Tuesday, September 29, 2009

சிங்கப்பூரை அலற வைத்த "Formula 1"



நாட்டோட நிலப்பரப்புல சுள்ளானா இருந்தாலும் எதை வேணா எங்க நாட்டுல சும்மா கில்லி மாதிரி சாதித்து காட்டுவோம், எங்களால நடத்த முடியாத நிகழ்ச்சி எதுவுமில்லை என்று தற்போது இரண்டாவது முறையாக அசத்தலாக Fourmula 1 கார் பந்தயத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது சிங்கப்பூர் அரசு.


சிங்கப்பூர் மிகவும் குட்டி நாடு சுருக்கமா சொல்லப்போனா நம்ம சென்னையை விட ரொம்ப குட்டி, மொத்தமே கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் சுற்றளவு தான். ஆனால் அவர்கள் இந்த சிறிய இடத்தில் கொடுக்கும் வசதி பெரிய நாடுகளையே வாயை பிளக்க வைக்கும்..


எப்படியா! இந்த மாதிரி குட்டி இடத்தை வைத்துக்கொண்டு இப்படி அசத்தலான வசதி தாராங்க என்று மண்டை காயாதவங்களே இருக்க மாட்டாங்க...குறிப்பாக சாலை எல்லாம் நன்கு அகலமாக திட்டமிடப்பட்டு நெரிசல் ஏற்படாதவாறு அமைக்கப்பட்டு இருக்கும்.

இவர்கள் முதலில் Formula 1 நடத்தப்போவதாக அறிவித்தவுடன் இங்கே எப்படி நடத்துவார்கள் என்று குழம்பியபோது கார்பந்தயம் என்றால் இதற்கு என்று உள்ள தனி இடத்தில் தான் நடத்த வேண்டுமா! அந்த அளவிற்கு ஈடு கொடுக்கும் சாலையை நகரத்தில் நாங்களே தருகிறோம் என்று உலகிலேயே முதல் முறையாக நகரத்தின் உள்ளே அதுவும் இரவில் நடத்தி காட்டி சாதனை புரிந்தது, தற்போது இரண்டாவது முறையாக.


Formula 1 அப்படின்னா... ஒரு குட்டி விளக்கம்

Formula 1 என்பது பிரபலமான உலக கார் பந்தயம், உலகிலேயே அதிக பில்லியன்கள் புழங்கும் ஒரு விளையாட்டு. ஃபுட்பால், கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கு எப்படி வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போல இதற்கும் சற்றும் குறையாமல் இருக்கிறார்கள். இதில் கலந்து கொள்வது என்பது மிகவும் சிரமமான விஷயம் அதே போல இதில் ஓட்ட வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.


குத்துச்சண்டைக்கு சூப்பர் ஸ்டார் முகமது அலி, கிரிக்கெட்டிற்கு சூப்பர் ஸ்டார் பிராட்மேன், ஃபுட்பாலுக்கு சூப்பர் ஸ்டார் மரடோனா, இசை உலகின் சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன் என்றால் F1 கார்பந்தயத்தின் சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஷுமேக்கர் (michael schumacher). இவர் அடையாத வெற்றிகளே இல்லை, தற்போது இவர் ஓய்வு பெற்று விட்டார், இவரது இடத்தை அடைய பலர் கடுமையாக முயற்சிக்கிறார்கள் ஆனால் இவரை போல அந்த இடத்தை தொடர்ந்து தக்க வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை.


பயிற்சி ஆட்டம் கடந்த சனிக்கிழமை (26-09-09) நடந்தது, நிஜ போட்டி ஞாயிற்று கிழமை நடந்தது, இதில் மெக்ளேரன் மெர்சிடிஸ் அணியை சேர்ந்த லூயிஸ் ஹாமில்ட்டன் (24) வென்றார். இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்.

இவரே பெற்றி பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது, பயிற்சி ஆட்டத்திலும் இவரே முதலாவதாக வந்து இருந்தார். அதே போல அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்காமல் ஆட்டத்தின் முதலில் இருந்து கடைசி வரை மின்னலாக பாய்ந்து வந்து முதலிடத்தை பிடித்தார்.


இரண்டாவது இடத்தை டொயோட்டோவை சார்ந்த டிமோ குளோக் என்பவரும், கடந்த ஆண்டு போட்டியில் சர்ச்சையில் சிக்கிய ரெனோல்ட் அணியை சார்ந்த பெர்னாண்டோ அலான்சோ மூன்றாவது இடத்தையும பெற்றனர்.

சில சுவாராசிய தகவல்கள்


நம்ம விஜய் மல்லையா அவரது அணிக்காக வந்து இருந்தார்..வழக்கபோல ஃபிகர்களோட நின்று குஜாலாக ஒரு போஸ் கொடுத்தார் ;-)

பந்தயத்தில் கார் சராசரியாக 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும், உதாரணத்திற்கு சென்னையில் இருந்து ஈரோட்டிற்கு 1 மணி 10 நிமிடத்தில் வந்து விடலாம்.


பந்தயத்தின் போது வரும் விர்ர்ர்ர்ரும் விர்ர்ர்ர்ரும் சத்தம் கேட்டு காது (கார் டயர் அல்ல) பஞ்சர் ஆக அதிக வாய்ப்பு, அதனால் காதுக்கு பாதுகாப்போடு போவது நல்லது :-)


எங்கள் அலுவலகத்தில் மின்னஞ்சல் வந்தது (போட்டி நடக்கும் இடம் அருகில் எங்கள் அலுவலக கிளை ஒன்று உள்ளது, எங்கள் அலுவலக கிளை வேறு பக்கம்.. வடை போச்சே!) அதாவது அலுவல் வேலையாக வந்தால் காதுக்கு பாதுகாப்போடு வந்துக்குங்க என்று எச்சரித்து இல்லைனா வரவேற்பறையில் கேட்டு காது பாதுகாப்பு சாதனம் வாங்கிக்குங்க என்று!

நகரத்தின் உள்ளே நடந்ததால் அருகில் உள்ள அலுவலகங்கள் வீடுகள் மற்றும் உயரமான இடத்தில் உள்ளவர்கள் ஓ சியில் பார்த்துக்கொண்டு இருந்தார்கள், அதுக்காக பாலத்தின் மீது சாலையின் அருகில் நின்று பார்க்கலாம் என்று நினைத்துக்காதீங்க.. டின்னு கட்டிருவானுக :-)


நான் என்ன பண்ணுனேன்னு கேட்கறீங்களா! ஹி ஹி வழக்கம் போல தொலைக்காட்சி நேரலை தான்.

டிக்கெட் விலையை கேட்டதும் பேன்ட்டை உருவிட்டு தான் விடுவானுக போல இருக்குன்னு மனதை தேத்திக்கிட்டு விட்டுட்டேன், குறைந்த விலையிலும் கிடைக்கும் ஆனா அதுக்கு அடிதடியாக இருக்கும் ரொம்ப முன்னாடியே முன்பதிவு செய்யவேண்டும்.

உண்மையில் சொல்லப்போனால் போன வருடம் போட்டி நடந்த போது எனக்கு அதிக ஆர்வம் இல்லை, இந்த வருடம் இது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் ஆகி விட்டது அல்லது சிங்கப்பூர் அரசாங்கம் அவர்கள் செய்த விளம்பரம் மற்றும் முன் ஏற்பாட்டின் மூலம் ஆர்வத்தை உருவாக்கி விட்டது.


Formula 1 கார் பந்தயம் உலகிலேயே முதன் முதலாக இரவில் நடப்பது சிங்கப்பூர் ல் தான், ஒளி விளக்கால் போட்டி பாதையை பகலாக்கி விட்டார்கள். நகரத்தின் உள்ளே நடந்து இருந்தாலும் மாற்று ஏற்பாடுகளை பக்காவாக செய்து இருந்தார்கள், அது பற்றிய அறிவிப்பை போட்டி நடக்கும் நாளுக்கு ரொம்ப நாள் முன்பு இருந்தே செய்து கொண்டு இருந்தார்கள். சரியான திட்டம்= சிங்கப்பூர்

பிரபல வீரர்களுடன் குறிப்பாக ஹாமில்ட்டனுடன் போட்டோ எடுக்க அடிதடியே நடந்தது, விட்டால் அவர்களை பிய்த்து எடுத்து விடுவார்கள் போல.. குறிப்பாக பெண்கள்..ம்ம்ம்..கொடுத்த வச்சவங்க

பந்தயத்தை பார்க்க பல நாடுகளில் இருந்தும் ரசிகர்கள் வந்ததால் அனைத்து ஹோட்டல்களும் நிரம்பி வழிந்தது. எவ்வளோ பணம் கொடுத்தாலும் அந்த பகுதியில் ஹோட்டலில் இடம் கிடைக்காது என்கிற அளவிற்கு வந்து குவிந்து விட்டார்கள்.


பொருளாதார மந்தம் காரணமாக இந்த ஆண்டு போட்டிக்கு ஆதரவு குறைவாக இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள் ஆனால் ஏமாற்றாமல் பலர் வந்து இருந்தார்கள்.

பயிற்சி ஆட்டம் முடிந்த பிறகு போட்டியில் வெற்றி பெற்ற ஹாமில்ட்டன் சாலை சரியாக இல்லை குதிக்கிறது என்று கூறி டென்ஷன் செய்து விட்டார், போட்டியில் நல்ல வேளை வெற்றி பெற்று விட்டார் இல்லைனா சாலை சரி இல்லாததால் தான் தோல்வி அடைந்து விட்டேன் என்று கூறி இருப்பாரோ! உஷாராகத்தான் இருக்காங்கையா! ;-)


போட்டியின் போது கார் தாறுமாறான வேகத்தில் செல்வதால் காரின் உள்ளே கடும் வெப்பம் உருவாகும் அதிகபட்சமாக 60 டிகிரி செல்சியஸ் வரை, எனவே அதற்கான பாதுகாப்பு ஏற்பாடோடு இருப்பார்கள், அதுவும் சிங்கப்பூர் ஓரளவு வெப்பமான நாடு தான். எனவே வெப்பம் சற்று கூடுதலாகவே இங்கு இருந்து இருக்கும்.

தலை பாதுகாப்பு கவசம் கவனம் எடுத்து இதற்கு தயாரிக்கப்படுகிறது, காரணம் 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதால் தலையை பின்னோக்கி அதிக அழுத்தத்தில் தள்ளும் எனவே அதை தாங்கக்கூடிய அளவில் தலைக்கவசம் இருக்க வேண்டும்.


சாதாரண கவசத்துடன் சென்றால் முகம் எல்லாம் பிஞ்சுட்டு போய்டும், நம்ம தமிழ் படத்தில் பார்த்து இருப்பீர்களே ஹீரோ அடிக்கும் போது முகத்தின் சதை அலைபாயும் காற்றில்!! :-) அது மாதிரி

F1 கார் பந்தயம் என்பது தனி நபர் விளையாட்டு அல்ல இது ஒரு குழு விளையாட்டு. ஓட்டுனர் மட்டுமே திறமையானவராக இருந்தால் பத்தாது அந்த காரை பராமரிக்கும் நபர்களும் முக்கியம், குறிப்பாக பந்தயத்தின் போது டயர் மாற்றம் நடக்கும் போது.


F1 கார் பந்தயம் 61 சுற்றுகள் (lap) நடக்கும், கார் தாறுமாறான வேகத்தில் செல்வதால் டயர் சீக்கிரம் தேய்ந்து விடும் அல்லது பாதிப்படைந்து விடும் எனவே இடையில் பெட்ரோல் போடவும் டயர் மாற்றவும் வருவார்கள், ஓட்டுனர் குழுவை சேர்ந்தவர்கள் மின்னல் வேகத்தில் அனைத்தையும் செய்வார்கள்.

ஒவ்வொரு பாகத்தையும் மாற்ற தனித்தனி நபர்கள் இருப்பார்கள், டயர் மாற்ற பெட்ரோல் போட (பெட்ரோல் வழக்கம் போல இல்லாமல் வேகமாக செல்லும்) என, அதிரடியாக அனைத்தும் நடக்கும். சராசரியாக குறைந்த பட்சம் 6 நொடியில் இருந்து அதிகபட்சமாக 10 நொடிக்குள் அனைத்தையும் மாற்றி விடுவார்கள்.


ஒரு ஓட்டுனர் பெட்ரோல் பைப்பை எடுக்கும் முன்பே அவசரப்பட்டு எடுத்து விட அதை பிடித்துக்கொண்டு இருந்தவர் மற்றும் அதன் அருகில் இருந்தவர்கள் அனைவரையும் இழுத்துக்கொண்டு போய் விட்டார், பின் நிறுத்தி அவசரமாக இன்னொருவர் எடுத்து (பிடுங்கி) அனுப்பி வைத்தார்.

ஓட்டுனர் அலான்சோ குழுவினர் 5.8 நொடியில் நான்கு டயரையும் மாற்றி பெட்ரோல் போட்டு வண்டியை புறப்பட வைத்தார்கள்....சரவெடியாக இருந்தது.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சிங்கப்பூர் அரசு Formula 1 போட்டியை மிகச்சிறப்பாக நடத்தி தான் ஒரு திறமையான அரசு என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டது. போட்டி முடிந்தாலும் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு இன்னும் கொஞ்ச நாளைக்கு கார் சத்தம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பது உறுதி.

F1 கார் பந்தயத்தை பற்றி படித்து விட்டு நீங்கள் சும்மா சென்றால் எப்படி..உங்களை அலறவைக்கும் இசையை, உடலில் மின்சார அலைகளை ஏற்படுத்தும் "ஷுமேக்கர்" பாடலையும் கேட்டு என்ஜாய் மாடி :-)


Buzz It

25 COMMENTS:

ஜெகதீசன் on 10:51 AM, September 29, 2009 said...

//
ஒரு ஓட்டுனர் பெட்ரோல் பைப்பை எடுக்கும் முன்பே அவசரப்பட்டு எடுத்து விட அதை பிடித்துக்கொண்டு இருந்தவர் மற்றும் அதன் அருகில் இருதவர்கள் அனைவரையும் இழுத்துக்கொண்டு போய் விட்டார், பின் நிறுத்தி அவசரமாக இன்னொருவர் எடுத்து (பிடுங்கி) அனுப்பி வைத்தார்.
//
?? இது போன வருடம் நடந்ததாச்சே? இந்த வருடமுமா?

Mahesh on 11:01 AM, September 29, 2009 said...

வழக்கம் போல சுரு சுருன்னு எழுதியிருக்கீங்க...

//சென்னையை விட ரொம்ப குட்டி, மொத்தமே 45 கிலோமீட்டர் சுற்றளவு தான்//

சாமி... சுற்றளவு கிட்டத்தட்ட 200 கி.மீ. கிழக்கு-மேற்கு ~45 கி.மீ. தெற்ற்கு-வடக்கு ~30கி.மீ.

எம்.எம்.அப்துல்லா on 11:20 AM, September 29, 2009 said...

//குத்துச்சண்டைக்கு சூப்பர் ஸ்டார் முகமது அலி, கிரிக்கெட்டிற்கு சூப்பர் ஸ்டார் பிராட்மேன், ஃபுட்பாலுக்கு சூப்பர் ஸ்டார் மரடோனா, இசை உலகின் சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன் என்றால் F1 கார்பந்தயத்தின் சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஷுமேக்கர் (michael schumacher).

//

நடிகர்களில் சூப்பர்ஸ்டார் ரஜினி. ரஜினி ரசிகர்களில் சூப்பர்ஸ்டார் அண்ணன் ரஜினிகிரி :)

எம்.எம்.அப்துல்லா on 11:21 AM, September 29, 2009 said...

Mahesh said...

சாமி... சுற்றளவு கிட்டத்தட்ட 200 கி.மீ. கிழக்கு-மேற்கு ~45 கி.மீ. தெற்ற்கு-வடக்கு ~30கி.மீ.

//

புள்ளிவிவரப் புலி ”கேப்டன்” மகேஷ் வாழ்க!

:)

ஜெகதீசன் on 11:41 AM, September 29, 2009 said...

//குத்துச்சண்டைக்கு சூப்பர் ஸ்டார் முகமது அலி, கிரிக்கெட்டிற்கு சூப்பர் ஸ்டார் பிராட்மேன், ஃபுட்பாலுக்கு சூப்பர் ஸ்டார் மரடோனா, இசை உலகின் சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன் என்றால் F1 கார்பந்தயத்தின் சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஷுமேக்கர் (michael schumacher).

//
இந்த சூப்பர் ஸ்டார்களின் வரிசையில் ரஜினியைச் சேர்க்காத நுண்ணரசியலைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்..
:)

வால்பையன் on 11:42 AM, September 29, 2009 said...

சிங்கப்பூர் நிறுபித்து கொண்டே இருக்கிறது!

ராமலக்ஷ்மி on 12:05 PM, September 29, 2009 said...

த்ரில்லுடன் பார்த்து ரசித்ததை வெகு சுவாரஸ்யமாய் விளக்கியிருக்கிறீர்கள்!

R.Gopi on 1:20 PM, September 29, 2009 said...

//குத்துச்சண்டைக்கு சூப்பர் ஸ்டார் முகமது அலி, கிரிக்கெட்டிற்கு சூப்பர் ஸ்டார் பிராட்மேன், ஃபுட்பாலுக்கு சூப்பர் ஸ்டார் மரடோனா, இசை உலகின் சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன் என்றால் F1 கார்பந்தயத்தின் சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஷுமேக்கர் (michael schumacheர்). //

சினிமாவுக்கு சூப்பர் ஸ்டார்னா அது "தலைவர் ரஜினிகாந்த்"... இத விட்டுட்டீங்களே கிரி...

//நம்ம விஜய் மல்லையா அவரது அணிக்காக வந்து இருந்தார்..வழக்கபோல ஃபிகர்களோட நின்று குஜாலாக ஒரு போஸ் கொடுத்தார் ;‍)//

சரி...சரி...விடுங்க... நம்மாளு தானே... அதுவும் அவரை பத்தி தான் எல்லாருக்குமே தெரியுமே...

எப்படியோ சிங்கப்பூரை கலங்கடித்து விட்டீர்கள்...

வாழ்த்துக்கள்...

இறக்குவானை நிர்ஷன் on 2:32 PM, September 29, 2009 said...

நல்ல விளக்கமான பதிவு.

தகவலுக்கு நன்றி.

கிரி on 2:47 PM, September 29, 2009 said...

// ஜெகதீசன் said...

?? இது போன வருடம் நடந்ததாச்சே? இந்த வருடமுமா?//

அது போன வருஷம் இது இந்த வருஷம் :-)))))

நீண்ட மாதங்களுக்கு பிறகு வருகை புரிந்த ஜெகதீசனுக்கு நன்றி :-)

//இந்த சூப்பர் ஸ்டார்களின் வரிசையில் ரஜினியைச் சேர்க்காத நுண்ணரசியலைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்..
:)//

:-))

=========================================================

// Mahesh said...
வழக்கம் போல சுரு சுருன்னு எழுதியிருக்கீங்க... //

நன்றி மகேஷ்

//சாமி... சுற்றளவு கிட்டத்தட்ட 200 கி.மீ. கிழக்கு-மேற்கு ~45 கி.மீ. தெற்ற்கு-வடக்கு ~30கி.மீ.//

:-)))

இதை கேட்டவுடன் எனக்கு சரத்குமார் "நட்புக்காக" படம் செந்தில் காமெடி தான் நினைவிற்கு வருகிறது.

அதுல செந்தில் ஒவ்வொரு பக்கமா கார் டயர் பார்த்து இந்த பக்கம் இரண்டு அந்த பக்கம் இரண்டு என்று மொத்தம் நான்கு பக்கம் எட்டு டயர் என்று கூறுவார்..:-)))

நான் நேர்கோட்டில் கூற சுற்றளவு என்று கூறி விட்டேன்...நன்றி சுட்டியமைக்கு மாற்றி விடுகிறேன் :-)

==========================================================

// எம்.எம்.அப்துல்லா said...

நடிகர்களில் சூப்பர்ஸ்டார் ரஜினி. ரஜினி ரசிகர்களில் சூப்பர்ஸ்டார் அண்ணன் ரஜினிகிரி :)//

:-)))

//புள்ளிவிவரப் புலி ”கேப்டன்” மகேஷ் வாழ்க!//

ஹா ஹா ஹா

=================================================

// வால்பையன் said...
சிங்கப்பூர் நிறுபித்து கொண்டே இருக்கிறது!//

பட்டைய கிளப்புறானுக

==================================================

// ராமலக்ஷ்மி said...
த்ரில்லுடன் பார்த்து ரசித்ததை வெகு சுவாரஸ்யமாய் விளக்கியிருக்கிறீர்கள்!//

நன்றி ராமலக்ஷ்மி

==================================================

// R.Gopi said...
சினிமாவுக்கு சூப்பர் ஸ்டார்னா அது "தலைவர் ரஜினிகாந்த்"... இத விட்டுட்டீங்களே கிரி...//

கோபி கவனித்து பாருங்க..நான் உலக சூப்பர் ஸ்டார்களை தான் கூறி இருக்கிறேன், நம்ம தலைவர் இந்திய திரை உலக சூப்பர் ஸ்டார் :-)

//சரி...சரி...விடுங்க... நம்மாளு தானே... அதுவும் அவரை பத்தி தான் எல்லாருக்குமே தெரியுமே...//

அவருக்கு முக்கியமான இடத்துல மச்சம் இருக்கும் போல ;-)

====================================================

// இறக்குவானை நிர்ஷன் said...
நல்ல விளக்கமான பதிவு.//

நிர்ஷன் எப்படி இருக்கீங்க? ரொம்ப மாதம் (கிட்டத்தட்ட வருடம்) கழித்து உங்கள் பின்னூட்டம் ..

வருகைக்கு நன்றி

மணிகண்டன் on 3:01 PM, September 29, 2009 said...

கிரி, நல்லா எழுதி இருக்கீங்க.

இரவு பந்தயம் சிங்கப்பூர் தான் முதல்ல. பட், நார்மல் தெருவையே டிராக்கா யூஸ் பண்றது ஐரோப்பாளையும் உண்டுன்னு தான் நினைக்கறேன்.

சூப்பர் ஸ்டார்ல நீங்க ரஜினியை விட்டாலும் தமிழக அரசு கவுரவிச்சசது நம்ம எல்லாருக்கும் மகிழ்ச்சியே !!

ராஜ நடராஜன் on 3:07 PM, September 29, 2009 said...

இடுகை F1 வேகம்.ஆமா!நம்ம கார்த்திகேயன் வந்தாரா?

சிங்கக்குட்டி on 3:47 PM, September 29, 2009 said...

நல்ல தகவல்கள் கிரி நன்றி.

ஆனா சூப்பர்ஸ்டார் லிஸ்டில் ரஜினி எங்கே????

வடுவூர் குமார் on 4:37 PM, September 29, 2009 said...

கிரி இந்த பார்முலா வந்ததற்கு யார் காரணம் தெரியுமா? நானே யூகித்தது...
ஒரு முறை முன்னால் மலேசிய பிரதமர் ஜோஹர் பாருவில் “சிங்கப்பூர் சாலைகளில் 5 வது கியர் போட அவசியமே இல்லை” என்று சொல்லியிருந்தார் அதற்கு பதிலடியாக F1 வாகன சத்தத்தின் மூலமே அடி கொடுத்துள்ளார்கள் என்று தோனுகிறது.

எவனோ ஒருவன் on 8:11 PM, September 29, 2009 said...

அடேயப்பா, இவ்ளோ இருக்கா இதுல.
தகவல்களுக்கு நன்றி கிரி அண்ணே.

சுதாகர் on 9:23 PM, September 29, 2009 said...

//அந்த அளவிற்கு ஈடு கொடுக்கும் சாலையை நகரத்தில் நாங்களே தருகிறோம் என்று உலகிலேயே முதல் முறையாக நகரத்தின் உள்ளே அதுவும் இரவில் நடத்தி காட்டி சாதனை புரிந்தது, தற்போது இரண்டாவது முறையாக.// - இதில் ஒரு தவறு (அ) குழப்பம்.

சிங்கப்பூர் தான் முதன்முதலா இரவில் போட்டி நடத்தியது. ஆனால், இதற்கு முன் நகரத்தின் உள்ளே பல இடங்களில் நடந்துள்ளது. அவற்றில் சில - மொனாகோ, மெல்ப்ரன். இதில், மொனாகோ தான் இன்னமும் பெஸ்ட்.

குறை ஒன்றும் இல்லை !!! on 11:20 PM, September 29, 2009 said...

நல்ல பகிர்வுங்க!!!!

கிரி on 10:02 AM, September 30, 2009 said...

//மணிகண்டன் said...
கிரி, நல்லா எழுதி இருக்கீங்க. //

நன்றி மணிகண்டன்

//இரவு பந்தயம் சிங்கப்பூர் தான் முதல்ல. பட், நார்மல் தெருவையே டிராக்கா யூஸ் பண்றது ஐரோப்பாளையும் உண்டுன்னு தான் நினைக்கறேன்.//

இருக்கும்னு நானும் நினைக்கிறேன்..ஆனால் அவர்கள் நாடெல்லாம் பெரிய இடம்..ஆனால் சிங்கப்பூர் மிகவும் குட்டி நாடு அதில் இதை சிறப்பாக செய்து இருப்பது பாராட்டிற்குரியது.

//சூப்பர் ஸ்டார்ல நீங்க ரஜினியை விட்டாலும் தமிழக அரசு கவுரவிச்சசது நம்ம எல்லாருக்கும் மகிழ்ச்சியே !!//

விருதிற்கு தான் எல்லோரும் பொங்கிட்டாங்களே ;-)

=================================================

// ராஜ நடராஜன் said...
இடுகை F1 வேகம்.ஆமா!நம்ம கார்த்திகேயன் வந்தாரா?//

கார்த்திகேயன் வந்த மாதிரி தெரியல..சிங்கை தமிழ் செய்தித்தாள் ல கூட நான் எதுவும் பார்க்கவில்லை

=================================================

// சிங்கக்குட்டி said...
சூப்பர்ஸ்டார் லிஸ்டில் ரஜினி எங்கே????//

ஆஹா! தலைவர் பேரை சேர்க்காம விட்டதற்கு எனக்கு விசாரணை கமிஷன் அமைத்து விடுவாங்க போல இருக்கே :-)

சிங்கக்குட்டி அது எல்லாம் உலக சூப்பர் ஸ்டார்கள்....தலைவர் இந்திய சூப்பர் ஸ்டார். எந்திரன் படம் வந்ததும் உலக சூப்பர் ஸ்டார் ஆக்கிடுவோம் ;-)

===================================================

// வடுவூர் குமார் said...
கிரி இந்த பார்முலா வந்ததற்கு யார் காரணம் தெரியுமா? நானே யூகித்தது...
ஒரு முறை முன்னால் மலேசிய பிரதமர் ஜோஹர் பாருவில் “சிங்கப்பூர் சாலைகளில் 5 வது கியர் போட அவசியமே இல்லை” என்று சொல்லியிருந்தார் அதற்கு பதிலடியாக F1 வாகன சத்தத்தின் மூலமே அடி கொடுத்துள்ளார்கள் என்று தோனுகிறது.//

இருக்கலாம்.. ஆனால் தர்ம அடி :-) இவரு என்ன லிட்டில் இந்தியா ல வந்து பார்த்துட்டு அப்படி சொல்லிட்டாரா! ;-)

===================================================

// எவனோ ஒருவன் said...
அடேயப்பா, இவ்ளோ இருக்கா இதுல. //

இதுக்கு மேலும் இருக்கலாம் ..

====================================================

// சுதாகர் said...
சிங்கப்பூர் தான் முதன்முதலா இரவில் போட்டி நடத்தியது. ஆனால், இதற்கு முன் நகரத்தின் உள்ளே பல இடங்களில் நடந்துள்ளது. அவற்றில் சில - மொனாகோ, மெல்ப்ரன். இதில், மொனாகோ தான் இன்னமும் பெஸ்ட்.//

தகவலுக்கு நன்றி சுதாகர்

====================================================

// குறை ஒன்றும் இல்லை !!! said...
நல்ல பகிர்வுங்க!!!//

நன்றி ராஜ்

ஈ ரா on 12:01 PM, September 30, 2009 said...

// பிரபல வீரர்களுடன் குறிப்பாக ஹாமில்ட்டனுடன் போட்டோ எடுக்க அடிதடியே நடந்தது, விட்டால் அவர்களை பிய்த்து எடுத்து விடுவார்கள் போல.. குறிப்பாக பெண்கள்..ம்ம்ம்..கொடுத்த வச்சவங்க //

இத வீட்ல சொன்னா பிச்சு பீசாக்கிடுவாங்க ஜாக்கிரதை.....

அப்புறம்

சூப்பர் ஸ்டார போட்டு இருந்தீங்கன்னா, அத அசால்ட்டா படிச்சுட்டு விட்ட்ருவாங்க.... போடாம விட்டா, சனங்களே கேள்வி கேட்டு தானாப் புரிஞ்சுப்பாங்கன்னு விவரமாதான் எழுதியிருக்கீய.....

அப்புறம்

உண்மையிலே நேரடியா பார்த்த போல இருந்துச்சு உங்க பதிவு...

அப்புறம்

வாழ்த்துக்கள்

R.Gopi on 12:14 PM, September 30, 2009 said...

கிரி...

ஏன் "எந்திரன்" வரும்வரை வெயிட் பண்ணனும்... அதுதான், ரஜினி ஏற்கனவே தன் இருப்பை சிவாஜி படத்தின் மூலம் உலகுக்கு அறிவித்து விட்டாரே...

சிவாஜி திரையிடப்பட்ட உலகின் எல்லா பகுதிகளிலும் பட்டையை கிளப்பினார் தானே...

மங்களூர் சிவா on 2:39 PM, September 30, 2009 said...

நல்லா வர்ணிச்சு எழுதியிருக்கீங்க. சூப்பர்.

’டொன்’ லீ on 5:02 PM, September 30, 2009 said...

ம்..நல்ல அனுபவிச்சு (enjoy) எழுதி இருக்கீங்க ..F1 போட்டிகள் தொலைகாட்சியில் பார்ப்பது தான் நல்லம், இல்லாட்டி, சுவிஸ் ஓட்டல், மரீனா, அங்க அறை எடுத்தால், நேரடியாகவும் பார்க்கலாம், ரீவியிலும் பார்க்கலாம், ஆனால் அதற்கான விலை, 3 நாளுக்குமான F1 ரிக்கற்றிலும் அதிகம் :-)

ராமலக்ஷ்மி on 7:12 PM, September 30, 2009 said...

இந்தப் பதிவும் விகடன் Good Blogs-ல்!

கிரி on 9:26 PM, September 30, 2009 said...

//ஈ ரா said...
இத வீட்ல சொன்னா பிச்சு பீசாக்கிடுவாங்க ஜாக்கிரதை.....//

என்னை வீட்டுல தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க :-) என்ஜாய் மாடி

//சூப்பர் ஸ்டார போட்டு இருந்தீங்கன்னா, அத அசால்ட்டா படிச்சுட்டு விட்ட்ருவாங்க.... போடாம விட்டா, சனங்களே கேள்வி கேட்டு தானாப் புரிஞ்சுப்பாங்கன்னு விவரமாதான் எழுதியிருக்கீய.....//

:-)))

//உண்மையிலே நேரடியா பார்த்த போல இருந்துச்சு உங்க பதிவு.//

நன்றி ஈரா

//அப்புறம்

வாழ்த்துக்கள்//

இப்பவே நன்றிய தெரிவித்துக்கொள்கிறேன் :)

====================================================

// R.Gopi said...
ஏன் "எந்திரன்" வரும்வரை வெயிட் பண்ணனும்... அதுதான், ரஜினி ஏற்கனவே தன் இருப்பை சிவாஜி படத்தின் மூலம் உலகுக்கு அறிவித்து விட்டாரே...//

கோபி.. சிவாஜி எல்லாம் சும்மா ட்ரைலர் தாம்மா! மெயின் பிக்சர்ஸ் எந்திரன் தான்.. இது எப்படி இருக்கு! :-)

//சிவாஜி திரையிடப்பட்ட உலகின் எல்லா பகுதிகளிலும் பட்டையை கிளப்பினார் தானே.//

இதை விட பட்டய கிளப்ப வருகிறான் எந்திரன் :-)

=========================================================

// மங்களூர் சிவா said...
நல்லா வர்ணிச்சு எழுதியிருக்கீங்க. சூப்பர்.//

நன்றி சிவா

========================================================

// ’டொன்’ லீ said...
ம்..நல்ல அனுபவிச்சு (enjoy) எழுதி இருக்கீங்க ..F1 போட்டிகள் தொலைகாட்சியில் பார்ப்பது தான் நல்லம், இல்லாட்டி, சுவிஸ் ஓட்டல், மரீனா, அங்க அறை எடுத்தால், நேரடியாகவும் பார்க்கலாம், ரீவியிலும் பார்க்கலாம், ஆனால் அதற்கான விலை, 3 நாளுக்குமான F1 ரிக்கற்றிலும் அதிகம் :-)//

டொன் லீ சுவிஸ் ஹோட்டல் போனது ஒரு பெரிய காமெடி

அங்கே என்னோட முன்னாள் நிறுவன எங்கள் குழு அதிகாரி வந்து இருந்தார், அவர் அழைத்து இருந்தார் என்று சென்று இருந்தேன்.

அறை எண் கூறி இருந்ததால் மின்தூக்கியில் (lift) செல்ல உள்ளே போன போது வேலை செய்யவில்லை.. என்னடா இது பிரச்சனை என்று குழம்பி விட்டேன்..

பின்னர் தொலைபேசியில் அவரை அழைத்தேன், பிறகு வந்தவுடன் தான் தெரிந்தது அங்கே தங்கி உள்ளவர்களுக்கு ஒரு அட்டை கொடுப்பார்கள் என்று அதை மின்தூக்கியில் உள்ள ஒரு இடத்தில் சொருகினால் மட்டுமே அது வேலை செய்யும் என்று..

செம கடுப்பாகிகிட்டேன்..அடப்பாவிகளா! எப்படி எல்லாம் யோசிக்கறாங்க என்று..வெளிநபர்கள் உள்ளே நுழைவதை தவிர்க்க இந்த நடைமுறையாம்.. சூப்பர்!

எப்படி எல்லாம் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறார்கள் பாருங்கள்.

அதனால் எனக்கு எப்போது சுவிஸ் ஹோட்டல் பற்றி பேச்சு வந்தாலும் இது தான் நினைவிற்கு வரும்.

நீங்க கூறிய மாதிரி அங்கே அறை எடுத்து பார்ப்பதற்கு டிக்கெட் வாங்கியே பார்த்து விடலாம் ;-)

====================================================

// ராமலக்ஷ்மி said...
இந்தப் பதிவும் விகடன் Good Blogs-ல்!//

ராமலக்ஷ்மி என்னை விட எப்போதும் என் வளர்ச்சியில் உங்களுக்கே அதிக ஆர்வம், மகிழ்ச்சி.

நன்றி கூற வார்த்தை இல்லை, என் அன்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.

குசும்பன் on 3:06 PM, October 01, 2009 said...

கிரி அண்ணே கலக்கலா எழுதி இருக்கீங்க! கொஞ்சம் அழகிங்க போட்டோவை பெருசா போட்டு இருக்கலாம். முதுகில் டாட்டூ போட்டு இருக்கும் பெண் கொஞ்சம் திரும்பும் வரை காத்திருந்து ஒரு போட்டோ எடுத்துஇருக்கலாமுல்ல!:)))