என்னுடைய சபரிமலை பயணம் – படங்கள்

by கிரி on April 22, 2008

இந்த முறை இந்தியா சென்ற பொழுது என் அம்மாவின் வேண்டுதலுக்காக சபரி மலை சென்று வந்தேன். ஏற்கனவே 9 முறை சென்று வந்து இருந்தேன் இது 10 வது முறை. சபரிமலையில் ஏற்கனவே கூட்டத்தில் சிக்கி வெறுத்து போன அனுபவம் இருந்ததால் வழக்கமான டிசம்பர் மாதமாக இல்லாமல் சித்திரை மாதம் சென்றேன் அதுவும் கேரள விஷு வருடத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே சென்று திரும்பி விட்டேன். கூட்டம் அதிகம் இருக்கும் என்று.
s1 என்னுடைய சபரிமலை பயணம்   படங்கள்
நான் ஏன் இப்படி கூட்டத்திற்கு பயப்படுகிறேன் என்றால், ஒரு முறை சீசன் நேரத்தில் சென்று 8 மணி நேரம் தொடர்ந்து வரிசையில் நின்ற அனுபவம் தான், எறும்பு கூட எங்களை விட வேகமாக சென்று இருக்கும். இன்ச் இன்ச் ஆக வரிசை சென்றது இதில் இடையில் நுழைகிறவர்கள், தள்ளி விடுபவர்கள், காலை மிதிப்பவர்கள் என்று அனைவரையும் சமாளிக்க வேண்டும். அந்த முறை பொறுமை போய் சாமியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் வீட்டிற்கே திரும்ப போய் விடலாம் என்று முடிவு செய்து விட்டேன். பின்னர் எப்படியோ சாமியை பார்த்தாகி விட்டது அப்போது தொடர்ந்து 8 மணி நேரம் நின்றதால் இடுப்புக்கு கீழே உணர்ச்சியே போய் விட்டது. அப்புறம் கொஞ்சம் ஓய்வு எடுத்த பிறகே பழைய நிலைமைக்கு வந்தேன். இறங்கும் போது, அதுவரை இனி சபரிமலைக்கே ஒரு பெரிய கும்பிடு என்று நினைத்து கொண்டு இருந்த நான், மறுபடியும் கண்டிப்பாக வர வேண்டும் என்று நினைத்தேன். அது தான் கடவுளின் மகிமையோ என்று நினைத்து கொண்டேன். ஆனால் இந்த மாதிரி சீசன் நேரத்தில் வர கூடாது என்று முடிவு செய்து விட்டேன்.

s2 என்னுடைய சபரிமலை பயணம்   படங்கள்

எங்கள் ஊரில் (கோபி) இருந்து 12 மணி நேர பயணத்தில் பம்பையை அடைந்தோம், காரில் சென்று இருந்தோம் நால்வராக. பொதுவாக நான் வேன் அல்லது பஸ் ல் சென்று வந்ததால் எனக்கு ரூட் பிரச்சனை தெரியவில்லை. இப்பொழுது வண்டியை நிறுத்தி கேட்டு கேட்டு சென்றோம், கேரளாவில் மிக கொடுமையான விஷயம் ஊர் அறிவிப்பு பலகை (sign board). ரொம்ப அநியாயங்க ஒரு இடத்தில் கூட உருப்படியாக இல்லை, சில இடத்தில் 150 கிலோ மீட்டர் என்று இருக்கும் 20 கிலோ மீட்டர் சென்ற பிறகு வரும் எதாவது பலகையை பார்த்தால் அதே இடத்துக்கு 160 கிலோ மீட்டர் என்று இருக்கும். சில இடங்களில் 30-40 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு அறிவிப்பு பலகை கூட இருக்காது, கேரளாவில் 9 மணி ஆனாலே சாலையில் நடமாட்டம் குறைந்து விடுகிறது, 9.30 மணிக்கு எல்லாம் கடையை மூடி விடுகிறார்கள். எப்படியோ ஒரு வழியாக 12 மணி நேர பயணத்தில் நிற்காமல் சென்று பம்பையை அடைந்தோம்.

s3 என்னுடைய சபரிமலை பயணம்   படங்கள்

இந்த முறை சென்றபோது பம்பையில் தண்ணீர் மிக குறைவாக இருந்தது, படுத்தால் மட்டுமே உடல் முழுவதும் நனையும் படி நீர் இருந்தது. கூட்டம் இல்லாததால் சிரமமாக தெரியவில்லை. இல்லை என்றால் தண்ணீர் நாறி போய் இருக்கும், கூட்டத்தில் நாமும் சுத்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

s5 என்னுடைய சபரிமலை பயணம்   படங்கள்

அதிக சிரமம் இல்லாமல் அய்யப்பனை தரிசித்து விட்டு உடனே திரும்பி விட்டோம். வரும் வழியில் அதிக எடையை தூக்கி சர்வசாதாரணமாக வந்தவர்களை பார்த்து புகைப்படம் எடுத்த பொழுது என்னை பத்திரிக்கை நிருபர் என்று நினைத்து எங்க கஷ்டங்களை பேப்பரில் போடுங்க என்று ஒருவர் கூறினார். சபரிமலையில் “டோலி” என்று ஒரு வசதி உள்ளது, அதாவது வயதானவர்கள் நடக்க முடியாதவர்கள் இவர்களிடம் 1000 அல்லது 1200 கொடுத்தால் (அல்லது அவர்களது எடைக்கு தகுந்த படி மாறும்), அவர்களை பிரம்பு நாற்காழியில் உட்கார வைத்து தூக்கி கோவிலில் சென்று விடுவார்கள் (ரொம்ப கஷ்டம் ஆனால் எளிதாக செய்தார்கள் அனுபவத்தால்) பிறகு திரும்ப வரும் போது இதே போல் வந்து கொள்ளலாம்.

s4 என்னுடைய சபரிமலை பயணம்   படங்கள்

கேரளாவில் ஒரு சில சாலைகள் மிக சிறப்பாக இருந்தன, அங்கேயும் நம்ம ஊரை போல பாலம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் எனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் முக்கிய சாலைகளில். மரங்கள் அடர்ந்து பசுமையாக இருந்ததால் காரில் பயணம் செய்ய சுகமான அனுபவமாக இருந்தது. Gods own country னு சரியா தான் கூறி இருக்காங்க

எல்லாம் முடிந்து கோயம்புத்தூர் வந்த பிறகு நினைத்தேன், 1000 சொல்லுங்க நம்ம ஊரு நம்ம ஊரு தான். கோவை புறவழி சாலையில் வந்ததால் அன்னபூர்ணா சாம்பார் வடையை சாப்பிட முடியாமல் போய் விட்டது. ரொம்ப முக்கியம்னு சொல்கிறீர்களா :D அது என்னவோ நமக்கு அது மேல ஒரு ஆசை.

இது தொடர்பான மேலும் படங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

No related posts.

Leave a Comment

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)

Previous post:

Next post: