கும்கி (2012)

8
கும்கி

மீப காலங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று “கும்கி”. Image Credit

இந்த எதிர்பார்ப்புப் பாடல்கள் வெளியாகித் தாறுமாறாக ஹிட் அடித்த பிறகு இன்னும் அதிகம் கூடியது. ஒரு பிரபல நடிகரின் படத்திற்கு உண்டான எதிர்பார்ப்பு பலருக்கு இருந்தது.

கும்கி

கதை, விக்ரம் பிரபு தன்னுடைய யானை “மாணிக்கத்தை” திருமணம், திரைப்படம் மற்றும் கோவில்கள் ஆகிய இடங்களில் வைத்துப் பிழைப்பு நடத்துபவர்.

தனது உயிரினும் மேலாக யானையின் மீது பாசம் காட்டுபவர். இவருடன் துணையாக மாமாவாக தம்பி ராமையா மற்றும் ஒருவர் (பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் வருபவர்).

விக்ரமுக்கு தெரிந்த ஒருவர், ஒரு கிராமத்தில் அட்டகாசம் செய்யும் காட்டு யானையை அடக்கக் கிராமத்தினர் வேண்டுகோளுக்காக ஒரு கும்கி யானையை ஏற்பாடு செய்கிறார்.

ஆனால், குறித்த நேரத்தில் அவர்கள் வர முடியாததால் அப்போதைக்கு சமாளிக்க இரண்டு நாள் தானே என்று விக்ரம் அந்தக் கிராமத்திற்கு செல்கிறார். விக்ரம் யானை கும்கி கிடையாது. போலியாக செல்பவர்கள் நிலை இறுதியில் என்ன ஆகிறது என்பதே கும்கி படம்.

குறிப்பு: காடுகளிலிருந்து வந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை, மனிதர்களால் பழக்கப்பட்ட யானைகள் மூலம் விரட்டியடிக்கவோ / கட்டுப்படுத்தவோ உள்ள யானையின் பெயர் தான் கும்கி.

விக்ரம் பிரபு

விக்ரம் பிரபுக்கு (பிரபுவின் மகன்) இது முதல் படம் என்றாலும் அது போல எங்கேயும் தெரிந்து விடாமல் சிறப்பாக நடித்து இருக்கிறார்.

யானைப் பாகன் கதாப்பாத்திரத்திற்கு அம்சமாக பொருந்துகிறார்.

இவரது உயரமும், கொஞ்சம் சீரியசான முகத் தோற்றமும் இவருக்கு நன்கு பொருந்துகிறது. எந்தவித அலட்டலும் இல்லாமல் மிக அழகாக நடித்து இருக்கிறார். முதல் படம் போலவே இல்லை.

லக்ஷ்மி மேனன்

இவர்கள் செல்லும் மலை கிராமத்தில் உள்ள தலைவரின் மகள் லக்ஷ்மி மேனன்.

இவருக்கு கும்கி தான் முதல் படம் என்றாலும் இதன் பிறகு நடித்த சுந்தர பாண்டியன் படம் முதலில் வெளிவந்து விட்டது.

யானை என்றாலே அலறும் இவருக்கு மாணிக்கத்தின் ஒரு நடவடிக்கை யானையின் மீது நம்பிக்கையை வரவழைத்து அதன் மீது அன்பாக இருக்கிறார்.

ஒப்பனை எதுவும் இவருக்கு போடவில்லை.. அப்படியே இருக்கிறார்.

பாடல்கள்

படத்தில் பாடல்கள் ஏற்கனவே செம ஹிட் ஆகி விட்டதால் ஒவ்வொரு பாடலுக்கும் திரையரங்கில் பலத்த ஆராவாரம்.

அதிலும் “சொல்லிட்டாளே காதல” மற்றும் “சொய் சொய்” பாடல் வரும் போது திரையரங்கம் அதிருகிறது.

பாடல் படமாக்கப்பட்ட விதம் ரொம்ப அருமை, தாறுமாறாக இருக்கிறது. கும்கி படத்தின் ஒரு ஹீரோ என்று இசையமைப்பாளர் இமானை தாராளமாகக் கூறலாம்.

ஒவ்வொரு பாடலும் பட்டையக் கிளப்புகிறது.

நான் எத்தனை முறை கேட்டேன் என்று கணக்கே எடுக்க முடியாத அளவிற்கு அவ்வளவு முறை கேட்டு இருக்கிறேன்.

இதனால் படத்தில் பார்க்கும் போது ஒவ்வொரு பாடலும் அவ்வளவு அருமையாக இருக்கிறது.

இரண்டு பாடலில் முழுப் பாடலாக தொடர்ந்து வராமல் இடைவெளி விட்டு வருவது கொஞ்சம் நம் ஆர்வத்தை குறைக்கிறது.

நல்ல பாடலை ரசிக்கும் போது இடையில் தடை வந்ததால் கடுப்பாக இருந்தது.

கேரளா மற்றும் பல காட்டுப்பகுதிகளில் எடுத்ததாக படித்து இருந்தேன். படம் பார்க்கும் நாமும் இவர்களுடன் ட்ரக்கிங் சென்று வந்தது போல உள்ளது.

போக்குவரத்து நெரிசல், புகை, நகரப் பரபரப்பு என்று எதுவும் இல்லாமல் இயற்கையோடு பயணித்து வரும் உணர்வு.

ஒளிப்பதிவு

சுகுமார் ஒளிப்பதிவு அருமை, எங்குக் காணினும் பச்சை பசேல்னு இருக்கு. இதைப் பார்க்கவே நிச்சயம் படத்திற்கு செல்லலாம்.

பெரிய திரையுள்ள திரையரங்கில் பார்த்தால் கலக்கலாக இருக்கும்.

படம் சிறப்பாக எடுக்கப்பட்டு இருந்தாலும் இறுதி வரை எந்தத் திருப்பமும் இல்லாமல் படம் செல்வது சலிப்பை வரவைக்கிறது (அவன் இவன் படம் போல), படம் துவங்காதது போலவே உணர்வு.

இறுதியில் “மாணிக்கம்” யானை, காட்டு யானையைச் சமாளிக்க பயன்படுத்தி இருக்கும் ட்விஸ்ட் செம.

நான் கூட ஏதாவது மொக்கையாக செய்து விடுவார்களோ என்று நினைத்து இருந்தேன்.

அதைச் சமாளிக்க சரியான காரணத்தை வைத்து கலக்கலாக கொண்டு சென்று இருந்தார் இயக்குனர் பிரபு சாலமன்.

தம்பி ராமையா

படத்தில் முக்கியமானவர்கள் யானை “மாணிக்கம்”, விக்ரம் பிரபு, இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் சுகுமார் என்றால் இவர்களுடன் கலக்குபவர் தம்பி ராமையா.

இவர் படத்திற்கு மிகப்பெரிய பலம். துவக்கத்திலிருந்து இறுதிவரை காமெடி கலக்கி இருக்கிறார்.

மைண்ட் வாய்சில் நினைக்கும் போதும், இவர் காட்டு யானையை நினைத்துக் கலவரத்தில் இருக்க, அந்தக் கிராமத்து நபர்களோ இவருடைய வீரத்தை மெச்ச.. இதற்கு அவர் கொடுக்கும் முக பாவனைகள் அருமை 🙂 .

நிறைய டைமிங் காமெடி.

இவருடைய காமெடி வடிவேல் காமெடியை நினைவு படுத்துகிறது. இவர் காட்டு யானையை நினைத்துப் பயத்தில் இருப்பார்.

இவர்களை அந்தக் கிராமத்தினர் அழைத்துச் செல்ல வரும் போது ஒருவரின் பெயரைக் கேட்க அவர் “பூகம்ப சாமி” என்றவுடன்…. ஆரம்பத்துலையே “எர்த் க்வேக்கா” என்று தம்பி ராமையா கூறுவதில் ஆரம்பித்துப் படம் முழுக்க சிரிப்பு வெடி தான் 🙂 .

க்ளைமாக்ஸ் எவ்வளவோ நன்றாக முடித்து இருக்க வாய்ப்பு இருந்தும் பிரபு சாலமன் ஏன் இந்த முறையைத் தேர்ந்தெடுத்தார் என்று தான் புரியவில்லை.

கடைசிக் காட்சி மொத்தப் படத்தையும் காதலையும் கேள்வி குறியாக்கி விடுகிறது.

இந்தக் காட்டு யானையைச் சாமாளிக்க பயன்படுத்திய ஐடியாவை க்ளைமாக்ஸ்க்கு கொஞ்சம் யோசித்து செய்து இருந்தால் படம் ஓரளவு சரி ஆகி இருக்கும்.

மைனாவில் க்ளைமாக்ஸ் சோகமாக இருந்தாலும் அதற்கு நியாயம் இருந்தது.

இதில் அப்படி வைக்க வேண்டிய எந்தக் கட்டாயமும் இல்லை. வெண்ணிலா கபடிக் குழு படத்தின் முடிவைப் பாசிடிவாக வைத்து இருக்க வாய்ப்பு இருந்தும் சோகமாக முடித்து இருந்தார்கள்.

அந்தப்படம் பார்த்த போது இறுதியில் என்ன நினைத்தேனோ அதே தான் கும்கிக்கும் நினைத்தேன்.

படம் முடிந்தும் அடுத்தது ஏதாவது வரும் என்று எதிர்பார்க்கும் மக்களின் எதிர்பார்ப்பே இதைக் கூறும்.

Directed by Prabu Solomon
Produced by N. Lingusamy, N. Subash Chandra Bose
Screenplay by Prabu Solomon
Story by Prabu Solomon
Starring Vikram Prabhu, Lakshmi Menon
Music by D. Imman
Cinematography Sukumar
Studio Thirupathi Brothers
Distributed by Studio Green
Release date(s) 14 December 2012

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

  1. பொதுவா திரைப்பட விமர்சனங்களை விரும்பி படிப்பதில்லை. ஆனால் நீங்க எடுத்துக் கொண்ட விசயத்தில் காட்டுகின்ற நேர்த்தியும் அழகும் முழுமையாக படிக்க வைத்து விடுகின்றது.

  2. படம் இன்னும் பார்க்கவில்லை. இந்த வாரத்தில் பார்த்து விடுவேன். கும்கி பெயரே வித்தியாசமாகவும் அருமையாகவும் உள்ளது. கும்கி பெயர் விளக்கத்திற்கு நன்றி.. லீ படத்தை பார்க்கும் போதே என் நண்பன் ஒருவன் கூறினான் ” நிச்சயம் பிரபு சாலமன் சிறந்த இயக்குனராக வருவார்” என்று.. எதை வைத்து கூறினான் என்று தெரியவில்லை ஆனால் இன்று அந்த வார்த்தை மெய்படுவதாக உணர்கிறேன்.. வன்முறை, பாலியல், சமூக நலன் பாதிக்கும் வகையில் எடுக்கும் படங்களுக்கு மத்தியில் இயற்கையை காதலிக்கும் இது போன்ற யதார்தனமான படங்களின் வருகை நிச்சயம் பாரட்டவேண்டிய ஒன்று.. விமர்சன பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. படம் பார்த்தாச்சு.. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது கிளைமாக்ஸ் CG யைத்தவிர. நான் ஈ பண்ணின நம்மநாட்டு CG யா இது ?

  4. Climax தான் கொஞ்சம் மொக்கையா இருந்திச்சி.
    ரெண்டு யானைக்கும் வித்தியாசம் கண்டு புடிக்கமுடியல. director changed the sequence later I guess. okay.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here