எல்லோருக்கும் நல்லவராக இருப்பவர்கள் !?

by கிரி on December 30, 2009

லகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி, ஒரு சிலர் தனக்கு பிடித்த மாதிரி நடந்துக்க விரும்புவாங்க இன்னும் சிலர் மற்றவர்களுக்கு தன்னை பிடிக்கணும் என்பதற்காக நடந்துக்குவாங்க. இவை இரண்டும் இல்லாமல் தன்னை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ! அதை செய்து கொண்டு இருப்பாங்க.

நான் இப்ப கூறப்போவது எல்லோருக்கும் பிடித்த மாதிரி அதாவது எல்லோருக்கும் நல்லவராக இருக்க முயற்சிப்பவர்களை பற்றி (மட்டும்).. icon smile எல்லோருக்கும் நல்லவராக இருப்பவர்கள் !?

இவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

இதில் பெரும்பாலனவர்கள் எந்த ஒரு வம்புக்கும் போக மாட்டார்கள், மற்றவர்களை அனாவசியமாக பகைத்துக்கொள்ள மாட்டார்கள், அதே போல மற்றவர்களுக்கு தொந்திரவும் கொடுக்க மாட்டார்கள். தங்களை மிக நல்லவராக! மற்றவர்களுக்கு காட்டிகொள்வதில் அதிக அக்கறை காட்டுவார்கள். சுருக்கமாக கூறினால் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார்கள்.

பொதுவாக தங்களை யாரும் விமர்சிப்பதை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள், தங்களை யாராவது கோபமாக திட்டி விட்டாலோ அல்லது அவமானப்படுத்தி விட்டாலோ இவர்களால் தாங்கவே முடியாது, இதை நினைத்து பல நாட்கள் மன உளைச்சலில் இருப்பார்கள். நாம் தான் யார் வம்புக்கும் போவதில்லையே! நமக்கு ஏன் இப்படி நடக்கிறது! என்று நினைத்து நினைத்து புலம்புவார்கள்.

இதன் காரணமாக கோபமாக எதுவும் பேச மாட்டார்கள், தங்களை மீறும் அளவு வரும் போது மட்டுமே தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். தங்கள் எண்ணங்களை மற்றவர்கள் மனம் காயப்படாமல் தான் கூறுவார்கள், தான் கூறும் கருத்து மற்றவருக்கு சங்கடத்தை கொடுக்கும் என்று தெரிந்தால் அதை கூறவே மாட்டார்கள், கூடுமானவரை மற்றவர்களை திருப்தி செய்வதிலே அதிக கவனம் செலுத்துவார்கள்.

தனக்கு பிடிக்காததை எங்காவது படிக்க நேரிட்டாலோ, யாராவது கூறினாலோ அதை ஒதுக்கித்தள்ள தெரியாமல் மனதினுள் புழுங்குவார்கள். மற்றவர்களின் மாறுபட்ட கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தன் பக்கத்து செயலுக்கு நியாயம் தேடுவார்கள். தான் செய்வது பெரும்பாலும் சரியாகத்தான் இருக்கும் என்று பிடிவாதமாக நம்புபவர்கள் (இது இவர்கள் மட்டுமல்லாது பெரும்பாலனவர்களுக்கு பொருந்தும்).

ஏதாவது பிரச்சனை என்றால் ஒதுங்கி இருப்பதையே விரும்புவார்கள்….மற்றவர்கள் என்னவோ செய்துகொள்ளட்டும் நம்மிடம் வம்பு செய்யாமல் இருந்தால் போதும்! என்று இருந்து விடுவார்கள். குறிப்பாக யாருக்கும் ஆதரவாக அல்லது தனக்கு நியாயம் என்று படுவதை எதுவுமே கூற மாட்டார்கள் கூற நினைத்தாலும், காரணம் நாம் கூறும் கருத்து இன்னொருவரை காயப்படுத்தி விட்டால் என்ன செய்வது என்ற கவலையால்!

இவர்கள் இழப்பது என்னவென்றால்…

மற்றவர்கள் தவறாக நினைத்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்து நினைத்தே தங்களது சுயத்தை இழந்து விடுவார்கள். தனக்கு பிடித்த கருத்தாக இருந்தாலும் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ! என்ற சந்தேகத்தில் முன் வைக்க மாட்டார்கள். சுருக்கமாக கூற வேண்டும் என்றால் தனக்காக இல்லாமல் மற்றவர்களை திருப்தி செய்வதிலேயே தங்கள் வாழ்வை கழிப்பவர்கள்.

விமர்சனங்களை ஏற்க பயப்படுவதால் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளே இருப்பார்கள், அதில் இருந்து வெளியே வரமாட்டார்கள் வரவும் விரும்பமாட்டார்கள். எல்லோரையும் திருப்தி படுத்துவது கடவுளால் கூட முடியாது என்ற ஒன்றை அறியாமல் முட்டாள் தனமாக அதையே திரும்ப முயற்சிப்பார்கள்.

இதைப்போல தொடர்ந்து இருந்தால் எந்த ஒரு விமர்சனத்தையும் ஏற்க திராணியில்லாமல் காலம் முழுவதும் மனம் வெதும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

வாழ்க்கை என்பது நமது விருப்பத்திற்கு வாழ வேண்டும் அதற்காக சுயநலமாக என்ற அர்த்தத்தில் அல்ல. நம்முடைய கருத்துக்களை தைரியமாக முன்வைக்க வேண்டும், மற்றவர்கள் கூறுவதில் உள்ள உண்மைகளை நல்ல விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் ஆனால் நம்மடைய விமர்சனத்தை வைக்க என்றும் தயங்க கூடாது, யாராக இருந்தாலும்.

மற்றவர்கள் ஏதாவது நினைப்பார்களோ! என்று நினைத்தால் நம் கருத்தை என்றுமே கூற முடியாது! நம் கருத்தை முன்வைப்பதன் மூலமே மேலும் மாற்றுக்கருத்துகளை நம் தவறுகளை நாம் இனம் காண முடியும். அப்போது தான் நம் எண்ணங்களை, தவறுகளை சரி செய்து நம்மை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

நானும் முன்பு மேற்கூறியவை போலவே (முழுவதும் இல்லை என்றாலும்) இருந்தேன், ஒரு கட்டத்தில் சலிப்பாகி இப்படி இருக்கக்கூடாது என்று மாற முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளேன். முன்பை விட தற்போது பலவற்றை குறிப்பாக விமர்சனங்களை ஓரளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடிகிறது, மன உளைச்சல்கள் குறைந்து விட்டது.

ஒரு கருத்தை (நாகரீகமாக) முன்வைக்கக்கூட நமக்கு தைரியம் இல்லை என்றால்……

என் பணிவான வேண்டுகோள், எல்லோருக்கும் நல்லவனாக (இருக்க முடியாது அது வேற விஷயம்) இருக்கிறேன் என்று உங்கள் சுயத்தை தொலைக்காமல் நீங்கள் நீங்களாக இருங்கள். தைரியமாக உங்கள் கருத்தை கூறிப்பழகுங்கள் அல்லது கூற முயற்சி செய்யுங்கள், ஆனால் விதண்டாவாதமாக அல்ல.

பின் குறிப்பு

இவை யாவும் என் அனுபவத்தில் கிடைத்த சொந்தக்கருத்துகளே! உங்களுக்கு சரி என்று படுவதை நீங்கள் செய்யுங்கள். இவ்வாறு கூறுவது சிலருக்கு ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம் ஆனால் மனதில் ஏற்றி வைத்துக்கொள்வதில் தவறில்லை, பின்னர் ஒருநாள் ஒருவேளை பயன்பட்டாலும் படலாம் icon smile எல்லோருக்கும் நல்லவராக இருப்பவர்கள் !?

பொருளாதார சரிவால் இந்த வருடம் பலருக்கு சிரமமாக இருந்தது. இதனால் வேலை இழந்தவர்கள் தொழில் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். மன வருத்தத்தில் உள்ளவர்கள் இருந்தவர்கள் மற்றும் அனைவருக்கும் வரும் வருடம் சிறப்பாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.

புதிய வருடத்தை சிரிப்புடன் துவங்க… icon smile எல்லோருக்கும் நல்லவராக இருப்பவர்கள் !?

வீடியோ நன்றி புதுவைசிவா

No related posts.

{ 28 comments… read them below or add one }

சதீஷ் குமார் December 30, 2009 at 8:54 PM

அருமையான பதிவு,

நூற்றுக்கு இருநூறு உண்மை. ஏதோ என் கூடவே இருந்து பாத்து பாத்து எழுதினமாதிரி இருந்தது… எல்லா கருத்துக்களுடனும் எனக்கு உடன்பாடு இல்லைன்னாலும், பெரும்பாலான கருத்துக்கள் உண்மையாக இருப்பதால் ஈர்க்கிறது ஈர மனதை.

வாழ்த்துக்கள்!

Reply

தர்ஷன் December 30, 2009 at 9:03 PM

முற்றிலும் உண்மையானக் கருத்துக்கள்.
ஆனால் எனக்கும் விமர்சனங்களை ஆவேசமாக முன்வைப்பதில் நிறைய தயக்கங்கள் உண்டு. அது வாதமாக மாறினால் நம் ஈகோவை விட்டுக் கொடுக்காமல் வாதிக்க விதண்டாவாதம் வேறு செய்ய நேரிடும் என்பதால்.

Reply

கோவி.கண்ணன் December 30, 2009 at 9:16 PM

//என் பணிவான வேண்டுகோள், எல்லோருக்கும் நல்லவனாக (இருக்க முடியாது அது வேற விஷயம்) இருக்கிறேன் என்று உங்கள் சுயத்தை தொலைக்காமல் நீங்கள் நீங்களாக இருங்கள். தைரியமாக உங்கள் கருத்தை கூறிப்பழகுங்கள் அல்லது கூற முயற்சி செய்யுங்கள், ஆனால் விதண்டாவாதமாக அல்ல.//

தனிமனித தாக்குதல் இல்லை என்றால் எதையும் பேசலாம் என்பதே என் நிலை. நெருங்கியவர்கள் தவறாக நினைப்பார்கள் என்பதாக நினைத்து எழுத்தை சுறுக்கி கொள்ள முயற்சித்தது இல்லை. எழுத்து வேற நட்பு வேற இரண்டையும் பலர் ஒண்ணாக குழப்பிக் கொள்கிறார்கள். வெகு சிலர் கொள்கைக்காக பழகுபவர்களையே பகைத்துக் கொள்ளவதை தயங்குவதும் இல்லை.

Reply

மணிகண்டன் December 30, 2009 at 9:31 PM

கிரி, சுயத்தை தொலைப்பது தான் எனது சுயம் :) -

இப்படிக்கு எல்லோருக்கும் நல்லவனாகிய மணிகண்டன்

Reply

மணிகண்டன் December 30, 2009 at 9:36 PM

எங்க வூருல உள்ள உங்க நண்பர்கள் எல்லாம் உங்களை பத்தி ரொம்ப நல்லவிதமா சொல்லி இருக்காங்க :) - நீங்க எல்லோருக்கும் ரொம்ப நல்லவரா தான இருக்கீங்க !

இப்படிக்கு
உன்னை(களை)ப் போல் ஒருவனாகிய மணிகண்டன்

Reply

பிரபாகர் December 31, 2009 at 12:21 AM

//
கோவி.கண்ணன்
தனிமனித தாக்குதல் இல்லை என்றால் எதையும் பேசலாம் என்பதே என் நிலை. நெருங்கியவர்கள் தவறாக நினைப்பார்கள் என்பதாக நினைத்து எழுத்தை சுறுக்கி கொள்ள முயற்சித்தது இல்லை. எழுத்து வேற நட்பு வேற இரண்டையும் பலர் ஒண்ணாக குழப்பிக் கொள்கிறார்கள். வெகு சிலர் கொள்கைக்காக பழகுபவர்களையே பகைத்துக் கொள்ளவதை தயங்குவதும் இல்லை.
//
அண்ணா,

சுயமாக தன்னைப்பற்றி எது வேண்டுமானாலும் பேசிக்கொண்டு, தன்னை புத்திசாலி என சொல்லிக்கொள்(ல்)பவர், எதிரிலுள்ளவர்களை முட்டாள்கள் என சொல்லாதவரை பிரச்சினை இல்லை.

ஒன்றும் ஒன்றும் 2 எனபதைக்கூட 10 -ல் 7 பேர் சரியில்லை என சொன்னால் மாற்றியாகவேண்டிய சூழல்.

கிரி சொல்வதுபோல் எல்லா இடங்களிலும் மெதுவாய் நாசூக்காய் நமது கருத்துக்களை சொல்ல இயலாது! சுயத்தை இழந்து நல்லவன் என பெயர் வாங்கலாம் ஆனால் உண்மையில் ஏமாளி எனும் பட்டமே இறுதியில் மிஞ்சும் என்பதே உண்மை.

'அஞ்சுதல் அஞ்சாமை பேதமை' என்பதே எனது கருத்து!

பிரபாகர்.

Reply

வானம்பாடிகள் December 31, 2009 at 2:14 AM

நானு உங்க கட்சி:). புத்தாண்டு வாழ்த்துகள் கிரி.

Reply

Arun December 31, 2009 at 4:42 AM

nalla pathivu giri….

"நானும் முன்பு மேற்கூறியவை போலவே (முழுவதும் இல்லை என்றாலும்) இருந்தேன்," – Ippavum neenga unga karuthu mathavangala hurt pannama sollanum nu ninachu than solura mathiri yenaku thonuthu.. means neenga innum athaii nalla mansu giri thann yenna konjum yethir karuthukal la pakkuvama face pannureenga athey nalla manasoda…

"ithu yennoda sontha karuthu giri…. sorry I might be wrong" – oru disclaimer soliten so that naanum ungala mathiri thann mathavangala hurt pannama yen opinion soluren nu ninakuren:)

Reply

இளமுகில் December 31, 2009 at 6:17 AM

/கும்மி பின்னூட்டங்களையும் டெம்ப்ளேட் பாராட்டுக்களையும் தவிர்க்கவும்!/

அப்படியே ஆகட்டும். வாழ்த்துக்கள்!

Reply

கோவி.கண்ணன் December 31, 2009 at 6:32 AM

//அப்படியே ஆகட்டும். வாழ்த்துக்கள்!//

இது ஆம்லேட் பின்னூட்டம் !

:)

Reply

கவிதை காதலன் December 31, 2009 at 9:39 AM

எக்ஸலண்ட்… அருமையான விஷயங்கள். மிக அற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள்.

Reply

வால்பையன் December 31, 2009 at 9:54 AM

லாஜிக் இடிக்குது!

ஒருவரிடம் நல்ல பேர் எடுக்க நினைப்பதும், அவரை கவர நினைப்பதும் ஒன்று தான்!

குழந்தைகள் தம்மை யாராவது தூக்கி கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கும், அதே போல் சிலர் யாராவது நம்மை எப்போதும் கவனித்து கொள்ள வேண்டும் என நினைப்பர், அது ஒரு மனநிலை பிரச்சனை, அதன் பெயர் ”அட்டென்ஷன் சீக்கிங் பர்சனால்டி”

நல்ல பெயர் எடுக்க வேண்டும் என நினைப்பவர்கள், அந்த மாதிரி நடிப்பவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம், அனைவருமே மனதளவில் எல்லா சேட்டையும் செய்பவர்கள் தான்! புண்ணாக்கு சமூகம் எதாவது சொல்லிவிடுமோ என அஞ்சி அதை வெளி காட்டி கொள்வதில்லை!

சைக்காலிஜிகலா உலகுக்கே வில்லனா இருக்குறவனும்(பின் லேடன்) தனக்குள் நல்லவன் தான்!
நல்லது, கெட்டது சுற்றியுள்ள சமூகம் சார்ந்து அமைவது, நிச்சயமாக சொல்வேன் ஒருவருக்கு நல்லது மற்ற ஒருவருக்கு கெட்டதாக அமைய சாத்தியகூறுகள் அதிகம், தன்னளவில் குற்ற உணர்வு இல்லாமல் வாழ நினைப்பதே சிறந்த வழி!

Reply

வால்பையன் December 31, 2009 at 9:56 AM

//உங்கள் சுயத்தை தொலைக்காமல் நீங்கள் நீங்களாக இருங்கள். தைரியமாக உங்கள் கருத்தை கூறிப்பழகுங்கள் அல்லது கூற முயற்சி செய்யுங்கள், ஆனால் விதண்டாவாதமாக அல்ல.//

விதண்டாவாதம் என்பது யாராவது ஒருவரால் பதில் சொல்ல முடியத போது மாற்ற முயற்சிப்பது! என் பதில் குறளுக்கு அர்த்தம் கேட்டால் பீர் குடி, மோர் குடி என்றார்களே அது மாதிரி!, அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பது சிறப்பு!

Reply

M Arunachalam December 31, 2009 at 11:49 AM

Giri,

The attached Video was hilarious.

Keep on giving such nice videos.

Happy New Year.

Arun

Reply

சிங்கக்குட்டி December 31, 2009 at 12:41 PM

இடுகை நல்லா இருக்கு கிரி.

எல்லோருக்கும் நல்லவராக இருப்பது சாத்தியமில்லாதது.

அதே நேரத்தில் தவறை சுட்டிக்காட்டும் விமர்ச்சனம் என்ற பெயரில் வருத்தபடும்படி ஒரு பதில் தவறு செய்வதிலும் அர்த்தம் இல்லாமல் போய்விடும், கனிவாக அதே நேரத்தில் கருத்தில் அழுத்தமாக எடுத்து சொல்வது ஒரு சிறந்த வழி.

உங்கள் "பின் குறிப்பும்" அருமை.

Reply

நட்புடன் ஜமால் December 31, 2009 at 4:15 PM

சரி தான் கிரி

நானும் அப்படிப்பட்ட ஒருவனாகத்தான் இருக்கின்றேன்

பல நேரங்களில் தவிர்த்து விடுகின்றேன்.

முயற்சித்து பார்க்கின்றேன் …

நன்றி.

Reply

கிரி December 31, 2009 at 8:07 PM

பாராட்டிற்கு நன்றி சதீஷ் குமார்

======================================================================

// தர்ஷன் said…
வாதமாக மாறினால் நம் ஈகோவை விட்டுக் கொடுக்காமல் வாதிக்க விதண்டாவாதம் வேறு செய்ய நேரிடும் என்பதால்.//

உண்மை தான் ஏற்றுக்கொள்கிறேன்

======================================================================

// கோவி.கண்ணன் said…

//வெகு சிலர் கொள்கைக்காக பழகுபவர்களையே பகைத்துக் கொள்ளவதை தயங்குவதும் இல்லை.//

ஆனா நான் கோவிக்கண்ணன் கிட்ட அப்படி இல்லை ;-)

======================================================================

// மணிகண்டன் said…

எங்க வூருல உள்ள உங்க நண்பர்கள் எல்லாம் உங்களை பத்தி ரொம்ப நல்லவிதமா சொல்லி இருக்காங்க :) //

என்னங்க சொல்றீங்க! உங்க ஊர்ல என் நண்பர்களா! யாருங்க அது..நானும் பிரபலம் ஆகி விட்டேனா! ;-)

//நீங்க எல்லோருக்கும் ரொம்ப நல்லவரா தான இருக்கீங்க !//

அதற்க்கு நான் இரு காரணங்கள் கருதுகிறேன்

1. கூடுமானவரை நான் எழுதும் கட்டுரைகளில் நடுநிலையா எழுத முயற்சிக்கிறேன்

2. நான் கூறுவது தான் சரி என்று வாதிடுவதில்லை, கூடுமானவரை விளக்க முயற்சிப்பேன் இல்லை என்றால் தொடர்வது இல்லை.

======================================================================

பிரபாகர் பாலா சார் வருகைக்கு நன்றி ..சார் உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் :-)

======================================================================

// Arun said…
Ippavum neenga unga karuthu mathavangala hurt pannama sollanum nu ninachu than solura mathiri yenaku thonuthu.//

அருண் நீங்க சொல்வது சரி தான். நான் இடுகையிலே கூறி இருக்கிறேன்..ஓரளவு வெற்றி பெற்றுள்ளேன் என்று முழுவதும் அல்ல. என்னோட ரத்தத்தில் பல வருடமாக ஊறிப்போனது அவ்வளவு சீக்கிரம் மாற்ற முடியாது..ஆனால் மாற முயற்சிக்கிறேன் என்பது உண்மை. அதைத்தான் நீங்கள் சில விசயங்களில் காண்கிறீர்கள்.

//ithu yennoda sontha karuthu giri…. sorry I might be wrong" – oru disclaimer soliten so that naanum ungala mathiri thann mathavangala hurt pannama yen opinion soluren nu ninakuren:)//

அருண் நீங்க என்னை புரிந்து கொண்டது அவ்வளவு தானா! இதற்க்கெல்லாம் தவறு என்று நான் வருத்தப்பட்டால்….வேலைக்கே ஆகாது :-) உங்கள் கருத்தை

Reply

அத்திரி December 31, 2009 at 8:09 PM

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Reply

சிங்கக்குட்டி December 31, 2009 at 8:44 PM

//காரம் அவசியம் என்றே நினைக்கிறேன்//

நிச்சியமாக கிரி,

இன்னும் சொல்லப்போனால் நீங்கள் "காரம்" என்று சொன்னதைத்தான் நான் "அழுத்தமாக" என்று குறிப்பிட்டேன்.

ஆனால், நான் இங்கு சொல்ல வருவது "காரமோ அல்லது அழுத்தமோ" அது சொல்லும் கருத்திலா அல்லது வார்த்தையிலா என்பதுதான்!?

கருத்தில் என்பது என் எண்ணம்.

Reply

ரோஸ்விக் January 1, 2010 at 10:05 AM

கிரி அண்ணே (அப்துல்லா அண்ணே எபக்ட்)!

நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரிதான்… ஆனால், சில சமயங்களில் சுயத்தை இழப்பது அவசியமாகிவிடுகிறது.

ஒரு கருத்தை யாரிடம் அல்லது எந்த ஊடகத்தில் சொல்கிறோம்… அதற்கு அந்த நபரோ, ஊடகமோ எப்படி புரிந்துகொண்டு (நாம் எவ்வளவு ந(நி)யமாக சொன்னாலும்) எதிர்வினை புரிவார்(கள்) என்பதையும் உணர்ந்து… அதை தவிர்க்க சுயம் இழத்தல் ஒருவகை.

நாம் எப்படிவேண்டுமானாலும் இருக்காலாம்… ஆனால் நமக்குத் தெரிந்த உறவினர்களிடமோ, பழகியவர்களிடமோ நல்லவனாக இருப்பதுபோல் நடித்தல். இதுவும் சுயம் இழத்தலில்(மறைத்தல்) ஒருவகை.

நமக்கு எது விருப்பமோ(தவறான நடவடிக்கைகளாகக் கூட இருக்கலாம்), அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளமாடார்கள்…. என்பதால் அவற்றை தவிர்த்தல் / மறத்தல்…. இதுவும் சுயம் இழத்தலில் ஒருவகை.

எனவே ஒவ்வொருவனுக்கும் பல முகங்கள் இருப்பது இயல்பே (நியாயமற்றதாகக் கூட இருக்கலாம்). அவற்றில் ஒவ்வொன்றும் சில நேரம் மறைக்கப்படுவதும்/ திருத்தப்படுவதும் புறச்சூழல்களால் நிகழ்த்தப்படுவதே.

வாழ்கை என்பது நாடகமே… அதில் வருவோர் போவோர் ஆயிரமே. :-)

அண்ணன் கோவியாரும் நீங்களும் கூறுவதுபோல்… பலருக்கும் கொள்கைகளையும், நட்பையும் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை. கருத்துக் கூறலாம் என்ற சுதந்திரத்தை, கருத்தை திணிக்க பல இடங்களிலும் பயன்படுத்துவதே இதற்கு காரணம்.

Reply

மணிகண்டன் January 1, 2010 at 12:53 PM

****
என்னங்க சொல்றீங்க! உங்க ஊர்ல என் நண்பர்களா! யாருங்க அது..நானும் பிரபலம் ஆகி விட்டேனா! ;-)
****

உங்க சென்னை கம்பெனிலேந்து இங்க வந்து பேங்க்ல வேலை செய்யும் மக்கள் தான் :) - ப்ளாக் மூலமா எல்லாம் அவ்வளவு பாப்புலர் ஆகலை. (பசங்க கிட்ட :) - ) ஹாப்பி நியூ இயர் 2010

Reply

ஜெயந்தி January 1, 2010 at 12:58 PM

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Reply

கிரி January 2, 2010 at 8:02 AM

அத்திரி மற்றும் ஜெயந்தி புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி

======================================================================

//ரோஸ்விக் said…
ஒரு கருத்தை யாரிடம் அல்லது எந்த ஊடகத்தில் சொல்கிறோம்… அதற்கு அந்த நபரோ, ஊடகமோ எப்படி புரிந்துகொண்டு (நாம் எவ்வளவு ந(நி)யமாக சொன்னாலும்) எதிர்வினை புரிவார்(கள்) என்பதையும் உணர்ந்து… அதை தவிர்க்க சுயம் இழத்தல் ஒருவகை.//

படித்தால் தலை சுத்துதே!

//பலருக்கும் கொள்கைகளையும், நட்பையும் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை.//

இது தாங்க பிரச்சனை.. இது சரியாக இருந்தால் பல பிரச்சனைகள் குறையும்

//கருத்துக் கூறலாம் என்ற சுதந்திரத்தை, கருத்தை திணிக்க பல இடங்களிலும் பயன்படுத்துவதே இதற்கு காரணம்//

இது அதிகமாக நடைபெறுகிறது

======================================================================

//மணிகண்டன் said…

உங்க சென்னை கம்பெனிலேந்து இங்க வந்து பேங்க்ல வேலை செய்யும் மக்கள் தான் :) - //

ஓ! அப்படியா! வங்கி என்றால் (வெளிநாட்டில்) எப்படியும் என் பழைய நிறுவனத்தில் இருந்து ஒருவராவது இருப்பார்கள். அவர்களை கேட்டதாக கூறவும் (மறக்காமல்)

//ப்ளாக் மூலமா எல்லாம் அவ்வளவு பாப்புலர் ஆகலை.//

ஹா ஹா ஹா ஒரு விளம்ம்மம்பரம் என்று பார்த்தேன்..கடைசில அதுவும் இல்லைனுட்டீங்க.. :-) )

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Reply

கிரி January 2, 2010 at 12:38 PM

//சிங்கக்குட்டி said…
இன்னும் சொல்லப்போனால் நீங்கள் "காரம்" என்று சொன்னதைத்தான் நான் "அழுத்தமாக" என்று குறிப்பிட்டேன்.//

ஓகே

//ஆனால், நான் இங்கு சொல்ல வருவது "காரமோ அல்லது அழுத்தமோ" அது சொல்லும் கருத்திலா அல்லது வார்த்தையிலா என்பதுதான்!?//

சரி தான்.. ஒரு சிலர் அழுத்தமாக கூறுகிறேன் என்று சம்பந்தம் இல்லாமல் பேசிக்கொண்டு இருப்பார்கள்.. நல்லா நறுக்குன்னு கூறனும் ஆனா சரியான கருத்தோட

உங்க பின்னூட்டம் எப்படியோ போன முறை மிஸ் ஆகி விட்டது மன்னிக்க :-)

Reply

ஈ ரா January 2, 2010 at 3:07 PM

தங்கள் குறுந்தகவல் வாழ்த்து வந்தது…

மிக்க நன்றி.. தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Reply

ராமலக்ஷ்மி January 5, 2010 at 8:58 AM

இங்குள்ள பின்னூட்டங்களின் படியே, அவை அறிதல் எனும் குறள் அத்தியாயத்தின் சில குறள்களைப் பின்பற்ற சிலர் விரும்பியிருப்பதில் தவறேதும் தெரியவில்லை. அவை அஞ்சாமை என்கிற ஒரு அத்தியாயமும் இருக்கிறதுதான்:)! எந்த அவை என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதும் அவரவர் உரிமைதானே? சான்றோர் சொன்னவை தாண்டி, மற்றவர் அனுபவங்களில் உணரும் வாழ்க்கைப் பாடம் தாண்டி, அவரவர் அனுபவங்களே பெரும்பாலும் கடைசியில் அவரவருக்கு ஆசான்களாகின்றன (உங்களூக்கும் ஆனதாகக் குறிப்பிட்டிருப்பது போல) என்பதையும் மறுப்பதற்கில்லை!

Reply

கிரி January 5, 2010 at 9:31 PM

// ராமலக்ஷ்மி said…
சான்றோர் சொன்னவை தாண்டி, மற்றவர் அனுபவங்களில் உணரும் வாழ்க்கைப் பாடம் தாண்டி, அவரவர் அனுபவங்களே பெரும்பாலும் கடைசியில் அவரவருக்கு ஆசான்களாகின்றன //

ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் மற்றவர்கள் கூறுவதில் நன்மை இருந்தால் ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. எப்போதும் நாம் நினைப்பதே சரி என்று கருதுவோம் ஆனால் மற்றவர்கள் கூறுவதை பொறுமையுடன் யோசித்து பார்த்தால் தற்போது ஏற்றுக்கொள்ள முடியாததாக தோன்றினாலும் பின்னர் ஒருவேளை பயன்பட்டாலும் படலாம்.

ஈரா வருகைக்கு நன்றி

Reply

Saravanan Jayaraman August 24, 2011 at 3:12 PM

Ungal anaithu karuthukkalum unmai, naanum appadithan irunthen, tharpozhuthu ennai
padi padiyaga maatrikondu irukkindren

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed