மரக்கன்று நடும் விழாவும்! அரசியல்வாதிகளும்!
இன்று செய்தியில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நடப்போவதாக அவரது ரசிகர்கள் கூறியுள்ளதை பார்த்ததும் எனக்கு தோன்றிய எண்ணங்கள். தற்போது எதற்கெடுத்தாலும், மரக்கன்று நடுவது ஒரு விளம்பரம் ஆகி விட்டது. அட! மரக்கன்று நடுவது என்பது நல்ல விஷயம் தானே! அதில் என்ன குறை கண்டீர்கள்? என்று கேட்கிறீர்களா?
மரக்கன்று நடுவதையும் மற்றவர்களுக்கு உணவு கொடுப்பதையும் விட சிறப்பான சேவை எதுவும் இல்லை என்பது என் கருத்து. இவர்கள் பணி மரக்கன்று நடுவதொடு நின்று விடுகிறது, நற்றால் மட்டும் போதுமா? யார் அதை பராமரிப்பது? இவர்கள் பாட்டுக்கு மரக்கன்று நற்று விட்டு சென்று விடுகிறார்கள், தண்ணீர் ஊற்றுவது கிடையாது, வேலி அமைத்து அதை பாதுகாப்பது கிடையாது. அப்புறம் எதுக்குங்க இது மாதிரி செய்கிறார்கள்? ஒரு வாரம் சென்ற பிறகு பார்த்தால் அந்த இடத்தில் நற்ற செடியின் காய்ந்து போன குச்சி மட்டுமே இருக்கும். இதை பார்க்கும் போது நமக்கு மனது கனத்து போய் விடுகிறது.
தற்போது 100000, 500000 மரக்கன்றுகளை நடுவது அரசியல்வாதிகளுக்கும் மற்றும் அரசுக்கும் ஒரு நாகரிகம் மற்றும் பெருமை ஆகி உள்ளது. இவர்கள் நடும் செடியில் 100 ல் 5 செடி வந்தாலே பெரிய விஷயம், இதை நான் மிகைப்படுத்தி கூறவில்லை, இவற்றை நான் கவனித்து கொண்டு தான் வருகிறேன். ஒரு சில இடங்களில் மட்டுமே பராமரிக்கிறார்கள். சரி இவர்கள் தான் இப்படி என்றால் "ஈஷா" யோகம் என்ற நிறுவனத்தார் எங்கள் ஊரில் அனைத்து இடங்களிலும் செடிகளை நட்றார்கள். பாதுகாப்புக்காக அதை சுற்றி குச்சி கட்டி வைத்து இருந்தார்கள். இப்போது உள்ளே இருந்த செடி கருகி விட்டது, அதை சுற்றி வைத்த குச்சிகள் மட்டுமே தழைத்துள்ளன. இவர்களே இப்படி செய்யும் போது மற்றவர்களை என்ன வென்று சொல்வது? மொத்தத்தில் நானும் செடி நடுகிறேன் என்று பெருமை பீத்தவே இவர்கள் செடி நற்று கொண்டு இருக்கிறார்கள்.
எனக்கு மரம் வளர்ப்பதிலும் இயற்கையை பாதுகாப்பதிலும் (என்னால் முடிந்தவரை) மிகுந்த ஆர்வம் உண்டு, அதை செய்து கொண்டும் இருக்கிறேன். சரி இவர்கள் செய்வது ஒரு சிலருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் மற்றும் இவர்கள் நடுவதில் ஒரு 10 செடியாவது வளராதா என்ற நம்பிக்கையில் இதை எல்லாம் சகித்துக்கொள்ள வேண்டி உள்ளது. நடும் செடி 10 ஆக இருந்தாலும் அதை ஒழுங்காக பராமரித்தாலே போதும் என்பது என் தனிப்பட்ட கருத்து.












0 COMMENTS:
Post a Comment