இலங்கை தமிழர்கள் பற்றி எனக்கு தோன்றிய சந்தேகங்கள்???

by கிரி on May 14, 2008

எனக்கு நீண்ட நாட்களாக இலங்கை தமிழர்கள் பற்றிய ஒரு சில சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கிறது. சரி வலை பதிவில் கேட்டாலாவது யாரவது சொல்வார்களா என்ற நம்பிக்கையில் கேட்கிறேன். ஏனென்றால் அதிகளவில் இலங்கை தமிழர்கள் வலைப்பதிவுக்கு வருகிறார்கள் மற்றும் வலை பதிவு வைத்து இருக்கிறார்கள். கீழ் கண்ட கேள்விகளுக்கு முடிந்தால் பதில் தர யாராவது முயற்சிக்கவும்.

இலங்கை தமிழர்கள் எப்போது இருந்து அங்கே இருக்கிறார்கள்?

அங்கே அவர்களின் வளர்ச்சி எப்படி அதிகரித்தது?

தமிழர்கள் அனைவரும் புலிகளுடன் தொடர்பு வைத்து இருக்கிறார்களா?

புலிகளுடன் சம்பந்த படாமல் தனியாக வாழ்க்கை நடத்தும் சாதரண பொது மக்கள் இருக்கிறார்களா?

புலிகளுக்கு என்று தனியாக ருபாய் நோட்டு உள்ளதாமே, அதை மற்ற நாடுகளில் பயன்படுத்த முடியுமா?

இலங்கை இராணுவத்தினர் அட்டூழியங்கள் செய்வதாக செய்திகள் வருகின்றனவே, அது பொது மக்களையா அல்லது வீரர்களின் குடும்பத்தினரையா? (ஆண் + பெண்)

தமிழகத்தில் உள்ள தமிழர்களை அவர்கள் விரும்புகிறார்களா?

தமிழர்களின் மக்கள் தொகை இலங்கையில் எவ்வளவு?

சண்டைகள் நடக்கும் போது 50 – 100 பேர் பலி என்று செய்திகள் வரும் போது வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் எப்படி உணருகிறார்கள்?

இலங்கை அரசும் தனி ஈழம் தர மாட்டேன் என்கிறது, புலிகளும் அதை வாங்காமல் விட மாட்டோம் என்கிறார்கள். இதன் முடிவு என்ன?

இப்போதைய மக்களிடம் இது பற்றிய மாறுபட்ட எண்ணங்கள் தோன்றி இருக்கிறதா?

தினமும் 5 – 10 பேர் பலி என்று செய்திகளில் பார்க்கும் போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. உயிரின் மதிப்பு உணராமல் அனைவரும் இருக்கிறார்களா? இல்லை உயிர் விடுபவர்களின் உணர்ச்சி புரியாமல் நாம் பேசுகிறோமா? எனக்கு புரியவில்லை.

மேலே நான் கேட்ட கேள்விகள் அனைத்தும், இலங்கை தமிழர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலில் கேட்டது தான். மற்ற படி வேறு எந்த உள் அர்த்தமும் கிடையாது.

No related posts.

{ 43 comments }

மதுவர்மன் May 14, 2008 at 1:27 PM

நியாயமான கேள்விகள் கிரி,

ஆனால், இவ்வளவு காலமும் எங்கேயிருந்தீர்கள்?

ஏதோ வேறு கிரகத்தில் இருந்து வந்தவர் கேட்பது போன்று இருக்கின்றன பல கேள்விகள்.

இப்போது தானே, தமிழகத்த்தில் ஈழப்பிசச்சினை சம்பந்தமாக ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது.

இன்னொரு பின்னூட்டத்தில் உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்க முயற்சிக்கின்றேன்.

உங்கள் அக்கறை பாராட்டத்தக்கது.

எம்.ரிஷான் ஷெரீப் May 14, 2008 at 1:35 PM

//இலங்கை தமிழர்கள் எப்போது இருந்து அங்கே இருக்கிறார்கள்?//

எனக்குத் தெரிந்து ஆதிகாலத்திலிருந்து.

//அங்கே அவர்களின் வளர்ச்சி எப்படி அதிகரித்தது?//

எல்லா இனத்தவரைப் போலவே தான்.

//தமிழர்கள் அனைவரும் புலிகளுடன் தொடர்பு வைத்து இருக்கிறார்களா?//

இல்லை.

//புலிகளுடன் சம்பந்த படாமல் தனியாக வாழ்க்கை நடத்தும் சாதரண பொது மக்கள் இருக்கிறார்களா?//

ஆமாம்.நிறைய இருக்கிறார்கள்.

//புலிகளுக்கு என்று தனியாக ருபாய் நோட்டு உள்ளதாமே, அதை மற்ற நாடுகளில் பயன்படுத்த முடியுமா?//

அப்படி பிரத்தியேகமான நோட்டு எதுவுமில்லை.

//இலங்கை இராணுவத்தினர் அட்டூழியங்கள் செய்வதாக செய்திகள் வருகின்றனவே, அது பொது மக்களையா அல்லது வீரர்களின் குடும்பத்தினரையா? (ஆண் + பெண்)//

சந்தேகப்படும் படியான தமிழர்கள் அனைவரையும்.அதில் ஆண்,பெண் என்ற பேதம் இல்லை.

//தமிழகத்தில் உள்ள தமிழர்களை அவர்கள் விரும்புகிறார்களா?//

இதிலென்ன சந்தேகம்?

//தமிழர்களின் மக்கள் தொகை இலங்கையில் எவ்வளவு?//

தினம்,தினம் குறைந்து வருகின்றது.
சரியாகக் கணக்கிட எவருமில்லை.

//சண்டைகள் நடக்கும் போது 50 – 100 பேர் பலி என்று செய்திகள் வரும் போது வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் எப்படி உணருகிறார்கள்?//

மிகவும் கவலையுடன் ஆதங்கப்படுகிறார்கள்.

//இலங்கை அரசும் தனி ஈழம் தர மாட்டேன் என்கிறது, புலிகளும் அதை வாங்காமல் விட மாட்டோம் என்கிறார்கள். இதன் முடிவு என்ன?//

இப்பொழுது யுத்தம் நடக்கிறது.
இரண்டிலொரு முடிவு விரைவில் தெரியும்.

//இப்போதைய மக்களிடம் இது பற்றிய மாறுபட்ட எண்ணங்கள் தோன்றி இருக்கிறதா?//

தெரியவில்லை.

//தினமும் 5 – 10 பேர் பலி என்று செய்திகளில் பார்க்கும் போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. உயிரின் மதிப்பு உணராமல் அனைவரும் இருக்கிறார்களா? இல்லை உயிர் விடுபவர்களின் உணர்ச்சி புரியாமல் நாம் பேசுகிறோமா? எனக்கு புரியவில்லை. //

அவரவர் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்வதே பெரும்பாடாக இருக்கிறது.
மற்ற உயிரிழப்புகளைப் பார்க்கும்போது கவலையாகத்தான் இருக்கிறது.
ஆனால் என்னதான் செய்ய முடியும்?

//மேலே நான் கேட்ட கேள்விகள் அனைத்தும், இலங்கை தமிழர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலில் கேட்டது தான். மற்ற படி வேறு எந்த உள் அர்த்தமும் கிடையாது.//

இலங்கைத் தமிழர்களைப் பற்றித் தவறான அபிப்ராயங்கள் கொள்ளாமல் இப்படிக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன்.
நன்றி.

கிரி May 14, 2008 at 1:45 PM

//ஏதோ வேறு கிரகத்தில் இருந்து வந்தவர் கேட்பது போன்று இருக்கின்றன பல கேள்விகள்//

மதுவர்மன் நீங்கள் கூறுவது தவறு என்று நினைக்கிறேன், அல்லது நீங்கள் அதிகப்படியான நம்பிக்கை இங்குள்ளவர்கள் மீது வைத்து இருக்கிறீர்கள், அதாவது இலங்கை தமிழர்களை பற்றி அனைத்தும் தெரிந்து வைத்து இருக்கிறார்கள் என்று.

இங்குள்ளவர்களுக்கு இதை விட அதிக சந்தேகங்கள் இருக்கும். நான் கேட்டு விட்டேன் மற்றவர்கள் கேட்கவில்லை, அந்த சந்தேகத்தோடு இன்னும் அப்படியே இருக்கிறார்கள்.

என் சந்தேகங்களை நிவர்த்தி செய்யவே இந்த கேள்விகளை கேட்டேன், மற்றபடி எதோ கேட்க வேண்டும் என்பதற்காக கேட்கவில்லை, கிண்டலுக்காக அல்ல.

உங்கள் வருகைக்கு நன்றி

பொதிகைச் செல்வன் May 14, 2008 at 1:48 PM

உங்கள் பதிவின் கேள்விகள் அனைத்தும் இலங்கை தமிழரிடம் கேட்பது போல இருப்பதால் அதற்கு பதில் அளிக்கப் போவது இல்லை.

ஆனால் உங்களுக்கு சில கேள்விகள்.
நீங்கள் தமிழரா?

உங்களுக்கு தமிழர் வரலாறு தெரியுமா?

உங்களுக்கு தமிழர் வரலாறு தெரியாமல் வளர்த்த உங்கள் தாயும், தந்தையும் தமிழர் தானா?

உங்களுக்கு உலக வரலாறு தெரியுமா?

உலகின் முதன் மொழி தமிழ் மொழி, உலகம் கண்டங்களாக பிரியும் முன், இலங்கை, இந்தியா போன்ற புவி பரப்புகள் இணைந்தே இருந்தன என்பது தெரியுமா? இந்தியாவில் இருக்கும் தமிழ் தவிர அனைத்து மொழிகளும் வடமொழி (சமஸ்க்ரிதத்தில்) இருந்து வந்ததாக வும், திராவிட மொழிகள் தமிழில் இருந்து வந்ததாகவும் நீங்கள் அறிவீர்களா?
சமக்ரிதம் ஹைபேர் போலன் கணவாய் வழியாய் வந்தது உங்களுக்கு தெரியுமா?
அப்படி என்றால் இந்த மண்ணின் மைந்தர்கள் தமிழர் தானா? இல்லை ஆரியர்களா?

சிங்கள மொழி யின் எழுது வடிவம் (script) ஒலிவடிவம் (phonitix) ஒரியா மொழி போன்று இருப்பது உங்களுக்கு தெரியுமா? ஒரியா மற்றும் சிங்கள மொழிகள் பாலி மொழியில் இருந்து வந்தது உங்களுக்கு தெரியுமா?

பாலி மொழி சமக்ரிதத்தின் திரிபு என்பது உங்களுக்கு தெரியுமா?

அப்படி என்றால் இலங்கையில் மண்ணின் மைந்தர்கள் தமிழர்களா? சிங்களர்களா?

இந்தியாவில் மண்ணின் மைந்தர்கள் தமிழர்களா? ஆரியர்களா?

உங்ளுக்கு கூட்டல் கழித்தல் தெரியுமா?

உங்களுக்கு நீரோ மன்னனைப் பற்றித் தெரியுமா? நாடே பற்றி எரியும் போது அவன் ஏன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்பது தெரியுமா?

உங்களுக்கு மன நோய் உள்ளதா? நேரடியாக கேட்பதானால் நீங்கள் பைத்தியமா?

வலி என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? போர்க்களத்தில் தமிழனின் உடலில் பாயும் தோட்டாக்களில் Made in India என்று எழுதியுள்ளதாம். அவன் மீது தொட்டாவைப் பாய்ச்சி விட்டு எப்படி இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

வலியில் துடிக்கும் ஒருவனிடம் நீங்கள் அவனது அனுபவத்தைப் பற்றி கேட்பீர்களா?

இன்னும் சொல்ல துடிக்குது நெஞ்சம். நீங்கள் வேண்டுமானால் தமிழினத்திற்கு எதிரியாக இருக்கலாம் அல்லது துரோகியாக இருக்கலாம். ஆனால் எதுவுமே தெரியாது என்று மட்டும் சொல்லாதீர்கள்.

கிரி May 14, 2008 at 1:58 PM

//தினம்,தினம் குறைந்து வருகின்றது.சரியாகக் கணக்கிட எவருமில்லை//

மனது கனத்து விட்டது :(

//அப்படி பிரத்தியேகமான நோட்டு எதுவுமில்லை//

நான் புலிகளுக்கு தனியாக ருபாய் நோட்டு உள்ளது என்று இத்தனை காலம் எண்ணி இருந்தேன் அல்லது கேள்வி பட்டு இருந்தேன்,

//அவரவர் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்வதே பெரும்பாடாக இருக்கிறது.
மற்ற உயிரிழப்புகளைப் பார்க்கும்போது கவலையாகத்தான் இருக்கிறது.
ஆனால் என்னதான் செய்ய முடியும்?//

உண்மையிலேயே ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

உங்களுடைய பதிலுக்கு ரொம்ப நன்றி ரிஷான் ஷெரீப்

கிரி May 14, 2008 at 2:12 PM

//நீங்கள் வேண்டுமானால் தமிழினத்திற்கு எதிரியாக இருக்கலாம் அல்லது துரோகியாக இருக்கலாம். ஆனால் எதுவுமே தெரியாது என்று மட்டும் சொல்லாதீர்கள்.//

பொதிகை செல்வன் நான் சொல்ல வந்ததையும் கேட்க வந்ததையும் நீங்கள் புரிந்து கொள்ள வில்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் சம்பந்தமே இல்லாமல் தமிழினத்திற்கு எதிரி என்று ஏதேதோ கூறுகிறீர்கள். நீங்கள் ஏன் எப்படி கூறுகிறீர்கள் என்று எனக்கு சத்யமாக புரியவில்லை. நான் முன்பே கூறி விட்டேன், எனக்கு எந்த உள் அர்த்தமும் கிடையாது என்று. இனி நான் என்ன விளக்கம் கூறினாலும் நீங்கள் கேட்கும் மன நிலையில் என்று தெரிகிறது.

ஆனால் ஒன்று மட்டும் கூறுகிறேன் நான் வேண்டும் என்றோ அல்லது கிண்டல் பண்ண வேண்டும் என்றோ கேட்கவில்லை.

கோவி.கண்ணன் May 14, 2008 at 2:18 PM

//”இலங்கை தமிழர்கள் பற்றி எனக்கு தோன்றிய சந்தேகங்கள்???”//

கிரி,
ஈழத்தமிழர்கள் பிறர் தங்களைப் பற்றி குறிப்பிடும் போது ‘இலங்கை தமிழர்கள்’ குறிப்பிடுவதை விரும்புவதில்லை. அதிலிருந்தே அவர்கள் மண்ணின் மைந்தர்களா இல்லையா என்ற அவர்களின் உணர்வு விளங்கும்.

உங்களின் பலகேள்விகளுக்கு விடை இந்த பதிவிலும் பின்னூட்டத்திலும் இருக்கும் என நினைக்கிறேன்.

பொதிகைச் செல்வன் May 14, 2008 at 2:26 PM

இதில் உள்ள நீங்கள் என்பது உங்களை மட்டும் அல்ல. ஈழப் பிரச்சினையை பற்றி தெரியாத, அல்லது தெரியாது போல் இருக்கும் தமிழர்கள் மற்றும் தமிழ் நாட்டில் வசிக்கும் தமிழர் அல்லாதவரை பற்றி கடிந்து கொள்வதற்காக உணர்ச்சி மிகுதியால் எழுதியது.. உங்களை மட்டும் சொன்னதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். பின்னூட்டத்தை பதிவு செய்ததற்கு நன்றி. நாம் பிறந்த நாட்டின், நம் இனத்தின் வரலாறு தெரியாமல் எடுப்பார் கைப்பிள்ளை போல இருக்கும் தமிழரை தமிழினத்தின் எதிரியாகவே கருதுவோம். இந்த பதிவும் பின்னூட்டங்களும் பயனுள்ளதாக அமைய வாழ்த்துக்கள்.

குழைக்காட்டான் May 14, 2008 at 2:47 PM

//இலங்கை இராணுவத்தினர் அட்டூழியங்கள் செய்வதாக செய்திகள் வருகின்றனவே, அது பொது மக்களையா அல்லது வீரர்களின் குடும்பத்தினரையா? (ஆண் + பெண்)//

சந்தேகப்படும் படியான தமிழர்கள் அனைவரையும்.அதில் ஆண்,பெண் என்ற பேதம் இல்லை.//

வானில் இருந்து குண்டு வீசும்போது அல்லது ராணுவம் மீதி தாக்குதல் நடந்த பின்னர் நடக்கும் கண்மூடித்தனமான எதிர்த் தாக்குதல்களின் போது கொல்லப்படுபவர்கள் 99% அப்பாவிகளே. சொந்த மக்கள் (?) மீது விமானக்குண்டு வீசும் ஒரே நாடு ஸ்ரீலகாவே. அதற்கு குண்டுகளும் , கப்பல்களும் , விமானங்களும், சர்வதேச அரங்கில் ஆதரவும் வழங்கும் நாடுகளில் இந்தியா முதன்மையானது என்ற வேதனையும் உண்மை!

கிரி May 14, 2008 at 2:51 PM

//ஈழத்தமிழர்கள் பிறர் தங்களைப் பற்றி குறிப்பிடும் போது ‘இலங்கை தமிழர்கள்’ குறிப்பிடுவதை விரும்புவதில்லை. அதிலிருந்தே அவர்கள் மண்ணின் மைந்தர்களா இல்லையா என்ற அவர்களின் உணர்வு விளங்கும்//

நன்றி கோவி கண்ணன். எனக்கு அவர்கள் படும் கஷ்டம் மட்டுமே தெரியும், மற்றபடி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியாது. அதனாலேயே நான் என் சந்தேகங்களை தெளிவு படுத்தவே கேட்டேன், ஆனால் உணர்ச்சி வேகத்தில் தான் பேசுகிறார்கள். அதனாலேயே நான் அதற்கு விரிவான பதில் கூறவில்லை, அது மேலும் அவர்களை ஆத்திரப்படுத்தும் என்று. என் முந்தைய பல பதிவுகளை பார்த்தவர்கள் நான் தவறான எண்ணத்தில் கூறவில்லை என்பதை அறிவார்கள்.

இறக்குவானை நிர்ஷன் May 14, 2008 at 2:52 PM

இலங்கைத் தமிழர்கள் எப்போதிலிருந்து இருக்கிறார்கள் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் மிகப் பழங்காலந்தொட்டு வாழ்ந்து வருகிறார்கள்.

முற்காலத்தில் இந்திய துணைக்கண்டத்துடன் இணைந்தே இலங்கையும் காணப்பட்டுள்ளது. இயற்கைக் காரணக் கூறுகளால் பிளவுபட்டு தனித்தீவாகியது.இலங்கைப் பழங்குடிகள் இந்தியாவிலிருந்து வந்ததாகவே மகாவமிசம் கூறுகிறது.

இராஜராஜ சோழன் மற்றும் அவரது பரிவாரங்கள் கூட இலங்கைக்கு வந்து சென்றதாக அறிந்திருக்கிறோம் தானே? அவர் அக்காலத்தில் வாழ்ந்த பெளத்த துறவிகளுடன் செம்மையான உறவுகளைப் பேணிவந்ததாகவும் நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது.

ஆனாலும் அதற்கு முற்பட்ட காலப்பகுதியில் இந்திய வணிகர்கள் மன்னார் பகுதிகளில் வணிகம் செய்து தமது வம்சத்தை வளர்த்துக்கொண்ட வரலாறும் உண்டு. கி.மு 7 ஆம் நூற்றாண்டில் சம்பந்தர் பெருமான் திருக்கேதீச்சரத் திருக்கோயிலை நினைந்து பாடுகிறார் (சுந்தரரும் பாடியுள்ளார்). அப்படியானால் திருக்கேதீச்சரம் பற்றி அவர் அறிந்திருக்க, அந்தக்காலத்திலில் தமிழர்கள் வாழ்ந்துள்ளனர் என்பது ஊர்ஜிதமாகிறது.

ஆரம்ப காலத்தில் ஆரியச் சக்கரவர்த்திகள் யாழ் இராச்சியத்தை ஆண்டதாகவும் வரலாறு உண்டு.
( இப்படி நிறைய பேசலாம்)

தமிழர்கள் அனைவரும் புலிகளுடன் தொடர்பு வைத்திருக்கவில்லை. புலிகளுடன் தொடர்பில்லாத சாதாரண பொதுமக்கள் ஏராளம்.

புலிகளுக்கென தனியான நோட்டு இல்லை. ஆனால் தனிப் பொலிஸ், நீதிமன்றங்கள்,நீதி யாப்புகள், சட்டங்கள்,கோட்பாடுகள் நிறைய உண்டு.

எதிரி என்று யாரைக் கருதினாலும் இராணுவத்தினரின் அட்டூழியம் உண்டு.

தமிழகத்தமிழர்களை இலங்கைத் தமிழர்கள் நேசிக்கிறார்கள்.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் (அண்ணளவாக 20 மில்லியன்) 17.85 ( என நினைக்கிறேன்) வீதமானோர் தமிழர்களாக இருந்தார்கள்.தற்போதைய கணக்கீடு தெரியவில்லை

இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படும்போது வெளிநாட்டிலுள்ள தமிழர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பது தெரியாது. ( நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?)

ஏனைய கேள்விகளுக்கு வழமையான பதில்கள் தான்.

எனக்குத் தெரிந்த தகவல்களை சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.

கிரி May 14, 2008 at 3:06 PM

//சர்வதேச அரங்கில் ஆதரவும் வழங்கும் நாடுகளில் இந்தியா முதன்மையானது என்ற வேதனையும் உண்மை!//

எனக்கும் அது வருத்தம் தருவதாகவே உள்ளது. தற்போது கூட அது பற்றி செய்திகளில் பார்த்தேன்.
உங்கள் வருகைக்கு நன்றி குழைக்காட்டான்

கிரி May 14, 2008 at 3:11 PM

//தமிழர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பது தெரியாது. ( நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?)//

குழந்தைகளும் அப்பாவி மக்களும் சாகும் போது, நம்மவர்கள் இப்படி அநியாயமாக கொத்து கொத்தாக சாகிறார்களே என்று இது பற்றி நினைக்கும் போதெல்லாம் வருத்தப்படுவேன். தற்போது இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கிய போது கோபபட்டவர்களில் நானும் ஒருவன்.

உங்களுடைய விரிவான பதிலுக்கு மிக்க நன்றி இறக்குவானை நிர்ஷன்

கிரி May 14, 2008 at 3:34 PM

//ஈழப் பிரச்சினையை பற்றி தெரியாத, அல்லது தெரியாது போல் இருக்கும் தமிழர்கள் மற்றும் தமிழ் நாட்டில் வசிக்கும் தமிழர் அல்லாதவரை பற்றி கடிந்து கொள்வதற்காக உணர்ச்சி மிகுதியால் எழுதியது.. உங்களை மட்டும் சொன்னதாக எடுத்துக் கொள்ளவேண்டாம்//

பொதிகை செல்வன் நான் தமிழன் தான், தமிழர்களை பற்றி அதிகம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அது தமிழரோ அல்லது வேறு அப்பவியோ யார் கொல்லப்பட்டாலும் அதன் வலி என்ன என்பதை தெரிந்தவன். நான் தமிழன் என்று சொல்வதை விட மனிதாபிமானம் உள்ளவன் என்பதையே விரும்புகிறேன். நீங்கள் என்னை எப்படி எடுத்துக்கொண்டாலும் சரி. நான் உங்களை தவறாக நினைக்கவில்லை, அப்படி எண்ணி இருந்தால் உங்கள் பின்னூட்டத்தை வெளியிட்டே இருக்க மாட்டேன். திரும்ப என் வலைப்பதிவுக்கு வாருங்கள் உங்கள் கருத்துக்களை நிதானமாக கூறுங்கள்.

nedun May 14, 2008 at 3:36 PM

ஈழ தமிழர்கள் தொன்று தொட்டு இலங்கையில் வாழ்பவர்கள்.
ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை தோட்டங்களுக்கு தமிழகத்திலிருந்து அழைத்து சென்ற தமிழர்கள் தற்போது மலையகப் பகுதிகளில் வசிக்கின்றனர். அவர்கள் மலையக தமிழர்கள்.

தங்களின் சந்தேகம் சரியானதுதான்.

//இலங்கை தமிழர்கள் எப்போது இருந்து அங்கே இருக்கிறார்கள்?//

ஈழப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்த 1983 கால கட்டங்களில் பெரும்பாலான தமிழ் நாட்டு தமிழர்கள் “பிழைக்க போன தமிழனுக்கு தனி நாடு ஒரு கேடா?” எனக் கேட்டனர். மலையகத் தமிழருக்கும் ஈழதமிழருக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல்

King... May 14, 2008 at 4:02 PM

நான் உங்களுக்கு தனித்தனியாக பதில் தரவேண்டிய அவசியம் இல்லாமல் ரிஷானும் நிர்ஷனும் தந்திருக்கிறார்கள்…அவர்களுக்கு நன்றி நான் கதைக்கிற அளவுக்கு எழுதுற ஆள்கிடையாது… அதனால.. சுருக்கமா சொல்ல வந்ததை சொல்லுறன்…

King... May 14, 2008 at 4:03 PM

விரைவில் ஒரு முடிவு வரவேண்டும் என்பதுதான் என் எண்ணமும் போற போக்கைப்பாத்தால் முடிவு வரும் போலதான் இருக்கு…

King... May 14, 2008 at 4:03 PM

\\\//தமிழர்களின் மக்கள் தொகை இலங்கையில் எவ்வளவு?//

தினம்,தினம் குறைந்து வருகின்றது.
சரியாகக் கணக்கிட எவருமில்லை\\\

சரியான கணக்கு சொல்லியிருக்கிறியள் ரிஷான்…

King... May 14, 2008 at 4:05 PM

\\\//சண்டைகள் நடக்கும் போது 50 – 100 பேர் பலி என்று செய்திகள் வரும் போது வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் எப்படி உணருகிறார்கள்?//

மிகவும் கவலையுடன் ஆதங்கப்படுகிறார்கள்////

இதில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது…

King... May 14, 2008 at 4:06 PM

///இலங்கை தமிழர்கள் எப்போது இருந்து அங்கே இருக்கிறார்கள்?///

இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழர்கள்தான் என்பது என்தரப்பு வாதம் ஆனால் இப்பொழுதிருக்கிற இலங்கைக்கு தமிழர் சிங்களவர் எல்லோரும் சொந்தக்காரர்கள்…

King... May 14, 2008 at 4:09 PM

///தினமும் 5 – 10 பேர் பலி என்று செய்திகளில் பார்க்கும் போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. உயிரின் மதிப்பு உணராமல் அனைவரும் இருக்கிறார்களா? இல்லை உயிர் விடுபவர்களின் உணர்ச்சி புரியாமல் நாம் பேசுகிறோமா? எனக்கு புரியவில்லை. ///

உயிர்களின் அருமையும் வாழ்வின் மகிமையும் தெரிந்தால் ஏனிந்த யுத்தம் கிரி…

King... May 14, 2008 at 4:11 PM

//தமிழகத்தில் உள்ள தமிழர்களை அவர்கள் விரும்புகிறார்களா?//

இதிலென்ன சந்தேகம்?///

வழிமொழிகிறேன்

கிரி May 14, 2008 at 4:18 PM

//ஈழ தமிழர்கள் தொன்று தொட்டு இலங்கையில் வாழ்பவர்கள்.
ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை தோட்டங்களுக்கு தமிழகத்திலிருந்து அழைத்து சென்ற தமிழர்கள் தற்போது மலையகப் பகுதிகளில் வசிக்கின்றனர். அவர்கள் மலையக தமிழர்கள்.//

மறுபடியும் கேட்டுக்கொள்கிறேன் யாரும் கோபித்துக்கொள்ள வேண்டாம். எனக்கு இன்று தான் தெரியும் மலையக தமிழர்க்கும் ஈழ தமிழர்க்கும் உள்ள வித்யாசம்.

nedun மற்றும் king வருகைக்கு நன்றி.

King... May 14, 2008 at 4:19 PM

///இலங்கை அரசும் தனி ஈழம் தர மாட்டேன் என்கிறது, புலிகளும் அதை வாங்காமல் விட மாட்டோம் என்கிறார்கள். இதன் முடிவு என்ன?///

///இப்போதைய மக்களிடம் இது பற்றிய மாறுபட்ட எண்ணங்கள் தோன்றி இருக்கிறதா////

பிரச்சனைகள் நீங்கிய ஒரு ஐக்கிய சமாதான இலங்கைக்கான நாளை எதிர்பாத்துக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன்

கிரி May 14, 2008 at 4:29 PM

//உயிர்களின் அருமையும் வாழ்வின் மகிமையும் தெரிந்தால் ஏனிந்த யுத்தம் கிரி..//

கசப்பான உண்மை தான்.

//பிரச்சனைகள் நீங்கிய ஒரு ஐக்கிய சமாதான இலங்கைக்கான நாளை எதிர்பாத்துக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன்//

உங்களை போலவே நானும். அங்கும் அமைதி திரும்ப வேண்டும் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் குண்டு சத்தம் இல்லாத நாடாக மாற வேண்டும் என்பதே என் மற்றும் இங்குள்ள பலரின் விருப்பம்.

King... May 14, 2008 at 4:35 PM

//இப்போதைய மக்களிடம் இது பற்றிய மாறுபட்ட எண்ணங்கள் தோன்றி இருக்கிறதா?//

தெரியவில்லை./////

???????????????????
…………..
????????

இறக்குவானை நிர்ஷன் May 14, 2008 at 5:03 PM

//கிரி said…
//ஈழ தமிழர்கள் தொன்று தொட்டு இலங்கையில் வாழ்பவர்கள்.
ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை தோட்டங்களுக்கு தமிழகத்திலிருந்து அழைத்து சென்ற தமிழர்கள் தற்போது மலையகப் பகுதிகளில் வசிக்கின்றனர். அவர்கள் மலையக தமிழர்கள்.//

மறுபடியும் கேட்டுக்கொள்கிறேன் யாரும் கோபித்துக்கொள்ள வேண்டாம். எனக்கு இன்று தான் தெரியும் மலையக தமிழர்க்கும் ஈழ தமிழர்க்கும் உள்ள வித்யாசம்.
//

நீங்கள் மலையகத் தமிழர்கள் குறித்து கேட்காததால் நான் எழுதவில்லை. இந்திய வமிசாவளியினர் என்ற பெயருடன் இலங்கை மலைநாட்டுப் பகுதியில் (ஊவா,மத்திய மாகாணம் – தற்போது சபரகமுவா மாகாணமும் பொதுவாக குறிப்பிடப்படுகிறது) வாழும் மக்கள் மலையகத் தமிழர்கள்.

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் பிரித்தானிய காலணித்துவ ஆட்சி நடைபெற்ற போது தேயிலை,இறப்பர்,கோப்பி போன்ற பயிர்ச்செய்கைகக்காக இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள் இவர்கள்.

இவ்வாறு வந்த இந்திய வமிசாவளித் தமிழர்களை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்ப அக்காலத்து அரசியல் தலைவர்கள் முயற்சித்த போதும் நடைபெறவில்லை. ஆனால் 1983 ஆம் ஆண்டு கலவரத்தில் பலர் இந்தியாவுக்கு திரும்பினார்கள்.

எவ்வாறெனினும் ஆதித்தமிழர்கள் எனக் குறிப்பிடப்படும் இலங்கைத் தமிழர்கள் மலையகப் பகுதிகளிலும் இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

( கிங், உங்களுடைய பதில் நன்று)

கிரி May 14, 2008 at 5:28 PM

இறக்குவானை நிர்ஷன் உங்களுடைய தெளிவான பதிலுக்கு ரொம்ப நன்றி. எனக்கு மட்டும் அல்லாது பலருக்கு ஈழ தமிழர்கள் பற்றிய பல சந்தேகம் தெளிவடைந்து இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு சிலர் நாம் கேள்வி கேட்டு தவறாக புரிந்து கொள்ளபட்டால் என்ன செய்வது என்று இங்கே கேட்காமல் இருக்கலாம், அவர்கள் கூட உங்கள் அனைவரின் பதிலால் கண்டிப்பாக தெளிவடைந்து இருப்பார்கள்.

குறிப்பாக அங்கே மலையக தமிழர்கள் மற்றும் ஈழ தமிழர்கள் இரு வேறு தமிழர்கள் இருப்பது பலருக்கு புதியதாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. நானும் நினைத்ததுண்டு இங்கே இருந்து சென்றவர்கள் நீண்ட நாள் இருப்பதால் தனி ஈழம் கேட்கிறார்களே அது நியாயமா என்று? இப்படி ஒவ்வொருவரும் தனி நாடு கேட்டால் என்ன ஆவது என்று? இருந்தாலும் தமிழர்கள் என்பதால் அது பற்றிய கேள்வி கேட்காமல் இருந்தேன் (ஒரு சுயனலவாதியாக இருந்தேன்). இன்று தான் தெரிந்தது சுயனலவாதியும் இல்லை ஒரு வெங்காயமும் இல்லை நான் அவ்வாறு நினைத்ததே தவறு என்று.

இறக்குவானை நிர்ஷன் நீங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் கூறிய செய்திகளுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. உருப்படியான அதுவும் மிகவும் முக்கியமான செய்தியை இன்று தெரிந்து கொண்டதில் எனக்கு ரொம்ப சந்தோசம்.

லக்கிலுக் May 14, 2008 at 5:45 PM

என்ன கொடுமை சார் இந்தப் பதிவு? :-(

கிரி May 14, 2008 at 6:23 PM

என்ன சொல்ல வருகிறீர்கள் லக்கி?

மதுவர்மன் May 14, 2008 at 6:40 PM

கிரி,

//இலங்கை தமிழர்கள் எப்போது இருந்து அங்கே இருக்கிறார்கள்?//

இது ஒரு அவசியமில்லாத கேள்வியாகவே எனக்கு படுகின்றது.

இலங்கையிலே முக்கியமாக தமிழ், சிங்களம், முஸ்லிம், பறங்கியர் என்று இனங்கள் இருக்கின்றன. இன்னும் பல சிறு சிறு இனக்குழுமங்கள் இருக்கின்றன.

யார் முதலில் இங்கே இருந்தார்கள், யார் வந்தேறுகுடிகள், யார் பூர்வீகக்குடிகள் என்ற ஆராய்சியெல்லாம் தேவையா?

அப்படி ஆராய்ந்து பிந்தி வந்தவர்களை எல்லாம் என்ன அடித்து துரத்துவதா?

எல்லா இனத்துக்கும் இலங்கை சொந்தமானது என்ற நிலை இருந்திருக்கவேண்டும்.

ஆனால், நடந்தது வேறு, பேரினவாதிகள் இந்நாடு தங்களுக்கே சொந்தம் அவர்கள் வந்தேறுகுடிகள், இவர்கள் வந்தேறு குடிகள் என்று இனவாதம் பேசி, மற்றைய இனங்களின் உரிமைகளை மறுத்தார்கள்.

அதன் விளைவே தமிழர்களின் இந்த சுயாட்சிக்கான (தனிநாட்டுக்கான) போராட்டம்.

யார் எப்போதிருந்து இங்கே இருக்கின்றார்கள் என்பது ஒரு இனவாத அடிப்படையிலான கேள்வி.

அதைவிடுத்து, இப்போது இருக்கும் இனங்களின் உரிமைகள் சமமாக வழங்கப்படவேண்டும்.

ஆனால், இலங்கையில் ஆட்சியதிகாரத்தில் இருப்பதோ பேரினவாதம். அது மற்ற இனங்களின் உரிமைகளை மறுக்கத்தொடங்கியது, அடக்கியொடுக்கத்தொடங்கியது, நில ஆக்கிரமிப்பு செய்தது.

மலையகத் தமிழரின் பிரஜாவுரிமை மறுப்பு, தனிச்சிங்கள சட்டம், தமிழர் நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பும், சிங்கள குடியேற்றங்களும், 56, 79, 83 தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரங்கள், கல்வி, தொழில்வாய்ப்புக்களிலே தமிழகள் மீது காட்டப்பட்ட பாரபட்சம், இனப்படுகொலைகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதன்விளைவு போராட்டம்.. அகிம்சைவழியில் தொடங்கி இன்று ஆயுதப்போராட்டத்தில் நிற்கின்றது.

அரச பயங்கரவாதத்தின் விளைவாக இன்று விடுதலைப்புலிகளும் பயங்கரவாதமுறைகளால் பதிலடிகொடுக்கவேண்டியேற்பட்டுள்ளது.

ஒரு இயற்கை விதியை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

“எங்கேயெல்லாம் அடக்குமுறை பிரயோகிக்கப்படுகின்றதோ, அங்கேயெல்லாம், அடக்குமுறைக்கெதிரான போராட்டம் வெடிக்கும்”

இது, மனிதர்களுக்கு மட்டுமல்ல, மற்றை விலங்குகளுக்கும் பொருந்தும்.

விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம் ஏறக்குறைய 30 ஆண்டுகளாகவே இங்கு உள்ளது. அதற்குமுதல் தமிழர் தரப்பிலிருந்து பயங்கரவாதம் இருக்கவில்லை.

இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் (1948) தமிழர்கள் மீதான பயங்கரவாத நடவடிக்கைகள் ஆட்சியிலிருந்தவர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.

அரசபயங்கரவாதம் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கின்றது. அதன் விளைவே விடுதலைப்புலிகளின் பயங்கரவாதமும், இலங்கை நாட்டின் இன்றைய நிலையும்.

குழைக்காட்டான் May 14, 2008 at 8:48 PM

இறக்குவானை நிர்ஷன்,

உங்கள் பதிலில் உள்ள “இவ்வாறு வந்த இந்திய வமிசாவளித் தமிழர்களை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்ப அக்காலத்து அரசியல் தலைவர்கள் முயற்சித்த போதும் நடைபெறவில்லை. .” என்ற கருத்து பிழை என நினைக்கிறேன். அக்கால அரசியல் தலைவர்கள் முயற்சித்டு அது நடைபெற்ரது என்பது தான் உண்மை. இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, அன்றைய இந்திய ஜனாதிபதி வி.வி.கிரி , திருமதி இந்திரா காந்தி, ஸ்ரீலங்காவின் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ எல்லோருமே இதில் பங்கு கொண்டனர்.

திரு.நேருவிடம் தோட்டத்தொழிலாளர் நாடுகடத்தப்பட இருப்பது பற்றியும் அவர்களின் அன்றாட வாழ்க்கை அவலங்கள் பற்றியும் கூறப்பட்ட போது அவர் கூறிய பதில் என்ன தெரியுமா? எனது நாட்டு மக்களை சரியாக நடத்தாத ஒரு நாட்டுக்கு நான் போக மாட்டேன் என! என்னே அஹிம்சா வாதி!!!!!ஆனால் ஸ்ரீலங்கா அவர்களை நாடுகடத்திக்கொண்டே இருந்தது. ஆனால் தோட்டத்தில் வேலைக்கு ஆள் குறைவடைவதையும் தேயிலையின் தரம் வீழ்வதையும் அவதானித்த அரசு கடைசிக்காலங்களில் நாடுகடத்தப்படுவதை தாமதப்படுத்தியது. அத்துடன் ஈழத்தமிழர் பிரச்சினை ஆயுதபோராட்டமாக வெடிக்க ஸ்ரீலங்கா தன்னை ஒரு மனிதாபிமானம் மிக்க நாடாகக் காட்டுவதற்கு நாடுகடத்தலை நிறுத்தியது. ஆனால் நீங்கள் ச்ன்னது போல 1983 இல அதிகளவானவர்கள் தாமாகவே சென்றனர்.
நீங்கள் இறக்குவானையில் இருப்பதால் இதுபற்றி நிச்சயம் அறிந்திருப்பீர்கள்.

//…ஈழப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்த 1983 கால கட்டங்களில் பெரும்பாலான தமிழ் நாட்டு தமிழர்கள் “பிழைக்க போன தமிழனுக்கு தனி நாடு ஒரு கேடா?” எனக் கேட்டனர். ..//

இது மட்டுமா ஈழம் வந்த இந்திய அமைதிப்படையினர் யாழ்மக்களின் வாழ்க்கைத்தரத்தைப் பார்த்து (வீடு,காணி,சுற்றுமதில், ரீ.வி, ஃபிரிஜ், மோட்டார்சைக்கிள் போன்றன) இவ்வளவும் வைத்துக்கொண்டு ஏன் தனி ஈழம் கேட்கிறீர்கள் எனக்கேட்டது மிகப்பிரபல்யம்!!!

கிரி May 14, 2008 at 8:51 PM

//காலனித்துவத்திலிருந்து விடுதலையாகி வெறும் 60 ஆண்டுகளே கடந்திருக்கின்றன. வரலாறு நெடியது. தயவு செய்து புத்தகக்கடைகளிலாவது அதை தேடிப்பார்க்கவும்//

உங்கள் அறிவுரைக்கு நன்றி ஆதித்யன்

abcdeeg8 May 14, 2008 at 9:50 PM

கிரி அவர்களே

தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களில் 99 வீதமானவர்கள் எல்லோரும் உங்கள் நிலையில்தான் உள்ளார்கள். எங்கட தலைமண்டையளுக்கு இது புரிவதில்லை. ஆனால் நாம் உலகில் உள்ள அனைத்து மக்களையுமே நேசிக்கின்றோமம். ஆனாலும் நாம் இலங்கையிலே இவ்வளவு கஸ்டப்படும் போது தமிழ்நாட்டு மக்கள் சூடு சுறனையில்லாமல் இருப்பதையிட்டு வருத்தத்துடன் கூடிய கோபம்.
சரி நீங்கள் உதவாவிட்டாலும் பரவாயில்லை நாளைக்கு இலங்கையில் வாழ்ந்தது ஒரு வீரமுள்ள தமிழர்களா இல்லையா என்று உங்கள் நாட்டில் உள்ள தொலைக்காட்சியில் பட்டிமன்றம் நடத்தவார்களே அதிலே நாம் வீரமுள்ள சோழப்பரம்பரையைச் சேர்ந்தவர்களேதான் என்று கூறி எம்மை பார்த்து அடுத்த சந்ததி சிரிக்காமல் பார்த்துக்கொள்வதற்காகவேவனும் தமிழ்மக்களின் வீரம் செறிந்த போராட்டங்களைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இப்போதெல்லாம் எங்களுக்கு பக்கத்திலே தமிழர்கள் வாழகின்றார்கள் என்றே மறந்துவிட்டது.

ஆனாலும் எம் இனத்துக்கு யாருடைய உதவியும் கிடைக்கவில்லை. நாம் யாரையும் எதிர்பார்க்கவுமில்லை.எங்கள் தலைவன் எங்களை சிரமேற்காக்கிறான். எங்களின் தலைவன் இருக்குவரை தலைகுனிவென்பதே நமக்கில்லை.

இலங்கையிலும் உங்கள் நிலையில் முதலாளிவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு எப்படியிருந்தாலும் தமது பொருளாதாரம் சிறப்பாக இருந்தால் காணும்.

உங்களால் முடிந்தால் வலியைச் சுமந்தவர்களைக் கேளுங்கள். அதன் வலி என்னவென்று?.

இலங்கையில் அரசாங்கத்தால் தரப்பட்ட அடையாள அட்டையில் தமிழ்பெயரைப்பார்த்ததும் கைதுசெய்து சித்திரைவதை செய்கிறார்கள்.

தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை பலவாறு விமர்சிக்கலாம். ஆனால் எம் வீரர்களுக்கு அண்ணனின் சொல் மந்திரம். தலைவனின் சுட்டுவிரல் நீண்டால் காணும் பகை முடிக்க களம் செல்வார்கள்.

அனைத்து தமிழர்களுக்கும் அவர்களுடன் நேரடித்தொடர்புகள் இல்லாவிட்டாலும் மானசீகத்தொடர்பு உள்ளது. சிலதுகள் கசிப்புக்காய்ச்சி அவர்களிடம் அடி வாக்கிவிட்டு புலிகள் எம்மை வதைக்கிறார்கள் என்று சொல்லித்திரியுதுகள். அதுகளின் பேச்சை கேட்டால் அவ்வளவு தான். அவர்கள் கசிப்புக்காய்ச்சினால் அடிப்பார்கள் விபச்சாரம் செய்தால் எச்சரிக்கை செய்வார்கள் திருந்தாவிட்டால் மண்டையில் போடுவார்கள். மொத்தத்தில் புலிகள் களை என்று தெரிந்தால் களை எடுப்பார்கள். பயிர் என்றால் பசளைபோட்டு இரவு பகலாக காவல் காப்பார்கள்.

தமிழீழம் வந்து பாருங்கள் தமிழ் எப்படி ஆட்சிபுரிகின்றதென. உங்கள் அரசியல்வாதிகளின் பேச்சில் தான் தமிழ் ஆனால் எங்கள் தலைவனின் ஆட்சியிலே தமிழ் மட்டும்தான் இருக்கின்றது.

மேலதிகத் தகவல்களுக்கு செல்லவும்:
http://www.pathivu.com
http://www.pulikalinkural.com
http://www.eelatamil.com
http://www.pooraayam.blogspot.com

இத்தளங்களுக்குச்சென்றால் எமது வரலாறுகளை அப்படியே பருகிவிடலாம்.

மூச்சாகி எங்கள் மொழியாகி இருக்கும் எங்கள் தமிழையும் அவள் தவப்புதல்வன் தலைவளையும் வாழ்த்தி வணங்கி விடைபெறுகிள்றேன்.

வணக்கம்.
ஈழச்சோழன்

கிரி May 14, 2008 at 10:26 PM

உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஈழச்சோழன்

nedun May 15, 2008 at 7:29 AM

//குழைக்காட்டான் said…
இறக்குவானை நிர்ஷன்,

உங்கள் பதிலில் உள்ள “இவ்வாறு வந்த இந்திய வமிசாவளித் தமிழர்களை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்ப அக்காலத்து அரசியல் தலைவர்கள் முயற்சித்த போதும் நடைபெறவில்லை. .” என்ற கருத்து பிழை என நினைக்கிறேன்.//

உங்கள் கருத்தில் உடன் படுகிறேன்
மலையக தோட்ட தொழிலாளர்கள் பற்றி லால் பகதூர் சாஸ்திரி பண்டார நாயக ஒப்பந்தம் போடப்பட்டது (1965 என்று நினைக்கிறேன்). அதன் படி 5 லட்சம் மலையகத் தமிழர்களை இந்தியா திரும்ப அழைத்துக் கொள்வது, 5 லட்சம் மலையகத் தமிழர்களுக்கு இலங்கை குடியுரிமை அளிப்பது என்று.
ஒப்ப்ந்தப் படி 5 லட்சம் மலையகத் தமிழர்கள் இந்தியா திரும்ப அழைத்துக் கொண்டது. அவர்கள் நீலகிரி, வால்பாறை போன்ற இடங்களில் குடி அமர்த்தப் பட்டனர். ஆனால் ஒப்பந்தப் படி இலங்கை அரசு மீதமுள்ள மலையகத் தமிழருக்கு குடியுரிமை அளிக்க வில்லை.

ஆனால் இந்த விவாதத்திற்கு இது களம் அல்ல.
இகு ஈழ தமிழர்களின் பிரச்சனையை பற்றி மட்டும் விவாதிப்போம்.
நன்றி

nedun May 15, 2008 at 7:40 AM

நேர்மையாக தங்கள் தவறை ஒப்புக்கொண்டமைக்கு நன்றி.

//இன்று தான் தெரிந்தது சுயனலவாதியும் இல்லை ஒரு வெங்காயமும் இல்லை நான் அவ்வாறு நினைத்ததே தவறு என்று//

தமிழ் நாட்டில் உள்ள நமது தமிழர்களுக்கு இன்னும் ஈழத்தை பற்றி பல உண்மைகள் தெரிவதில்லை.
உங்களின் கேள்விகள் உண்மை அறியும் நோக்கில் எழுப்பப்பட்டவை என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
விவாதத்திற்கு களம் அமைத்தமைக்கு நன்றி

இறக்குவானை நிர்ஷன் May 15, 2008 at 9:23 AM

//nedun said…
//குழைக்காட்டான் said…
இறக்குவானை நிர்ஷன்,

உங்கள் பதிலில் உள்ள “இவ்வாறு வந்த இந்திய வமிசாவளித் தமிழர்களை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்ப அக்காலத்து அரசியல் தலைவர்கள் முயற்சித்த போதும் நடைபெறவில்லை. .” என்ற கருத்து பிழை என நினைக்கிறேன்.//

//

அக்காலத்து அரசில்தலைவர்கள் முயற்சித்த போதும் அது முழுமையாக நடைபெறவில்லை என்று நான் எழுதியிருக்க வேண்டும். இந்தியாவிலிருந்து வந்தவர்களை மீண்டும் அந்நாட்டுக்கு அனுப்ப சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் முயற்சிக்கப்பட்டது. ஆனால் இங்கு வந்தோரில் 1/3 பகுதியனரே இந்தியாவுக்கு மீண்டும் சென்றனர். ஏனையோர் இன்னும் அதே தொழில் அதே பழைய வாழ்க்கையுடன் வாழ்ந்து வருகின்றனர். 150 வருடகால பழைய வீடுகளில் (அவர்கள் வந்தபோது அமைக்கப்பட்ட)இன்னும் வாழ்பவர்களும் உண்டு.

//ஆனால் இந்த விவாதத்திற்கு இது களம் அல்ல.
இகு ஈழ தமிழர்களின் பிரச்சனையை பற்றி மட்டும் விவாதிப்போம்.
//

உண்மைதான். மீண்டும் சந்திப்போம்.

சண்சுதா May 15, 2008 at 11:17 AM

//யார் முதலில் இங்கே இருந்தார்கள், யார் வந்தேறுகுடிகள், யார் பூர்வீகக்குடிகள் என்ற ஆராய்சியெல்லாம் தேவையா//

இப்படியான ஆரய்ச்சிகள் தேவையில்லைத்தான் என்றாலும், தமிழர்களின் இருப்பின் மீதான கேள்விகளை பேரினவாதம் திரிக்கப்பட்ட வறலாற்றைக்கொண்டு வீசும்போது, யார் மூத்தகுடிகள் என்ற கேள்வி அவசியம்தான்.

ஈழச்சோழன் போல extremist ஆக இல்லாமல், எனது கருத்து என்னவென்றால், சாதகமாகவோ பாதகமாகவோ ஒவ்வொரு தமிழனும் இப்போராட்டத்தில் இணைந்துள்ளான். அல்லது எல்லோரும் போராட்டமயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். மலையக மக்களைப்பொறுத்தமட்டில், தமது அரசியல் தலைவர்களால் துரோகமிழைக்கப்பட்டு, புலிகளாலும் கைவிடப்பட்ட நிலையிலேயே இருக்கிரார்கள்.

// எங்கள் தலைவன் எங்களை சிரமேற்காக்கிறான். எங்களின் தலைவன் இருக்குவரை தலைகுனிவென்பதே நமக்கில்லை //

// எம் வீரர்களுக்கு அண்ணனின் சொல் மந்திரம். தலைவனின் சுட்டுவிரல் நீண்டால் காணும் பகை முடிக்க களம் செல்வார்கள். //

என்று ஈழச்சோழன் சொல்வது போல தலைவரின் தலையில் பாரத்தை போட்டுவிட்டு எதுவுமே செய்யாமல் சும்மா பேசிக்கொண்டிருப்பதிலேயே பெரும்பாண்மையான ஈழத்தமிழர்களின் பொழுது போய்க்கொண்டு இருக்கிறது. புலிகளும் மக்கள் மத்தியில் இதுசம்பந்தமான அறிவை வளர்க்காமல் பிள்ளைகளையும் ஆயுதங்களையும் தாருங்கள், நாங்கள் போராடுகிறோம் என்றே சொல்லுகிறார்கள்…. வராறு நமக்கு ஒரு சிறந்த தலைவனைத்தந்துள்ளது. அத்தலைவன் தன்னாலியன்றளவு படையையும் உட்கட்டுமானங்களையும் உருவாகியுள்ளன். ஆனால் போராட்டத்தை வென்றேடுக்க தேவையான மக்கள் சக்தியை உருவாக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டிலிருந்து தார்மீக ஆதரவை மட்டுமே எதிர்பார்க முடியும். இந்திய தனது பொருளாதர, பிராந்திய நலன்களுக்கப்பால் எமக்குதவுமென்று எதிர்பார்க்க முடியாது. எம்மைப்பற்றி சிந்திக்கும் கிரி போன்றவர்களுக்கு எம் நன்றி

Logan May 15, 2008 at 5:16 PM

ஹலோ கிரி அவர்களே,
நேபாள மவோஇஸ்ட் ஜனநாயக முறையில் தேர்தலை சந்தித்து வெற்றி கண்டது போல் தமிழர்களுக்கு ஒரு வழி பிறக்க ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்.

கிரி May 15, 2008 at 5:31 PM

உங்களுடைய பக்குவப்பட்ட பேச்சுக்கு வாழ்த்துக்கள் சுதா

வாசிப்பவன் மற்றும் லோகன் உங்கள் வருகைக்கு நன்றி

கிரி May 16, 2008 at 12:22 PM

திவா உங்கள் வருகைக்கு நன்றி

கிரி May 16, 2008 at 12:24 PM

விவாதம் வேறு பாதையில் செல்வதாலும், தேவையற்ற மனத்தாங்கலை தவிர்க்கவும் பின்னூட்ட பகுதியை இந்த பதிவுக்கு நிறுத்தி வைக்கிறேன். யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.

Comments on this entry are closed.

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed