நடுநிசி நாய்கள் (2011) | சைக்கோ த்ரில்லர்

15
Nadunisi Naaygal நடுநிசி நாய்கள்

மீபத்தில் அதிகம் திட்டு வாங்கிய படம் அநேகமாக “நடுநிசி நாய்கள்” படமாகத் தான் இருக்கும் 🙂 . அந்த அளவிற்கு பலர் திட்டித் தீர்த்து விட்டார்கள்.

அதற்குக் காரணம் இதை ஒரு சைக்கோ த்ரில்லராகப் பார்க்காமல் வழக்கமான கண்ணோட்டத்தில் படம் பார்த்ததே ஆகும்.

நடுநிசி நாய்கள்

பலர் தங்கள் எதிர்பார்ப்பு அல்லது தங்களது ரசனையைவிட வேறு மாதிரி படம் இருந்தால் உடனே படம் குப்பை வன்முறை என்று பலவாறு திட்டி விடுகிறார்கள் 🙂 .

அதோடு தங்கள் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கவும் செய்து விடுகிறார்கள்.

இதைப்போலப் படங்களைத் தமிழ்நாட்டில் வெளியிட இன்னும் காலம் எடுக்கும் கவுதம் கொஞ்சம் ஆர்வக்கோளாரில் முன்பாகவே எடுத்து விட்டார் 🙂 .

தந்தையின் தவறான வளர்ப்பினால் பாலியல் தொந்தரவிற்கு ஆளாகும் சிறுவன் மனச்சிதைவுக்கு ஆளாகி கொலைகளையும் வன்புணர்வுகளையும் செய்கிறான்.

முடிவில் என்ன ஆகிறது என்பதே கதை.

வீரா

மனச்சிதைவிற்கு ஆளான நபராகக் கவுதமின் உதவியாளர் வீரா நடித்து இருக்கிறார். குறையேதும் கூற முடியாத அளவிற்கு தன் கதாப்பாத்திரத்தைச் செய்து இருக்கிறார்.

அந்நியன் போல ஸ்ப்லிட் பர்சனாலிட்டி.  அவர் மீது வெறுப்பு வரும் அளவிற்கு சிறப்பாகச் செய்து இருக்கிறார்.

சிறுவயதில் வீரா கதாப்பாத்திரத்தைக் காட்டுவது நிச்சயம் பள்ளி செல்லும் வயதிற்கு பொருத்தமானதாக இல்லை அதோடு கேவலமான விக் வேறு.

இவ்வளவு பெரிய பையன் பள்ளி செல்கிறான் என்று எந்த அர்த்தத்தில் காட்டினார்கள் என்று புரியவில்லை.

மீனாட்சி

வீராவின் வளர்ப்பு அம்மாக வரும் மீனாட்சியின் நடிப்பு அருமை. இதற்கு முன் வேறு எதுவும் படத்தில் நடித்து இருக்கிறாரா! ரொம்ப அழகாகவும் இருக்கிறார்.

துவக்கத்தில் அமைதியாகவும் அன்பாகவும் வருபவர் பின் வரும் காட்சிகளில் அதிரடியாக மிரட்டி இருக்கிறார்.

திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பவர் அவருடைய கல்லூரி நண்பர் பல முறை கேட்டும் ஒத்துக்கொள்ளாதவர் பின் திருமணத்திற்கு ஒத்துக்கொள்வதுக்கு எனக்கு இரண்டு காரணம் புரிந்தது.

இரண்டுமே என்னைப் பொறுத்த வரையில் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது. எனக்கு இவரை ரொம்ப பிடித்து இருந்தது ஏன் என்று தெரியவில்லை.

வீரா ‘மீனாட்சியம்மா! மீனாட்சியம்மா!!‘ என்று கூறுவது வித்யாசமாக உள்ளது ஆனால், இப்படிக் கூறி விட்டு அவர் செய்தது உறுத்தலாக இருக்கிறது.

இருப்பினும் மீனாட்சி பற்றிய தன் எண்ணத்தை முதலிலேயே கூறி விடுவதால் முரண்பாட்டுடன் ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

த்ரில்லர் படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில் ஒரு பிரச்சனை ரசித்த அல்லது பிடிக்காத காட்சியை வெளிப்படையாகக் கூற முடிவதில்லை.

காரணம் அந்தக்காட்சியின் சஸ்பென்சை கூற வேண்டி வருவதால்.

ஏமாற்றப்படுவது

இணையம் மற்றும் பல்வேறு விசயங்களில் பெண்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் எவ்வாறு உஷாராக இருக்க வேண்டும் என்பதை விளக்கி இருக்கிறார்கள்.

இதில் கூறியுள்ளவை யாவும் தற்போதைய காலக்கட்டங்களில் நடக்க ஏராளமான வாய்ப்புள்ளது. சமீராவும் வீராவால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணாக வருகிறார்.

பாடல்கள் இல்லை, பின்னணி இசை இல்லை ஆனால், அது உறுத்தலாக இல்லை.

பாடல்கள் இல்லாமல் படங்கள் வந்ததுண்டு ஆனால், இதைப்போலப் பின்னணி இசை இல்லாமல் (உண்டு ஆனால் மிகமிகக் குறைவு) வந்ததில்லை.

ஒளிப்பதிவும் த்ரில்லர் படங்களுக்கே உரிய வித்யாசமான காட்சியமைப்புடன் எடுக்கப்பட்டுள்ளது. ஏமாற்றம் தரவில்லை.

முடிவாகத் தமிழில் ஒரு நல்ல முயற்சி ஆனால், காலம் கடந்த முயற்சி என்று ஒரு சிலவற்றை குறிப்பிடுவார்கள் இதில் அது ரிவர்சில் வருகிறது ஆமாம் இது தற்போதைய மக்களின் ரசனைக்கு ஏற்றப் படமல்ல.

இக்கதையைக் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மக்கள் இன்னும் பக்குவப்படவில்லை. அதனாலே திட்டி விமர்சனங்கள் வருகிறது.

சைக்கோ த்ரில்லரில் வேறு என்ன இருக்கும் என்று எனக்குப் புரியவில்லை. மற்றபடி என்னளவில் அருமையான சைக்கோ த்ரில்லர் படம் தமிழில். வாழ்த்துக்கள் கவுதம்.

கவுதம் படங்களை ரசிப்பவராக இருக்கலாம் ஆனால், அவரது VTV, வாரணம் ஆயிரம், மின்னலே படங்கள் போல இருக்கும் என்று சென்று விடாதீர்கள், ஏமாற்றமே மிஞ்சும்.

சைக்கோ த்ரில்லர் படங்களை ரசிப்பவர் என்றால் தவறவிடக்கூடாத படம்.

சரியான கண்ணோட்டம்

முடிவாக ஒருபடத்திற்கு செல்கிறீர்கள் என்றால் அந்தப்படத்தைப் பற்றிய கண்ணோட்டத்தோடு செல்லுங்கள்.

மசாலா படத்துல உலகப்படத்தை தேடுவது, பேய் படத்துல போய் லாஜிக் பார்ப்பது, சென்டிமென்ட் படத்துல போய் நகைச்சுவை மற்றும் சண்டையே இல்லை என்று புலம்புவது என்ன நியாயம் என்று புரியவில்லை.

வேலு மிலிட்டரி உணவகத்தில் சரவண பவன் சுவையைத் தேடாதீர்கள். படத்தின் கதைக்கரு என்னவென்று புரிந்து, இது நமக்கு ஏற்றதா நம் ரசனைக்கு ஒத்து வருமா என்று தீர்மானித்துச் சென்றால் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம்.

என்னால் அனைத்து வகைப்படங்களையும் ரசிக்க முடிகிறது.

மகிழ்ச்சி, சோகம், சைக்கோ, சண்டை, விண்வெளி, நகைச்சுவை, மசாலா, வன்முறை, அழுகை, ஹாரர், பேய், போர், த்ரில்லர்கருப்பு வெள்ளை என்று அனைத்தும்.

Directed by Gautham Menon
Produced by Kumar, Jayaraman, Madan
Written by Gautham Menon
Starring Veera Bahu, Sameera Reddy, Deva
Cinematography Manoj Paramahamsa
Release date(s) 18 February 2011
Running time 110 minutes

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

15 COMMENTS

  1. ///தமிழ் திரைப்பட ரசிகர்கள் இதைப்போல படங்களை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இன்னும் வரவில்லை//
    correct 🙂

  2. நான் போகபோறது இல்ல .தல .எனக்கு இந்த மாறி கதைகள் ஒத்து வராது .

  3. //ஒருபடத்திற்கு செல்கிறீர்கள் என்றால் அந்தப்படத்தைப் பற்றிய கண்ணோட்டத்தோடு செல்லுங்கள்”// அடேங்கப்பா !!!

    நல்ல வேளை இந்த கதையை கமல் எடுக்கலை.

    அவரு மட்டும் இதை எடுத்து இருந்தாருன்னா, கமல் படம் என்ற ஒரே காரணத்துக்காகவே, அவரை வக்கிரம் பிடிச்சவர்னு ஒட்டி ஒழிச்சி இருப்பீங்க.

    • பாமரன் சார் .. இதை கமல் 10 வருசத்திற்கு முன்னாடியே எடுத்திட்டார்…
      சிவப்பு ரோஜா….. புதுசா ட்ரை பன்னுரதுல கமல அடிச்சிக்க ஆளே இல்ல

      • ஆனந்த் சார், 10 வருஷம் இல்லே, சிகப்பு ரோஜாக்கள் வந்தது 30 வருஷத்துக்கு முன்னாலே. நீங்க சொன்னது மாதிரி, காலத்தை முந்தி படம் செய்வது கமல் தான். ஆனா அதை பாராட்ட தான் இங்கே யாருக்கும் மனசு இல்லை. ராஜ பார்வை வந்த போது பாராட்ட யாரும் இல்லை, ஆனா இப்போ விக்ரம் ‘காசி’ செஞ்சா ‘ஆஹா… ஓஹோ’ தான். குணா செஞ்சா அது பெரிசில்லை, ஆனா இப்போ ‘நந்தலாலா’ உலகப் படம். பேசும் படம்னு, ஒரு வார்த்தை கூட பேசாமலே ஒரு முழு படம் செஞ்சாரு, இது வரைக்கும் அது மாதிரி செய்ய யாருக்கும் தைரியம் இல்லே. மைக்கேல் மதன காமராஜன் படத்துலே climax லே நாலு கமலும் ஒரே இடத்துலே, ஒரே மாதிரி கெட் அப்ல இருந்தாலும், நாலு கதாபாத்திரத்துக்கும் தன் நடிப்பலேயே வித்தியாசம் காட்டுவாரு. இப்போ இருக்கறவங்க ஒருத்தரை செய்ய சொல்லுங்க பாப்போம்?

        ஒரு விஷயம் என்னன்னா, கமல் படம் வந்தா நிறைய பேரு கையில கத்தியோட காத்துகிட்டு இருப்பாங்க. கொஞ்சம் சறுக்குனா மாதிரி தெரிஞ்சா கூட போறும், குத்தி, கிழிச்சி, ரணகளமாக்கி, அடுத்து எப்போ அப்படீன்னு கொலை வெறியோட அலைவாங்க.

  4. கிரி சார் …

    என் ப்ரண்டு எனக்கு போன் பண்ணுன மீனாட்சியம்மா எங்க இருக்கீங்க …
    மீனாட்சியம்மா…. சாப்டிங்களா
    மீனாட்சியம்மா…. காபி குடிசிங்களா னு காலைகிறான்

  5. பிப்ரவரி 14 வந்தாலே அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்து விடும்.வழக்கம்போல நம்ம ஊரில் ஆதரவாக பலரும் எதிர்ப்பாக நாய்க்கு திருமணம்!! செய்வது என்று காமெடி செய்யக்கிளம்பி விடுவார்கள். வெளிநாடுகளில் இந்த நாளில் ஏதாவது சாதனை செய்யப்படும். இந்த முறை தாய்லாந்தில் ஒரு ஜோடி 46 மணி நேரம் தொடர்ந்து உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து உலக சாதனை செய்து இருக்கிறது. இதற்கு முந்தைய சாதனை 32 மணி நேரமாம். அடப்பாவிகளா! எப்படியா இவ்வளோ நேரம் முத்தம் கொடுத்தீங்கன்னு! தலை சுத்துது. நாறிப்போய் இருக்குமே! என்ன கொடுமை சார்! நீங்க யாராவது இதைப்போல முயற்சி செய்ய தயாராக இருக்கீங்களா! அட போங்க தம்பி இஎதல்லாம் ஒரு பொழப்பா

  6. சுதர்சன், மாணவன், சுனில், பாமரன், ஆனந்த், Tweety, Breeze மற்றும் சுரேஷ் வருகைக்கு நன்றி

    @பாமரன் இங்கே கமல் பற்றி எதுவும் தவறாக கூறவில்லையே. ஏன் தேவையில்லாமல் டென்ஷன் ஆகுறீர்கள்? ஒழிச்சு இருப்பீங்க என்று என்னையும் சேர்த்து கூறுவதால்… நான் அதைப்போல அர்த்தம் இல்லாமல் எழுதும் சராசரி ரசிகன் அல்ல. இதுவரை அப்படி எதுவும் எழுதியதுமில்லை. கமலுக்கு என்றில்லை எவருக்கும்.

    தேவையில்லாமல் இங்கே கமலை இழுத்து அதற்கு வேறு யாராவது நக்கலாக கமென்ட் அடித்து நீங்களே கமலை பிரச்னைக்கு உள்ளாக்காதீர்கள்.

    //நல்ல வேளை இந்த கதையை கமல் எடுக்கலை. அவரு மட்டும் இதை எடுத்து இருந்தாருன்னா, கமல் படம் என்ற ஒரே காரணத்துக்காகவே, அவரை வக்கிரம் பிடிச்சவர்னு ஒட்டி ஒழிச்சி இருப்பீங்க.//

    என்னமோ கவுதம் மேனனை எல்லோரும் பாராட்டிட்டு இருக்கிறது மாதிரி சொல்றீங்க.. அவரை எல்லாம் அடிச்சு துவைத்து காயப்போட்டுட்டாங்க.

    எனக்கும் கமல் பிடித்தவர் தான் ஒரு சில கருத்துகளில் உடன்பாடில்லை அவ்வளோ தான். அவருடைய ஒரு படம் (புதுப்படமல்ல) விரைவில் விமர்சனம் எழுதுவேன் படித்து விட்டு எப்படி எழுதி இருக்கிறேன் என்று கூறுங்கள் 🙂

    @ஆனந்த் 🙂 மீனாட்சியம்மா பெயர் பிரபலம் ஆகி விட்டது உண்மை தான்.

    @சுரேஷ் இதே பிழைப்பா இருக்கிறவங்களும் இருந்துட்டு தான் இருக்காங்க 🙂

  7. இங்க படம் இன்னும் ரிலீஸ் ஆகலை… ஆகாது. டி‌வி‌டி பிரிண்ட் வர்ற வரை வைட் செய்யண்டி…

  8. நல்ல வேள, நான் இன்னும் பாக்கல. எனக்கு இந்த மாதிரி ஓவர் வயலண்ட்டான படம் சுத்தமா பிடிக்காது. நம்ம மக்கள் இன்னும் இந்த மாதிரி படத்த பாத்துப்பழக ரொம்பவே நாள் ஆகும். அது மட்டுமில்லாம, நம்ம மக்கள் படத்தோட genre பாத்துட்டு படம் பாக்குற ஆளுங்க கெடையாது – ஹீரோ, இயக்குனர் தான் அவங்கவங்க முந்தின படங்ககலோட தாக்கத்துல மக்கள தியேட்டருக்கு கூட்டிட்டு வராங்க. அந்த வகையில கவுதம் இத்தன நாள் எடுத்த படத்துக்கும், இதுக்கும் இப்பிடி சம்பந்தமில்லாம இருந்தா மக்கம் நிச்சயமா விரும்ப மாட்டாங்க. இவர் அடுத்த படத்துலயும் இப்பிடி பண்ணினார்னா, நிச்சயமா அவர தூக்கி எறிஞ்சிடுவாங்க. என்னோட கருத்து என்னன்னா, நம்மள சுத்தி நடக்குற எதிர்மறை விஷயங்கள வயலன்ஸ்/வல்கர் இல்லாம காட்டனும், அதுவும் அப்படி செய்யுற கேரக்டர நிச்சயம் ஹீரோவா காட்டக்கூடாது.

    @ கொசுறு 1: LOL
    @ கொசுறு 2: உவ்வே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here