தெய்வத்திருமகள் (2011)

14
தெய்வத்திருமகள்

பெயர் சர்ச்சைகளில் சிக்கி வெளிவந்தாலும் படத்தில் எந்தச் சிக்கலும் இல்லாமல் அழகாகப் படமாக்கப்பட்டு உள்ளது தெய்வத்திருமகள். Image Credit

தெய்வத்திருமகள்

மனவளர்ச்சிக் குறைந்த ஒருவருக்கும் அவருடைய மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டமே கதையாகும்.

கிருஷ்ணா என்ற கதாப்பாத்திரத்தில் மனவளர்ச்சி குறைந்தவராக விக்ரம்  நடித்து உள்ளார்.

மனவளர்ச்சி குறைந்தவராக நடிக்கிறேன் பேர்வழி என்று உண்மையாகவே மனவளர்ச்சி குறைந்தவர்களை விட அதிகமாக நடித்து நம்மை டரியல் ஆகும் நடிகர்களைப் போல இல்லாமல் இயல்பாகச் செய்து இருக்கிறார்.

விக்ரம்

விக்ரம் நடித்த சிறந்த படங்கள் என்றால் எனக்கு இன்றும் பிடித்தது சேது, காசி போன்ற படங்களாகும் அதில் தெய்வத்திருமகள் தற்போது இணைந்து விட்டது.

விக்ரமின் மனைவி குழந்தை பிறந்தவுடன் இறந்து விடுகிறார். அதன் பிறகு குழந்தையை வளர்க்கும் பொறுப்பு விக்ரமுக்கு வருகிறது.

இதன் பிறகு நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை.

சாரா

விக்ரம் நடிப்பிற்கு சற்றும் குறையாமல் அழகான நடிப்பை வெளிப்படுத்தி நடித்து இருப்பது சாரா என்ற சிறுமி இவர் விக்ரமின் மகளாக நிலா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

ப்ரிட்ஜில் வைத்து எடுத்த ரோஜாப்பூ மாதிரி உள்ளார்.

சில குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறிய பேச்சுக்களை பேசி அல்லது இயக்குனரால் நடிக்கவைக்கப்பட்டு நம்முடைய பொறுமையை சோதிப்பார்கள் இதில் தனது கதாப்பாத்திரத்திற்கு ஏற்றபடி அளவாக நடித்துள்ளார்.

குழந்தைகள் எப்படித்தான் இவ்வளவு அருமையாக நடிக்கிறார்களோ!வியப்பாக உள்ளது.

அனுஷ்கா இதில் வக்கீலாக வருகிறார். அனுஷ்காக்கு மனநிறைவான கதாப்பாத்திரமாக இது இருந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

நரம்பு புடைக்கப் பேசாமல் இயல்பாகவே வாதங்களை வைக்கிறார்.

இவரது எதிர் வக்கீலாக நாசர். நாசர் ஏற்க்கனவே ப்ரியங்கா போன்ற படங்களில் வக்கீலாக நடித்து விட்ட படியால் புதிதாகக் கூற ஒன்றுமில்லை.

அனுஷ்கா விக்ரம் சார்பாக ஆஜராகி இருப்பார். அவர் ஜெயிக்க செய்யும் பின்பற்றும் யோசனைகள் லாஜிக் மீறலாக இருந்தாலும், காமெடியாக இருந்ததால் பெரிய விசயமாகத் தோன்றவில்லை.

என்ன தான் இயல்பாக எடுத்தாலும் விக்ரம் கட்டிப்பிடித்த பிறகு அனுஷ்காவிற்கு ஒரு பாட்டு வைத்துட்டாங்க, நல்ல வேளை அதில் அனுஷ்கா மட்டுமே.

சந்தானம்

சந்தானம் படத்தைச் சலிப்பாக்காமல் அடிக்காமல் கொண்டு செல்ல உதவியுள்ளார்.

விக்ரம் ஒருவரிடம் சென்று நிலா நிலா என்று திரும்பக்கூற ‘யோவ்! என்னையா சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ற‘ என்றதும்.. ‘இரண்டு வாட்டிச் சொன்னதுக்கு இப்படி டென்ஷன் ஆகுறியே.. நான் இரண்டாயிரம் வாட்டிக் கேட்டுட்டேன்‘ என்று சந்தானம் கலகலப்பூட்டுகிறார் 🙂 .

நாசர் ஜூனியர் ஆக வருபவர் செய்யும் நடவடிக்கைகளும் ரசிக்கும்படி இருந்தன. இதோடு MS பாஸ்கர், பாண்டி என்று நகைச்சுவைக்குப் பலர் இருக்கின்றனர்.

அமலா பால் இருக்கிறார். படத்தில் அவருக்கு முக்கியமான கதாப்பாத்திரம் இல்லை என்றாலும் கொடுக்கப்பட்ட அளவு சிறப்பாக உள்ளது.

அதை இவரும் சிறப்பாக செய்து இருக்கிறார். குறை ஒன்றும் கூற முடியவில்லை.

குட்டி லாஜிக் மீறல்கள் இருந்தது அது எப்படி? இது ஏன்? இவை போன்ற கேள்விகள்.

அதே போலச் சின்னத்தம்பி படத்தில் பிரபு க்கு வந்த அதே சந்தேகம் விக்ரமுக்கும் வந்தது இதை எல்லாம் தவிர்த்துப் பார்த்தால் அருமையான படம் தமிழுக்கு.

இசை ஒளிப்பதிவு

பாடல்கள் சில ஓகே அனைத்தும் அருமை என்று கூறமுடியவில்லை. ஆனால் பின்னணி இசை அட்டகாசமாக இருந்தது. இசை GV பிரகாஷ்.

இதோடு கண்டிப்பாகக் குறிப்பிடவேண்டிய இன்னொரு விஷயம் ஒளிப்பதிவு. அசத்தல்,  புதுக் கண்ணாடி கணக்கா பளிச்சுன்னு,  வண்ணமயமாக இருக்கு.

ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா க்கு என்னுடைய பாராட்டுகள்.

இயக்குனர் விஜய் க்கு என் மனமார்ந்த பாராட்டுகள். நல்லப் படங்களைத் தரும் இயக்குனர்கள் வரிசையில் இன்னொருவர் இணைந்து உள்ளது மகிழ்ச்சி.

“ஐ யாம் சாம்” என்ற ஆங்கிலப்படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது.. உண்மையா!

Directed by A. L. Vijay
Produced by M. Chinthamani, Ronnie Screwvala
Written by A. L. Vijay
Starring Vikram, Baby Sara, Anushka Shetty, Amala Paul, Nassar, Santhanam
Music by G. V. Prakash Kumar
Cinematography Nirav Shah
Editing by Anthony
Studio Sree Rajakaliamman Medias
Distributed by UTV Motion Pictures
Release date(s) 15 July 2011

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

14 COMMENTS

  1. //ப்ரிட்ஜில் வைத்து எடுத்த ரோஜாப்பூ மாதிரி இருக்கிறார் அவ்வளவு அழகு//

    ப்ரிட்ஜில் இருக்கிற ரோஜா பூவை விட காலையில் மரத்திலே பூத்திருக்கும் ரோஜாப்பூ அழகாகத்தானே இருக்கும் 🙂 (நோ சீடியஸ்)

    என்னை பாதித்த திரைப்படம், குசேலன் கிளைமாக்ஸ் தலைவர் பேச்சுக்கு பின்னர் விழியோரத்தில் நீர் கசியவைத்த விக்ரம் சாராவுக்கு HATS OFF.

    பாடல்கள் முதலில் எனக்கு பெரிதாக ஒட்டவில்லை, இப்போ ஆரிரோ ஆராரிரோ பாடல் என்னுடைய பேவரிட். உங்களுக்கு கேட்டால் நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன்:-) ஹரிசரண், முத்துகுமார், ஜீவி really Rocks ( ஒரு வாட்டி தனிமையில் கேட்டுப்பாருங்கள் )

    சந்தானம் vs ரவுடி டீ,காப்பி காமடி பெஸ்ட் , சான்சே இல்லை

    ஒரு சில டெம்ளேட் பாத்திரங்கள், லாகிக் மீறல்கள் இருந்தாலும் அவை இல்லாமல் திரைக்கதையை பின்னுவது கடினம் என்பதால் விஜயை மன்னிக்கலாம்.

    படம் என்னதான் தழுவல் என்றாலும் ஒரிஜினலை தமிழர்களில் 100,000 பேரில் ஒருத்தனாவது பார்த்திருப்பார்களா? ஒவ்வொருவரும் பார்க்க உதவிய விஜய்க்கு நன்றி.

    பலரும் ஒரிஜினல் திரைப்படத்திற்கு நன்றி என்று கூட போடவில்லை என்கிறார்கள், அப்படி போடுவதால் உரிமை பிரச்சனை வரலாம் என்பதுகூட பாடாததர்க்கு காரணமாக இருக்கலாம்.

    அதற்காக நான் அந்த படத்தை பார்க்கவில்லை, இது என் சொந்தக்கதை என விசை தொலைக்காட்சிகளில் பீத்தினால் கண்டதாலும் தூக்கி அவர் மண்டையை உடைக்கலாம் 🙂

  2. நல்ல
    vemarsanam லாஸ்ட் டைம் யு ask about the hidden mike in sun tv is தினமலர் மைக்

  3. நல்ல விமர்சனம். படம் கொஞ்சம் டிராமா போல இருக்கு…..

  4. தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படங்களுள் இதுவும் ஒன்று. இதே படத்தில் கார்த்திக் நடித்திருந்தால் இந்த பெயர் பிரச்சனை வந்திருக்காது. விக்ரம் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்பதாலேயே பிரச்சனையை கிளப்பி இருக்கிறார்கள். எல்லாம் சாதி படுத்தும் பாடு.

  5. படம் நன்றாய் இருந்தது .. ஆனால் இந்த படத்தை விட சிறப்பாய் இல்லை என்று நினைக்கிறேன்..வாய்ப்பு கிடைத்தால் இந்த படத்தையும் பார்த்து விட்டு விமர்சனம் எழுதுங்கள் கிரி… அந்த படத்தில் இடம் பெற்ற இந்த ஆத்மார்த்தமான பாடல் வரிகளே படத்தின் உயிர்..

    எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
    பூக்களின் வண்ணம் கொண்டு
    பிறந்த மகளே என் மகளே!
    நான் வாழ்ந்தது கொஞ்சம்
    அந்த வாசத்தில் வந்துதித்து
    உயிரில்கலந்தாய் என் உயிரே!
    உன் பூவிழி குறுநகை!
    அதில்ஆயிரம் கவிதையே..!
    (எந்தன் வாழ்க்கையின்)

    வானம் தாலாட்ட மேகம் நீராட்ட
    வளரும் வெள்ளி நிலவே!
    வாழ்வில் நீ காணும் சுகங்கள் நூறாக
    வேண்டும் தங்கச் சிலையே!
    தாயின் மடிசேரும் கன்று போல
    நாளும் வளர்வாய் என் மார்பிலே!
    சேய் உன் முகம் பார்க்க துன்பம் தீரும்
    காலம் கனியாகும் தேவியே!
    சிறுகிளி போல் பேசும் பேச்சில்
    எனை மறந்தேன் நானம்மா…!
    (எந்தன் வாழ்க்கையின்)

    கனவில் நினைவாக நினைவில் கனவாக
    கலந்தால் காதல் தேவி..
    உறவின் பலனாக கடலில் அமுதாக
    பிறந்தாய் நீயும் கனியே!
    காணக் கிடைக்காத பிள்ளை வரமே
    கண்ணில் ஜொலிக்கின்ற வைரமே..!
    கோடி கொடுத்தாலும் உன்னைப் போல
    செல்வம் கிடைக்காது வாழ்விலே
    புள்ளி மானே தூங்கும் மயிலே
    என்னை மறந்தேன் நானம்மா…
    (எந்தன் வாழ்க்கையின்)

    படம் : சின்னக் கண்ணம்மா
    இசை : இளையராஜா
    பாடியவர் : மனோ

    பின்குறிப்பு…படம் அதிகம் பார்ப்பதில்லை.. உங்கள் விமர்சனத்தை படித்த உடனே படம் பார்க்கும் ஆவல் அதிகமானது… நேற்றுதான் பார்க்க முடிந்தது… விக்ரமின் நடிப்பு hats off .. சிறப்பான விமர்சனம்…மற்றபடி படத்தில் நிறைய lojic மீறல்கள்…

  6. முதலில் உங்கள் விமர்சனத்திற்கு எனது பாராட்டுகள்.

    விக்ரமின் தோற்றம் பற்றிய கருத்தை ஆமோதிக்கிறேன். கந்தசாமிக்காக உடல் மெலியப்போய், ஏடா கூடமாகிவிட்டதென நினைக்கிறேன். மீண்டு வருவார் என எதிர்பார்க்கிறேன்.

    நானும் முதல் நாளே பார்த்து விட்டேன்; எனக்கு படம் பிடித்திருந்தது.

    ஆயினும்,

    இரண்டாம் பாதி கோர்ட் சீனில் அழுத்தமில்லை (விக்ரம் சாரா சைகையால் பேசிக்கொள்ளும் காட்சி தவிர்த்து);
    விக்ரம் மனநிலை பாதித்தவர் எனத் தெரிந்தும் (நிரூபிக்கப்பட்டும்); நீதிபதி எப்படி விக்ரமிற்கு சாதகமாக தீர்ப்பு சொல்ல முடியும்?
    விக்ரம் குழந்தையை அமலாவிடம் ஒப்படைத்துவிட்டு போவதற்கும் அழுத்தமான காரணமோ காட்சியோ இல்லை.

    ரசிகர்களை ஒரு காட்சியை ஏற்றுக்கொள்ள வைக்கவேண்டும் எனில் அதற்காக அவர்களை காட்சி/ வசனம் மூலம் Convenience செய்யவேண்டும். அது இங்கே மிஸ்ஸிங். ஆங்கிலப்படம் பார்த்து அப்படியே கொடுக்கக்கூடாது

    இந்த கஷ்ட்டமான கதைக்கு, திரைக்கதை அமைக்க நம்ம கே.பாக்கியராஜின் உதவியை இயக்குனர் நாடியிருக்கலாம், இன்றைய நிலையில் பாக்கியராஜை தவிர வேறுயாராலும் இந்த வேலையை சிறப்பாக செய்யமுடியாது என்பது என்கருத்து.

  7. இந்த படம் ஆங்கில படத்தின் தலுவல்னு தெரிஞ்சதும் நான் ஐ ஆம் சாம் படத்தை முதலில் பார்த்தேன், ஷான் பென் நடிப்பு அற்புதம். என்ன தான் எல்லாரூம் தெய்வதிருமகள் படத்துக்கு ஆஹா ஓஓ ன்னு பாராட்டினாலும் அது கண்டிப்பா ஐ ஆம் சாம் படத்தை தான் சேரும். பழைய குழம்பை சூடாகி கொடுகிறதர்ல ரொம்ப பெருமை தேவையில்லன்னு நான் நினைகிறேன். தமிழ் படம் பலதும் இப்போ பிற மொழி படத்தின் கதையாக வருவது இப்போ சாதரணமாகி வருகிறது. என்றாலும் தெய்வதிருமகள் படத்தின் வெற்றிக்கு பாராட்டுக்கள்.

  8. கிரி,

    என்ன இப்பிடி சொல்லிபுட்டீங்க, விக்ரமோட hair style முதக்கொண்டு I am Sam -ஓட காப்பி.தமிழ்ல ஜனரஞ்சகமா பண்ணி இருக்கிறதா கேள்விப்பட்டேன் ஆனா Sean Penn நடிப்பு அபாரம் அதுல. அதனாலேயே எனக்கு இந்த படம் பார்க்க ஒரு யோசனையாவே இருக்கு.

  9. @ஜீவதர்ஷன்

    “ப்ரிட்ஜில் இருக்கிற ரோஜா பூவை விட காலையில் மரத்திலே பூத்திருக்கும் ரோஜாப்பூ அழகாகத்தானே இருக்கும் ”

    ஆமாம் 🙂

    “ஒரு வாட்டி தனிமையில் கேட்டுப்பாருங்கள்”

    கேட்டுப்பார்க்கிறேன்

    “படம் என்னதான் தழுவல் என்றாலும் ஒரிஜினலை தமிழர்களில் 100,000 பேரில் ஒருத்தனாவது பார்த்திருப்பார்களா? ஒவ்வொருவரும் பார்க்க உதவிய விஜய்க்கு நன்றி.

    பலரும் ஒரிஜினல் திரைப்படத்திற்கு நன்றி என்று கூட போடவில்லை என்கிறார்கள், அப்படி போடுவதால் உரிமை பிரச்சனை வரலாம் என்பதுகூட பாடாததர்க்கு காரணமாக இருக்கலாம்.”

    இதில் எனக்கு மாற்றுக்கருத்து இருக்கிறது. இது பற்றி விரிவாக பின்னர் கூறுகிறேன்.

    “அதற்காக நான் அந்த படத்தை பார்க்கவில்லை, இது என் சொந்தக்கதை என விசை தொலைக்காட்சிகளில் பீத்தினால் கண்டதாலும் தூக்கி அவர் மண்டையை உடைக்கலாம் ”

    🙂

    @சுரேஷ் & தாமஸ் ரூபன்

    நன்றி 🙂

    @பாலா இது ஒண்ணுமே பண்ண முடியாது என்று நினைக்கிறேன்

    @காயத்ரி நாகா சின்னக் கண்ணம்மா பழைய படமா?

    @காத்தவராயன் நீங்க கூறியதை நானும் நினைத்தேன் சரி! விமர்சனத்தில் கதையைக் கூற வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

    @Berney & Somz

    நானும் இப்படித்தான் நினைத்தேன் I am sam ட்ரைலர் பார்த்து.. வெறுத்து போயிட்டேன்..அதுவும் முடி முதற்கொண்டு அப்படியே இருக்கு. இவங்களை நம்பி ஒரு விமர்சனமும் பாராட்டி எழுத முடியாது போல இருக்கு. பாராட்டி எழுதிய நம்மை முட்டாளாக்கிடறாங்க

  10. கிரி,
    “i am sam” இன்னும் பாக்கல..
    இந்த படம் ரொம்ப நல்லா இருக்குது ஆனா நந்தலாலா மாதிரி அப்படியே copy-paste நா கொஞ்சும் வருத்தம் தான்…

    – அருண்

  11. இந்தில இப்படி தான் மொதல்ல சொல்லாம கொல்லாம காப்பி அடிச்சு படம் எடுத்தானுங்க, பாலிவுட் படங்களோட reach உலகளவுல இருக்கிறதால வாங்கி கட்டிகிட்டானுங்க. இப்போ ஒழுங்கா மரியாதையா காப்பி ரைட்ஸ் வாங்கி படம் எடுக்கிறானுங்க. தமிழ் படங்களும் அந்த range -க்கு போயிட்டு இருக்கிறதால சீக்கிரமே இங்கயும் ஆப்பு வரும்.

  12. இல்ல.. அட்ட காப்பி எல்லாம இல்ல. படத்தோட கரு, விக்ரம் ஹேர் ஸ்டைல், அவரோட ஒரு சில மேனரிசம்s, வெகு சில டயலாக்ஸ் மட்டும் தான் ஒன்னு.

    இங்க அட்டக்காப்பினு சொல்றவங்க எல்லாம் வெறும் ட்ரைலர் மட்டும் பாத்துட்டு பேசுறாங்கநு நினைக்கிறேன்.

    கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்..

    நல்ல விமர்சனம். முடிஞ்சா ஐ ஆம் சாம் படத்தையும் பாருங்க. அதுவும் ரொம்ப நல்லா இருக்கும்.

  13. நானும் இப்படித்தான் நினைத்தேன் I am sam ட்ரைலர் பார்த்து.. வெறுத்து போயிட்டேன்..அதுவும் முடி முதற்கொண்டு அப்படியே இருக்கு. இவங்களை நம்பி ஒரு விமர்சனமும் பாராட்டி எழுத முடியாது போல இருக்கு. பாராட்டி எழுதிய நம்மை முட்டாளாக்கிடறாங்க

    முழு படமும் பாருங்க அப்பறம் இந்த படத்தை பார்த்ததோட விட்ருக்கலாம் ன்னு தோனும்

    இதை எல்லாம் தவிர்த்து பார்த்தால் அருமையான படம் தமிழுக்கு.

    ஆனால் பின்னணி இசை அட்டகாசமாக இருந்தது. இசை GV பிரகாஷ்.

    இயக்குனர் விஜய் க்கு என் மனமார்ந்த பாராட்டுகள். நல்லப் படங்களை தரும் இயக்குனர்கள் வரிசையில் இன்னொருவர் இணைந்து இருப்பது சந்தோசமாக உள்ளது. இதைப்போல படங்களை அலுப்பு தட்டாமல் கொண்டு செல்லவே மிகப்பெரிய திறமை வேண்டும்.

    விமர்சனத்தில் என்னை பாதித்தது இந்த மூன்று விசயம்தான், குறிப்பாக விஜய் பற்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here