தர்ம அடி வாங்கிய என்னுடைய "ஹாஸ்டல்" அனுபவம் (இறுதி பாகம்)

by கிரி on March 28, 2008

வாங்கின அடியின் வலி தாங்காமல் இரண்டு நாள் குப்புற தான் படுக்க முடிந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள், இதை விட கொடுமை வகுப்பில் நான் உட்கார கஷ்டப்பட்டது.

நான் பொதுவா நல்ல படிப்பேங்க, ஆனால் எனக்கு இந்த கணக்கு மட்டும் சுட்டு போட்டாலும் வராது. கணக்கு வகுப்புனாலே பீதியாகிடுவேன். அதுக்கு தகுந்த மாதிரி ஆசிரியர்களும் எனக்கு அப்படியே வருவார்கள், என் விதிய பாருங்க. பரிட்சையில் எல்லா பாடத்திலும் தேர்வாகிவிடுவேன், கணக்குல மட்டும் சங்காகி விடும். வழக்கம் போல இங்க வந்தும் கணக்குல தேர்ச்சியடையவில்லை. மதிப்பெண் பட்டியல் வார்டன் கிட்ட தானே கையெழுத்து வாங்கணும், அதுதானே பிரச்சனை.

அன்று இரவு என் வகுப்பு பசங்க எல்லாம் கையெழுத்து வாங்க வரிசையில் நின்றோம், நான் மூன்றாவது, முதல் பையன் நல்ல மதிப்பெண் கையெழுத்து வாங்கிட்டு போய்ட்டான், இரண்டாவது பையன் குறைவான மதிப்பெண், திட்டு வாங்கிட்டு போனான். என் முறை வந்தது பயத்துடனே பட்டியலை காட்டினேன், பார்த்துட்டு ஒரு முறை முறைச்சுட்டு இந்த பக்கம் வந்து நில்லுடான்னாரு.. சரி இரண்டு நாளைக்கு படுக்க, உட்கார முடியாது அப்படின்னு யோசிச்சுட்டு வந்து நின்னேன், என் பக்கத்துல வந்தாரு சரி அடி பின்னால தான் விழ போகுது அதுனால தயார் ஆகிடுவோம்னு விறைப்பா நின்னேன், விட்டாரு பாருங்க அடி! கண்ணுல எல்லாம் பூச்சி பறந்துடுச்சி, கிறுகிறுன்னு ஆகிடுச்சு, அடி பின்னாடி எதிர்பார்த்து இருந்தா, கன்னத்துல விழுந்துடுச்சு, அப்படியே அவர் கை அடையாளம் பதிஞ்சுடுச்சு, அப்ப அழ ஆரம்பிச்சவன் தான் சாப்பிடும் போதும் அழுகை நிற்கல, சீனியர் பசங்க எல்லாம் சமாதான படுத்தியும் நிற்கல. இப்படியே நாளொரு அடியும் பொழுதொரு அறையுமா அந்த வருடத்தை ஒட்டிடேன்.

8 ம் வகுப்பு, இப்ப அடி வாங்கி அடி வாங்கி அடி பழகிவிட்டதால் (அன்று என் சீனியர் சொன்னது உண்மையாகி விட்டது) இப்ப அடிக்கெல்லாம் பயப்படுவது இல்லை. அடி தானே அடித்துக்கோன்னு சொல்லி நிக்கிறதுன்னு ரொம்ப தில்லாகிட்டேன் மற்றும் மரத்து போய் விட்டது. அப்ப அபூர்வசகோதரர்கள் படம் வெளியாகி இருந்தது. என் வகுப்புல ஒரு பையன் தீவிர கமல் ரசிகன், ஒரு ஞாயிற்றுக்கிழமை ரூம்ல அவன் குள்ள கமல் மாதிரி காலை மடக்கி கயிறு கட்டி கமல் மாதிரி நடித்துட்டு இருந்தான், நாங்க அதை எல்லாம் பார்த்து சிரிச்சுட்டு இருந்தோம். நான் ஒண்ணுமே பண்ணலைங்க சும்மா பக்கத்துல தான் உட்கார்ந்துட்டு இருந்தேன், என் நேரம் அப்ப தான் எழுந்து அவன் கிட்ட நின்னேன், சரியா வார்டன் வந்துட்டாரு வந்த வேகத்துல எல்லோருக்கும் தர்ம அடி உங்க வீட்டு அடி எங்க வீட்டு அடி இல்ல, சும்மா பின்னி பெடலேடுத்துட்டாரு எல்லோரையும் முட்டி போட சொல்லிட்டாரு. எவ்வளோ நேரம்னு நினைக்கறிங்க சும்மா 3 மணி நேரம், அதுக்கு ஆளு வேற வைத்துட்டு போய்ட்டாரு, எழுந்தா அவர் கிட்ட சொல்லணுமாம்.

இந்த மாதிரி அடி வாங்கி உடம்பு பழுத்து விட்டதால் என்னோட அப்பா கிட்ட நான் இனி இங்க படிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன், எவ்வளோ சொல்லியும் கேட்கவில்லை. அப்புறம் வேற வழி இல்லாம சரின்னு எங்க ஊருக்கே கூட்டிட்டு வந்துட்டாரு அந்த வருடத்தோட. அங்கேயும் போய் ஹாஸ்டல் ல தான் சேர்ந்தேன், அந்த ஹாஸ்டல் போல இங்கே அடி இல்லை, அமைதியாக இருந்தது. என்னதான் அங்கு அடி வாங்கினாலும் ஒரு த்ரில்லாக இருக்கும். இங்கே அது கிடைக்கவில்லை. இங்கேயும் பல சம்பவங்கள் நடந்தது என்றாலும் அதை ஒப்பிடும் போது இங்கே ஒன்றுமே இல்லை.

இதோட என்னோட ஹாஸ்டல் அனுபவத்த முடித்து கொள்கிறேன். இதுக்கு மேல இருக்கு, ரொம்ப கூறினால் உங்களுக்கும் போர் அடிக்கும். அதுனால வேற ஒரு அனுபவத்துல திரும்ப வருகிறேன்.

No related posts.

{ 23 comments… read them below or add one }

Vidhya May 8, 2008 at 4:06 PM

கிரி, ஹாஸ்டலில் நீங்கள் அடி வாங்கிய கதையை படித்தேன். மிகவும் சுவாரசியமாக இருந்தது. “நான் அடி வாங்குனது உனக்கு சுவாரசியமா இருக்கான்னு” கேட்காதீங்க, எனக்கு நான் கல்லூரியில் ஆடிய ஆட்டங்கள், சில நாட்கள் ஹாஸ்டலில் நான் தங்கிய நாட்கள் நினைவுக்கு வந்தது. அது ஒரு அழகிய கனாகாலம் என்று அருமையாக கூறினீர்கள்.

Reply

KRP May 9, 2008 at 12:13 PM

//இப்படியே நாளொரு அடியும் பொழுதொரு அறையுமா அந்த வருடத்தை ஒட்டிடேன்.//

சூப்பர் !!!!!!!!!!!

//எனக்கு நான் கல்லூரியில் ஆடிய ஆட்டங்கள், சில நாட்கள் ஹாஸ்டலில் நான் தங்கிய நாட்கள் நினைவுக்கு வந்தது. அது ஒரு அழகிய கனாகாலம் என்று அருமையாக கூறினீர்கள்.//

விடுதி வாழ்க்கையின் சுகமே தனி
(எத்தனை பிரச்சனை வந்தாலும் )

அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/

Reply

கிரி May 9, 2008 at 8:50 PM

//நான் அடி வாங்குனது உனக்கு சுவாரசியமா இருக்கான்னு” கேட்காதீங்க//

கேட்கமாட்டேன் உன்னை பற்றி தான் தெரியுமே ஹீ ஹீ ஹி

KRP உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

Reply

ராஜ நடராஜன் December 28, 2008 at 12:57 AM

//நான் பொதுவா நல்ல படிப்பேங்க, ஆனால் எனக்கு இந்த கணக்கு மட்டும் சுட்டு போட்டாலும் வராது.//

பெஞ்சுல இருக்கை காலியா இருக்குது.இப்படி பக்கத்துல வந்து உட்காருங்க:)

Reply

புதுகை.அப்துல்லா December 28, 2008 at 1:33 AM

சீக்கிரமே நம்ப ஹாஸ்டல் பத்தி ஒரு பதிவு போடுறேன் :)

Reply

கிரி December 28, 2008 at 2:33 AM

//ராஜ நடராஜன் said…
//நான் பொதுவா நல்ல படிப்பேங்க, ஆனால் எனக்கு இந்த கணக்கு மட்டும் சுட்டு போட்டாலும் வராது.//

பெஞ்சுல இருக்கை காலியா இருக்குது.இப்படி பக்கத்துல வந்து உட்காருங்க:)//

ஹி ஹி ஹி

===================================================================

//புதுகை.அப்துல்லா said…
சீக்கிரமே நம்ப ஹாஸ்டல் பத்தி ஒரு பதிவு போடுறேன் :) //

நீங்களும் ஹாஸ்டல்ல இருந்தீங்களா!!! பதிவ போடுங்கோ :-)

Reply

நசரேயன் December 28, 2008 at 3:04 AM

அந்த வாடனுக்கு ஒரு சிலை வையுங்க கிரி, அவரே ரெம்ப நல்லவரா இருக்காரு

Reply

Tech Shankar December 28, 2008 at 5:43 AM

வசந்த கால நினைவுகளை இப்படி இப்போது அசைபோடுவதிலும் ஒரு வலி / சுகம்.

வலியான நினைவுகளை உங்கள் பதிவில் நகைச்சுவை நெடியுடன் கலந்து கொடுத்து இருக்கிறீர்கள்.

கிரியார் தெ கிரேட்.

வாழ்க வளமுடன்

Reply

’டொன்’ லீ December 28, 2008 at 9:03 AM

கொஞ்சம் கொடூரமான ஹொஸ்டலாகத்தான் இருக்குது..

Reply

கிரி December 28, 2008 at 9:03 AM

//நசரேயன் said…
அந்த வாடனுக்கு ஒரு சிலை வையுங்க கிரி, அவரே ரெம்ப நல்லவரா இருக்காரு//

:-) )

அடி வாங்காதவங்க வேணா வைக்க வாய்ப்பு இருக்கு ஹி ஹி ஹி

===================================================================
//தமிழ்நெஞ்சம் said…
வசந்த கால நினைவுகளை இப்படி இப்போது அசைபோடுவதிலும் ஒரு வலி / சுகம்.//

சரியாக கூறினீர்கள்

//வலியான நினைவுகளை உங்கள் பதிவில் நகைச்சுவை நெடியுடன் கலந்து கொடுத்து இருக்கிறீர்கள்//

நன்றி தமிழ் நெஞ்சம் உங்களின் தொடர்ச்சியான இந்த பதிவுகளின் வருகைக்கும் சேர்த்து :-)

Reply

வாசுகி December 28, 2008 at 9:53 AM

//அன்று இரவு என் வகுப்பு பசங்க எல்லாம் கையெழுத்து வாங்க வரிசையில் நின்றோம், நான் மூன்றாவது, //
குறைய mark எடுத்துவிட்டு மூன்றாவதாக நிற்க உங்களுக்கு அவ்வளவு துணிவா?

//இப்படியே நாளொரு அடியும் பொழுதொரு அறையுமா அந்த வருடத்தை ஒட்டிடேன்.//
வசனம் super. ரசித்தேன்.
அந்த வருடம் உங்களுக்கு இருண்ட காலம். எங்களுக்கு பொற்காலம் தான்.

//என் நேரம் அப்ப தான் எழுந்து அவன் கிட்ட நின்னேன், சரியா வார்டன் வந்துட்டாரு//
உண்மையிலேயே நீங்க lucky man தான்.

முன்பே வாசித்த ஞாபகம் இருந்தாலும் திருப்பி வாசிக்க சுவாரசியமாக தான் இருக்கு.
அடுத்தவனுக்கு அடி விழுந்தால் நமக்கு எப்பவும் கொண்டாட்டம் தானே, ஹிஹிஹி

Reply

Mahesh December 28, 2008 at 11:33 AM

ஆயிரம் அடி வாங்கிய அபூர்வ கிரிராஜ் !! என்ன கிரி செமையா வாங்கியிருக்கீங்களே !!! அந்த அனுபவம்தான் ந்யூ இயர்க்கு போலீஸ் கிட்ட அடி வாங்கும்போது அவ்வளவா வலிக்காம இருந்துருக்கா?? :) )))

Reply

அன்புடன் அருணா December 28, 2008 at 3:56 PM

//ஆயிரம் அடி வாங்கிய அபூர்வ கிரிராஜ் !!//

நல்லாவே அடி வாங்கிருக்கீங்க கிரிராஜ்…
அன்புடன் அருணா

Reply

கிரி December 28, 2008 at 4:28 PM

//வாசுகி said…
//அன்று இரவு என் வகுப்பு பசங்க எல்லாம் கையெழுத்து வாங்க வரிசையில் நின்றோம், நான் மூன்றாவது, //
குறைய mark எடுத்துவிட்டு மூன்றாவதாக நிற்க உங்களுக்கு அவ்வளவு துணிவா?//

இருந்ததே நாலு பேருங்க..இதுல நான் மூன்றாவது..வகுப்பு வாரியாக தான் கையெழுத்து போடுவார்கள் :-) ))

//உண்மையிலேயே நீங்க lucky man தான்.//

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப லக்கி :-)

//அடுத்தவனுக்கு அடி விழுந்தால் நமக்கு எப்பவும் கொண்டாட்டம் தானே,//

ரொம்ப நல்ல எண்ணங்க உங்களுக்கு

===================================================================

//Mahesh said…
ஆயிரம் அடி வாங்கிய அபூர்வ கிரிராஜ் !!//

ஹா ஹா ஹா

//அந்த அனுபவம்தான் ந்யூ இயர்க்கு போலீஸ் கிட்ட அடி வாங்கும்போது அவ்வளவா வலிக்காம இருந்துருக்கா??//

வலிக்காம இருந்துதாவா!!!!!! ஏங்க! மகேஷ் வயித்தெரிச்சலை கிளப்பாதீங்க :-)

===================================================================

//அன்புடன் அருணா said…
நல்லாவே அடி வாங்கிருக்கீங்க கிரிராஜ்//

இதெல்லாம் சாம்பிள் தாங்க ஹி ஹி ஹி

உங்களின் தொடர்ச்சியான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அருணா

Reply

வித்யாசாகரன் (Vidyasakaran) December 28, 2008 at 4:53 PM

நானும் அதே பள்ளியில்தான் படித்தேன், ஆனால் விடுதியில் அல்ல.
அதே 1990 – 91 வருடத்தில், அதே ஏழாம் வகுப்புதான்.
நான் 7-D. நீங்கள்? B செக்ஷனோ? அதில்தான் மாணவர்கள் குறைவு. விடுதியிலிருந்து வெறும் மூன்று பேர் என்றால் அதுவாகத்தான் இருக்க வேண்டும், சரிதானா?
உங்களை எனக்கு இது வரை நினைவு வரவில்லை. ஒருவேளை புகைப்படம் கண்டால், வரலாம். என் வகுப்பில் இருந்த விடுதி மாணவர்கள் ஆர். பாலமுருகன், கோகுல், ந. முத்துக்குமார் யாரையாவது நினைவிருக்கிறதா?
ஆனாலும், நம் பள்ளி மானத்தை வாங்கி விட்டீர்கள். :)

Reply

கிரி December 28, 2008 at 6:26 PM

//வித்யாசாகரன் (vidyasakaran) said…
நானும் அதே பள்ளியில்தான் படித்தேன், ஆனால் விடுதியில் அல்ல.
அதே 1990 – 91 வருடத்தில், அதே ஏழாம் வகுப்புதான்.
நான் 7-D. நீங்கள்? B செக்ஷனோ? அதில்தான் மாணவர்கள் குறைவு. விடுதியிலிருந்து வெறும் மூன்று பேர் என்றால் அதுவாகத்தான் இருக்க வேண்டும், சரிதானா?//

எனக்கு எந்த பிரிவு என்று நினைவில்லை. 7th ல அறிவியலுக்கு வந்த ஆசிரியர் காதை பிடித்து கிள்ளுவார் அது தான் நினைவிருக்கிறது அவரோட மனைவியும் அதே பள்ளியில் ஆசிரியையாக பனி புரிந்தார், ஆனால் அவருக்கு அப்படியே எதிர். ரொம்ப அமைதியானவங்க அடிக்கவே மாட்டாங்க.

//என் வகுப்பில் இருந்த விடுதி மாணவர்கள் ஆர். பாலமுருகன், கோகுல், ந. முத்துக்குமார் யாரையாவது நினைவிருக்கிறதா?//

நினைவில்லை..

எனக்கு நினைவிருக்கும் ஹாஸ்டல் மாணவர்கள் (இந்த வகுப்பு அல்ல) சக்திவேல், ரமேஷ், கோபி நாத், கணேசன் (காடம்பாறை) (இவன் இப்போதும் தொடர்பில் உள்ளான் PC ஆக உள்ளான்) மற்றவர்கள் நினைவில்லை.

ஹி ஹி ஹி எனக்கு அடி வாங்கியது தான் நல்லா நினைவிருக்கிறது.

//ஆனாலும், நம் பள்ளி மானத்தை வாங்கி விட்டீர்கள். :) //

ஹா ஹா ஹா நான் கூறியது அனைத்தும் ஹாஸ்டலை பற்றி மட்டுமே, பள்ளியை பற்றி அல்ல.

உங்கள் முதல் வருகைக்கு நன்றி வித்யாசாகரன்.

Reply

வித்யாசாகரன் (Vidyasakaran) December 28, 2008 at 7:17 PM

//7த் ல அறிவியலுக்கு வந்த ஆசிரியர் காதை பிடித்து கிள்ளுவார் //
அது பாலகிருஷ்ணன் சார். அவரது மனைவி நிர்மலா டீச்சர்.

//சக்திவேல், ரமேஷ், கோபி நாத், கணேசன் //
இவர்கள் யாரும் எனக்கு நினைவில்லை.

//உங்கள் முதல் வருகைக்கு நன்றி வித்யாசாகரன்.//
வருகை முதலல்ல. மறுமொழியிட்டது மட்டுமே. அடிக்கடி இந்தப் பக்கம் வருவதுண்டு.

Reply

கிரி December 28, 2008 at 7:29 PM

//வித்யாசாகரன் (vidyasakaran) said…
//7த் ல அறிவியலுக்கு வந்த ஆசிரியர் காதை பிடித்து கிள்ளுவார் //
அது பாலகிருஷ்ணன் சார். அவரது மனைவி நிர்மலா டீச்சர்.//

கில்லாடியா இருக்கீங்க..நல்லா நினைவு வைத்து இருக்கீங்க. எனக்கு அவர் பெயர் நினைவில்லை நிர்மலா டீச்சர் தான் நினைவிருக்கிறது. எனென்றால் அவரிடம் அடி வாங்கினால் இவங்க தான் ஆறுதல் சொல்லுவாங்க..ஹா ஹா அதனால அவரை ரொம்ப பிடிக்கும். அதுவுமில்லாமல் வகுப்பு சூப்பரா எடுப்பாங்க.

//வருகை முதலல்ல. மறுமொழியிட்டது மட்டுமே. அடிக்கடி இந்தப் பக்கம் வருவதுண்டு.//

ஒ! அப்படியா!! நன்றி வித்யாசாகரன். எப்படியோ என்னோட இந்த பதிவு, இரண்டு நண்பர்களை அடையாளம்!! ;-) காட்டியதில் ரொம்ப சந்தோசம்.

Reply

A N A N T H E N December 29, 2008 at 1:32 PM

//நாளொரு அடியும் பொழுதொரு அறையுமா//

:D

Reply

பாசகி December 29, 2008 at 6:59 PM
கிரி December 29, 2008 at 11:28 PM

A N A N T H E N மற்றும் சக்தி வருகைக்கு நன்றி

Reply

kannabiran, RAVI SHANKAR (KRS) December 29, 2008 at 11:29 PM

இப்பத் தான் எல்லாப் பாகங்களையும் “ரசிச்சி” படிச்சேன் கிரி! :) ))

அடுத்த ரிலீஸ் – தர்ம அடி “கொடுத்த” என்னுடைய “ஹாஸ்டல்” அனுபவம் எப்போ போடப் போறீங்க? :) )

Reply

கிரி December 30, 2008 at 8:45 AM

//kannabiran, RAVI SHANKAR (KRS) said…
இப்பத் தான் எல்லாப் பாகங்களையும் “ரசிச்சி” படிச்சேன் கிரி! :) ))//

:-) )) நன்றி KRS

//அடுத்த ரிலீஸ் – தர்ம அடி “கொடுத்த” என்னுடைய “ஹாஸ்டல்” அனுபவம் எப்போ போடப் போறீங்க? :) )//

அடி வாங்கி தான் நமக்கு பழக்கமே தவிர அடி கொடுத்தல்ல ஹா ஹா ஹா

உங்கள் முதல் வருகைக்கு நன்றி KRS

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed