Monday, July 28, 2008

உண்மையான திருடர்கள் யார்? காவல் துறையினரா! திருடர்களா!!


நான் இந்த முறை ஊருக்கு சென்று இருந்த போது எங்கள் குல தெய்வ கோவிலில் சில நாட்களுக்கு முன்பு திருட்டு போனதாக கூறினார்கள். கோவில் உண்டியலில் இருந்த கொஞ்சம் பணம் மற்றும் சில வெள்ளி சாமான்கள் மற்றும் கோவிலில் பூசாரி வைத்து இருந்த கொஞ்சம் பணம் (இவர் ஏன் அங்கே கொண்டு போய் வைத்தாரோ) ஆக மொத்தம் ருபாய் 6000 வரை மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போய் இருந்தது.


காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது என்ன ஆனது என்று கேட்டேன்? அவர்கள் புகார் கொடுத்து இருப்பார்கள் என்ற நம்பிக்கையில், புகார் எதுவும் கொடுக்கவில்லை என்றார்கள்! எனக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது, ஏன் என்று கேட்ட போது புகார் கொடுத்தால் விசாரணை என்ற பெயரில் எங்களுக்கு 10000 ருபாய் வரை செலவாகும், அதுவும் இல்லாமல் நாங்கள் இதனால் அடைந்த வேதனையை விட அவர்கள் விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்து மன உளைச்சலையும் ஏற்படுத்தி விடுவார்கள், என்று கூறிய போது எனக்கு அவர்களிடம் நீங்கள் செய்வது தவறு, இதை போல செய்தால் திருடர்களுக்கு துணை போவது போல ஆகிவிடாதா, அவர்களுக்கு இது மேலும் தைரியத்தை கொடுத்து விடாதா? என்று கேட்க தோன்றவில்லை. எனென்றால் காவல் விசாரணை எந்த அளவுக்கு இருக்கும் என்று எனக்கு தெரிந்தவர்கள் கூறி ஏற்கனவே தெரியும்.


சாதாரண மக்களை நாளைக்கு வா! இரண்டு நாள் கழித்து விசாரணைக்கு வா! என்று அழைத்து நொங்கு எடுத்தால் அவர்கள் எப்படி தாங்குவார்கள். அவர்களுக்கு ஒரு நாள் வேலைக்கு போக வில்லை என்றாலும் சாப்பாட்டிற்கு பிரச்சனை. அவர்கள் வேலைக்கு போவதை பார்ப்பார்களா இல்லை இவர்களோடு விசாரணைக்கு நடையாய் நடப்பார்களா? திருட்டு போனதுக்கு மேல் செலவு செய்ய விரும்புவார்களா?


இதை விட அவர்கள் கூறிய இன்னொரு விஷயம் தான் என்னை அதிர்ச்சி அடைய வைத்தது ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டால் கூட அவர்கள் அதை பற்றி காவல் துறையிடம் சொல்வதில்லை என்றார்கள், அதற்க்கு அவர்கள் கூறிய காரணம் மேலே கூறியவையே.


இதில் சம்பந்தப்படாதவர்கள் வேண்டும் என்றால், கண்டிப்பாக புகார் கொடுக்க வேண்டும் என்கிற ரீதியில் பேசலாம், ஆனால் விசாரணை என்கிற பெயரில் வாழ்க்கை வெறுத்தவர்களுக்கு மட்டுமே இதில் உள்ள கஷ்டம் புரியும். இந்த தவறை நியாய படுத்தி பேசவில்லை. அவர்களின் மன நிலையை பிரதிபலித்தேன்.


இதை போல தவறுகள் குறைய வேண்டும் என்றால் காவல் துறை விசாரிப்புகள்,சட்டங்கள் எளிமையாக வேண்டும், பொது மக்கள் பயமின்றி வந்து செல்லும் இடமாக மாற வேண்டும். விசாரணை என்ற பெயரில் பொது மக்களை வாட்டி வதைக்கும் முறைகள் மாற வேண்டும். இதனாலேயே கற்பழிப்புக்கு ஆளான பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க முன்வருவதில்லை, விசாரணை என்கிற பெயரில், முதலில் கற்பழித்தவரை விட இவர்கள் கேட்கும் கேள்விகளால் பல முறை கற்பழித்து விடுகிறார்கள் :-( சிகரெட் பாக்கெட்டும், பான்பராக்கும், டீயும், முன்கட்டண தொலைபேசி ரீசார்ஜ் அட்டையும் வாங்கி தர சொல்லி காவல் துறை பக்கமே தலை வைத்து படுக்க கூடாது என்று நினைக்கும் அளவுக்கு கொண்டு வந்து விடுகிறார்கள்.


இவைகளை எல்லாம் பார்க்கும் போது மனம் குமுறுவதை தவிர சாமானியர்களால் வேறு ஒன்றும் செய்ய முடிவதில்லை.இதற்காக காவல் துறை அவசியமில்லை என்று அர்த்தம் இல்லை, இதை போல தவறுகள் நடக்காமல் அல்லது குறைவாக இருந்தால் நலம்.


சட்டங்களும், காவலை துறை விசாரிப்புகளும் எளிமையானால் மக்கள் தைரியமாக புகார் கொடுப்பார்கள், எனக்கு இவர்கள் (இவ்வாறு இருப்பவர்கள்)மாற வாய்ப்பு இருப்பதாக எள்ளளவும் நம்பிக்கை இல்லை என்பது கசப்பான ஒன்று.

Buzz It

27 COMMENTS:

பரிசல்காரன் on 1:27 PM, July 28, 2008 said...

:-))

வந்ததுக்கு ஒரு ஸ்மைலி..

அப்பாலிக்கா படிச்சுட்டு பின்னூட்டம் போடறேன்!

மங்களூர் சிவா on 1:57 PM, July 28, 2008 said...

இதுதான் நிதர்சனம்

:(

கிரி on 2:07 PM, July 28, 2008 said...

// பரிசல்காரன் said...
:-))
வந்ததுக்கு ஒரு ஸ்மைலி..
அப்பாலிக்கா படிச்சுட்டு பின்னூட்டம் போடறேன்!//

அட்டெண்டன்ஸ் எல்லாம் தேவை இல்லை கே கே, நீங்க எப்போ வேணாலும் வந்து பின்னூட்டம் போடலாம் :-) உங்கள் அன்பிற்கு நன்றி.

---------------------------------------------------

//மங்களூர் சிவா said...
இதுதான் நிதர்சனம்
:(//

உங்கள் கருத்திற்கு நன்றி சிவா

இவன் on 2:11 PM, July 28, 2008 said...

:( செய்வதற்கு ஒன்றுமில்லை கிரி....என்ன செய்ய கிரி இங்கே கடமையைச்செய்வதற்கும் இலஞ்சம் சொடுக்க வேண்டி உள்ளதே...

ச்சின்னப் பையன் on 2:12 PM, July 28, 2008 said...

ம். கண்டிப்பா இவங்க மாற சான்ஸே இல்லை.

ஒரு முறை சென்னையில் எனது பை ஒன்று (அதில் என்னுடைய வண்டியின் பேப்பர்ஸ், என் பர்ஸ் எல்லாம் இருந்தது) காணாமல் போனதில், புகார் செய்யப்போய் படுகேவலமான வார்த்தைகளைக் கேட்டேன்.:-((

ஜெகதீசன் on 2:30 PM, July 28, 2008 said...

ஹிம்...
:((
வேற ஒன்னும் சொல்லத் தோனலை...

கரிகாலன் on 2:31 PM, July 28, 2008 said...

தமிழ்நாட்டில் காவல்துறையே இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்...

எவனும் வழக்கு, வாய்தா என்று அலைய வேண்டியதில்லை...

அரசும் கவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை என்று நிதி ஒதுக்கத் தேவையில்லை...

அந்த பணத்துல இலவச டி.வி. கொடுத்தமாதிரி இலவச டி.வி.டி பிளேயர் கொடுக்கலாம்...

இரண்டு ரூபாய்க்கு ஒரு கோட்டர் சரக்கு கொடுக்கலாம்...

இப்படி எத்தனையோ எண்ணற்ற திட்டங்களை கொண்டுவரலாம்...

கிரி on 2:41 PM, July 28, 2008 said...

//இவன் said...
:( செய்வதற்கு ஒன்றுமில்லை கிரி....என்ன செய்ய கிரி இங்கே கடமையைச்செய்வதற்கும் இலஞ்சம் சொடுக்க வேண்டி உள்ளதே...//

அதுவும் இல்லாமல் மிக கேவலமாக நடத்தப்படுவது தான் வருத்தம் அளிப்பதாக உள்ளது.

கிரி on 2:42 PM, July 28, 2008 said...

//ச்சின்னப் பையன் said...
ஒரு முறை சென்னையில் எனது பை ஒன்று (அதில் என்னுடைய வண்டியின் பேப்பர்ஸ், என் பர்ஸ் எல்லாம் இருந்தது) காணாமல் போனதில், புகார் செய்யப்போய் படுகேவலமான வார்த்தைகளைக் கேட்டேன்.:-((//

இந்த அனுபவம் பெரும்பாலானவருக்கு இருக்கும் என்று நினைக்கிறேன்.

கிரி on 2:48 PM, July 28, 2008 said...

//ஜெகதீசன் said...
ஹிம்...
:((
வேற ஒன்னும் சொல்லத் தோனலை...//

இது உண்மையான ஜெகதீசனா என்று தெரியலையே! :-))

------------------------------------------------------

//கரிகாலன் said...
தமிழ்நாட்டில் காவல்துறையே இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்...//

மிக மோசமாக இருக்கும். நான் கூறுவது இவ்வாறு நடந்து கொள்ளும் பெரும்பாலான நபர்களை தான்.

உங்கள் கருத்திற்கு நன்றி.

ராமலக்ஷ்மி on 7:38 PM, July 28, 2008 said...

இந்தப் பொது மக்கள்தான் ந்மக்கு எஜமானர், இவர்களது வரிப் பணத்தில்தான் நமக்குச் சம்பளமே வழங்கப் படுகிறது, இவர்களுக்கு என்ன பிரச்சனை வந்தாலும் களைய வேண்டியது நம் தலையாய கடமை....என்றெல்லாம் எண்ணிப் பார்க்கா விட்டாலும்:( இப்படி அலைக்கழித்து அட்டூளியம் பண்ணாமலாவது இருக்கலாம்.

ARUVAI BASKAR on 9:24 PM, July 28, 2008 said...

எங்கள் பகுதியில் ஒரு திருட்டு நடந்து , திருடர்களை(இருவர் )பிடித்து போலிஸ் சில் ஒப்படைத்தோம் !. ஒருவருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை களிடம் இருந்து நெருக்குதல் . இன்னொருவருக்கு பா மா க ஆதரவு .
கடைசியில் போலீசார் புகாரையே பதிவு பண்ணவில்லை .திருட்டு பொருளின் மதிப்பு ரூபாய் ஆறு லட்சம் .! திருடர்கள் ஜெயித்தார்கள் !
திருட்டு கொடுத்தவர்கள் தோற்றார்கள் !
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

பிரேம்ஜி on 9:53 PM, July 28, 2008 said...

கிரி!இது இப்போதைக்கு மாறாது, மாற்றவும் முடியாது.எல்லாரும் படித்த கவனிக்கவும் எல்லாரும் படித்த,பெரும்பாலும் வேலையுள்ள,அனைவரையும் சமமாக மதிக்கும்,தனி மனித துதி இல்லாத(சினிமா,அரசியல் இன்ன பிற)அதாவது இன்னும் கடுமையாக சொன்னால் நீ ஒன்றும் பெரிய ஆள் இல்லை,நான் ஒன்றும் சின்ன ஆளும் இல்லை என்ற உண்மையான சுமரியாதை கொண்ட எல்லாவற்றிலும் Professionalism கொண்ட சமூகம் வந்தால் மட்டுமே இது எல்லாம் மாறும். அதற்கு இன்னும் குறைந்த பட்சம் 25 வருடங்களாவது ஆகும்.

கிரி on 10:00 PM, July 28, 2008 said...

// ராமலக்ஷ்மி said...
என்றெல்லாம் எண்ணிப் பார்க்கா விட்டாலும்:( இப்படி அலைக்கழித்து அட்டூளியம் பண்ணாமலாவது இருக்கலாம்//

இப்படி எல்லாம் நம் மனதை சமாதான படுத்திகொள்ளும் நிலைக்கு நம்மை தள்ளி விட்டார்களே என்று நினைக்கும் போது ....என்ன சொல்வதென்று தெரியவில்லை.

உங்கள் தொடர் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

கிரி on 10:04 PM, July 28, 2008 said...

// ARUVAI BASKAR said...
திருட்டு பொருளின் மதிப்பு ரூபாய் ஆறு லட்சம் .! திருடர்கள் ஜெயித்தார்கள் !
திருட்டு கொடுத்தவர்கள் தோற்றார்கள் !//

பாஸ்கர் இதற்க்கு விரிவான பதில் கூற தான் நினைத்தேன், ஆனால் நான் கூறும் கருத்துக்கள் வேறு பாதையில் சென்று விடும் என்பதால் கூறவில்லை. இதில் எங்கள் நிலைமை பரவாயில்லை போல் உள்ளது உங்கள் 6 லட்சம் கதை கேட்ட போது.

உங்கள் வருகைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி.

கிரி on 10:14 PM, July 28, 2008 said...

//பிரேம்ஜி said...
நீ ஒன்றும் பெரிய ஆள் இல்லை,நான் ஒன்றும் சின்ன ஆளும் இல்லை என்ற உண்மையான சுமரியாதை கொண்ட எல்லாவற்றிலும் Professionalism கொண்ட சமூகம் வந்தால் மட்டுமே இது எல்லாம் மாறும். அதற்கு இன்னும் குறைந்த பட்சம் 25 வருடங்களாவது ஆகும்.//

பிரேம்ஜி சரியா அதுவும் முன்னோட்ட பார்வையுடன் கூறினீர்கள். நீங்கள் கூறுவதை வழிமொழிகிறேன்.

நம்முடைய மக்கள் தொகை இதற்க்கு பெரிய தடையாக அப்போது கூட இருக்கும் என்பது என் கருத்து. கட்டுப்பாட்டிற்குள் இதை கொண்டு வருவது என்பது மிக சிரமம். "எளியோரை வலியோர் வருத்துவது" தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றே கருதுகிறேன்.

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பிரேம்ஜி.

வடகரை வேலன் on 11:06 PM, July 28, 2008 said...

கிரி,
இதற்கு முன் நீங்க போடிருந்த காவலர் தேர்வு பதிவுக்கு நான் போட்ட அதே பின்னுட்டம் இங்கு பொருந்தும்.

//எனக்குத் தெரி்ஞ்ச குடும்பத்ல ஒரு பெண் காதலனுடன் சென்று பின் ஒரு மாதம் கழித்து இருவருமாக வந்து சேர்ந்தனர். இடைப்பட்ட காலத்தில் போலிசில் சொல்லியதால் அவர்களுக்கு ஏகப்பட்ட நஷ்டம். 50 ரூ ரிசார்ஜ் கூப்பன் மட்டும் 5000 ரூபய்க்கு வாங்கிக் கொடுத்திருப்பர்கள்.//

//நான் பேரூர் கோயிலில் தொலைத்த யமஹா பைக்குக்கு FIR போடவே DSP ரெகமெண்டேசன் வாங்க வேண்டியதாகிவிட்டது.

பைக்க தொலைக்காம வச்சுக்க முடியல உனக்கெல்லாம் எதுக்குய்யா பைக்குன்னு கேக்குறார் ஸ்டேசன் SI. என்ன சொல்ல. 90 நாள் கழித்து non tracebale certificate வாங்கறதுக்குள்ள தாவு தீந்துருச்சு.//

நரி இடம் போனாலென்ன, வலம் போனாலென்ன மேல விழுந்து புடுங்காம இருந்தாச் சரிங்கற மனநிலைக்கு வந்துட்டோம். அவ்வளவே.

azhagan on 11:29 PM, July 28, 2008 said...

True! Something must be done real soon to make the POLICE easily approachable by the common man. But I seriously doubt if it is possible at all.

கிரி on 12:29 AM, July 29, 2008 said...

//வடகரை வேலன் said...
நரி இடம் போனாலென்ன, வலம் போனாலென்ன மேல விழுந்து புடுங்காம இருந்தாச் சரிங்கற மனநிலைக்கு வந்துட்டோம். அவ்வளவே//

உண்மை தான் வடகரை வேலன். அரசியலில் நல்லவர்கள் கிடைக்காமல் குறைவாக கொள்ளை அடிப்பவர்களை எப்படி தேட வேண்டியதாக போய் விட்டதோ அதே போல தான் இதுவும். ஒரு வாரம் நொங்கு எடுக்காம 4 நாள்ல விட்டுட்டாங்களேன்னு மனதை தேத்த வேண்டியதாக உள்ளது.

கிரி on 12:35 AM, July 29, 2008 said...

//azhagan said...
True! Something must be done real soon to make the POLICE easily approachable by the common man. But I seriously doubt if it is possible at all.//

எனக்கு அதே ஆசை தான், ஆனால் உங்களை போல நடக்கும் என்று எனக்கும் தோன்றவில்லை. வடகரை வேலன் அவர்கள் கூறியது போல பைக் தொலைந்தால் கூட DSP சிபாரிசு வேண்டும் என்றால் (இது அவருக்கு ஏற்பட்ட அனுபவம்) என்ன சொல்வது. அடித்தட்டு மக்களின் நிலையை என்னவென்று சொல்வது.

உங்களின் முதல் வருகைக்கு நன்றி அழகன்.

raman - Vi5 on 2:24 PM, July 30, 2008 said...

சரியான நேரத்தில் இந்த blog- ‍ ஐ படிக்க நேர்ந்தது, கடந்த சனிக்கிழமை இரவு எனது ஒரு installation work ‍ ஐ முடித்து விட்டு சக ஊழியர்களுடன் உணவு உண்ண சென்று கொண்டிருந்தேன், hotel ‍ க்கு 10 அடி முன் உள்ள ஒரு வழிப்பாதையைக் கடந்து செல்ல முனையும் போது எதிரில் ஒரு போக்குவரத்து அதிகாரி வண்டியில் வந்து கொண்டிருந்தார், நான் oneway‍யில் சென்று கொண்டிருந்ததால், நின்றுவிட்டேன் , அந்த வண்டியும் நின்றது, நான் அருகில் சென்றேன் ( அவர்களின் பார்வையே நம்மை அழைக்கும்) அவர் உடனே மிக மரியாதையாக் " டேய் , இங்க வா!" ( இத்தனைக்கும் நான் அவரை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்) அருகில் சென்றதும், " வாயை ஊது" என்றார், (அதாவது நான், மது அருந்தியிருந்ததால் தான் அவரை பார்த்து பயந்து நின்றேன் என்ற நினைப்பில் என்னே ஒரு psychology approach, உண்மையில் எனக்கு மது அருந்தும் பழக்கமே இல்லை) நானும் ஊதினேன், அவர், மீண்டும் மிக மரியாதையாக் " ஒழுங்கா ஊதுடா, ஒங்கி அறைந்தேனா தெரியும்" என்றார் நானும் செய்தேன், பிறகு அவர் " சரி, சரி , போ" என்று கூறி விட்டு சென்று விட்டார். எனக்கு அன்று இரவு முழுவதும் எனது உற‌க்கமேயில்லை.. என்ன செய்யா கேட்டால் " அவர் பாவம் எத்தனை tension‍ ல் தினமும் இருப்பார்" என்ற பதில் வருகிறது. டென்ஷனில் எல்லொரிடமும் அவர் இப்படித்தான் நடப்பாரா , மேலதிகாரியிடமுமா!,
ஆமாம் எனில், அவர் நல்ல மன நல மருத்துவரை பார்ப்பது நல்லது, இது போல பொதுமக்களை தொல்லை செய்வானேன்.. இந்த லட்சணத்தில் "காவல் துறை உங்கள் நண்பன்" என்று தம்பட்டம் வேறு, இவர்கள் யாருக்கு நண்பர் என்பது சிதம்பர ராகசியம்..! எல்லாம் காலக்கொடுமை வேறு என்ன சொல்ல‌

இளவேனில் on 2:30 PM, July 30, 2008 said...

உரிமம் உள்ள குற்றவாளிகளுக்கு பெயர் காவலாளிகள்
இது அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் தெரிந்த உண்மை
இருந்தும் கரையை துடைப்பதற்கு ஆள் இல்லை
ரமணா படத்தில வருவது போல உண்மைல நடந்தா..? திருந்துவார்களா?

கிரி on 2:36 PM, July 30, 2008 said...

ராமன் அவருக்கு ஒரு பெரிய கும்பிடு போடுங்க...இதோட விட்டாரேன்னு, உண்மையாக சொல்றேன்..

அவரு வீட்டுல பொண்டாட்டி கூட சண்ட போட்டு வந்த கோபத்தை எல்லாம் நம்ம மாதிரி ஆளுங்க கிட்ட தான் காட்டுவாங்க. திட்டோட போனதேன்னு சந்தோஷ படுங்க :-))))))))))))

உங்கள் முதல் வருகைக்கு நன்றி

இளவேனில் on 2:46 PM, July 30, 2008 said...

ராமன் கூறியது போல இந்த காவல் துறையயை சேர்ந்தவர்கள், நாம் காவல் நிலையத்திற்கோ அல்லது, பொது இடங்களில் அனைவரை மரியாதையை குறைவாக அழைப்பது மிக மோசமான வேதனை அளிக்க கூடிய ஒன்று...

ராஜ நடராஜன் on 3:48 PM, July 30, 2008 said...

பதிவு படிச்சிட்டு பின்னூட்டத்துக்குப் போறப்ப கண்ணக் கட்டிடுச்சு:)கொரட்டைக்கு அப்புறம் வாரேன்:)

கிரி on 5:38 PM, July 30, 2008 said...

//இளவேனில் said...
நாம் காவல் நிலையத்திற்கோ அல்லது, பொது இடங்களில் அனைவரை மரியாதையை குறைவாக அழைப்பது மிக மோசமான வேதனை அளிக்க கூடிய ஒன்று...//

உண்மை தான் சக்தி. அடி வாங்குவதற்கு பதிலா திட்டோட போச்சேன்னு மனதை தேற்றி கொள்ளும் நிலைக்கு நாம் வந்து விட்டோம். வருத்தமான விஷயம் தான்.

-----------------------------------

//ராஜ நடராஜன் said...
பதிவு படிச்சிட்டு பின்னூட்டத்துக்குப் போறப்ப கண்ணக் கட்டிடுச்சு:)கொரட்டைக்கு அப்புறம் வாரேன்:)//

வாங்க வாங்க :-)

ARIVAKAM on 11:18 PM, August 03, 2008 said...

ஆதங்கப்படுகிறோம்., அப்புறம்?... 60 ஆண்டு சுதந்திர நாட்டில் நீங்களும் நானும் இன்னும் பல நல்லெண்ணவாதிகளும் சாதித்தது வெற்று விமர்சனம் மட்டும் தானே. ஜனநாயகத்தின் முதன்மை தூண் தான் காவல் துறை. காவல் துறை சீரடைந்தால் போதும் ஒட்டுமொத்த நாடே சீரடைந்துவிடும். ஆனால் இன்று அரசியல் கைபிள்ளையாக உள்ள காவல்துறையை சீர்திருத்த முற்படுவது யார்? பின்னால் வர பல்லாயிரம்நல்லெண்ணவாதிகள் தயார். ஆனால் முன்னின்று வழிநடத்த ஒருத்தர் உண்டா? அது தான் இந்த யுகத்தின் சாபக்கேடு. புலம்பியே அடிமைபட்டு கிடப்போம்., அதுதான் நம்விதியும், மண்ணாங்கட்டியும்.