ஜோதா அக்பர் | அழகான இந்து முஸ்லிம் காதல் கதை

11
Jodhaa Akbar ஜோதா அக்பர்

ஜோதா அக்பர் படத்தை விமர்சனமாக இல்லாமல் அனுபவமாக, நான் ரசித்தவையை எழுதுகிறேன்.

அக்பர் பற்றி நாம் பள்ளியில் படிக்காமல் கடந்து வந்து இருக்க முடியாது.

அசோகர் மரங்களை நட்டார் என்பதை எப்படி அனைவரும் படித்தோமோ அதே போல இஸ்லாம் மதத்தை சேர்ந்த அரசராக இருந்தாலும் அனைத்து மதங்களையும் அரவணைத்து சென்ற அரசர் என்ற பெயர் அக்பருக்கு உண்டு.

இதில் அவருடைய ஒரு பகுதியை மட்டும் படமாக்கி இருக்கிறார்கள் அதுவும் மிக சுவாரசியமாக 🙂 .

ஜோதா அக்பர் படத்தை ரொம்ப ரசிக்க மிக முக்கியக் காரணம், இதனுடைய தமிழ் டப்பிங் கிடைத்ததாகும். முழுமையாக ரசிக்க முடிந்தது.

ஜோதா அக்பர் – பொருத்தமான ஜோடி

அக்பராக ஹ்ரிதிக் ரோஷன் ஜோதாவாக ஐஸ்வர்யா. இதை விட சிறந்த தேர்வு இருக்க முடியுமா?!

நிஜ அக்பரும் ஜோதாவும் (இவருக்கு வரலாறில் பலர் பெயர்கள் கூறப்படுவதாக துவக்கத்திலேயே கூறி விடுகிறார்கள்) வந்தால் கூட படம் பார்க்கிறவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் போல உள்ளது.

அந்த அளவிற்கு இந்தக் கதாப்பாத்திரத்திற்கு அட்டகாசமாக பொருந்துகிறார்கள்.

பாபரின் பேரன் ஹிமாயுனின் மகன் அக்பர். அக்பர் சிறுவயதாக இருக்கும் போதே ஹிமாயுன் இறந்து விடுகிறார்.

அக்பரை பைரம்கான் வளர்த்து மொகலாய பேரரசை விரிவுபடுத்த உதவுகிறார். இவற்றை பள்ளியில் படித்து இருப்பீர்கள்.

ரஜபுத்திரர்கள்

இந்துக்களான ரஜபுத்திரர்கள் பலர் அக்பருக்கு அடி பணிய மறுக்கிறார்கள்.

போரை விரும்பாத ரஜபுத்திரரான ஜோதாவின் தந்தை தனது மகளான ஜோதாவை அக்பருக்கு மணமுடித்து இணக்கமாக போக விரும்பி அக்பரை கேட்கிறார்.

அக்பரும் சம்மதித்து ஜோதாவை திருமணம் செய்கிறார்.

இதன் பிறகு இவர்கள் திருமண வாழ்க்கையைப் பற்றி கூறுவதே “ஜோதா அக்பர்”, உடன் சில கிளைக்கதைகள்.

ஹ்ரிதிக்

அரசனுக்கு பொருத்தமான தேர்வு ஹ்ரிதிக்.

இவரைப்போல நம்ம ஊரில் (ரஜினி கமல் தவிர) வேற யார் பொருந்துவார்கள் என்று யோசித்துப் பார்த்தேன் விக்ரம், சூர்யா தவிர வேறு யாரும் தோன்றவில்லை.

அசத்தல் என்றால் அசத்தல் அப்படியொரு நடிப்பு.

ஒரு அரசனாகவே வாழ்ந்து இருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

தமிழ்ப் டப்பிங்கில் இவருக்கு குரல் கொடுத்து இருப்பவர் அசத்தி இருக்கிறார்.

ஹிந்தி ஹ்ரிதிக் குரலை விட தமிழில் நன்றாக உள்ளது 🙂 .

கோபப்படும் போதும் காதலால் கசிந்துருகும் போதும் ஹ்ரிதிக் இடம் இவ்வளவு திறமை இருக்கிறதா! என்று வியப்படைய வைக்கிறார்.

சிறந்த நடிகரை வெறும் மசாலா நடிகராகவே முன்னிறுத்துவது வருத்தம் அளிக்கிறது.

ஐஸ் சாதாரணமாகவே ராணி போல இருப்பார், ராணி உடையில்… என்னமோ போங்க! 🙂 ஐஸ் ஒரு அற்புதம்.

சிலருக்கே இது போல அழகான முகம் உடலமைப்பு அமையும்.

கடவுள் கொடுத்த வரம் என்று தான் கூற வேண்டும். யாரிடமும் இல்லாத ஒரு விஷயம் ஐஸ் கிட்ட இருக்கு பலரும் கவனித்து இருப்பீர்கள்.

ஐஸ் டூ பீஸ் உடையில் வந்தால் கூட அசிங்கமாக இருக்காது 🙂 இது எப்படி என்றே புரியவில்லை.

கவர்ச்சியாக இருக்கும் ஆனால், ஆபாசமாக இருக்காது. இது போல எத்தனை பேருக்கு கிடைக்கும்!!

இளவரசி, மகாராணி என்பதால் உடைகள் ஒவ்வொன்றும் பட்டையைக் கிளப்புகிறது. அழகு தேவதை போலவே இருக்கிறார்.

பிரம்மா இவருக்கு மட்டும் அதிக நேரம் எடுத்து இருப்பாரோ! அல்லது அந்த நேரத்தில் ரொம்ப ஜாலியா இருந்து இருப்பாரோ! 🙂 .

மொகலாயா அரசர் அக்பர் முஸ்லிம் ரஜபுத்திர பெண் ஜோதா இந்து.

அக்பர் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டவுடன் அக்பருக்கு இரு நிபந்தனைகள் ஜோதா விதிப்பார். அக்பர் ஏற்றுக்கொண்டால் திருமணத்திற்கு சம்மதம் என்று கூறுகிறார்.

இரு நிபந்தனைகள்

  1. தன் மத சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு நடவடிக்கைகளுக்கு தடை போடக்கூடாது தன் விருப்பம் போல இருக்க அனுமதிக்க வேண்டும். தன்னை இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறும் படி கட்டாயப்படுத்தக் கூடாது.
  2. தனது அந்தப்புரத்தினுள் கோவில் கட்டிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

இவையே அந்த நிபந்தனைகள்.

இவரின் தைரியமான வெளிப்படையான கோரிக்கைகள் அக்பரை கவர்ந்து, நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார்.

முதலிரவில் திருமணத்திற்கு ஒப்புகொண்டாலும் இல்லற வாழ்வில் இணைய மனம் ஒப்பவில்லை என்று அக்பரை தொட மறுத்து விடுகிறார்.

அக்பரும் புரிந்து கொண்டு “மணமுறிவு செய்து கொள்ள இஸ்லாம் பெண்களுக்கு உரிமை அளிக்கிறது என்னை பிடிக்கவில்லை என்றால் விலகி விடலாம் யாரும் எதுவும் கூற மாட்டார்கள்” என்று கூறுகிறார்.

அதற்கு ஜோதா “உங்கள் மரபு அவ்வாறாக இருக்கலாம் எங்களுக்கோ ஏழு ஜென்மத்திலும் பிரிக்க முடியாத பந்தம்” என்று கூறி விடுகிறார்.

மத குருமார்கள் எதிர்ப்பு

இவர்களது திருமணத்திற்கு அக்பரது அரசவையில் உள்ள மத குருமார்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

எப்படி ஒரு இந்துப் பெண்ணை மணக்கலாம் நமது சாம்ராஜ்யத்தை வலிமைப் படுத்த வேறு வழியே இல்லையா?

நமது இடத்தில் கோவில் கட்ட ஏன் அனுமதிக்கிறீர்கள் என்கிறார்கள் ஆனால், அக்பர் இதில் எந்த தவறும் இல்லை என்று கூறி விடுகிறார்.

நான் இந்து என்பதால், இதன் பிறகு ஜோதாவின் பார்வையிலேயே படம் பார்க்க ஆரம்பித்தேன் 🙂 ரொம்ப சுவாரசியமாக இருந்தது.

அக்பர் அரண்மனை

ஜோதா முதன் முதலில் அக்பரது அரண்மனைக்குள் நுழையும் போது ஒரு சிங்கத்தின் குகைக்குள் நுழைவது போல மிரட்சியாக இருப்பார்.

பொதுவாகவே திருமணம் ஆகும் பெண்கள், கணவர் வீட்டுக்கு முதன் முதலில் செல்லும் போது அனைவரும் புதிது என்பதால் ஒரு மிரட்சியோடு தான் இருப்பார்கள்.

அதிலும் இங்கே வேற்று மதம், வாழ்க்கை முறை வேறு, மரபுகள் வேறு கலாச்சாரம் வேறு என்று இருக்கும் போது நிச்சயம் கலக்கமாகவே இருக்கும்.

மாற்று மதம் மாறி திருமணம் செய்தவர்கள் இந்த வரிகளை படிக்கும் போது பழைய நினைவுகள் வந்து இருக்கும் என்று நினைக்கிறேன் 🙂 .

தாதி

அக்பரின் அம்மா 15 வருட காலம் வேறு இடத்தில் இருந்ததால், அக்பரை ஒரு தாதி இடைப்பட்ட காலத்தில் வளர்க்கிறார்.

இதனால் அக்பர் தாதி மீது தாயை விட அதிகம் அன்பு / மரியாதை செலுத்துகிறார்.

ஆனால், அவர் அதற்கு தகுதி உடையவராக இல்லாமல் நடந்து கொள்கிறார் இது பற்றி அக்பருக்கு தெரிவதில்லை.

இவரது அம்மாவும் இது பற்றி அக்பரிடம் கூற பயந்து, விட்டு விடுகிறார்.

ஜோதா வந்த பிறகு அவருக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார் குறிப்பாக கோவில் கட்டியதிற்கு.

சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஜோதாவை பழி வாங்கப்பார்க்கிறார்.

ஜோதாவை ரஜபுத்திரர்கள் ஏமாற்ற அனுப்பி இருப்பதாக ஜோதா மீது தாதி பொய்க்குற்றம் சுமத்துகிறார்.

அதை தீர விசாரிக்காமல், ஜோதாவை அக்பர் அவரது வீட்டிற்கே அனுப்ப இதை அக்பரின் அம்மா அறிந்து அக்பருக்கு விளக்கி அவரது தவறை உணரச் செய்கிறார்.

பின் தவறுக்காக வருந்தி ஜோதாவை ரஜபுத்திரர்கள் இடத்திற்கு சென்று அழைத்து வரப்போகிறார்.

அவரது பிறந்த வீட்டிற்கு அனுப்பி விட்டு பின் உண்மை புரிந்து வருந்தும் போது மிகச் சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டு இருக்கிறது.

ஜோதாவுக்கு உதவும் நபராக ஒரு திருநங்கை வருவார். நான் கவனித்த வரை அந்தப்புரத்தில் எப்படியும் ஒரு திரு நங்கை இடம் பிடித்து இருப்பார்.

இதன் காரணம் என்னவென்று தெரியுமா?

ரஜபுத்திரர்கள் வழக்கம்

இந்துக்களான ரஜபுத்திரர்கள் இடத்தில் ஒரு சுவாரசியமான வழக்கம் கூறுகிறார்கள்.

பெண்கள் கூட்டத்தில், ஜோதாவை சரியாக கண்டு பிடித்தால், இரவு அவருடன் தங்கலாம் இல்லை என்றால் தனியாகப் படுத்து விட வேண்டும் என்று 🙂 .

அக்பர் சரியாக கண்டு பிடித்து விடுகிறார் ஆனாலும் கோபம் குறையாத ஜோதா பேச மறுக்கிறார். இந்த இடத்தில் தான் இருவரும் காதலில் அதிகம் நெருங்குகிறார்கள்.

அக்பர் ஜோதாவின் அரண்மனைக்கு வந்தவுடன் வரவேற்கும் விதமாக அக்பருக்கு நெற்றில் குங்குமம் இடுகிறார்கள் அக்பரும் இதை அனுமதிக்கிறார்.

அதே போல அக்பர் அரண்மனையில் ஜோதா கண்ணனை வணங்கி அக்பருக்கு தீபாராதனை காட்டுகிறார் அக்பரும் அதை வணங்கி விட்டு ஜோதாவுக்கு நெற்றியில் குங்குமம் இடுகிறார் 🙂 .

இது திரைப்படத்தில் மட்டும் உள்ளதா அல்லது உண்மையாகவே நடந்ததா! என்று தெரியவில்லை.

உண்மையாகவே குங்குமம் வைத்துகொண்டார் என்றால் வியப்பு தான். பொதுவாக இதை வைக்க இஸ்லாம் மதத்தினர் அனுமதிக்கமாட்டார்கள்.

தீர்த்த யாத்திரை வரி

இப்படி போய்க்கொண்டு இருக்கும் போது அக்பர் மாறுவேடத்தில் சென்று மக்களின் நிலையை அறிந்து கொள்ள விரும்புகிறார்.

அப்போது விலைகள் அதிகமாக இருப்பதைக் காண்கிறார்.

அதோடு இந்துக்கள் சிலர் தங்களின் தீர்த்த யாத்திரை (இந்துக்கள் புனிதப் பயணம்) செல்வதற்கு வரி விதிக்கப்படுவதாகவும் இதனால், தாங்கள் ரொம்ப சிரமப்படுவதாகவும் கூறுகிறார்கள்.

இதை கேட்ட அக்பர் ‘எதற்கு இது வசூலிக்கப்படுகிறது?‘ என்று உடன் வந்தவரிடம் (அவர் இந்து) கேட்கிறார்.

இது காலங்காலமாக வசூலிக்கப்படுவதாகவும் தானும் கட்டிக்கொண்டு இருப்பதாகவும் கூறுகிறார்.

இதில் நாம் புரிந்து கொள்ளவேண்டிய ஒன்று அரசர்கள் பலருக்கு தங்களுக்கு தெரியாமலே பல விஷயங்கள் நடப்பதை இந்தச் சம்பவம் விளக்குகிறது.

அங்கே அதிக விலை கொடுத்து விற்கப்படுவதை கண்டு அதிர்ச்சியாவது என்று மக்களின் நிலை தெரியாமலே அரசர்கள் இருக்கிறார்கள் என்பதை விளக்குகிறது.

அந்தக்காலத்தில் மட்டுமல்ல பல நூற்றாண்டுகள் ஆகியும் இன்றும் இதே நிலை தொடர்வது தான் மிகவும் வருத்தமாக உள்ளது.

அரசவைக்கு வரும் அக்பர் இந்துக்கள் மீது விதித்துள்ள தீர்த்த யாத்திரை வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கிறார்.

இதற்கு முஸ்லிம் மத குருமார்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் அரசின் கருவூலத்தில் பணம் குறையும் என்று கூறுகிறார்கள்.

அதற்கு அக்பர் “நான் கொள்ளை அடிக்க வரவில்லை மக்களின் நலனே முக்கியம் ஒருவர் தனது மதத்து கடவுளை வணங்க பணம் வசூலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறி ரத்து செய்வதாக இறுதியாக அறிவித்து விடுகிறார்.

அக்பர் பெயர் காரணம்

இதனால் மகிழ்ச்சியடைந்த இந்துக்கள் அவருக்கு ‘அக்பர்” என்ற பட்டத்தை வழங்குகிறார்கள் இதன் பிறகே அவர் அக்பர் என்று அழைக்கப்படுகிறார்.

இதற்கு முன்பு வரை Jalal-ud-Din என்று அழைக்கப்பட்டார்.

இந்த விழாவில் தான் மிகப்பிரபலமான A.R.ரகுமான் பாடலான Azeem-O-Shaan Shahenshah வருகிறது.

இந்த இசையைத் தான் விருது கொடுக்கும் நிகழ்ச்சிகளில் பயன்படுத்துகிறார்கள். இது எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் கூட 🙂 .

அக்பர் தனது கடைசி காலம் வரை அனைத்து மதத்தினரும் இணக்கமாக வாழ நடவடிக்கை எடுத்து அனைவரிடமும் பாராட்டைப் பெற்று இருக்கிறார்.

அதோடு போரால் மக்கள் அழிவதை விரும்பாதவராக இருந்து இருக்கிறார்.

சிறு வயதில் இருந்தே அதே மனநிலையுடன் இருப்பதை காட்டி இருக்கிறார்கள்.

ஹ்ரிதிக் Vs யானை சண்டை

ஹ்ரிதிக் Vs யானை சண்டை மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் பின்னணி இசை பட்டயக்கிளப்புகிறது.

ஒரு சில இடங்களில் பண்டைய காலத்து இசை போல இல்லாமல் தற்போதைய இசை போல வருவது மட்டும் நெருடலாக இருந்தது.

ஒளிப்பதிவு, அரண்மனை அலங்காரங்கள், உடைகள், யானை, குதிரை, வீரர்கள், முக்கிய கதாப்பாத்திர தேர்வுகள் என்று எந்த ஒரு விசயத்திலும் குறை கூற முடியாத அளவிற்கு மிகத் தரமான படம். படம் பார்க்கவே நிறைவாகவே இருந்தது.

மதங்கள் பற்றி பல்வேறு கருத்துகள் எனக்கு இருந்தாலும் இப்படம் பார்க்க ரொம்ப அருமையாக இருந்தது.

இரு மதத்தையும் சரியாக பேலன்ஸ் செய்து இருந்தார்கள். இது வரை பார்க்கவில்லை என்றால் நிச்சயம் பாருங்கள் குறிப்பாக தமிழில்.

Directed by Ashutosh Gowariker
Produced by Ronnie Screwvala Ashutosh Gowariker
Screenplay by Haider Ali Ashutosh Gowariker
Story by Haider Ali Ashutosh Gowariker
Narrated by Amitabh Bachchan
Starring Hrithik Roshan, Aishwarya Rai-Bachchan, Sonu Sood, Kulbhushan Kharbanda, Ila Arun
Music by A. R. Rahman
Cinematography Kiran Deohans
Editing by Ballu Saluja
Distributed by UTV Motion Pictures
Ashutosh Gowariker Productions
Release date(s) February 15, 2008
Running time 213 minutes
Language Hindi / Urdu
Budget 40 crore (US$7.98 million)
Box office 120 crore (US$23.94 million)

கொசுறு 1

இந்தப்படம் வெளியான போது தற்போதுள்ள ரஜபுத்திர வாரிசுகள் / குடும்பத்தினர் இதில் உள்ள காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பல இடங்களில் இந்தப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. பின் உச்ச நீதி மன்ற உத்திரவால் அந்தத் தடை விலக்கப்பட்டது.

வசூலில் பெரும் சாதனை படைத்து இருக்கிறது. இந்தப்படத்தை திரையரங்கில் பார்க்காமல் போய் விட்டேனே! என்று லகான் படத்தைப் போலவே வருத்தப்பட்டேன்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்.

இந்தப்படத்தின் இயக்குனர் Ashutosh Gowariker Lagaan மற்றும் Swades என்ற தரமான படங்களை இயக்கியவர் Swades மற்றும் Jodhaa Akbar படங்களின் தயாரிப்பாளர் கூட.

கொசுறு 2

அக்பருக்கு 30 மனைவிக்கு மேல் இருந்ததாக வரலாறு கூறுகிறது. அடேங்கப்பா! எப்படித்தான் சமாளித்தாரோ!!

அவனவன் ஒன்றுக்கே மண்டையை பிச்சுட்டு இருக்கான் இதுல முப்பதா!! ம்ஹீம்! தசரதற்கு அறுபதினாயிரம் மனைவிகள் என்று படித்ததுண்டு.

இதெல்லாம் படிக்கும் போது பல கற்பனைக் குதிரைகள் சூப்பர் சானிக் வேகத்தில் எனக்கு ஓடுவதால் இதோடு நிப்பாட்டிக்கிறேன் 🙂 .

Read : Gully Boy [இந்தி 2019] தாராவி “Rap Star”

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

11 COMMENTS

  1. ஹிரித்திக் ஐஸ் ஜோடி மிகப்பொருத்தம். மிக அருமையான படம். பகிர்வுக்கு நன்றி

  2. கிரி, நல்ல அனுபவ பதிப்பு.

    எனக்கு இதில் பிடித்த விஷயம் ரஹ்மானின் இசை தான். இசையில் முகலாய சாம்ராஜ்யத்தின் கலாச்சார வாசமும் அதன் பிரமாண்டமும் அழகாக பிரதிபலித்து இருக்கும். நீங்கள் சொன்ன படி ஒரு நல்ல திரை அரங்கில் பிரமாண்டமான திரையில், அட்டகாசமான DTS ஒலியில் இந்த படத்தை பார்த்தால் அது ஒரு பரவசமான அனுபவம் தான்.

  3. நான் துபாய்க்கு வந்து ஹிந்தி தெரியாமல் பார்த்த முதல் படம்.. மொழி புரியவில்லை என்றாலும் காட்சி அமைப்பு, பாடல்கள், திரைக்கதை என எனக்கு படம் பிடித்திருந்தது.. பாடல்கள் நிச்சயம் ஒரு மைல்கல்.. நீங்கள் கூறிய (இவ்வளவு அருமையான நடிகரை வெறும் மசாலா நடிகராகவே முன்னிறுத்துவது வருத்தம் அளிக்கிறது) எனக்கு என்னவோ அப்படி தோன்றவில்லை கிரி..

  4. அன்பரே கலகலப்பு எனக்கும் பிடிக்கவில்லை சந்தானம சொல்றமாதிரி அந்த அளவுக்கு (இந்த படம்) ஒன்னும் காமெடி இல்ல – ஒரு அளவுக்கு மேல கடுப்பு வரமாதிரி காமெடி பண்றாங்க. நீங்க சொல்றமாதிரி லாங் ஷாட்டில் வீடு மட்டுமே (அதை சுற்றி காம்பௌந்து சுவர் காமிக்கிறாங்க வேறெந்த வீடும் இல்லை) ஆனா வீட்டு மொட்டை மாடி ஷாட்டுல பின்னாடி கும்பகோண தெப்ப குளம் தெரியுது ஆக்கம்பக்கம் வீடுகள் தெரியுது…!!! — ஜோதா அக்பர் இன்னும் பாக்கலை நீங்க சொன்னபிறகு பார்க்கனுமின்னு தோணுது.

  5. //ஜோதாவுக்கு உதவும் நபராக ஒரு திருநங்கை வருவார். நான் கவனித்த வரை அந்தப்புரத்தில் எப்படியும் ஒரு திரு நங்கை இடம் பிடித்து இருப்பார். இதன் காரணம் என்னவென்று தெரியுமா?//

    சிம்பிள். திருநங்கைகளால் அரசியையோ அல்லது யாருடனோ உறவு கொள்ள முடியாதல்லவா?

    //இந்தப்படத்தை திரையரங்கில் பார்க்காமல் போய் விட்டேனே! என்று லகான் படத்தைப் போலவே வருத்தப்பட்டேன்.//

    இந்த படத்தை சேலத்தில் ஒரு தியேட்டரில் குடும்பத்தோடு பார்த்தோம், தமிழில். அப்புறம் டவுன்லோட் செய்து அடிக்கடி பார்த்துவிடுவேன். இப்போ இந்த பதிவை படித்தது கூட 2 நாட்களுக்கு முன் இந்த படத்தை பார்த்ததினால் தான்…

  6. தங்களின் விமர்சனத்தை படித்தபின் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது

  7. கலக்கல் தல
    கொசுறு 2 என்னோட கற்பனை குதிரையும் ஓட சொல்லுது 🙂

    – அருண்

  8. ஐஸ் சாதாரணமாகவே ராணி போல இருப்பார் இதில் ராணி உடையில்… என்னமோ போங்க! icon smile ஜோதா அக்பர் அழகான இந்து முஸ்லிம் காதல் கதை ஐஸ் ஒரு அற்புதம். சிலருக்கே இது போல அழகான முகம் உடலமைப்பு அமையும். கடவுள் கொடுத்த வரம் என்று தான் கூற வேண்டும். யாருகிட்டேயும் இல்லாத ஒரு விஷயம் ஐஸ் கிட்ட இருக்கு பலரும் கவனித்து இருப்பீர்கள். ஐஸ் டூ பீஸ் உடையில் வந்தால் கூட அசிங்கமாக இருக்காது icon smile ஜோதா அக்பர் அழகான இந்து முஸ்லிம் காதல் கதை இது எப்படி என்றே எனக்கு புரியவில்லை. கவர்ச்சியாக இருக்கும் ஆனால் ஆபாசமாக இருக்காது. இது போல எத்தனை பேருக்கு கிடைக்கும்!! இதில் அவர் இளவரசி, மகாராணி என்பதால் உடைகள் ஒவ்வொன்றும் பட்டையைக் கிளப்புகிறது. ஒரு அழகு தேவதை போலவே இருக்கிறார். பிரம்மா இவருக்கு மட்டும் அதிக நேரம் எடுத்து இருப்பாரோ! அல்லது அந்த நேரத்தில் ரொம்ப ஜாலியா இருந்து இருப்பாரோ!

    ——————————————————————————
    Brahma mattum illa, ishwariya pathi yeludhumbodhu unga yeluthu innum azhagaga irukkiradhu… 😛

  9. மயக்கம் என்ன படம் நீங்க 4 or five times pathennu sonnabodhey yenakku konjam lesa doubt irundhuchu. Yenakku therinju yenkitta pesuna yella friends umey kalakalappu superah irukkunu sonnanga. Neenga oruthar dhan nalla illanu solreenga.

    என்னுடைய ரசனை மாறி விட்டதா? ஒன்றுமே புரியவில்லையே–unga kelvikku vidai nan padam parthuttu vandhu solren… 😀 🙂 😛

    Rajesh.v

  10. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @யாசின் தற்போது ஹிந்தி கற்றுக்கொண்டீர்களா? 🙂

    “எனக்கு என்னவோ அப்படி தோன்றவில்லை கிரி”

    ஹ்ரிதிக் அந்த அளவிற்கு நடிக்கவில்லை என்று கூறுகிறீர்களா? அல்லது மசாலா நடிகராக வரை முன்னிறுத்தவில்லை என்று கூறுகிறீர்களா?

    @ராஜ்குமார் கலகலப்பு அனைவரும் கூறும் அளவிற்கு எனக்கு சிரிப்பை வரவழைக்கவில்லை. கலகலப்பு வீட்டை வைத்து ஒரு ஆராய்ச்சியே செய்து இருக்கீங்க போல இருக்கே 😉

    @சீனு நீங்கள் கூறிய பிறகே திருநங்கை பற்றி யாரோ முன்பு கூறியது நினைவிற்கு வருகிறது.

    @ராஜேஷ் 🙂 இப்பவும் சொல்றேன் மயக்கம் என்ன ஒரு கிளாசிக் படம். உங்களுக்கு கலகலப்பு பிடித்து இருக்கிறது என்று கூறி விட்டீர்கள். ரைட்டு 🙂 Opinion differs

  11. கிரி.. நான் தற்போது ஹிந்தி பேச கற்று கொண்டேன்.. ஹ்ரிதிக் மிகவும் திறமையான நடிகர், நான் சொல்ல வந்தது அவர் வெறும் மசாலா நடிகர் என நீங்கள் குறிபிட்டது எனக்கு சரி என படவில்லை என்றேன்… அவ்வளவு தான்… க க ட போ….பிழை தான்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here