தமிழில் மீண்டும் ஒரு முறை வந்து இருக்கும் எதார்த்தமான படம் மைனா. தமிழ் படங்களைப்பற்றிய குற்றச்சாட்டுகள் புலம்பல்கள் சலிப்புகள் வரும் போதெல்லாம் ஏதாவது ஒரு படம் வந்து அப்படி கூறுபவர்களின் வாயை அடைக்கும் அது போன்ற படங்களில் ஒன்று தான் மைனா. இந்தப்படத்தின் எந்த காட்சிகளையும் நான் உங்களுக்கு கூறப்போவதில்லை எனவே தைரியமாக படிக்கலாம்.
கதை வழக்கமான காதல் கதை தான் என்றாலும் அதை எந்த வித அலங்காரமும் இல்லாமல் இயல்பாக கொடுத்து இருப்பதால் தான் இந்தப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏதாவது ஒரு சிறப்பான படம் வரும் போது இதைப்போல படங்கள் இனி எடுக்க முடியுமா! என்று நினைவு வருவது எனக்கு தவிர்க்க முடியாத ஒரு விஷயம் ஆனால் என் நினைப்பை பொடியாக்கி அடிக்கடி படம் வந்துகொண்டு தான் இருக்கிறது அதில் இந்த மைனாவும் ஒன்று.
சிறுவயது முதல் காதலிக்கும் இரு நபர்களின் கதையாகும் இது. ஒரு சின்ன விசயத்துக்காக 15 நாட்கள் சிறை செல்லும் கதாநாயகன் விதார்த் ஒரு காரணத்திற்காக விடுதலையாகும் இரு நாள் முன்பே தப்பி வந்து விடுகிறான். அவனைத்தேடி வரும் காவல் துறை அதிகாரிகள் இருவர் அவனை (உடன் அவன் காதலியையும்) திரும்ப பிடித்துச்செல்கிறார்கள் அப்போது வழியில் நடக்கும் சம்பவங்களையும் மற்றும் சில கிளைச் சம்பவங்களையும் வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. முடிவில் என்ன ஆகப்போகிறது என்பதை ஊகிக்க முடிந்தாலும் ஊகிக்க முடியாத இன்னொரு விசயமும் இதில் உள்ளது.
கதாநாயகன் விதார்த் கதாநாயகி அமலா பொருத்தமான தேர்வு. இருவருக்குமே இந்த கதாப்பாத்திரங்கள் கச்சிதமாக பொருந்துகிறது. கதாநாயகி வயசுக்கு வரும் காட்சிகள் பாரதிராஜா படங்களை நினைவு படுத்துகிறது. இன்னும் வயசுக்கு வந்தால் பூவை காட்டுவதை என்று தான் நிறுத்தப்போகிறார்களோ! முதலில் கொஞ்ச நேரம் படத்தில் எந்த வித சுவாராசியமும் திருப்பமும் இல்லாமல் அமைதியாக செல்கிறது.
இந்தப்படத்தின் கதை இரு நாளில் நடைபெறுவதாக காட்டப்படுகிறது (ஃபிளாஷ் பேக் தவிர்த்து) தீபாவளிக்கு முதல் நாள் மற்றும் தீபாவளி அன்று. கதாநாயகன் நாயகி இருவரும் தனக்கு கொடுக்கப்பட்ட பங்கை சரிவர செய்து இருக்கிறார்கள். கதாநாயகி அமலா அருமையான தேர்வு ஒரு சில காட்சிகளில் லிப்ஸ்டிக் தவிர்த்து எந்த வித ஒப்பனையும் இல்லாமல் இயல்பாகவே வருகிறார். தப்பியோடியவனை பிடித்துசெல்கிறார்கள் சரி! ஆனால் உடன் காதலியையும் அழைத்துச் செல்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது ஆனால் அந்த காட்சியமைப்பில் இதை எல்லாம் யோசிக்க நமக்கு தோன்றவில்லை.
விதார்த் சிறப்பாக நடித்துள்ளார் அந்த சுருளி என்ற கதாப்பாத்திரமாகவே நமக்குத் தெரிகிறார். கோபப்படும் போதும் அமலா மீது வைத்து இருக்கும் காதலை வெளிப்படுத்தும் போதும் நம்மை கவர்கிறார். ஒரு எதார்த்தமான கிராமத்து இளைஞரை நம் கண்முன் நிறுத்துகிறார்.
விதார்த்தை பிடித்துச் செல்லும் காவல்துறை அதிகாரியாக சேது என்பவரும் அவருடைய உதவி அதிகாரியாக தம்பி ராமையாவும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
இதில் ஒரு காவல்துறை அதிகாரி என்ன டென்சனில் இருப்பாரோ அதை அப்படியே சேது பிரதிபலித்துள்ளார். இவருக்கு தலை தீபாவளியாக இருக்கும் மனைவி வேறு ஒரு சந்தேகப்பிராணி மற்றும் புரிந்துகொள்ளாமல் சத்தம் போடுபவர். தீபாவளிக்கு ஏன் இன்னும் வரவில்லை என்று அவரும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து சேதுவை படுத்தி எடுத்துக்கொண்டு இருப்பார்கள். (தலை) தீபாவளி நாளும் அதுவுமா இப்படி நம்மை அலைய வைத்து விட்டானே என்கிற கோபமும் சேர்ந்து அவரின் பொறுமையை சோதித்து விடும். விதார்த் மீது செம கடுப்பில் இருப்பார்.
தம்பி ராமையா அற்புதமாக நடித்து இருக்கிறார். திறமையானவர்கள் சரியான வாய்ப்பு கிடைத்தால் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு இவரே சிறந்த உதாரணம். முழுப்படத்தின் காமெடி பொறுப்பையும் தானே ஏற்று (உடன் குணச்சித்திர நடிகராகவும்) அதை சிறப்பாக செய்து அசத்தி இருக்கிறார். நிஜமாகவே கலக்கி இருக்கிறார் ஒரு சில இடங்களில் வடிவேல் நினைவிற்கு வருகிறார். சேது பொறுமை இழந்து கோபப்படும் பொழுது அவருக்கு ஒரு அனுபவசாலியாக அறிவுரை கூறி சேதுவை அமைதிப்படுத்துவதில் ஒரு பொறுப்பான அனுபவமான காவல் துறை அதிகாரியாக மிளிர்கிறார்.
சேதுவை முதலில் எப்படியோ நினைத்து பின் எப்படியோ வந்து பின் வேறு மாதிரி காட்டி இயக்குனர் கலக்கி இருக்கிறார். விதார்த் தப்பி சென்றது வெளியே தெரிந்தால் அன்று பணியில் இருந்தவர்கள் அனைவருக்கும் ஆப்பு என்பதால் அவருடைய பெரிய அதிகாரியின் கருணையால் (ரெகார்ட் இல்லாமல்) ஒரு நாளில் விதார்த்தை கண்டு பிடித்து விடுவதாக வாக்குறுதி கொடுத்து (தீபாவளி அன்று அரசு விடுமுறை) தேடுவதால் படம் முழுவதும் சேது மட்டுமல்லாமல் அன்று பணியில் இருந்த அனைவரும் ரொம்ப கடுப்பில் இருப்பார்கள்.
தீபாவளி அன்று குடும்பத்தோடு சந்தோசமாக இருக்க முடியாமல் இதைப்போல அலைவது என்பது எந்த ஒரு நபருக்கும் எரிச்சலான விஷயம் தான். எனக்கு கூட பண்டிகை நாட்களில் அலுவலகம் செல்லும்படி சில நேரங்களில் நேரும் அப்போதெல்லாம் வரும் கடுப்பை சொல்லி மாளாது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும். சேது மற்றும் தம்பி ராமையா மட்டும் தேடிச்சென்று இருந்தாலும் போகாத காவலர்கள் எல்லாம் அவனை பிடித்து விடுவார்களா! நம் வேலை தப்பிக்குமா! என்று பயந்த படியே இருப்பார்கள். அதிலும் ஒருவர் “சார்! நான் இன்னும் கொஞ்ச நாளில் ஓய்வு பெறப்போகிறேன் இவனை கண்டுபிடிக்காமல் போனால் எனக்கு பென்சன் கொடுக்க மாட்டார்கள்” என்று புலம்புவது ஒரு எதார்த்தமான வசனமாகும். சேதுவிற்கு மற்ற காவலர்கள் தொலைபேசியில் அழைத்து சார்! அவன் கிடைத்து விட்டானா! பிடிச்சிட்டீங்களா! என்று நெருப்பை வயிற்றில் கட்டிக்கொண்டு கேட்பது பாவமாக இருக்கும். வீட்டில் இருந்தாலும் நிம்மதி இல்லாமல் இருப்பார்கள்.
அமலாவின் அன்னையாக வருபவர் யப்பா! நடிப்பில் வெளுத்து வாங்கி இருக்கிறார். என்ன வாய்டா சாமி! அவர் வரிந்து கட்டிக்கொண்டு பேசும் காட்சிகள் எல்லாம் ஒரு சராசரி கிராமத்து கோபக்காரப் பெண்ணை நம்முன் அப்படியே நிறுத்துகிறது. கொஞ்சம் கூட நடிப்பென்றே தெரியவில்லை. சரவெடியாக நடித்து இருக்கிறார். இவரைப்போல குறிப்பிடத்தக்க கதாப்பாத்திரங்களான விதார்த் அப்பா, ஆசிரியர் உடன் வரும் ஒரு பொடியன் பலரும் மனதில் நிற்கும் கதாப்பாத்திரங்கள். அதோடு குறிப்பிடத்தக்க இன்னொரு கதாப்பாத்திரம் சேதுவின் மனைவியாக வருபவர். கொஞ்ச காட்சிகளே வந்தாலும் மிரட்டி இருக்கிறார்.
பல காட்சிகள் வரும் முன்பே ஊகிக்க முடிகிறதாக இருக்கிறது என்றாலும் அதை நாம் எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலைமைக்கு படத்தின் திரைக்கதை அமைந்து இருப்பதே இதன் வெற்றிக்கு சாட்சி. பிரபு சாலமன் சார்! பின்னி பெடலெடுத்து இருக்கிறீர்கள். ரொம்ப ரசித்துப்பார்த்தேன்.
ரீமேக் பாடல்களாகப்போட்டு நம் காதை பஞ்சர் ஆக்கிய இசையமைப்பாளர் இமான் இந்தப்படத்தில் அருமையாக மென்மையாக பாடல்களை தந்துள்ளார். “மைனா மைனா” பாடல் நம் மனதை வருடும் பாடலாக உள்ளது. என்னதான் சிறப்பாக படமெடுத்தாலும் இயக்குனர்களுக்கு பயம் இருப்பது குத்துப்பாட்டின் மூலம் தெரிகிறது இதை இன்னும் வேறு மாதிரி கொடுத்து இருக்கலாமோ என்று தோன்றியது.
கேமராவை என்னவென்று சொல்வது! அவ்வளவு அருமை மொத்த இயற்கையையும் கெடுக்காமல் அழகாக நமக்கு காண்பித்துள்ளார். வெயிலில் படம் பார்த்தால் கூட நமக்கு குளிரும் போல! அந்த அளவிற்கு ஒவ்வொரு காட்சியும் அற்புதமாக உள்ளது. நம்ம ஊரில் இப்படி ஒரு இயற்கையான இடமா! என்று நம்மை வியக்க வைக்கிறது. நிஜமாகவே ஒரு நேஷனல் ஜியாகரபிக் சேனலை பார்த்தது போல இருந்தது. எந்த இடத்திலும் தற்போதைய நாகரீகத்தை காட்டி விடாமல் எளிமையினூடே நம்மை பயணிக்க வைத்து இருக்கிறார். படம் முழுவதும் குளிர்ச்சி, இயற்கை தான். இந்த மாதிரி லோகேசனில் படம் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு. கேமரா இயக்குனருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
மைனா படம் தமிழ் திரையுலகை புரட்டிப்போட வந்த படமல்ல. புதிய கதை எல்லாம் எதுவுமில்லை வழக்கமான காதல் கதை தான் ஆனால் ஒரு கிராமத்துக் காதல் எந்த அளவில் இருக்குமோ அந்த இயல்பு கெடாமல் கொடுத்து இருப்பதே இந்தப் படத்தின் சிறப்பு.
படம் முழுவதும் சீரியஸ் மற்றும் காமெடி இணைந்தே வருகிறது. ரொம்ப சீரியஸ் ஆன காட்சிகளின் முடிவில் கூட அதை அப்படியே கொண்டு செல்லாமல் நகைச்சுவையை கொண்டு வந்து நம்மை பேலன்ஸ் செய்து இருப்பது பாராட்டுக்குரியது. இந்தப்படத்தை திருட்டு DVD யில் பார்க்காதீர்கள் திரையரங்கில் சென்று பாருங்கள் அப்போது தான் இயற்கையை உண்மையாக ரசிக்க முடியும் எந்த வித இடைஞ்சலும் இல்லாமல் படத்தில் காட்டப்பட்டுள்ள அனைவரின் உணர்வுகளையும் உணர முடியும்.
படம் முடிந்த பிறகு பலர் பேச்சற்று இருந்தார்கள் சிலர் கைதட்டினார்கள் நான் கை தட்ட நினைத்தாலும் அந்த அமைதியான சூழ்நிலை எனக்கு கைதட்ட கூச்சத்தை தந்தது. கூச்சத்தால் என் கைதட்டலை தான் என்னால் கட்டுப்படுத்த முடிந்ததே தவிர என் கண்களில் வழிந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
இயல்பான படங்களை ரசிப்பவர்கள் தவிர்க்கக் கூடாத படம் “மைனா”
Subscribe to கிரி Blog by Email
Subscribe to கிரி Blog by Google Reader
Related posts:


{ 22 comments… read them below or add one }
பார்க்க வேண்டுமென்கிற ஆவலைத் தருகிறது விமர்சனம்.
படம் பார்த்தாகி விட்டது. இந்த படத்திலையும் சில பேர் குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்…
தங்களுக்கே உரித்தான மிகவும் சுவாரஸ்யமான மற்றும் விரிவான விமர்சனம். படம் பார்க்க வேண்டுமென்கிற ஆவலைத் தூண்டுகின்றது கிரி சார்.
//எக்ஸ்கியூஸ்மீ இந்த அட்ரஸ் எங்க இருக்குனு சொல்ல முடியுமா?” என்று வடிவேலை டரியல் ஆக்குவாறே அவர் தான்.//
உ ர வ்ரோங்.ஹிஸ் நேம் இஸ் கிருஷ்ணமுர்த்தி.
ரமயாஹ் இஸ் டைரக்டர் ஒப் மொவயே இன்றலோகத்தில் நா alagappan
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி செந்தில் மாற்றி விடுகிறேன்
கிரி,
நான் அதிகம் விமர்சனங்களைப் படிப்பதுமில்லை, பின்னூட்டம் இடுவதுமில்லை.. இந்த படம் முதல் அரைமணி நேரத்திற்குப் பிறகு உண்மையிலேயே ரசிக்க வைத்தது.
வீட்டிற்கு வந்து பெண்ணை வாழ்த்தும்போது “எவன் உன்னைத் தூக்கிட்டுப் போகப்போறானோ? ” என்று எதார்த்தமாகக் கேட்கும் ஒரு அம்மணியை நாயகன் அடி வெளுக்கும் காட்சி, நிச்சயமாக தமிழுக்குப் புதுசு. இது சரியா தவறா என்று தெரியாவிடினும், அந்த மாதிரி சூழ்நிலையில் பலபேருக்கு மனரீதியாக தோன்றுவதை நாயகன் உண்மையிலேயே செய்ததுபோல் இருந்தது. பெற்றவங்களை அடித்தல் போன்ற காரியங்களை நாயகன் தொடர்ந்து செய்த போது அய்யய்யோ இவனை கோக்குமாக்கான சைக்கோவாக காட்டித் தொலையப் போகிறார்களோ என்று பயந்தபோது, கிட்டத்தட்ட காதலுக்காக பயந்து ஓடும் வெகுளியாகக் காட்டி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
சின்ன கலவரம் போன்ற நிலை ஏற்படும்போது கைதியை அழைத்துக் கொண்டு போகையில் அந்தப் பெண்ணையும் வேறுவழியில்லாமல் கூட்டி செல்வது போல்தான் அமைத்திருந்தார்கள்.
தம்பி ராமையா அபாரம்…சான்சே இல்ல… காமெடிக்கு காமெடி, எச்ச பீடி குடிக்கும் காட்சி, டிபிகல் போலீஸ்காரர் போல கதாநாயகனையும் போலிஸ் அதிகாரியையும் தனித்தனியே பேசி சமரசம் செய்யும் காட்சி, பஸ் காட்சிகள் உச்சகட்டமாக, மனைவியிடம் நாயகன் போனில் பேசும்போது காட்டும் உணர்சிகள் என்று மனிதர் பிய்த்தெடுத்து விட்டார்.. சபாஷ்
அன்புடன்
ஈ. ரா
நல்ல படத்துக்கு நியாயமான விமர்சனம் கிரி!
கிரி சார்
படம் நானும் பார்த்தேன் .எனக்கு ரொம்ப பிடிச்சுது .
ஒரு சூழ்நிலை ,அதில் இருக்கும் எல்லாரின் பங்கை பற்றியும் அருமயாக சொல்லிருக்காங்க .சேது -அவரது பின்னணி ,
ராமையா -முகம் காட்டாத மனைவி ,பஸ் சம்பவம் அதை ஒட்டி எடுக்க பட்ட காட்சி எல்லாமே பிரமாதம் ,பின்னணி மற்றும் இசை-தினாவின் பெஸ்ட் என்று சொல்லலாம் ,குரங்கணி மற்றும் அதன் சுற்று புறங்கள் எல்லாம் அருமையாக காட்சி படுத்தி உள்ளார்கள்
நல்லா எழுதியிருக்கீங்க!
ரொம்ப நல்ல படம். தலைவரே படத்த பார்த்துட்டு நெகிழ்ந்து இயக்குனர் பிரபுசாலமன் சார கட்டிபிடிச்சி முத்தம் கொடுத்து பாராடிருக்கரு. மைனா உண்மையான திராவிடர்களின் படம்னு சொல்லி பாராடிருக்கரு.
இந்த செய்தி தெரிஞ்சதும் படத்த பாத்தேன், சொல்ல வார்த்தைகளே இல்லை படம் சூப்பர். பழைய கதையாக இருந்தாலும் ஒரு புதுமையான, அருமையான திரைக்கதையமைப்பு.
படத்தோட சேர்ந்து நம்பளும் பயணிக்கிற மாதிரி ஒரு நல்ல உணர்வு.
ஆனால் இன்னும் எத்தனை படங்கள்லதான் காதலர்களின் பிரச்சனை தீர்ந்துவிட்டது இனிமேல் நல்லா இருப்பாங்கனு நினைக்கும்போது அவங்கள சாகடிச்சி நம்பள அளவைப்பாங்கன்னு தெரியல. ஆனாலும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த கிளைமாக்ஸ்.
அந்த மலையாள டாக்டர் 2 inch ஆணி தான? செத்து ஒன்னும் போலயே நு சொல்லும்போது, அதப்பாத்து நான் செத்துபோய்டேன் சார் நு விதார்த் சொல்லும் காட்சி உண்மையான காதல் உணர்வை ஏற்ப்படுத்துது. கண்கலங்கவும் வைக்குது.
இதுபோல நிறைய காட்சிகள் இதுமாதிரி காதலிக்கிற பையனும், பொன்னும் இப்பஉள்ள சமுதாயத்துல எங்கஇருக்காங்கன்னு ஏங்க வைக்குது.
இந்த படம் timepass காதலர்களுக்கு நல்ல பாடம்.
இதப்பாத்து தெரிஞ்சிக்கணும் காதலர்கள்னா எப்படி இருக்கணும்னு.
படத்த பார்த்து ரெண்டு நாட்களா படத்தோட தாக்கத்துலையே இருக்கு மனசு. அதுதான் படத்தின் வெற்றியும்.
கிரி சார், விமர்சனம் சூப்பர்………… வாழ்த்துக்கள்…..
உங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டினாலும் இங்கு ரிலீசாகாததால் என்னால் பார்க்க முடியவில்லை. சுப்ரமணியபுரம், நாடோடிகள், பசங்க, வம்சம், களவாணி வரிசையில் திரையரங்கில் காணமுடியாமல் நான் மிஸ் பண்ணும் மற்றுமொரு படம்தான் மைனா
ஆனாலும் ஒரிஜினல் Dvd வந்ததும் நிச்சயம் பார்த்துவிடுவேன்.
ஆனாலும் இது ஏதோ செவ்வாய்க்கிரகத்து படமான Jurio Pikcaso வினுடைய தழுவலாக இருக்குமென்று தமிழ் சினிமாக்களின் ஓலகப்பட தழுவலை கண்டுபிடிக்கும் புத்திசாலிகளின் சங்கம் ஊகித்துள்ளது, அவர்கள் விரைவில் இதை முறையாக அறிவிப்பார்கள்
மைனாவை பார்த்து மயங்கியவர்களில் நானும் ஒருவன்
கமண்டுக்கு சைட்டில் ப்ரோபைல் படம் வரச்செய்வது எப்படி?
கிரி,
படம் இன்னும் பார்க்கவில்லை. பார்க்கத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்.
பிரபு சாலமன் ஏற்கனவே தன்னை நிரூபித்த டைரக்டர் (கொக்கி, லாடம், லீ)
அன்புடன்,
ஸ்ரீனிவாசன்
// இந்தப்படத்தை திருட்டு DVD யில் பார்க்காதீர்கள் திரையரங்கில் சென்று பாருங்கள் அப்போது தான் இயற்கையை உண்மையாக ரசிக்க முடியும் எந்த வித இடைஞ்சலும் இல்லாமல் படத்தில் காட்டப்பட்டுள்ள அனைவரின் உணர்வுகளையும் உணர முடியும்// அண்ணே !!!! அப்போ இதுக்கு நான் ஒத்து வர மாட்டேன் போல !!!! உங்க விமர்சனம் பிடிச்சிருக்கு !!!
வணக்கம் கிரி அவர்களே
உங்கள் விமர்சனத்தை படித்த பின்பு மைனாவை பார்க்கலாம் என்று தோன்றுகிறது
நன்றி
ராமலக்ஷ்மி தினேஷ் பிரவின் செந்தில் ஈரா வெயிலான் சுனில் வினோ ஆனந்த் ஜீவதர்ஷன் உடன்பிறப்பு ஸ்ரீநிவாசன் ராஜ் மற்றும் இளவரசன் வருகைக்கு நன்றி
@ஈரா நானும் வழக்கமான கதாநாயகனாக காட்டி விடுவார்களோ என்று இருந்தேன்! நல்லவேளை. அப்புறம் என்னதான் பிரச்சனை நடந்து கொண்டு இருந்தாலும் உடன் அழைத்துச்செல்வதை ஏற்க முடியவில்லை.
@ஆனந்த இப்படி முடிவை சொல்லிட்டீங்களே!
@ ஜீவதர்ஷன்
கண்டிப்பாக பாருங்க
உங்கள் படம் வரவைக்க http://en.gravatar.com/site/login சென்று பதிய வேண்டும். இது பற்றி எழுத ரொம்ப நாளாக நினைத்துள்ளேன்..மறந்து விடுகிறது.
@உடன்பிறப்பு உங்க ஆள் தயாரிப்பு வேற
@ஸ்ரீநிவாசன் லாடம் சுட்ட கதை
சாரி கிரி சார். ஒரு ஆதங்கத்துல சொல்லிட்டேன்.
கிரி,
I have not seen the movie heard that it is too good… download panni vechirukken…only SS films I follow the principle of seeing in theatres others he he he… download thaan..
Kamesh
கிரி விமர்சனம் நல்லா எழுதியிருக்கீங்க நாளை பார்க்க இருக்கிறேன் மைனா
முதல் பாதியில் வரும் சில காட்சிகள் (பருத்திவீரனின் தாக்கம்) தவிர படம் எனக்கு பிடித்து இருக்கிறது.
இருவரும் சைக்கிளில் வரும் அறிமுக காட்சியில் நாயகன் பணம் கொடுக்கும் போது அந்த பெண்ணின் முக பாவனை சிறு வயது முதல் பழகியது போல இயல்பாய் இல்லாமால், எதோ முதல் முறை பணம் வாங்குவது போல் எனக்கு பட்டது, ஆனாலும் அந்த “மைனாவின்” நடிப்பு எனக்கு பிடித்தது.
நன்றி!.
@@ஆனந்த் பரவாயில்லை விடுங்க.. பல பேரு விமர்சனத்துலையே சொல்லிட்டாங்க
@காமேஷ்
@சரவணன் ரைட்டு
@சிங்கக்குட்டி “மைனாவின்” நடிப்பு மட்டுமா