வெள்ளைக்காரர்களை கண்டு நமக்கேன் தாழ்வு மனப்பான்மை?

by கிரி on June 28, 2008

indiapast வெள்ளைக்காரர்களை கண்டு நமக்கேன் தாழ்வு மனப்பான்மை?

நான் கணிப்பொறி துறையில் முதலில் இருந்தது பீல்ட் வேலையில் தான், ஒவ்வொரு நிறுவனமாக அல்லது வீடாக சென்று அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் மென்பொருள் மற்றும் கணிப்பொறி பிரச்னையை சரி செய்வது தான் என் வேலை, அப்போது எனக்கு வெளிநாட்டு நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதன் பிறகு என் நண்பன் செய்த உதவி மூலம் நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு பல நாட்டு நபர்களுடன் பழக வாய்ப்பு கிடைத்தது. எனக்கு முதலில் வெளிநாட்டு நபர்கள் என்றால் அது வெள்ளை தோல்காரர்கள் என்று எண்ணம், கறுப்பர்கள் (நீக்ரோ) பற்றி அவ்வளவாக நினைப்பதில்லை. எனக்கு அவர்களிடம் பேசுவது என்றால் ஏனோ உள்ளுக்குள் பயமாகவே இருக்கும் (நமக்கு ஆங்கிலம் வேறு அப்போது சரியாக வராது, அப்ப இப்ப சரியான்னு கேட்காதீங்க ஹி ஹி ஹி இப்போதும் சுமார் தான்)

அவர்கள் நடை உடை பாவனை பேச்சு எல்லாமே ஒரு இது இது … ஆங்! ஒரு கெத்து இருக்கும். அதனாலேயே எனக்கு அவர்கள் மீது ஒரு ஆச்சர்யம் மற்றும் கவர்ச்சி ..ஆகா என்னமா இருக்காங்க! எப்படி சூப்பரா பேசுறாங்க தைரியமா ன்னுட்டு. அப்போ எனக்கு கொஞ்சம் விவரம் இல்லா வயசு மற்றும் கொஞ்சம் வெகுளி (சத்யமாங்க நம்புங்க) ரொம்ப எல்லாம் யோசித்து பார்க்க மாட்டேன், அப்புறம் எதாவது விசயத்துல அடி வாங்குனதும் உஷாராகி அந்த தவறை செய்ய மாட்டேன்.

வெளிநாட்டினர் வந்து பேசினாலே வாய் முழுவதும் பல்லாகி விடும், அவங்க சொல்லுற சப்பை ஜோக்குக்கெல்லாம் எதோ கவுண்டமணி ஜோக் கேட்டா மாதிரி விழுந்து விழுந்து சிரிப்பேன், நான் மட்டுமில்ல பெரும்பான்மையானவங்க அப்படி தான் இதுல நிறுவன பெரிய தலைகளும் அடக்கம். அவங்க வரும் போது மட்டும் மரியாதையின் அளவு கூடி விடும், உடனே அவர்கள் கேட்கும் கேள்விக்கு எச்சி முழுங்கி இயல்பாக இல்லாமல் ஒரு வித பயத்துடனும் எதோ காவல் துறை அதிகாரியிடம் பதில் சொல்வது போலவே எல்லோரும் நடந்து கொள்வார்கள். இதில் ஒரு சிலர் விதிவிலக்கு. எங்கும் எதற்கும் விதிவிலக்கு உண்டு அல்லவா!

கிடைத்த அனுபவங்கள் நண்பர்களிடம் அறிந்து கொண்டது என்று இந்த நிலை என்னிடம் நாளாக நாளாக மாறியது. 50 ருபாய் கொடுத்தால் 500 ரூபாய்க்கு முகபாவனை காட்டக் கூடாதுன்னு ரொம்ப தாமதமா தான் புரிந்தது.

 

என் அப்பா சிங்கப்பூர் வந்த பொழுது, என் அப்பா இங்குள்ளவர்களிடம் பேசியது மற்றும் அவர்களுக்கு கொடுத்த அதீத மரியாதை, சிரிப்பு மற்றும் பணிவு எனக்கு ரொம்ப அதிகமாகவே தோன்றியது, இது குறித்து என் அப்பாவுடன் எனக்கு வாக்குவாதம் ஏற்பட்டது (என் அப்பாவுக்கும் வெளிநாடு புதிதல்ல, ஆனால் இடைவெளி அதிகம், 40 வருடங்களுக்கு பிறகு இந்த பயணம்), ஏன் அவர்களிடம் இப்படி பணிந்து போகிறீர்கள், அவர்களும் நம்மை போலவே தானே டோண்டு ஐயா பாணியில் சொல்வதென்றால் நாம் என்ன அவர்களுக்கு அடிமையா? நமக்கு இன்னும் அந்த அடிமை புத்தி மறையவில்லையா? எதற்கு அவர்களுக்கு தேவை இல்லாமல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அல்லது ரொம்ப பணிவாக இருக்க வேண்டும் என்று விவாதம் சென்றது சண்டை எல்லாம் இல்லைங்க ஒரு கலந்துரையாடல்.

இதுவே என்னை பதிவு எழுத தூண்டியது. மற்றவர்களிடம் பணிவாக இருப்பது தவறு என்கிற அர்த்தத்தில் கூறவில்லை, பணிவு வேறு அதீத பணிவு வேறு. அலுவலகத்தில் நாமும் பணி புரிகிறோம் நம்மை போலவே அவர்களும் வேறு ஒரு ஊரில் பணி புரிகிறார்கள், இதில் என்ன அவர்கள் உயர்ந்து விட்டார்கள்? நாம் ஏன் அவர்களுக்கு பயந்து இருக்க வேண்டும். நாம் நம் வேலையை செய்ய இவர்களிடம் ஏன் பயப்பட வேண்டும் வழிந்து கொண்டு இருக்க வேண்டும். அதற்காக அவர்களை மதிக்க வேண்டாம் என்கிற ரீதியில் கூறவில்லை. இயல்பாக இருக்க வேண்டியது தானே என்று கேட்கிறேன். நம் தன்மானத்தை ஏன் விட்டு தர வேண்டும்.

வெளிநாட்டில் இருந்து ஒரு கடை நிலை ஊழியர் வருகிறார், மற்றும் கோவையில் இருந்து ஒரு மிக உயர் அதிகாரி வருகிறார் என்றால் நம்மவர்கள் வெள்ளை தோல் காரர் என்பதால் அவரை தான் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்களே தவிர இவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். ஏன் இந்த பாகுபாடு? அவரிடம் கடலை போடுவதை பெருமையாக கருதுவார்கள், அவர் எனக்கு நண்பர் என்று கூறுவதில் பெருமிதம் அடைவார்கள், அந்த நபர் அங்கு சென்று ஒரு மின்னஞ்சலும் அனுப்பி விட்டால் போதும் இவங்க மற்றவர்களிடம் பண்ணுற அலப்பறை தாங்காது. அவருடன் நட்பு பாராட்டுவது தவறில்லை,ஒரு பெருமைக்காக செய்தால் அதை என்னவென்று சொல்வது.

இதே நம்மவர்கள் கறுப்பர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தால் கண்டுக்க மாட்டார்கள், ஒரு இளக்காரமான நிலை தான் காணப்படும். நம்மவர்களே இப்படி ஒரு இனவெறி காட்டும் போது, வெள்ளை தோல் காரர்கள் கருப்பர்களை மதிக்காமல் இருந்ததில் எனக்கு ஆச்சர்யம் இல்லை. நீங்கள் அலுவலகம் என்றெல்லாம் கவனிக்க தேவையில்லை, வெள்ளை தோல் காரர்களை பேருந்திலோ அல்லது அவர்கள் நம் மக்கள் அருகில் உட்கார்ந்தாலோ போதும் அவர்களுக்கு பெருமை பிடிபடாது, அப்படியே குளிர்ந்து விடுவார்கள். இதே கறுப்பர் அருகில் அமர்ந்தால் வெறுப்பின் உச்சிக்கே சென்று விடுவார்கள், அல்லது ஒரு நக்கலான பார்வை முகத்தில் இருக்கும்.

கருப்பான தோல் என்றால் அப்படி என்ன இளக்காரம்? அவர்கள் எதில் குறைந்து விட்டார்கள்? எந்த விதத்தில் அவர்கள் தாழ்ந்து விட்டார்கள்? நாம் கருப்பு மற்றும் அடிமை பட்டு இருந்தோம் என்ற எண்ணம் மேலோங்கியே தாழ்வு மனப்பான்மையில் வெள்ளை தோல்காரர்களிடம் மிக பணிவாக இருக்கிறோம்(வேறு காரணம் உங்களுக்கு தெரிந்தால் கூறலாம்), இந்நிலையில் கருப்பர்களை (நீக்ரோ) பார்த்து நாம் கேவலமாக கருதுவதை நினைத்து சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.

மனிதர்களை மனிதர்களாக பார்க்காமல் அவர்களின் தோல் நிறம் கொண்டு மதிப்பு தரும் நிலை என்று மாறுமோ!

No related posts.

{ 49 comments… read them below or add one }

சரவணகுமரன் June 30, 2008 at 12:49 PM

//வெள்ளை தோல் காரர்களை பேருந்திலோ அல்லது அவர்கள் நம் மக்கள் அருகில் உட்கார்ந்தாலோ போதும் அவர்களுக்கு பெருமை பிடிபடாது, அப்படியே குளிர்ந்து விடுவார்கள். இதே கறுப்பர் அருகில் அமர்ந்தால் வெறுப்பின் உச்சிக்கே சென்று விடுவார்கள்

உண்மை

Reply

நிஜமா நல்லவன் June 30, 2008 at 12:54 PM

///மனிதர்களை மனிதர்களாக பார்க்காமல் அவர்களின் தோல் நிறம் கொண்டு மதிப்பு தரும் நிலை என்று மாறுமோ!///

இதே கேள்வி தான் எனக்கும்:)

Reply

கிரி June 30, 2008 at 1:10 PM

உங்கள் வருகைக்கு நன்றி சரவணகுமரன் நிஜமா நல்லவன்

Reply

வெங்க்கி June 30, 2008 at 1:26 PM

கிரி,

உங்க நைனா .. சிங்கப்பூர் ல சீனனை பார்த்து மரியாதை கொடுத்து உங்களுக்கு..ஏன்யா காண்டு…. அவர் அந்த மாதிரி செய்தது.. அய்யா அவர்களின் பெருந்தன்மையை காட்டுகிறது..

மேலும் , வெள்ளைக்காரன் மேல் எனக்கு மரியாதை உண்டு..அவன் என்னை மதிப்பதானால்.. மட்டுமே..

உங்களுக்கே தெரியும் நான் எங்கே வசிக்கிறேன் என்று.. நான் கண்டவரை..வெள்ளையனை விட கருப்பர்களே..(நீக்ரோக்கள்) மேல்.. குணத்தில், மனத்தில்..

350 வருடம் வெள்ளையன் நம்மை ஆண்டதால் நமக்குள்ளே அந்த மரியாதையை.. (அதாவது.. வெள்ளையனை கண்டால் சலாம் போடுவது) விதைத்து விட்டு போய் விட்டார்கள்.. மாறுவதற்கு சில காலம் ஆகலாம்.. எனவே, இதெல்லாம் பாத்துட்டு ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க.. பிடிக்கலேன்னா கண்ணை மூடிக்குங்க..

Reply

dondu(#11168674346665545885) June 30, 2008 at 1:33 PM

அதுவும் போன ஆண்டு ஒரு ஜெர்மானியருக்கு துபாஷியாக சென்றபோது அவர் எந்தப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றார் என்று கேட்டதற்கு, மிகவும் கூச்சத்துடன், “உங்கள் அளவுக்கு எல்லாம் படித்து நான் பட்டம் பெறவில்லை, வெறுமனே ஒரு மேஸ்திரியிடம் பயிற்ச்சியாளனாக சேர்ந்து அடி உதைபட்டு கற்று கொண்டேன்” என்று உண்மை விளம்பினார். ஜெர்மனிலேயே அவருக்கு கோர்வையாக 4 வரிகள் பிழையின்றி எழுத வராது. என்னிடம் தான் ஜெர்மனில் எழுதியதை காட்டி பிழை திருத்தி கொண்டவர் அவர். அதற்காக அவரது தொழில் அறிவை குறைத்து மதிப்பிட முடியாதுதான். என்ன இருந்தாலும் அந்த திறமை போகுமா.

அவருடன் நட்பு பாராட்டிய நான் இந்த விஷயத்தை அந்த தொழிற்சாலையில் உள்ளவர்களிடம் போட்டு கொடுக்கவில்லை என்பது தனி.

நான் இங்கு சொல்ல வருவதே வேறு. தேவையின்றி யாருக்கும் அவர் வெள்ளைக்காரர் என்பதால் மட்டும் மதிப்பு தரக்கூடாது என்பதே.

நம்மை நாமே மதிக்காவிட்டால் எப்படி?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Reply

மங்களூர் சிவா June 30, 2008 at 1:43 PM

ம் நெக்ஸ்ட்டு?

Reply

மங்களூர் சிவா June 30, 2008 at 1:44 PM

ஏன் இவ்ளோ ரென்சன் எதும் கருப்பு பொம்மணாட்டி பஸ்ல பக்கத்துல உக்காந்துருச்சா???

Reply

கிரி June 30, 2008 at 1:51 PM

// கீ – வென் said…
கிரி,
உங்க நைனா .. சிங்கப்பூர் ல சீனனை பார்த்து மரியாதை கொடுத்து உங்களுக்கு..ஏன்யா காண்டு//

நீங்கள் என் பதிவை சரியாக படித்தீர்களா என்று தெரியவில்லை. நான் எங்கே மரியாதை கொடுத்ததை குறை கூறினேன், அளவுக்கதிகமாக கொடுக்காதீர்கள் என்று தான் கூறினேன்..அப்புறம் என் எப்பா மேல எனக்கு என்னங்க காண்டு இருக்க போகுது? :-) )

//வெள்ளைக்காரன் மேல் எனக்கு மரியாதை உண்டு..அவன் என்னை மதிப்பதானால்.. மட்டுமே//

எனக்கு வெள்ளைக்காரன் என்றில்லை யார் என்னை மதிச்சாலும் மரியாதை கொடுக்க நான் தவறுவதில்லை.

//நான் கண்டவரை..வெள்ளையனை விட கருப்பர்களே..(நீக்ரோக்கள்) மேல்.. குணத்தில், மனத்தில்..//

நல்ல மனது உடையவர்கள் அனைத்து இடங்களிலும் இருக்கிறார்கள்.

//350 வருடம் வெள்ளையன் நம்மை ஆண்டதால் நமக்குள்ளே அந்த மரியாதையை.. (அதாவது.. வெள்ளையனை கண்டால் சலாம் போடுவது) விதைத்து விட்டு போய் விட்டார்கள்.. மாறுவதற்கு சில காலம் ஆகலாம்.//

உண்மை தான் ஒத்துக்கொள்கிறேன், காலம் எடுக்கும் தான். வழிமொழிகிறேன்.

//இதெல்லாம் பாத்துட்டு ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க//

என் எண்ணங்களை பகிர்ந்து கொண்டேன் அவ்வளவே, நான் எதற்கு உணர்ச்சி வசப்படவேண்டும். உங்க பின்னூட்டம் தான் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய மாதிரி இருக்கு :-) ))

//பிடிக்கலேன்னா கண்ணை மூடிக்குங்க//

நல்ல வேளை வேற எதாவது சொல்லாம இருந்தீங்க :-) ))))))

Reply

கிரி June 30, 2008 at 1:52 PM

// dondu(#11168674346665545885) said…
தேவையின்றி யாருக்கும் அவர் வெள்ளைக்காரர் என்பதால் மட்டும் மதிப்பு தரக்கூடாது என்பதே.
நம்மை நாமே மதிக்காவிட்டால் எப்படி?//

உண்மை தான். வருகைக்கு நன்றி டோண்டு அய்யா.

Reply

கிரி June 30, 2008 at 1:54 PM

// மங்களூர் சிவா said…
ஏன் இவ்ளோ ரென்சன் எதும் கருப்பு பொம்மணாட்டி பஸ்ல பக்கத்துல உக்காந்துருச்சா???//

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ..

Reply

வெங்க்கி June 30, 2008 at 2:07 PM

//என் அப்பா சிங்கப்பூர் வந்த பொழுது, என் அப்பா இங்குள்ளவர்களிடம் பேசியது மற்றும் அவர்களுக்கு கொடுத்த அதீத மரியாதை, சிரிப்பு மற்றும் பணிவு எனக்கு ரொம்ப அதிகமாகவே தோன்றியது, இது குறித்து என் அப்பாவுடன் எனக்கு வாக்குவாதம் ஏற்பட்டது..//

படிக்கலேன்னு சொல்லுறீங்களே.. மேலே Quote பண்ணி இருக்கேனே அத்த எப்படி எடுத்துக்கிறதாம் ?? .. ஒங்க ஆதங்கம் புரியுது..ஆனா நம்ம Generation மற்றும் நமக்கு அப்பால வரப்போற சந்ததியினர்..இதை சரியா அணுகுவாங்க ன்னு நெனைக்கிறேன்..

ஆனாலும் ஒரு கேள்வி.. வெளிநாட்டுக்காரனை விட நம்ம உள்ளூர் பிசாசுகள் போடும் அட்டகாசம்..ரொம்பவே ஓவர்.. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியன் அலட்டுற மாதிரி உலகத்துல வேற எவனும் அலட்ட, பீத்த, பிலிம் காட்ட மாட்டான்.. (வெள்ளையனையும் சேர்த்து தான் !!) இதுக்கு என்ன சொல்லுறீங்க ?

Reply

வெங்க்கி June 30, 2008 at 2:16 PM

//ஏன் இவ்ளோ ரென்சன் எதும் கருப்பு பொம்மணாட்டி பஸ்ல பக்கத்துல உக்காந்துருச்சா???//

சிவா .. மேட்டர் அது இல்ல.. அவிங்க ஊட்டு தங்கமணி ஊர்ல இல்ல.. அதான் கருப்பு பொம்பள (சிங்கபூரம்மா ??) பக்கத்துல உக்கார்ந்ததுனால லேசா கெடந்து ஆடுது.. கொஞ்சம் பீரை ஊத்தி ..சூட்ட தணிச்சிக்கிட்டுதுன்னா சரியாயிடும்.. :) ))

Reply

கிரி June 30, 2008 at 2:27 PM

//படிக்கலேன்னு சொல்லுறீங்களே.. மேலே Quote பண்ணி இருக்கேனே அத்த எப்படி எடுத்துக்கிறதாம் ?? //

ஹா ஹா ஹா வெங்கி அமைதி அமைதி. நான் கூறியது மொத்த பதிவையும் தான், நீங்க குறிப்பட்டதை மட்டுமல்ல..அதில் நான் மரியாதை கொடுங்க ரொம்ப கொடுக்காதீங்கன்னு தான் கூறி இருக்கிறேன்.

//ஒங்க ஆதங்கம் புரியுது..ஆனா நம்ம Generation மற்றும் நமக்கு அப்பால வரப்போற சந்ததியினர்..இதை சரியா அணுகுவாங்க ன்னு நெனைக்கிறேன்.//

சந்தேகமே வேண்டாம், வழிமொழிகிறேன். நீங்க சொல்வதை கேட்டால் நம்ம கவுண்டர் சொல்வது தான் நினைவுக்கு வருது வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ள கல்வெட்டுல எழுதி அங்கேயே உட்காந்துக்க வேண்டியது தான் :-) ))))))))))

//வெளிநாட்டில் வசிக்கும் இந்தியன் அலட்டுற மாதிரி உலகத்துல வேற எவனும் அலட்ட, பீத்த, பிலிம் காட்ட மாட்டான்.. (வெள்ளையனையும் சேர்த்து தான் !!) இதுக்கு என்ன சொல்லுறீங்க //

வழிமொழிகிறேன்… சொல்ல போனால் இதற்க்கு ஒரு பதிவே போடலாம்..ஏற்கனவே நிறைய பேரு பதிவு போட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன். :-) )))

//சிவா .. மேட்டர் அது இல்ல.. அவிங்க ஊட்டு தங்கமணி ஊர்ல இல்ல.. அதான் கருப்பு பொம்பள (சிங்கபூரம்மா ??) பக்கத்துல உக்கார்ந்ததுனால லேசா கெடந்து ஆடுது.. கொஞ்சம் பீரை ஊத்தி ..சூட்ட தணிச்சிக்கிட்டுதுன்னா சரியாயிடும்.. :) ))//

ஹா ஹா ஹா ஹா இப்ப யாருக்கு பீரை ஊத்தணும்னு தெரியல

Reply

வெங்க்கி June 30, 2008 at 2:34 PM

//கிரி said…
ஹா ஹா ஹா ஹா இப்ப யாருக்கு பீரை ஊத்தணும்னு தெரியல//

நான் தான் ஆபீஸ் லேயே.. தினமும் அடிக்கிறேனே !! இங்கே கூல் ட்ரிங்க்ஸ் மாதிரி தானே அது.. ஆபீஸ் பிரிட்ஜ் லேயே ஸ்டாக்..இருக்கு.. அப்புறம் யாருக்கு ஊத்தணும் :) ))


நீங்க முன்னர் கேட்ட தமிழ் பழமொழிகள் கீழ்கண்ட லிங்க் ல இருக்கு. போயி டவுன்லோட் செஞ்சிக்குங்க..

http://www.esnips.com/doc/33fa329a-7c2e-459b-8973-1363352ec91b/6000-Tamil-Proverbs—Aphorism

Reply

அறிவன்#11802717200764379909 June 30, 2008 at 3:08 PM

//மனிதர்களை மனிதர்களாக பார்க்காமல் அவர்களின் தோல் நிறம் கொண்டு மதிப்பு தரும் நிலை என்று மாறுமோ!
//

இந்த அளவு நொந்துகொள்ளும் நிலை இப்போது இல்லையெனவே நினைக்கிறேன்.
அமெரிக்கர்களே ஒரு ஆப்பிரிக்கன் அமெரிக்கனை பிரசிடெண்ட்டாக ஏற்றுக் கொள்ள முன்வந்து விட்டார்கள்.

அங்கும் இங்கும் நிலவும்(இப்போதும்) வேறுபாடுகள் நம் தாழ்வு மனப்பான்மையினாலேயே வருபவை.ஆயினும் இந்த வேறுபாடுகள் சிங்கப்பூரில் சிங்கப்பூரர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே கூட நடைபெறுவது உண்டு.

என்னுடைய அலுவலக அனுபவத்திலேயே,இந்தியன்தானே என்ற எண்ணத்தில் சற்று கீழ்த்தரமாக நடத்திய என்னுடைய சீன மேலாளரை நான் அதைவிட கீழ்த்தரமாக எதிர்கொண்டேன்;அவன் என்னுடைய இந்திய ஏஜென்ஸி மேலளரிடம்,’அவன் வேலையில் மகா கெட்டிக்காரன்;ஆனால் மிகவும் அர்ரொகண்ட்’ஆன ஆள்’ என்று ரிப்போர்ட் கொடுத்து என் ஒரு வருடத்திய சம்பள உயர்வில் கை வைத்தான்.

போடா ம** என்று சொல்லி விட்டு அடுத்த நிறுவனத்துக்குப் போன எனக்கு,அந்த நிறுவனத்தில் ஐரோப்பியர்களும்,அமெரிக்கர்களும் மிக்க மதிப்புடன்,சக வேலைக்காரன் மற்றும் திறமைசாலி என்ற நோக்கிலேயே பழகினார்கள்;சொல்லப்போனால் நல்ல மதிப்பளித்தார்கள்!

வெள்ளையர்கள் இப்போதைய காலகட்டத்தில் திறனையே பார்க்கிறார்கள்;நிறத்தை அல்ல.

நம்மவர்கள் திறனை மேம்படுத்திக் கொள்ளாமல்,நிறக் காரணங்கள் சொன்னால் அது பேதமையே.

Reply

♠புதுவை சிவா♠ June 30, 2008 at 4:16 PM

கிரி நண்பா
உங்கள் கருத்து நான் ஏற்க முடியாது
எனது அலுவலகத்தில் எனது கட்டுப்பாட்டில் 5 வெள்ளையர்
வேலை செய்கிறார்கள் அதில் இருவர் என்னை விட
வயதில் பெரியவர் ஓர் உயர் அதிகாரிக்கு தர வேண்டிய
அனைத்து மரியாதையும் அவர்கள் தவறு செய்யும் போது
எனது A|C அறையில் அவர்களுடைய பயத்துடன் கூடிய
வியர்வை முகத்தை காணலம்.
இங்கு நிறம் தகுதி இல்லை நல்ல வேலை திறனே!!

புதுவை சிவா.

Reply

கிரி June 30, 2008 at 5:03 PM

// அறிவன்#11802717200764379909 said…
இந்த அளவு நொந்துகொள்ளும் நிலை இப்போது இல்லையெனவே நினைக்கிறேன்.
அமெரிக்கர்களே ஒரு ஆப்பிரிக்கன் அமெரிக்கனை பிரசிடெண்ட்டாக ஏற்றுக் கொள்ள முன்வந்து விட்டார்கள்.//

உண்மை தான் அறிவன். நான் இல்லை என்று கூறவில்லை, அனைவரையும் நான் கூறவில்லை, கூறவும் முடியாது.

//வெள்ளையர்கள் இப்போதைய காலகட்டத்தில் திறனையே பார்க்கிறார்கள்;நிறத்தை அல்ல.
நம்மவர்கள் திறனை மேம்படுத்திக் கொள்ளாமல்,நிறக் காரணங்கள் சொன்னால் அது பேதமையே.//

அறிவன் என்னுடைய பதிவு நாம் அவர்களிடம் மிகவும் இறங்கி போகிறோம் என்பது தானே தவிர, அவர்கள் நம் திறமையை மதிக்கவில்லை என்று கூறவில்லை. நாம் ஏன் அவர்களிடம் தேவைக்கு அதிகமாக பணிந்து போக வேண்டும் என்பதே என் கேள்வி? மற்றபடி அவர்கள் நம் திறமையை மதிக்கவில்லை என்பதல்ல.

தற்போது என் பதிவுகள் உங்களுக்கு புதிய பயர் பாக்ஸ் நிறுவிய பிறகு சரியாக தெரியும் என்று நம்புகிறேன்.

Reply

கிரி June 30, 2008 at 5:19 PM

// siva said…
எனது அலுவலகத்தில் எனது கட்டுப்பாட்டில் 5 வெள்ளையர்
வேலை செய்கிறார்கள் அதில் இருவர் என்னை விட
வயதில் பெரியவர் ஓர் உயர் அதிகாரிக்கு தர வேண்டிய
அனைத்து மரியாதையும் அவர்கள் தவறு செய்யும் போது
எனது A|C அறையில் அவர்களுடைய பயத்துடன் கூடிய
வியர்வை முகத்தை காணலம்//

சிவா நான் நம்மவர்கள் வெள்ளைகாரர்களிடம் மிக பணிந்து போனதையே கூறினேன். அவர்கள் நம்மிடம் சரியாக இருப்பதில்லை என்பதல்ல. நீங்களும் அறிவன் கூறியதையே கூறி இருக்கிறீர்கள்.

//இங்கு நிறம் தகுதி இல்லை நல்ல வேலை திறனே!! //

இது நமக்கு அமையும் மேல் அதிகாரிகள் எவ்வாறு என்பதை பொறுத்து மாறுபடும்.

சிவா நான் பதிவில் கூறியது நம்மை பற்றியே நாம் வெள்ளைகாரர்களிடம் நடந்து கொள்ளும் முறை பற்றியே. வெள்ளைகாரர்கள் நம்மை நடத்தும் முறை பற்றி அல்ல.

உங்கள் வருகைக்கு நன்றி சிவா.

Reply

ராஜ நடராஜன் June 30, 2008 at 5:40 PM

நான் வாரக்கடைசியில் நீண்ட வருச நண்பரின் வீட்டுக்கு ஓசி தீனி திங்க போவதுண்டு.ஒரு அயர்லாந்துகாரன் எல்லா விசயத்தையும் அலசி ஆணி புடுங்குற மனுசன்.அதனால் கதை கேட்பதோடு கதை சொல்வதும் பழக்கம்.அதே பழக்கத்தில் ஒரு அமெரிக்கா காரன் வரும்போதும் ஹலோ சொல்லும் பழக்கத்தில் அவன் முசுடு எனத் தெரிந்தது.எனக்குத் தெரிந்து அமெரிக்கனுக்கு ஒட்டாத முசுடுத்தனம்.கூட இருந்த நம்ம ஊர் பீட்டரு (ஆங்கிலோ இந்தியன்)மச்சா இவனுக்கு சலாம் கூட சொல்லக்கூடாதுன்னு முடிவு கட்டி வரும்போதெல்லாம் துன்றதுக்கு ஏதாவது வேணுமான்னு கூட கேட்பதில்லை.இத்தாலியன் ஒருவனிடம் ஒரு வருசம் குப்பை கொட்டும்போது ஹாய் மேன் கம் வித் மின்னு சுமார் 30 கி.மீட்டருக்கு கதை சொல்லிகிட்டு வண்டி ஓட்டுவான்.மொழி என்ற துணை இருக்கும் போது மேல் நாட்டான் நம்மள சமமாகவே பாவிக்கிறான்.

Reply

கிரி June 30, 2008 at 6:06 PM

பின்னூட்டம் இடுபவர்கள் அனைவரும் மேலை நாட்டினரை பற்றியே கூறுகிறீர்கள். நான் பதிவில் கூறியது நாம் நடந்து கொள்ளும் முறை பற்றியே.

உங்கள் வருகைக்கு நன்றி ராஜ நடராஜன்.

Reply

புரட்சித் தமிழன் June 30, 2008 at 6:12 PM

நம்ம மக்களுக்கு நம்மீதே நம்பிக்கையில்லை நாம் கண்டிப்பாக வெள்ளைகாரார்களை விட அறிவில் குறைவாகத்தான் இருப்போம் என்ற எண்ணம். ராக்கெட்ட கண்டுபிடிச்சது யாருன்னு கேட்டா அது யாரவது ஒரு வெளி நாட்டுகாரனா இருக்கும்னு சொல்லிட்டு போய்டுவோம். ஆனா ராக்கெட்ட கண்டுபிடிச்சது திப்பு சுல்த்தான்னு சொன்னா யாராவது நம்புவாங்களா அது அப்படித்தான் நம்மை பற்றி நமக்கே இலக்காரம்.

Reply

முகுந்தன் June 30, 2008 at 6:26 PM

எனக்கு தெரிந்து இந்தியர்களிடம் தான் இந்த குணம் உள்ளது,இது ரொம்ப தவறு.
எதோ ஒரு படத்தில் பிரசன்னா நவ்யா நாயரிடம் சொல்லுவார்
“இங்கிலாந்தில் டாய்லெட் கழுவுறவன் கூட இங்கலிஷ் தான் பேசுவான் என்று”
எவ்வளவு உண்மை…..

Reply

VIKNESHWARAN June 30, 2008 at 6:30 PM

இதற்கு ஒரு வழி இருக்கிறது….

கையடக்கப் பேசியின் மேலுரையை மாற்றுவது போல் நாம் நமது உடலை மாற்றிக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்..

Reply

கிரி June 30, 2008 at 6:58 PM

// புரட்சித் தமிழன் said…
நம்ம மக்களுக்கு நம்மீதே நம்பிக்கையில்லை நாம் கண்டிப்பாக வெள்ளைகாரார்களை விட அறிவில் குறைவாகத்தான் இருப்போம் என்ற எண்ணம்.//

இது தற்போது குறைந்து வருகிறது என்று நினைக்கிறேன்.

உங்கள் முதல் வருகைக்கு நன்றி புரட்சி தமிழன்

Reply

கிரி June 30, 2008 at 7:05 PM

// முகுந்தன் said…
எனக்கு தெரிந்து இந்தியர்களிடம் தான் இந்த குணம் உள்ளது,இது ரொம்ப தவறு.//

அவர்களிடம் அடிமையாக இருந்த நாடுகள் அனைத்திலும் இவ்வாறு தான் இருக்க வேண்டும், மற்றும் ஏழைகள் அதிகம் உள்ள நாடுகள் வேறு வழி இல்லாமல் இவ்வாறு இருக்கலாம்.

———————————–

// VIKNESHWARAN said…
இதற்கு ஒரு வழி இருக்கிறது….
கையடக்கப் பேசியின் மேலுரையை மாற்றுவது போல் நாம் நமது உடலை மாற்றிக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்..//

விக்னேஸ்வரன் உடலை மாற்றி என்ன பயன்? நம் எண்ணங்கள் மாறாதவரை :-) ))

உங்கள் வருகைக்கு நன்றி முகுந்தன் விக்னேஸ்வரன்

Reply

சினிமா நிருபர் June 30, 2008 at 8:32 PM

//பணிவு வேறு அதீத பணிவு வேறு. அலுவலகத்தில் நாமும் பணி புரிகிறோம் நம்மை போலவே அவர்களும் வேறு ஒரு ஊரில் பணி புரிகிறார்கள், இதில் என்ன அவர்கள் உயர்ந்து விட்டார்கள்? நாம் ஏன் அவர்களுக்கு பயந்து இருக்க வேண்டும். நாம் நம் வேலையை செய்ய இவர்களிடம் ஏன் பயப்பட வேண்டும் வழிந்து கொண்டு இருக்க வேண்டும்//

என்னை கவர்ந்த வரிகள்…!

Reply

Thekkikattan|தெகா June 30, 2008 at 10:48 PM

கிரி,

இங்கே இன்னொரு விளம்பரத் தட்டி வைச்சிட்டுப் போறேன். ஏன்னா,

நீங்க கேட்ட லைன்லேயே நானும் ஒரு அனுபவத்தை எழுதி… அங்கே அடிதடியே நடந்திருக்கும் பாருங்க, கிட்டத்தட்ட ஒரே கேள்விதான் :-) .

பதிவு இங்கே குளிர்சாதன வசதியிருக்கு உள்ளே வராதே…!

Reply

வடகரை வேலன் July 1, 2008 at 1:33 AM

கிரி,

இது நமது மனதில் விதைக்கப்பட்ட ஒன்றுதான்.

எனது தாத்தா காலத்தில் எங்கள் குடும்பத்திற்கு ஏவலாளாக வேலை பார்த்த சுந்தரம் இன்னும் என்னைக் கண்டால் நேருக்கு நேர் நின்று பேசுவதில்லை.

ஆனால் சுந்தரத்தின் பேரன், என் வயதினன் மேலும் படித்தவனாகையால் மிக இயல்பாக என்னுடம் பேசிப் பழகுகிறான்.

மாறுவதற்கு காலம் பிடிக்கும். மாற வேண்டும்.

Reply

கிரி July 1, 2008 at 7:06 AM

//Thekkikattan|தெகா said…
கிரி,
இங்கே இன்னொரு விளம்பரத் தட்டி வைச்சிட்டுப் போறேன். ஏன்னா,
நீங்க கேட்ட லைன்லேயே நானும் ஒரு அனுபவத்தை எழுதி… அங்கே அடிதடியே நடந்திருக்கும் பாருங்க, கிட்டத்தட்ட ஒரே கேள்விதான் :-) .//

ஆமாங்க தெகா உங்கள் பதிவை படித்தேன். அதில் நடந்த கருத்து மோதல்களும் சிறப்பாக இருந்தது. அதை படித்த போது, நான் எண்ணி இருந்த சில எண்ணங்கள் தவறு என்று புரிந்தது, எனக்கு தோன்றாத பல விஷயங்கள் பல அங்கு விவாதிக்கப்பட்டு இருந்தது.

இவ்வாறு பதிவு எழுதுவது நம் எண்ணங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் வேளையில், மற்றவர்களிடம் இருந்து வரும் பல கருத்துக்கள் நமக்கு உபயோகமானதாகவும் நாம் சரி அல்லது தவறு நினைக்கும் கருத்துக்கு மாற்று பதில் கிடைப்பதற்கும் உபயோகமாக உள்ளது.

எனவே உங்கள் பதிவில் நடந்தது போல பல நல்ல விவாதங்கள் (நாகரீகமாக)தொடர வேண்டும் என்பதே என் ஆவல்

உங்கள் வருகைக்கு நன்றி தெகா.

Reply

கிரி July 1, 2008 at 7:13 AM

// வடகரை வேலன் said…
கிரி,
இது நமது மனதில் விதைக்கப்பட்ட ஒன்றுதான்.//

நீங்கள் கூறுவதை மாற்று கருத்து இல்லாமல் ஒத்துக்கொள்கிறேன் என்பதிவிலும் அதை கூறி இருப்பேன்.

//சுந்தரத்தின் பேரன், என் வயதினன் மேலும் படித்தவனாகையால் மிக இயல்பாக என்னுடம் பேசிப் பழகுகிறான்.//

சரியாக கூறினீர்கள். இதே அனுபவம் எனக்கும் உண்டு.

//மாறுவதற்கு காலம் பிடிக்கும். மாற வேண்டும்//

உண்மை தான், வெங்கி சொன்னது போலவும் நீங்கள் கூறியது போலவும், நம் ரத்தத்திலேயே ஊறி விட்டது எனவே இது மாற கண்டிப்பாக நீண்ட காலம் பிடிக்கும்.

சுருங்க கூறினாலும் தெளிவாக கூறினீர்கள். இனி வரும் தலைமுறைகள் சரியாக இருப்பார்கள் என்று கருதுகிறேன்.

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வடகரை வேலன்.

Reply

வெங்க்கி July 1, 2008 at 8:25 AM

கிரி..

சரியா சொல்ல போனா..நமக்கு ஆப்பு வெக்கிறது நம்ம ஆட்களே !! இந்தியர்கள் (முக்கியமாக தமிழர்கள்..எல்லோரும் அல்ல.. குறைந்தது 50% பேர்) சுய நாகரீகம் தெரியாதவர்களே.. வெளி நாட்டில் வசிப்போருக்கு இந்த வலி புரியும்.. (முக்கியமாக USA, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, UK) கீழே பாருங்க நம்ம மக்களோட பொன் போன்ற குணங்களை தொகுத்து கொடுத்திருக்கேன்..

** ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டால் பரஸ்பரம் ஒரு புன்னகை கூட கிடையாது..
** தமிழனுக்கு தமிழனே விரோதி..(ஒருவன் வாழ்ந்தால் மற்றொருவனுக்கு காண்டு) இது மற்ற இந்தியர்களுக்கும் பொருந்தும்..ஒரு வகையில்..
** பொது இடங்களில் நம் இனத்தவரை சில்லறைத்தனமாக நடத்துவது.. வேற்று நாட்டவனுக்கோ , இனத்தவனுக்கோ விழுந்து விழுந்து செய்யும் உபசரிப்பில் 10% கூட நம் சகோதரர்களுக்கு கிடையாது..
** எப்போதும் நல்லவர்களை கூட சந்தேகக்கண்ணுடன் பார்ப்பது.. (நம் மக்களை மட்டும்..வெள்ளைக்காரன் எப்படிப்பட்ட அயோக்கியனாக இருந்தாலும் அவனுக்கு சூப்பர் உபசரிப்பு)
** ஆதாயம் இருந்தால் மட்டும் நம்மவர்களிடம் பேச்சு கொடுப்பது.. (எச்சை சொத்துக்கு அலையும் நாய் போல..வெள்ளைக்காரனிடம், அவன் எப்படிப்பட்ட குணத்தவனாக இருந்தாலும் வழிவது..)
** அடுத்தவனை பொறுத்த மட்டில் அவன் செருப்புக்கு சமம் (ஒன்லி இந்தியர்களாக இருந்தால்..) வெள்ளைக்காரனுக்கு மட்டும் சொம்பு தூக்கி ..சலாம் போடணும்..

இவர்கள் மாற பல நூறு ஆண்டுகள் ஆகலாம்.. ஒன்று மட்டும் சொல்கிறேன்.. இந்த பதிவை படிப்பவர்கள்.. நீங்களாவது மாறுங்கள்.. சுய கௌரவத்துடன் வாழுங்கள்.. அடிமைத்தனத்துக்கு அடி பணியாதீர்கள்.. இந்த மாதிரி நடக்கும் நம்ம இன நாய்களை கண்டால் கண்ட இடத்திலேயே காறி துப்புங்கள்..அப்போதாவது திருந்துகிறார்களா என்று பார்ப்போம்..

ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா கண்ண கட்டுதே !! கிரி .. சோடா குடு..

Reply

கோவி.கண்ணன் July 1, 2008 at 8:54 AM

கிரி ஐயா,

நம்ம இந்தியர்கள் மட்டுமல்ல…
சீனர்கள் கூட ‘அம்மோ’ என்றால் வழிவார்கள். தோல் வெள்ளையாக இருப்பதால் மதிப்பு போல் இருக்கு.

தலை வெள்ளையானால் மட்டும் தான் நம்ம ஆளுங்க வெள்ளையைப் பற்றி கவலைப்படுவாங்க.

Reply

கிரி July 1, 2008 at 9:31 AM

//சரியா சொல்ல போனா..நமக்கு ஆப்பு வெக்கிறது நம்ம ஆட்களே //

உண்மை தான். இந்த விசயத்துல தெலுங்கு காரங்க பரவாயில்ல.

//ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டால் பரஸ்பரம் ஒரு புன்னகை கூட கிடையாது//

கேள்வி பட்டு இருக்கிறேன்

//பொது இடங்களில் நம் இனத்தவரை சில்லறைத்தனமாக நடத்துவது.. வேற்று நாட்டவனுக்கோ , இனத்தவனுக்கோ விழுந்து விழுந்து செய்யும் உபசரிப்பில் 10% கூட நம் சகோதரர்களுக்கு கிடையாது.. //

உண்மை தான். ஆனால் நம்மவர்களும் அதற்க்கு சளைத்தவர்கள் இல்லை என்று மிக கேவலமாக நடந்து கொள்வார்கள்.

//எப்போதும் நல்லவர்களை கூட சந்தேகக்கண்ணுடன் பார்ப்பது.. (நம் மக்களை மட்டும்..வெள்ளைக்காரன் எப்படிப்பட்ட அயோக்கியனாக இருந்தாலும் அவனுக்கு சூப்பர் உபசரிப்பு)//

:-) )))

//ஆதாயம் இருந்தால் மட்டும் நம்மவர்களிடம் பேச்சு கொடுப்பது.. //

இப்படி எல்லாம் போட்டு உடைக்க கூடாது :-) )

//இவர்கள் மாற பல நூறு ஆண்டுகள் ஆகலாம்.. //

இந்த லிஸ்ட் ல நானும் இருக்கிறேன், கொஞ்சம் கொஞ்சமாக மாறி கொண்டு இருக்கிறேன்

//சுய கௌரவத்துடன் வாழுங்கள்.. //

சரியா சொன்னீங்க… என் வோட் உங்களுக்கே :-)

//ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா கண்ண கட்டுதே !! கிரி .. சோடா குடு//

இந்தாங்க சோடா ! :-) ))))))))

வெங்கி! நீங்க இதற்கெல்லாம் சோடா கேட்க கூடாது..இன்னும் இந்த மாதிரி இரண்டு பதிவு போடுவோம் ..எதோ நம்மால முடிஞ்சது நாலு பேரை டென்ஷன் ஆக்குவோம். அதற்க்கு உங்கள் துணை அவசியம் :-) )

நாலு பேரு டென்ஷன் ஆகனும்னா தப்பில்ல எதுவுமே தப்பில்ல

(பின்னணியில் நாயகன் இசை :-) ) )

Reply

கிரி July 1, 2008 at 9:37 AM

//கோவி.கண்ணன் said…
கிரி ஐயா,
நம்ம இந்தியர்கள் மட்டுமல்ல…
சீனர்கள் கூட ‘அம்மோ’ என்றால் வழிவார்கள். தோல் வெள்ளையாக இருப்பதால் மதிப்பு போல் இருக்கு//

ஒய் ப்ளெட் சேம் ப்ளெட் :-) )

//தலை வெள்ளையானால் மட்டும் தான் நம்ம ஆளுங்க வெள்ளையைப் பற்றி கவலைப்படுவாங்க.//

ஹா ஹா ஹா ஹா ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

கோவி கண்ணன் சைக்கிள் கேப்ல ஒரு சிரிப்பு வெடிய தூக்கி போட்டுட்டு போய்டறீங்க :-) ))))

Reply

வெங்க்கி July 1, 2008 at 9:41 AM

யோவ்.. இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதி இருக்கேன்.. மொக்கை பதிலா போடுறியே.. கூட மியூசிக் வேற.. அய்யோ..அய்யோ.. இது சீரியஸ் ஆனா பதிவு.. இத மொக்கை ஆக்கிடாதே..

Reply

வெங்க்கி July 1, 2008 at 9:46 AM

//கோவி.கண்ணன் said…

கிரி ஐயா,

நம்ம இந்தியர்கள் மட்டுமல்ல…
சீனர்கள் கூட ‘அம்மோ’ என்றால் வழிவார்கள். தோல் வெள்ளையாக இருப்பதால் மதிப்பு போல் இருக்கு.//

கோவி..

இதுக்கு பின்னால ஒரு பெரிய கதையே இருக்கு.. சீன பெண்களுக்கு வெள்ளைக்காரன் மாதிரி குழந்தை பெதுக்கனும்னு ஆசை அதிகம்.. அதாவது கோவேறு கழுதை லுக் ல..எனவே சீன பெண்கள் வெள்ளைக்காரன் பின் அதிகம் அலைவது உண்டு.. இப்போதைக்கு இவ்வளவு தான் சொல்ல முடியும்.. அடுத்த சிங்கை வலை பதிவர் சந்திப்பு நடந்தா நெறையா சொல்லுறேன்..

Reply

ராமலக்ஷ்மி July 1, 2008 at 9:57 AM

எல்லாம் சரிதான் கிரி.

//மனிதர்களை மனிதர்களாக பார்க்காமல் அவர்களின் தோல் நிறம் கொண்டு மதிப்பு தரும் நிலை என்று மாறுமோ!//

இதற்கு வெளிநாடு வரை போவானேன்? நம்ம நாட்டில அங்கவைக்கும் சங்கவைக்கும் என்ன மரியாதை இருக்கு? எதிர்ப்புகளையும் மீறி ‘தோல் சிவந்தால் வாழ்வு சிறக்கும்’ எனத் தொடர்கின்ற விளம்பரங்களை என்ன செய்ய?

Reply

கிரி July 1, 2008 at 9:58 AM

//கீ – வென் said…
யோவ்.. இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதி இருக்கேன்.. மொக்கை பதிலா போடுறியே.. கூட மியூசிக் வேற.. அய்யோ..அய்யோ.. இது சீரியஸ் ஆனா பதிவு.. இத மொக்கை ஆக்கிடாதே//

சீரியஸ் பதிவு தாங்க..ரொம்ப சீரியஸா போனா அப்புறம் வேற மாதிரி ஆகிடும். :-) )

பாருங்க உங்க அனைத்து கேள்விக்கும் சரியா தானே பதில் கூறி இருக்கிறேன். வேணா அந்த மியூசிக் ஐ நிறுத்திடுவோம் :-)

Reply

கிரி July 1, 2008 at 10:18 AM

//ராமலக்ஷ்மி said…
எல்லாம் சரிதான் கிரி.
இதற்கு வெளிநாடு வரை போவானேன்? நம்ம நாட்டில அங்கவைக்கும் சங்கவைக்கும் என்ன மரியாதை இருக்கு?//

வெளிநாடு மட்டும் கூறவில்லை, நம் ஊரில் நடப்பதையே கூறினேன். இங்கே பெண் பார்க்கும் போதே பொண்ணு அல்லது பய்யன் நல்ல சிவப்பா என்று தானே முதலில் கேட்கிறார்கள்? நீங்கள் கூறுவதை ஒத்துக்கொள்கிறேன். நம் ஊரிலே சிவப்புக்கு எப்போதும் ஒரு தனி மதிப்பு தான்.

விஜய் டிவி யில் நீயா நானாவில் தமிழ் நாட்டு காரங்க மற்றும் வெளி மாநிலத்து காரங்க விவாதம் நடை பெற்றபோது. ஒரு பொண்ணு தமிழ் நாட்டு காரனுகன்னா கருப்பனுக அழகா இருக்க மாட்டாங்க ன்னு கூறினார்.

நம் ஊரிலேயே சிவப்பு தோலுக்கு தான் மரியாதை.

//எதிர்ப்புகளையும் மீறி ‘தோல் சிவந்தால் வாழ்வு சிறக்கும்’ எனத் தொடர்கின்ற விளம்பரங்களை என்ன செய்ய?//

பேர் அண்ட் லவ்லி விளம்பரத்தை கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன். இது குறித்து சர்ச்சை எழுந்து அந்த விளம்பரத்துக்கு தடை வந்தது. அதில் சிவப்பானால் மட்டுமே வேலை கிடைக்கும் என்று இவர்களை போன்றவர்களை மிக கேவலப்படுத்தி வந்தது.

அரசு தான் இதை போல செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். அப்போது தான் இதை போல விளம்பரங்கள் வராது. தங்கள் பொருளை விளம்பரப்படுத்த பல வழிகள் இருக்கும் போது என் எல்லோரும் இந்த முறையே பின் பற்றுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

உங்கள் தொடர் வருகைக்கு நன்றி, சமீபத்தில் உங்கள் பதிவு எதையும் காணோமே.

Reply

ராமலக்ஷ்மி July 1, 2008 at 11:24 AM

தங்கள் விளக்கத்துக்கு நன்றி கிரி.

//சமீபத்தில் உங்கள் பதிவு எதையும் காணோமே.//

பதிவுதானே. இன்றைக்குள் போட்டால் போச்சு:)!

Reply

மருதநாயகம் July 1, 2008 at 6:52 PM

கிரி, நானும் உங்களை போன்ற கருத்து கொண்டிருந்தேன் ஜப்பானியர்களை பார்க்கும் வரை. ஜப்பானியர்களுடன் பேசி இருந்தால் அவர்கள் கொடுக்கும் அதீத மரியாதை நம்மை புல்லரிக்க வைக்கும். போதும்டா போதும்டா என்று சொல்லுகிற அளவுக்கு மரியாதை செய்வார்கள். அதற்காக அது தாழ்வு மனப்பாண்மை ஆகாது

Reply

கிரி July 1, 2008 at 7:24 PM

//மருதநாயகம் said…
கிரி, நானும் உங்களை போன்ற கருத்து கொண்டிருந்தேன் ஜப்பானியர்களை பார்க்கும் வரை. ஜப்பானியர்களுடன் பேசி இருந்தால் அவர்கள் கொடுக்கும் அதீத மரியாதை நம்மை புல்லரிக்க வைக்கும். போதும்டா போதும்டா என்று சொல்லுகிற அளவுக்கு மரியாதை செய்வார்கள். அதற்காக அது தாழ்வு மனப்பாண்மை ஆகாது//

சந்தேகமே வேண்டாம், நானும் இதை ஒத்துக்கொள்கிறேன்.

ஜப்பானியர்கள் எல்லோருக்குமே அப்படி தான் மரியாதை கொடுப்பார்கள் அது அவர்கள் ஊர்க்காரராக இருந்தாலும் இந்தியனாக இருந்தாலும் அமெரிக்கனாக இருந்தாலும் அல்லது ஆப்ரிக்கா காரனாக இருந்தாலும்.

நம்மவர்கள் அப்படி இல்லையே..அது தானே பிரச்சனை. நம்மவர்களும் அனைவருக்கும் வித்யாசம் காட்டாமல் அப்படி இருந்தால் பிரச்சனை இல்லையே.

சரி என்ன ஜப்பான் ல இருந்தீங்களா? சாப்பாடெல்லாம் எப்படி சமாளிச்சீங்க. அங்கே இது பெரிய பிரச்சனை ஆச்சே :-) நண்பர்கள் கூற கேட்டு இருக்கிறேன்.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மருதநாயகம்.

Reply

பெத்தராயுடு July 1, 2008 at 8:21 PM

//சீன பெண்களுக்கு வெள்ளைக்காரன் மாதிரி குழந்தை பெதுக்கனும்னு ஆசை அதிகம்.. அதாவது கோவேறு கழுதை லுக் ல..எனவே சீன பெண்கள் வெள்ளைக்காரன் பின் அதிகம் அலைவது உண்டு.. இப்போதைக்கு இவ்வளவு தான் சொல்ல முடியும்.. //

The reason is common for South and East Asia, though it cannot be told openly in public.

Interesting topic: Top dusky models of India

http://specials.rediff.com/getahead/2008/jun/25sld1.htm

Reply

கிரி July 1, 2008 at 8:37 PM

வாங்க பெத்தராயுடு

இதை படிக்கும் பொது ரொம்ப சந்தோசமாக தான் இருக்கிறது..ஆனால் இவரை போல ஒரு சிலரை வைத்து நாமும் ஒரு முடிவுக்கு வர முடியாது.

கருப்பும் அழகு தான், பின்னாளில் இந்த எண்ணங்கள் கண்டிப்பாக மாறும், மேலை நாடுகளை போல.

நம் ஊரில் சிவப்பாக இருப்பவர்கள் ரொம்ப சிரம பட தேவையில்லை, ஆனால் கறுப்பாக இருப்பவர்கள் தங்களின் உடல் அமைப்பு முக அமைப்பு அனைத்தும் கவர்ச்சியாக இருந்தால் மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்.

தங்கள் வருகைக்கு நன்றி.

Reply

மருதநாயகம் July 2, 2008 at 4:37 PM

//சரி என்ன ஜப்பான் ல இருந்தீங்களா? சாப்பாடெல்லாம் எப்படி சமாளிச்சீங்க. அங்கே இது பெரிய பிரச்சனை ஆச்சே :-) நண்பர்கள் கூற கேட்டு இருக்கிறேன்//

நான் ஜப்பானுக்கு எல்லாம் சென்றது கிடையாது. சிங்கப்பூரிலேயெ தான் நிறைய ஜப்பானியர்கள் வேலை செய்கிறார்களே

உங்களுக்கு சாப்பட்டுக்கு பிரச்சினை இருக்காது என்று நினைக்கிறேன். சிக்னேச்சர் பில்டிங்கில் இருக்கும் ஜக்கீஸ் அல்லது மதுரிமாவில் தான் சாப்பிடுகிறீர்களா?

Reply

கிரி July 2, 2008 at 5:40 PM

// மருதநாயகம் said…
நான் ஜப்பானுக்கு எல்லாம் சென்றது கிடையாது. சிங்கப்பூரிலேயெ தான் நிறைய ஜப்பானியர்கள் வேலை செய்கிறார்களே//

ஒ! நீங்க சிங்கையில் தான் இருக்கீங்களா?

//உங்களுக்கு சாப்பட்டுக்கு பிரச்சினை இருக்காது என்று நினைக்கிறேன். சிக்னேச்சர் பில்டிங்கில் இருக்கும் ஜக்கீஸ் அல்லது மதுரிமாவில் தான் சாப்பிடுகிறீர்களா?//

கில்லாடியா இருக்கீங்க! ஆமா நான் CBP ல தான் இருக்கேன். ஜக்கீஸ் மொக்கையா இருக்குங்க…நான் “பல்லே பல்லே” ல :-) ))) தான் சாப்பிடுவேன்..அங்கே கொஞ்சம் சுமாரா இருக்கும் ..அந்த கடை சிங் நல்லா பழகுவாரு…

அம்மா இங்க தான் இருக்காங்க அதனால சாப்பாட்டுக்கு பிரச்சனை இல்லை..

Reply

மருதநாயகம் July 2, 2008 at 6:23 PM

//ஒ! நீங்க சிங்கையில் தான் இருக்கீங்களா?//

இருந்தேன். கோவி அண்ணா எல்லாம் அப்போது தான் பழக்கம்.

Reply

அறிவன்#11802717200764379909 July 14, 2008 at 8:03 PM

//அறிவன் என்னுடைய பதிவு நாம் அவர்களிடம் மிகவும் இறங்கி போகிறோம் என்பது தானே தவிர, அவர்கள் நம் திறமையை மதிக்கவில்லை என்று கூறவில்லை. நாம் ஏன் அவர்களிடம் தேவைக்கு அதிகமாக பணிந்து போக வேண்டும் என்பதே என் கேள்வி//

மனோதத்துவ ரீதியான ஒரு விதயத்தை நீங்கள் இங்கு மறக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.
நம்முடைய திறனை மதிக்கும் ஒருவரிடம் நாம் எப்போதும் உள ரீதியாகப் பணிந்து போக மாட்டோம்;நமக்கு எதிராளியைப் பற்றிய ஒரு பயம் இருக்கும்போது மட்டுமே,அது திறன் சார்ந்தோ,பலம் சார்ந்தோ,பணம் சார்ந்தோ ஏதோ ஒரு வகையில் நம்மை விட உயர்ந்து இருக்கும் போதுதான் அவர்களின் மீது தோன்றும் பயம்,ஆம்-உளரீதியான பயம்தான்,பணிவாக மாறுகிறது.
ஒருவரைக் கண்டு பயமே இல்லாதபோது எப்படிப் பணிவு வரும்?

அதுவே நான் சுட்டியது.

நிறம் கண்டு பணிவு வரும் என்றால்,அமெரிக்கர்களை விட சில ஜப்பானியர்கள்,சீனர்கள் நிறமுடன் இருப்பார்கள்,அவர்களைக் கண்டு இந்தியர்கள் பணிகிறார்களா?
இல்லையல்லவா? காரணம்,சீனர்கள் இந்தியர்களை விட அறிவுத் திறனில் குறைந்தவர்கள் என்பது அனுபவ பூர்வமாக அறிந்த தெரிந்த உண்மை.

ஆனால் வெள்ளையர்களை நோக்கிய இந்தியர்களின் பணிவு,அவர்கள் நம்மை விட விதயமறிந்தவர்கள்,புத்திசாலிகள் என்ற மனப்பாங்கு இருந்ததாலேயே.அது இப்போது மாறி வருகிறது என்பதைப் பற்றியே என் அனுபவ சம்பவம் குறித்து சுட்டினேன்.

Reply

கிரி July 21, 2008 at 10:20 PM

//ஒருவரைக் கண்டு பயமே இல்லாதபோது எப்படிப் பணிவு வரும்?//

நம்மை நாமே தாழ்மையாக நினைத்தாலும் பணிவு வரும்.

//வெள்ளையர்களை நோக்கிய இந்தியர்களின் பணிவு,அவர்கள் நம்மை விட விதயமறிந்தவர்கள்,புத்திசாலிகள் என்ற மனப்பாங்கு இருந்ததாலேயே.//

அது மட்டும் அல்ல நம்மை அவர்கள் 350 வருடம் செய்ததும் ஒரு காரணம்.

//அது இப்போது மாறி வருகிறது என்பதைப் பற்றியே என் அனுபவ சம்பவம் குறித்து சுட்டினேன்//

கண்டிப்பாக அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். கண்டிப்பாக மாறி வருகிறது. அதற்கு இன்னும் காலம் எடுக்கும்.

உங்கள் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அறிவன்.

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed