இலவசம் இந்தத்தேர்தலில் தமிழ்நாட்டையே கலக்கிக்கொண்டு இருக்கிறது. இரு பெரிய அரசியல் கட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு இலவசத்தை அறிவித்து இருக்கின்றன.
இலவசம் அவசியமா!
இலவசம் அவசியமா இல்லையா என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட பார்வை. கீழ்த்தட்டு மக்கள் இலவசங்களை அதிகம் எதிர்பார்க்கிறார்கள் சரி! அவர்கள் தான் இல்லாதவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றால் நல்ல நிலைமையில் உள்ளவர்கள் கூட இதற்க்கு ஆசைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் வருத்தமளிக்கும் விசயமாக உள்ளது. இலவசம் என்றால் பெனாயில் குடிக்க சொன்னால் கூட ஓகே! என்பது நமக்குத்தான் பொருந்தும் போல இருக்கு. நாம் வாங்கும் பொருளால் பயன் இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவன் வாங்குறானா! அப்ப எனக்கும் வேண்டும். இது தான் ஒவ்வொருவரின் எண்ணவோட்டம்.
ஜெ முதலில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் கொடுத்தது தான் இதன் ஆரம்பம் இதை சமாளிக்க கலைஞர் கையில் எடுத்த ஆயுதம் தான் இலவச தொலைக்காட்சி. இந்த சைக்கிளாவது மாணவர்களுக்கு தான் பயன்படுகிறது அப்படியே மற்றவர்கள் பயன்படுத்தினாலும் சரி சைக்கிள் தானே என்று இருந்தது அதுவுமில்லாமல் அது எண்ணிக்கையில் குறைவாக இருந்ததால் யாரிடமும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மக்களிடம் என்ன கூறினால் அசைந்து கொடுப்பார்கள் என்பதை அறியாதவரா கலைஞர்! இத்தனை வருஷம் அரசியலில் இருந்து இது கூடவா தெரிந்து இருக்க மாட்டார் அதனால் அவர் அறிவித்த அதிரடி அறிவிப்புத் தான் இலவச வண்ண தொலைக்காட்சி.
தொலைக்காட்சி என்பது அவசியமான ஒன்று தான் மறுக்கவில்லை ஆடம்பரத்தில் இருந்து அத்யாவசிய தேவைக்கு எப்போதோ மாறி விட்டது தொலைபேசி போல ஆனால் மக்களுக்கு அதை விட முக்கிய சேவைகளை அரசு செய்ய வேண்டியிருக்கிறது. தொலைக்காட்சி எல்லாம் எப்படியும் மக்கள் வாங்கி விடுவார்கள் அப்படியே அவை இல்லை என்றாலும் ஒன்றும் குடி முழுகி விடப்போவதில்லை ஆனாலும் மக்களுக்கு அதன் (இலவசம்) மேல் கவர்ச்சி. இதில் ஏழை பணக்காரன் என்ற எந்த வித்தியாசமுமில்லை.
சரி இதனால் ஏதாவது மக்களுக்கு பயன் உண்டா?
ஒரு வெங்காய பயனும் கிடையாது ஒரே பயன் இவர்கள் செய்த ஸ்பெக்ட்ரம் ஊழல் இவர்கள் கொடுத்த இலவச தொலைக்காட்சியாலையே எல்லோரிடமும் சென்று சேர்ந்து விட்டது. இதற்காக செலவிட்ட தொகையை எத்தனை ஆக்க பூர்வமான செயல்களுக்கு அரசு செயல்படுத்தியிருக்கலாம்… அத்தனையும் அல்லது பெரும்பான்மை வீண்.
யாருமே அப்போது இதனால் பயனடையவில்லையா?
அதெப்படி ஒரேயடியாக கூற முடியும். நிச்சயம் இதனால் ஒரு சிலர் பயனடைந்து இருப்பார்கள். உண்மையிலே மிக ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் இதனால் மகிழ்ந்து இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை ஆனால் இதற்க்கு மின்சாரம் அதன் பிறகு தொலைக்காட்சி என்றாலே கேபிள் டிவி இல்லாமல் இருக்க முடியாது ஆக மொத்தம் இதனால் அவர்களுக்கு இன்னும் கூடுதல் செலவு தான். இதனால் பயனடைந்தவர்கள் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் தான்.
ஒண்ணுமில்லாதவன் தான் இதை வாங்குகிறான் என்றால் நல்ல இருக்கிறவனும் இதை வாங்க அடிதடியே போடுறான். முதலில் கொஞ்சம் பேருக்கு இந்த வண்ணதொலைக்காட்சி என்றவர்கள் பெரும்பான்மையானவருக்கு கொடுக்க முடிவு செய்தார்கள் காரணம் அவனுக்கு மட்டும் கொடுத்து தனக்கு வரவில்லை என்று மற்றவர்கள் கோபித்து அதனால் பிரச்சனை ஆனால் என்ன செய்வது என்ற பயம். வாங்குவதால் நமக்கு பயனா! அது பற்றி எல்லாம் கவலை இல்லை. அவனுக்கு கொடுக்கிறியா அப்ப எனக்கும் வேண்டும். அதை நான் பயன்படுத்துகிறேனா அல்லது பெட்டியில் வைத்து இருக்கிறேனா என்பது விசயமில்லை.
அரசு காண்ட்ராக்ட் என்றாலே அங்கே லஞ்சம் இல்லாமல் இருக்க 100% வாய்ப்பில்லை என்பது சிறுவனுக்குக்கூட தெரிந்த ஒரு விஷயம். நம்ம பகுதியில் சாலை போடுகிறார்களா, கட்டிடம் கட்டுகிறார்களா, தண்ணீர் தொட்டி அமைக்கிறார்களா, குழாய் பதிக்கிறார்களா என்று எந்த விஷயம் வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள் அங்கே லஞ்சம் இல்லாமல் இருக்காது. ஒரு சில இடங்களில் நீங்கள் கண்டிப்பாக கவனித்து இருப்பீர்கள் சாலை போட்ட சில நாளிலேயே மோசமாகி விடும் இதற்குக்காரணம் சாலை அமைத்தவர்கள் திறமையில்லாதவர்கள் என்பதல்ல. காண்ட்ராக்ட் எடுத்தவர் அதிக லஞ்சப்பணம் கொடுத்ததால் அவரால் ஒதுக்கப்பட்ட தொகையில் தரமான பொருட்களை பயன்படுத்த முடியாததே காரணமாகும். சுருக்கமாக கூறுவது என்றால் ஒரு சாலை போட ஒதுக்கப்பட்ட பணம் 1000 ருபாய் அதில் 300 ருபாய் காண்ட்ராக்டர் லஞ்சமாக கொடுத்து விட்டால் அவரால் எப்படி 700 ரூபாயில் சாலை அமைக்க முடியும்?
இதே போல தான் வண்ண தொலைக்காட்சி வழங்குவதிலும் நடந்து இருக்கும். எத்தனை வண்ண தொலைக்காட்சிகள் கொடுத்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை குறைந்த பட்சமாக ஒரு கோடி மக்களுக்கு கொடுக்கப்பட்டதாக வைத்துக்கொள்வோம். ஒரு தொலைக்காட்சி விலை 1200 ருபாய் என்று வைத்துக்கொண்டால் அதற்கு ஒரு தொலைக்காட்சிக்கு 100 ருபாய் கமிசன் என்று வைத்தாலே கணக்கு எங்கேயோ போகிறது. நான் கூறியது குறைந்த பட்ச கணக்காகும்.
மக்களின் அடிப்படை தேவைகள் சாலை, பேருந்து, தண்ணீர், மின்சாரம் போன்றவை தானே தவிர அரசு தரும் இலவச தொலைக்காட்சியோ, மிக்சியோ அல்லது கிரைண்டரோ அல்ல. இவற்றை எல்லாம் மக்களால் வாங்க முடியும் ஆனால் சாலை பேருந்து தண்ணீர் மின்சாரம் போன்றவற்றை அரசு மட்டுமே செய்து தர முடியும். கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் படும் மக்கள் படும் வேதனை சொல்லி மாளாது. சென்னையில் இருப்பவர்களுக்கு இதன் முழு வலி புரியாது காரணம் இங்கே அதிகம் மின்சார தட்டுப்பாடில்லை கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களை ஒப்பிடும் போது.
மின்சார தட்டுப்பாட்டிற்க்குக்காரணம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலைகள் என்கிறார்கள் அப்படி என்றால் சரியான கட்டமைப்பை நிறுவாமல் ஏன் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கினார்கள்? பற்றாக்குறை வரும் என்று கூட தெரியாமல் எப்படி அரசு வழங்கியது? தொழிற்சாலைகள் அதிகம் வருவது நல்ல விஷயம் தான் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் அதன் சுற்றுப் பகுதிகள் வளர்ச்சி அடையும் ஆனால் அதற்க்குண்டான கட்டமைப்பை நிறுவாமல் அனுமதி வழங்கி மக்களை எப்படி சிரமப்படுத்தலாம்!
Read: என்னங்கையா நடக்குது இங்கே? – மின் தடை ஒரு அலசல்
கலைஞர் இலவச அறிவிப்பை எல்லாம் தூக்கிசாப்பிடுற மாதிரி ஜெ இலவசங்களை தனது தேர்தல் அறிக்கையில் வாரி வழங்கி இருக்கிறார். எவனும் வேலை செய்யவே தேவையில்லை அரசு கொடுப்பதை வைத்துக்கொண்டு ஜாலியாக இருக்கலாம் அந்த அளவிற்கு உள்ளது. இதை எல்லாம் செயல்படுத்த முடியாது என்பது நன்றாகத்தெரிகிறது இருப்பினும் இவற்றை கூறக்காரணம் இப்படி கூறவில்லை என்றால் தேர்தலில் கடந்த முறை தொலைக்காட்சி விசயத்தில் கோட்டை விட்டது போல இந்த தேர்தலிலும் ஆகி விடும் என்று நன்றாக தெரிந்து இருக்கிறார் ஜெ. எனவே எனக்கு இதில் எந்த வித ஆச்சர்யமுமில்லை. என்ன… நான் அளவோடு எதிர்பார்த்தேன் இதைப்பார்த்தால் கண்ணை கட்டுகிறது. புதிதாக எவரிடமும் இதை காண்பித்தால் நம்மை காமெடி செய்கிறார்கள் என்று நினைத்து விடுவார்கள் அந்த அளவிற்கு இலவசம் இலவசம் இலவசம்.
ஜெ விற்கே நன்றாகத்தெரியும் இதை எல்லாம் நிச்சயம் செய்ய முடியாது என்று அப்படி இருந்தும் கூறக்காரணம் கலைஞர் அறிவிப்புகள் தான். கண்டிப்பாக வேறு எந்த எதிர்க்கட்சியாக இருந்தாலும் இதைத்தான் செய்து இருப்பார்கள் கொஞ்சம் கூட குறைவாக இருக்கும் அவ்வளவே. ஜெ அறிவித்து இருப்பதை எல்லாம் செய்தால்… (முடியாது அது வேறு விஷயம்) நினைத்தாலே கிறுகிறுப்பாக உள்ளது.
இலவசத்தால் தகுதியானவர்களை விட தகுதியில்லாதவர்களே அதிகம் பயனடைந்து வருகிறார்கள் மற்றும் அதை தவறாக பிரயோகித்து வருகிறார்கள் எனவே இலவசம் என்று கொடுப்பதை விட மக்களின் அன்றாட பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்தாத வரை நமக்கு எந்த விடிவு காலமும் இல்லை. ஏற்கனவே இலவசம் அதிகம் ஆனதால் பலரும் வேலைக்கு செல்லவே யோசிக்கிறார்கள் இதனால் கிராமங்களில் விவசாயக் கூலி வேலைக்கு ஆள் கிடைப்பதே பெரும்பாடாக உள்ளது. உழைக்காமலே அனைத்தும் கிடைக்கும் போது யாருக்கு கஷ்டப்பட்டு வேலை செய்யத்தோன்றும்.
இப்படி எல்லாம் இலவசங்களை தேர்தல் அறிக்கையில் அறிவிக்கக்கூடாது என்று ஏதாவது சட்டம் வராதவரை இவை தொடர்ந்துகொண்டே தான் இருக்கும். இவை எல்லாம் எங்கே சென்று முடியுமோ! தற்போதெல்லாம் வெறுத்துப் போய் விட்டது. போங்கடா! என்னத்தையோ பண்ணித்தொலைங்க! என்று தான் நினைக்கத்தோன்றுகிறது.
கொசுறு 1
கேப்டன் வடிவேல் பிரச்சனை ஊர் அறிந்தது. கேப்டன் தன்னை மிரட்டுவதாக ஆரம்பம் முதல் கூறிக்கொண்டு இருக்கிறார் இந்தத்தேர்தலில் கேப்டனை எதிர்த்து நிற்கப்போவதாக அறிவித்து இருந்து கடைசியில்!! வாபஸ் பெற்று விட்டார். தற்போது தன்னை திமுக கூட்டணியில் இணைத்துக்கொண்டுள்ளார். இவர் சமீபத்தில் பேசிய பேச்சைப் பார்த்தால் அவர் திமுகவில் இணைந்ததே கேப்டனை தாக்குவதற்க்காகத்தான் என்பதைப்போல சகட்டுமேனிக்கு கேப்டனை பேசி வருகிறார். தண்ணி போடுறவன், அவன் இவன், லூசு, நீ ஜனாதிபதின்னா நான் ஒபாமா!! என்று இஷ்டத்திற்கும் உளறிக்கொண்டு இருக்கிறார்.
இது எப்படி இருக்கு என்றால் கவியரசர் பாடலான “பரமசிவன்” பாடல் தான் நினைவிற்கு வருகிறது. கலைஞர் ஆதரவு உள்ளது என்கிற தைரியத்தில் பேசி வருகிறார் நாளைக்கு ஒருவேளை காட்சி மாறினால் இவர் நிலை என்னவாகும் என்று நினைத்துப்பார்த்தாரா! கேப்டனை விடுங்கள் அம்மா சும்மா விடுவாரா. இந்திய அரசியலின் மூத்த தலைவர்களுள் ஒருவர், வயதானவர், முன்னாள் முதல்வர் என்றும் பாராமால் குண்டு கட்டாக தூக்கி ஜெயிலுக்குக் கொண்டு போனவருக்கு வடிவேல் எல்லாம் சுண்டைக்காய் மாதிரி. வடிவேல் கற்பனை செய்து இராத நிகழ்வை எல்லாம் அவர் வாழ்வில் நடத்தி டரியல் ஆக்கி விடுவார்.
கேப்டன் இது வரை வாயை திறக்காமல் இருக்கிறார் ஒருவேளை சரிக்கு சமமாக பேசினால் டேமேஜ் ஆகி விடும் என்று யோசிக்கிறாரோ என்னவோ! ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள்.. இங்கே நிலைமையே வேறாக இருக்கிறது. வடிவேல் கொஞ்சம் அடக்கி வாசிப்பது அவருக்கு நலம் இல்லை என்றால் பின்னால் அவர் வாழ்க்கை நிஜமாகவே காமெடி ஆக வாய்ப்புள்ளது.
கொசுறு 2
நேற்றைய ஆட்டத்தில் இந்தியர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது
அசைக்க முடியாத அணியாக இருந்த ஆஸியை காலிறுதியோடு வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். நிச்சயம் இது அவர்களுக்கு கடும் அதிர்ச்சியாக இருக்கும் மற்றும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடமும் இதே பேச்சாகவே இருந்து இருக்கும். வார்ன், மெக்ராத் போன்றவர்கள் இல்லாததால் பலம் குன்றிய அணியாகவே இருந்தது. எனவே கடந்த முறை போல எளிதாகவெல்லாம் வெற்றி பெற முடியாது என்பது பலரின் கருத்தாக இருந்தது. அதை நிரூபிக்கும் வகையில் நேற்றைய போட்டி இருந்தது. நம்மவர்கள் பேட்டிங் ஃபீல்டிங் பவுலிங் என்று அனைத்திலும் கலக்கினார்கள். இதுவும் நாம் வெற்றி பெற முக்கிய காரணம். நம்மவர்கள் திறமையானவர்கள் தான் ஆனால் தெனாவெட்டு சோம்பேறித்தனத்தால் தான் தோல்வி அடைகின்றனர். <Image Credit>
நேற்றையப்போட்டி நிச்சயம் பலருடைய இதயத்துடிப்பை எகிற வைத்து இருக்கும்
தோனி மற்றும் முனாப் தவிர அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள். மீண்டும் ஒரு முறை ஆட்டநாயகனாக யுவராஜ் கலக்கினார். முன்பெல்லாம் பாக் உடன் விளையாடும் போது தான் பரபரப்பாக இருக்கும் தற்போது ஆஸிக்கு மாறி விட்டது. என்ன வாய்டா சாமி! ஒவ்வொருத்தனும் என்னா பேச்சு பேசுறானுக! சேர்த்து வைத்து அடிச்சாச்சு. பாண்டிங் நேற்று எந்த டிவியை உடைத்தார் என்று தெரியவில்லை
இந்த உலகக்கோப்பையில் எந்த அணி வெற்றி பெற்றாலும் சந்தோசமே! இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். இன்று முழுவதும் கிரிக்கெட் பேச்சாகவே இருக்கும் வெள்ளிகிழமை வேற என்ஜாய் மாடி
Related posts:


{ 18 comments… read them below or add one }
ரெய்னா அடிச்ச அந்த ஒரு சிக்ஸும் ஒரு போரும் தான் ஆட்டத்தை மாற்றியது. அப்போ தான் பாண்டிங் மொகத்துல அந்த டென்ஷன் தெரிந்தது.
ஆனா நான் இலவசங்கள பாத்து டென்ஷன் ஆகுற நிலைமை எல்லாம் தாண்டி போயி பல வருஷங்கள் ஆச்சு.
இலவசத்தால் தகுதியானவர்களை விட தகுதியில்லாதவர்களே அதிகம் பயனடைந்து வருகிறார்கள் மற்றும் அதை தவறாக பிரயோகித்து வருகிறார்கள் எனவே இலவசம் என்று கொடுப்பதை விட மக்களின் அன்றாட பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்தாத வரை நமக்கு எந்த விடிவு காலமும் இல்லை. ஏற்கனவே இலவசம் அதிகம் ஆனதால் பலரும் வேலைக்கு செல்லவே யோசிக்கிறார்கள் இதனால் கிராமங்களில் விவசாயக் கூலி வேலைக்கு ஆள் கிடைப்பதே பெரும்பாடாக உள்ளது. உழைக்காமலே அனைத்தும் கிடைக்கும் போது யாருக்கு கஷ்டப்பட்டு வேலை செய்யத்தோன்றும்.
…….இலவச டிவியை கூட, அங்கே இருந்து வாங்கி வெளியில் விற்றவர்கள் அதிகம். அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்ல முடியாது என்று தெரிகிறது.
பல விஷயங்களுடன் ஒத்துப் போகிறேன்:)!
இப்படி எல்லாம் இலவசங்களை தேர்தல் அறிக்கையில் அறிவிக்கக்கூடாது என்று ஏதாவது சட்டம் வராதவரை இவை தொடர்ந்துகொண்டே தான் இருக்கும்
கரெக்ட் கிரி
அண்ணே !!!! தோணி மாதிரி ஒன்னும் பண்ணாத ஆளுகிட்ட கோப்பையா
எப்படியிருக்கீங்க கிரி! இலவசங்கள் அரசியல் அறிக்கை நம்மைப்போன்றவர்களுக்கு வருத்தம் அளிக்கிறது.கூடவே வடிவேலை முதல்வர் பகடைக்காயாக ஆக்கிக்கொளவதும்.
இந்த கணத்தில் எனக்கு தோன்றியது.அதாவது பொருளாதாரத்தை வேகப்படுத்தும் கொள்கையாக வாங்கும் திறன் இருந்தால் மட்டுமே உற்பத்தி திறன் அதிகமாகும்.மாறாக மக்களிடம் வாங்கும் திறன் குறைவதும் அதே நேரத்தில் அவர்கள் வாங்கும் திறனில் உற்பத்தி செய்யும் பொருட்கள் இலவசம் என்ற பெயரில் கிடைப்பதால் உற்பத்தி பெருகும் என்பதோடு இது தனிமனித பேரங்களுக்கும் அதே நேரத்தில் மொத்த விலையில் வாங்குவதால் விலை குறையும் சாத்தியமிருந்தாலும் தனி மனித பேரங்கள்(ஊழல்) காரணமாக இதன் விலை குறையாது என்பதோடு இலவசம் என்ற பெயரில் மறைமுகமாக வரி என்ற பெயரில் மக்கள் மீதே சுமத்துப்படும் என்கின்ற பொருளாதார இலக்கணங்கள் இலவசங்களை நாடுவோருக்குப் புரிவதில்லை.
கருணாநிதியும்,ஜெயலலிதாவும் தமிழகத்தை கீழ்நிலைக்குத் தள்ளுகிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.அதே நேரத்தில் கணினியின் பயன்பாடு இணையதளம் மூலமாக பொதுக்கருத்துக்களை கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பையும் தரும் சாத்தியமிருக்கிறது.
சென்னையில் தொசிபா நிறுவனத்தின் தொழிலக கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருப்பதைக் க்ண்டேன்.கணினி உற்பத்தியும் இலவச கணினியும் சென்னையில் நிகழ்ந்தால் மகிழ்ச்சியே இல்லையெனில் சீனாவுக்கு மொத்த வியாபரம் செய்து விடுகிறார்களோ எனவும் தெரியவில்லை.
இலவசங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றாமல் அதர்க்குண்டான தொகைக்கு ஈடாக சாலை, குழாய் போன்றன அமைத்தால் நலமாக இருக்கும் .
பதிவு ரொம்ப அருமை……
வடிவேல் பேச்சை அவரே திரும்ப கேட்டால் தான் எவ்வளவு கொச்சையாக பேசிகிறார் என்பது தெரியும்…
வடிவேலுக்கு ஏதானாலும் ஆப்பு தான்….
மேடை நாகரிகம் தெரியவில்லை……
இலவச அறிக்கையில் எதாவது ஒரு கட்சி invetor ரும் அறிவித்தால் மக்கள் எல்லோரும் அந்த கட்சிக்கே வாக்களிப்பார்கள்…….
தே.மு.தி.கவினரே விஜயகாந்த்தை இனி “கேப்டன்” என்று கூறுவதை மறுபரிசீலனை செய்யும்படி, கேப்டன் என்ற சொல்லுக்கு வடிவேல் கொடுத்துள்ள புதுவிளக்கம், உண்மையிலேயே ரசிக்கத்தக்கது.
மற்றபடி வடிவேலின் பேச்சு……..
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா
வணக்கம் கிரி சார் …
இலவச தொலைகாட்சியால சன் dth எவ்ளோ சம்பாதிச்சங்க ..
தமிழ் பெயருக்கு வரி விலக்கு ல சன் பிக்ட்சர் ,ரெட் ஜெயன்ட் மூவி .. எவ்ளோ சம்பாதிசாங்க… போங்க சார் .. நீங்க யாருக்கும் புண்ணியம் இல்லை னு சொல்லுரிங்க .
ஆனா வடிவேலுக்கு ஆப்பு கண்பார்ம்
(என்ன செஞ்சான் என் கட்சிக்காரன் .. தெரியாம ஒரு போன போட்டதுக்கு ஒரு வாரம் வச்சி அடிப்பியா )
இந்த பண்ணாடப் பயலுக இலவசங்குற பேர்ல பண்றதெல்லாம் கொடுமையிலும் கொடுமை. எனக்கு இப்போ இருக்குற வெறியில இவனுங்கள வெட்டிபோட்டாக் கூட வெறி அடங்காது. இந்த ஓட்டுப் பொறுக்கி நாயிங்கதான் நம்ம தமிழ்நாட்டோட சாபக் கேடு.
நீங்க காமெடி பண்ணாதீங்க கிரி… வடிவேலு பேசுறத ரசிச்சுட்டு போயிட்டே இருங்க. ஜெயா வடிவேலுவை எல்லாம் ஒண்ணும் பண்ண மாட்டா. விஜயகாந்த மட்டுந்தான் வடிவேலு வாங்கு வாங்குன்னு வாங்குறான், அதை ஜெயாவே ரொம்ப ரசிச்சுட்டுதான் இருப்பா. கருப்பு எம்.ஜி.ஆர்-ன்னு இவன் பண்ற கூத்தால ஏற்கனவே செம காண்டுல இருக்குறா அவ.
இலவசம் என்று கொடுக்கும் எல்லாமே லஞ்சம்தானே? அதை ஏன் தடுக்கமுடிவதில்லை?
அதை விட்டுவிட்டு பிரியாணி போடுவதை பக்கம் பக்கமாக பத்திரிக்கைகளும் எழுதுவது வெட்கம்
.
வடிவேலு பேச்சு கொஞ்சமல்ல ரொம்பவே ஓவர், அவர் நகைச்சுவைக்காக அவர்மீது இருந்த மதிப்பு மொத்தமும் போய்விட்டது, விரைவில் அரசியல்வாதிகள் போதைக்கு தான் ஊறுகாய் ஆகிவிட்டது புரியும்
.
இது எல்லாம் தாண்டி நம்ம மக்கள் என்ன திருந்தவா போறாங்க? தேர்தல் முடிவை பாருங்கள்….!
நன்றி.
தினேஷ் சித்ரா ராமலக்ஷ்மி சரவணன் ராஜ் ராஜநடராஜன் ரங்கநாதன் மலர் காத்தவராயன் ஆனந்த் முத்துக்குமார் மற்றும் சிங்கக்குட்டி வருகைக்கு நன்றி
@தினேஷ் புதன் கிழமை என்ன ஆகுதுன்னு பார்ப்போம்
@சித்ரா நிச்சயம் மக்களும் காரணம்.
@ராஜ் நம்ம ஊர் அரசியல்வாதிக கூடத்தான் எதுவும் பண்ணுறதில்லை ஆனாலும் அரசியல் ல இருபதில்லையா
சும்மா லுலுலாய்க்கு….
தோனி அவர் சரியாக விளையாடவில்லை என்றாலும் அவர் தலைமையில் பல வெற்றிகளை நமது அணிக்கு பெற்று தந்து இருப்பதை மறக்க முடியாது. நமக்கு தேவை அணியின் வெற்றி யார் அடித்தால் என்ன?
@ராஜ நடராஜன் ரொம்ப நல்லா இருக்கேன்
நமது மக்களுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை அதனால் இப்படியே ஓட்டிக்கொண்டே இருக்க வேண்டியதாக உள்ளது. காமராஜரையே தோற்கடித்த பெருமை நமக்கு உண்டு என்பதால் நம்ம மக்களுக்காக என்னத்தை வக்கலாத்து வாங்குறது.
மற்றபடி உற்பத்தி விலை போன்ற கணக்குகள் எனக்கு ரொம்ப தூரம்
@மலர்
நீங்க வேற வடிவேல் திரும்ப அதே மாதிரி (அதை விட) பேசி இருக்கிறார். இங்கே போய் பாருங்க http://thatstamil.oneindia.in/movies/news/2011/03/ec-slaps-case-on-vadivelu-tn-assembly-polls-aid0091.html
@ஆனந்த்
@முத்து நிச்சயமா என்னால வடிவேல் பேசுற சாக்கடையை ரசிக்க முடியாது. அவன் இவன், லூசு, பீசு என்று கண்டபடி பேசி இருக்கிறார். அவருக்கு விஜயகாந்த் மேல கோபம் இருக்கலாம் அதை வெளிக்காட்ட இது இடமல்ல. ஒரு பொது மேடையில் இப்படி கீழ்த்தரமாக பேசுவதை எப்படி ரசிக்க சொல்கிறீர்கள்? எனக்கு புரியல.
நான் ஜெ வைக்கூறியது விஜயகாந்தை சொன்னதற்காக அல்ல. விஜயகாந்தை திட்டியதோட அவங்க கூட்டணியை பற்றியும் நக்கலடித்து இருக்கிறார். அவருடைய அரசியல் அனுபவத்திற்கு!! இதெல்லாம் ரொம்ப அதிகம்.
மற்றபடி தேர்தல் முடிந்த பிறகு ஜெ விஜயகாந்தை கழட்டி விட்டு விடுவார் என்பதை நான் மட்டுமல்ல பலரும் அறிந்தது தான்.. விஜயகாந்தே தெரிந்தே தான் வைத்து இருப்பார்.
அப்புறம் நீங்களும் பொது இடத்தில் பேசும் போது அரசியல் தலைவர்களை (பெயர் குறிப்பிட்டு) மரியாதை இல்லாமல் முறையில் கூறுவதை தவிருங்கள். நாமெல்லாம் இணையத்தில் எழுதுவதால் கேட்க யாருமில்லை என்று எழுதுகிறோம். நாளைக்கே அடி விழுகுது என்றால் இதைப்போல பேசுவோமா! எனக்குக் கூடத்தான் யாரையும் பிடிக்காது இருவருக்குள் நேராக பேசும் போது எப்படி வேண்டும் என்றாலும் பேசிக்கொள்ளலாம் அதே எழுத்தில் வரும் போது மற்றவர்கள் பார்க்க படிக்க நேரும் போது நாகரீகமாகவே பேச எழுத வேண்டும். அப்புறம் நமக்கும் இவர்களுக்கும் என்ன வித்யாசம்.
@சிங்கக்குட்டி தேர்தல் முடிவு வந்தால் தான் தெரியும் பலர் இது வரை கூறிக்கொண்டு இருந்த லட்சணம்
அது யாராக இருந்தாலும் (திமுக அதிமுக, ஊடகங்கள் மற்றும் பதிவர்கள்)
நான் வடிவேலோட பேச்ச வழக்கமான அவர் சினிமா டயலாக்கா நெனச்சு ரசிக்க சொன்னேன், ஒரு முதலமைச்சரே இப்பிடி பேச விட்டு வேடிக்கை பாக்குறதெல்லாம் ஓவர்தான், ஆனா நடக்குற மத்த அசிங்கங்களுக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமே இல்லங்க.
நான் மரியாதை இல்லாமல் பேசிய ஒரே பதிவு http://www.giriblog.com/2010/09/expression-of-a-stone-man.html இது தான். இது கூட தனிப்பட்ட யாரையும் தாக்கி இருக்காது.
அவர் கப்பல் கேப்டன் பற்றி சொன்னதைகேட்டு எனக்கும் சிரிப்பு வந்தது ஆனால் அவற்றை மற்ற பேச்சுக்கள் ரசிக்க முடியாமல் செய்து விட்டது. மற்றவர்கள் கலைஞர் உட்பட அனைவரும் இதை ரசித்துக்கொண்டு இருந்தது தான் ரொம்ப கேவலமாக இருந்தது.
இலவச அறிவிப்பை பார்த்தாலே எரிச்சலா வருது. மக்கள் எப்ப தான் புரிஞ்சிக்க போறாங்களோ..!
பல இலவச திட்டம் போடும் அவர்களே தற்போது உள்ள திட்டமான அரசு ஊழியர்களின் ” வாரிசு அடிப்படை ” வேலையை நிறைவேற்றுவார . தேர்வு முறையில் தேர்ந்தேடுபதற்கு முன்னதாகவே என்னை போன்று பல பேர் படித்துவிட்டு இந்த அரசு வேலையை எதிர் பார்த்து கொண்டிருக்கும் வேலையை நியமனம் செய்யவேண்டும்.அப்படியே குடுத்தாலும் அவர்கள் படித்தபடிப்புக்கு (பட்டதாரி இருந்தாலும்) தகுந்த வேலையை தருவதை தவிர்டிட்டு பத்தாம் வகுப்பு தகுதி உள்ள வேலையை தான் தரூகிறார்கள் .