“நாடோடிகள்” – திரைவிமர்சனம்

by கிரி on July 8, 2009

nadodigal1 நாடோடிகள்   திரைவிமர்சனம்
இயல்பான படங்கள் வருவதில்லை என்று குறைபட்டு கொள்பவர்களுக்கு திருப்தி அளிக்கும் விதமாக சில! சமயங்களில் படங்கள் வருவதுண்டு அதை போல படங்களில் “நாடோடிகள்” படமும் இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

சசி, விஜய், பரணி மூவரும் நண்பர்கள், இதில் சசியின் நண்பரின் ஒருவரின் காதலுக்காக இவர்கள் இணைந்து போராடி எதிர்ப்பை மீறி திருமணம் செய்து வைக்கிறார்கள், இதனால் இவர்கள் அனைவருக்கும் ஏற்படும் இழப்புகள் அதிகம். ஆனால் திருமணம் செய்த காதலர்கள் (மிக) விரைவிலேயே பிரிந்து விடுவார்கள், அதோடு இவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை பற்றி கொஞ்சமும் மதிக்கமாட்டார்கள், இதனால் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் தங்களை ஏமாற்றிய அல்லது முட்டாளாக்கிய காதலர்களை கொலை செய்வது என்று முடிவு செய்கிறார்கள். கடைசியில் இவர்கள் கொலை செய்தார்களா! நண்பர்கள் என்ன ஆனார்கள்!! என்பதே படம்.

 

சுப்ரமணியபுரம் பசங்க படத்தில் நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக என்று கலந்து கட்டி அடிக்கும் சசி இதிலும் அசத்தி இருக்கிறார் அவருடன் அவருக்கு எந்த விதத்திலும் குறையாத முக்கியத்துவத்துடன் அனைவரும் நடித்து இருக்கிறார்கள். இதில் ஹீரோ என்று எவருமில்லை சசிக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் கொஞ்சம் முக்கியத்துவத்தால் அவர் ஹீரோ போன்று தோன்றினாலும் இயல்பாகவே இருந்தது.

 

அவரது நண்பர்களாக நடித்து இருக்கும் விஜய், பரணி, கஞ்சா கருப்பு, மற்றும் இன்னொருவர் என்று அனைவரும் மனதில் நிற்கும் பாத்திரம். நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்ப சூழ்நிலை சிரமங்கள் என்று வேறுபட்டு இருந்தாலும் நட்பு என்ற ஒரு சொல்லில் அனைவரும் இணைந்து இருக்கிறார்கள்.

 

தங்கள் நண்பனின் காதலை நிறைவேற்ற அவர்கள் எடுக்கும் முயற்சிகளும் அதற்காக அவர்கள் அனுபவிக்கும் சிரமங்களும் மனதை நெகிழ செய்பவையாக இருக்கும், இவர்களை பார்க்கும் போது நம் நண்பர்களையும் அவர்கள் நாம் சிரமப்பட்ட காலங்களில், நமக்கு செய்த உதவிகளும் நம் மனக்கண்ணில் ஒருமுறை வந்து செல்கிறது. “நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்” என்ற கருத்தை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது.

 

(சசி) தனது தங்கையை தனது நண்பன் (விஜய்) விரும்புவது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் கலாய்க்கும் காட்சிகள் சுவாராசியமாக இருக்கும். பரணி தனது வெகுளி காமெடியால் நம்மை சிரிப்பூட்டுகிறார், இன்னும் கொஞ்சம் நடிப்பில் முதிர்ச்சி தேவை. இவர்களுடன் கஞ்சா கருப்பும் இணையும் போது பல (சீரியஸ் காட்சிகளில் கூட) இடங்களில் சிரிப்பு அலைகள்.

 

nadodigal2 நாடோடிகள்   திரைவிமர்சனம்
சசியின் மாமா பெண்ணாக அனன்யா துறுதுறுவென்று நடித்துள்ளார், ஜோதிகாவை நினைவு படுத்துகிறார், சில சமயங்களில் ஓவர் துறுதுறுப்பால் கொஞ்சம் எரிச்சலையும் நினைவு படுத்துகிறார், நல்ல சாப்பாட்டு பிரியை, எப்போதும் எதையாவது தின்று கொண்டே இருப்பார் சசி மீது தன் பிரியத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், தன் அப்பா பிடிவாதத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்பை நினைத்து கலங்கும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார்.

 

இதில் பலர் புதுமுகமாக இருக்கிறார்கள், மேக் அப் முகமாக இல்லாமல் அனைவரும் இயல்பாக இருப்பது படம் பார்ப்பவர்களுக்கு பெரும் ஆறுதல்.விஜயின் அப்பா இவரின் காதலுக்காக உதவ செய்யும் செயல்கள் கடுப்பை வரவழைத்தாலும் இறுதியில் அனைவரின் மனம் கவர்ந்து விடுகிறார். படம் முதலில் மெதுவாக சென்று இடைவேளை வரும் சமயத்தில் சூப்பர் சானிக் வேகத்தில் செல்கிறது, இத்தனை பரபரப்புடன் இடைவேளை பார்த்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது.

 

படம் தொடங்கி கொஞ்ச நேரம் இவர்கள் பேசும் போதெல்லாம் பின்னணி இசை அல்லது சத்தம் எதுவும் இல்லாமல் இவர்கள் பேசுவது மட்டுமே கேட்கும் போது என்னவோ போல இருக்கிறது, சசி தனது சிறுவயது முதல் பழகும் நண்பனுக்காக அனைத்தும் செய்து கடைசியில் அவர் இவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது, காதலி கிடைக்கவில்லை என்றால் சாக துணியும் காதலன், காதலன் இல்லை என்றால் தன்னால் வாழவே முடியாது என்று கூறும் காதலி இவ்வாறு காட்சிகள் அமைத்து விட்டு (மிக) கொஞ்ச நாளில் பிரிவது என்பது நம்பக்கூடியதாக இல்லை, இவர்கள் பிரிவிற்கு வலுவான காரணமாக எதுவும் இல்லை. இயக்குனர் சமுத்திரகனி காதலர்கள் பலர் இவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்ற கருத்தை வலியுறுத்துவதற்காக இதை செய்து இருக்கலாம் அல்லது இதற்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்து இருக்கலாம், இருந்தாலும் இந்த காட்சிகள் இயல்பாக இல்லை.

 

நல்ல படமாக கொடுக்க வேண்டும் என்று எண்ணம் இருந்தாலும் இயக்குனர்களுக்கு இன்னும் பயம் இருப்பதை அழகி படத்தில் வந்த குருவி குடைந்த கொய்யாப்பழம் நிரூபித்ததை போல இதிலும் ஒரு குத்தாட்ட பாடல் நிரூபிக்கிறது. அவசியமே இல்லாத பாடல் மற்றும் காட்சி, இதில் சசி ஆட! முயற்சித்து இருக்கிறார்.

 

இதில் காதலர்களில் பெண்ணின் தந்தையாக வரும் (பசங்க படத்தில் ஆசிரியராக நடித்து இருப்பவர்) தன் பெண் திரும்பி வந்த பிறகு அதை தட்டி கேட்க வரும் சசி குழுவினரை பார்த்து கேட்கும் கேள்விகள் ஒரு தந்தையின் எதார்த்தமான கேள்விகளாக இருக்கும். என் பெண்ணுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியாதா! அதற்குள் நடுவில் புகுந்து கெடுத்து விட்டீர்களே! என்று அதை தொடர்ந்து அவர் பேசும் வசனங்கள் அருமையாக இருக்கும்.

 

இயக்குனர் விக்ரமன் படத்தில் தான் சிரமமான நேரத்தில் திடீரென்று கதாநாயகனுக்கு உதவிகள் கிடைக்கும், அதே போல இவர்களுக்கும் அனைத்தையும் இழந்த நேரத்தில் சமையல் சம்பந்தப்பட்ட வேலை மற்றும் அதை மேம்படுத்த உதவிகள் கிடைக்கும்.

 

சேசிங் காட்சிகளில் வரும் சம்போ சிவ சம்போ பாடலும் அதன் இசையும் காட்சிக்கு ஒரு விறுவிறுப்பை கொடுக்க பெரிதும் உதவியுள்ளன, ரசிகர்களை பரபரப்பாக வைத்துக்கொள்ள இது பெரிதும் உதவி இருக்கிறது. இதில் இவர்களுடன் சேசிங் காட்சிகளிலும் கடைசியிலும் இணையும் ஒரு நண்பர் அதிக காட்சிகளில் இல்லை என்றாலும் மனதில் நிற்கும் அல்லது இது யார் என்று கேட்கும் நபராக உள்ளார், அலட்டல் இல்லாத நடிப்பு. விளம்பர பிரியராக வரும் ஒரு நபரும் தன் பங்கை சிறப்பாகவே செய்துள்ளார் (ஆளை பார்த்தால் நிஜ வாழ்க்கையிலும் அப்படி தான் இருப்பாரோ என்று தோன்றும் படியே இருக்கிறார்).

 

மிகசிறந்த படம் என்று கூற முடியாவிட்டாலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். கதாநாயகர்களை நம்பாமல் கதையை நம்பும் இதை போல படங்களை மக்கள் ஆதரிப்பது மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும்.

No related posts.

{ 22 comments… read them below or add one }

நட்புடன் ஜமால் July 8, 2009 at 5:57 AM

சசி தனது சிறுவயது முதல் பழகும் நண்பனுக்காக அனைத்தும் செய்து கடைசியில் அவர் இவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது,\\

இது தான் எனது கருத்தும்.

நல்ல விமர்சணம் கிரி.

சசியின் தங்கையா நடித்தவர் ஊமையாமே! …

Reply

ஆ.ஞானசேகரன் July 8, 2009 at 6:39 AM

நன்றாக விமர்சித்துள்ளீர்கள்

Reply

ஆனந்தன் July 8, 2009 at 6:44 AM

நல்ல விமர்சனம் நண்பரே -எனக்கும் அந்த குத்து பட்டு திணிக்க பட்டதாகவே தோனுகிறது

Reply

கோவி.கண்ணன் July 8, 2009 at 6:52 AM

பதிவர் கடமையை ஆற்றியாச்சா ?
:)

Reply

ராமலக்ஷ்மி July 8, 2009 at 6:52 AM

இது விமர்சனம்:)! அழகான விரிவான அலசல். யதார்த்தமான படங்கள் வரிசையில் சேருகிறது என்பதும் ஆறுதல். தமிழ் திரையுலகம் இதைத் தொடர வேண்டும்.

Reply

R.Gopi July 8, 2009 at 8:56 AM

கிரி,

நல்ல விமர்சனம்…. டைரக்டர் படிச்சா, ரொம்ப சந்தோஷப்படுவார்……. (ஹீ ஹீ…)

நல்லா இருக்குன்னு சொல்லிட்டீங்க… இந்த வியாழன் ராத்திரி போயிட வேண்டியதுதான். (வரீங்களா, ரெண்டாவது தடவை – துபாயில் பார்ப்பதற்கு??). விடுங்க.. "எந்திரன்" ரிலீஸ் ஆகும்போது பாத்துப்போம்……

Reply

வாசுகி July 8, 2009 at 9:28 AM

நீங்கள் விமர்சனம் செய்யும் விதம் அருமை.படம் ஒன்றுமே விடாமல் பார்ப்பீங்க போல.

Reply

அதி பிரதாபன் July 8, 2009 at 10:24 AM

அருமை.
செவிடான நண்பரிடம் போலீஸ் விசாரனையின்போது, கஞ்சா கருப்பை பற்றி கேட்கும்போது ‘இவர்தான் எங்களுக்கு எல்லாம்’ எனச் சொல்வது, 5 நிமிடத்திற்கு முன் பேனர் காட்சி வெடிச்சிரிப்பு.

Reply

அதி பிரதாபன் July 8, 2009 at 10:32 AM

//காதலி கிடைக்கவில்லை என்றால் சாக துணியும் காதலன், காதலன் இல்லை என்றால் தன்னால் வாழவே முடியாது என்று கூறும் காதலி இவ்வாறு காட்சிகள் அமைத்து விட்டு (மிக) கொஞ்ச நாளில் பிரிவது என்பது நம்பக்கூடியதாக இல்லை//

இதெல்லாம் நீங்க பாத்ததில்ல போல இருக்கு. நா காலேஜ் படிக்கும்போது இப்படித்தான் என் நண்பனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தோம். லவ்வுன்னா லவ்வு ஸ்கூல், காலேஜே பொறாமப் படற அளவுக்கு லவ்வு. பொண்ணு வீட்டுக்குத் தெரிஞ்சு ஓடிப்போய் கல்யாணமும் பண்ணிட்டாங்க. நண்பர்கள் நாங்க எதையும் இழக்கல, ஆனா, ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிற கேப்புல நாங்க சந்தித்த கஷ்டங்கள் சொல்ல முடியாது. வீட்டுல இருக்குற அம்மால இருந்து, தெரு, ஊரே எங்கள ஒரு மாதிரி பாத்துச்சு. பொண்ணு வீடும், பையன் வீடும் எங்களத் தேடித் தேடி வந்து விசாரிப்பாங்க, அழுவாங்க… இதுல போலீஸ் பிரச்சன வேற… ஒரு வழியா ஒரு மாசத்துக்கு அப்புறம் கல்யாணம் பண்ணி வச்சுட்டோம்.

ஒரு வருசத்துல பிரிஞ்சுட்டாங்க. இப்போ அவ இன்னொருத்தனுக்கு மனைவி, ஒரு குழந்தை. இவனுக்கு இப்போதான் திரும்ப கல்யாணம் ஆய்ருக்கு.

இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும்.

இதப் பத்தி டீடெய்லா ஒரு பதிவே போடுறேன்.

Reply

வால்பையன் July 8, 2009 at 12:40 PM

எப்படியும் படம் பார்க்கப்போவதில்லை!

ஆனாலும் 368 வது தடவையாக இந்த பட விமர்சனம் படிக்கீறேன்!

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Reply

Mahesh July 8, 2009 at 1:41 PM

விரிவான விமர்சனம் கிரி… நல்லாவே எழுதியிருக்கீங்க…

Reply

ரெட்மகி July 8, 2009 at 3:13 PM

சின்ன சின்ன உறுத்தல்கள் , நல்ல விமர்சனம்

Reply

R.Gopi July 8, 2009 at 3:34 PM

//வாசுகி said…
நீங்கள் விமர்சனம் செய்யும் விதம் அருமை.படம் ஒன்றுமே விடாமல் பார்ப்பீங்க போல.//

***********

Idhu ivlo naal ungalukku theriyaadhaa?? Ayyo Ayyo…..

Reply

கே.பாலமுருகன் July 8, 2009 at 7:57 PM

நாடோடிகள் சினிமா கொஞ்சம் அபத்தங்களுடன் சினிமாவுக்கான எல்லாம் அம்சங்களும் பொருந்திய கட்டமைப்பில், "காதல்னா சேர்த்துவைக்க நாங்க வர்றோம்" என்று கதாநாயகர்கள் சொல்லும் இடம்வரை ஆங்காங்கே சமுத்திரகணியின் தாக்கங்களுடன் வெளிவந்திருக்கிறது.

சுப்ரமண்யபுறத்தில் சசிகுமார் ஏற்படுத்திய தனது ஆளுமையின் காரணமாக சிலர் இந்த "நாடோடிகள்" படத்தையும் வெகு இயல்பாகக் கடக்க முடியாமல், கொஞ்சம் மிகையாகவே புகழ்ந்து வைப்பது போல தெரிகிறது.

இன்னமும் சில காட்சிகளையும் சினிமாத்தனங்களையும் புறகணித்திருக்கலாம். இருந்தாலும் சொல்வது நனது உரிமையல்லவா?

படத்தில், கதாநாயக பிம்பங்களை சில இடங்களில் உடைத்திருப்பது பாராட்டுதலுக்குரியது. ஏதோ ஒரு கிராமத்தில் வசித்து வந்த வெட்டி பையல்கள் எல்லோரும் நண்பனின் காதலுக்காக எப்படி அவதிப்படுகிறார்கள் என்ற விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். தரமான படம்தான் சில அபத்தங்களுடன்.

கே.பாலமுருகன்
மலேசியா

Reply

குறை ஒன்றும் இல்லை !!! July 8, 2009 at 7:59 PM

அண்ணே.. நல்லா விமர்சனம் பண்ணி இருக்கீங்க..

Reply

கிரி July 9, 2009 at 6:37 AM

// நட்புடன் ஜமால் said…

சசியின் தங்கையா நடித்தவர் ஊமையாமே! //

அப்படியா! வாழ்த்துக்கள்

===================================================================

// ஆ.ஞானசேகரன் said…
நன்றாக விமர்சித்துள்ளீர்கள்//

நன்றி ஞானசேகரன்

===================================================================
ஆனந்தன் said…
எனக்கும் அந்த குத்து பட்டு திணிக்க பட்டதாகவே தோனுகிறது//

தோன்றவே வேண்டாம்..அது தான் உண்மை :-)

===================================================================

// கோவி.கண்ணன் said…
பதிவர் கடமையை ஆற்றியாச்சா ?
:) //

முன்னாடியே "ஆற்றி" இருக்க வேண்டும்..லேப்டாப் சங்காகி விட்டது ;-)

===================================================================

// ராமலக்ஷ்மி said…
யதார்த்தமான படங்கள் வரிசையில் சேருகிறது என்பதும் ஆறுதல். தமிழ் திரையுலகம் இதைத் தொடர வேண்டும்.//

நம்ம ஆளுங்க எத்தனை அடி வாங்கினாலும் வலிக்கவே இல்லைன்னு சொல்றாங்க.. என்ன செய்வது :-)

===================================================================

// R.Gopi said…
நல்லா இருக்குன்னு சொல்லிட்டீங்க… இந்த வியாழன் ராத்திரி போயிட வேண்டியதுதான்//

கண்டிப்பா பாருங்க

//வரீங்களா, ரெண்டாவது தடவை – துபாயில் பார்ப்பதற்கு?//

அருகில் இருந்தால் வந்து விடலாம்.. ;-)

//விடுங்க.. "எந்திரன்" ரிலீஸ் ஆகும்போது பாத்துப்போம்……//

அடி தூளு!

==================================================================

//வாசுகி said…

படம் ஒன்றுமே விடாமல் பார்ப்பீங்க போல//

அனைத்து படமும் பார்ப்பேன் என்று கூறுகிறீர்களா! அல்லது படத்தில் அனைத்து காட்சியையும் கவனிப்பேன் என்று கூறுகிறீர்களா! ;-)

===================================================================

//எவனோ ஒருவன் said…

//லவ்வுன்னா லவ்வு ஸ்கூல், காலேஜே பொறாமப் படற அளவுக்கு லவ்//

:-)

//ஒரு வருசத்துல பிரிஞ்சுட்டாங்க. இப்போ அவ இன்னொருத்தனுக்கு மனைவி, ஒரு குழந்தை. இவனுக்கு இப்போதான் திரும்ப கல்யாணம் ஆய்ருக்கு.//

ஒரு வருஷம் என்றால் கூட பரவாயில்லைங்க.. இவங்க ஹனி மூன் முடிந்த கையோட சண்டை போட்டுக்குவாங்களே!

====================================================================

// வால்பையன் said…
எப்படியும் படம் பார்க்கப்போவதில்லை!//

why why why why why

//ஆனாலும் 368 வது தடவையாக இந்த பட விமர்சனம் படிக்கீறேன்!//

என்ன கொடுமை சார் இது :-( (

====================================================================

// Mahesh said…
விரிவான விமர்சனம் கிரி… நல்லாவே எழுதியிருக்கீங்க…//

:-) நன்றி மகேஷ்

====================================================================

// ரெட்மகி said…
சின்ன சின்ன உறுத்தல்கள் , நல்ல விமர்சனம்//

நன்றி ரெட்மகி

====================================================================

//R.Gopi said…
Idhu ivlo naal ungalukku theriyaadhaa?? Ayyo Ayyo…//

ஹி ஹி ஹி ஹி

====================================================================

//கே.பாலமுருகன் said…
நாடோடிகள் சினிமா கொஞ்சம் அபத்தங்களுடன் சினிமாவுக்கான எல்லாம் அம்சங்களும் பொருந்திய கட்டமைப்பில்//

உண்மை தான்

//சுப்ரமண்யபுறத்தில் சசிகுமார் ஏற்படுத்திய தனது ஆளுமையின் காரணமாக சிலர் இந்த "நாடோடிகள்" படத்தையும் வெகு இயல்பாகக் கடக்க முடியாமல், கொஞ்சம் மிகையாகவே புகழ்ந்து வைப்பது போல தெரிகிறது//

அப்படியே வழிமொழிகிறேன்

//ஏதோ ஒரு கிராமத்தில் வசித்து வந்த வெட்டி பையல்கள் எல்லோரும் நண்பனின் காதலுக்காக எப்படி அவதிப்படுகிறார்கள் //

:-) )

விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி

=================================================================

// குறை ஒன்றும் இல்லை !!! said…
அண்ணே.. நல்லா விமர்சனம் பண்ணி இருக்கீங்க..//

:-) நன்றிங்க ராஜ்..

Reply

வானம்பாடிகள் July 9, 2009 at 8:02 AM

கிட்டத் தட்ட 18 வருடம் கழித்து நான் பார்த்த திரைப்படம். விமரிசனம் என் எண்ணத்தின் பிரதிபலிப்பு.

Reply

அதி பிரதாபன் July 9, 2009 at 2:54 PM

//ஒரு வருஷம் என்றால் கூட பரவாயில்லைங்க.. இவங்க ஹனி மூன் முடிந்த கையோட சண்டை போட்டுக்குவாங்களே!//

அப்படித் தெரியவில்லையே… இங்கு சசிகுமார் மற்றும் நண்பர்கள் வேலை செய்வது போலவும், ஒரு போன் கால் பேசும்போது ‘காலம் மாறும்’ என சொல்லும்போது காட்சிகள் மாறி, காலம் உருண்டோடுகிறது என்பது போலவும் காண்பிக்கப்படுகிறதே…

நம்ம ஹீரோ கூட (அதான் ஓடிப்போனவன்) வேலைக்கெல்லாம் போய் திரும்பி வாராரே?

சசிகுமாரின் காயங்கள் கூட ஆறி விடுகிறது.

இப்போது எனக்கும் இந்த இடத்தில் சந்தேகம் வந்துவிட்டது, திரும்பப் பார்க்கிறேன். நீங்களும் கட்டாயம் பார்த்து பதில் சொல்ல வேண்டும்.

Reply

கிரி July 9, 2009 at 7:51 PM

// பாலா… said…
கிட்டத் தட்ட 18 வருடம் கழித்து நான் பார்த்த திரைப்படம்//

நிஜமாவா சொல்றீங்க!!! எனக்கு தலை சுத்துது

//விமரிசனம் என் எண்ணத்தின் பிரதிபலிப்பு.

நன்றி பாலா

=================================================================

//எவனோ ஒருவன் said…
அப்படித் தெரியவில்லையே… இங்கு சசிகுமார் மற்றும் நண்பர்கள் வேலை செய்வது போலவும், ஒரு போன் கால் பேசும்போது ‘காலம் மாறும்’ என சொல்லும்போது காட்சிகள் மாறி, காலம் உருண்டோடுகிறது என்பது போலவும் காண்பிக்கப்படுகிறதே..

நம்ம ஹீரோ கூட (அதான் ஓடிப்போனவன்) வேலைக்கெல்லாம் போய் திரும்பி வாராரே?//

அப்படி எல்லாம் எதுவுமில்லை. ஹனி மூன்!! முடிந்தவுடன் வேலைக்கு செல்வார் பிறகு 20 நாட்களில் வேலையை விட்டு நின்று விடுவார். அவர்கள் சண்டை எல்லாம் உடனுக்குடன் நடக்கும். அதை சீரியல் போல ஒரு வருடம் காட்ட முடியாது என்றாலும் விரைவிலேயே முடித்தது போலவே இருந்தது.

//சசிகுமாரின் காயங்கள் கூட ஆறி விடுகிறது.//

நம்ம ஆளுங்க அடுத்த நாளே பிளாஸ்டரை எடுத்து விடுவாங்க.. இவரு கொஞ்ச நாள் வைத்து இருந்ததே பெரிய விஷயம்.

//இப்போது எனக்கும் இந்த இடத்தில் சந்தேகம் வந்துவிட்டது, திரும்பப் பார்க்கிறேன். நீங்களும் கட்டாயம் பார்த்து பதில் சொல்ல வேண்டும்.//

:-) )) முயற்சிக்கிறேன்.

சரி உங்க பேர் என்னங்க.. உங்களை எப்படி கூப்பிடுவது?

Reply

காத்தவராயன் July 18, 2009 at 12:17 AM

எங்க ஊரையும் மதிச்சி அங்க இப்ப படம்மெல்லாம் எடுக்க ஆரம்பிச்சிருக்காய்ங்க. அஞ்சாதே,பூ,நாடோடிகள்.

ஒன்னு கவனிச்சி பாத்தீ்களா எங்க ஊருல எடுக்குற படம் எல்லாம் எம்புட்டு தரமா இருக்குன்னு?(சினிமா செண்டிமென்ட்காரர்கள் கவனிக்க)

இந்த வாரம் எங்க ஊருல எடுத்த "வெடிகுண்டு முருகேஷன்" வருது….. செண்டிமென்ட் வேலை செய்யுதான்னு பாக்கலாம்.

நாடோடிகள் – சொல்ல மறந்த கதை.

Reply

Prasath July 19, 2009 at 10:52 AM

நண்பர்களின் கதையை யதார்த்த உணர்வுடன் சொல்லி இருக்கிறார்கள்! பல கதைகளில் நண்பர்கள் காதலுக்கு போராடி உதவி செய்வதை படம் கடைசி வரை இழுத்து முடித்திருபர்கள் ஆனால் இது சற்று மாறுபட்டு , "அணைக்கும் கை அடிக்கவும் செய்யும்" என சொல்லி முடித்திருகிறார்கள்! அதுக்கு இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம்!

சின்ன கவுண்டராக நடித்திருக்கும் நபர் அசத்தி இருக்கிறார் ! பாண்டியின் வெகுளித்தனம் படத்திற்கு கூடுதல் பலம்! சசிகுமாரின் முக பாவங்களும் வசனங்களும் அவரின் ரசிகராக நம்மை மாற்றுகிறது !

நட்பை கேளிக்கைகிற்கு மட்டும் பயன் படுத்தாமல் , கர்ணனை போல உயிர் கொடுத்திருகிறார்கள் இந்த நாடோடிகள்!

மொத்தத்தில் சில காட்சிகள் செயற்கையாக தென்பட்டாலும் நண்பர்களின் சமுத்திரத்தில் இது "நின்று விளையாடும்"

Reply

கிரி July 21, 2009 at 1:57 AM

//காத்தவராயன் said…
எங்க ஊரையும் மதிச்சி அங்க இப்ப படம்மெல்லாம் எடுக்க ஆரம்பிச்சிருக்காய்ங்க. அஞ்சாதே,பூ,நாடோடிகள்.//

நாங்கெல்லாம் சின்ன கோடம்பாக்கமாக்கும் :-)

//ஒன்னு கவனிச்சி பாத்தீ்களா எங்க ஊருல எடுக்குற படம் எல்லாம் எம்புட்டு தரமா இருக்குன்னு?(சினிமா செண்டிமென்ட்காரர்கள் கவனிக்க)//

அதுல இரண்டு படம் நல்ல ஹிட் அதனால தப்பிச்சீங்க ;-)

//இந்த வாரம் எங்க ஊருல எடுத்த "வெடிகுண்டு முருகேஷன்" வருது….. செண்டிமென்ட் வேலை செய்யுதான்னு பாக்கலாம்.//

பார்ப்போம் வொர்க் அவுட் ஆகுதான்னு

=======================================================

//Prasath said…
நண்பர்களின் கதையை யதார்த்த உணர்வுடன் சொல்லி இருக்கிறார்கள்! பல கதைகளில் நண்பர்கள் காதலுக்கு போராடி உதவி செய்வதை படம் கடைசி வரை இழுத்து முடித்திருபர்கள் ஆனால் இது சற்று மாறுபட்டு , "அணைக்கும் கை அடிக்கவும் செய்யும்" என சொல்லி முடித்திருகிறார்கள்! அதுக்கு இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம்! //

ஆமாம்

//மொத்தத்தில் சில காட்சிகள் செயற்கையாக தென்பட்டாலும் நண்பர்களின் சமுத்திரத்தில் இது "நின்று விளையாடும்"//

வழிமொழிகிறேன் :-)

Reply

Leave a Comment

{ 1 trackback }

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed