“நான்” கடவுள், பாலாவின் தீவிர ரசிகன் ஏன்? (பாகம் 1)

by கிரி on January 23, 2009

மூன்று வருட உழைப்பு, பல நாள் காத்திருப்பு, இளையராஜாவின் உயிர்ப்பான இசை, பல சிக்கல்கள் என்று அதிக எதிர்பார்ப்புகளை பாலாவின் “நான் கடவுள்” படம் ஏற்படுத்தி இருக்கிறது. கிட்டத்தட்ட பாலாவின் இயக்கத்தில் 5 வருடத்திற்கு பிறகு வரும் படம். இனி படத்தை பற்றியும் பாலாவை பற்றியும் பார்ப்போம்.

முதலில் பாலா

எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். காரணம் அவரது படத்தில் ரியாலிட்டி இருக்கும், செட் போட்டு எடுக்காமல் இயல்பாக எடுக்கப்பட்டு இருக்கும். அதில் வரும் சண்டை காட்சிகள் மிக தத்ரூபமாக இருக்கும், சினிமாத்தனம் இல்லாமல், அடித்தால் டமால் டுமீல் என்று சத்தம் இல்லாமல் நிஜமாக அடித்தால் எப்படி இருக்குமோ அதை போல காட்சிகள் இருக்கும். கதாபாத்திரங்களின் உடைகள் சினிமாத்தனம் இல்லாமல் சாதாரணமாக இருக்கும்.

பலருக்கு பாலாவை பிடிக்காது காரணம் அவர் படங்களில் வன்முறை காட்சிகள் அதிகம் இருக்கும், கடைசியில் ஹீரோவை சாகடித்து விடுவார் அல்லது காதலியுடன் சேர விடாமல் சோகமாக முடித்து விடுவார் என்ற குற்றசாட்டும், இவர் ஒரு “சைக்கோ” என்றும் பலர் கூற கேட்டு இருக்கிறேன். நம் ஊரில் கடைசியாக சந்தோசமாக படம் முடிந்தால் தான் ஏற்று கொள்வார்கள், சோகமாக முடிந்தால் கடுப்பாகி விடுவார்கள், எனவே பாலா படத்தை எல்லோரும் இவ்வாறு நினைத்ததில் ஆச்சர்யமில்லை.

நான் செய்திகளில் படித்தவரை மற்றும் அவர், விகடனில் ஒரு தொடர் எழுதி இருந்தார் அதில் இருந்து தெரிந்து கொண்டதிலும் பாலா ஒரு பயங்கர ரவுடி, கட்ட பஞ்சாயத்து, மிரட்டல் (ஆளை பார்த்தால் அப்படி தெரியலை:D) என்று தாதாவாக தான் இருந்து இருக்கிறார். தற்போது அதில் இருந்து மீண்டு (இன்னும் தொடருவதாக அறிகிறேன்) திரைத்துறைக்கு வந்தது எனக்கு ஆச்சர்யம், அதுவும் தேசிய விருது வாங்க கூடிய அளவிற்கு படங்களை எடுக்கும் திறமை எப்படி? என்று நான் வியந்ததுண்டு. இவர் பாலுமகேந்திராவின் சீடர்.

ரவுடியாக இருந்ததாலோ என்னவோ இவர் படங்களிலும் அவை சம்பந்தப்பட்ட காட்சிகள் தத்ரூபமாக இருக்கும், ஒரு ரவுடி எப்படி இருப்பான்? எப்படி வசனம் பேசுவான், சண்டை என்று வந்தால் எந்த மாதிரி நடந்து கொள்வான், இயல்பான முகபாவனைகள் மற்றும் உடல் மொழி எப்படி இருக்கும் என்று இவர் படத்தை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

எனக்கு ஏன் பாலாவை பிடித்தது?

எனக்கு சமூகத்தின் மீது பொதுவாக கோபம் அதிகம், குறிப்பாக பெண்களுக்கு மற்றும் முடியாதவர்களை துன்புறுத்துவதை என்னால் ஏனோ சின்ன வயதில் இருந்து சாதாரணமாக கூட ஏற்று கொள்ளமுடியவில்லை அல்லது சகிக்க முடியவில்லை. எனக்கு பிடித்த வாசகமே “எளியோரை வலியோர் வருத்துதல் கூடாது”. எனவே இவர்களுக்கு எதிராக கொடுக்கப்படும் தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன்.

தவறு செய்தவன் கண்டிப்பாக தண்டனை பெற வேண்டும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது, ஆனால் அனைவருக்கும் தெரியும் நமது நாட்டில் இதெல்லாம் நடக்காத காரியம் என்று. கற்பழிப்பு செய்தவன் ஒரு வாரத்தில் சிறையில் இருந்து வந்து விடுகிறான், அல்லது தண்டனையே பெறாமல் தப்பித்து விடுகிறான். வெளியே வந்ததும் இல்லாம உன்னால என்னை என்ன செய்து விட முடியும்? என்று சவால் விடுகிறான், இதை எல்லாம் கேள்விப்படும் போதோ செய்திகளில் படிக்கும் போதோ “நெஞ்சு பொறுக்குதில்லையே” மாதிரி ஆகி விடுகிறேன்.

என்னால் கொலையை கூட குறைந்த பட்சம் மன்னிக்க முடியும் ஆனால் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான கொடுமைகளை மட்டும் எந்த காரணத்திற்காகவும் மன்னிக்கமுடியவில்லை. பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையை என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை. உடம்பில் அடிப்பட்டால் காயம் ஆறி விடும், மனதில் ஏற்படும் ரணத்தை எந்த மருந்து கொண்டு ஆற்றுவது. நம் உடலே நமக்கு அருவருப்பு ஆகி விடாதா! அதை நினைத்து நினைத்து மனம் வெதும்பி போய் விடாதா! இதற்க்கெல்லாம் தண்டனை மிக கடுமையாக இருக்க வேண்டாமா!

அதே போல, தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்களை இம்சிப்பதையும் என்னால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. சுருங்க கூறினால் அப்பாவிகளை துன்புறுத்துவதை ஏற்று கொள்ளமுடிவதில்லை. இதை போல குற்றங்களுக்கு பாலாவின் படத்தில் தண்டனைகள் கடுமையாக இருக்கும் அல்லது அடி பலமாக இருக்கும். நிஜத்தில் நடக்காததை திரையில் செயற்கையாக பார்த்து திருப்தி படுவதாலே நான் பாலாவின் தீவிர ரசிகன். திரையில் ஹீரோக்களை ஏன் எல்லோரும் கொண்டாடுகிறார்கள்? நாம் செய்ய நினைத்ததை செய்ய முடியாததை இன்னொருவன் நம் பிம்பமாக செய்யும் போது நமக்கு அவரை பிடிக்கிறது நாமே தண்டித்தது போல மகிழ்கிறோம். நாம் சாலையில் செல்லும் போது எத்தனையோ நிகழ்ச்சிகளை பார்க்கிறோம், அதில் நடக்கும் தவறுகளை தட்டி கேட்க நினைத்தும் நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதால் மனம் வெதும்பி எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக செல்கிறோம். அதையே ஒருவன் திரையில் செய்யும் போது அதை நம் பிம்பமாக கருதி அவருக்கு ரசிகராகி விடுகிறோம். அதே லாஜிக் தான் நான் பாலாவிற்கு ரசிகன் ஆனதும்.

பாலாவின் படங்களில் பல காட்சிகள் எனக்கு பிடித்தவை, பொதுவாகவே எனக்கு வன்முறை படங்கள் அதிகம் பிடிக்கும், செய்யப்படும் வன்முறை நியாயமாக இருந்தால். யோவ்! வன்முறையே தப்பு இதுல என்ன நியாயம்! அநியாயம்! என்று கேட்பவர்கள் மறுபடியும் மேலே இருந்து இன்னொரு முறை படியுங்கள் :-) பாலா நல்லவரா கெட்டவரா என்ற பிரச்சனைக்கே நான் வரவில்லை, அவர் மீது பல குற்றசாட்டுகள் உண்டு, அது அவருடைய தனிப்பட்ட விஷயம். ஒரு இயக்குனராக எனக்கு அவரை மிகவும் பிடித்து இருக்கிறது.

இது வரை நான் பார்த்த படங்களிலே எனக்கு பிடித்த, நான் ரசித்த, என்னை திரும்ப திரும்ப பார்க்க தூண்டிய சண்டை காட்சிகள் வந்த படம் இரண்டு, அதில் ஒன்று ரஜினி படம் இரண்டாவது பாலா படம். அவை எந்த படங்கள், ஏன் மற்றும் பாலாவின் மற்ற மூன்று படங்களை பற்றியும் என் அடுத்த பதிவில் கூறுகிறேன்.

Related posts:

  1. “நான்” கடவுள், பாலாவின் தீவிர ரசிகன் ஏன்? (பாகம் 2)
  2. “நான்” கடவுள், பாலாவின் தீவிர ரசிகன் ஏன்? (இறுதி பாகம்)
  3. பிரிவு பிரபலங்களுக்கு இழப்பு ரசிகர்களுக்கு (பாகம் 3)
  4. பிரிவு பிரபலங்களுக்கு இழப்பு ரசிகர்களுக்கு (பாகம் 2)
  5. பிரிவு பிரபலங்களுக்கு இழப்பு ரசிகர்களுக்கு (இறுதி பாகம்)
  6. “Layoff” (ஆட்குறைப்பு) – என் அனுபவங்கள்+பரிந்துரைகள் ((இறுதி)பாகம் 2)

{ 29 comments… read them below or add one }

1 வருண் January 23, 2009 at 7:15 AM

***பலருக்கு பாலாவை பிடிக்காது காரணம் அவர் படங்களில் வன்முறை காட்சிகள் அதிகம் இருக்கும், கடைசியில் ஹீரோவை சாகடித்து விடுவார் அல்லது காதலியுடன் சேர விடாமல் சோகமாக முடித்து விடுவார் என்ற குற்றசாட்டும், இவர் ஒரு “சைக்கோ” என்றும் பலர் கூற கேட்டு இருக்கிறேன்.****

நான் எப்போ உங்களிடம் பேசினேன்?! :) :):)

Reply

2 jahir January 23, 2009 at 7:24 AM

thanks, annaipolave neengalum

Reply

3 சிங். செயகுமார். January 23, 2009 at 7:28 AM

இவன் தான் பாலா :-)

Reply

4 கிரி January 23, 2009 at 8:19 AM

//வருண் said…
நான் எப்போ உங்களிடம் பேசினேன்?! :) :):)//

எப்படி! :-) ))

என் பதிவுகளில் என் விருப்பத்தையும் கூறுவேன், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதையும் ஓரளவு அறிந்து அதையும் கூறுவேன்..பாருங்க உங்களை படித்து விட்டேன் :-) )))

உங்கள் முதல் வருகைக்கு நன்றி

===================================================================

//jahir said…
thanks, annaipolave neengalum//

நன்றி ஜாகிர் முதல் வருகைக்கும் சேர்த்து.

===================================================================

//சிங். செயகுமார். said…
இவன் தான் பாலா :-) //

யாரைங்க சொல்றீங்க? :-) ))

உங்கள் முதல் வருகைக்கு நன்றி

Reply

5 Nags January 23, 2009 at 10:32 AM

பாலா இன்றும் ஷூட்டிங் ஸ்பாட்ல் terror என்று கேள்விபட்டிருக்கிறேன் ,நான் கடவுள் கிளைமாக்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்ல் கருணாஸ் சாப்பாடு தட்டுடன் உதை வாங்கிய சம்பவம் …..மேலும் சினிமா இண்டுஸ்ர்யில் யாரயும் மதிக்காத ஆட்களில் டாப் 5 லிஸ்ட் இவர் பெயரும் உண்டு என்று செய்தி …. … அப்படியா ????? எனக்கு தெரியாது ….உங்களுக்கு கிரி

Reply

6 கணேஷ் January 23, 2009 at 10:34 AM

//பாலா நல்லவரா கெட்டவரா என்ற பிரச்சனைக்கே நான் வரவில்லை, அவர் மீது பல குற்றசாட்டுகள் உண்டு, அது அவருடைய தனிப்பட்ட விஷயம். ஒரு இயக்குனராக எனக்கு அவரை மிகவும் பிடித்து இருக்கிறது//

இது க்ளாசிக்கல் டச். எனக்கும் தான்.

ரவுடியாக இருந்ததினால் வன்முறை காட்சிகள் ரியலிஸ்டிக்கா இருக்கும் என்று வைத்துக் கொண்டாலும், அவர் படத்தின் காதல் sequences பார்த்து இருக்கிறீர்களா? 2 செகண்ட் பார்த்த உடனே சுவிஸ் போய் அரையும் குறையுமா ஆடும் பைத்தியக்காரத்தனம் இருக்காது. நம்ம ஊரில் எப்படி இருக்குமோ, அதை சரியாக பதிந்து இருப்பார்.

Reply

7 பாண்டித்துரை January 23, 2009 at 11:18 AM

//ஒரு இயக்குனராக எனக்கு அவரை மிகவும் பிடித்து இருக்கிறது.
////

எனக்கும் அவரை மிகவும் பிடித்து இருக்கிறது

Reply

8 பாண்டித்துரை January 23, 2009 at 11:20 AM

///அதே போல, தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்களை இம்சிப்பதையும் என்னால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை////

ம் பாலா நடைமுறைவாழ்க்கையில் அப்படி இல்லையோ என்று தோன்றுகிறது.

பாலா – அஜீத் பிரச்சினையை சொல்ல வந்தேன்.

அஜீத்தின் அசாத்திய மௌனம்!…..

Reply

9 Bleachingpowder January 23, 2009 at 11:36 AM

//என்னால் கொலையை கூட குறைந்த பட்சம் மன்னிக்க முடியும் ஆனால் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான கொடுமைகளை மட்டும் எந்த காரணத்திற்காகவும் மன்னிக்கமுடியவில்லை. //

Irréversible படத்தில் வரும் rape sceneனை பார்திருக்கிறீர்களா கிரி, பார்த்தால் குறைந்தது மூன்று நாட்களாவது ஆகும் அதிலிருந்து வெளியே வர, அவ்வளவு கொடுமையாக இருக்கும், Hostel I, II வே பரவாயில்லைன்னு தோனும். இந்த படம் பார்த்ததிலிருந்து எவனாவது எங்கேயாவது பாலியல் பலாத்காரம் செய்ததாக படித்தாலே பிபி எகிறுது.இவனுகளை எல்லாம் gulf ல பண்ணுகிற மாதிரி கல் எடுத்து அடித்தே கொல்லனும், ஆனா அதெல்லாம் நம்ம நாட்டுல நடக்காது, இந்த மாதிரி பாலா படத்தை பார்த்து அல்ப சந்தோசம் அடைஞ்சுக்க வேண்டியதுதான்.

சிங்கபூர்ல எப்படி கிரி, அங்கே பாலியல் பலாத்காரத்திற்கு கடுமையான தண்டனைகள் உண்டா?

Reply

10 மோகன் January 23, 2009 at 12:21 PM

// நாம் செய்ய நினைத்ததை செய்ய முடியாததை இன்னொருவன் நம் பிம்பமாக செய்யும் போது நமக்கு அவரை பிடிக்கிறது நாமே தண்டித்தது போல மகிழ்கிறோம். நாம் சாலையில் செல்லும் போது எத்தனையோ நிகழ்ச்சிகளை பார்க்கிறோம், அதில் நடக்கும் தவறுகளை தட்டி கேட்க நினைத்தும் நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதால் மனம் வெதும்பி எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக செல்கிறோம். அதையே ஒருவன் திரையில் செய்யும் போது அதை நம் பிம்பமாக கருதி அவருக்கு ரசிகராகி விடுகிறோம். அதே லாஜிக் தான் நான் பாலாவிற்கு ரசிகன் ஆனதும். //

கிரி, எனக்கு தெரிந்த வரை பால படங்களில் நந்தா படத்தில் மட்டும் தான் இப்படி தவறு செய்தவர்களை தண்டிக்கும் காட்சி இருந்ததாக தோன்றுகிறது.
மோகன்.

Reply

11 Ganesh January 23, 2009 at 12:48 PM

VETTY VELAI

Reply

12 கிரி January 23, 2009 at 12:59 PM

//Nags said…
பாலா இன்றும் ஷூட்டிங் ஸ்பாட்ல் terror என்று கேள்விபட்டிருக்கிறேன்//

நானும் கேவ்ளிபடு இருக்கிறேன், தனக்கு திருப்தி வரும் வரை காட்சி அமையும் வரை நடிகரோ நடிகையையோ பெண்டு நிமித்தி விடுவார் என்று.

//நான் கடவுள் கிளைமாக்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்ல் கருணாஸ் சாப்பாடு தட்டுடன் உதை வாங்கிய சம்பவம்//

இது எனக்கு தெரியாது

//மேலும் சினிமா இண்டுஸ்ர்யில் யாரயும் மதிக்காத ஆட்களில் டாப் 5 லிஸ்ட் இவர் பெயரும் உண்டு என்று செய்தி ..//

யாரையும் மதிக்காத என்று தெரியாது ஆனால் யாருக்கும் பயப்படமாட்டார் என்று மட்டும் தெரியும்.

// எனக்கு தெரியாது ….உங்களுக்கு கிரி//

எனக்கு தெரிந்தது இது தான் Nags

===================================================================

//ராம்சுரேஷ் said…
அவர் படத்தின் காதல் sequences பார்த்து இருக்கிறீர்களா? 2 செகண்ட் பார்த்த உடனே சுவிஸ் போய் அரையும் குறையுமா ஆடும் பைத்தியக்காரத்தனம் இருக்காது. நம்ம ஊரில் எப்படி இருக்குமோ, அதை சரியாக பதிந்து இருப்பார்.//

நீங்கள் கூறுவது மிகச்சரி. இது பற்றி என் அடுத்த பதிவுகளில் கூற இருக்கிறேன். இதை விட பிதாமகனில் சிம்ரனை பயன்படுத்திய விதம் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. இவரது பாடல் காட்சி அமைப்புகளில் ஒரு ரியாலிட்டி இருக்கும்.

===================================================================

//பாண்டித்துரை said…
பாலா நடைமுறைவாழ்க்கையில் அப்படி இல்லையோ என்று தோன்றுகிறது.
பாலா – அஜீத் பிரச்சினையை சொல்ல வந்தேன்.
அஜீத்தின் அசாத்திய மௌனம்!…..//

உண்மை தான். அஜித் விஷயத்தில் எனக்கும் ஒப்புதல் இல்லை. எனக்கு தெரிந்த வரை அஜித் நல்ல மனிதர் தான். பாலா இவரை மிரட்டியது பத்திரிகைகளின் மூலமே தெரிந்தது. நிஜத்தில் இன்னும் அதிகம் நடந்து இருக்க வாய்ப்புள்ளது

===================================================================

//Bleachingpowder said…
Irréversible படத்தில் வரும் rape sceneனை பார்திருக்கிறீர்களா கிரி, பார்த்தால் குறைந்தது மூன்று நாட்களாவது ஆகும் அதிலிருந்து வெளியே வர, அவ்வளவு கொடுமையாக இருக்கும்//

அருண் இந்த படம் பார்க்கவில்லை, எனக்கு இந்த மாதிரி காட்சிகள் என்றாலே டென்ஷன் ஆகி விடுவேன், என்னால் டைஜஸ்ட் பண்ணவே முடியாத விஷயம்.

//Hostel I, II வே பரவாயில்லைன்னு தோனும்//

Hostel படத்தில் ஒரு சில காட்சிகள் அவ்வாறு இருக்கும், ஆனால் கடைசியில் ஒரு ஜஸ்டிஸ் இருக்கும். அதனால் எனக்கு அந்த படத்தில் பெரிய விசயமாக தோன்றவில்லை.

//இவனுகளை எல்லாம் gulf ல பண்ணுகிற மாதிரி கல் எடுத்து அடித்தே கொல்லனும், ஆனா அதெல்லாம் நம்ம நாட்டுல நடக்காது, இந்த மாதிரி பாலா படத்தை பார்த்து அல்ப சந்தோசம் அடைஞ்சுக்க வேண்டியதுதான்//

இதே தான் நானும் :-)

//சிங்கபூர்ல எப்படி கிரி, அங்கே பாலியல் பலாத்காரத்திற்கு கடுமையான தண்டனைகள் உண்டா?//

இங்கே தண்டனை கண்டிப்பாக கிடைக்கும், கிடைக்காமல் போக ரொம்ப ரொம்ப வாய்ப்பு குறைவு. நீண்ட காலம் எல்லாம் எடுக்க மாட்டார்கள், ஓரளவிற்கு உடனடியாக தண்டனை கிடைத்து விடும்.அபராதம், சிறை தண்டனை மற்றும் பிரம்படி ல பழுக்க வைத்து விடுவாங்க. அதனால் நடந்த தவறை இனி எதுவும் செய்ய முடியாது என்றாலும், தண்டனை கிடைப்பதால் மனதளவில் பாதிக்கப்பட்டவர் திருப்தி அடையலாம். நம்ம ஊர்ல ஒரு வெங்காயமும் கிடையாது. இதை பார்க்கும் போது வயிறு எரிகிறது.

===================================================================

//மோகன் said…
கிரி, எனக்கு தெரிந்த வரை பால படங்களில் நந்தா படத்தில் மட்டும் தான் இப்படி தவறு செய்தவர்களை தண்டிக்கும் காட்சி இருந்ததாக தோன்றுகிறது.
மோகன்.//

நந்தாவில் நீங்கள் கூறுவது போல இருக்கும், அதிலும் ஒருவனை கழிவறையில்…..யப்பா! ரணகளம் :-) அதை சூர்யா ராஜ்கிரணிடம் கூற அதற்க்கு அவர் சிரிக்கும் சிரிப்பு ..அங்கே உள்ள குழந்தைகளே மிரண்டுவிடுவார்கள்.

பிதாமகனில் அப்பாவியான சூர்யாவை கொன்றதால் கோபம் அடைந்த விக்ரம், அந்த கஞ்சா காட்டிற்கு தீ வைத்து விட்டு அந்த வில்லனை பழிவாங்குவது பயங்கரமாக இருக்கும். அதிலும் அவரை துரத்தி கொண்டு போகும் போது அங்கே வழியில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் தலையை விட்டு தண்ணீரை குடித்து விட்டு மறுபடியும் விக்ரம் துரத்துவார்….வெறித்தனமாக எடுக்கப்பட்ட காட்சி. பல பேர் இதை பார்த்து பாலாவை கரித்து கொட்டி இருப்பார்கள் :-) ))) என்னய்யா படம் எடுக்கிறாரு என்று.

===================================================================

//ganesan said…
VETTY VELAI//

:-) )) நீங்க இப்ப என்ன செய்துட்டு

Reply

13 gulf-tamilan January 23, 2009 at 1:10 PM

//இவனுகளை எல்லாம் gulf ல பண்ணுகிற மாதிரி கல் எடுத்து அடித்தே கொல்லனும்//
அது எல்லாம் ரொம்ப காலத்திற்கு முன்னே நிறுத்தி விட்டார்கள்.இப்போது எல்லாம் கிடையாது. :( ((

Reply

14 வாசுகி January 23, 2009 at 3:29 PM

பாலா சிறந்த இயக்குனர் என்பதில் மாற்றுகருத்து இல்லை தான்.
அவரது படங்களில், இதுவரை சினிமாவில் பார்த்திராத புதிய
characterஐ பார்க்கலாம்.
பிதாமகன் விக்ரம் character பற்றி அதற்கு முன் நான் சிந்தித்தது கூட இல்லை.
நான் கடவுள் ஆர்யா கூட அப்படி போல தான் இருக்கு.
(அவரது சேது படம் மட்டுமே பார்த்தேன். பிதாமகன் பார்க்க எனக்கு தைரியம் காணாது
என்றுதான் சொல்வேன், சோகப்படம் என்பதால்)

//பொதுவாகவே எனக்கு வன்முறை படங்கள் அதிகம் பிடிக்கும்//
mmmmmmmmmmmmm(crying)

எனக்கு வன்முறையுள்ள படங்கள் பிடிக்கவே பிடிக்காது.
நமக்கெல்லாம் அவற்றை பார்க்கும் மன நிலைஇல்லை.
ரத்தத்தை பார்த்தாலே அப்படி ஒரு பயம்.
எல்லாருக்கும் பிடித்த பருத்திவீரன், வேட்டையாடுவிளையாடு கூட நான் பார்க்கவில்லை.
(TVயில் சில கட்டங்கள் முதலிலேயே பார்த்ததால்)

என்னவோ போங்க ம்ம்ம்ம்……….
எனக்கு இன்று மனமே சரியில்லை.
(அதுக்கு நான் என்ன பண்ணுறது என்று நீங்க கேட்பது புரியுது.)
bye bye

Reply

15 ஜாக்கி சேகர் January 23, 2009 at 4:09 PM

நீங்கள் சொல்லும் எல்லா காரணங்களும் ஏற்புடையதுதான். எனக்கும் பாலாவை ரொம்ப பிடிக்கும் பிதாமகனில் பினத்தை மலை உச்சியில் ஏறிக்கும் காட்சிக்கு எடுத்துக்கொண்ட மெனெக்கெடல் எல்லாம் சரிதான்.மிக முக்கியமாக விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை ரொம்ப அற்புதமாக சொல்லும் திறம் படைத்தவர்தான். இருப்பினும் இந்த மூன்று படங்களின் முடிவில் ஒரு வெறுமை இருக்கும் அதே போல் ஒரு இயக்குநர் செக்குமாடு போல் பல தளங்களில் இயங்க வேண்டும், இது என்னுடைய தனிப்பட்ட கருத்து கிரி

Reply

16 தமிழன்-கறுப்பி... January 23, 2009 at 4:30 PM

படம் பாத்துட்டுத்தான் அடுத்த கதை…

Reply

17 ’டொன்’ லீ January 23, 2009 at 6:38 PM

நல்ல இயக்குனர் தான்…ஆனால் கொஞ்சம் சைக்கோதனம் மிக்க படங்களையோ தொடர்ந்து தருகிறார்…கொஞ்சம் விலகி எதார்த்தமாக எடுத்தால் நல்லாயிருக்கும்…

எனக்கு பாலாவை விட அமீர் பெட்டரா தெரியிறார்…பார்ப்போம்…

Reply

18 கிரி January 23, 2009 at 6:54 PM

//gulf-tamilan said…
அது எல்லாம் ரொம்ப காலத்திற்கு முன்னே நிறுத்தி விட்டார்கள்.இப்போது எல்லாம் கிடையாது. :( ((//

அப்படியா! ஆனாலும் அங்கு தண்டனை கடுமையாக இருக்கும் என்பது உண்மை தானே.

உங்கள் முதல் வருகைக்கு நன்றி

===================================================================

//வாசுகி said…
அவரது சேது படம் மட்டுமே பார்த்தேன். பிதாமகன் பார்க்க எனக்கு தைரியம் காணாது என்றுதான் சொல்வேன், சோகப்படம் என்பதால்//

உண்மை தான். பெரும்பான்மையான பெண்களுக்கு இவரது படம் பிடிக்காது.

//எல்லாருக்கும் பிடித்த பருத்திவீரன், வேட்டையாடுவிளையாடு கூட நான் பார்க்கவில்லை//

எனக்கும் “பருத்தி வீரன்” க்ளைமாக்ஸ் ம் “வேட்டையாடு விளையாடு” ல் சில காட்சிகளும் பிடிக்காது.

//என்னவோ போங்க ம்ம்ம்ம்……….
எனக்கு இன்று மனமே சரியில்லை.//

அடடா! என்னங்க இப்படி சொல்றீங்க! என் பதிவை படித்த பாதிப்பா!

//அதுக்கு நான் என்ன பண்ணுறது என்று நீங்க கேட்பது புரியுது.//

அப்படி எல்லாம் கேட்கமாட்டேன் கவலைப்படாதீங்க :-)

===================================================================

//jackiesekar said…
இந்த மூன்று படங்களின் முடிவில் ஒரு வெறுமை இருக்கும்//

முடிவு சுபமாக இல்லாததால் அவ்வாறு தோன்றுகிறது என்று நினைக்கிறேன்

//அதே போல் ஒரு இயக்குநர் செக்குமாடு போல் பல தளங்களில் இயங்க வேண்டும்//

பாலா இன்னும் பல வித்யாசமான படங்களை தர வேண்டும் என்பதே என் விருப்பமும்.

===================================================================

//தமிழன்-கறுப்பி… said…
படம் பாத்துட்டுத்தான் அடுத்த கதை…//

எந்த படத்தை சொல்றீங்க?

===================================================================

//’டொன்’ லீ said…
எனக்கு பாலாவை விட அமீர் பெட்டரா தெரியிறார்…பார்ப்போம்…//

அமீரும் கொஞ்சம் வயலன்ட்டான நபர் தான். அவர் படத்திலும் பல காட்சிகள் எனக்கு பிடிக்கும், குறிப்பாக ராம் படத்தில் வரும் ஒரு சண்டை காட்சி. ஆனால் பாலாவை ஒப்பிடும் போது “மௌனம் பேசியதே” போன்ற மென்மையான படங்களையும் கொடுத்து இருக்கிறார். அடுத்து கண்ணபிரான் என்ற படத்தை எடுக்க போகிறார் பார்ப்போம் எப்படி இருக்கிறது என்று.

Reply

19 வால்பையன் January 23, 2009 at 7:33 PM

பாலா விளிம்புநிலை மனிதர்களை நிறைய படித்திருப்பார் போல!
அவரது படங்களில் அவர்களுக்கு தான் முக்கியத்துவம் இருக்கும்,

பிதாமகனில் சூர்யாவின் பாத்திரம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

Reply

20 மோகன் January 23, 2009 at 7:44 PM

கிரி, புது தளத்திற்கு (http://mpmohankumar.wordpress.com/) எனது பதிவை மாற்றி உள்ளேன். உங்கள் புக் மார்க் அப்டேட் செய்ய வேண்டுகிறேன்.

Reply

21 அருப்புக்கோட்டை பாஸ்கர் January 23, 2009 at 8:23 PM

//***பலருக்கு பாலாவை பிடிக்காது காரணம் அவர் படங்களில் வன்முறை காட்சிகள் அதிகம் இருக்கும், கடைசியில் ஹீரோவை சாகடித்து விடுவார் அல்லது காதலியுடன் சேர விடாமல் சோகமாக முடித்து விடுவார் என்ற குற்றசாட்டும், இவர் ஒரு “சைக்கோ” என்றும் பலர் கூற கேட்டு இருக்கிறேன்.****//

வழி மொழிகிறேன் !
எனக்கும் இவர் கெளதம் மேனனை போலவே ஒரு சைக்கோ என்னும் கருத்து உண்டு !

Reply

22 நசரேயன் January 23, 2009 at 9:06 PM

/*இரண்டாவது பாலா படம். அவை எந்த படங்கள், ஏன் மற்றும் பாலாவின் மற்ற மூன்று படங்களை பற்றியும் என் அடுத்த பதிவில் கூறுகிறேன்.
*/
௬றுங்கள்,அதுக்கு முன்னாடி நான் படத்தோட விமசனத்தையும் ௬றுகிறேன்

Reply

23 ராஜ நடராஜன் January 24, 2009 at 1:22 AM

பாலாவின் புதிய படவிமர்சனம் சொல்றீங்களோன்னு உள்ளே வந்தேன்.

பாலா பற்றி எனக்குத் தெரியாத சில தகவல்கள் சொன்னதற்கு நன்றி.

நல்லா சரளமா போகிற பதிவில் வன்முறை பற்றி கிளைமாக்ஸ் எனக்கு உடன்படாததால் ஒரு 40 மார்க் வெட்டு:)

Reply

24 குடுகுடுப்பை January 24, 2009 at 2:49 AM

ஒரு இயக்குநர் செக்குமாடு போல் பல தளங்களில் இயங்க வேண்டும், இது என்னுடைய தனிப்பட்ட கருத்து கிரி//

என்னை மாதிரி.

//

ஆனால் நம்ம ஊர்ல ஒரு டைரக்டர் படம் இப்படிதான் இருக்கனும்னு ஒரு முத்திரை இருக்கு.

Reply

25 கிரி January 24, 2009 at 7:51 AM

//வால்பையன் said…
பிதாமகனில் சூர்யாவின் பாத்திரம் எனக்கு ரொம்ப பிடிக்கும்//

அருண்! உங்களுக்கு மட்டுமல்ல பலருக்கும் சூர்யாவின் கதாபாத்திரம் தான் பிடிக்கும், அவரிடம் இப்படி ஒரு நகைச்சுவை உணர்வு நடிப்பு இருக்கிறதா என்று ஆச்சர்யப்பட்டு போனேன். இதற்க்கு பாலாவிற்கு தான் நன்றி கூறவேண்டும்.

===================================================================

//மோகன் said…
கிரி, புது தளத்திற்கு (http://mpmohankumar.wordpress.com/) எனது பதிவை மாற்றி உள்ளேன். உங்கள் புக் மார்க் அப்டேட் செய்ய வேண்டுகிறேன்.//

தகவலுக்கு நன்றி மோகன், மாற்றி விட்டேன். உங்கள் புதிய வலைத்தளத்திற்கு வாழ்த்துக்கள்.

===================================================================

//பாஸ்கர் said…
எனக்கும் இவர் கெளதம் மேனனை போலவே ஒரு சைக்கோ என்னும் கருத்து உண்டு !//

கௌதம் மேனன் தன் படங்களில் இதை போல கதாநாயகியை சாகடித்து விடுகிறாரே அதை கூறுகிறீர்களா!

===================================================================

//நசரேயன் said…
௬றுங்கள்,அதுக்கு முன்னாடி நான் படத்தோட விமசனத்தையும் ௬றுகிறேன்//

உங்கள் விமர்சனம் சொந்த கதையாக! இருந்தாலும் படம் பார்த்து விட்டு தான் படிப்பேன், கடைசி வரிகளை படிக்க வருகிறேன் ;-)

===================================================================

//ராஜ நடராஜன் said…
பாலா பற்றி எனக்குத் தெரியாத சில தகவல்கள் சொன்னதற்கு நன்றி.//

நன்றிக்கு நன்றி.

//நல்லா சரளமா போகிற பதிவில் வன்முறை பற்றி கிளைமாக்ஸ் எனக்கு உடன்படாததால் ஒரு 40 மார்க் வெட்டு:)//

:-) )))

===================================================================

//குடுகுடுப்பை said…
ஆனால் நம்ம ஊர்ல ஒரு டைரக்டர் படம் இப்படிதான் இருக்கனும்னு ஒரு முத்திரை இருக்கு.//

நீங்கள் கூறுவது சரி தான், சில சமயம் மாற்றி எடுத்தால் வெற்றி பெறுகிறது, பல சமயங்களில் பெரும் தோல்வி அடைகிறது.

Reply

26 ’டொன்’ லீ January 24, 2009 at 9:12 AM

//அமீரும் கொஞ்சம் வயலன்ட்டான நபர் தான். அவர் படத்திலும் பல காட்சிகள் எனக்கு பிடிக்கும், குறிப்பாக ராம் படத்தில் வரும் ஒரு சண்டை காட்சி. ஆனால் பாலாவை ஒப்பிடும் போது “மௌனம் பேசியதே” போன்ற மென்மையான படங்களையும் கொடுத்து இருக்கிறார்.

//

அவரது மெளனம் பேசியதே படத்தை 2001 ல் பார்த்து வியந்து போனவன். குறிப்பாக கமெராக் கோணங்கள், பிண்ணணி இசைக்கு கொடுத்த முக்கியத்துவம் என்னை கவர்ந்தது. அடுததடுத்த படங்கள் மூலம் அதை நிருபித்து விட்டார்.

பாலாவின் சிஷ்யர்/நண்பர் என்று அறிந்தேன்…

Reply

27 Kalyan January 24, 2009 at 2:12 PM

பாலா ஒரு சைகோ என்பதில் எந்த வித சந்தேகமும் இருக்க முடியாது. அவருக்கு பிடித்த காட்சிகள் பிணம் எரிவது, துர்மரணத்தை காட்டுவது போன்ற மனிதனின் கடைசி கட்டம்தான். மூன்று வருடம் ஒரு படத்தை எடுத்து, தயாரிப்பாளரை கடனில் தள்ளி யதார்த்தத்தை படம் பிடிக்கிறேன் என்று சொல்வது எவ்வளவு தூரம் சரி என்று யோசித்து பார்க்க வேண்டும். ஒரு படத்தை ஒருவர் மூன்று வருடம் எடுக்கிறார் என்றல் அவர் திட்டமிடாமல் பணி செய்கிறார் என்று அர்த்தம். ஆக பாலா என்னும் மனிதர் பெரிய படைப்பாளி என்று சொல்லி பாராட்டுவதை விட, அவரை யதார்த்தத்திற்கு கொண்டு வர அவரது குறைகளை சுட்டிகாட்டி அவரது திறமையை (அப்படி ஏதாவது இருந்தால்) சரியான முறையில் பயன்படுத்த வைப்பதே ஒரு ரசிகனின் கடமை. மரணத்தையும், சுடுகாட்டையும், பிணம் எரிவதையும் காட்டுவதால் அவர் பெரிய படைப்பாளி என்று சொல்லிவிட முடியாது.

Reply

28 கிரி January 24, 2009 at 11:18 PM

//’டொன்’ லீ said…
அவரது மெளனம் பேசியதே படத்தை 2001 ல் பார்த்து வியந்து போனவன். குறிப்பாக கமெராக் கோணங்கள், பிண்ணணி இசைக்கு கொடுத்த முக்கியத்துவம் என்னை கவர்ந்தது. அடுததடுத்த படங்கள் மூலம் அதை நிருபித்து விட்டார்.//

மௌனம் பேசியதே எனக்கு இனிய அதிர்ச்சி, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்த படத்திற்கு சென்றேன், அருமையான படம். இன்றும் தொலைக்காட்சியில் இந்த படத்தை போட்டால் முழுதும் பார்ப்பேன். சூர்யா இயல்பாக நடித்து இருப்பார், குறிப்பிடத்தக்க இன்னொரு கதாபாத்திரம் ” I am Kannan, Marketing executive” :-) )))

//பாலாவின் சிஷ்யர்/நண்பர் என்று அறிந்தேன்…//

நீங்கள் அறிந்தது உண்மை தான்.

===================================================================

//Kalyan said…
மூன்று வருடம் ஒரு படத்தை எடுத்து, தயாரிப்பாளரை கடனில் தள்ளி யதார்த்தத்தை படம் பிடிக்கிறேன் என்று சொல்வது எவ்வளவு தூரம் சரி என்று யோசித்து பார்க்க வேண்டும். ஒரு படத்தை ஒருவர் மூன்று வருடம் எடுக்கிறார் என்றல் அவர் திட்டமிடாமல் பணி செய்கிறார் என்று அர்த்தம்.//

இதை நான் ஏற்று கொள்கிறேன்

//திறமையை (அப்படி ஏதாவது இருந்தால்)//

அவரது திறமையை என்னால் சந்தேகிக்க முடியாது.

//மரணத்தையும், சுடுகாட்டையும், பிணம் எரிவதையும் காட்டுவதால் அவர் பெரிய படைப்பாளி என்று சொல்லிவிட முடியாது//

இவை மட்டுமே உங்கள் கண்ணில் பட்டது வருத்தம் அளிக்கிறது. இருந்தாலும் இது உங்கள் கருத்து.

உங்கள் முதல் வருகைக்கு நன்றி கல்யாண்

Reply

29 சிங். செயகுமார். January 26, 2009 at 8:24 AM

//சிங். செயகுமார். said…
இவன் தான் பாலா :-) //

யாரைங்க சொல்றீங்க? :-) ))

உங்கள் முதல் வருகைக்கு நன்றி//

அந்த பேர்ல லைப்ரரில புக் இருக்கு பார்த்தீர்களா?

Reply

Leave a Comment

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)

Previous post:

Next post: