Wednesday, June 10, 2009

"மனசே ரிலேக்ஸ் ப்ளீஸ்" - கோபம்

ஒருவரை மற்றவர்களிடத்து அந்நியப்படுத்தும் காரணிகளில் முக்கியமான ஒன்று கோபம் ஆகும். கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள் (இது அனைத்து சமயங்களிலும் சரியாக வருவதில்லை), அவர்களிடத்தே அதிக நண்பர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே!

அதிகமாக கோபம் வரும் நபர்களை பெரும்பாலானவர்களுக்கு பிடிக்காது அல்லது அவரை சரியாக புரிந்து கொள்ளாதவர்களுக்கு பிடிக்காது. எதுக்குடா வம்பு! கொஞ்சம் இவங்க கிட்ட விலகியே இருப்போம் என்று இருப்பார்கள்.

எனக்கு சிறு வயதில் அதிகமாக கோபம் வரும் அதன் தாக்கம் எனக்கு சரியாக புரியவில்லை ஆனால் நான் சென்னை வந்து நண்பர்களுடன் அறையில் தங்கி இருந்த போது தான் என்னுடைய கோபம் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. காரணம் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி இருந்த போது நண்பர்கள் வட்டம் அதிகம் மற்றும் ஒரே வயதுடையவர்கள் அதனால் பெரியளவில் ஒன்றும் தெரியவில்லை.

சென்னையில் ஒரே அறையில் ஐந்து பேருடன் இருக்க நேரிட்ட போதும், எங்கள் ஊரை விட்டு வெகு தொலைவு வந்து விட்டதாலும் மற்றும் அறையில் இருந்தவர்கள் என்னை விட வயது மூத்தவர்கள் என்பதாலும் (ரொம்ப அல்ல)அவர்களுடன் என்னால் ஒத்து போக முடியவில்லை.

அதிலும் ஆரம்பத்தில் எங்கள் அறையில் இருந்த ஒருவனோடு என்னால் ஒத்தே போக முடியவில்லை, அவன் எது செய்தாலும் எனக்கு கோபம் வரும் அல்லது எனக்கு கோபம் வரும்படி அவன் செய்வதாக தோன்றும், அதனால் அவனை எனக்கு பிடிக்கவே பிடிக்காது. மதியம் மெஸ் க்கு சாப்பிட சென்றால் கூட அவன் ஒரு பக்கம் சாலையில் நடந்தால் நான் ஒரு பக்கம் நடப்பேன் :-) அந்த அளவிற்கு ஒத்து வராது.

அவன் எப்போ சிக்குவான் என்று நான் சமயம் பார்த்துக்கொண்டே இருப்பேன், ஏதாவது கிண்டலடிக்க வாய்ப்பு கிடைத்தால் செம ஒட்டு ஓட்டுவேன், அதற்க்கு அவன் இப்ப சந்தோசமா என்று கேட்பான். நாங்கள் இருந்த அறையில் அதிக பேர் இருக்கிறார்கள் என்று ஓனர் கூறியதால் அதே காலனியில் அருகில் காலியாக இருந்த அறையில் தங்கி கொண்டேன், குறிப்பாக இவங்க தொல்லை இல்லாமல் இருக்கலாம் என்று உடனே சென்று விட்டேன். இந்த அறைக்கு வந்த பிறகு அங்கு எட்டி கூட பார்ப்பதில்லை, அவங்க சவகாசமே வேண்டாம் என்று இருந்து விட்டேன். இருந்தாலும் எப்பவாது வழியில் சந்திக்க நேர்ந்தால் புன்னகையுடன் சென்று விடுவோம்.

நாட்கள் இப்படி கடந்தது கிட்டத்தட்ட 8 மாதம், பிறகு எனக்கே நான் அதிகம் கோபப்படுவதாக தோன்றியது சரி கோபத்தை நிறுத்த வேண்டும் எதற்கும் அவசியமில்லாமல் கோபபடக்கூடாது என்று முடிவு செய்தேன், இப்படி ஏதாவது முடிவு செய்தால் அதை ஒரு தினத்தில் செய்வது தானே நம் வழக்கம் ;-) அதன் படி ஒரு புத்தாண்டு முதல் இனி கோபப்படக்கூடாது என்று முடிவு செய்தேன்.

சொன்னா நம்ப மாட்டீங்க..அப்ப சொல்லாதீங்கன்னு சொல்லிடாதீங்க! :-))) அதன் பிறகு என் வாழ்க்கையே மாறி விட்டது, இத்தனை நாள் வரை எதிரியாக நான் கருதி கொண்டு இருந்தவன் என் நண்பன் ஆகி விட்டான்..சாதா நண்பன் இல்லைங்க உயிர் நண்பன். இன்று வரை என்னிலும் என் குடும்பத்திலும் ஒருவனாகி விட்டான். இப்ப தவறு யார் பக்கம்? இத்தனை நாள் பிரச்சனைக்கு யார் காரணம்? சந்தேகமில்லாமல் நான் தான் என்று தெளிவாகி விட்டது, நான் எப்போதுமே தோல்வியை ஒப்புக்கொள்வேன், இதையும் சந்தோசமாகவே ஏற்றுக்கொண்டேன், காரணம் நாம் கோபம் ஒன்றை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்று இருக்கிறோம் என்பதால்.

கோபம் கண்டிப்பாக வேண்டும் என்னையா இது! இப்ப தான் கோபப்படக்கூடாது என்று எவ்வளவு நேரம் சொல்லிட்டு இப்ப கோபப்படுன்னு சொல்றாரேன்னு நினைக்கறீங்களா! நான் சொல்வது அவசியமானதிற்கு. கோபம் இல்லை என்றால் நமக்கு சுரணையே இல்லமால் போய் விட்டதாகவே அர்த்தம், ஆனால் நாம் கோபப்படுவதில் அர்த்தம் இருக்க வேண்டும். ஒன்றுமில்லாத விசயத்திற்க்கெல்லாம் தய்யா தக்கான்னு குதிச்சுட்டு இருந்தா நமக்கு தாங்க இழப்பு. கோபப்படுவதால் நாம் எதையும் சாதிக்க போவதில்லை யோசித்து பார்த்தால் இழப்பே நமக்கு அதிகம்.

பதிவுலகம் வந்த பிறகு பல சமயங்களில் கோபப்பட்டதுண்டு, கோபமாக பல இடுகைகள் எழுதியதுண்டு, ஆனால் எந்த ஒரு விஷயத்தையும் ஒரு அனுபவமாகவே நான் எடுத்துக்கொள்வதால் தற்போது அதிலும் ஒரு தெளிவான நிலையை ஓரளவு அடைந்து விட்டேன், பொதுவாக கஷ்டப்படுவது அல்லது சிரமமான நிலை வரும் சமயங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும், அவை நம் தவறுகளை நமக்கு உணர்த்துகின்ற ஒரு வாய்ப்பாகவே கருதுகிறேன், எனவே அதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு அதை போல பின்னாட்களில் ஏற்படுவதை தவிர்த்து விடுகிறேன்.

எனக்கு சென்னை வந்த புதிதில் உதவியாக இருந்தது நான் உருப்படியாக என்னை மேம்படுத்தி கொள்ள படித்தது சுவாமி சுபபோவனந்தாவின் "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்" புத்தகம் தான். இதை படித்த பிறகே என் வாழ்வில் பல மாற்றங்கள். இதை பலர் கேள்வி பட்டு இருப்பீர்கள், விகடனில் இவர் தொடர் வந்தது, அதை புத்தகமாக வெளியிட்ட போது அதற்க்கு பலத்த வரவேற்ப்பு. சும்மா பெயரை பார்த்ததும் எதோ வழக்கமான சாமியார் புத்தகம் என்றே நினைத்தேன் ஆனால் இவர் ப்ராக்டிகல் நபராக அனைத்தையும் புட்டு புட்டு வைத்து இருந்தார், அவர் புத்தகத்தில் கூறிய பல நிகழ்ச்சிகள் என் வாழ்விலும் நடந்து இருந்தது, அதை ஒப்பிட்டு பார்த்து என்னால் பல விசயங்களை மாற்றி கொள்ள முடிந்தது. அனைவரும் கேட்பார்கள் உங்கள் வாழ்வில் ஏதாவது புத்தகம் மாற்றத்தை ஏற்படுத்தியதா என்று? என்னை கேட்டால் (ஒரு வேளை கேட்டால் ;-) ) தயக்கமின்றி இதை கூறுவேன். வாய்ப்பு கிடைத்தால் படித்து பாருங்கள்.

இந்த கலியுகத்தில் கோபம் அவசியமான ஒன்றே என்பது என் கருத்து, ஆனால் நம் கோபம் சரியான புரிந்து கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். அவசியமற்ற கோபங்கள் நம்மை கண்டிப்பாக சிக்கலிலே கொண்டு சென்று விடும், நம் வாழ்க்கையையும் நிம்மதி அற்றதாக்கி விடும்.

Be Practical

Buzz It

35 COMMENTS:

jackiesekar on 9:07 AM, June 10, 2009 said...

பதிவுலகம் வந்த பிறகு பல சமயங்களில் கோபப்பட்டதுண்டு, கோபமாக பல இடுகைகள் எழுதியதுண்டு, ஆனால் எந்த ஒரு விஷயத்தையும் ஒரு அனுபவமாகவே நான் எடுத்துக்கொள்வதால் தற்போது அதிலும் ஒரு தெளிவான நிலையை ஓரளவு அடைந்து விட்டேன்,

அப்படியா? ரஜினியை யாராவது திட்டி எழுதிட்டா அவ்வளவுதான் உங்களால் கோபத்தை கட்டு படுத்த முடியாது என்பதுதான்....உண்மை.


நான் பதிஉலகம் வந்த போது தொடர்ந்து வாசித்த எழுத்துக்கள் உங்களுடையதுதான்...ரஜினி சர்ச்சை ஒன்று வந்த போது நீங்கள் வரிந்து கட்டி களத்தில் நின்றீர்கள்... அது தேவை இல்லாதது...

எனது பிளாக்கில் கூட உசுப்பேற்றும் கேள்விகளுக்கு பதில் சொல்வதே இல்லை....புறக்கனித்து விடுங்கள்... இது உங்களுக்காக எழுதியது பிடிக்கவில்லை என்றால் பதில் போடாதீர்கள்..மற்றபடி உங்கள் அநேக கருத்தக்கள் எனக்கு ஒத்துப்போகும்....
நன்றி நண்பா

ஜாக்கிசேகர்

வாசுகி on 9:14 AM, June 10, 2009 said...

:))

வாசுகி on 9:20 AM, June 10, 2009 said...

"மனசே ரிலாக்ஸ் ப்லீஸ்" புத்தகம் என்னிடமும் உள்ளது.
ஒவ்வொரு கதையும் வாசித்து முடிக்கும் போது, இனிமேல் இந்த விடயத்தில் நானும் திருந்த வேண்டும் என்று
யோசித்து தான் வாசிப்பேன். ஆனால் புத்தகம் வாசித்து முடிக்கும் போது எல்லாமே மறந்து
போய்விடும்.

இந்த கோபம் எனக்கும் பெரிய பிரச்சினை தான்.
இன்று எனது நெருங்கிய நண்பர்களாக இருக்கும் பெரும்பாலானவர்களுடனான‌ என் ஆரம்ப கால நட்பு கோபமும் சண்டையும் நிறந்ததாக தான் இருந்தது.வருடக்கணக்கில் கதைக்காமல் இருந்திருக்கிறேன். ஆனாலும் கோபங்கள் நல்ல நட்பிலேயே முடிந்திருக்கிறது.

கோவி.கண்ணன் on 9:22 AM, June 10, 2009 said...

//எனக்கு சிறு வயதில் அதிகமாக கோபம் வரும் அதன் தாக்கம் எனக்கு சரியாக புரியவில்லை ஆனால் நான் சென்னை வந்து நண்பர்களுடன் அறையில் தங்கி இருந்த போது தான் என்னுடைய கோபம் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.//

ஆமாம் கிரி, பலருக்கும் இந்த அனுபவம் உண்டு, விட்டுக் கொடுக்கும் மனப்பாண்மை, நட்பு இவை அனைத்தும் நாம தனித்து விடப் படும் போது , அதாவது வேலைக்கு செல்லும் போது கிடைக்கும் நண்பர்களிடம் தான் கற்றுக் கொள்கிறோம்.

நட்புடன் ஜமால் on 9:25 AM, June 10, 2009 said...

\\இந்த கலியுகத்தில் கோபம் அவசியமான ஒன்றே என்பது என் கருத்து, ஆனால் நம் கோபம் சரியான புரிந்து கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். அவசியமற்ற கோபங்கள் நம்மை கண்டிப்பாக சிக்கலிலே கொண்டு சென்று விடும், நம் வாழ்க்கையையும் நிம்மதி அற்றதாக்கி விடும்.
\\

இது தான் மிகவும் முக்கியம்

சரவணகுமரன் on 9:38 AM, June 10, 2009 said...

சரியா சொன்னீங்க...

சரவணகுமரன் on 9:39 AM, June 10, 2009 said...

'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' நானும் படித்ததுண்டு.. உங்களை போல் உணர்ந்ததுண்டு... நல்ல புத்தகம்...

Mahesh on 9:51 AM, June 10, 2009 said...

கிரி... நான் சொல்லலை? உங்க எழுத்துல பக்குவமும் முதிர்ச்சியும் அதிகமாயிருக்குன்னு. இப்ப கண்டெண்ட்லயும் அது தெரியுது.

வாழ்த்துகள் கிரி.

kalai on 10:21 AM, June 10, 2009 said...

உங்கள் பதிவு மிகவும் சரிதான்.

நானும் என் கோபத்தால் பல சந்தோசத்தை இழந்து இருக்கிறேன். நமக்கு அதிகம் யாரை பிடிக்குமோ அவர் மீது தான் அதிகம் கோபமும் வருங்க கிரி.

வால்பையன் on 10:30 AM, June 10, 2009 said...

எதாவது சாமியார் ஆவி அடிச்சிருச்சா?

கிரி on 11:48 AM, June 10, 2009 said...

//jackiesekar said...
அப்படியா? ரஜினியை யாராவது திட்டி எழுதிட்டா அவ்வளவுதான் உங்களால் கோபத்தை கட்டு படுத்த முடியாது என்பதுதான்....உண்மை//

நீங்க சொல்வது "உண்மை" தான்.. :-) ஆனால் அது எல்லாம் கொஞ்சம் மாதம் முன்பு இப்போதெல்லாம் அப்படி கூறுவதில்லை.. காரணம் கோபபட்டு ஒன்றும் ஆகபோவதில்லை என்று தெரிந்ததால். முடிந்த வரை அதை போல பதிவுகளுக்கே போவதில்லை அல்லது எந்த கருத்தும் கூறுவதில்லை.

//நான் பதிஉலகம் வந்த போது தொடர்ந்து வாசித்த எழுத்துக்கள் உங்களுடையதுதான்...ரஜினி சர்ச்சை ஒன்று வந்த போது நீங்கள் வரிந்து கட்டி களத்தில் நின்றீர்கள்... அது தேவை இல்லாதது...//

விமர்சிப்பதில் தவறில்லை ஜாக்கி சேகர், அனைவரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே! அது வரம்பு மீறி போகும் போது நமக்கு வரும் கோபமும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. கோப பட்டு எழுதி இருக்கிறேன், அநாகரீகமாக ஒருமுறை கூட எழுதியது கிடையாது.

//எனது பிளாக்கில் கூட உசுப்பேற்றும் கேள்விகளுக்கு பதில் சொல்வதே இல்லை....புறக்கனித்து விடுங்கள்... இது உங்களுக்காக எழுதியது பிடிக்கவில்லை என்றால் பதில் போடாதீர்கள்//

இப்போது பதில் கூறுவதில்லை. அப்படியே கூறினாலும் கோபமாக எழுதுவதில்லை.

//உங்கள் அநேக கருத்தக்கள் எனக்கு ஒத்துப்போகும்....
நன்றி நண்பா//

நன்றி ஜாக்கிசேகர்

=======================================================

//வாசுகி said...
"மனசே ரிலாக்ஸ் ப்லீஸ்" புத்தகம் என்னிடமும் உள்ளது.
ஒவ்வொரு கதையும் வாசித்து முடிக்கும் போது, இனிமேல் இந்த விடயத்தில் நானும் திருந்த வேண்டும் என்று யோசித்து தான் வாசிப்பேன். ஆனால் புத்தகம் வாசித்து முடிக்கும் போது எல்லாமே மறந்து போய்விடும். //

ஐயையோ! short term memory loss எதுவும் இல்லையே ;-)


//இன்று எனது நெருங்கிய நண்பர்களாக இருக்கும் பெரும்பாலானவர்களுடனான‌ என் ஆரம்ப கால நட்பு கோபமும் சண்டையும் நிறந்ததாக தான் இருந்தது//

எனக்கு கூட

=======================================================

//கோவி.கண்ணன் said...
ஆமாம் கிரி, பலருக்கும் இந்த அனுபவம் உண்டு, விட்டுக் கொடுக்கும் மனப்பாண்மை, நட்பு இவை அனைத்தும் நாம தனித்து விடப் படும் போது , அதாவது வேலைக்கு செல்லும் போது கிடைக்கும் நண்பர்களிடம் தான் கற்றுக் கொள்கிறோம்.//

மறுக்க முடியாத உண்மை இந்த சமயங்களில் கிடைக்கும் அனுபவங்கள் அளவிட முடியாதது.

=======================================================

//சரவணகுமரன் said...
'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' நானும் படித்ததுண்டு.. உங்களை போல் உணர்ந்ததுண்டு... நல்ல புத்தகம்...//

நன்றி சரவணகுமரன்

=======================================================

//Mahesh said...
கிரி... நான் சொல்லலை? உங்க எழுத்துல பக்குவமும் முதிர்ச்சியும் அதிகமாயிருக்குன்னு. இப்ப கண்டெண்ட்லயும் அது தெரியுது. //

நன்றி மகேஷ் :-)

=======================================================

//kalai said...
நானும் என் கோபத்தால் பல சந்தோசத்தை இழந்து இருக்கிறேன். நமக்கு அதிகம் யாரை பிடிக்குமோ அவர் மீது தான் அதிகம் கோபமும் வருங்க கிரி.//

அதே அளவு பிரச்சனையையும் கொண்டு வரும், எனவே அது தொடராமல் பார்த்து கொள்வது நலம்.

உன் முதல் பின்னூட்டத்திற்கு நன்றி கலை.

========================================================

//வால்பையன் said...
எதாவது சாமியார் ஆவி அடிச்சிருச்சா?//

ஹி ஹி ஹி ஹி பயப்படாதீங்க அப்படி எதுவும் இல்லை.

ஷண்முகப்ரியன் on 12:02 PM, June 10, 2009 said...

கோபமும் ஒரு எனர்ஜிதான்.அதைப் பாசிடிவாகப் பயன் படுத்தினால் பலன் உண்டு.எப்படியோ நல்ல பதிவிற்கு வாழ்த்துக்கள்,கிரி.

ராமலக்ஷ்மி on 1:08 PM, June 10, 2009 said...

//இத்தனை நாள் வரை எதிரியாக நான் கருதி கொண்டு இருந்தவன் என் நண்பன் ஆகி விட்டான்..//

பலருக்கும் இதுபோன்ற அனுபவங்கள் இருந்ததைக் கேள்விப் பட்டிருக்கிறேன். யார் மீதாவது காரணமற்ற அல்லது அல்பக் காரணங்களுக்காக வெறுப்பு ஏற்படுகையில் ‘ஏன்’ என்கிற கேள்வியை நாம் பலமுறை எழுப்ப வேண்டியது அவசியமாகிறது. வெறுக்கப் பட்டவர் நல்லவராக மட்டுமின்றி நம் மீது பாசம் செலுத்தக் கூடியவராகவும் இருக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமே.

'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' தொடராகவும், புத்தகமாகவும் வாசித்திருக்கிறேன். உங்கள் அனுபவங்களுடன் அதன் அருமையைச் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பதிவு கிரி.

ராஜ நடராஜன் on 1:33 PM, June 10, 2009 said...

உங்க எழுத்தைப் பார்த்தா கோபக்கார புள்ள மாதிரி தெரியலியே!ஒரு வேளை நீங்க சொன்ன மாதிரி மனசே ரிலாக்ஸ் முதிர்ச்சி கொண்டு வந்துடுச்சோ!

(மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் ன்னு ஒருத்தர் இங்கே வலம் வந்துகிட்டு இருக்கார்!இடுகையின் தலைப்பு அவருடைய காப்புரிமை)

SUREஷ் (பழனியிலிருந்து) on 2:15 PM, June 10, 2009 said...

நல்ல இடுகை தல..,

tamilcinema on 3:21 PM, June 10, 2009 said...

கிரி நலமா..
நல்ல இடுகை. நீண்ட நாட்களுக்கு பின் தளத்திற்கு வந்திருக்கிறேன். தனித்துவமான எழுத்து நடை. பாராட்டுக்கள்.

Bleachingpowder on 4:53 PM, June 10, 2009 said...

கிரியாணந்தா அவர்களே என்னையும் கொஞ்சம் ஆசிர்வதியுங்கள்.

பொறுத்தது போது பொங்கி எழு மனோகரான்னு, எந்திரன் படம் வரும் போது உங்களை கூப்பிடுறேன் வரைக்கும் கிரியாணந்தாவாகவே கண்டின்யு பண்ணுங்க :))

R.Gopi on 4:59 PM, June 10, 2009 said...

//Bleachingpowder on 4:53 PM, June 10, 2009 said...
கிரியாணந்தா அவர்களே என்னையும் கொஞ்சம் ஆசிர்வதியுங்கள்.

பொறுத்தது போது பொங்கி எழு மனோகரான்னு, எந்திரன் படம் வரும் போது உங்களை கூப்பிடுறேன் வரைக்கும் கிரியாணந்தாவாகவே கண்டின்யு பண்ணுங்க :))//

Repeatteiiiiiiiiiiiiii.

Gri Swamy, appadiye indha kuzhandhaiyum aasirvadhikka vendugiren.

கிரி on 7:19 PM, June 10, 2009 said...

//ஷண்முகப்ரியன் said...
கோபமும் ஒரு எனர்ஜிதான்.அதைப் பாசிடிவாகப் பயன் படுத்தினால் பலன் உண்டு//

இருக்கலாம் சார் நானும் குறிப்பிட்டு இருக்கிறேன்.

========================================================

//ராமலக்ஷ்மி said...
வெறுக்கப் பட்டவர் நல்லவராக மட்டுமின்றி நம் மீது பாசம் செலுத்தக் கூடியவராகவும் இருக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமே.//

உண்மையே ..டெர்ரராக இருக்கவும் வாய்ப்பு ;-)

//உங்கள் அனுபவங்களுடன் அதன் அருமையைச் சொல்லியிருக்கிறீர்கள்//

நன்றி ராமலக்ஷ்மி

=======================================================

//ராஜ நடராஜன் said...
உங்க எழுத்தைப் பார்த்தா கோபக்கார புள்ள மாதிரி தெரியலியே!ஒரு வேளை நீங்க சொன்ன மாதிரி மனசே ரிலாக்ஸ் முதிர்ச்சி கொண்டு வந்துடுச்சோ!//

புயலுக்கு பின் அமைதி ;-) (கொஞ்சம் ஓவரா இருக்கோ)

//மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் ன்னு ஒருத்தர் இங்கே வலம் வந்துகிட்டு இருக்கார்!இடுகையின் தலைப்பு அவருடைய காப்புரிமை//

அவ்வ்வ்வ்வ் இதை சுபபோவனந்தா வை தான் கேட்கணும்

=======================================================

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
நல்ல இடுகை தல.//

நன்றி சுரேஷ்

=======================================================

//tamilcinema said...
கிரி நலமா..//

ரொம்ப நலம்..

//நல்ல இடுகை. நீண்ட நாட்களுக்கு பின் தளத்திற்கு வந்திருக்கிறேன். தனித்துவமான எழுத்து நடை. பாராட்டுக்கள்//

ரொம்ப நாளா காணாம போய்ட்டீங்க! :-) உங்கள் பாராட்டிற்கு நன்றி

=======================================================

//Bleachingpowder said...
கிரியாணந்தா அவர்களே என்னையும் கொஞ்சம் ஆசிர்வதியுங்கள்//

ஹி ஹி ஹி

//பொறுத்தது போது பொங்கி எழு மனோகரான்னு, எந்திரன் படம் வரும் போது உங்களை கூப்பிடுறேன் வரைக்கும் கிரியாணந்தாவாகவே கண்டின்யு பண்ணுங்க :))//

அருண் அதற்கெல்லாம் நாம பொங்க அவசியமே இல்லை... அடித்து தூள் பண்ணிடுவோம்! என்ன சொல்றீங்க...சரவெடி தான் ..படம் ஹிட் என்றால் ஏப்ரல் ஆக இருந்தாலும் நமக்கு தீபாவளி தான் ;-)

=====================================================

//R.Gopi said...
Gri Swamy, appadiye indha kuzhandhaiyum aasirvadhikka vendugiren//

கோபி இது செல்லாது செல்லாது......சந்தடி சாக்குல நீங்கள் உங்களை குழந்தைனு சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன் ;-)

thevanmayam on 8:37 AM, June 11, 2009 said...

கோபம் பற்றி அருமையா சொல்லியிருக்கீங்க நண்பரே!!!

சினிமா நிருபர் on 11:46 AM, June 11, 2009 said...

கிரி... நல்ல பதிவு. வாழ்த்துகள்!!

கோபம் எல்லோருக்கும் பொதுவான ஒன்றுதான். அதனை எதற்கு பயன்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது. கோயில் இல்லாத ஊரே இருக்காது. அதுபோ‌லவே கோபம் இல்லா மனிதனும் இருக்க மாட்டான்!!

நானும் சிறுவயதில் நிறைய கோபப்பட்டிருக்கிறேன். வீட்டுக்கு கடைசி பையன். கொஞ்சம் செல்லப் பையன் வேறு...! வீட்டில் எனக்கு பிடித்த சாப்பாடு இல்லையென்னால் சாப்பிடும் ப்ளேட் பறக்கும். எனக்கு பிடிக்காமல் யாராவது பேசினால் உடனே அவங்க மண்டைய பிளக்கணும்னு தோணும். பல தடவை என் அண்ணனின் மண்டையை உடைத்திருக்கிறேன். கல்லாலும், பச்சை மட்டையாலும் (தென்னங்கீற்று மட்டையை எங்க ஊர்ல இப்படித்தான் சொல்வோம்) அடிச்சிருக்கேன். வாத்தியாரு என்‌னை அடிச்சபோது, கோபத்தில் அவரை எதிர்த்து கம்பை (பிரம்பு) பிடுங்கியிருக்கிறேன்.

ஆனால் இந்த ‌கோபத்தையெல்லாம் குறைத்தது எப்போது தெரியுமா? சென்னை வந்த பிறகு நம்ம பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல நல்ல ருசியான சாப்பாட்டு கிடைக்காமல் தெருத்தெருவாக கொளுத்தும் வெயிலில் அழைந்தபோது..., எனக்கு முன்பே பக்குவப்பட்ட நல்ல நண்பர்களிடம் பழகியபோது..., சிரிப்புக்கு எதிரியே இல்லை என்பதை உணர்ந்தபோது...தான் கோபத்தை குறைத்துக் கொண்டேன். இப்போது என்னுடைய கோபத்தை என்னால் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலையில் இருக்கிறேன்.

கோபக்கார நண்பர்களிடம் நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்...! கோபம் வரும்போது வாய்திறக்காமல் அமைதியாய் இருந்து விடுங்கள். சிலர் கோபத்தில் தேவையில்லாத வார்த்தைகளை கொட்டி விட்டு பின்னர் அவதிப்படுவார்கள். அதனால் கோபம் வரும் நேரத்தில் அமைதி காப்பது நலம்!!!

காத்தவராயன் on 8:07 PM, June 11, 2009 said...

வாத்தியார் சொல்லித்தராத பாடங்களை வாழ்க்கை சொல்லித்தரும் மேலும் ஒன்றை விட்டு பிரிந்திருக்கும் போதுதான் அதன் அருமை தெரியும் ( includung கோபம்).

காத்தவராயன்

கிரி on 9:10 PM, June 11, 2009 said...

//thevanmayam said...
கோபம் பற்றி அருமையா சொல்லியிருக்கீங்க நண்பரே!!!//

நன்றி தேவா

===================================================

//சினிமா நிருபர் said...
கிரி... நல்ல பதிவு. வாழ்த்துகள்!!//

நீங்க வந்ததே பெருசு..இதுல வாழ்த்து எல்லாம் கூறி புல்லரிக்க வைக்கறீங்க ;-)

//வாத்தியாரு என்‌னை அடிச்சபோது, கோபத்தில் அவரை எதிர்த்து கம்பை (பிரம்பு) பிடுங்கியிருக்கிறேன்//

ஆஹா! பயங்கரமான ஆளா இருப்பாரு போல இருக்கே!..இன்னொரு முகம் சினிமா நிருபருக்கு இருக்குடோய்!

//சென்னை வந்த பிறகு நம்ம பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல நல்ல ருசியான சாப்பாட்டு கிடைக்காமல் தெருத்தெருவாக கொளுத்தும் வெயிலில் அழைந்தபோது..., எனக்கு முன்பே பக்குவப்பட்ட நல்ல நண்பர்களிடம் பழகியபோது..., சிரிப்புக்கு எதிரியே இல்லை என்பதை உணர்ந்தபோது...தான் கோபத்தை குறைத்துக் கொண்டேன்//

இது தான் மேட்டரு... நான் சாப்பாட்டுக்கு சிங்கி அடித்த போது தான் பல விஷயம் புரிந்தது..என்ன பண்ணுறது பட்டா தான் தெரியுது

//கோபக்கார நண்பர்களிடம் நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்...! கோபம் வரும்போது வாய்திறக்காமல் அமைதியாய் இருந்து விடுங்கள். சிலர் கோபத்தில் தேவையில்லாத வார்த்தைகளை கொட்டி விட்டு பின்னர் அவதிப்படுவார்கள். அதனால் கோபம் வரும் நேரத்தில் அமைதி காப்பது நலம்!!!//

அருமை! அருமை! இதை நான் குறிப்பிட மறந்து விட்டேன்.. பெரும்பாலான நேரங்களில் நான் செய்வது இதை தான்.. பேசாமல் அமைதியாக இருந்து விடுவேன்..பேச ஆரம்பித்தால் கட்டுப்படுத்துவது சிரமம்.

ஒன்றே சொன்னீங்க அதுவும் நன்றே சொன்னீங்க

====================================================

//காத்தவராயன் said...
வாத்தியார் சொல்லித்தராத பாடங்களை வாழ்க்கை சொல்லித்தரும் மேலும் ஒன்றை விட்டு பிரிந்திருக்கும் போதுதான் அதன் அருமை தெரியும் ( includung கோபம்).//

வழிமொழிகிறேன்..கிடைக்காத போது தான் அதன் அருமை தெரியும் :-)

arun on 12:05 AM, June 12, 2009 said...

நல்ல பதிவு கிரி...

ARASIAL on 7:06 PM, June 12, 2009 said...

ஏய்ய்ய்ய்ய்ய்.....

கிரியோட பதிவைப் படிச்சிட்டிருக்கேன்ல...

சைலன்ஸ்...
...............
.............
............
ம்ம்... அதாங்க.. சரியாத்தான் சொல்லியிருக்கீங்க!!

மங்களூர் சிவா on 10:18 AM, June 13, 2009 said...

நல்லா சொல்லியிருக்கீங்க. கோபம் எப்பவாச்சும் வரலாம் தப்பில்லை.

மனசே ரிலாக்ஸ் நானும் படிச்சிருக்கேன். மிக நல்ல தொடர்.

கிரி on 1:27 PM, June 13, 2009 said...

//arun said...
நல்ல பதிவு கிரி..//

நன்றி அருண்

============================================================

//ARASIAL said...
ஏய்ய்ய்ய்ய்ய்.....

கிரியோட பதிவைப் படிச்சிட்டிருக்கேன்ல...

சைலன்ஸ்...
...............
.............
............
ம்ம்... அதாங்க.. சரியாத்தான் //

இப்படி சொல்லி எல்லாம் எங்களை டெர்ரர் ஆக்க முடியாது ;-)

====================================================

//மங்களூர் சிவா said...
நல்லா சொல்லியிருக்கீங்க. கோபம் எப்பவாச்சும் வரலாம் தப்பில்லை//

உண்மை தான் சிவா..கோபமே வராம இருப்பதற்கு நாம என்ன ஞானியா! (குமுதம் ஞானி அல்ல)

//மனசே ரிலாக்ஸ் நானும் படிச்சிருக்கேன். மிக நல்ல தொடர்//

இன்னும் ஒரு முறை படிக்க வேண்டும் நான்.

ஊர்சுற்றி on 12:03 AM, June 14, 2009 said...

நான் கோபமே படுவதில்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள்....!!!

நல்ல பதிவுகள்.

கடையம் ஆனந்த் on 2:51 PM, June 14, 2009 said...

நல்ல பதிவு கிரி.எனக்கும் அதிகமாக கோபம் வரும்.

அன்புடன் அருணா on 3:49 PM, June 14, 2009 said...

'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' எனக்கும் பிடித்த புத்தகம்!

ஆகாய நதி on 6:38 PM, June 14, 2009 said...

அருமையான பதிவிற்கு ஆயிரம் நன்றிகள்! :)

தமிழினி on 7:31 PM, June 14, 2009 said...

உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

கிரி on 1:19 PM, June 15, 2009 said...

//ஊர்சுற்றி said...
நான் கோபமே படுவதில்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள்....!!!//

ரொம்ப நல்ல விஷயம்.. கோபமே படாமலும் இருந்துடாதீங்க :-)

========================================================

//கடையம் ஆனந்த் said...
நல்ல பதிவு கிரி.எனக்கும் அதிகமாக கோபம் வரும்.//

நல்ல வேளை என்னை எதுவும் திட்டாம இருந்தீங்களே ;-)

========================================================

//அன்புடன் அருணா said...
'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' எனக்கும் பிடித்த புத்தகம்!//

ரொம்ப நல்ல புத்தகங்க அது

==========================================================

//ஆகாய நதி said...
அருமையான பதிவிற்கு ஆயிரம் நன்றிகள்! :)//

நன்றிக்கு நன்றி

==========================================================

//தமிழினி said...
உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது//

தகவலுக்கு நன்றி தமிழினி

மின்னல் on 12:33 PM, June 18, 2009 said...

/வால்பையன் said...
எதாவது சாமியார் ஆவி அடிச்சிருச்சா?//

உங்கள் எழுத்தில் மிகுந்த அனுபவமும், முதிர்ச்சியும் தெரிகிறது.

வால்பையன் on 12:41 PM, June 18, 2009 said...

//உங்கள் எழுத்தில் மிகுந்த அனுபவமும், முதிர்ச்சியும் தெரிகிறது. //

கிழட்டுபய எழுத்து மாதிரி இருக்குன்னு சொல்லாம சொல்லிட்டிங்க!