்க அவதாரம் எடுத்துள்ளோம் என்று சொன்ன எவரும் இந்த இன மக்களை வளர்த்ததாக தெரியவில்லை. அரசாங்கம் கொடுக்கும் சலுகைகளை சரியாக உழைப்பின் மூலம் பயன்படுத்தி பலரும் மேலே வந்து விடுகின்றார்கள். ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு அந்த அக்கறை இல்லை என்பதும் உண்மை.

    நகர இடப்பெயர்ச்சி பாதி அளவுக்கு மாற்றம் கொண்டு வந்துள்ளது. என் பார்வையில் அடுத்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில் இன்னும் கூட மாறும். ஆனால் கொடுமை முற்றிலும் மறையுமா என்று தெரியாது? தமிழ்நாட்டை விட வட மாநிலங்களில் இந்த கொடுமை அதிகம்.

  7. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனுபவம் இருக்கலாம். நான் சிங்கை வந்து பல பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எங்கேயும் எனக்கு இந்தத் தீண்டாமை பற்றி தோன்றியதே இல்லை. என்னருகில் உட்காராமல் யாரும் எழுந்து சென்றதில்லை. சீனர்கள் யாரும் என்னிடம் தீண்டாமை கொண்டதே இல்லை.

    நான அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சாப்பாட்டுக்கடைகளில் உணவு உட்கொண்டுள்ளேன். எனக்கு எந்தவிதமான தீண்டாமைக் கொடுமையும் ஏற்படவில்லை. இன்னும் சொன்னால் நான் பலமுறை அவர்களை ஒதுக்கியுள்ளேன். இங்கே இருக்கும் வயதான சீனர்கள் மிகவும் பண்பாகவே பழகுகின்றனர். நீங்கள் நடந்துகொண்ட முறையில் ஏதாவது தவறு இருக்கலாம். நாம் டாக்சியில் தனியாக ஏறும்போது பின்சீட்டில் அமருவதைவிட முன்சீட்டில் அமர்ந்தால் அவர்களுக்குப் பிடிக்கும். ஏதாவது தவறு செய்துவிட்டு கையை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு தலை குனிந்தால் இங்கே தவறாகப் பார்க்கப்படும்.

    சிங்கப்பூர் இந்தியப் பெண்களில் சிலர், மற்றும் ஊர்க்கார இந்தியப் பெண்கள் மட்டுமே சக இந்தியர்களிடம் தீண்டாமையைக் கடைபிடிக்கின்றனர் என்று நண்பர்கள் கூறுவர். எனக்கு அதுகூட ஏற்பட்டதில்லை. உங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவத்தைப் பொதுமைப் படுத்தவேண்டாம். நாம் நடந்துகொள்ளும் நிலையால் சிலர் நம்மை ஒதுக்கக் கூடும்.

    இந்தியாவில் இருப்பதுபோன்று தீண்டாமை உணர்வு இங்கே அவ்வளவாக இல்லை.

    இறுதியாக, இங்கிருக்கும் அனைத்து இன இளையர்களும் இந்தியர்களின் படையெடுப்பை விரும்பவில்லை.

  8. தல,
    என்ன இவ்வளவு சீரியஸ் சா ஒரு பதிவு
    இந்த சீரியஸ் பதிவுல கூட உங்க எழுத்து நடை அழகா இருக்கு கிரி 🙂

    உங்க கருத்துகள் ரொம்ப நியாமான விஷயம்
    – அருண்

  9. .ƒ¡¾¢ ¾£ ´Æ¢Â§ÅñÎÁ¡Éø ƒ¡¾¢Â¡Ç÷¸û ¾ý ¿¢¨Ä¨Â Á¡üÈ¢¦¸¡ûǧÅñÎõ. ¸¨Ä ±ýÈ ¦ÀÂáø ¦ºò¾ÅÛìÌ §ÁÇõ «Êò¾¡ø À¨ÈÂý ±ýÈ ¦ÀÂ÷ ±ôÀÊ §À¡Ìõ. ÀÄ °÷¸Ç¢ø À¨È¨Â þÉ¢ Å¡ú쨸¢ø ¦¾¡¼Á¡ð§¼ý ±ýÚ Á¡üÚ ¦¾¡Æ¢ÖìÌ ¦ºýÚ Í¸Á¡¸ ¦¸ªÃÅÁ¡¸ Å¡ú¸¢È¡÷¸û.¯Â÷ƒ¡¾¢ì¸¡ÃÛìÌ ÀÂóЦ¸¡ñÎ þýÛõ ±ò¾¨É ¿¡ð¸ÙìÌ ¿õ¨Á ¿¡§Á «º¢í¸ÀÎò¾¢ì¦¸¡ûǧÅñÎõ ±ýÀ¨¾ ¯½Ã¡¾Å¨Ã þó¾ ƒ¡¾¢ ´Æ¢Â¡Ð. Å¡öôÒ ¸¢¨¼ò¾¡ø Ìô¨À «ûÙ¾ø ÁÄõ «øÖ¾ø Å£¾¢ Üðξø ±øÄ¡ÅüȢĢÕóÐõ ÀÊôÀÊ¡¸ ¦ÅÇ¢§ÂȢɡø ÁðΧÁ ƒ¡¾¢ ´Æ¢Ôõ.þó¾ ¦¾¡Æ¢¨Ä ¡÷ ¦ºöÅÐ ±ýÈ ¸Å¨Ä §Åñ¼¡õ. ¡§Ã¡¦ºöÂðÎõ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here