கனாக்கண்டேன், அயன் என்ற வெற்றிப்படங்களுக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் K.V.ஆனந்த் இயக்கி இருக்கும் படம் “கோ”
அயன் என்ற விறுவிறுப்பான படத்தை தந்து இருந்ததால் எனக்கு இந்தப்படத்தின் மீது அதிகளவில் எதிர்பார்ப்பு இருந்தது. அயன் படத்தில் திரைக்கதை மிகச்சிறப்பாக கையாளப்பட்டு இருக்கும். கோ அயன் அளவிற்கு இல்லை என்றாலும் நன்றாகவே உள்ளது. உலகக்கோப்பை, தேர்தல், IPL என்று பரபரப்பாக இருந்ததால் எந்த படமும் சமீபமாக வெளிவரவில்லை. திரையரங்கு சென்று படம் பார்த்தும் ஒரு மாதம் மேல் ஆகி விட்டது காத்திருந்து பார்த்த படம் ஏமாற்றம் அளிக்காமல் இருந்தது ஆறுதல்.
அரசியல் கட்சிகளை போல சில இளைஞர்கள் இணைந்து தேர்தலில் நிற்க முயற்சி செய்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு மக்கள் ஆதரவு வழக்கம் போல இல்லை. இதனால் மக்களை கவரும்படி பல செயல்களைச் செய்கிறார்கள் இதன் பிறகு நடக்கும் பல்வேறு சம்பவங்களால் மக்கள் ஆதரவு இவர்களுக்கு கூடுகிறது. இது மற்ற அரசியல் கட்சிகளுக்கு எரிச்சலை வரவைக்கிறது. இறுதியில் இவர்கள் வெற்றி பெற்றார்களா! இல்லையா என்பதை பரபரப்புடன் கூறி இருக்கிறார்கள்.
ஜீவா இதில் “தின அஞ்சல்” நிருபர் மற்றும் புகைப்படக் கலைஞராக நடித்துள்ளார். இந்தக்கதாப்பாத்திரத்தில் சிம்பு நடிப்பதாக இருந்து பின் மாட்டேன் என்று கூறி விட்டார். என்னைப் பொறுத்தவரை இதற்கு சிம்புவை விட ஜீவா பொருத்தமாக இருக்கிறார். படத்துவக்கத்திலேயே தான் ஒரு துடிப்பான நிருபர் என்பதை நிரூபித்து விடுகிறார். ரொம்ப அலட்டிக்கொள்ளாமல் சூழ்நிலைகேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் கதாப்பாத்திரம் அதற்கு இவருடைய உடல் மொழியும் வசன உச்சரிப்பும் நன்றாக பொருந்துகிறது.
அஜ்மல் இளைஞர்கள் அணி தலைவராக வருகிறார். ரொம்ப நல்ல தேர்வு. யாருமே இல்லாத இடத்தில் குறிப்பாக எருமைகள் மட்டுமே இவர்கள் பேசும் பேச்சை கேட்க கூடி நிற்பது நல்ல காமெடி. இவர்களும் என்னென்னவோ பிரச்சாரம் செய்து மக்களை ஈர்க்க பார்ப்பார்கள் ஒருவர் கூட கவனிக்க மாட்டார்கள். சுருக்கமாக யாருமே இல்லாத கடையில் இவர்கள் டீ ஆற்றிக்கொண்டு இருப்பார்கள்
பின்னர் இவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் ஆதரவு சேரும் போது அஜ்மல் பேசுவது சிறப்பாக இருக்கும்.
ஜீவாவுடன் பணி புரியும் நிருபராக கார்த்திகா (ராதா மகள்). அசரவைக்கும் உயரம் மெல்லிய தேகம் [சூர்யா போன்றவர்கள் இவருடன் நடிப்பது கஷ்டம்
]. புடவை மற்றும் சுடிதாரில் கலக்கலாக இருக்கிறார். நடிப்பு தான் வர மாட்டேங்குது தமிழில் முதல் படம் என்பதால் இனி வரும் படங்களில் கொஞ்சம் நடிப்பை கூட்டுவார் என்று நம்பலாம். அவ்வளவு அழகு என்று கூற முடியவில்லை சுமார் தான். இவருடன் பியா (“கோவா” படத்தில் வந்தவர்) கிளுகிளுப்பாக வந்து போகிறார். மனதில் எதையும் வைத்துக்கொள்ளாதவர் மற்றும் தைரியமான பொண்ணு.
இந்தப்படத்தில் புகைப்படக் கலை முக்கியப்பங்கு வகிப்பதாலோ என்னவோ துவக்கத்தில் பெயர் போடும் போது படங்களை எல்லாம் காட்டுவது வித்தியாசமாகவும் அழாகவும் இருந்தது. இதில் ரஜினி கமல் வரும்போது கூட அவ்வளவாக விசில் இல்லை ஆனால் சச்சின் தோனி வரும் போது விசில் பட்டையை கிளப்பியது
தாமதமாக சென்றால் நீங்கள் இதை தவற விட நேரிடும்.
இளைஞர்கள் தேர்தலில் நிற்பதை படம் எடுக்கிறார்கள் என்று மொட்டையாக கூறினால் இந்தப்படம் எங்கே ஓடப்போகுது என்று தான் நினைப்பார்கள் ஆனால் அதை எப்படி கொடுத்தால் மக்கள் ரசிப்பார்கள் என்று தெரிந்து அதை சரியாக கொடுத்து இருக்கிறார் ஆனந்த். மாணவர்கள், இளைஞர்கள் தேர்தலில் நின்றால் நாம் என்னெவெல்லாம் நினைப்பமோ அவை அனைத்தையுமே கிண்டலாக அவர்களே கூறி விடுவதால் நம்மால் எதுவும் கிண்டலடிக்கக் கூட முடியவில்லை. ஒரு ஒளிப்பதிவாளருக்குள் இவ்வளவு திறமையான திரைக்கதை அமைக்கக்கூடிய இயக்குனர் இருப்பது உண்மையிலேயே ஆச்சர்யம் அளிக்கிறது.
கடந்த தேர்தலில் IIT பசங்க நின்றாங்க.. சரி! அரசியல் கட்சிகளுக்குப் போட்டு என்ன ஆகப்போகிறது! என்று பலரும் இவர்களுக்கு ஓட்டுப் போட்டார்கள் . தேர்தல் முடிந்த கொஞ்ச நாளில் சாதிப்பிரச்சனை வந்து சண்டை இட்டு பிரிந்து விட்டார்கள். என்ன இழவுடா இது! இவனுகளுக்குப் போய் ஓட்டு போட்டோமே என்று ஓட்டுப் போட்டவர்கள் அனைவரும் நொந்து விட்டார்கள். இவர்கள் இதைப்போல செய்வதால் அடுத்து முயற்சி செய்பவர்களையும் இவர்கள் செயல் முடக்கி வருகிறது. இதையும் படத்தில் நாம் யோசிக்கும் போது அவர்களும் கூறி விடுவதால் சில கேள்விகள் அடிபட்டுப் போய் விடுகின்றன.
புகைப்படக் கலையை ரசிப்பவர்களுக்கு முதல் பாதி அருமையான விருந்து. நிருபராக ஜீவா இருப்பதால் தேர்தலில் நடக்கும் நிகழ்ச்சிகளை படம் பிடிப்பதைப் பார்க்கும் போது நாமும் இதைப்போல வித்யாசமான படங்களை ஏன் எடுக்க முயற்சிக்கக்கூடாது! என்று நம்மை எண்ண வைத்து விட்டார்கள். எனக்கு புகைப்படம் எடுக்க ஆர்வம் இருந்தாலும் பொறுமை இல்லை இதைப் பார்த்தவுடன் ஆர்வம் அதிகம் ஆகியது உண்மை.
இதில் நிருபராக வரும் ஜீவா ஓகே…. கார்த்திகா பியா எல்லாம் நன்கு வசதியானவர்களாக வருகிறார்கள். பொதுவாக நமது தமிழ்ப் படங்களில் நிருபர்களை பஞ்சத்தில் அடிபட்டவர்களாகவே பார்த்துப் பழகி இதில் இவ்வளவு வசதியாகப் பார்ப்பது கொஞ்சம் நெருடலாகவே இருந்தது. தற்போது நிலைமை மாறி இருக்கலாம். அதே போல பத்திரிகை அலுவலகமும் ஒரு கலகலப்பான சூழ்நிலையில் இருந்தது. இப்படி உண்மையிலேயே இருக்குமா! அல்லது நமது தமிழ் படங்கள் தான் இவர்களை சீரியஸ் மக்களாகவே சித்தரித்து விட்டார்களா!
ஜீவா செய்யும் “வேலைக்கு” நிஜ வாழ்வில் பலமான ஆப்பு உடனே கிடைக்கும் என்றே கருதுகிறேன் ஆனால் படத்தில் அப்படி அல்ல. அரசியல் கட்சிகளை அவ்வளவு சீக்கிரம் பகைத்து எழுத முடியாது ஒன்று எதிர் கட்சி ஆதரவாக இருக்கணும் அல்லது ஆளுங்ககட்சி ஆதரவாக இருக்கணும் அப்படி இருந்தால் தான் தமிழகத்தில் குப்பை கொட்ட முடியும். ஜீவா செய்யும் சில செயல்கள் படத்தில் பார்க்கும் போது சுவாரசியமாக இருந்தாலும் நிஜத்தில் இவ்வளவு எளிதில்லை என்பதே நடைமுறை உண்மை. ஒவ்வொரு நிருபரும் படும் பாடு அவர்களுக்குத்தான் தெரியும் (நிஜத்தில்).
இந்தப்படமே ஒரு சஸ்பென்ஸானா படம் தான் எனவே இதில் நான் எந்த முக்கியமானக் காட்சியைக் கூறினாலும் அதில் உள்ள சுவாரசியம் போய் விடும். நீங்கள் ஏற்கனவே ஒரு சில விமர்சனங்களில் பியா மற்றும் சில திருப்பங்களை படித்து இருக்கலாம் இருப்பினும் எப்போதும் போல நான் கூற விரும்பவில்லை. இது வரை எதையும் படிக்காதவர்களும் சஸ்பென்சை தெரிந்து கொள்ளாமல் சென்று பாருங்கள் அப்போது தான் விறுவிறுப்பாக இருக்கும். க்ளைமாக்ஸ் நான் ஏற்கனவே ஊகித்து இருந்தேன் இருந்தாலும் இறுதியான முடிவை எதிர்பார்க்கவில்லை. ரொம்ப நல்ல முடிவு என்னோட பார்வையில் ஜீவா செய்தது 100% சரி.
இதில் பிரகாஷ்ராஜ் முதல்வராகவும், எதிர்க்கட்சி தலைவராக கோட்டா சீனிவாசராவும் நடித்து உள்ளார்கள். இருவருமே குறை சொல்ல முடியாத அளவிற்கு நடித்துள்ளார்கள். இறுதியில் நடிக்க அதிக வாய்ப்பு இல்லை அவர்களுக்குண்டான காட்சிகளை இன்னும் நீட்டித்து இருக்கலாம் குறிப்பாக பிரகாஷ்ராஜ். இளைஞர்கள் அணிக்கு ஆதரவு பெருகுவதைக் கண்டு பிரகாஷ்ராஜ் டென்ஷன் ஆகுவது அவரது வழக்கமான கலக்கல் நடிப்பு.
படம் தேர்தலுக்கு முன்பு வந்து இருக்க வேண்டியது வந்து இருந்தால் பட்டாசாக இருந்து இருக்கும். தற்போது நடந்த தேர்தலில் நடந்த அனைத்து தில்லு முள்ளுகளையும் அப்படியே காட்டி இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் நாம் என்னென்ன பார்த்தாமோ கேள்விப்பட்டோமோ அத்தனையும் இதில் வருகிறது. அதோடு பெண்கள் போடும் குத்தாட்டம் அசத்தல்! அப்படியே நடைமுறையை கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார் ஆனந்த். சரக்கு, பணம், இலவசம் என்று எதையும் விடவில்லை. வெளுத்து வாங்கி இருக்கிறார்கள், தேர்தலுக்கு முன்பு வந்து இருந்தால் இன்னும் சூப்பராக இருந்து இருக்கும்.
இதில் நக்சல் பிரச்சனை முக்கியப்பங்கு வகிக்கிறது. இது வரை இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நக்சல்களைப் பற்றி படம் வந்து இருக்கிறதா என்று தெரியவில்லை. ரஜினியின் இராணுவவீரன் கமலின் குருதிப்புனல் படத்தில் கூட இதைப்போல வரும் ஆனால் நேரடியாக நக்சல்கள் என்று குறிப்பிடாமல் வேறு மாதிரி வரும். நக்சல் பற்றி இருவேறு கருத்துகள் சமூகத்தில் உண்டு. ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடுபவர்கள் அதே சமயம் தீவிரவாதம் புரிபவர்கள் என்று. ஆனந்த் இந்த விசயத்தைப் எப்படி தைரியமாக எடுத்தார் என்று தெரியவில்லை. நாளைக்கு மிரட்டல் ஏதாவது வருமா வராதா என்று யோசனை வந்து சென்றது.
தற்போது நிருபர்களாக உள்ளவர்கள் இந்தப்படத்தைப் பார்த்தால் ஒரு சிலருக்கு ரொம்பப் பிடிக்கலாம் அதே போல என்னய்யா படம் எடுத்து இருக்கிறார்கள்! என்றும் நினைக்கலாம் காரணம் நிஜத்தில் நிருபர்களின் வாழ்க்கை என்பது அவர்கள் மட்டுமே அறிந்தது. என்னுடைய நிருபர் நண்பர்கள் கூறுவதை கேட்டதில் இருந்து அவர்கள் உலகமே வேறு என்பதை உணர்ந்து கொண்டேன். இதனால் நம்மைப் போன்றவர்கள் எதுவும் கருத்துக்கூற முடியாது. மற்றபடி சாதாரண பொதுஜனமாக படம் பார்த்தால் நமக்குப் பிடிக்கும் (வழக்கம்போல இந்தப்படம் பிடிக்காதவர்களும் இருப்பார்கள்).
படத்தில் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகி விட்டன. தற்போதெல்லாம் நான் பார்க்கபோகும் படங்களில் பாடல்களை முன்பே iPhone ல் பல முறை கேட்ட பிறகே செல்வதால் பாடலை இன்னும் அதிகம் ரசிக்க முடிகிறது. அயன் பாடல் சரி இல்லை என்று விமர்சனத்தில் கூறி பல முறை கேட்ட பிறகு ரொம்பப்பிடித்தது இன்று வரை அவ்வாறு கூறியது உறுத்திக்கொண்டு இருக்கிறது. இதனால் இதைத் தவிர்க்க முன்பே கேட்டு விடுவதால் படம் பார்க்கும் போது நன்றாக உள்ளது. அனைத்துப்பாடல்களுமே நன்றாக உள்ளது ஆனால் “வெண்பனியே” பாடலை எங்கே வைப்பது என்று தெரியாமல் சம்பந்தமே இல்லாத ஒரு மொக்கை இடத்தில் வைத்து விட்டார். எரிச்சல் தான் வந்தது. பாட்டுப் போட்டால் வெளியே கிளம்பும் இம்சைகள் தொல்லைகள் வேறு தாங்க முடியவில்லை கிர்ர்ர்ர். எங்கள் வரிசையில் இருந்த ஒருவர் பாட்டுப்போட்டால் எழுந்து கடுப்பைக் கிளப்பிக்கொண்டு இருந்தார்.
விமர்சனம் என்கிற பெயரில் அனைத்து சுவாரசியங்களையும் கூறும் பாவத்தை நான் விட்டொழித்து நீண்ட நாட்களாகி விட்டதால் கதை பற்றி அதிகம் இல்லை என்று டென்ஷன் ஆக வேண்டாம்
படத்தில் உள்ள சில குறைகளை கூறினால் திருப்பங்களையும் கூற வேண்டி வருவதால் பலவற்றை தவிர்க்க வேண்டியதாகி இருக்கிறது. எனவே சில குறைகள் இருந்தாலும் “கோ” சுவாரசியமான படமே! இந்தப்படத்திற்கு குழந்தைகள் அனுமதி இல்லை (சிங்கப்பூர் ல் NC16)
Directed by K. V. Anand
Produced by Kumar Jayaraman
Written by K. V. Anand, Subha
Starring Jeeva, Ajmal Ameer, Karthika Nair,Piaa Bajpai
Music by Harris Jayaraj
Cinematography Richard M. Nathan
Editing by Anthony
Studio R. S. Infotainment
Distributed by Red Giant Movies
Release date(s) April 22, 2011
கொசுறு
ஜப்பான் சுனாமியில் சிக்கிய பலர் சில நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்கள் அது போல மூன்று நாட்கள் கழித்து மீட்கப்பட்ட குழந்தை இது. மூன்று நாட்கள் எப்படி தாக்குப்பிடித்தது என்று நிஜமாகவே ஆச்சர்யமாக உள்ளது! ஆயுசு கெட்டி போல இருக்கு
மீட்கப்பட்ட சில வாரங்களில் உடல் நிலை நன்கு தேறிவிட்டதாம். தனது பெற்றோருடன் எப்படி சந்தோசமாக போஸ் கொடுக்கிறது பாருங்கள்
பெரிய சோகங்களை மறக்க சின்ன சின்ன மகிழ்ச்சிகள்.
Subscribe to கிரி Blog by Email
கிரி Blog facebook Fan page ல் இணைய
Related posts:


{ 14 comments… read them below or add one }
விரிவான விமர்சனம்.
//நாமும் இதைப்போல வித்யாசமான படங்களை ஏன் எடுக்க முயற்சிக்கக்கூடாது! என்று நம்மை எண்ண வைத்து விட்டார்கள். எனக்கு புகைப்படம் எடுக்க ஆர்வம் இருந்தாலும் பொறுமை இல்லை இதைப் பார்த்தவுடன் ஆர்வம் அதிகம் ஆகியது உண்மை.//
ஆர்வத்தை தக்க வையுங்கள். வாய்ப்பு கிடைக்கையில் செயல் படுத்துங்கள்:)!
கொசுறு…
//பெரிய சோகங்களை மறக்க சின்ன சின்ன மகிழ்ச்சிகள்.// ஆம், நெகிழ்வும் கூட.
நல்லது கிரி, அப்ப ஒரு முறை பார்க்கலாம் இல்லையா
.
கதையை சொல்லிவிட கூடாது என்று மேலோட்டமாக நீங்கள் போக நினைப்பது புரிந்தாலும், ரொம்பவும் பொதுவாகவே பதிவு நீள்வதால் கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது
தவறாக நினைக்க வேண்டாம்.
பகிர்வுக்கு நன்றி
.
நன்றி கிரி….
நேத்து தான் “கோ” பார்த்தேன்,,,, படம் நல்லா இருக்கு… சில இடங்களில் கொஞ்சம் உறுத்தல் ஆனால் அதுவும் இல்லாமல் எடுக்குறது ரொம்ப கஷ்டம்தானே….
கண்டிப்பா பார்க்கலாம்…. குடுக்குற துட்டுக்கு மோசம் இல்ல….
இந்த வாரம் பார்க்கனும்…
விமர்சன பகிர்வுக்கு நன்றிண்ணே
நிறை:
1. க்ரைம் நாவலுக்குரிய இரண்டாம் பாதி திரைக்கதை.
2. போட்டோக்களை வைத்து நகர்த்தியிருக்கும் முதல் பாதி திரைக்கதை.
3. ஜீவா, பியா, கோட்டா, பின்பாதி அஜ்மல்
4. ஹாரிஸின் பின்னனி இசை.
குறை:
1. கதையின் ஒவ்வொரு முக்கியமான திருப்பத்திலும் இடைச்செருகலாக வரும் பாடல்கள் திரைக்கதை ஓட்டத்தை வெகுவாக பாதிக்கிறது.
2. இந்த கதைக்கு ஏற்ற பாடல்கள் இல்லை (தனியாக டி.வியில் பார்க்கும்போது கேட்கும்போது நன்றாக இருக்கும் சந்தேகமில்லை), இந்த கதைக்கு பாடல்கள் வேறுமாதிரி, சற்று வேகமாக இருக்க வேண்டும். ஹாரிஸ் தனக்கு பிடித்த ஸ்டீரியோ டைப் பாடல்களை விட்டு விட்டு கதைக்காக எப்போது இசையமைப்பாரோ?????? யுவன் இஸ் ரைட் சாய்ஸ்.
3.முன்பாதி அஜ்மல் (நடிக்க ரொம்ப சிரமப்படுகிறார்), கார்த்திகா (சப்ப பிகருங்கோ), இந்த கேரக்டருக்கு நயன்தாரா சரியான தேர்வாக இருக்கும்.
4. சில லாஜிக் சொதப்பல் (தேர்தல் நடைபெரும் காலம் பல மாதங்கள் போல தோன்றுகிறது, பிற கட்சியினர் பிரச்சாரம், பணவிநியோகம் எல்லாம் தொடங்கிய நீண்ட நேரத்திற்கு பின்னர் சிறகுகள் வேட்பாளர்களை தேர்வு செய்வது…..)
சில ஒப்பீடுகள்:
பிணங்களின் மீது அரசியல் செய்யும் அந்த கேரக்டர், ஈழத்தமிழர்களின் வாழ்வில் தங்கள் பிழைப்பைத்தேடிய / தேடும், சீமான், நெடுமா, திருமா, ராம்தாஸ்,வைகோவை ஏனோ நினைவு படுத்துகிறது.
நக்சல் இயக்கம் புலிகள் இயக்கத்தை நினைவு படுத்துகிறது.
பி.கு:
படத்தை வேறுயாரும் வாங்கி தேர்தலுக்கு முன்பே வெளியிடாமல் செய்த சாதுர்யம் . அடேய்யப்பா.
விமர்சனத்திற்கு நன்றி கிரி எப்படியும் எந்த வாரம் பார்த்து விடுவேன்
படம் எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு கிரி
நிச்சயம் இன்னும் ஒரு டைம் பாக்கணும்
- அருண்
Ko சரியான வார்த்தை. ஏனென்றால் கோ என்றால் அரசன் என்று பொருள்படும்.
படம் சூப்பர் …. நீண்ட நாட்கள்/மாதம் பிறகு ஒரு நல்ல தமிழ் படம் தியடர்ரில் பார்த்தேன்.. உங்கள் விமர்சனம் நன்றாக இருந்து.
அண்ணே!!! கோ க்கு கோ ன்னு சொல்றீங்க !!
அண்ணே!!! கோ க்கு கோ ன்னு சொல்றீங்க !!
//“வெண்பனியே” பாடலை எங்கே வைப்பது என்று தெரியாமல் சம்பந்தமே இல்லாத ஒரு மொக்கை இடத்தில் வைத்து விட்டார். எரிச்சல் தான் வந்தது.//
Correct Giri…….
ராமலக்ஷ்மி, சிங்கக்குட்டி, RK நண்பன், மாணவன், காத்தவராயன், சரவணன், பிரபு, சலீம், ராஜ் மற்றும் தமிழ் வருகைக்கு நன்றி
@ராமலக்ஷ்மி
இந்தப்படம் பாக்கும் போது உங்களைத்தான் நினைத்தேன்
கண்டிப்பாக பாருங்க.
@சிங்கக்குட்டி
சுட்டியமைக்கு நன்றி. மாற்றிக்கொள்கிறேன்.
@காத்தவராயன்
நீங்க கூறிய கடைசில மேட்டர் தான் டாப்பு
எப்படி எல்லாம் யோசிக்கறாங்க.
@பிரபு
படத்துக்கு போ(GO)ங்க என்ற அர்த்தத்தில் கூறியது அந்த Go
லிங்க் பாருங்க Ko review என்று தான் இருக்கும்.
@ராஜ்
“கோ க்கு கோ ன்னு சொல்றீங்க”
அப்ப சரியாத்தானே கூறி இருக்கிறேன் ஹா ஹா ஹா
இதுக்கு பேர் தான் தெளிவா குழப்புறதா
Ko Go என்றால் ஓகே அது என்ன கோ கோ இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு தமிழ் பற்று ஆகாது
Good Film To Watch.